சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 29 செப்டம்பர், 2009

கவிதைச்சுழல் - 1 (30/08/2009)(செய்தி - பதியம் )



.



கவிதைச்சுழல் - 1 (30/08/2009)(செய்தி - பதியம் )





25 கவிஞர்கள் ஒன்று கூடினால் என்ன நடக்கும்,,,, ஆளுக்கொரு அரிவாளும. வெட்டும் குத்தும் (உபயம் டாஸ்மாக்) நடக்கும். 28 குழுக்களாகப்பிரிந்து - ஆளுக்கொரு பிரபல சிற்றிதழ்களில் பக்கம்பக்கமாக விணை, எதிர்விணை எழுதிக்குவிப்பார்கள். தொடர்ந்து ஏழெட்டு இதழ்கள் அவர்கள் எழுத- வாசகர்கள் அதற்கு வரிந்துகட்டிக்கொண்டு அதிபுத்திசாலிகளாக விமர்சனமெழுத..... அப்பப்பா...

இதெல்லாம் எதுமின்றி 25 கவிஞர்கள் ஒன்றுகூடி கவிதைகுறித்து விவாதம்செய்தது ஆரோக்கியமான நிகழ்வாக அமைந்தது.

பதியம் ஏற்பாடுசெய்திருந்த கவிதைச்சுழல் நிகழ்வு 30-08-09 ஞாயிறுமாலை 5மணிக்கு துவங்கி இரவு 8.30 மணிவரை தென்னம்பாளையம் பள்ளியில் நடைபெற்றது. பாரதிவாசன் தலைமையுரையில் - இலங்கைச்சூழல், எந்தவொரு நிகழ்விற்கும் மனமொப்பாததாலேயே - (இளவுவீட்டில் கொண்டாட்டமா என்கிற மனநிலையில்) - பதியம் எந்த நிகழ்வையும் ஒருங்கிணைக்கவில்லை. நீண்ட மௌனத்திற்குப்பின் - கவிதை குறித்து ஒரு நிகழ்வை ஏற்பாடுசெய்திருக்கிறோம். கவிதை வாசிப்பு. அதுகுறித்து விவாதம் என்கிற முறையில் நிகழ்ச்சி அமையும் - என்றார்.

முதல்அமர்விற்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்துப்பேசினார். இன்றைய கவிதைகளின் போக்கு, அதுகுறித்தான இப்படியான விவாதங்கள் வரவேற்க வேண்டியவை என்றார்.

தொடர்ந்து முதலாவதாக கவிதை வாசிக்க வந்த கே.பொன்னுச்சாமி, தான்கொண்டு வந்திருந்த கவிதைத்தாளின் நகலச்சுக்களை (விவாதிப்பதற்கு ஏதுவாக அனைத்துக்கவிஞர்களையும் தத்தமது கவிதைகளை 25 நகலச்சு(ஜெராக்ஸ்) எடுத்துவரக் கூறியிருந்தோம்) அனைவருக்கும் கொடுத்து - பின் கவிதை வாசிக்கத் தொடங்கினார், விடியுமா? என்கிற தலைப்பில் அவர் வாசித்த கவிதைக்கு - பரவலாக விமர்சிக்கப்பட்டது. தொழிற்சங்கவாதியான பொன்னுச்சாமி இலக்கிவாதியாகி கவிதைவாசித்தது - அவர் தன்னை - நான்முதலில் இலக்கியவாதி, பின்பு தான் தொழிற்சங்கவாதி என்று கூறியது ஆச்சர்யப்படவைத்தது.

தொடர்ந்து - இளஞாயிறு, தமிழவன், சுப்ரபாரதிமணியன், செங்கதிர், அ.கார்த்திகேயன், இளஞ்சேரல், செல்வக்குமார், தமிழ்முதல்வன், அருணாச்சலம், அனுப்பட்டி பிரகாஸ், வான்மதி வேலுச்சாமி, யாழ்மதி, செந்தில்முருகள், வைகை ஆறுமுகம், பாரதிவாசன், ஷெய்கிருஸ்ணன், சுரேஸ், சுரேஸ்வரன் உட்பட பலரும் கவிதை வாசித்து - ஒவ்வொருவர் கவிதைவாசித்து முடித்தவுடன் அந்த கவிதை விமர்சனத்தில் துவங்கி - பொதுவான கவிதைச்சுழல் வரை அலசப்பட்டன. கவிதைகளில் ஈழம் சார்ந்த கவிதைகளே கூடுதலாக வாசிக்கப்பட்டு - இன்றைய ஈழ நிலவரம், அதை அந்த கவிதை சொன்ன விதம் என்று விவாதம் நடைபெற்றன.

தமிழவனின் கவிதை தலித்தியம் சார்ந்து பேசியது. டி.என். ராஜ்குமார் கவிதை வீரியத்துடன் வெளிப்பட்டது கவிதை.

கவிதைவாசிப்பிற்குப்பின்னான நீண்ட மௌனமே கவிதை வெற்றியாக பாவிக்கபடவேண்டியது - என்றார், இளஞ்சேரல்.

கவிஞர் தமிழவனுக்கு தான் கொண்டு வந்திருந்த டி.என்.ராஷ்குமாரின் -கல்விளக்குகள்- கவிதைப்புத்தகம் பகிர்ந்தார் (கவிதை வாசிப்புக்கு வருகிற அனைவரையும் ஒரு கவிதைத்தொகுப்பு வாங்கிவர பணித்திருந்தோம். வருகிற அனைத்துக்கவிஞர்களும் அனைவருக்கும் புத்தகம் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதற்காக. வாசிப்புத்தளத்தை விரிபடுத்துகிற சின்ன ஆவலில்)

அடுத்து - அனுப்பட்டி பிரகாஸ் தான் வாழ்ந்த கிராமம் - அதன் நினைவுகள் குறித்தான கவிதை வாசித்தார். மற்றும் கோவை இராஹவ வாகனம் தாக்குதல் வழக்கில் கைதி சிறையிலிருந்த போது எழுதப்பட்ட ஈழம் பற்றிய கவிதையும் வாசித்தார்.

செந்தில் முருகன் மரணம் குறித்தான தனது பதிவினை கவிதையாக்கியிருந்தார். இடம்பெயர்தல் குறித்த கவிதையினை பாரதிவாசனும், ஈழம் அதன் தொடர்ச்சியான தமிழ்த்தேசியம் குறித்து செங்கதிரும் கவிதை வாசித்தனர். பெண்ணியம் குறித்து செல்வக்குமாரும், ஈழம் குறித்து இந்திய இடதுசாரி களின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கி இளஞாயிறும், மதுமாலை தலைப்பில் கார்த்திகேயனும், துணுக்குக்கவிதைகளாய் ஜெய்கிருஷ்ணன், ஈழம் பற்றி வான்மதி வேலுச்சாமியும். ஈழ நிலைபாட்டில் மிப்பெரும் தவறிழைத்த கருணாநிதி விமர்சித்து - மற்றும் தமிழக அரசை விமர்சித்து சுரேஷூம் கவிதை வாசித்தனர்.

இரண்டாவது அமர்வாக சேலத்திலிருந்து அ.கார்த்திகேயனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இனிது இனிது கவிதைச் சிற்றிதழை முனைவர் இரா.இரமேஸ்குமார் அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மனம் நிறைவானவொரு கவிதை அமர்வாக அமைந்திருந்தது. தொடர்ந்து மாதாமாதம் இப்படியான கவிச்சுழல் அமர்வு நடத்தவேண்டும் என்கிற அனைத்துக்கவிஞர்களின் விருப்பத்துடன் - நிகழ்வு இரவு 8.30 மணிக்கு நிறைவுபெற்றது.

- வதனன்
(நன்றி பதியம்)

எழுத்துப் பெருவெளியில்...

எழுத்துப் பெருவெளியில்...
=========================

ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 50 புத்தகங்களாவது திரைப்பட வடிவம் பெற்றுவிடுகின்றன. வெவ்வேறு நாடுகளின் பிராந்திய மொழிப் படங்கள் இந்தக் கணக்கில் வராது. படைப்புகள் திரைப்படமாவது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எழுத்தாளனின் கூர்மையான விவரிப்பும் அவதானமும் இன்னொரு வடிவத்தில் முற்றிலும் பிம்பங்களாக வெளிப்படுகின்றன. எழுத்தாளன் எத்தனை சதம் அதில் சொந்தம் கொண்டாடலாம் என்றிருந்தாலும் மூலமாக அவன் இருக்கிறான். இலக்கியப் படைப்புகளை வெகுஜனத்திரளில் கொண்டு போகவும், திரைப்படமாக ஆனது என்ற காரணத்திற்காகவே இலக்கியப் படைப்பு கவனிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. 13வது கேரளத் திரைப்படவிழா 2008ல் தென்பட்ட சில இலக்கியப் பிரதிகள் கவனத்திற்கு வந்தன.

