சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 27 செப்டம்பர், 2012

ஓ...மலேசியா

கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள்.தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது. நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம். சுதந்திரதினத்தை தேசிய தினமாகக் கொண்டாடும் வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர். இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர் ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார். பத்துமலை முருகனுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். பத்து என்றால் கல். கல் மலை. பத்து மலையைச் சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள் இருந்தது ஒரு காலத்தில் .1991ல் கும்பவிசேகம் கண்ட பின் மிக உயர சிலையில் முருகன் பத்துமலை முகப்பில் சிரிக்கிறார். 13 வது பொது தேர்தல் எப்போதும் வந்துவிடலாம் என்ற தேர்தல் காய்ச்சலில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அய்ந்து வருடங்கள் எந்த அரசும் முழுமையடைவதில்லை.இந்த முறை ஆளும் கட்சியின் அரசுக்கு மூன்றரை ஆண்டுகளே கடந்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அரைமாத போனஸ் என்று இந்த திடீரென பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பது தேர்தல் கவர்ச்சிக்குதானாம். (எல்லா பெரிய புள்ளிகளின் பெயர்களுக்கு முன்னால் ட்த்தோ இருக்கிறது. நம்மூர் பத்மஸ்ரீ போல என்கிறார்கள்.) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இந்தியர்கள்., மலாய்க்காரர்கள் ஆதரவு குறைந்திருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.சீனர்களின் ஆதரவு தூக்கிப்பிடித்து நிறுத்துகிறது. ஆனால் அவரின் அரசிற்கான மதிப்பு அப்படி இல்லை என்கின்றன ஆய்வுகள்.இந்தத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் . இந்த தேர்தலில் இந்திய சமூகத்தினரின் எதிர்பார்ப்புகள் இப்படியாக உள்ளன: 1.அரசின் ” ஒரே மலேசியா” கொள்கையின் கீழ் இந்தியர்களுக்கு அரசுத்துறைகளில் தாராளமாக வேலை வாய்ப்பு வேண்டும். 2. அரசின் உதவிகளும் இந்திய சமூகத்திற்கான நலத்திட்டங்களும் முறையாக சென்றடையாமல் நிறைய இடைத்தரகர்கள் இருப்பதை நீக்க வேண்டும். 3.இந்திய சமுதாயத்திற்கானப் பொருளாதாரப் பங்குகளை ஏற்படுத்த வேண்டும். 4.குடியுரிமை இல்லாமல் சிவப்பு அடையாள அட்டையாலும் பிறப்புப் பத்திரம் இல்லாமலும் அகதிகள் போல் இருக்கும் நிலை மாற வேண்டும். 5.தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.(குடிக்கக் கூழும் படிக்க தமிழும் சந்தோசம் தரும் என்று வாழும் தமிழ் தலைமுறையில் புதியவர்களுக்கு தமிழ்க் கல்வி சற்றே கசந்து வருகிறது). குறைவாகவே சிலைகள் தென்படுகின்றன. பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங் போக வேண்டும். மலேசியா சென்ற பெரியாரின் தோற்றத்தைப் பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்” என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். மலேசியா முஸ்லீம் நாடு. கடவுள் மறுப்பிற்கு அதன் சட்டவடிவமைப்பில் இடமில்லை. கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பலமிழந்திருக்கும் மலேசியா தி.க. தலைமறைவு இயக்கம் போல்தான் செயல்படுகிறதாம். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.கடந்த 5 ஆண்டுகளாக மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் போட்டி நடத்தி 1,75,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்குகிறது. கூடவே தமிழகம் வந்து செல்ல விமான டிக்கட்.இவ்வாண்டும் அப்போட்டியின் முன்னோடியாகவே இந்தப் பட்டறைநடத்தியது. சென்றாண்டு சிறுகதைப் பட்டறையை நடத்தியவர் எஸ்.இராமகிருஸ்ணன். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு இது பொன் விழா. இவ்வாண்டு நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகள் என்று மொத்தம் 2,50,000 ரூபாய் பரிசு பம்பர் மலேசியா எழுத்தாளர்களுக்குக் காத்திருக்கிறது. ( = சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602. 9486101003 )

சுப்ரபாரதிமணியனுக்கு கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது ( கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது ) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும், மலையாள எழுத்தாளர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டின் தமிழ் பிரிவிற்கான விருது சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கப்பட்டது. மலையாளத்தில் மினிமேன்னுக்கும்.அவ்விழாவில் முன்னாள் கேரளா கலாச்சார அமைச்சர் பேபி, மலையாளத் திரைப்பட நடிகை கிருபா, திரைப்பட நடிகர் மேகநாதன், பாலக்காடு எம்.பி. ராஜேஸ், கோவை எம்.பி. நடராஜன், கேரள சாகித்ய அகாதமி செயலாளர் கவிஞர் ராமுன்னி, விஜயகுமார் குனிச்சேரி, ஸ்டான்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருப்பூர் மலையாள எழுத்தாளர்களும் வாசகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். செய்தி: சு.சுபமுகி ( கனவுக்காக) கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602. 09486101003

