சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 17 அக்டோபர், 2009

சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு

சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
======================================================


சாகித்திய அகாதமி சார்பில் சென்னையில் தமிழ், கன்னட எழுத்தாளர்கள், ஓவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,.சாகித்திய அக்காதமியின் செயலாளர் அக்ரஹார கிருஸ்ணமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தும் போது வள்ளுவர், சர்வஜ்னா சிலைகள் திறப்பு முதல் ரஜினிகாந்த் வரையிலான தொடர்புகளைக் குறிபிட்டார்.கவிஞர் சிற்பி சமணமதம் பற்றிய வரலாற்றையும், கொங்கு மண்டலத்தில் சமணம் ஆட்சி செய்த
வரலாற்றையும் முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார். உடுமலை, விஜயமங்கலம் ஆகிய ஊர்களில் இருக்கும் சமண நினைவுச் சின்னங்களைப் ப்ற்றி அவை தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் பதிவுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
திரைப்பட கலை இய்க்குனர் தோட்டத்தாரணி தனது ஆரம்ப கால திரைப்பட முயற்சிகளில் கன்னடத்திரைப்ப‌டங்கள்குறிப்பிடத்தக்கதாக இருந்ததைக் குறிப்பிட்டார்.

கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் இந்திரன், மனுஸ்யபுத்திரன், நா முத்துகுமார் , மதுமிதா, லீனா மணிமேகலை ( தமிழ் ), வைதேகி, பிரதிபாநந்தகுமார், சி கே ரவீந்திர குமார், பி சந்திரிகா ( கன்னடம் ) ஆகியோர் கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வாசித்தனர்.

திரைப்பட இயக்குனர் ஞான ராசசேகரன் தாய் மொழி அக்கறை மனித வாழ்வில் எப்படி முக்கியத்துவம் கொண்டது என்பதை இந்திய, உலக சம்பவங்களுடன் விளக்கினார். கர்னாடகத்தின் சிவானந்த ஹெக்டே குழுவினரின் யக்சகானா நிகழ்வும், ஹரிகிருஸ்ணனின் சேலம் தெருக்கூத்துப் பட்டறையின் பாஞ்சாலி சபதமும் இடம்பெற்றன. ‌


இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தமிழ்செல்வி, எஸ் நடராஜ புடலு, மம்தாசாகர் கன்னடத்திலும், மலர்விழி, இறையடியான் ஆகியோர் தமிழிலும் திருவள்ளுவர் , சர்வஜ்னா ஆகியோர் பற்றின அறிமுகங்களான கட்டுரைகளை வாசித்தனர்.

: " எனது உலகம் , என‌து ஓவியம் " என்ற தலைப்பில் ஓவியர்களின் படைப்பாக்க முறை பற்றின பேச்சுகள் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தன‌, ஓவியர்கள் வாசுதேவ், ஹரிதாஸ், அல்போன்சோ அருள் தாஸ், சாந்தாமணி, கோபிநாத், குல்கர்னி, மகேந்திரன், ரூபா கிருஸ்ணா, ஜாக்கோப் ஜெப்ஹாராஜ், விவேக் ராவ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

A dialogue with Painting, The scuptural Energy என்ற இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன.இயக்குனர் : இந்திரன் . இந்திரனின் பன்முக ஆளுமையில் இபடங்களின் அறிமுகத் தன்மை பற்றி ராம. பழனியப்பன் விரிவாகப் பேசினார்.

ராமகுருநாதனின் உரை கன்னட தமிழ் எழுத்தாளர்களுக்கான உரையாடல் நவீன இலக்கியத்தளத்திலும்,திருவள்ளுவர், சர்வஜ்னா இருவரின் படைப்புகளிலும் எவ்வாறு இருந்த்து என்பது பற்றி விளக்கமானதாக இருந்தது.பி எம் பெல்லியப்பா நிறைவு நிகழ்ச்சிக்குதலைமை தாங்கினார். எனது நிறைவுரை திருவள்ளுவர், சர்வஜ்னா இருவரின் ப்டைபுகளை முன் வைத்து இடம் பெயர்வு, அக‌தி வாழ்வு, உலகமயமாக்கல் , பாலியல், உடலரசியல் உட்பட பல விசயங்களைப் பற்றி பேச இரண்டு நாள் கருத்தரங்கம் இருந்த‌தைப் பற்றின மையமாக இருந்த‌து .

மேலும் 1. பாவண்ணன் தொகுத்து கனவு வெளியிட்ட நவீன கன்னடக்கவிதை சிறப்பிதழின் அம்சங்களாக நவீன தன்மையுடன் மரபு ரீதியான விசயங்களும் , வாய் மொழி இலக்கியமும், நாட்டார் மர‌பும் இணைந்திருந்ததை நினையூட்டினேன்.

2.வாசந்தி வெளியிட்ட இந்தியா டுடே இலக்கிய மலர் ஒன்றில் தாய் மொழியைக் கன்னடமாகக் கொண்டு தமிழில் எழுதி வரும் எழுத்தாளன் என்ற பட்டியலில் என் பெயர் இடம் பெற்றது குறித்தான சர்ச்சை .

