சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 21 செப்டம்பர், 2011

"அப்பா" பற்றிய பழைய நினைவுகள்

==== RV ==============


https://siliconshelf.wordpress.com

சுப்ரபாரதி மணியனை எனக்குத் தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா என்று கேட்டு மானத்தை வாங்காதீர்கள்.) நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் சந்தித்திருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது விகடன் குமுதமே அங்கே கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். இவர் சிரமப்பட்டு வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் அங்கே போய் சாயாவனம் புத்தகம் வாங்கியபோது அவர் கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்த மாதிரி வெளிச்சம்! தமிழன் புஸ்தகம் வாங்குவதே அரிது. அப்படி வாங்கினாலும் சுஜாதாவை தாண்டுவது அதுவும் அந்தக் காலத்தில் மிக அரிது. அவருக்கு யாருடா இந்த பையன் சாயாவனம் எல்லாம் வாங்கறானே என்று ஒரு ஆச்சரியம். அவருக்குத் தெரியுமா நம்ம சுயரூபம்?

கஷ்டப்பட்டு ஒரு தமிழ் சங்கம் வேறு நடத்தினார். ஏதோ ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த பெரிய மனிதர் அறிவிக்கப்பட்டிருந்த டாபிக்கை விட்டுவிட்டு வேறு எதையோ பேசினார்.வந்த எரிச்சலில் நான் அவரது தமிழ் சங்கம் பக்கம் போகும் ஆசையை விட்டுவிட்டேன். இப்போது தோன்றுகிறது – புத்தகங்களை இரவல் வாங்கவாவது அவரை நாலு முறை போய் பார்த்திருக்கலாம். ஒரு புத்தகக் கண்காட்சியிலாவது கூடமாட ஏதாவது உதவி செய்திருக்கலாம். நல்ல மனிதர்களை பழக்கம் செய்து கொள்ளவே அப்போதெல்லாம் ஒரு வினோத தயக்கம்!

கண்காட்சியில் இவர் எழுதிய “அப்பா” என்ற சிறுகதை தொகுப்பை obligation-க்காகத்தான் வாங்கினேன். அப்போதெல்லாம் சுஜாதாதான் என் ஆதர்ச தமிழ் எழுத்தாளர். அவர் ஒரு முன்னுரை வேறு எழுதி இருந்தார். (அந்த முன்னுரையில் பாதி புரியவில்லை.) இவர் கொஞ்சம் dry ஆக எழுதும் எதார்த்தவாதக்காரர். எல்லா கதையும் சோகம் நிரம்பி இருக்கும், வீழ்ச்சி இருக்கும், நிறைய நுண்விவரங்கள் இருக்கும். வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் கதை கண்டுபிடிக்கும் பார்வை. அதையெல்லாம் ரசிக்கத் தெரியாத காலம். ஏதோ கொஞ்சம் சீரியஸாக படித்தாலும் மாதுரி தீக்ஷித் “ஏக் தோ தீன்” என்று ஆடிப் பாடுவதுதான் மிஸ் செய்யக்கூடாத ஒன்றாக இருந்த காலம். புத்தகங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாக இருந்தது. இரண்டு கதை படித்துவிட்டு இந்த மாதிரி அழுமூஞ்சிக் கதைகள் படிக்க பிடிக்காமல் பரணில் தூக்கிப்போட்டுவிட்டேன். ஒரு பத்து வருஷம் கழித்து புரட்டிப் பார்த்தேன். நல்ல எழுத்தாளர். சுஜாதா தன் முன்னுரையில் குறை சொல்லி இருந்த ஒரு கதை எனக்கு நல்ல கதை என்று பட்டது. அட என் ரசனை சுஜாதாவிடமிருந்து வேறுபடுகிறதே என்று வியந்தது நினைவிருக்கிறது. (சுஜாதாவின் முன்னுரை வேறு புரிந்துவிட்டது)

சமீபத்தில் மீண்டும் படித்தேன். கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்!

அப்பா: பற்றாக்குறை குடும்பம். சின்ன மகனோடு தங்கி இருக்கும் அப்பா. பெரியவனைப் பார்க்க வரும்போது ஒரு பியர் – இல்லை இல்லை பீர் – குடித்துக் கொள்வார். அவனிடமிருந்து கொஞ்சம் பணம் வாங்கிக் கொள்வார். திடீரென்று தன் பேரனுக்கு நல்ல ஜட்டிகள் வாங்கி வருகிறார். பணம் எங்கே கிடைத்தது?