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெள்ளம்


தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதாய் அவன் அவ்வப்போது சொல்லிக்கொண்டதுண்டு. படுக்கையில் யாருடனாவது களைத்து விழுந்து உடம்பைக் குறுக்கிக் கொண்டு தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் அவன் அப்படிச் சொல்லிக் கொள்வான். இல்லையென்றால் சவுந்தர்ய உபாசகனாகி இவ்வளவையும் ரசிப்பவனாக ஆகியிருக்க முடியுமா என்றிருக்கும். இவ்வளவு பெண்கள் தன்னிடம் அகப்பட்டுக்கொள்வார்கள் என்று அவன் நினைத்துப்பார்த்ததுமில்லை.அய்ந்து வருடம் முன்பெல்லாம் அவன் தனித்து விடப்பட்ட போது அவனுக்கு சாவு பற்றிய எண்ணம் தான் மிகுந்திருந்தது. சரவணன் பெரியப்பாவிடம் ஒருநாள் கூட கேட்டுவிட்டான். “ எனக்கு எப்ப சாவு வரும்” அவர் சொன்னார்: “ எனக்கே எப்ப வரும்ன்னு தெரியலே.. இதுலே உனக்கு நான் ஜோஸ்யம் சொல்ல முடியுமா .. என்ன..” எல்லாவற்றுக்கும் கடுமையான முயற்சி வேண்டும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அதற்கு விதிவிலக்க்காக பெண்கள் தன்னிடம் வந்து சேர்ந்து விடுகிறார்கள் என்றும் தோன்றியது.” சுலபமாக எப்படி சாவது “ “ தூக்குக் கயிறு, தண்டவாளம், எலிமருந்து..” “ எலி மருந்தெல்லா வேலை செய்யாதப்பா..” “ சாணிப்பவுடர்..” 2. “ அது சரிதா.” நகரத்தில் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையானப் பெண்கள் சாணிப்பவுடரில்தான் அடைக்கலமாகிறார்கள். அவர்களின் பட்ஜெட்டில் அதுதான் சுலபமாகிறது. “ எனக்குத்தெரிஞ்ச ஒருத்தருக்கு எள்ளுன்னா அலர்ஜி .. இது ரொம்ப வருசமா. ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கற ஆளுதா.. என்னமோ திடிர்ன்னு எங்கையோ போன எடத்திலே எள்ளுரைண்டை ஒன்னு சாப்புடக் குடுத்திருக்காங்க. சாப்புட்டுட்டார். அலர்ஜியாயி செத்துப் போயிட்டார். அதுமாதிரி உனக்கு அலர்ஜி என்னன்னு கண்டுபுடி.. சீக்கிரம் செத்துப் போலாம்” ரொம்ப நாள் பெண்கள் தான் அவனுக்கு அலர்ஜியாக இருந்தார்கள். அவர்கள் தூரமாக இருக்கும் போது அலர்ஜிதான். பக்கத்தில் நெருங்கிவிட்டபின்பு அலர்ஜியெல்லாம் தொலைந்து போய் விட்டது. இப்போது சாவுக்கு பயப்படுகிறவர்கள் அவனிடம் அடைக்கலமாகிறார்கள், பெண்களுக்குத்தான் எவ்வளவு கஷ்டம். சுலபமாக அடைக்கலமாகிறார்கள். வெள்ளம் நதிகரையில் இருப்பவர்களையெல்லாம் அழுக்காக்கி விட்டது. அழுக்கை விட வேண்டித்தான் பெண்கள் அடைக்கலமாகிறார்கள். வெள்ளம் இப்படி வந்து எல்லாவற்றையும் அழுக்காக்கிப் விட்டுப் போய்விடும் என்பது பெரிய ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வீடெல்லாம் சக்தியும் மண்னுணுமாகி விட்டது. எல்லாம் இடங்களிலும் பூத்திருந்த ஈரம் காய்வதற்கு முன்னமெ பெண்கள் அடைக்கலம் தேடுகிறவர்களாகி விட்டார்கள். நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைத்தும், சூடாக எதையாவது சமைத்துப் போட்டும் ரொம்பநாள் 3 நீடிக்கவில்லை. அழுக்கும், ஈரமும் படிந்திருந்தாலும் வீட்டிற்குப் போவதுதான் எல்லோரின் குறிக்கோளாக இருந்தது. வெள்ளை எருக்கம் பெரிய மரமாகவே கிளைத்திருந்தது. அதை கட்டிப்போட்டு நிற்க வைக்கும் முயற்சிகளெல்லாம் தோற்றுப் போனது போல் தரையில் கிடந்தது. எப்போது மஞ்சள் வெயில் பட்டாலும் பூத்துக்கிடக்கும் எருக்கம் பூக்கள் மின்னி ஒளிவிடும். வெள்ளை எருக்கையை வெட்டி தூரப்போட்டு விடும்படி யசோதாவிற்கு பலர் சொல்லி இருக்கிறார்கள். ஏதோ தெய்வக்குத்தம் என்பதைத்தான் அவள் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த வெள்ளை எருக்கம் செடி போன இடம் மழையில் தெரியவில்லை. சேறு மூடிப்போய் விட்ட்தா, இல்லை மண்ணிலிருந்து பெயர்ந்து போய் விட்டதா என்பது பற்றி யசோதாவிற்குத் தெரியவில்லை. என்னாவாகியிருக்கும் என்று அவனிடம் தான் கேட்டாள் “ எனக்கென்ன தெரியும்..” “ என் வீட்டை வாங்கப் போற ஆளு நீங்க.. தெரிஞ்சுக்க வேண்டாமா வெள்ளம் வடிந்தபின்னும் வீடுகளில் சேறும் கசடும் எங்கும் நிறைந்திருந்த்து. யாரும் வீட்டிற்குள் போகவும் சங்கடப்பட்டார்கள். என்ன வியாதி வரும் என்று யூகிக்க முடியவில்லை. பொதுவாக காய்ச்சல் என்று ஏதோ வந்தது. செத்துப்போனவர்களும் இருந்தார்கள். அவளுக்கு ஏதோ முடி கொட்டிப்போகும் என்று தோன்றியது. பதினெட்டு வயதில் அப்படித்தான் முடி கொட்டிப்போனது. வீட்டில் கோழி வளர்த்துக் கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் கூண்டைத்திறந்து கோழிகளை விரட்டுவது அவளது வேலையாக இருந்தது. கோழிப்பீயின் நாற்றம் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. சட்டென சின்னச் சின்ன சொட்டைகள் தலையில் விழ 4 ஆரம்பித்தது. ஏதோ வெட்டுப்புழுவின் சாகசம் என்று சொன்னார்கள். அந்த சொட்டை பளபளவென்று மினுங்கிக் கொண்டிந்ததாகச் பலர் சொன்னபோது அவளுக்கு அழுகையாக இருந்தது. பல இடங்களில் அந்த சொட்டை ஆக்கிரமித்தது. இனி கல்யாணக் கனவெல்லாம் அவ்வளவுதான் என்றிருந்தது அவளுக்கு. ஏதோ டிஞ்சர் ஒன்ரை தம்மணன் கொண்டு வந்து கொடுத்தார். அதை மூன்று நாட்கள் சொட்டை விழுந்த இடத்தில் தடவிய போது சொருசொருவென்று ஏதோ தட்டுப்பட்டது. மெல்ல மயிர் முளைத்து வளர்ந்த போது நம்பிக்கை ஏற்பட்டு விட்ட்து. “ அப்புறமும் ஏன் உனக்குக் கல்யாணம் நடக்கலே “ “ அதுதா எனக்கும் தெரியலே” அவளுடன் படுத்து முயங்கிக் களைத்து விழுந்தபோது குழி தோண்டும்போது பாறையிலோ, பெரும் கல்லிலோ கடப்பாரை பட்டு நங்கென்று எழும் சப்தம் அவளுக்குக் கேட்டது “ சத்தம் கேட்டயா.. கடப்பாரை வுழுகறச் சப்தம்” “ கடப்பாரை அப்பிடி சப்தம் போடாதே. நம்ம கடப்பாரைச் சத்தம் வேற மாதிரியல்லவா இருக்கும்.” ஒரு வகை சிரிப்புடன் அவன் சொன்னான். “ ஓ .. நீ அங்க வர்றியா.. உன் கடப்பாரை இன்னம் ரெண்டு நாளைக்கு முனை மழுங்கியதுதானே. “ ”அவ்வளவு களச்சுப் போயிட்டனாக்கும். எந்த நேரம் கடப்பாரையா மாறும்ன்னு யாருக்குத் தெரியும் . உனக்குத் தெரியும் ” ” ஆமா.. நாங்கதா அலையறம். அலையற ஆளு சொல்றதெப்பாரேன்” 5 “ எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது . இல்லீன்னா இதெல்லாம் அமையுமா.லோலோன்னு அலையறவங்க எவ்வளவு பேரு இருக்காங்க..” “ உலகமே இதுலதா சுத்துதுன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. சுத்தட்டும் ..சுத்தட்டும்..”. அவள் சொன்னபின்பு அவனுக்கும் கடப்பாரைச் சத்தம் கேட்கிறமாதிரி இருந்தது.. செத்துப்போனவர்களைப் புதைக்க எங்காவது குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்களா. இப்போதெல்லாம் மின்மயானம் சுலபமாகப் போய் விட்டது. ஒன்றுக்கு இரண்டாக மின் மயானங்கள் வந்து விட்டன.யுனிவர்சல் திரையரங்கு கல்லறைத்தோட்டத்தில் குழிதோண்டிப் புதைக்கிற மாதிரித் தெரியவில்லை. அடுத்த காம்பவுண்ட் மின்மயானம் என்பதால் யார் வந்தாலும் அங்குதான் கை நீட்டிவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் சிலை பக்கம் இருக்கிற கிறிஸ்துவ வேதகாரர்களுக்கான சுடுகாட்டை இடித்து வேறு ஏதோ பெரிய கட்டிடம் கட்டுகிறார்கள். அப்படி கட்டும் கட்டிடத்தில் ஏதாவது ஆவிகள் அலைந்து கொண்டிருக்குமா. பக்கத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிட்த்தில் அவனின் நண்பன் ஒருவன் குடியிருந்தான். அங்கே ஆவிகள் நடமாடுவதாய் கண்டுபிடித்து அலறிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அவன் குடிப்பதை நிறுத்தியிருந்தான். தூக்கமும் கெட்டு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் ஆவிகள் நடமாட்டத்தைத் தவிர்ப்பதற்காக குடிக்க ஆர்ம்பித்தான். எவ்வளவு குடித்தாலும் நடு ராத்திரிக்குப்பின் தூக்கம் கலைந்து விட்டது அவனுக்கு. ஆவிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு இடம் தேடிப் போய் விட்டான்.அதை விட்டால் சுடுகாடு என்று சட்டென நினைவில் எதுவும் வரவில்லை .புதிதாய் இன்னொரு மின் மயானம் வருவதாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 6 அதற்கு அவனிடமும் நன்கொடை கேட்டார்கள்: “ என்ன அட்வான்ஸ் தொகையா..” என்றான். “ எங்க பெரியம்மா பொண்ணு ஒண்ணு செத்துப் போனது கொடுமையா இருந்துச்சு. அவ புருசன் அடுச்சு கொன்னு புதச்சுட்டான். ரொம்பநாளா ஊர்ல காணம்ன்னு கம்ப்ளெயிட் வேற கொடுத்தா சந்தேகம் வந்து தோண்டிப்பாத்திருக்காங்க. எலும்புகதா கெடச்சுது. அதுக்கும் மரியாதை பண்ணி அடக்கம் பண்ணுனாங்க.” “ அது பண்றதுக்குன்னு சில பேர் இருந்தாங்களே. என்னையெல்லாம் கேட்கறதுக்கு ஆளில்லதா..” “ அப்புறம் பாக்கியவான்னு சொல்லிகிட்டிருந்தே.” “ பாக்கியவான்.. ஆனா பாக்கியம் இல்லாத பாக்கியவான்..” வெள்ளம் வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிப் போய் விட்டது. நொய்யலின் கரையோரங்களில் காசுள்ளவர்கள் சாய்ப்பட்டறை போட்டு சாயத்தண்ணீரை நொய்யலில் விட்டு சம்பாதித்தார்கள். சின்னதாய் இருந்த இடங்களெல்லாம் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி சிறுசிறு வீடுகளாகிவிட்டன. உள்ளூரில் அவ்வளவாய் மழையில்லை. மேற்கே பெய்த மழை வெள்ளத்தைக் கொண்டு வந்து விட்டது. சங்கிலிப்பள்ளம் பகுதியில் இருந்த வீடுகளெல்லாம் வெளளத்தில் மூழ்கி எல்லோரையும் துரத்திவிட்டது. இடிந்து போன வீடுகளில் குடி புக முடியாது. கார்ப்பரேசன்கார்ர்களும் கரையோர வீடுகளை இடித்து விடப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாலம் கட்டுகிற வேலையில் பல வீடுகள் கார்பரேசன்காரன்களின் புல்டோசரின் இடிபாடுகளில் சிதைந்திருக்கிறது. லட்சுமி நகர் முக்கில் அப்படித்தான் பல வீடுகளில் இருந்து அழுகையும், அரற்றலும் 7 இருந்தது. “ ஒரே நாள்லெ இவ்வளவும் செய்யறீங்களே அய்யா. அவகாசம் தரக்கூடாதா. வேலைக்குப் போன் புருசனும், பள்ளிக்கூடம் போன கொழந்தைகளும் வந்து வூடு எங்கேன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்.” என்று கத்திக்கொண்டு உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்ட பெண் ஒருத்தியை காவல்துறை கைது செய்தார்கள். கரையோர வீடுகளை அடித்து நொறுக்கும் புல்டோசர்கள் பிரமாண்டமானதாகத்தான் இருக்கும். சோமன் கிடைக்கிற வீட்டைப் பார். எவ்வளவு சகாயமா முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையைப் போடப் பாரு. கெடைக்கற வரைக்கும் லாபம்தா.” என்று பணத்திற்கு உத்தரவாதம் கொடுத்து பார்க்கச் சொல்லியிருந்தான். . கார்ப்பரேசன்காரர்கள் இடிக்கப்போவதாய் சொல்லி மிரட்டிதான் இரண்டைப் பேசி முடித்திருந்தான். அப்படி ஒரு வீட்டைப் பார்க்கப் போனபோதுதான் சியமளாவைப் பார்த்தான். அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்து போனான். பனியன் கம்பனி வேலைக்கு போன் போது அறிமுகமான சுப்ரவைஸ்சர் பரமசிவத்தோடு விடுமுறை