3.எனது சாய்த்திரை நாவல் சமீபத்தில் " பண்ணத்திர " என்ற தலைப்பில் தமிழ் செல்வி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நவயுக பதிப்பகம், பெங்களூருவில் இருந்து வெளிவந்திருப்பதையும், கன்னடம் படிக்க இயலாத நிலையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் தாழ்வுணர்ச்சி பற்றியும்.

யாளி அமைப்பின் பூஜா சர்மா நன்றி உரை வழங்கினார்.யாளி அமைப்பின்
முக்கிய நிர்வாகியான கவிஞர் இந்திரனின் அக்கறை, தீவிரம் இரண்டு நாள் நிகழ்ச்சியின் தேர்ச்சியில் காண நேர்ந்தது.

= சுப்ரபாரதிமணியன்

புதன், 14 அக்டோபர், 2009

முனைவர் ப க பொன்னுசாமி யின் நாவல் "படுகளம்'

முனைவர் ப க பொன்னுசாமி யின் நாவல் "படுகளம்'
===================================================


முன்னாள் துணைவேந்தர் ப க பொன்னுசாமியின் புதிய நாவல் "படுகளம்" நூல் பற்றிய அறிமுகக் கூட்டம் உடுமலை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.மருத்துவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.நாவலினை சுப்ரபாரதிமணியன், கிருஸ்ணராஜ், பள்ளபாளையம் ஆறுமுகம் ஆகியோர் விமர்சித்துப் பேசினர். ( " "படுகளம் " ' நாவல் மணிவாசகர் பதிப்பகம் வெளியீடு, விலை ரூ300 )

ப‌ க‌ பொன்னுசாமியின் " நூற்றாண்டுத் தமிழ் " நூலை முன் வைத்து எழுதப்பட்ட கட்டுரையை மோகன செல்வி வாசித்தார்.


சுப்ரபாரதிமணியனின் " ஆழம் " சிறுகதைத் தொகுதியை ப க பொன்னுசாமி வெளியிட மடத்துக்குளம் பஞ்சலிங்கம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். ( ஆழம் சிறுகதைத் தொகுதி, அறிவு பதிப்பகம் வெளியீடு விலை ரூ 65 )



ப க பொன்னுசாமி ஏற்புரை நிகழ்த்தினார். " கொங்கு மண்ணின் ஒரு பகுதியான உடுமலை மக்களின் கிராம வாழ்க்கையை முப்பதாண்டு கால அளவில் இதில் முன் வைத்துள்ளேன். என் கிராம மனிதர்களின் மனித நேயம், நற்குணங்கள், விவசாயம், கரும்பு நடல் உட்பட பல விசயங்கள் நாவலில் தளமாகி உள்ளன. ப்டுகளம் என்பது கவுண்டர் ஜாதியில் நடக்கும் ஒரு சடங்கு என்றாலும் , இன்றைக்கு உலகமே சமூக, ஜாதீய பிரச்சினைகளால் படுகளமாகி போராட்டமாய் விளங்குவதை சித்தரித்துள்ளேன். எனது முந்தின ஆறு நூல்களும் அறிவியல் நூல்கள். அறிவியல் வளரும். ஆனால் இலக்கியம் வாழும் என்பதால் நம் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பதிவு செயவதற்காக இந்த நாவலை எழுதினேன். எனது அடுத்த நாவல் இந்த நாவலில் நாம் சந்திக்கிற மனிதர்களின் அடுத்தத் தலைமுறைகளைப் பற்றியதாக இருக்கும். ஆங்கிலத்திலும் அதை ஒரே சமயத்தில் வெளியிடுவேன். "

மஞ்சளாதேவி, சுப்ரமணிய சிவா, மருத்துவர் ஜனனி உட்பட பலர் பேசினர் . கனவு இலக்கிய வட்டம் இந்த கூட்டத்தை நடத்தியது.



" படுகளம் " நாவல் பற்றின எனது கட்டுரையை " தீராநதி " ஜூலை இதழில் வாசியுங்கள் .