ஷோஸ் சரமாகோ என்ற போர்ச்சுகல் நாவலாசிரியரின் 1995ல் வெளிவந்த நாவல் ஙிறீவீஸீபீஸீமீss என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. மூலமான நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1999ல் வெளிவந்தபின் பலர் அதைத் திரைப்படமாக்க முயன்றிருக்கின்றனர். சரமாகோ தன் நாவலில் பெயரில்லாத தேசமும், பெயரில்லாத மனிதர்களும் கொண்ட உலகத்தை திரைப்படத்தில் சுலபமாகச் சித்தரித்துவிட முடியாது என்று பல இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் நிராகரித்திருக்கிறார். சமீபத்திலேயே அவரது ஒத்துழைப்பால் திரைப்படமாகியிருக்கிறது.

மருத்துவர் ஒருவருக்கு காலையில் எழுந்ததும் கண்பார்வை குறைந்து விட்டது தெரிகிறது. முந்தின இரவு திடீரென கண்பார்வை இழந்த ஒருவருக்கு சிகிச்சையளித்திருக்கிறார். மருத்துவ மனையில் அவரைப்போலவே பலர் குவிகிறார்கள். இது பரவும் என்று தனியாக அடைக்கப்படு கிறார்கள். மருத்துவரின் மனைவியும் தனக்கும் கண் பார்வை போய்விட்டது என்று சொல்லி கூடவே தங்குகிறார். அவர்களுக்கு வார்டு 3 ஒதுக்கப்படுகிறது. திடீரென கண்பார்வை இழந்து போன உலகத்தை அவர்களால் நிராகரிக்க முடியவில்லை. ஓய்வென்று ஒதுக்கவும் முடியவில்லை. சிறுசிறு தடுமாற்றங்கள் குழப்பங்களாகின்றன. தொடுகையும், வார்த்தைகளும் ஆறுதலானவை. உணவு பெரும் பிரச்னையாகிறது. தரப்படும் உணவு பங்கிடுவதில் சிக்கல்கள். மருத்துவரின் மனைவி ஒத்துழைக்கிறாள். அவர்களுக்குள் எழும் அதிகாரக்குரலால் ஒருவன் தலைவனாகிறான். அவன் எல்லோரையும் மிரட்டுகிறான். அவர்கள் அணிந்திருக்கும் விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துக் கொள்கிறார்கள். தாதாவை மருத்துவர் மனைவி கொலை செய்கிறாள். பாலியல் ரீதி யான ஆக்கிரமிப்புகள் முறைதவறி நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் கட்டுப்பாடில்லா மல் போகிறது. விபத்தும் ஏற்படுகிறது. நாலைந்து பேரை மீட்டு அவள் வெளியே வருகிறாள். உலகமே குருடர்களின் துயர நாடகமாகிவிட்டது. அந்த நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. உணவுப் பொருட்களுக்கான போராட்டம். அவள் வீட்டைக் கண்டுபிடித்து விடுகிறாள். இயல்பாகிறார்கள். அவர்களின் ஒருவனுக்கு கண் பார்வை தெரிய ஆரம்பிக்கிற நம்பிக்கையுடன் படம் முடிகிறது.

துயர உலகிற்குள் தள்ளப்படும் வேதனை படம் பார்ப்பவர்களையும் அழுத்திக்கொண்டே இருக்கிறது.பெர்னான்டோ டெய்ரிலீஸ் இயக்கி இருக்கிறார். கண் பார்வை இழந்தவர்கள் மற்றவர் கள் முன்னால் பார்க்கப்படும் அனுதாபப் பார்வையும், பார்வை இழந்து போனவர்களின் உலகமும் என்று இந்தப் படம் அமைந்திருக்கிறது. மருத்துவரின் மனைவி உலகம், அவளது கணவனுடனான உலகம், தட்டுப்படுபவர்களெல்லாம் அவளின் பராமரிப்புக்கு உள்ளாக வேண்டிய உலகம் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. பாரமாய் அழுத்தும் சமூக அவலங்களால் நிலையற்றுப் போகும் மனிதர்களின் குறியீடாய் பார்வை இழப்பு மூலம் படம் அமைகிறது.

Farewell Gulsary படம் சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐஸ்வாவ்வின் நாவலாகும். 1966இல் ரஷ்ய மொழியிலு:ம 1979ல் ஆங்கிலத்திலும் இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. 1968லேயே சோவியத் நாட்டில் இது முதலில் படமாக்கப்பட்டிருக்கிறது. ககாகிஸ்தான் சோவியத்தின் ஒரு பகுதி யாக இருந்த காலத்தை இப்படம் சித்தரிக்கிறது. போர் வீரனானவனுக்கு கூட்டுப் பண் ணையில் கால்நடைகளைப் பராமரிக்கிற வேலை தரப்படுகிறது. குல்சாரி என்ற குதிரை அவனின் பிரிய மானது. அதனுடனான அவனின் பரிமாற்றங்கள் ஆத்மார்த்தமானவை. புதிய கட்சி தலைவர் அப் பிரிவிற்கு வரும்போது குல்சாரியை தந்துவிடக் கேட்கிறார். குல்சாரி முரண்டு பிடித்து போவதும்

அவனிடமே திரும்பி வருவதும் நிகழ்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கையன்று அவனை சீர்குலைக்கிறது. ஆடுகளை நிர்வகிக்கும் இன்னொரு கூட்டுப்பண்ணைக்கு மாற்றப்படுகிறான். மழைக்குத் தாங்காத அப்பண்ணைக் கட்டிடம் இடிந்து விழுந்து சிரமத்திற்குள்ளாகிறது. மனைவியும் முடமாகிறாள். சோசலிசத்தை அமைப்பதிலும், ஸ்டாலினிய நடவடிக்கைகளிலு:ம இருக்கும் சிக்கல்கள் அவனைத் துவளச் செய்கின்றன. பிரியமானத் தோழர்களின் மரணங்களும் அவனை சோர்வாக்குகின்றன. குல்சாரி மரணம் அடைவதோடு படம் நிறைவடைகிறது. கட்சி பற்றியும், ஸ்டாலினிய நடவடிக்கை பற்றியும் பல விமர்சனங்களை படம் உள்ளடக்கியிருக்கிறது. சிங்கிஸின் ஜமிலா நாவல் புகழ் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகள் பொன்வண்ணன் இயக்கிய படமொன்றில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு குதிரையை முன் வைத்து வாழ்க்கை மீதான தேசமும், கூட்டுப்பண்ணை அமைப்பு பற்றியும், சோசலிச கட்டுமானம் பற்றியுமான சித்திரத்தை இப்படம் கட்டமைக்கிறது.

ஆகாச கோபுரம் என்ற மலையாளத் திரைப்படம் ஹென்றி இப்சனின் படைப்பை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆல்பர்ட் சாம்சன் என்ற மத்திய வயது கட்டிடப் பொறியாளனின் கலை மீதான ஆர்வமும், பாலியல் வாழ்க்கையும் என்றமைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட விழாவின் போட்டிப்பிரிவில் உலக இலக்கியப் படைப்பாளிகளிலிருந்து திரைப்படமாகும் வகையில் ஆண்டு தோறும் மலையாளத்திலிருந்து ஒரு படைப்பாவது காணக் கிடைப்பது ஆரோக்கியமானமதாகும். சென்றாண்டில் போட்டிப் பிரிவில் தென்பட்ட ஒரே கடல் சுனில் கங்கோபாத்யாயின் நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மம்முட்டி, ரம்யா கிருஷ்ணன், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் ஷியாம் பிரசாத் இயக்கியிருந்தார். பிரிதிவ்ராஜ் நடித்த தலப்பாவு என்ற படம் வர்கிஸ் என்ற புரட்சிக்காரன் என்கௌன்டரில் கொல்லப்படுவதை ராமச்சந்திரன் பிள்ளை விவரிப்பதாய் அமைந்திருப்பதாகும். இதன் மலையாள வடிவ நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமச்சந்த் பாக்கிஸ்தானி என்ற பாக்கிஸ்தான் படம் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வெளிவந்த சில சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதன் தயாரிப் பாளர் பாக்கிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரின் மகள் ஜாவத் ஜப்பர் இதை இயக்கியிருக்கிறார். இந்திய வெகுஜன திரைப்படத்தின் வன்முறையும், பாலியல் விஷயங்களும் ததும்பி வழியும் பாக்கிஸ்தான் திரைப்படங்களின் மத்தியில் வெகு அபூர்வமாகவே நல்ல படங்கள் தென்படுகின்றன. 2003ல் வெளிவந்த காமோஷ் பாணி என்ற படத்திற்குப் பிறகு பாக்கிஸ்தான் படங்கள் எதுவும் கவனிப்புப் பெறவில்லை.