இன்னொரு முறை மௌனம்: ஐந்து மணமாகாத இளைஞர்கள் ஒரு போர்ஷனில், 35 வயது கணவன், 18 வயது இளம் மனைவி, 27 வயது கணவனின் தங்கை மூவரும் இன்னொரு போர்ஷனில். அவ்வளவுதான் கதை. இந்தத் தொகுப்பில் சுஜாதாவுக்கு பிடித்த கதை இதுதான். மிக subtle ஆக எழுதப்பட்டது.

இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்: திருமணத்தில் தலைப்பாகை கட்டிவிடும் தொழில் செய்பவர். ரெடிமேட் தலைப்பாகை வந்தால் என்னாவது?

நிழல் உறவு: மோர்க்காரியுடன் பந்தம் உள்ள குடும்பம். பல வருஷம் கழித்து மோர்க்காரியின் மகனை சந்திக்கிறார்கள். அவனுக்கு அம்மா மீது அலட்சியம். பந்தம் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

சில வேறு தினங்கள்: கோழிச்சண்டை மட்டுமே தெரிந்த கொஞ்சம் பொறுப்பில்லாத அப்பா. அம்மா ஒரு நாள் அவரை எதிர்க்கிறாள். இந்த மாதிரி ஒரு கதை எழுத முடிந்தால்!

அடையாளம்: வேற்று ஜாதி மாப்பிளைத் தோழன். சுமாரான கதை.

அது ஒரு பருவம்: மொட்டைக் கடிதத்தால் கல்யாணம் நின்று போன அக்காவின் துயரம்.

கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்: கல்யாணத்தில் குடத்திலிருந்து மோதிரம் எடுக்கும் சடங்கு. கணவனே மூன்று முறையும் வெல்கிறான். மனைவிக்கு வருத்தம். இந்த சாதாரண நிகழ்ச்சியை மிக அருமையாக எழுதி இருக்கிறார்.

வெளிச்சமற்றவை: ஒரு ஏழை உறவுக்காரி தான் சார்ந்திருக்கும் குடும்பத்தினரால் படும் காயங்கள். நல்ல எழுத்து.

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்: சுஜாதா இதைத்தான் சிறுகதை வடிவம் சரியாக வரவில்லை, தேவைக்கு அதிகமான விவரங்கள் என்று சொல்கிறார். எனக்கு அந்த விவரங்கள்தான் இந்த கதையை எங்கோ கொண்டு செல்கின்றன என்று தோன்றுகிறது. இந்த மாதிரி கதையைத்தான் ஒரு இருபது வருஷம் முன்னால் என்னால் ரசித்திருக்க முடியாது. ஜெயமோகன் இந்தக் கதையை தனக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ். ராமகிருஷ்ணனும் இதை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் குறிப்பிடுகிறார்.

கோடை: கடுமையான கோடை. எல்லாரும் வீட்டில் வெந்து சாகிறார்கள். ஒரு கூலிக்காரன் ஒரு மர நிழலில் கட்டில் போட்டு தூங்குகிறான். அவ்வளவுதான் கதை. இதிலும் ஒரு கதையைக் காண ஆழமான பார்வை வேண்டும்!

வெடி: கிணறு வெட்ட வெடி வைப்பவன் கொஞ்சம் இசகு பிசகாக மாட்டிக்கொண்டு தலைமறைவாக இருக்கிறான். சிறுவன் லக்ஷ்மி வெடி வைப்பதைப் பார்த்து எனக்கும் ஒன்று கொடு என்று கேட்கிறான். மனிதருக்கு அபாரமான பார்வை!

உறுத்தல்: மாமன் மச்சான் சண்டை. மச்சான் போடா பொட்டைப் பயலே என்று சொல்லிவிடுகிறான். மாமன் நாடகத்தில் பெண் வேடம் போட்டவர்!

சாயம்: ஹோலி பண்டிகையில் மாட்டிக் கொள்ளும் தமிழன்.

இவரது பலம் எந்த ஒரு அற்ப நிகழ்ச்சியிலும் ஒரு கதைக் கருவை காண்பது. மத்தியான நேரத்தில் மரத்தடியில் தூங்குவதில் எல்லாம் ஒரு கதையைப் பார்க்க முடிகிறது. Subtlety கை வந்த கலை.