நாட்களில் வெளியூர்களில் அறை எடுத்து சுற்ற ஆரம்பித்தாள். அப்புறம் கல்யாணம் என்று முடிவாகி முதல் கணவனுக்கு ஒரு பெண்ணும், பரமசிவனுக்கு ஒரு பெண்ணும் என்று ஆகிப்போயிற்று. மூத்த பெண்ணை தன் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைத்தாள். இரண்டாவதை எங்கு எந்த ஜாதிக்காரனிடம் தள்ளுவது என்பது அவளின் புதிராக இருந்த்து. வெள்ளத்திற்கு முன்பே பரம்வம் கொஞ்ச நாளாய் காணவில்லை. சியமளாவை மூத்த பெண்ணின் கணவனோடு சம்பந்தப்படுத்தி ஏதோ கோபத்தில் 8 பேச அவள் துரத்தி விட்டாள். சியாமளா வீட்டைப் பார்க்கப் போன போது வீட்டு முகப்பில் அரை அடி உயரத்திற்கு சேறு படிந்து கிடந்தது. ” இதியெல்லா க்ளின் பண்றதுக்கு வீட்டு விலை செரியாப் போகும் ” என்றான். ஈரம் பூத்து விழ தயாராகும் நிலை போல் இருந்தது. நடு அறையில் அரை அடி உயர தடுப்பு ஒன்று அமைந்து சேற்றின் அளவைக்குறைத்திருந்தது. சியாமளா ஒத்துழைப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை. வழுக்கலில் விழப்போனவளைப் பிடித்தபோது எதுவும் சொல்லவில்லை. அவனும் வழுக்கி விழுவது போல் அவன் மீது பிறகு விழுந்தான். ஈரம் பூத்த சுவற்றில் அவளின் உடம்பு தகதகத்து சாய்ந்த்து. எங்கும் வீசிய துர்நாற்றத்தின் மத்தியில் அவளின் உடம்பின் வாசனை அவனை கிரங்கடித்தது. ” தேக்கு மரம்ய்யா நீ. “ என்றாள் அவள். “ நீ சோப்புக் கட்டி “ அதற்குப்பிறகு அவளைத்தேடி அவன் நான்கு முறை சென்று விட்டான். கடைசியாகப் போனபோது “ வீடு விக்கற அய்டியா இல்லைன்னு சொல்லச் சொன்னாங்க “ என்று யாரோ அவனிடம் சொன்னார்கள். ஏமாற்றமாக்த்தான் இருந்தது. அவள் கண்வன் திரும்பி வந்திருப்பானா. வீடு விக்கிற ஆசை எப்படி கலைந்து போனது. தன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட அவளுக்கு வேறு உபாயம் ஏதாவது தெரிந்து விட்டதா எனப்தைப்பற்றியும் அவன் யோசித்துப் பார்த்தான். கைபேசி சிணுங்கி ஓய்ந்தது. தமிழில் குறுஞ்செய்திவரும்படி அவன் வடிவமைத்திருந்தது ஆறுதல் தந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரச்செய்ய நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. ‘ புரிஞ்சுக்க்கற மாதிரி செய்யணும்ன்னா காசு தந்துதானே ஆகணும் “ வந்த குறுஞ் செய்தி வீடு வாஙக் கடன் வேண்டுமா என்று கேட்டது. இது போல் கடன் குறித்து பல 9 குறுஞ்செய்திகள் வருகின்றன. கடன் வேண்டுமா என்று கேட்டு பல பெண்கள் பேசுகிறார்கள். ” நேரில் வந்து கேட்க்க் கூடாதா “ என்று கேட்டிருக்கிறான். “ ” எங்க வேலை ஆபீஸ்ல இருந்து பேசறததுதா..நீங்க வேண்ணா வாங்க. நேரிலே விளக்கம் சொல்றேன்..” அப்படி தேடிப் போனதில்லை அவன். ஒரு மாதிரி ஒற்றைக் கண்ணும், கறுப்பு நிறமும் யாரையும் தூரம் வைத்தே பேச வைக்கும். ஆனால் வீடு, ரொக்கம் என்று அலைகிறபோது பேச யாராவது கிடைத்து விடுகிறார்கள். இது அவனை பாக்யவான் என்றே சொல்ல வைத்திருக்கிறது. அவன் செய்து களைத்த வேலைகளைப் பட்டியலிடுவதில் கூட அவனுக்கு அயற்ச்சியாக இருந்திருக்கிறது.. எதிலும் சுலபமில்லைதான். யாரும் விதிவிலக்காக இருக்கமுடியாது. அவனின் கஷ்டங்களையெல்லாம் அவன் நினைத்துப் பார்த்ததில்லை. கொஞ்சம் பணம், கொஞ்சம் லஞ்சம், கொஞ்சம் புகழ்ச்சி, ஒரு ராத்திரி நேர விருந்து எல்லாவற்றையும் சுலபமாக்கி விடுகிறது.இந்தப் பெண்களுக்கு மலிவு விலை சேலை அல்லது அதற்கு இணையான தொகை. மலிவு விலையில் நியாயவிலைக்கடையில் விற்கும் ஏதாவது பொருளுக்காக கூட அடைக்க்கலமாகிப் போவது அவனுக்கு ஆச்சர்யமே தந்திருக்கிறது. ’ என் ரசனை அவர்களுக்கு சுலபமாகப் புரிந்து விடுகிறது. ருசிக்கு எந்த அடிப்படையும் தேவையில்லை. ருசி முக்கியம். அவர்களும் ருசிப்பவர்கள்தான்” வெள்ளம் ஒரே நாளில் வடிந்து விட்டது. ப்ருத்திக்காட்டுப்புதூர் நகராட்சிப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்தபோது அவனுக்கு இரக்கம் பீறிட்டது. எல்லோரும் அழுக்காகத்தான் இருந்தார்கள் மோசமானக் கதைகளைச் சொன்னார்கள். எல்லோரிடமும் சொல்வதற்கு அழுகையான கதையொன்று இருந்தது. 10 இவர்களிடமிருந்து என்னென்ன வியாதிகள் கிளம்பும் என்பதை நகராட்சி அலுவலர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். கண்டுபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் இடது கையின் ஆறாம் விரல் தங்கு சதையாய் ஆடிக் கொண்டிருந்தது, அவர் கைகளை அசைத்தசைத்துப் பேசும் போது அது கரகரவென்று திருகி பயமூட்டியது. கூரைகளின் மேலேறி கடத்திச் சென்று தீயணைப்பு வண்டிகளுக்குள் பலரை உட்கார வைத்ததை அவன் உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்திருந்தான். மாடும் ஒன்று மிதந்து போனது. கட்டில்களும் குப்பைக் கூளமும் கலவையாக போனது. ஒரு இளம் பெண்ணின் உடம்பு உப்பிய பிணமாய் போனதாக பரவலாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏகதேசம் அது நிர்வாணமாகத்தான் இருந்தது என்பதுதான் எல்லோரின் கவனிப்பிற்குமான காரணம் என்று நினைத்தான். பய பீதியில் பிணமாக மூர்ச்சையடைந்து போனவர்கள் கூட இருப்பார்கள். தெற்கு முக்கு வீட்டில் வீடு பார்க்கப் போன இடத்தில் அவன் தொட்ட ஒரு பெண் சட்டென மூர்ச்சையாகி விட்டாள். அவள் முகத்தை முத்தத்திற்காய் நெருக்கிய போதுதான் அவள் கண்கள் கிறங்கி துவண்டது தெரிந்தது. அது கிளர்சியால் வந்த மயக்கமல்ல;பய பீதியில்தான் மயங்கி விட்டாள் என்பதை அவன் உணர கொஞ்ச நேரம் பிடித்தது. அவள் கொஞ்ச நேரம் கழித்து கண்களைத் திறப்பதற்குள் அவன் உடம்பு வியர்த்து விட்டது. அவள் கண்களைத் என்னாச்சு என்று கேட்டபடி திருதிருவென முழித்தாள். எல்லாம் சகஜமாகிவிட்டதைப் போல அவள் வெளியே நடக்க ஆரம்பித்தாள். பயத்துடன் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தான். அப்பெண் மறுபடியும் வரக் காணோம் என்று விறுவிறுவென்று நடக்க 11 ஆரம்பித்தான். அவன் உடம்பு வெள்ளத்தில் மூழ்கி விட்டது போல ஈரமாகி விட்டது. கிராமத்தில் காரு மழை பொய்த்துப்போனது. போட்டிருந்த போர்வெல் குழிகளெல்லாம் காய்ந்து விட்டன.குடிக்கத்தண்ணீர் வேண்டியிருந்த்து. தென்னம்பிள்ளைகளுக்கும் பொய்த்தண்ணீர் கட்டுவதற்கே சித்தப்பாவால் முடியவில்லை. கறவை மாட்டில் கிடைக்கிற பால் நாலு வீடுகளுக்கு ஊத்தும்படி இருந்தது. கிராமத்துக்குக்காரங்களுக்கு இப்படி வெள்ளம் பார்பதில் குதூகுலம் இருக்கும். சித்தப்பாவைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் போலிருந்தது. வெள்ளத்தில் அழுக்கடைந்து போன ஒரு வீட்டை மசூதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பேர் அந்த வீட்டில் வெள்ளம் அடித்துப் போனதில் செத்துப் போயிருந்தார்கள். இனி அந்த வீடு யாருக்கும் பிரயோஜனமில்லை என்பது போல் கிடக்கும் என்று அவசரமாக முடிவெடுத்திருப்பார்களா என்றிருந்தது. கொஞ்சநாள் வீடு இழந்தவர்களுக்கென்று தங்க வைக்க அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தார்கள் அதை விற்கிற யோசனை இருக்கிறதா என்று அவன் கேட்கப் போனபோது குறுந்தாடியோடு இருந்த ஒருவன் அவனை முறைத்துப் பார்த்தபடிக் கேட்டான்: “ மசூதிக்குன்னு முடிவு பண்ணிட்டபோறகு கேட்கறையே.. தைரியந்தா உனக்கு. “ ” சொர்க்கத்துக்கு போனவங்க நினைவாவா “ “ அதுக்குப் பேரு வேற “ “தர்காவா” 12 நன்கு சுத்தம் செய்யப்பட்டு கழுவப்பட்ட அறையின் வாசம் பெரும் கனவு போல அவனின் மனதில் இருந்தது. எப்போது பார்த்தாலும் ஏதோ அழுக்குகளுக்குள்தான் அடைபட்டிருக்கிறோம். அழுக்கை தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அழுக்கிலிருந்து விடுபட முடியவில்லையா என்றிருந்தது. அழுக்கடைந்த வீடுகளையே பார்த்து பேசி, விலைக்குக் கேட்டு அதிலிருந்து மீள முடியவில்லை.சோமனிடம் சொல்லி வேறு இடம் பார்க்கப் போக வேண்டும். அழுக்கின் வாசம் உடம்பைக் உலுக்குவதாக இருந்தது. கோழ்ப்பீ அடைந்த கோழிக்கூண்டில் அவனை அடைப்பது போலிருந்தது. மூச்சுக்திணறுவதாக இருந்தது. எங்கோ வெள்ளத்தை நிறுத்துவதற்காக ஒரு பெண் தன் குழந்தையை ஆற்றில் வீசியெறிந்ததாக படித்திருந்தான். அது நடந்ததா.. இல்லை கதையா.. எதுவாக இருப்பினும் அவன் உடம்பு அதை நினைக்க நடுங்குவதாக இருந்தது. அல்லது ஏதாவது குழந்தையொன்றின் பிணம் இந்த வெள்ளத்தை இங்கும் நிறுத்தியிருக்குமா.. காலருகில் ஒரு பூச்சி விறுவிறுவென்று பரபரத்து ஓடியது. இந்த அழுக்கிலிருந்தும் சேற்றிலிருந்தும் பிறப்பெடுத்திருக்கிற புது பூச்சியாக இருக்க வேண்டும். புது பூச்சி. இந்த அழுக்கு கோடிக்கணக்கான பூச்சிகள் பிறப்பெடுக்கும் இடமாக இருக்கும். பல கால்களைக் கொண்ட பூச்சிகள். உடம்புகள் பெருத்தும் சிறுத்தும் புது புது வடிவங்களில் பூச்சிகள். நாலு நாள் கிடந்தாலே பொருட்களீலிருந்து பூச்சிகள் கிளம்பும். உயிர்கள் உற்பத்தியாகும் அபூர்வம் அவனுக்கு ஆச்சர்யமளித்தது. மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த சாப்பாடு கவனிக்கப்படாமல் இருந்து பிளாஸ்டிக் கூடையில் அதைப்போடும் போது புழுக்கள் நெளிவதாக அவன் கண்டிருக்கிறான். புது பூச்சி. புது உயிர். புது உயி இப்படித்தான் ரகசியமாக உற்பத்தியாகிறதா. இந்தப் 13 பெண்களிடமும் வாரிசு என்று ஏதாவது பூச்சி உருவாகி விட்டால் பிரச்சினையாகி விடும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் எடுத்ததில்லை. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்ன பண்ணினே.. ஏதாச்சும் கெடச்சுதா என்று சோமனின் முகம் மனதில் வந்து மிரட்டிக் கொண்டிருப்பது போல ஏதாவது புது உயிர் பற்றியக் கற்பனை தன்னை மிரட்டினால் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கலாம் என்ற எண்ணம் மனதில் வந்தது. யாராவது பெண்ணொருத்தி அவனருகில் வந்து நின்று அவன் சட்டையை உலுக்கி கேள்வி கேட்பாள் என்ற கற்பனை மனதில் இருந்து கொண்டே இருந்தது. இதற்குக் காரணம் என்ன.. ஏதாவது உறுத்தல் மனதை அக்கிரமித்து விட்டதா.. ஏதோ காரியத்திற்காக ஏதோ செய்து கொண்டிருக்கிறோமா.. வெள்ளம் நிதானமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. நதியின் சலசலப்போடு அவன் அருகில் வந்து நிற்கும் பெண் ஏதோ குசுகுசுவென்று பேசுகிறாள். அவள் பாராட்டுவதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. திரைப்படங்களில் ஆற்றின் கரைகளில் கதாநாயகன், நாயகிகள் இப்படித்தான் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். குறும்படகுகள் ஓடிக் கொண்டிருக்கும் .மெல்லக் காற்று வீசி 14 ரம்மியப்படுத்தும். தன் அருகில் நிற்கும் முகம் அறியாதப் பெண்ணிடம் அவன் அந்த ரம்மியத்தைப் பற்றி ஏதோ பேச முற்படுகிறான். வெள்ளம் ஓடி அதன் கறைகளை மட்டும் நிலை நிறுத்தியிருந்தது.......................... சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