"Little Terrorrist" என்ற குறும்படமொன்று பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து இந்தியப் பகுதிக்குள் வந்துவிடுகிற ஒரு சிறுவனை இந்து குடும்பமொன்று காப்பாற்றி பராமரித்து வருவது பற்றியதாகும். ராம்சந்த் பாக்கிஸ்தானியில் 2002ல் எல்லையில் பதட்டம் இருந்த காலத்தில் தலித் சிறுவன் ஒருவன் பாக்கிஸ்தான் எல்லையில் இருந்து அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு இந்திய எல்லைக் குள் நுழைந்துவிடுகிறான். அவனைத் தேடிக் கொண்டுவரும் அவன் அப்பாவும் எல்லையைத் தாண்டுவதால் இந்திய ராணுவத்தால் பிடிக்கப்பட்டு உளவாளிகளென சிறையில் அடைக்கப் படுகிறார்கள். சிறைமுகாம் அனுபவங்க்ள் சித்ரவதையாகவே அமைந்திருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்கள்.

சிறை முகாமில் பல்வேறு தேசத்தைச் சார்ந்த வர்கள் இருக்கிறார்கள். அழுதும் சிரித்தும் காலம் கழிப்பவர்கள். அதனுள்ளேயே தாதாவாகி மிளிர் கிறவர்கள் பலர். ஓரின பாலியலுக்குத் துண்டுபவர்கள். சிறுவனுக்கு கல்வி தரவரும் இளம் காவல் துறை பெண். விடுதலை என்று ஆனபின்பு டில்லி வரை சென்று திரும்புகிறவர்கள். சிறுவனின் தாய் நந்திதா தாஸ் இருவரையும் எதிர்பார்த்து ஏமாறுகிறாள். தலித் என்பதால் புறக்கணிக்கப்பட்டு கூலியாக வாழ்க்கையைத் தொடர்கிறாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவன் விடுதலையாகி நந்திதாவைக் காண்கிறான். அவள் விவசாயக் கொத்தடிமையாக வாழ்க்கையை நடத்தி வந்தவள். இந்திய சிறை முகாமின் சித்ரவதை வெகு ஜாக்கிரதையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பாக்கிஸ்தான் சிறை முகாம்களில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பல்வேறு தேசத்தினரைப் பற்றிய விவரணப் படங்களும் வந்திருக்கின்றன. மத ரீதியான அடிப்படை வாதங்களைப் பற்றி பிரதானப்படுத்தாமல், எல்லையைக் கடந்துவிடும் அப்பாவிகளின் துயரத்தையும் அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் இது சித்தரிக்கிறது. மனித உரிமை மீறல்கள் பற்றின விடயங்களை முன்வைக்கிற அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டிருக்கிறது.

லத்தீன் அமெரிக்க திரைப்பட உலகின் தந்தை என்று கணிக்கப்படுகிற பெர்ணான்டோ பிர்ரி A Very Old Man with Enormous Wings என்ற படத்தில் கிழவனாக பிரதானப் பாத்திரத்தில் நடித் திருக்கிறார். இது கார்சியா மார்கவஸின் குறுநாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். மார்க்வெஸ் இப்படத்தின் திரைப்பட ஆக்கத்தில் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். பிடரல் காஸ்ட் ரோவின் நெருங்கிய நண்பரான பெர்ரியின் படங்களின் ரெட்ரோஸ்பெக்டிவ் கேரள திரைப்பட விழாவில் இடம் பெற்றது. இவர் 1960ல் எடுத்த Toss&Dime என்ற ஆவணப்படம் முதல் லத்தின் அமெரிக்க ஆவணப்படமாகும். சமூக விமர்சனமாகவும், அர்ஜன்டைனா மக்களின் வாழ்க்கையை முன்வைத்த ஆவணப்படமாகும் இது. பெர்ணான்டோ பிர்ரி எனது மகன் சேகுவேரா என்றொரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். சே பற்றிய அவரின் தந்தையின் நினைவலைகளாய் இது அமைந் திருக்கிறது.

சேவின் அர்ஜன்டைனா பிறப்பு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றியது, பிடரல் காஸ்ட்ரோ சந்திப்பு என்று விரிகிறது. A Very Old Man with Enormous Wings 1998ல் திரைப்படமாகி யுள்ளது. இது தமிழில் கூத்துப் பட்டறையினரால் நாடக வடிவமாகவும் நடிக்கப்பட்டுள்ளது. சிறகுகளைக் கொண்ட கிழவன் ஒருவன் புயல் நாளன்றில் கரீபியன் கடற்கரையில் ஓதுங்குகிறார். ஏழைக் குடும்பமொன்று கோழி அடைக்கும் இடத்தில் அடைக்கலம் தருகிறது. பலரின் பார்வைக்கு அவர் இலக்காகிறார். மரண தேவதை என்று அடையாயப்படுத்தப்படுகிறார். கூட்டம் சேர்கிறது, உள்ளூர் பாதிரியாருக்கு கூட்டம் பிடிப்பதில்லை. ரோமிற்கு எழுதின கடிதங்களைக் கொண்டுவந்து படித்து ஆவியை துரத்த முயல்கிறார். டாக்குவிசாட் போன்று பலரின் சிரிப்பிற்கும் உள்ளாகிறார். அவ்விடம் திருவிழா கோலமாகிறது. பணம் சம்பாதிக்கிறார்கள். சிதைந்துபோன சிறகுகளைப் புதுப் பித்துக் கொள்கிறார் கிழவர். இறகுகளைப் பிரித்தெடுத்துவிட்டு ஆசுவாசம் கொள்கிறார். தேவதை என்ற ரகசியம் மீண்டும் மீண்டும் கிளப்பப்படுகிறது. சிலந்திப் பெண் ஒருத்தி குழுவினருடன் வந்து அவருக்கு இணையாக பெரும் கூட்டத்தைச் சேர்க்கிறாள். கடல் கடவுளின் குறியீடாக கிழவரைப் பார்த்து ஆசுவாசம் கொள்ளும் கூட்டம் அவர் திரும்பவும் இறகுகளைப் படபடக்கவைத்து கிளம் பிப் போவதை வேடிக்கை பார்க்கிறது. அச்சூழலை மாற்றவந்த குறியீட்டு அம்சமாக வந்து மறைந்து போவதில் மாயயதார்த்தம் வெளிப்படுகிறது. ஸ்பானிய மொழிப்படம் இது காப்ரியஸ் மாக்க்கூசின் ஆறு படைப்புகள் இதுபோல் திரைப்படங்களாகியுள்ளன.

அடுத்து வரும் ஆண்டில் திரைப்படமாக உள்ள உலகின் தலைசிறந்த நூல்களின் பட்டியல் சற்றே ஆச்சரியப்படுத்துகிறது. வாசக வெளியை திரைப்பட பிம்பங்களாய் வெளிப்படுத்தும் முயற்சி யில் உலகமெங்கும் உள்ள திரைப்படத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 2009ன் ஆரம்பத்தில் டான் பிரௌனின் நாவல் தேவதைகளும் சாத்தான்களும் திரைப்பட வடிவத்தில் வெளிவர உள் ளது. டான் பிரௌனின் டாவின்சி கோடு மூன்றாண்டுகளுக்கு முன் திரைப்படமாக வெளிவந்தது. தேவதைகளும் சாத்தான்களும் நாவலில் இறந்து போகும் மருத்துவர் ஒருவரின் நெஞ்சில் இருக்கும் அடையாளம் ஒன்று அவரது மூதாதையர்கள் யார் என்ற கேள்விக்கும் தீவிரமான தேடுதலுக்கும் இட்டுச் செல்கிறது.