பலவீனம் கதைகளில் சுவாரசியம் குறைவாக இருப்பது. எந்தக் கதையும் விறுவிறு என்று போவதில்லை, சரளமான நடை இல்லை. அசோகமித்ரன் பாணியில் வேண்டுமென்றே சுவாரசியத்தை குறைத்து எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது. அசோகமித்ரன் பாணியிலேயே வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளர் கமெண்டரி கொடுப்பதைப் போல பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. அதுவும் ஒரு droning குரலில் அந்தக் கால ஆல் இந்திய ரேடியோ கமெண்டரி கேட்பது போல ஒரு feeling. உணர்ச்சி பொங்கும் சீன் என்று ஒன்று எந்தக் கதையிலும் கிடையாது. மேலும் sometimes he is too subtle. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் கதையில் உள்ள subtlety சுஜாதா மாதிரி ஒரு தேர்ந்த வாசகருக்கே பிடிபடுவது கஷ்டம் என்றால் என் போன்றவர்கள் என்னாவது? இவர் ஒரு acquired taste என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலகுமாரன், தி.ஜா., ஜெயமோகன் போன்றவர்களை படித்துவிட்டு இவரை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமே. ஆனால் முயற்சி செய்து படியுங்கள், படிக்க படிக்க, அவரது subtlety பிடிபட பிடிபட கதைகளும் பிடித்துவிடும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்



by

https://siliconshelf.wordpress.com

திங்கள், 19 செப்டம்பர், 2011

பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்

=சுப்ரபாரதிமணியன்



இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை உணர்ந்து பிற மொழிக்கலப்பு இன்றியே இதழ்களில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர். பகுத்தறிவேஉ வாழ்தலையும், செந்னெறி போற்றுதலையும் வலியுறுத்தியவர்.

மொழியின் அழிவிற்கு மொழிக்கலப்பும், பிற மொழிகளின் ஊடுருவலும், திணிப்பும் காரணமாகின்றன. எனவேதான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்று போராடினார். ஒரு தமிழ்ப் பேராசிரியர் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நிகழ்வு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இலக்குவனாருக்கு நேர்ந்த்து. இருமுறை சிறை, 14 வழக்குகள், கல்லூரி வேலை இழப்பும் அவரைத் தளரச்செய்யவில்லை. தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக், இசை மொழியாக, நீதி மொழியாக இருக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளை முன் வைத்து நடை பயணம் மேற்கொண்டு மாணவர்களை எழுச்சி பெறச் செய்தவர். இலக்குவனார் இந்தி எதிர்ப்புப்போராட்ட்த்தின் போது அவரது பங்களிப்பாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தை இந்தி எதிர்ப்புப் போராட்ட்த்திற்கு ஆற்றுப்படுத்தியதாலும் அதை மக்கள் எழுச்சியாக மாற்றி பெரும் கலககாரர் ஆனார்.அறிஞர் அண்ணா அவர்களும் “ இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்து விசை மதுரையில் பேராசிரியர் இலக்குவனாரிடம்தான் உள்ளது ”என்றார்.

தமிழைப் புறக்கணித்து மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப் போல தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். என்றவர், “ நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமயை நினைத்து நமது வீட்டுத்தலைவியை புறக்கணித்து விடலாமா., தமிழைகளில் சிலர் ஆங்கிலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வாறே உள்ளது “ என்றும் கூறினார்.

தானே தமிழ் இயக்கமாக் வாழ்நாளில் இயங்கியவர். “ என் வாழ்க்கையே தமிழ் நலம் நாடிய போர்க்களம். இளமையில் வறுமையோடு போர். சாதியோடு போர். சமயத்தோடு போர். மூடநம்பிக்கையோடு போர். போர், போர் என்றும் ஓயாத போர் “ என்றார். தமிழ் இயக்கமாக வாழ்ந்தவர்

தமிழ் மொழிச் சிதைவும், புறக்கணிப்பும் உச்சகட்டத்தில் இருக்கும் இன்றைய சூழலில் இலக்குவனார் மேற்கொண்ட கலகக்குரலும், போராட்டமும் இன்றைக்கு வெகு தேவையாகியிருக்கும் சூழல் தமிழுக்கு நேர்ந்திருப்பது துயரமானதே.. = சுப்ரபாரதிமணியன் (9486101003 )



( கோவையில் நடைபெற்ற பேராசிரியர் இலக்குவனார் பற்றிய “ சாகித்திய அக்காதமியும், கிருஸ்ணம்மாள் பெண்கள் கல்லூரியும் இணைந்து நடத்திய

ஒரு நாள் கருத்தரங்கின் பேச்சின் ஒரு பகுதி. பிற கட்டுரையாளர்கள்: திருவாளர்கள் சிற்பி பாலசுப்ரமணியன், முனைவர்கள் இளங்கோவன், மோகன், இராமகுருநாதன், மணலி சோமசுந்தரம், சந்திரா, மறைமலை இலக்குவனார், சூர்யகாந்தன் )