வியாழன், 20 செப்டம்பர், 2012

எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்


சுப்ரபாரதிமணியன் கிறிஸ்துவ உலகத்தோடு பிரஞ்சு புரட்சியைச் சேர்த்துப் பார்க்கிற நோக்கிலேயே முஸ்லீம் உலகத்தோடு சமீப கிளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார் “காஞ்சா இலையா” இரோப்பிய கிறிஸ்துவம். அரசபரம்பரை, நிலப்பிரபுத்துவ அமைப்பால் பல நூற்றாண்டுகளாக இறுகிப் போய் கிடந்தது. இஸ்லாமிய குடியுரிமை அமைப்புகள் அவர்களின் சொந்த நடைமுறைகளாலேயே உருவானவை என்கிறார். எகிப்தின் கிளர்ச்சி சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு அஹிம்சை போராட்டமாகவே ஓரளவு வடிவெடுத்து புரட்டஸ்டண்ட் உட்பிரிவுகளால் பிளவுண்டது. ஜரோப்பாவில் புரட்டஸ்டன்ட் சமூகமே பல்வேறு எழுச்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதே சமயம் கத்தோலிக்க சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தோடு ஒத்திசைவானதாகவே இருந்து வந்திருக்கிறது. எகிப்தின் வளம் சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்தாலும், சுற்றுலாத் துறையாலும் செழுமையாக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என்ற ஏகப்பிரதேசத்திற்கும் தானிய ஏற்றுமதி செய்து வந்த நாடு கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்து சுகபோக வாழ்கையை வாழ்ந்து வந்த அதிபர் ஹேஸ்னி முபாரக் பிப்ரவரி கிளர்ச்சி மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இந்தக் கிளர்ச்சிக்கு அடித்தளமாய் சமூக வலைத்தளங்களும், வீடியோ வலைத்தளங்களும் பயன்பட்டிருக்கின்றன. தொலைத் தொடர்பு புரட்சி வெற்றிகரமாக “ ஒரு வகை புரட்சியை” தீவிட்டு எறிந்து வெற்றிபெறச் செய்திருக்கிறது. பல வலைத்த்யளங்களியும், அல் ஜ ஸீரா போன்ற தொலைக்காட்சி வரிசைகளையும் முபாரக் கைது செய்து சிறையிலடைத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வெளிநாட்டில் வசிக்கும் எகிப்தியர்களால் கிளர்ச்சி நடவடிக்கைகள் கொழுந்து விட்டெறிந்தன. முபாரக் ஆட்சிவிலகும் தீர்மானம் கிளர்ச்சியின் வெற்றிவடிவமாகக் கணிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆதிக்கம் தோற்று வருவதன் எதிரொலியாக இது கருதப்படுகிறது. எகிப்தியர்களுக்கு 1952 புரட்சிக்கு முன்பான வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொள்வது என்பது உவப்பானதாக இருப்பதை “ ஹெலியோ போலிஸ்” என்ற படத்தின் ஒரு பாத்திரம் சொல்கிறது. அதற்குப் பிறகான வாழ்க்கையின் கனவுகளும், சிதைவுகளும் அவர்களை தொந்தரவுபடுத்தவே செல்கின்றன. இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் தென்படும் சோர்வு இதிலிருந்து மீள வேண்டியதான அவர்களின் ஆசையை சொல்லிக் கொண்டிருக்கிறது. கெய்ரோவின் நகர வீதிகளும் மனிதர்களும் ஒரு நாளில் கொள்ளும் தினசரி வாழ்க்கையின் ஒரு பக்கத்தை இது காட்டுகிறது. அதுவும் மேல்தட்டு மனிதர்களின் வாழ்கையைக் காட்டுவதாக இது அமைந்திருக்கிறது. அவ்வகையான எட்டு மனிதர்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். புது அபார்ட்மெண்ட்டை பார்க்கக் கிளம்பும் ஒரு திருமணமாகாத தம்பதியர் வாகன நெரிசலில் மாட்டி தவித்துப் போகிறார்கள். அவன் ஒரு காட்சியில் சொல்கிறான்: “ டிராபிக் ஜாம் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. உன்னைப் பார்க்க வந்து இரண்டு மணி நேரமெல்லாம் காத்திருக்கிறேன். அப்போது நேரம் என்பது ஒன்றுமில்லை. இப்போது நேரம் ஏன் கொல்கிறது?”. அபார்ட்மெண்ட் வாங்கலாம், பிரிட்ஜ் வாங்கலாம் நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையில் திரிகிறார்கள். பிரிட்ஜ் அவர்களின் திட்டமிடலில் இல்லாதது அவர்களை வெவ்வேறு கடைகளுக்குத் துரத்துகிறது. ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டிருப்பதாகச் சொல்லும் இளைஞன் தெருக்களில் அலைந்து பழைய புராதனக் கட்டிடங்களை படம் பிடிக்கிறவனாக இருக்கிறான். டிராபிக் கான்ஸ்டபிலால் படம் பிரிக்கப்படுகிறது. சிறுபான்மை இனமக்கள் தொகை குறைந்து வருவது பற்றி ஆராய்ச்சி செய்வதாக ஒரு வயதான பெண்ணிடம் சொல்லும் அவன் வீடியோ படம் பிடிப்பது அவளுக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. நகர வீதிகளில் அலைந்து திரிந்து பலவற்றைரைப் படம் பிடிக்கிறான். ஹீக்கா புகைக்கும் கணிணி படித்த இளைஞன் அவனைச் சீண்டுவதை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறான். அவன் வீட்டிற்குத் திரும்பியபின் அவளிடமிருந்து பிரிந்த காதலி வேறொருவனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி அனுப்புவது அவனுக்குச் சோர்வு தருகிறது. விடியலை எதிர்பார்த்திருப்பவன் போல அலைகழிக்கிறான். தெருவில் போகும் பால்காரர்களை வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கழிக்கிறான். பாதுகாப்புப் பணியில் வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கழிக்கிறான். பாதுகாப்புப் பணியில் வேலை செய்பவன் ஓரத்தில் இருக்கும் கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறவனாக இருக்கிறான். தெருவில் திரியும் நாய் அவனுக்கு நட்பாகிறது. கையிலிருக்கும் உண்வை அதற்குத் தருகிறான். இரவுநேர தூக்கம் அவனின் வேலையைச் சிரமப்படுத்துகிறது. திருமணமாகாத விடுதி வரவேற்புப் பெண்ணிற்கு பாரீசிற்கு செல்வது கனவாக இருக்கிறது. வெளிநாட்டுத் தம்பதிகள் விடுதிக்கு வருவதும் அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதும் சிரமப்படுத்துகிறது. வெளிநாட்டுச் செல்கிற கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறான்.அவளின் சிநேகிதியுடன் குடிக்குமிடத்திற்குச் செல்கிறவளுக்கு ஆண்களின் மிகையான சிரிப்பும் பாதிக்கவே செய்கிறது. அவளின் அறையில் இருக்கும் பாரிஸ் ஈபில் டவர் போஸ்டர் கிழிந்து அவளைத் துன்புறுத்திகிறது. அவளின் கனவுகள் சிதைந்து கொண்டிருப்பதை நினைக்கிறாள். ஒரு மருத்துவர் ஒரு நாயுடன் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார். வெளிநாடு செல்வதற்கான விசா விசாரணையில் அவனின் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பது கூட்டி காட்டப்பட்டு துரத்தப்படுகிறான். அம்மாவுடன் சண்டை போட்டுக் கொள்வது அவனுக்குச் சோர்வையேத் தருகிறது. இந்த மருத்துவரைப் போல் வாழ்க்கையில் அலைகழிப்பிற்கு உள்ளாகும் ஒரு மருத்துவரை “ தி மெஸேஐஸ் பிரம் சீ” பட்த்தில் பார்க்க முடிகிறது. பருத்துவப்படிப்பைப் படித்திருந்தாலும் திக்குவாய்குறை அந்த இளைஞரை சமூகத்தில் ஒட்டச் செய்வதில்லை. அலக்சாண்டிரியாவுக்கு திரும்பி சாதாரண மீனவனாக வாழ்க்கையை ஓட்டுகிறான். மீன்பிடிப்பது அதனால் வரும் வருமானத்தில் வாழ்க்கையைக் கழிப்பதில் திடமாக இருக்கிறான். மதுச்சாலைக்குப் போகிறவன் பல சமயங்களில் நிலை தெரியாமல் குடித்துவிட்டு கிடக்கிறான். வீட்டிற்கு வந்து சேர்வதே பெரும் பாடாக இருக்கிறது. வீதியில் ஒரு வீட்டிலிருந்து கேட்கும் இசை அவனை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இரவுகளில் தனித்திருந்தும், மழையில் நனைந்தும் அந்த இசையைக் கேட்கின்றான். அப்படி காத்திருந்து வீதியில் அலைகிற ஒருநாளில்தான் நோராவைச் சந்திக்கிறான். அவளின் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அவளுக்கு இருக்கும் வேறு தொடர்புகள் பற்ரியும் அறிந்து கொள்கிறான். அதிலும் குறிப்பாக வயதான ஒருவருடன் இருக்கும் தொடர்பு அவனை எரிச்சலாக்குகிறது. அவள் இருக்கும் வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டுக்காரன் நோராவுடனான் தொடர்பைக் காட்டிப் பழிக்கிறான். தூண்டில் போட்டி மீன் பிடிகிற அவனும், கடலில் குண்டுகளை வீசி செத்து மிதக்கும் வீட்டுக்காரனும் முரண்படுகிறார்கள். நோராவுடன் உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டியிருக்கிறது. கடலில் குண்டுகள் விசி மீன்கள் மிதக்கும் பகுதியில் அவன் அழகான நோராவுடன் படகில் தப்பியோடுகிறான். பட்த்தின் பல காட்சிகளில் தென்படும் பாட்டிலும், கடலின் அலைகளால் அலைகழியும் அதன் இயக்கமும் மருத்துவ இளைஞனின் மனமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ———————- சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