= சுப்ரபாரதிமணியன்



பூக்குட்டி: தாண்டவக்கோனின் புதிய‌ குறும்படம்

பூக்குட்டி: தாண்டவக்கோனின் புதிய‌ குறும்படம்
=============================================


யதார்த்த நிகழ்வுகளை திரைத் தொடர்பு மொழியில் நாடகீயமாக வெளிப்படுத்துவதில் இருக்கும் சுவாரஸ்யத்தின் பலத்தை திருப்பூர் தாண்டவக்கோனின் குறும்படங்களில் காண முடிவது ஒரு சிறப்பம்சமாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரின் சமீபத்திய " பூக்குட்டி" குறும்படத்தில் இடம் பெறும் பல நிகழ்வுகள் அப்படி நாடகீயமாகியிருக்கின்றன.


தாண்டவக்கோனின் முந்திய படமொன்றில் உலக உருண்டை பிளாஸ்டிக பையில் அடைபடும் படிமத்தை ஒரு செய்தியாய் வெளிப்படுத்தியிருந்தார்.இதில் உடல் உறுப்பு தானம் என்ற செய்தி உணர்ச்சிகரமான நாடகமாக வெளிப்பட்டிருக்கிறது. உணர்ச்சிகரமான கலைஞர்கள் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

தாண்டவக்கோனின் பிற குறிப்பிடத்தக்க குறும்படங்கள் ( சற்றே நீளமானவை ) :
பூங்கா, பேராண்டி



"பூக்குட்டி "பற்றிய விரிவான விமர்சன‌த்திற்கு தில்லியிலிருந்து வரும் " வடக்கு வாசல் " இதழின் ஆகஸ்ட் இதழ் பாருங்கள் . ( தாண்டவக்கோன் =
திருப்பூர் . 9360254206 )

= சுப்ர‌பார‌திம‌ணிய‌ன்


பேராண்டி - குறும்படம்
======================

தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களில் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான 'பூங்கா' முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சி னைகளை முன் வைக்கிற "கை", குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய "பாலிபேக்" அவற்றிலும் காணமுடியும்.

"பூங்கா"வில் அன்பிற்காக ஏங்கும் பெண் குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. "இப்படிக்கு பேராண்டி" படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களின் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நமக்குள்ளும் ஆழ விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறு செடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிற போது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்த காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர் கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தா பாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)

குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.

தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் குறித்து இன்றும் சில நெகிழ்வுகளை இப்படம் உள்ளடக்கியிருந்திருக்க வேண்டும். அது சமச்சீராக பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப் பதைக் காட்டியிருக்கும்.

இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந் திருக்கின்றன ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் "நாடக நடிகர்களாகி" விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளி யமைப்பு உறுத்துகிறது குழந்தைகளின் நுண்ணிய உணர்வு களின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனு டன் மாணவர்களை உட்கார வைத்தபடி தேநீர் அருந்தும் குரோமும் தென்படுகிறது. திரைப்படத்தளம் என்பது ஏற் படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவ திலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் 'தாத்தாபாட்டி வேணும்' என்று கோசமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள் கிறது. இந்த வகை சாதாரண நிகழ்வுகளை யதார்த்த தளத் தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத் தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும் பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத் திய அவரின் சிறுகதையன்றிலும் இதை நுணுக்க மாக கவனிக்க முடிகிறது) வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்த வகையில்தான் குழந்தை களின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாபாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையை தான் வெளிப் படுத்துகிறது.

குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியில் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாகக் காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சிகளாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிக்க நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்தித் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும் நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளில் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம் தான். அன்பையும் பாசத்தையும் நெகிழ்வை யும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற கட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முயற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடியே இயங்குகிறார் அவர்.

(பேராண்டி, குறும்படம். இயக்கம் : தாண்டவக்கோன், திருப்பூர்)

ஆவணப்பட இயக்குனர்: மைக்கல் மூர்

ஆவணப்பட இயக்குனர்: மைக்கல் மூர்
====================================

34 வது டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழா 10 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கல்மூரின் " Capitalism, A Love story " என்ற ஆவணப்படம் குறிப்பிட்ட கவனம் பெற்றிருக்கிற‌து.

" நான் பொருளாதாரவாதிய‌ல்ல. மாற்றுப் பொருளாதாரத்திட்டத்தை தருவதற்கு நான் இல்லை, நான் ஒரு திரைப்பட கலைஞ‌ன்.நான் பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுக்கிறேன்.கார்ப்பரேட் முதலைகள் அவர்களின் பணத்தை மட்டும் நேசிப்பதில்லை. உங்களின் பணத்தையும் நேசிக்கிறார்கள். போதும் என்ற வார்த்தை அவர்களின் அகராதியில் இல்லை." அமெரிக்காவின் பொருளாதாரநிலைகளை தொடர்ந்து விமர்சிக்கிறார்.


அவரின் " சிக்கோ ' ஆவணப்படம் பற்றி ' கனவு " 60 வது இதழில் ஒரு கட்டுரை எழுதிஉள்ளேன். அமெரிக்கா வலிமையான தேசம். பிச்சைக்காரர்கள் இல்லாத தேசெம் . செல்வம் கொழிக்கும் பூமியில் மருத்துவ வசதிக்குக் குறைவில்லை . அமெரிக்கர்கள் சுபிச்சமாக வாழ்கிறார்கள் என்ற வழக்கமான சாமான்ய கருத்துக்கள் பல ஆண்டுகளாக தகர்ந்து கொண்டிருக்கின்றன். மூரின் :" சிக்கோ" ஆவண‌ப்படம் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவ பாதுகாப்பு இன்சூரன்ஸ் பர்றிய உண்மை நிலையை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது வெற்றிப்படங்களின் வசுல் தரத்தில் இந்த ஆவணப்படம் நல்ல வசூலை திரட்டியிருக்கும் அளவு அப்படத்தை மக்கள் பாரத்திருக்கிறார்க‌ள் . குடிமககளின் உடல்நல பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தராத அமெரிக்காவின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றின கேள்வியை மைக்கல் மூர் வெகு திடத்துடன் இப்படதி முன் வைத்திருக்கிறார்.


இக்கட்டுரையின் முழுமைக்கு கனவு 60ம் இதழ் படியுங்கள் ( 8./2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641 602 ., ஆண்டு சந்தா ரூ50 )

சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு

சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
================================================

இவ்வாண்டின் சாகித்திய அகாதமி பரிசு‍ =மொழிபெயர்ப்புக்காக = ஆனந்தகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.மலையாற்றூர் ராமகிருஸ்ணனின் " இயந்திரம் " நாவலினை அவர் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.அது பரிசு பெற்றிருக்கிறது.காந்திகிராமம் பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணிபுரிகிறார்.
அவரின் வெளிவந்திருக்கிற பிற நூல்கள்: குஞ்ஞுண்ணி கவிதைகள், கிருஸ்னையரின் இந்திய நீதித்துறை, NBT வெளியிட்ட விழிப்போடு இருப்போம்

பெங்களூரில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாதமியின் தலைவர் சுனில் கங்கோபாத்தியாய பரிசு வழங்கியிருக்கிறார். இவ்வாண்டில் பரிசு பெற்றவர்களில் மூவர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர்: ஏ வி சுப்ரமணியன் , சென்னை( சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு )., மீனாட்சி சிவராமன் பாலக்காடு(‌ இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு )

" இயந்திரம் " மொழிபெயர்ப்பு தனக்கு சவாலாக இருந்தது என்கிறார். மலையாற்றூர் ராமகிருஸ்ணன் IAS அதிகாரி என்பதாலும்,நிர்வாக அமைப்பு குறித்த களம் என்பதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், காவல்துறையினர் பலரைச் சந்தித்து பல நிர்வாக வார்த்தைகளின் சரியான அர்த்தத்தை கண்டு பிடிக்க வேண்டியிருந்தது." இயந்திரத்தில்" பிரிட்டிஸ் கால வார்த்தைகள் ஆங்கிலத்தில் அப்படியே பயன் படுத்தப்பட்டவற்றை முறையாக தமிழ் படுத்தியிருந்தேன்.நீதித்துறை, நிர்வாக வரலாறுகளையும், உளவியல் விசயங்களையும் இணையாகப் படிக்க வேண்டியிருந்தது. குங்குமம் இதழில் தொடராக நீண்டு வந்தது என்பதாலும், பல இடதுசாரி கருத்துக்களும், பாலியல் வர்ணனைகளும் நீக்கப்பட்டு தமிழ் பதிப்பில் வந்திருக்கிறது. சவாலான அனுபவமாக இருந்தது. மலையாற்றூர் ராமகிருஸ்ணனை அவர் உயிருடன் இருந்த போது சந்திக்க முயன்றதை பரிசு வாங்கிய போது நினைத்துக்கொண்டேன் என்கிறார்.