செவ்வாய், 6 அக்டோபர், 2009

சமநிலையை குலைக்கும் சமன்பாடுகள்


கோடை தகித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வருடம் போல எப்போதும் இல்லை. இந்தக் கொடுமையை எப்படி சகித்துக் கொள்வது? எவ்வளவு மழையென்றாலும் சகித்துக் கொள்ளலாம். எவ்வளவு பனி என்றாலும் தாங்கிக் கொள்ளலாம், ஆனால் இந்த வெயிலின் கொடுமையை மட்டும் தாங்க முடியாது என்ற புலம்பல் கேட்பதுண்டு. சென்றாண்டின் கோடையில் நண்பர் ஒருவர் தனது சிறு மகிழ்வுந்துவின் ஓட்டுனரை என் கண் முன்னால் வேலை நீக்கம் செய்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த ஓட்டுனர் வீதிகளில் சென்று கொண்டிருக்கும்போது அழுக்கானவர்களை, வீதிகளில் நிற்கிற மனநோயாளிகளைக் கண்டால் வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கி, கும்பிடுவார். தீர்க்கமாய்ப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பார். பக்கத்தில் கடைகள் ஏதாவது தென்பட்டால் ஓரிரு வாழைப் பழங்களை வாங்கி பிரசாதத்தைத் தருவது போலவோ, குருவிற்கு தட்சணை தரும் பாவனையிலோ அதைத் தருவார். அவர்களை ‘சித்தர்கள்’, ‘ஞானி’ என்பார். அவர் ‘சித்தரை’ தினந்தோறும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கும். மகிழ்வுந்துவின் சொந்தக்காரரான நண்பருக்கு மனநோயாளிகள் என்றாலே அலர்ஜி. பார்த்து பயப்படுவார். அவர்கள் பார்வையில் படாதவாறு ஓடி ஒளிவார். ஓட்டுனரின் ‘சித்த தரிசனம்’ அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அவரை வேலைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த ஓட்டுனர் அவருடன் இருந்தவரை எவ்வித விபத்தும் நடந்ததில்லை. ஆனால் வேறு ஓட்டுனர்கள் அவரின் ஊர்தியை உபயோகிக்கும்போது விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அந்த ஓட்டுனரை மீண்டும் வேலைக்கு எடுப்பதில் அவருக்கு நிறைய சிக்கல்கள் இருந்திருக்கின்றன. ஓட்டுனரைப் போல மனநோயாளிகளை சித்தர்கள் என்று 'கணித்து' கொண்டாடுபவர்கள் உண்டு. அதே சமயம் அவர்களின் அழுக்கான உடல், பதற்றம், நிலையில்லாமல் இருத்தல், பிறரைத் தாக்குதல், வீட்டுப் பொருட்களை துவம்சமாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் அவர்களை நிரந்தர வியாதியஸ்தர்களாகக் கண்டு பயப்படுகிறவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

வீட்டில் அவ்வகை நோயாளிகளைப் பாதுகாத்துப் பேணி வருகையில் உண்டாகும் மனப்பதற்றத்திற்கு அளவேயில்லை என்று சொல்லலாம். யார் வேண்டுமானாலும் நோயாளியின் நோய்த் தன்மையை முன் வைத்துக் கேள்வி கேட்பார்கள். பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கும். தப்பித்துவிட முடியாது. வேறு எந்த நபரின் குடும்பச் சூழலிலும், அந்தரங்கத்திலும் யாரும் தலையிட்டு எந்தச் சிறு கேள்வியையும் கேட்டுவிட முடியாது. ஆனால் மனநோயாளி பற்றி எழுப்பப்படும் எவ்வகைக் கேள்விக்கும் ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டியிருக்கும். பதில் சொல்லாத போது அந்த நோய்க்கான காரணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தலைவர் மீது சுலபமாக சுமத்தப்பட்டுவிடும்.

என்னிடம் அவ்வகைக் கேள்விகள் குடும்ப உறவுகள், நண்பர்கள், தெருவில் வருவோர் போவோர் உட்பட பலரால் கேட்கப் பட்டு நான் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். அந்த நோயின் மூலம் என்ன என்ற கேள்வி சாதாரணமாய் எல்லோராலும் வைக்கப்படுவதுண்டு. “எப்பிடி வந்தது”. அவர்களின் குடும்பத்தில் வேறு யாருக்கோ இருந்திருக்கலாம் என்ற மரபியல் சார்ந்து காரணம் சொல்லப்படுவதை யாரும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டதில்லை. அப்படியென்றால் அவர்களின் குடும்பத்தில் மற்றவர்களுக்கு ஏன் அது வரவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடிந்ததில்லை. அடுத்த கட்டமாய் மூளையிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். மூளை திரவத்துள் மிதக்கிறது. தண்ணீரில் வெண்ணையைப் போட்டால் மிதப்பது போல. அந்த திரவம் வற்றிவிட்டாலோ, திரவம் சுரக்கும் சுரபியில் கோளாறு என்றாலோ இவ்வகைத் தடுமாற்றமும் கோளாறும் வருவதுண்டு. அதனால்தான் கிராமங்களில் கோபமும், எரிச்சலுமாய் அலைகிறவர்களைக் கண்டு “மூளைத் தண்ணி வத்திப் போச்சா” என்று சாதாரணமாய்க் கேட்கப்படுவதுண்டு. இன்சுலின் சுரக்காத போது அது ஏற்படுத்தும் தொல்லைகளைப் பட்டியலிட்டுவிட்டு அதைச் சுரக்க வைப்பதற்காக ஊசியும் மருந்து மாத்திரைகளும் பயன்படுத்தப்படுவது போல மூளையின் சுரப்பி செயல்பாடுகளுக்காக ஊசி, மாத்திரைகள் மனநல மருத்துவர்களிடம் பெற வேண்டியிருக்கிறது என்று சொல்வேன். மூட்லே திரவம் வத்திப்போனா மூட்டு வீங்கி நடக்க முடியாதே, அது மாதிரி என்றும்.

அந்த ஊசிகளும், மாத்திரைகளும் அவர்களைத் தொடர்ந்து தூங்க வைத்துக் கொண்டேயிருக்கும். அவித்த உணவுப்பண்டம் போல கிடக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தது ஐந்து மாத்திரைகளாவது இருக்கும். பல சமயங்களில் முந்தின வேளையில் சாப்பிட்ட மாத்திரையின் வீர்யம் இன்னும் குறையாத நிலையில் அடுத்த வேளை மாத்திரையைச் சாப்பிட கண்களைத் திறக்க முடியாதபடி கண் இமைகள் ஒட்டிக் கொண்டிருக்கும். நிலைமை மோசமாகிற போது தரப்படும் மின் அதிர்வு அதிர்ச்சி முறை இன்னும் பார்க்க வேதனைப்படுத்தும். இரண்டு சுற்று, மூன்று சுற்று மின் அதிர்வு சிகிச்சைக்குப் பிறகுகூட சற்றும் தெளிவு வந்திருக்காது. இன்னும் ஓரிரு சுற்று மின் அதிர்வு சிகிச்சைக்குப் பின்னரே சற்று தெளிவு கிடைக்கும். “என்ன டாக்டர் எப்பப் பாத்தாலும் இப்பிடியே தூங்க வேண்டியிருக்கு?”