வியாழன், 6 செப்டம்பர், 2012

“இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்”


  உதிரி மனிதர்களின் உலகமும், சூழல் கேடற்ற நகரக் கனவும்”
பிரபஞ்சன்

திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார். உதிரி உதிரியான பாத்திரங்கள், கலங்கலான கதாபாத்திரங்கள் , விளிம்பு நிலை மக்களை இந்த நாவலில் நிறைத்திருக்கிறார்.இடம்பெயர்ந்து வந்து வேலைக்காக அந்த நகரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களின் வாழ்க்கையைச் கூர்ந்து பார்த்து எழுதியிருக்கிறார். அதில் ஒரு மணமாகாத ஆணும், மணமாகி கணவனின் கொடுமையால் தனித்து வாழும் பெண்ணும் சேர்ந்து வாழ விரும்பும் வாழ்க்கை பற்றி இந்த நாவல் பேசுகிறது. அவர்கள் உடல் உறவு சார்ந்து லாட்ஜிகளைத் தேடிப்போகிறார்கள். அதில்தான் எவ்வளவு சிக்கல்கள்.எவ்வளவு போலீஸ் தொந்தரவுகள்.இந்த போலிஸ்காரர்களைப் போல் சாதாரண மக்களுக்குத் தொல்லை தருகிறவர்கள் யாருமில்லை. பிறகு ஒரு வாடகை வீடெடுத்து வாழத்துவங்கும்போது அவர்களை இந்தச் சமூகம் பார்க்கும் போலீஸ்காரப் பார்வை.., சுற்றுசூழல் பிரச்சினையால் சாயப்பட்டறைகள் மூடப்படுதல், அதனால் வரும் பொருளாதரப்பிரச்சினைகள், விவாகரத்து பெற முடியாமல் அப்பெண் தன்னை மனச்சிதைவுக்கு ஆட்படுத்திக் கொள்வது என்பது பற்றி கலை அனுபவங்களுடன் நுணுக்கமாகப் பேசுகிறார். லிங்கம் என்ற ஆண் பிரதானமாக இருந்தாலும் நுணுக்கமான உதிரி உதிரியான கதாபாத்திரங்கள். விளிம்பு நிலை மனிதர்களால் நிறைக்கப்படும் சமூகத்தை முன் வைக்கிறார். இன்றைய தொழில் நகரம் சார்ந்த முன் மாதிரி நகரம் அது. நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாயக்கழிவுகளெல்லாம் இல்லாமல் போகிற சுற்றுச்சூழல் கனவு பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.அந்த நகர மனிதர்களும் நொய்யலின் சாயக் கழிவு இல்லாமல் போவது போல் நல்ல சுத்தமான மனிதர்களாக வேண்டும் என்ற ஆசையின் படிமமாக அதைக் கட்டமைத்துக் கொள்ளலாம். தமிழ் படைப்புலகில் தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் தீவிரமாக இயங்கி வருவதன் அடையாளம் இந்நாவல்.
————————————————–
”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்
( உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியிடு
ரூ 160)
————————————————–

Print Friendly

Share



One Comment for 

“இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்”

  • R.Karthigesu says:
    அண்மையில்தான் “நீர்த்துளி” படித்தேன். ஒரு பத்து பக்கம் படித்துவிட்டால் மனதை அப்படியே கவ்விக்கொள்ளும் கதை. பெரும்பாலும் உரையாடல்களையே வைத்து நகரும் கதை. உரையாடல்கள் மிக யதார்த்தம். நம்மோடு பேசுவது போல.
    சாயப்ப்ட்டறை பற்றி அவர் அதிகமாகப் பேசவில்லை. அது ஒரு பெரும்பாலும் அசையாத் திரையாக பின்னால் இருக்கிறது. ஆனால் அதில் ஏற்படும் சினனஞ்சிறு அசைவுகளும் இந்த நாயக – நாயகியைப் பாதிக்கின்றன. இவர்கள் வாழ்க்கை துன்ப மயமானது. ஆனால் அதற்குள் அவர்கள் காணும் சின்னச்சின்ன சுகங்களை சுப்ர மிக அழகாக உருவாக்கி வாசகர்களையும் கிளுகிளுக்க வைக்கிறார். காமக்காட்சிகள் அனைத்தும் அத்தனை இலேசாக விரசம் தொனிக்காமல் கடந்து போகின்றன. இயலாமையில் ஆரம்பித்து இயலாமையில் இவர்கள் பிரியும் சோகம் மனதில் தங்கி நிற்கும்.
    நாவல் கலையில் ஒரு புதிய பரிமாணம் என்று கொள்ளத்தக்க படைப்பு.
    நாவலை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு பிரபஞ்சனுக்கு நன்றி.
    ரெ.கா.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-

சுப்ரபாரதிமணியன்

Share
கதை சொல்லி”
விருதுகள்
மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-
‘கனவு பள்ளி மாணவ – மாணவியருக்கான ‘கதை சொல்லி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும்,மீட்டெடுக்கவுமான முயற்சியாக மாணவ – மாணவியர் இதில் பங்கு பெற்று வருகின்றனர். Iஇதன் தொடர்ச்சியாக கதை எழுதும் போட்டியையும் நடத்தி வருகிறது.
சிறுவர் கதைகள் எளிய நடையில் மூன்று முதல் ஜந்து பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். எந்த மையத்தையும், தலைப்பையும் கொண்டிருக்கலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும்.
மாணவ – மாணவியர் மட்டுமே பங்கு பெற வேண்டும்.
10 சிறந்த கதை களுக்கு ரூ.5000 பரிசு பகிர்ந்தளிக்கப்படும் . கதைகளை அனுப்பும்போது தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விபரங்களோடு அனுப்ப வேண்டும்.
அக்டோபர் 30.2012க்குள் கிடைக்குமாறு கதைகளை அனுப்ப வேண்டும். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்ப இயலாது.
அனுப்ப வேண்டிய முகவரி
சுப்ரபாரதிமணியன்
கனவு, 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர்-641602. செல் : 9486101003
______________________________________________________________________________ கனவு காலாண்டிதழ்
25 ஆண்டுகளாக வெளிவரும் இலக்கிய இதழ்
ஆண்டுச்சந்தா ரூ.50. கனவு இதழில் கடந்த 20 ஆண்டுகளாக வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு 700 பக்கங்கள் ரூ.350.00

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

மனக்குகை ஓவியங்கள் :சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

இரு சம்பவங்கள்
------------------------------------

1. சகுனி கோபப்பட்டதாக பாரதத்தில் சொல்லப்படவில்லை. பொதுபுத்தியில் சகுனி மோசமானவனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளான்…. இன்றைய ஆப்கானிஸ்தான் அன்றைய காந்தாரம்., காந்தாரி என்பவள் அவர்களுக்கு குலதெயவம். பிதா மகன் பீஸ்மர். பீதாம்பரங்களையும் வைர வைடூரியங்களையும் காட்டி குருடனுக்கு காந்தாரியை இல்லத்தரசியாக்கினான்..அவர்கள் குல தெயவ வழிபாட்டில் உறுதியானவர்கள், ஆகவே ஆட்டை நிறுத்தி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள். இதை அறிந்த பிதாமகன் தன்னுடைய பெரும் படையை அனுப்பி காந்தார நாட்டு இளவரசர்கள் நூறு பேரையும் கைது செய்து தலை நகரத்துக்கு அழைத்து வரச் சொன்னான் பீஸ்மர் என்கிற பிதாமகன். அவர்கள் நூறு பேருக்கு நூறு சோற்றுப் பருக்கை, நூறு சொட்டுத் தண்ணீர்,மட்டுமே என்று கட்டளை. அவர்கள் நூறு பேரும் சேர்ந்து ஒற்றுமையாக முடிவெடுத்து ஒரு பருக்கைச் சோறில், ஒரு சொட்டுத் தண்ணீரில் நாம் நூறு பேரும் வாழ முடியாது. யாரோ ஒருவனை தயார் செய்ய வேண்டும் இளையவனான சகுனியை வளர்த்து எடுத்தார்கள்.