= சுப்ரபாரதிமணிய‌ன்

புதன், 23 செப்டம்பர், 2009

சாகித்திய அகாதமி : பாலா மறைவு

சாகித்திய அகாதமி : பாலா மறைவு
====================================

சாகித்திய அகாதமியின் மத்திய குழு உறுப்பினராகவும், சாகித்திய அகாதமி தமிழ் மாநில ஒருங்கிணைப்பு கன்வீனராகவும் செயலாற்றிய பாலா ( டாக்டர் பால‌ சந்திரன் )
22 09 09 அன்று உடல் நலமின்மையால் காலமடைந்தார்.

அவரின் பொறுப்பு காலத்தில் அதிக பட்சமான சா. அ கருத்தரங்குகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

" புதுக்கவிதை ஒரு புதுப் பார்வை"., சர்ரியலிசம், போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகங்கள். இன்னொரு மனிதர்கள் ( கவிதைகள் ), வித்தியாபதியின் காதல் கவிதைகள் ( மொழிபெயர்ப்பு ) அவரின் இன்னும் சில புத்தகங்கள் . ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு நிறைய செய்திருந்தாலும் சொற்பமானவைதான் புத்தகவடிவம் பெற்றுள்ளன. Stalin Plays and other essays என்ற ஆங்கில நூலை வெளியிட்டிருக்கிறார். சுவடு என்ற சிற்றிதழ் புதுக்கோட்டையிலிருந்து கொண்டு வந்தார். ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த பேச்சாளர்.அவரின் பூத உடல் ஞாயிறு அன்று புதுக்கோட்டை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும்.

சுப்ரபாரதிமணியன்

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

அஞ்சுவண்ணம் தெரு

அஞ்சுவண்ணம் தெரு=தோப்பில்மீரானின் நாவல்
===============================================

இஸ்லாம் சமூகம் பற்றிய யதார்த்தமான சித்தரிப்பை மனிதாபிமானம் ததும்ப தன் படைப்புகளில் கையாள்கிறவர் தோப்பில் முகமது மீரான். அவரின் துறைமுகம்,சாய்வு நாற்காலி, கடலோரத்து கிராமத்துக் கதை போன்ற நாவல்களுக்குப் பிறகு தற்போது வெளிவந்திருக்கும் நாவல் " அஞ்சுவண்ணம் தெரு " மூஸ்லீம் சமுக மக்களின் மரபான வாழ்க்கையை தொன்மங்களோடும் ஆசாரங்களோடும், சிதைந்த அவர்களின் கனவுகளோடும் சித்தரிக்கிறது.
" அஞ்சு வண்ணம் தெரு " வில் வெவ்வேறு வகைப்பட்ட கதாப்பாத்திரங்களை விவரித்துக்கொண்டு போவதாலே முஸ்லீம் சமூகம் பற்றிய மாற்றங்களையும் , கால மாற்ற‌த்தின் முன் அச்சமூகம் திணறி, மூச்சுத்திணறும் ஜாதிய முரண்பாட்டுச் சூழல்களையும் முன் வைக்கிறார்.


வழக்கமான யதார்த்த கதை சொல்லல் பாணியே தோப்பிலின் பாணியாகும். அந்தப் பாணியில் தான் அறிந்த முஸ்லீம் சமூக மக்களின் வாழ்க்கையை திறம்பட எளிமையுடனும் எள்ளல் தன்மையுடனும் சொல்வது அவருக்கு இயல்பாக இருக்கிறது. நாஞ்சில்நாட்டின் ஒரு சிறிய தெருவின், மனிதர்களின் வாழ்க்கையை சமூக ஆவணச் சாட்சிகளாக நிலைநிறுத்துகிறார்.
=சுப்ரபாரதிமணியன்
( முழுமையான கட்டுரைக்கு " தீராநதி " செப்டம்பர் இதழ் பாருங்கள் )

அஞ்சுவண்ணம் தெரு =தோப்பில் மீரான் நாவல்
அடையாளம் வெளியீடு , 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி
விலை ரூ 130/

திங்கள், 14 செப்டம்பர், 2009

மறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்

மறுபடியும் பட்டு அல்ல‌து காஞ்சீவரம்
=================================

காஞ்சீவரம் பற்றி " இனி ஒரு"வில் பதிவு ஆகிருப்பதை வெகு தாமத‌மாகத்தான் அறிந்தேன் என்பதால் எதிர்வினையைத் தாமதமாகப் பதிகிறேன்.

நான் எழுதிய " பட்டு " திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியுமான பெண் கவிஞர், ஒரு மலையாள இயக்குனர் , ஒரு இயக்குனர் ஆகியோரிடம் செழுமைப்படுத்த தந்ததாக என்னிடம் சொல்லியிருந்தார். அது போல் வேறு யார்யாரிடம் சென்றன என்பது தெரியவில்லை. "ஒரு ரவுண்டு 'போய் விட்டு வந்து இந்த ரூப‌மூம் அடைந்திருக்கலாம். "சினிமாமாவுலே இதெல்லாம் சகஜமப்பா " என்று ஆறுதல் படுத்திக் கொள்வதுண்டு. எனது திரைக்கதை சுதந்திரப்போராட்டகாலத்தை சார்ந்ததல்ல. அதில் பெண் பாத்திரத்தை பிரதானமாக்கி இருந்தேன். இதில் அப்பா பிரதானமாகி இருக்கிறார்.

மலர் மன்னன் நான் குறிப்பிட்ட " முதல் மரியாதை ' அனுபவம் பற்றி கேட்டிருந்தார். " முதல் மரியாதை" படம் எனது " கவுண்டர் கிளப் " குறுநாவலன் மையத்தை ஒத்திருந்தது. அந்தக் குறுநாவல் "தீபம்" இதழில் வந்தது.இயக்குனர் பாரதிராஜா, கதாசிரியர் செல்வராஜ் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன்.இரண்டு முறை திரும்பி வந்தன. மூன்றாம் முறை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பதில் அனுப்பியிருந்தார் அவரின் வழக்கறிஞர் மூலம்: " கடிதம் அனுப்பி இருக்கும் ஆர் பி சுப்ரமணியனுக்கும் . சுப்ரபாரதிமணியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை " ஆர் பி சுப்ரமணியன் என்பது என் இயற்பெயர். நான் தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூபிக்கவேண்டியுருந்தது. அப்போது தீபம் பத்திரிககை அலுவலகத்தில் மறைந்த எழுத்தாளர் என் ஆர் தாசனை சந்தித்தேன். அவரின் " வெறும் மண் ' என்ற நாடகத்தைத் தழுவி பாலச்சந்தர் ' அபூர்வ ராகங்கள் " எடுத்ததை மையமாகக் கொண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தவர்.அவரின் அனுபவத்தைச் சொன்னார்:
" முதல் ஏழு ஆண்டுகள் வாய்தாதான், பிறகு 3 ஆண்டுகள் விசாரணை. முடிவில் ஆமாம் கதையில் ஒற்றுமை உள்ளது 1000 ரூபாய் அப‌ராதம் என்று விதித்தார்கள். நான் சென்னைக்காரன். வழக்கறிஞர் செந்தில்நாதன் நண்பர். எனவே அலைந்தோம். நீங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறிர்கள். சென்னைக்கு அலைய முடியுமா " . நான் அப்போது ஹைதாராபாத்தில் வசித்து வந்தேன். எனவே வழக்கை விட்டு விட்டேன்.


எனது " கவுண்டர் கிளப் " மையம் இது; கவுண்டர் ஒருவர் கிராமம் ஒன்றில் கிளப்‍‍=டீ கடை வைத்திருப்பார் . மனைவியுடன் உறவு இருக்காது. ஒரு பெண் ‍=தாழ்ந்த ஜாதி தனது தந்தையுடன் அந்த கிராமத்திற்கு வேலை தேடி வருவாள் தந்தையுடன். கவுண்டரின் நிர்கதி தெரியவரும். இருவரும் நட்பு கொள்வார்கள். கவுண்டரின் மனைவி கவுண்டர் ஊரில் இல்லாத ஒரு நாளில் அவளை தெருவில் வைத்து அடித்து அவமானப்படுத்துவாள்.ஊர் திரும்பிய கவுண்டர் அதிர்ந்து போவார். அப் பெண் தற்கொளை செய்து கொள்வாள்.அவளின் நினைவாக டைம் பீஸ் கடிகாரம் உட்பட பல இருக்கும்.தலை மயிரில் கோத்த பாசிமணி உட்பட. மையம் இது.