டாக்டர் : “நீங்களாவது தூங்குங்கம்மா. நாங்க பேசண்ட்டுகளை தினமும் ராத்திரி பதினோரு, பனிரண்டு மணி வரைக்கும் பாக்க வேண்டியிருக்கு, தூங்கக்கூட நேரம் கெடைக்கறதில்லை.” - மனநல தனியார் மருத்துவமனைகள் இரவிலும் நிரம்பி வழிகின்றன. அதில் ஒரு மருத்துவர் சொன்னது இது. அவர் ஒரு மனநல விடுதி ஆரம்பித்தார். இருக்கும் மனநல விடுதிகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை, சிகிச்சைமுறை சரியில்லை என்று குற்றம் சாட்டினார். அவரிடம் சேர்க்கைக்காக அணுகியபோது அவர் சொன்னார் : “ஒரு லட்சம் ரூபாய் திருப்பித் தர முடியாத பணம் எனக்கட்ட வேண்டும். No refundable deposit. அப்புறம் மாதம் ஆறாயிரம். “தொகை அதிகமாய் இருப்பதாய்ச் சொன்னால் வரும் பதில் : “வீட்ல வச்சு பாக்கறப்போ எவ்வளவு சிரமப்படறீங்க. தெரியுமில்லே”. மனநல மருத்துவம் பற்றி பத்திரிகை நடத்தும் ஒரு மனநல மருத்துவர் முதியோர் இல்லம் நடத்துகிறார். அவரிடம் மனநல விடுதி ஏன் அவர் தொடங்கவில்லை என்று கேட்டு வைத்தேன். “முதியோர்னா நூறு பேரை கவனிக்க ஒரு ஆளு போதும். மனநோயாளிகள்னா ஒரு ஆளைப் பாக்க நூறு பேர் வேணும். சிவாஜி பட டைலாக் மாதிரி இருக்கில்ல...”

நோயாளிகளின் செயல்கள் குடும்பச் சூழலில் பெருத்த பதற்றத்தை உண்டாக்கிவிடும். Half way Home என்ற மையங்களில் தங்க வைக்கப்பட்டு பயிற்சிகள் தரப்பட்டாலும் (வீட்டில் இருக்கும்போது அவர்கள் மனச்சோர்வு இல்லாமல் வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம், முறைகள், ஓய்வு நேரத்தைக் கழிக்கும் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி தொடர்ந்து சொல்லித்தரப்பட்டாலும்) அவர்கள் வீடுகளில் இருக்கும்போது சுற்றியுள்ளவர்களின் பேச்சு, நடவடிக்கைகளாலும் அவர்கள் சமநிலையில் இருக்க முடியாமல் போய்விடுகிறது. அப்படி அவர்கள் தனித்திருந்தாலும் தொலைக்காட்சி தரும் வன்முறை, பாலியல் சார்ந்த காட்சிகள் அவர்களை வெகுவாக சமநிலையிலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும். (இன்றைக்கு விளிம்பு நிலை மாந்தர்களாக அவர்கள் பட்டியல் போடப்படுவதற்கு இதுதான் காரணமோ. பின் நவீனத்துவக் கூறுகளைக் கொண்டவர்களாக அவர்களின் செயல்பாடும் நிலைகளும் மாறிப் போய்விடுகின்றன. அதிகாரக் கட்டமைப்பைக் குலைக்கிறவர்களாகிறார்கள்.) அதனால்தான் என்னவோ பின்நவீனத்துவம் கொண்டாடும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளுக்குள் அவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனரோ என்னவோ. சிறு தெய்வ வழிபாட்டு விதிகளிலுள்ள மந்திரித்துக் கட்டுதல், கெடாவெட்டுதல், பூஜை புனஸ்காரங்கள், மாவில் பாவை செய்து ஊசி குத்துதல், கோயில் கிணற்று நீரில் குளித்தல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மருத்துவமனைகளிலோ, விடுதிகளிலோ தங்க வைக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்ட பின்பு ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ளும் போது நோயாளிக்கு நோய்க் கூறுகளை உண்டாக்கும் சமூகச் சூழலுக்குள் அவர்கள் மீண்டும் மீண்டும் தள்ளப்படுவதுகூட ஒருவகை வன்முறையோ, அதிகாரமோ என்று படுகிறது. செய்வினை காரணமாக இது வந்து சேர்ந்துவிட்டது என்று நம்புகிற சதவிகிதமே அதிகமாக இருக்கிறது. ஓஷோவின் சீடர் ஒருவர்; பல வருடங்களில் அவரின் கம்யூனில் வாழ்ந்தவர், தியானமும், யோகமும் பயிற்சி செய்கிறவர், ஓரளவு இயற்கை உணவு உண்பவர்; இந்தச் செய்வினையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். எந்தப் பகுத்தறிவு, விஞ் ஞானக் கருத்துகளையும் இதன் பொருட்டு ஏற்றுக் கொள்வதில்லை. அவர் இதை மூளை சம்பந்தமான நோயல்ல, செய்வினையினால் வந்தது என்று வாதாடுவார். அவர் குடியிருந்த இடத்தை காலி செய்யச் சொன்னார்கள். அவர் மறுத்த அடுத்த நாள் அவரது இடதுகால் இயங்க மறுத்தது. நடக்க முடியவில்லை. இது அந்த வீட்டுக்காரனின் சூனியம் வைக்கத் தெரிந்த சகோதரியின் செய்வினை என்று திடமாக நம்பினார். செய்வினைக்கு சிகிச்சை பெற மறுத்து மாதக்கணக்கில் அப்படியே இருந்தார். படித்தவர்களுக்கே இது ‘செய்வினை’ வியாதி என்ற ‘பெரும் நம்பிக்கை’ இருக்கிறது.