2. சமீபத்தில் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விழாவில்
“ துச்சாதனன் வதம் “ பார்த்தேன். ஒருமுறை கதகளி பாருங்கள் அதன் தாத்பரியம் புரியும் தோள் கண்டார் தோளே கண்டார் என்பது இதிகாசம். சுயவரம் நடக்கிறது இதில் இராவணன் பங்கு பெறுகிறான். சுயவரம் தொடங்குகிற வேளையில் இலங்கை தலைநகரில் தீப்பற்றி எரிவதாக ஒரு பிராமணன் கதறுகிறான்,இராமன் வில்லை ஒடிக்கிறான். சீதையை மணக்கிறான். கானகம் செல்கிறார்கள். இராவணன் சீதையைச் சிறை எடுக்கிறான். சீதை வரம் வாங்கியவள்.தனக்குப் பிடிக்காத எவனும் தன்னைத் தொட்டால்… இராமனுக்கு சந்தேகம் தீயில் இறங்கு என்று… இந்த இரண்டு சம்பவங்களையும் எழுத்தாளர்கள், உள்ளுறை, படைப்பு என்பதை
வைத்துப் பார்த்தால் இச்சம்பவங்களின் அடிப்படை புரியும்.
இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல. முன்னுரையே புத்தகத்தை விட அதிகமாக இருந்தால் “ கவிதைக்குப் பொய் அழகு ” சில பேரரசுகள் சொல்வர்.. எனவே உள்ளிருப்பதைப்பற்றி அதிகம் எழுதுவது கூடாதுதான்.எழுத்தாளர்கள் பற்றிய அபிப்பிராயங்களை, புத்தக அறிமுகங்களை சுப்ரபாரதிமணியன் மனக்குகை ஓவியங்கள் என்று இதில் தொகுத்துள்ளார். அவருடைய அஸ்திவாரமே விளிம்பு நிலை மக்கள், சுமங்கலித்திட்டம், குழந்தைத் தொழிலாளர் உழைப்பு, நதி மாசுபடல் போன்றவை. அதன் மீதான எழுத்தில் அக்கறை கொண்டவர்.. நிறையப்பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களை தங்கள் வசம் ஈர்த்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் நிறைவான எழுத்தாளர்களைப் பற்றி மனக்குகை ஓவியங்கள் என்ற தலைப்பில் கட்டுரைகள் விரிகின்றன.தியானத்தில் உட்கார்ந்தால் முதலில் வருவது வண்ணங்களே. அது போல் எழுத்தாளன் தனக்கென்று வண்ணங்களை வைத்து ஓவியமா, காவியமா என்பதைப் பற்றிய புத்தகம்.
இதில் தலித் இலக்கிய முன்னோடி சிவராம் கரந்த் முதல் சிவகாமி வரை தலித் படைப்புகளில் மேலோங்கிய தன் வரலாறு பற்றிச் சொல்லப்படுகிறது. பழகிய நினைவுகளின் அடிப்படையில் நகுலன், சுந்தரராமசாமி, சுஜாதா பற்றி உள்ளன. கவிதை சுதந்திரமும் சுய அடையாளமும் என்று இளம் கவிஞர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மூத்த கவிஞர்களின் படிமங்கள் என்று சிற்பியும், வைரமுத்துவும் தென்படுகிறார்கள்..தங்கர்பச்சான் முதற்கொண்டு பலரின் திரைப்பட காமிரா மொழி பேசப்படுகிறது. பசுமை மனிதர்களும் புத்தக மனிதர்களும் காட்டப்படுகிறார்கள். குழந்தை இலக்கியம் கோடிடப்படுகிறது. பாரதியும், புதுமைப்பித்தனும், தகழியும் யதார்த்தப்படிமங்களாக்கப்பட்டிருக்கிறார்கள். திருப்பூர் நாவலாசிரியர் குழந்தைவேலுவின் படைப்புகள் பற்றி எழுதியுள்ளார்.
இன்று பரபரப்பான உலகில் சில எழுத்தாளர்கள் மட்டுமே சாகாவரம் பெற்றவற்றை எழுத முடிகிறது. அது போல எழுத்தாளர்கள் பற்றின அபிப்பிராயங்கள்.. இதில். எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளனுக்கே புரியும். இதுவே கற்றாரே கற்றாரைக் காமுறுவர் என்று சொலவடை..
கலைஞர்களையும் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்கட்சிகள் இலக்கியவாதிகளை மதிப்பதில்லை.கட்சிகளே உள்ளூர் இலக்கியவாதிகளை மதிக்காது உயிருடன் இருந்த காலத்தில் பாரதியை மதிக்காத உலகம். அவரை வைத்து சில அர்சியல் கட்சிகள் பிழைப்பு நட்த்துகிறார்கள்.
இலக்கியம் என்பது அரசியல், ஆன்மீகம்,, மதம் போன்றவற்றைத் தாண்டியது என்பது பொது புத்தியில் புரிய வேண்டும். இலக்கியம், இலக்கணம், இலட்சணம் என்பது வேறு வேறு. இலட்சணம் என்பதை இலட்சியம் குறிக்கோள் என்று எடுத்து கொள்ள வேண்டும். இலக்கணப்பிழை, இலக்கியப்பிழை இருக்கலாம். ஆனால் இலட்சியப் பிழை இருக்கின்ற எழுத்து அல்லது கலை கால் வெள்ளத்தில் நிற்காது என்பது வரலாறு. காலவெள்ளதில் நிலைக்கிறவர்களை இதில் மனக்குகை ஓவியங்களாக்கியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
( மனக்குகை ஓவியங்கள்: சுப்ரபாரதிமணீயன், என்சிபிஎச்,, சென்னை ரூ50)

-சாமக்கோடாங்கி ரவி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா”சிறுகதைத்தொகுதி

கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்த்து..குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும்,கொங்கு வட்டாரப் பிரயோகம் தவிர இவரின் படைப்புகளில் குழந்தைகள் உலகமும், பிராணிகளின் உலகமும், தொன்மங்களின் மறு வாசிப்பும் கவனிக்கத்தக்கது..

குமரகேசனின் குழந்தைகள் பிராணிகளை மிகவும் நேசிக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் பெயர் இட்டு அழைக்கிறார்கள். சகமனிதனாய் நட்த்துகிறார்கள். அதனால்தான் அவர்களை காயடித்து, பின் சாமிக்கு பலியிடும் போது வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்று விடுகிறார்கள். தன் பக்கத்து நியாயமும், எதிர்ப்பும் எப்படியோ காட்டி ஓய்ந்து விடும் போது சுக்கு நூறாக உடைந்து போகிறார்கள். எறும்புகளைக்கூட அழுத்தமாய் தள்ளி விடும் இயல்பில்லாமல் மெதுவாக ஊதித் தள்ளி விடுகிறார்கள்.மதிய உணவிற்காக விறகைச் சேமிக்க விறகு வெட்டப்போய் பாம்பு தீண்டி துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.பள்ளிக்கல்வி மறுக்கப்பட்ட சாதாரண குழந்தைகளை ஈரத்துடன் காட்டுகிறார். பிராணிகளுக்கும் ஆன்மா இருப்பது போல அவைகள் மகிழ்ச்சி கொள்வதாய் எழுதப்பட்டுக்கும் வரிகள் அற்புதமானவை.கொளிஞ்சி விற்று வருகிற காசில் மசாலா வடை வாங்கித்தின்கிற ஆசை போல இவர்களின் ஆசைகள் மலிந்து கிடக்கின்றன.
அன்பும், மனித நேயமும் கிராம மக்களிடம் வெகு சிறப்பாக வெளிப்படும் போது இருக்கும் மனப்பகிர்தல் விரிவாகச் சொல்லப்படுகிறது., அவர்களில் சிலர் ஏமாற்றுவர்களாக இருப்பது காட்டப்படுகிறது. ஏமாற்றுகிற கர்ப்பிணிப் பெண், சாமக்கோடாங்கியின் பின்னணியும் தெரிவதில்லை ஆனால் சங்கடப்படுத்துகிறது.மண்ணின் மனிதர்களான ஆதிவாசிகள் ஒவ்வொரு இடமாய் அலைக்கழிக்கப்படுகிற விசயமும் கூட. கடவுள்கள் கூட அவர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களே வெறுமனே கோபம் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள் . ஒரு பக்கம் சாயப்பட்டறைகள், இன்னொரு பக்கம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள். இவற்றுக்கிடையே இருந்து காலம் தள்ள முடியாத கடவுள்கள் தொலை தூரம் ஓடிப்போகிறார்கள். சாலை விஸ்தாரத்தில் பிடறி தள்ளி ஓடிப்போகிறார்கள். நாத்திகத்திற்கு வலுசேர்க்கும் படிமங்கள்.இன்னொரு புறம் வரலாற்றை படிமமாக்குகிற முயற்சியாக கோட்டை பொம்மாக்கா போன்ற கதைகள் தென்படுகின்றன. ஆடு மேய்க்கும் பெண் நரியையும் சகா போல் நேசிக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணை நரி வயிற்றைக் கிழித்துப் போட்டு விடுகிறது. மனிதர்களின் நம்பிக்கை துரோகங்கள் போல் பிராணிகளிடதிலும் உள்ளது.பூர்வீக வீட்டில் கழுதைகளின் ஓலம் போல் சடங்குகளை கிண்டல் செய்கிறவை புது வார்ப்புகள் ..கிராமங்கள் மாறாமல் இருக்கின்றன். வாகனங்களின் அபரிமிதமாக இயக்கம் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார்..கொங்கு மொழி வாயிலாக ஒரு கதை சொல்லியும், குழந்தை மனமும் சரியாக வெளிப்பட்டிருக்கிறது.இதில் வரும் சில கதைகளின் தர்க்க்குறைபாடுகளை இதன் முழு எதார்த்தமும், சொல்லும் மொழியும் மறைத்து விடுகிறது. கிராமிய வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையோடு இணைக்கும் கணிகள் இல்லாமல் இருக்கின்றன.
உலகம் விரிந்ததாய் எல்லோருக்குமான களமாய் இருக்கிறது. ஆனால் தங்களுக்கான வெளியும் இடமும் அற்றவர்களாய் போய் விடுகிற மனிதர்களை இவர் பெரும்பாலும் காட்டுகிறார். ஆடுமாடுகளை நேசிக்கும் சிறுவன் அவனின் உலக்த்திலிருந்து துரத்தப்பட்டு கிணற்றில் விழ நேருகிறது, படிக்கப் போய் மதிய உணவு சமயலுக்காக சிறுவர்கள் விறகுவெட்டிகளாகிறார்கள். மசால் வடை வாசனை பிடிக்க கொளுஞ்சி பிடுங்கப் போய் விடுகிறார்கள். தன் குடும்ப வாழ்க்கை மேம்பட வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் இழக்கும் பெண்ணும் தாய் வீட்டுற்குத் துரத்தப்படுகிறாள்.ஆதிவாசிகள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். வேறு மாநில தமிழர்கள் துரத்தப்படவும் பல காரணங்கள் அமைந்து விடுகின்றன. ..தங்களுக்கான வெளியை இழந்து போய் நிற்பவர்களாக இருக்கிறார்கள்.
இவரின் பிரதேசம் பற்றி இவரே இப்படி சொல்கிறார்:” கொங்கு தேசத்தில் ஏகதேசமாக தென்கிழக்குப் பகுதிதான் நான் பிறந்த பூமி. விவசாயிகளில் இரண்டு ரகம் உண்டு. செழிப்பான ஆற்றுப் படுகைகளில் வ்யல்பரப்புகளுடன் வாழ்பவனும் விவசாயிதான். கள்ளிமரங்கூட பல்வற்றிக்கிடக்கு மேட்டாங்காடுகளில் காடுகரையுடன் காலந்தள்ளுபவனுன் விவசாயிதான். கண்ணுக்கெட்டும் தொலைவிற்கு குளமோ ஆறோ நீர் ஆதாரம் கொண்ட மலையோ தட்டுப்படாத பகுதிதான். ஆனி, ஆடியில் பனைமரம் கூட வாடி நிற்கும். பல பஞ்சத்திலும் சிறுகச்சிறுக உயர்ந்து வளர்ந்து சிறிதேனும் பசுமை கொண்டிருந்த பனை மரங்களும் குருத்து தொங்கி காயந்து விழுந்தன. பனை மரங்கள் ஜீவமரணப் போராட்டதுடனே வழங்கிய பதனியும் நுங்கும் சேகாயும், பனம்பழமும், பனஞ்கிழங்கும் எமது மக்களின் பசியைப் போக்கியதை விட பட்டினியைப் பல நாட்கள் குறைத்தன. இது போக ஆடுமாடுகளுக்கு வேப்பிலையும், அரப்பிலையும், வேலாங்காயும் தழையும் வளர்ப்புத்தாயாக வழங்கிய மரங்கள் கூட காலத்தின் கொடூரத்தால் எம்மை விட்டுப் பிரிந்தன. பலவற்றை வயிற்றுக்காகவே இழக்க வேண்டியிருந்த்து. கையை வெட்டி வித்துப் பிழைப்பது போலிருந்தது நிலைமை. கால ஓட்டத்தில் பஞ்சத்தின் கோரப்பிடியால் சோறு போட்ட ஆடு மாடுகளையும் காசிற்கு விறக் வேண்டியது வந்தது. ஒரே தலைமுறையில் முட்டிதூக்கிப் பஞ்சம், துவரைப் பஞ்சம், கோதுமைப்பஞ்சம் எனப் பல வறட்சியில் மக்கள் அலைக்கழிந்து போனார்கள். கூலிக்காரர்களும் பண்ணையக்காரர்களும் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்து புறப்பட வேண்டிய துர்நிலை ஏற்பட்டது. இளைய தலைமுறையினர்க்கு கல்வி கற்க வேண்டிய சமயத்தில் குடும்பத்ஹ்டைக் காப்பாற்ற புலம் பெயர்ந்து அடுத்த மண்ணிற்கு புறப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறந்த பூமியென்று புலம்பிக் கொண்டிருந்தால் இடுப்புக் கோவணம் கூட மிஞ்சாது என்றதோர் நெருக்கடி. இதையெல்லம் மீறி என்ன நடந்தாலும் பிறந்த மண்ணிலேயே சாவோம் என்று வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்க்கைதான் இத்தொகுப்பில் இடம் பெற்ற அனேக கதைகள்.”
எழுதிச் செல்லும், சொல்லும் விதத்தில் நுணுக்கமானப் பார்வை. சிறுகதைகளின் முரண் வலிந்து இல்லாததாய் இயங்கிறது. ஜாதியக் குழுக்களும், முரணும், சங்கடங்களும் ஒளிவு மறைவின்றி சொல்லப்பட்டிருக்கிறது. இளம் பிராயத்தில் மனதில் ஆழப்பதிந்து போன சுவடுகள்.கொங்கு மொழி படைப்பிலக்கியத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில் அதை நுணுக்கமாகவும் ஆழமாகவும் பயன்படுத்தும் லாவகம்.நாவல் குமரேசனிடமிருந்து விரிவான நாவல் வடிவப்படைபடைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது. கொங்கு கலாச்சார அம்சங்களில் ஆழமான ஈடுபாடு.மொழியின் லாகவம், மக்களை வாசிக்கிற அக்கறை இவையெல்லாம் அந்நிய மாநிலத்தில், அந்நியப்பட்ட சூழலில் தன் வேர்களை அடையாளப்படுத்துகிற முயற்சியாக குமரகேசனின் எழுத்து வெளிப்பட்டிருக்கிறது. இது இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும்.