படத்தில் சிவாஜி, ராதா ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிவாஜியின் மாப்பிள்ளை, சத்தியராஜ் கதைகள் கிளைக்கதைகள் தனி. .படத்தில் கி ராஜநாரயணனின் கோபல்லகிராமம் இதில் ஒரு பகுதியாக வந்திருக்கும்.


எனது " சாயத்திரை "நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருநததை பெற்றுக்கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போதைக்கு 5 பேர் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் "ஆன் லைனில் "ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார். 15 நாளில் முழு திரைக்கதையை " ஆன் லைனில் " எழுதி முடித்தேன்.அது என்ன பாடுபடப் போகிறதோ.


திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நண்பர் சொல்வார்: 'பத்து குயர் பேப்பர் வாங்கிக் குடுத்து இதுதா சன்மானம்முன்னு அனுப்பிச்சிருவாங்க."



சினிமாவுலே இதைல்லாம் சகஜமப்பா..

= சுப்ரபாரதிமணியன்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

செய்தி சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு

சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
==================================================


சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை "நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் " சாயம் புரண்ட திர "வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர் விஜயகுமார் குனிச்சேரி நாவலை வெளியிட்டுப் பேசினார். " மூன்றாம் உலக நாடுகளின் ச்ற்றுச்சூழல் பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்து மனித உரிமை விசயங்களாக மாறி வருகின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் சார்ந்த அக்கறையை கலைப்படைப்புகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை " நாவல் வலியுறுத்துகிறது. " என்றார்.

" சாயம் புரண்ட திர " நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்திருப்பவர் கோவையைச் சார்ந்த ஸ்டேன்லி ஆவார். திருப்பூரின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையாமாகக் கொண்டும் , நொய்யலை ஒரு கதாபாத்திரமாகவும் கொண்ட " சாயத்திரை " நாவல் ஆங்கிலத்திலும் ( டாக்டர் ராஜ்ஜா மொழிபெயர்ப்பு ‍ The coloured curtaiந் ), ஹிந்தியிலும் ( மீனாட்சிபுரி மொழிபெயர்ப்பு ‍ Reng Rengli sadhar meiheli ) முன்பே மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. கனனடத்தில் தமிழ்ச்செல்வி மொழிபெயர்த்து 2 ஆண்டுகள்ல ஆகி விட்டது. அது விரைவில் வெளி வரலாம்.

" சாயம் புரண்ட திர " நூலை திருவனந்தபுரம் " சிந்த " பதிப்பகம் வெளியிட்டுள்ளது . விலை ரூ 85



செய்தி : issundarakkannan7@gmail.com

-------------------------------------------------------------------------------------
சாயத்திரைகள்




சுற்றுச் சூழல் சீர்கேட்டில் சாயப்பட்டறைகள் குறித்த எந்தவொரு முனுமுனுப்பையும் சகித்துக் கொள்ளாதபடி தொழில் சமூகம் இருந்தது. மூடப்பட வேண்டிய சாயப்பட்டறைகளின் பட்டியல்கள் நீதிமன்றங்களும் மாத கட்டுப்பாது வாரியல்களும், அரசும் அறிவிக்கிற போது தொழிலாளர் நலனை முன்னிருத்தி அவை பயங்கரவாத செயல்களாக பேசப்படுவது கேளிக்குறியது. சுற்றுச் சூழல் பற்றின அக்கறை நியாய வணிகத்தின் நெறிமுறைகள் திரும்ப திரும்ப பல்வேறு வகையான ஏற்றுமதிக் கொள்கைகள் மனித உரிமை அம்சங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை அலட்சியப்படுத்தப்படும் போதும் தொழில் சமுகம் இவ்வகை நெருக்கடிகள் குறித்து யோசிக்காதது இன்னும் கேலிக்குள்ளானது.

சாயப்பட்டறை சலவை ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரை காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் பகுதிக்கு ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று கடலில் கலக்கம் செய்ய வேண்டும். இது மட்டுமே பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி என்கிறார். நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் நகராட்சியின் தலைவருமான ஒருவர் சுனாமியில் பாதிக்கப்பட்ட காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் மக்களுக்கு இன்னும் அதிர்ச்சி தரும் இந்த சுனாமி செய்தி இப்பிரச்சனைக்கு சாயப்பட்டறைகள் மட்டுமா காரணம் என்று கொதிக்கிறார்க்ள் சாயப்பட்டறை உரிமையாளர்கள். பின்னலாடை தயாரிப்பில் 6000 கோடி அன்னிய செலவாணியை ஈட்டித் தருவதில் சாயப்பட்டறைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டால் சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறையும். நிலத்தடி நீர் தில்சூர் மட்டுமல்ல அதையொட்டிய ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. விவசாய பயன்களுக்காக கட்டப்பட்ட ஒரத்துப்பளையம் அரசு தில்சூர் சாயக்கழிவுகளை தேக்கி வைத்திருக்கிற வெடிகுண்டாக இருக்கிறது. அதில் தேங்கியிருக்கும் சாய நீரை வெளியேற்றுவது குறித்து பல சர்ச்சைகள் உள்ள அணையைத் திறந்து விடாதீர்கள் என்று விவசாயிகள் கூக்குரல் இடுவது சாதரணமாகி விட்டது. உலக சுற்றுச் சூழல் தினத்தில் அணையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகும் இளைஞர்கள் அவ்வப்போது அணையில் மதகுகளை திறக்க வேண்டாம் என்று சொல்லி மறியலில் கைதாகும் விவசாயிகளின் நம்பிக்கைகளும் தகர்ந்து கொண்டிருக்கின்றன அவர்களை வழி நடத்தும் சிறு சிறு குழுக்களின் தலைவர்கள் பல்வேறு தரப்பிலிருந்து வரும் நிர்பந்தங்கள் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். தங்கள் வீடுகளின் கல்யாணம், சாவு காரியங்கள் ஊர் பொது கோவிலில் திருப்பணிகள் காரணமாய் இப்பிரச்சனையில் தாங்கள் ஈடுபட முடியாமல் இருப்பதாக அவ்வப்போது தெரிவிக்கிறார்கள். ஓரத்துப்பiளாயம் சாயக்கழிவு குறித்த போராட்டத்தை முன் நின்று நடத்திச் செய்ய தன்னார்வக் குழுக்களும் தயங்குகின்றன. அப்பகுதியின் விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றினைவதில் பல தடைகள் நிர்பந்தங்கள் உள்ளன. விவசாயிகளே சட்ட ரீதியான அலோசனைகளுக்கு கூட தங்களை தயார்படுத்திக் கொண்டு தன்னார்வ குழுக்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் பெறத் தயங்கும் போது போராட்ட செயல்பாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன.

ஓரத்துப்பாளையம் சாயக்கழிவை சுத்தம் செய்ய ரூபாய் 6 கோடி என்ற சாதாரண நஷ்ட ஈட்டுத் தொகையை உயர்நீதிமன்றம் உத்தரவாக சாயப்பட்டறைகளுக்கு வழங்கியது. அதில் சொற்ப பணமாக ரூபாய் 1 கோடி மட்டும் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிலும் முதல் தவணையாக ரூபாய் 1 கோடி மட்டும் பெயருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் சொன்ன நஷ்ட ஈட்டுத்தொகையை கட்டுதல் மற்றும் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி முறைக்கு உள்ளாக்கி தொழிலைத் தொடர்தல் என்பது மட்டுமே இன்றைக்குள்ளத் தீர்வாக உள்ளது. சுமார் ஆயிரம் சாயப்பட்டறைகள் உள்ள ஊரில் 5ரூ சாயப்பட்டறைகள் மட்டுமே ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் என்ற சாயக்கழிவு நீரை மறுசுழற்சி சுத்தமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். கழிவுநீர் மறுசுழற்சி முறைக்காக ஆகும் செலவு லாபத்தை குறைக்கும் என்பதே தயாரிக்ககுறியதாகிறது பொது சுத்திகரிப்பு முறை என்பது பெரிதாக முன் வைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தை கை கொள்ளாதவர்கள் தொழிலில் இருந்து துரத்தப்படுவார்கள் என்பது தொழில் சமூகத் தரப்பிலிருந்தே பல ஆண்டுகளாய் எச்சரிக்கையாய் விடுக்கப்பட்டதை மறுத்ததால் சிறிய சாயப்பட்டறையினர் சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

சாயக்கழிவு நிர் பிரச்சனைக்கு சாயப்பட்டறையினர் மட்டுமே காரணமல்ல பணியின் உற்பத்தியாளர்களும் எனவே நஷ்டஈட்டை அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிப்பதில் மேற்கத்திய நாடுகள் அக்கறை கொண்டிருக்கும் நேரத்தில் பணியின் சாயக் கழிவால் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித உரிமை பிரச்சனையாக விருவரூபம் எடுப்பது மேலை நாடுகள் தங்களின் தொழில் அக்கறையை திருப்பூரிலிருந்து வேறு ஊர்களுக்கு நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடும் சூழல்கள் உருவாகியுள்ளன.