வியாதி வந்தவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துருதுருத்துக் கொண்டிருப்பார்கள். அதைப் பார்க்கும் மருத்துவரும் ஏதாவது சிகிச்சை செய்ய வேண்டும் என்று கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிரசவம் என்று வந்துவிட்டால் சிசேரியனுக்கு பெண்களை உடனே தயார்படுத்துவது போல, இவ்வகை நோயாளிகளின் பரபரப்பைப் பார்க்கிறபோது மருத்துவர்களும் “ஏதாவது செய்ய வேண்டும்” என்று சிசேரியன் வகையில் 'மின்அதிர்வு சிகிச்சைக்கு' போய்விடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்து கூட இருக்கிறவர்கள் வெகுவாகக் கலக்கமடைந்து விடுவார்கள். இந்தக் கலக்கத்தைப் பார்த்து பல மருத்துவர்களுக்குக் குழப்பம் வந்துவிடும். பல சமயங்களில் “நீங்கதானே பேஷண்ட்” என்று என்னிடம் கேட்டு விடுவார்கள். தலையசைத்து மறுத்தால் நம்பமாட்டார்கள். நின்று நிதானித்து பேசுவதைக் கவனித்து விட்டு “நீ பேஷண்ட் இல்லை” என்று ஒப்புதல் தந்து விலக்கி விடுவார்கள். (“நீயும் சீக்கிரம் பேஷண்ட் ஆகப் போகிறவன்தா” என்ற கேலிப் பார்வையுடன் பார்ப்பது போல இருக்கும்). நண்பர் ஒருவர் மருத்துவமனைக்கு கூடப் போனவரை ‘பேஷண்ட்’ என்று ‘பேஷண்ட்டே’ அடையாளம் காட்டிவிட, அவர் ‘பேஷண்ட்டுகளுள்’ அடைக்கப்பட்டார். அது ஒரு தனிக்கதை.

அதிகமாக எழுதுவதே நோய்த்தன்மையினால் என்பார்கள். இந்த மனச்சோர்வு வியாதி படைப்பிலக்கியத்திற்கும் வழி வகுப்பதை, பல இலக்கியவாதிகளின் பெயர்களை முன் வைத்துச் சொல்லிவிடலாம். படைப்பிலக்கியம், எழுத்து இவற்றுக்கு இந்த மூளை நோய் எப்படி மூலமாகிறது என்று உளவியலாளர்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

மீண்டும் கோடைக் காலத்திற்குத் திரும்பலாம். கோடை தகிக்கிறது. இந்தக் கோடைக்காலத்தில் பெரும்பாலும் மனநல மருத்துவமனைகள் நிரம்பி வழியும். ஆசியக் கண்டத்தின் சுட்டெரிக்கும் வெயில் இப்பகுதியில் இந்த நோய்க்கான முக்கியமான காரணமாய் சொல்லப்படுவதுண்டு. பௌர்ணமி, அமாவாசை மற்றும் அவற்றின் முன் பின் தினங்களில் அவர்களின் பரபரப்பும், படும் அவஸ்தைகளும் சொல்லிமாளாது. ஏதாவது விபரீதமாய் நடந்தே தீரும். எதையாவது உடைத்து, யாரையாவது காயப்படுத்தி, அல்லது அவர்களே காயப்படுத்திக் கொள்வர். பௌர்ணமி, அமாவாசை தினங்களில் அவர்களின் பரபரப்பு செயல்பாடுகளுக்கான நியாயங்களை உளவியலாளர்கள் வெயில் காலத்தை முன் வைத்தும் விளக்குவது நல்லது. நான் பல மருத்துவர்களிடம் இதை முன் வைத்திருக்கிறேன். “ரொம்ப பிஸி, இதுக்கெல்லா பதில் சொல்ற மாதிரி நேரம் இல்லை. அப்புறம் பார்க்கலாம்”. ஆனால் அவர்களே நோயாளிக்கான ‘கவுன்சிலிங்கிற்கு’ பணம் கட்டி சீட்டு பெற்று நோயாளிகளை உட்காரவைத்து கேள்விகள் கேட்டு பதில் பெற்று காசு சம்பாதிக்க நேரம் ஒதுக்குவதுண்டு. ஆல்பர்ட் காம்யுவின் ‘அந்நியனில்’ வரும் பிரதான பாத்திரம் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணத்தைச் சொல்கிறபோது சுட்டெரிக்கும் வெயிலைக் குற்றம் சாட்டுவது ஞாபகம் வருகிறது. கோடையில் அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது.