(ரூ 80/ வெளியீடு: அன்னை ராஜராஜேஸ்வரிர் பதிப்பகம், சென்னை 11)
= சுப்ரபாரதிமணீயன் subrabharathi@gmail.com

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

மலேசியாவில் தமிழ் நாவல் பயிற்சிப்பட்டறை


மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை

சுப்ரபாரதிமணியன்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஜூலை இறுதியில் 28, 29l கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து கொண்டேன்.முதல் நாள் தமிழ் நாவல் வளர்ச்சியும் தோற்றமும், புதிய நாவல்களின் தீவிரமும் பற்றிப் பேசினேன்.இரண்டாம் நாள் எனது நாவல் அனுபவம் என்ற தலைப்பிலும், இளையோர் மற்றும் சிறுவர் கதைகள் பரிசளிப்பு விழாவில் தமிழ் சிறுகதைகள் பற்றியும் என்னுரை இருந்தது.
மலேசியாவிலிருந்து எழுதும் ரெ.கார்த்திகேசு அவர்கள் 4 நாவல்கள், 10 சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து தன் பங்களிப்பை செய்து வருபவர்.( அவரின் சமீபத்திய சிறுகதைத்தொகுதி “ நீர் மேல் எழுத்து”, கட்டுரைத் தொகுதி ரெ.கார்த்திகேசுவின் விமர்சன முகம்-2 .இவை இரண்டும் இம்மாதம் அங்கு நடைபெறும் மு.வ. நூற்றாண்டு விழாவில் 29ல் வெளியிடப்படுகின்றன).அவர் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப்பேசுகையில் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு பெரிய நாவல் அனுபவம் உள்ளது. முதலில் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.பேராசிரியர் சபாபதி 2000க்குப் பின் மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் 45 நாவல்கள் வெளியிட்டுள்ளதைப்பற்றிப் பேசினார். அ.ரங்கசாமி, சீ.முத்துசாமி முதல் சை.பீர்முகமது, பாலமுருகன் வரை சிறந்த நாவலாசிரியர்கள் பற்றி விரிவாய் குறிப்பிட்டார். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக நாவல் போட்டி நடத்தி வருகிறது.இவ்வாண்டு சுமார் 1, 75,000 ரூபாய் சிறந்த நாவல்களுக்கான பரிசுத்தொகையை வழங்குகிறது.இவ்வாண்டு அப்போட்டியை ஒட்டியே ஒரு பயிற்சியாக இப்பட்டறை அமைந்திருந்தது.கலந்து கொண்ட 40 எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ் நாவல்கள் பற்றிப் பேசினர். பத்துக்கும் மேற்பட்டோர் மு.வ., அகிலன், நா.பா. நாவல்களைப் பற்றி பேசினர். இன்னொரு பகுதியினர் கீழ்க்கண்ட மலேசியா எழுத்தாளர்களின் இரு நாவல்கள் பற்றி அதிகம் பேசினர்.
1. ரெ.கார்த்திகேசுவின் “ சூதாட்டம் ஆடும் காலம்”
2.எஸ்.பி.பாமாவின் “ தாயாக வேண்டும் “ நவீன நாவல்கள் பற்றிய பரிச்சயம் வெகு குறைவாக இருந்தது.முனைவர் முல்லை நாவல் எழுதும்போது மனதில் கொள்ள வேண்டியவை பற்றி விரிவாகப் பேசினார்.பட்டறையை ஒட்டி நான் தயாரித்து அளித்த ஒரு கையேட்டில் தமிழ் நாவல் சில குறிப்புகள், தமிழின் சில சிறந்த நாவல்கள் பட்டியல், கடந்த ஆண்டின் சில சிறந்த நாவல்கள், எனது நாவல்கள் பற்றிய சில விமர்சனக்கட்டுரைகள் என இடம் பெற்றிருந்தன.அதில் ஒரு பகுதி இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் அமைந்துள்ளது. மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர் பெ.இராஜேந்திரன் தனது நிறைவுரையில் “ நிறைய வாசியுங்கள், குறைவாக எழுதுங்கள். 50 நாவல்கள் இப்போட்டியில் இதுவரை கலந்து கொண்டிருந்தாலும் மிகத் தரமான நாவல்கள் இல்லை என்ற வசவு ஒழிய வேண்டும்” என்றார். பங்கேற்பாளர்கள் தாங்கள் இவ்வாண்டின் போட்டிக்கு எழுத உத்தேசித்திருக்கும் நாவலின் கதை சுருக்கத்தையொட்டி நாவல் வடிவம், உத்திகள், நடை என ஆலோசனைகள் தரப்பட்டன.இரண்டு நாட்களும் எழுத்தாளர்கள் தங்கி பட்டறையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு, உறைவிடம் என்று வசதிகள் தந்து கட்டணமில்லாமல் நடத்தப்பட்டது.(சென்றாண்டு இதேபோல் எஸ்.இராமகிருஸ்ணன் சிறுகதைப்பட்டறையை மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்காக நட்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.) குறிப்பேட்டிலிருந்து…
தமிழின் சில முக்கிய நாவல்கள்:* நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
* ஒரு மனிதன் ஒரு வீடு – ஜெயகாந்தன்
* ஒரு நாள் – க.நா.சுப்ரமணியன்
* மோகமுள் – தி. ஜானகி ராமன்
* ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தரராமசாமி
* கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
* நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
* மானசரோவர் – அசோகமித்திரன்
* வெக்கை – பூமணி
* தலைமுறைகள் – நீல பத்மநாபன்
* துறைமுகம் – தோப்பில் முகமது மீரான்
* காகித மலர்கள் – ஆதவன்
* சாயாவனம் – சா.கந்தசாமி
* புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்
* கடல் புரத்தில் – வண்ணநிலவன்
* தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
* வாக்குமூலம் – நகுலன்
* மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
* மண்ணகத்துப் பூந்துளிகள் – ராஜம்கிருஸ்ணன்
* செடல் – இமயம்
* யாமம் – எஸ்.ராமகிருஸ்ணன்
* ரப்பர் – ஜெயமோகன்
* மூன்றாம் விரல் – இரா.முருகன்
* அலெக்சாண்டரும், ஒரு கோப்பைத்தேனீரும் – எம்.ஜி.சுரேஷ்
* மணியபேரா – சி.ஆர். ரவீந்திரன்
* நல்ல நிலம் – பாவைச் சந்திரன்
* கங்கணம் – பெருமாள்முருகன்
* ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
* நீர்த்துளி – சுப்ரபாரதிமணியன்
கடந்த ஆண்டின் சில சிறந்த நாவல்கள்:* உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ. முத்துலிங்கம்
* கொற்கை – ஜே.டி. குரூஸ்
* ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
* அபிலாஷ் – கால்கள்
* நிழலின் தனிமை – தேவிபாரதி
* கண்ணகி – தமிழ்ச்செல்வி
* வல்லினமே மெல்லினமே.. – வாசந்தி
* மறுபக்கம் – பொன்னீலன்
* படுகளம் – ப.க. பொன்னுசாமி
* குவியம் – ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர்)
* விடியல் – அ. ரங்கசாமி ( மலேசியா )
* சூதாட்டம் ஆடும் காலம் – ரெ.கார்த்திகேசு (மலேசியா)
0 சுப்ரபாரதிமணியன் 0 subrabharathi@gamil.com

செவ்வாய், 24 ஜூலை, 2012

திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்

சுப்ரபாரதிமணியன்

Share

தமிழில்: சுப்ரபாரதிமணியன்
1.
அரசியல்வாதியும் புறாவும்
ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும்
அன்பாகவும், அடிக்கடி சண்டையிட்டும் இருந்தனர்
வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது.
அரசியல்வாதி சொன்னார்:
“ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ
அது என் அரசியல்”
புறா மீண்டும் சொன்னது:
“நான் என் இறக்கைகளை அடித்தபடி
வானில் பறப்பேன்””
அரசியல்வாதி ஒரு துப்பாக்கியைக் காட்டினான்.