சமீபத்தில் சில சாயப்பட்டறைகள் மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவில் அதிர்ச்சி அடைந்த சாயப்பட்டறைகள் உரிமையாளர்கள் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தமே தொழிலாளர், முதலாளிகள் தரப்பில் பல வகை அச்சங்களைக் கிளப்புவதாக இருந்தது சாயப்பட்டறைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் அதை பயத்துடன் ஓய்வு தினமாக எடுத்து கொண்டனர் ஆனால் ஒரே நாளில் சாயப்பட்டறைகளுக்கு பயன்படும் உப்பு, சாயம், ரசாயனம், விறகு, தண்ணீர் ஆகியவற்றின் விற்பனையான ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டது. திருப்பூர் சாய ஆலைகளில் ஒரு மாதத்தில் 400 டன் சாயமும், 500 டன் சோடா வாஷ், காஸ்டிக் சோடா, உள்ளிட்ட ரசாயனப் பொருட்களும் 1000 லோடு சோடியம் குளோரைடு உப்பும் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர இதனால் அரசுக்கு வரும் வருமான இழப்பும் பெரிய தொகையாகும் சாய சலவை தங்களுக்கு ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் பயன்பாடாகிறது. இவை முழுக்க வாலிகள் மூலமே கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீர் கொண்டு வரப்படுத்தலிலும் சிக்கல்கள் தொடர்கின்றன அவை எடுத்து வரப்படும் பக்கத்திலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் கிராமவாசிகள் நடத்தும் மறியல் போராட்டங்கள் தொடர்வதால் இன்னும் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. பவானியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்ட பொதுமக்களும் சுற்றுச்சுழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிப்பது தொழில் நலத்தை முன்னிட்ட துரோகச் செல் என்று வெளிக்காட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.

சாயப்பட்டறைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திருப்பூர் தண்ணீர் திட்டம் தெற்காசியாவிலேயே கட்டி, உரிமையாக்கி இயக்கி மாற்வம் திட்டம் எனப்படுகிறது. பவானி ஆற்று நீர் இதற்கு பயன்படப் போகிறது. இதில் நாளொன்றுக்கு 1150 இலட்சம் லிட்டர் நீரை பின்னலாடைத் துறையினர் பெறுவர். திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டிருக்கும் இத்திட்டத்தில் மகேந்திரா மகேந்திரா (இந்தியா) பெச்டெல் (அமெரிக்கா), யுனைட்டெட் யூடிலிட்டி (இங்கிலாந்து) முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆயிரம் லிட்டருக்கு நாற்பத்தைந்து ரூபாய் தண்ணீர் கட்டணம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோகத்திற்கு ஆயிரம் லிட்டருக்கு ஐந்து ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது பவானியில் நீர் குறைந்து போவது மற்றும் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை உருவாகும்போது பன்னாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்திலிருந்து நழுவிக் கொள்வது திருப்பூரை பாலைவனமாக்கும்.

தமிழகத்தின் தண்ணீர் மயமாக்கம் திட்டத்தின் முன்னோடியான திருப்பூர் பல சந்தேகங்களையும், சங்கடங்களையும், உருவாக்கியுள்ளது பின்னர் பசி சாவுகள் போல தாக சாவுகளும் ஏற்படும் செய்திகள் விஷக்காய்ச்சலால் பரவும் கண்களை மறைக்க பல திரைகள் உள்ளன.

புதன், 9 செப்டம்பர், 2009

காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்





காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
===============================

காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது.சென்றாண்டு  கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.
அன்று தங்கபச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள்.ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது சாயத்திரை நாவலை திரைப்படம் ஆக்கும் திட்டத்திற்கான ஆலோசனைக்காக கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்..அன்று தான் வாய்த்தது.ஆலோசனையின் போது நாவலின் இறுக்கம் காரணமாகவும், திரைக்கதை ஆக்குவதில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் அந்த ஒளிப்பதிவாளர் வேறோரு கதையை , அது நெசவாளர் வாழ்க்கை பற்றி இருந்ததால் ( நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால்) அதை திரைக்கதை ஆக்குவது பற்றி ஆலோசித்தோம். கதையின் மையம் முடிவானது.3 நாட்களுக்குப் பின் திருப்பூர் திரும்பிய நான் ஒரு வாரத்துள் 30  சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். ஒளிப்பதிவாளர் வெகு சீக்கிரம் என்பதால் வெகுவாக மகிழ்ந்தார். திரைக்கதைக்கு தற்காலிகமாக பட்டு என்று பெயர் இட்டோம். ஒளிப்பதிவாளர் அதை குறைந்த பட்ஜெட் படமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் சென்று இடங்கள் கூட பார்த்து வந்தார்.தேவைப்படும் போது கூப்பிடுவதாகச் சொன்னார். பலரிடம் அந்த திரைக்கதை பார்வைக்கு அனுப்பியதையும் அவர் பின்னர் பகிர்ந்து கொண்டார்.தயாரிப்பில் நிச்சயம் ஈடுப்டுவேன் என்றார்.‌

வேறு செய்திகள் இல்லாமல் நாட்கள் கழிந்தன.சில ஆண்டுகளுக்குப் பின்.. கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார். பிறகு காஞ்சீவரம் திரைப்படம் பற்றி ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தியை படித்து விட்டு அவரிடம் தொடர்பு கொண்ட போது, தனக்கு பார்க்க கிடைக்கவில்லை, செய்தி தெரியவிலை என்றார்.
கேர‌ளா சர்வதேச திரைப்ப‌ட‌விழாவிற்கு தொட‌ர்ச்சியாக‌ச் செல்ப்வ‌ன் நான்.சென்ற‌ டிச‌ம்ப‌ரில் திருவ‌ன‌ந்த‌புர‌த்திற்கு சென்ற‌ போது காஞ்சீவ‌ரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று‌ பார்த்தேன். அதிர்ச்சியாக‌ இருந்தது.எனது திரைக்கதையில் ஒரு நெசவாளர் வீட்டு முதிர்கன்னிப் பெண் தனக்கான கல்யாண பட்டுப் புடவையை தானே நெய்து கொள்வாள். குடிகார தகப்பன்.திருமணக்கனவு நிறைவேறாதபோது தற்கொலை செய்து கொள்வாள். அவளது பிணத்திற்கு தந்தை அவள் நெய்த பட்டு சேலையை போர்த்துவார்.நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.திரைப்பட விழாவிற்காக வந்த தமிழ் நாட்டு  நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக அறை நண்பர் விசுவாமித்திரனுடனும். பிறகு தமிழ் பத்திரிக்கை நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். த‌ளவாய் சுந்தரம் போன்றவர்களிடமும்.


முதல் மரியாதை பட அனுபவம் 25 ஆண்டுகளுகு முன் ஏற்பட்டது இது போலத்தான். ‌



=சுப்ரபாரதிமணியன்

 

கனவு






The Hindu

புதன், 2 செப்டம்பர், 2009

உடுமலைவாசியாகிவிட்டேன்...