மாரடைப்போ, தற்கொலையோ, வயதாகி இறத்தலோ என்று நிகழ்ந்து இந்தக் கொடுமையான கோடையில் இருந்து‘தப்பித்தவர்கள்’ குறித்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களுக்கான அஞ்சலியை சற்றே நிதானமாய் எவ்விதப் பரபரப்பும், துருதுருப்பும் இல்லாமல் செலுத்துவதில் பெருமூச்சு கிளம்புகிறது.


http://www.uyirmmai.com

தொலைந்து போனவர்கள்

சிங்கப்பூர் என்பதே மிகப்பெரிய பொருட்களின் விற்பனை சந்தை ‘ஷாப்பிங் சென்டராக’ இருக்கிறது. பத்துப் பெரிய ‘மால்களை’ ஒன்று சேர்த்து கொஞ்சம் குடியிருப்புகளையும், கொஞ்சம் மக்களையும் கொஞ்சம் அலுவலகங்களையும் கூட்டிச் சேர்த்த சந்தை அங்காடிதான் சிங்கப்பூர். ‘ஷாப்பிங் மால்’ என்பது சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த விஷயமாகிவிட்டது. பொருட்களை வாங்கச் செல்லும் இடமாக இருந்தது முன்பு. பின்னால் நாளின் வேலை நேரத்தைத் தவிர பெரும்பான்மையான நேரத்தை இங்கு பலர் கழிக்கிறார்கள். பொழுதுபோகிறது. குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து அவர்களை விடுவித்துக் கொள்ள மிகச் சிறந்த உபாயமாக இருக்கிறது. புகலிடமாகவும் இருக்கிறது.

இப்படி ஷாப்பிங் மாலில் அடைக்கலமாகிற மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படம் ‘Gone Shopping’. இவ்வாண்டில் வெளிவந்திருக்கும் ‘My Magic’ என்ற படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு முக்கியப் பரிசுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. அதில் வரும் குடிகார அப்பாவும், அவரது வளரும் பையனும் முக்கியமாக இடம் பெறுகிறார்கள். குடிகார அப்பா வளரும் பையனை ஒட்டி அவரது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடிவெடுப்பதை அந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது. ‘Gone Shopping’ ஒரு பெண் இயக்குனரின் முதன் முயற்சி என்ற வகையில் குறிப்பிடத்தக்க படமாகும்.

அறுபதுகளில் சிங்கப்பூரை மலாய், சீனப்படங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. 1965இல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றபின் குறிப்பிடத்தக்கபடி படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. 1997இல் கேன்ஸ் திரைப்படவிழாவில் ‘12 Storeys’ படம் நுழைந்தபோது சிங்கப்பூர் படங்களுக்கான முதல் அங்கீகாரம் உலக அளவில் கிடைத்தது. 1999இல் எட்டுப் படங்கள் வெளிவந்தது பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. 2005இல் அதிக அளவில் படங்கள் தயாரிக்கப்பட்டன. 2008இல் வெளிவந்த எரிக் கூஸின் ‘My Magic’ கொடுத்த வெற்றியும் உலக அளவிலான அங்கீகாரமும் சிங்கப்பூரின் தனித்தன்மையான படங்கள் பற்றி மும்மாதிரிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனா, மலாய், தமிழ் ஆகியவை ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. எனவே இம்மொழிகள் சார்ந்த மக்களின் கலாச்சார வாழ்க்கையின் கலவைப் பிரதிபலிப்பாக சிங்கப்பூர் திகழ்கிறது. பூர்வக்குடிகளான ஆட்சி மொழியைப் பேசும் மக்களூடே சீனா, இந்தியா, மலாய், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்தவர்களும், இடம் பெயர்ந்து வந்தவர்களுமாக சிங்கப்பூர் நிரம்பி வழிகிறது.