புறா பறக்க இயலாமல் மெளனமானது.
இப்போது வெள்ளைப்புறா
அரசியல்வாதியின் பாக்கெட்டின் உள்ளே இருக்கிறது.

  • ரகு லைசாங்கதம் (மணிப்பூரி)

2.காந்தியும், ரோபோவும்
நீண்ட காலத்திற்கு முன்
நேருஜி ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு ரோபோவை வைத்திருந்தார்
அதன் வாய் ஒரே நிமிடத்தில்
ஆயிரம் முறை “ஹரே ராமா””வை உச்சரிக்கும்
பாலாபாஜி பிர்லாவிடமிருந்து கடன் பெற்ற காந்தியை வைத்திருந்தார்
பத்து கண்டு நூலை ஒரு மணிநேரத்தில் நூற்கும்
விக்ரம் சாராபாய் குடியரசு தினத்தில் அறிவித்தார்:
ட்ராம் பேயில் விஞ்ஞானத்திற்காக புது புனித ஸ்தலத்தை சிருஷ்டிப்பேன்

தில்லி செங்கோட்டையில்
வெறும் வயிற்றோடும் வறண்ட தொண்டையோடும்
கழுதைகள் கத்துகின்றன.
வண்ணார்கள் “ ஹரிஜன”” தினசரியின் பழைய பிரதிகளை
துண்டுதுண்டாக்கி தின்னக் கொடுக்கிறார்கள்.

இன்று சாதுக்கள் அறிவிக்கிறார்கள்:
பொக்கரனில் கோவில் ஒன்றைக் கட்டுவோம்,
புது புத்தரை வைக்க.
மகிழ்ச்சியுடன் கத்தினேன்:
“வாழ்க பாரதம், வாழ்க”” -தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி)
3.கடல் கவிதைகள்

1. கப்பல்கள் பயணிக்கின்றன
இரவுகளின் தடுமாறும் திசைகளில்
தாறுமாறான விதிகளின் வழியில்.
கரை தெரியாது பார்வையில்,
எனினும் பயணித்தபடி.

கயிறு கட்டிய பொம்மை
கயிரே சூத்ரதாரி.
அதன் வழியைத் தீர்மானிக்க
கப்பலுக்குத் தடுப்புண்டு.

இறுகிய காரையும், நீரும் அலசி
பலகை மீது
பொன்னான ஜாத்ரா
வர்ணங்களின் சிதிலமும்
இசை, நடனம், விருப்பு வெறுப்பு
இணைந்த இனிப்புப் பண்டம்.

ஒருவனே சூத்ரதாரி
கடலின் அதிகாரத்தை எதிர்ப்பவன்
வெற்றிவரை தோல்வி மீண்டும் மீண்டும்

வாழ்க்கையின் நிர்பந்தங்களை
அவனே நின்று சமாளித்து
ஒவ்வொரு நிலையிலும்
வாழ்க்கை
மரணத்தை ஜெயித்து..

2.
அம்மா மாதவிடாய் பிறகு மறுபடியும்
புதுப் பிறப்பிற்குக் காத்திருக்கிறாள்
பிறகு வாழ்க்கையின் பயணம்,
கடல் வழி காற்றுபோல்
அம்மாவின் முலைப்பாலை
அமிர்தமாய் சுவைக்கும் குழந்தைபோல்
சுறாவளியில் சிக்கியும்.

தாயும் மகனும் சேர்ந்து
கனவுப் பயணம் போல
கடல் வழிகளாகின்றன.
ஒவ்வொரு மூச்சிழைப்பையும் பிடித்து
கடல் பயணம் தொடர்ந்து..
வாழ்க்கையின் சந்தோஷம் கடலாய்
துக்கமூட்டைகளைக் களைந்து
சுகங்களைத் தந்தபடி.

துக்கங்களில் சரணடைந்து

ஒருவன் புத்தனாகிறான்.

கடல் விந்தைகளுக்கு
யாராக இருப்பினும்
அவன் சரணடைந்து
கடல் பயண
உச்ச சந்தோஷத்தைக் கொள்ளுதலாய்…

  • நிங்கப்ப முதேனூர்(கன்னடம்)

4.மாய துணி

பல வர்ண நூல்களால் எனது தறியில் நெய்கிறேன்
என் துணி சொல்கிறது.
என் உணர்வுகளான மகிழ்ச்சி மற்றும் காயம் என.
இன்று நான் புதிதாக ஏதாவது நெய்ய விரும்புகிறேன்.
பூக்கள், பறவைகள், ரகசியமான வனம், வசந்தம்
நதிகள், மலைகள்.
நான் தீவுகளை நெய்ய விரும்புகிறேன்
கடல், நட்சத்திரங்கள் மின்னும் வானம்
எனது துணி உலகைப் பிரதிபலிக்க விரும்புகிறதா?

பூமியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்
மூன்றில் ஒரு பாகமே நிலம்
என் மாய துணி மாய வடிவமைப்புகளால் வளர்கிறது.

மரத்தில் செய்யப்பட்ட கூரிய நாடாவால் நெய்கிறேன்
இந்த நாடாவை தங்களைக் காத்துக் கொள்ள
எனது மூத்தப்பாட்டிகள் ஒரு காலத்தில் போராடியிருக்கிறார்கள்
“ரூமா” தறி நாடாவைக் கையில் வைத்துக்கொண்டு
கெட்ட்தை அழித்து சுத்தமான உலகிற்காக
இப்போது மீண்டும் எழுச்சி கொள்ளும் காலம்.
வினோத வர்ண நூல்
இனம், பிரதேசம், நம்பிக்கை என்று.
இந்த “ரூமா””வால் விரிவான மாயத்துணியை நெய்யட்டுமா.
புது உலகில் அன்பு,அமைதியுடன்
வினோதத் துணி விரியும்
போர்வீர்ர்களின் தலைமுறைகள் அடையாளத்தை
தாய் மண்ணிற்காக மலைகளின் மகள் தொடர்கிறாள்.

  • க்ரைரி மோக் சவுத்ரி ( மோக்)


5.ஒலி


இன்னொரு ஜன்னலையும் திறந்தேன்
திடுமென உணர்ந்தேன்
அன்றைய தினங்களின் போகுல் மலரின் வாசனை
என் நாசியைத் தொட்ட்தைப் போல்
எங்கிருந்தோ காட்டின் ஒலி
மெதுவாய் வந்து தொட்ட்து என்னை.
இன்னும் அதி உணர்கிரேன்.
நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் வழியில்
வீதியின் வளைவில்
உன்னை நான் தாண்டி வந்ததைப்போல்.
ஒரு இதமான மதிய வேளை ஓய்வாக
அமர்ந்திருந்தது என் அருகே.
உனக்காகக் காத்திருந்தது.
வாசலில்
உதிர்ந்த இலைகள் ஏதோ சொல்ல விரும்பியது
சிறு புல்லிடம்.

  • தேபா பிரசாத் தாலூக்தார் (அசாமி)

6.பிரிவினை

எங்கும் ரத்தத்தின் நிறம் ஒன்றே
எங்கும் கண்ணீரும், வியர்வை ருசியும் ஒன்றே
எங்கும் பசியின் கதறல் ஒன்றே
ஆனால் நாம் ஒன்றல்ல.

எழுத்து

பாறையில் மழையால எழுதினேன்

மகிழ்ச்சியாய் படித்தேன்

சூரிய ஒளியும் அதுவே.

காந்தீயம்

நான் காந்தீயத்தை மிகவும் நேசிக்கிறேன்

அது அய்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டாய்

இருந்தால் இன்னும்.

மயிலம்மா

பிளாச்சிமடா வீரநாயகி

இறந்துவிட்டாள்

கொகோ கோலா நிறுவனங்கள்

நெகிழி போல எப்போதைக்கும்

  • ஹரிதாஸ் பாலகிருஷ்ணன் (மலையாளம்)

7.வளர்ச்சியின் மறுபுறம்

நீங்கள் யாராக இருப்பினும் வணக்கங்கள்.

எங்கள் நலம் பற்றி விசாரித்ததற்கு ஆயிரம் வணக்கங்கள்

சாகச நவீன வளர்ச்சியின் புரட்சி பற்றியும்.

வனங்களிலிருந்து எங்களை விலக்கி விட்டீர்கள்

வனத்துறையினரின் உதவியுடன்.

பசுமை வாழ்க்கையைத் திருடி கொண்டு விட்டீர்கள்

பசுமைப் புரட்சி என்ற பெயரால்.

பசுமைப் புரட்சி என்றதில்

பாலை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நீல புரட்சி என்ற பெயரில்

எங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டீர்கள்

தொழில் புரட்சி என்ற பெயரில்

எங்கள் கரங்களை வெட்டினீர்கள்

ஆணைகளுக்கு அஸ்திவாரங்களாக

எங்கள் இரத்தத்தை ஊற்றி அமைத்தீர்கள்

பல வர்ண கண்ணாடிகளையும்

பல கொடிகளையும் தந்தீர்கள்.

உங்களின் புதிய ஆயுதங்களின் பலத்தை

பரிசோதித்தீர்கள்.

எங்கள் நிலத்தை, நீரை, வானத்தை, காற்றை

அபகரித்தீர்கள்.

இன்னும் உங்கள் அணு வெடிப்புகளால்

எங்களையும்.

ஒவ்வொரு படியிலும் கரங்களையும் உருவாக்கினீர்கள்.

முதுகெலும்பை முறித்து சாய்ந்திருக்க செய்தீர்கள்.

சார், மேடம்

நீங்கள் யாராக இருந்தாலும்

நாங்கள் மனிதப் பிறவிகள்

எங்கள் மனிதப் பிறவிகளால் வாழ விடுங்கள்

இயற்கையின் மடியில்

ஓற்றுமையுடன் மனிதப் பிறவிகளாய் வாழ்வோம்

எங்கள் வாழ்க்கையை நாங்கள் வாழ விடுங்கள்

எங்கள் சாவை நாங்கள் எதிர்கொள்ள விடுங்கள்

  • கே.எஸ். ரமணா (தெலுங்கு)

subrabharathi@gmail.com