1. உடுமலைவாசியாகிவிட்டேன்
================

15 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூரில் வசித்து வந்த நான் உடுமலைக்கு மாற்ற‌லாகி ஒரு வருடம் ஆகி விட்டது. வீடு பார்த்து குடி வந்தும் விட்டேன். திருப்பூரைப் பிரிவது சிரமமாக இருந்த‌து. இங்கு வந்த பின்பு " பதியம் " நடத்திய ஒரு கவிஞர்கள் சந்திப்புக்காக திருப்பூர் சென்றபோது அந்நிகழ்ச்சியில் 'பாரதிவாசன்' 'இடம்பெயர்வு' என்ற தலைப்பில் அவர் வீடு மாற்றியது பற்றி வாசித்த கவிதை என் அனுபவமாகவும் இருந்தது.கவிஞர்கள் கார்த்திகேயன், சுரேஸ்வரன், தமிழவன், யாழ்மதி, இளஞ்சேரல், ஆகியோரையும் சந்திக்க முடிந்துது.
( சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கவிஞர்கள் சந்திப்பில் நாஞ்சில் நாடன் கவிஞர்கள் சந்திப்பு என்பதே குடிப்பதற்காகவே என்று குற்றம் சாட்டியதைக் குறிப்பிட்டபோது சுரேஸ்வரன் ஆமாம் அதுக்குந்தான் என்றார்.)



2. சமீபத்திய இரண்டு சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகள்:


அ. அஸ்மிதா நிகழ்ச்சி

பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் வாசிப்பு
சென்னை கன்னிமேரா நூலகம்

பங்கு பெற்றோர்: பாமா, ராஜலட்சுமி, பாரதி


ஆ. மலையின மக்கள் இலக்கியம்:‌சேல‌ம்

பங்கு பெற்றோர்:சீ பக்தவச்சலபாரதி, சிற்பி, தமிழ் நாடன்,
ஆ செல்லபெருமாள், பெ.மதையன்,இந்திரன்
நசிமுதீன், கரு அழ குண‌சேகரன்
============================================================
அடுத்த‌ இரு நிக‌ழ்ச்சிக‌ள்;

1. த‌ங்க‌ம் மூர்த்தியின் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டையில் கவிஞர்கள் ச‌ந்திப்பு

‌‌
2. சுப்ர‌பார‌திம‌ணிய‌ணின் ஒருங்கிணைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு
திருப்பூரில்:
" த‌மிழ் நாட‌க‌ இய‌க்க‌ங்க‌ளும், ந‌வீன‌ போக்கும்

=============================================================

சாகித்திய அகாதமியின் : Writers in Residence
=========================================

சாகித்திய அக்காத‌மியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது.

சாகித்திய அகாதமி இவ்வாண்டு கீழ்க் கண்ட எழுத்தாளர்களுக்கு Writers in Residence என்ற திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு ரூ 25,000/ வீதம் இலக்கியப் பணிக்காக உதவி வழங்கியுள்ளது .தோப்பில் முகமது மீரான் , சா கந்தசாமி, பொன்னீலன், ஈரோடு தமிழன்பன்,, பிரபஞ்சன், ஆகியோர் அவ‌ர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் கீழான இலக்கிய நிகழ்ச்சியொன்றை தோப்பில் முகமது மீரான் திருநல்வேலியில் இந்து கல்லூரியில் நடத்தினார். நானும் கலந்து கொண்டேன். புதுமைப்பித்தன், பாரதியார், தொமுசி ரகுநாதன், திகசிவசங்கரன்,, போன்ற இலக்கிய
முன்னோடிகள் படித்த பழமையானக் கல்லூரி என்பதால் நானும் புளங்காகிதம் அடைந்தேன்.கல்லூரி வளாகத்துக்குள் தென்பட்ட புது விநாயகர் கோவில் கும்பவிசேக இரைச்சல் தொந்தரவு தந்த‌து. மாணவர்களிடம் பேசுவது கொஞ்சம் சங்கடமானது. நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வது கொடுமைதான்.நானும் என் படைப்புகளும் என்ற தலைப்பில் பேசினேன். கவிஞர் கிருசி இலக்கிய போக்குகள் என்ற தலைப்பில் பேசியவர் திருநல்வேலி , கோவில்பட்டி எழுத்தாளர்களை மட்டும் அடையாளம் காட்டி குசும்பு செய்தார்,. வழக்கமான திருநல்வேலி குசும்புதான் அது.

தோப்பில் மீரானின் சமீபத்திய மிக முக்கியமான நாவலான "அஞ்சு வண்ணம் தெரு" பற்றித்தான் பேச விரும்பி கட்டுரை தயாரித்திருந்தேன். அந்த அரங்கில் கிருசியைத் தவிர வேறு யாரும் அந்த நாவலைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்று பட்டது அக்கட்டுரையை இந்த இதழ் "தீராநதி:"யில் வாசியுங்கள். நித்தில், கருப்பையா போன்ற நவீன இலக்கிய வாசிப்பில் அக்கறை கொண்ட ஆசிரியர்களைக் காண முடிந்தது. குற்றாலத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும் கூட்டம் இல்லை. திருநல்வேலி கதிர், தாமிரபரணி கரையில் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பது பற்றி படம் எடுத்து சிரமப்பட்டவர் இப்போது அதை யாரும் கண்டு கொள்வதில்லை.சுலபமாக சுரண்டல் நடக்கிறது என்கிறார். பிளச்சிமடா ஞாபகம் வந்நது. அங்கேயே முன்பு மாதிரி கோக்காகோலா தொழிற்சாலை இயங்குகிறது.பிளாச்சிமடாவில் நடைபெற்ற ஒரு சுற்றுசூழ‌ல் போராட்ட நிகழ்ச்சிக்கு நானும் , மகுடேசுவரனும் கலந்து கொண்டு எதிர்ப்பு கவிதைகள் படித்தோம்.வநதனா சிவா, அருந்ததி ராய் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.மலையாள கவிஞர் விஜயகுமார் குனிசேரி அக்கறையுடன் கலந்து கொண்டிருந்தார்.


தாமிரபரணி இன்னும் திருப்பூரின் நொய்யலாகி விடவில்லை என்பதுதான் சற்று ஆறுதல்.



= சுப்ரபாரதிமணியன்

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி

சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
==========================================


சதாவதானி செய்குத‌ம்பி பாவ‌ல‌ர் ப‌ற்றிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் நாக‌ர்கோவில் இந்து
இந்து கல்லூரியில்நடைபெற்றது. நெசவாளர்குடும்பத்தில் பிறந்தவர். சதாவதானியாக மிளிர்ந்து சைவ இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவர். உருவ வழிபாடா, சரஸ்வதி துதி பாடலா,முழு உருவ படமா என்று சர்ச்சையில் இருந்தவர். அவரின் படைப்புகள் பல் வேறு கோணங்களில் அமைந்திருந்தன.அவரின் குடும்பத்தைச் சார்ந்தவரிகள் பல‌ர் கலந்து கொண்டார்கள்.பொன்னீலன், தோப்பில் முகமது மீரான்,சிரிகுமார் ஆகியோரின் பேச்சுகள் கவனத்திற்குரியவை.சா அ. தென்னிந்திய செயலாளர் இளங்கோவனின் பேச்சு விரிவாக இருந்தது. பலரின் பேச்சு தயாரிப்பை வீணாக்கி விட்டது என்று சில கவலை கொண்டனர். என் பேச்சு பாவலரின் புலமையும், வறுமையும் என்பதாகும். சதாவதானத்தில் ஒரு அங்கமான சீட்டாட்டத்தில் அவரின் புலமை வறுமையோடு விளையாடியது என்பது என் மையமாக இருந்தது. சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெறவில்லை.

================================================================================

சிற்பி ரஸ்ய பயணம்
====================

சாகித்திய அகாதமியின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்ரமணியன் ரஸ்யப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் உலக புத்தகக் கண்காட்சியில் பேசுகிறார்.பயணத்தில் பங்கு பெற்றிருக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளர் பாமா ஆவார்.

=========================================================== ====================

எனது நூல்கள் மொழிபெயர்ப்பில்:
=============================
1. என் சாயத்திரை நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு " சாயம் புரண்ட திர" திருவனந்தபுரம் "சிந்தா " பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ரூ 85
. மொழிபெயர்த்த‌வர்: கோவையைச் சார்ந்த ஸ்டான்லி அவர்கள்.சாயத்திரையின் இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புகள் முன்பு வெளியாகி இருக்கின்றன.

2. என‌து நாவ‌ல் " பிண‌ங்க‌ளின் முக‌ங்க‌ள் " ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பில் " The faces of the dead " என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. 220 பக்கங்கள். மொழிபெயர்த்தவர்: ஆர் பால கிருஸ்ணன், கோவை