பலமாடிக் கட்டடங்கள் அவர்களுக்குப் புகலிடமாகிறது. மாடிக் கட்டடங்களில் அவர்களின் வாழ்க்கை விசித்திரமாகக் கூட அமைந்துவிடுகிறது. ஒரே கட்டிடத்தின் வெவ்வேறு தளங்களில் ஒரே சமயத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமூட்டக் கூடியதாகும். இந்திய வம்சாவளி குடும்ப பூப்பு நன்னீராட்டு விழாவோ, சீனக்குடும்பத்தினரின் சவ இறுதிச் சடங்கோ, மலாய் குடும்பத்தினரின் திருமணமோ ஒரே கட்டடத்தில்கூட சர்வ சாதாரணமாய் நிகழ்வதுண்டு. தென்னிந்திய உணவுப் பொருட்களையோ, வாழை இலைச் சாப்பாட்டையோ சுலபமாகப் பெறமுடியும். சிங்கப்பூரின் 40 சதவீத மக்கள் புத்தமதத்தைப் பின்பற்றுகிறவர்கள். தாவோயிசம், கன்பூசியனிசம், கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்டவர்கள் 14 சதம் இருக்கிறார்கள். 7 சதவீதம் இந்திய இந்துவினர் உள்ளனர். 14 சதவீதம் எந்த மதத்தையும் சாராமல் தங்களை சுய சிந்தனையாளர்களாக அறிவித்துக் கொள்கிறார்கள். ஆனால் சுயசிந்தனை வெளிப்பாடுகளுக்கும், எதிர்க் குரல்களுக்கும் சிங்கப்பூர் ஜனநாயகம் என்றைக்கும் பெரியதாக கௌரவம் தந்ததில்லை என்று சொல்லப்படுவதுண்டு. ‘ஷாப்பிங் மால்’களுக்குச் செல்வது சாப்பிடுவது ஆகியவை அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்த விஷயங்கள். பெரும்பான்மையான மக்கள் வேலை நேரத்தைத் தவிர ஒரு பகுதி நேரத்தை இங்குதான் கழிக்கிறார்கள். ‘பல் மருத்துவரைப் பார்க்கக் கூட அங்குதான் செல்லவேண்டும்’ என்கிறார்கள். நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டுத் தளங்கள் என்று விரிவான அளவில் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக அவை இருக்கின்றன.

பெண் இயக்குனர் லி வின் வீ 23 வயதில் தன் முதல் குறும்படத்தை எடுத்திருக்கிறார். எழுத்தாளராயும் அவர் இருக்கிற காரணத்தால் திரைப்படத்துறையில் சுயாட்சியுடன் அவரால் இயங்க முடிகிறது. 2007இல் வெளிவந்த ‘Autograph book’ என்ற குறும்படம் அவரின் முக்கியமான முயற்சியாகக் கணிக்கப்படுகிறது. அவரின் முதல் திரைப்பட முயற்சியாக ‘Gone shopping’ மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

முஸ்தப்பா போன்ற மிகப் பெரிய ‘ஷாப்பிங் மால்கள்’ 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தூங்காத நகரத்தில் தூங்காத அங்காடிகள் அவை. அதில் அடைக்கலம் பெறும் மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது இப்படம். அவர்கள் தங்களின் மற்ற இறுக்கங்களிலிருந்து விடுபட அங்காடிக்குள் அடைக்கலமாகிறார்கள். 40 வயதுப் பெண் பெரிய செல்வந்தராக இருக்கிறார். வீட்டில் அவளின் தனிமை அவளைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. தனிமையிலிருந்து தப்புவதற்காக முஸ்தபாவிற்குள் வந்து எதையாவது வாங்கிக் கொண்டிருப்பாள். தினமும் வருகிறவள் என்ற வகையில் எல்லோர்க்கும் பரிச்சயமானவளாக இருப்பாள். தேவைப்பட்டதோ தேவைப்படாததோ வாங்கணும் என்று நினைப்பதையெல்லாம் வாங்கிக் கொண்டிருப்பாள். அவளின் பழைய காதலனைச் சந்திப்பவளுக்கு இங்கேயே இருந்து விடலாம் போலிருக்கிறது. ஆனால் அங்கு எப்போதுமாக இருந்துவிடமுடியாது. அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே அவளுக்குச் சித்திரவதையாக இருக்கிறது. உள்ளேயே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறாள். உள்ளேயிருக்கும் எல்லோரும் பரிச்சயமானவர்கள் என்றாலும் அந்நியமாகவே உணர்கிறாள். பொருட்களை வாங்குவதில் உள்ள பொறாமை சிலரை தூரம் போக வைக்கிறது. சிலரை புன்னகையுடன் எதிர்கொள்கிறாள். அங்கேயே தூங்க வேண்டும் போலிருக்கிறது. தூங்குகிறாள். எதிர்ப்புக் குரலாய்க் கத்தவேண்டும் போலிருக்கிறது. கத்துகிறாள். அழுகிறாள். அங்கிருந்து அவளை வெளியேற்றச் செய்வதுகூட காவலாளிகளுக்குச் சிரமம் தருவதாகும். அங்கிருந்து வெளியேறுவது என்பது அவளுக்கு வேதனையாக இருக்கிறது. 8 வயது தமிழ் பெண் குழந்தையொன்று முஸ்தபாவிற்குள் வந்த பெற்றோரிடமிருந்து பிரிந்து விடுகிறது. அக்குழந்தை ரேணு காணாமல் போனவர்கள் பற்றி அறிவிப்பு தரும் இடத்தில் ஐக்கியமாகிறாள். ‘என்னை ஏன் விட்டுவிட்டுச் சென்றீர்கள்’ என்று மைக்கில் அறிவித்துக் கெஞ்சுகிறாள். பொம்மைகளுடன் விளையாடுகிறாள். காவலாளியின் மிரட்டலை எதிர்க்கிறாள். அங்கேயே தூங்கியும் போகிறாள். பெற்றோருக்கான அவளது அழைப்பு முஸ்தபாவிற்குள் அலைந்து திரிந்து கொண்டேயிருக்கிறது. இன்னொரு இளைஞன் 22 வயதுக்காரன் பிரதானமாகிறான். அவனின் நண்பனின் சகோதரியுடன் அங்கு பொழுதைக் கழிக்கிறான். நினைவுச் சின்னமான கத்தியொன்றை வாங்குகிறான். சிறு சிறு கும்பல்களுடன் சண்டையிடுகிறான். நண்பியைப் பிரிக்கும் முயற்சிகளை எதிர்க்கும் அவன் தினசரி காலைமுதல் இரவு வரை வேலைபார்க்கும் இயந்திரத் தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு முஸ்தபாவிற்குள் நுழைந்தவன். அவன் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற அழைப்பை நிராகரித்துவிட்டு அங்கேயே திரிந்து கொண்டிருக்கிறான். காவலாளியிடம் பிடிபட்டு கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகிறான்.

தாங்கள் அடைக்கலமாகியிருக்கும் இடம் தங்களுக்கு புகலிடமாக இருப்பதை மற்றவர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பது அவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. எங்களை இங்கேயே இப்படியே விட்டு விடுங்கள் என்று மனதுள் கதறுகிறார்கள்.

கிடைக்கிற நேரங்களையெல்லாம் பெரும் அங்காடிகளுக்குள் அலைந்து திரிந்து நூடில்சும், காபியும் சாப்பிட்டு பிரிய மனமில்லாமல் வெளியேறும் மக்களின் கூட்டங்களாய் அவை நிரம்பி வழிகின்றன. இத்தகைய பெரிய அங்காடிகள் இந்திய நகரங்களிலும் தற்போது காணக் கிடைக்கின்றன. அங்கும் இதேபோல் 40 வயது திருமணமான பெண்ணையோ, 8 வயது தொலைந்து போன சிறுமியையோ, 22 வயது அலுவலகம் பிடிக்காமல் அலைந்து கொண்டிருக்கும் இளைஞனையோ காணமுடியும்.

இதன் இயக்குனர் லி வின் வீயை பெரும் அங்காடிகள் பெரிய அளவில் பாதித்திருக்கின்றன. அவளின் பள்ளி சிங்கப்பூரின் மிக முக்கியமான சாலையான ஆர்கிட் சாலையில் இருந்திருக்கிறது. பள்ளி முடிந்தபின்பு அவளின் பொழுதுகள் ஆர்கிட் சாலையின் பெரிய அங்காடிகளுக்குள்தான் கழிந்திருக்கின்றன. வார இறுதி நாட்களிலும் பெரும்பான்மையான விடுமுறை நாட்களிலும் பெரிய அங்காடிகளில் அலைந்து திரிவதுதான் அவளின் பிடித்த விஷயமாகியிருக்கிறது. பெரும் அங்காடிகள் ஆசுவாசப் பட வைத்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்தப் படம் என்கிறார்.

‘சிங்கப்பூருக்கு வாருங்கள்’

‘சிங்கப்பூரில் ஷாப்பிங் செய்யுங்கள்’

என்று வரவேற்புப் பலகைகள் எங்கும் வரவேற்கின்றன. ‘ஷாப்பிங்’ செய்வதற்காகவே மேல்தட்டினர் சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள். இந்தியத் தமிழர்களுக்கும் மாரியம்மன் கோவிலும், ஷெராங் தெருவும்,தைப்பூசத் திருவிழாவும் போல பெரும் அங்காடிகளும் வெகுவாக ஆசுவாசப்படுத்துகின்றன. ‘முஸ்தப்பாக்கள்’ அவர்களை உள்ளிழுத்து நுகர்வுப் பொருட்களை பட்டியலிட்டு வாங்கும் இயந்திரங்களாக்கிவிட்டன. இந்த இயந்திரங்கள் மக்களுக்குள்இருந்து புன்னகை புரிந்து இருப்பை மறந்து தொலைந்துபோகிற மற்றும் அலைந்து திரிகிறவர்களின் குறியீடுகளை லி வின் வீ இப்படத்தில் முன்வைக்கிறார்.


http://www.uyirmmai.com

சாகித்திய அகாதமி: பெங்களூரில் " அபிவ்யக்தி "

சாகித்திய அகாதமி: பெங்களூரில் " அபிவ்யக்தி " ==============================================


பெங்களூரில் சாகித்திய அக்காதமி மொழிபெயர்ப்பு பரிசளிப்பு விழாவின் போது " அபிவ்யக்தி" நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.தமிழ் கதை வாசிப்பு நிகழ்ச்சியில் ‌
இந்திரனின் கதை பெரும் வரவேற்பைப் பெற்றது.Diary of husband என்ற அக்கதையில் வரும் ராஜலட்சுமிக்கு மற்றவர்களின் டைரிகளைப் படிப்பது தவறு என்று தெரிந்தாலும் அவற்றைப் படிப்பதில் சுவாரஸ்யம் கொண்டவள். அவளின் கண‌வன் டைரி அப்படித்தான் அவளுக்கு. அதில் இருக்கும் ஒரு பெண்ணின் படம் அவளுக்கு பல கற்பனைகளை தருகிறது. தூங்கமுடியாமல் அவஸ்தைப்படுகிறாள். டைரி கடலில் மிதந்து ஆச்சர்யப்படுத்துகிறது சத்தமாகப் படிக்கும் தஙக‌ மீன். சப்தமில்லாமல் படிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆண், பெண் பட்டாம்பூச்சிகள் வெவ்வேறு மணங்களுடன் மிதந்து ஆரவாரிக்கின்றன.பேன்டசி உலகில் தவிக்கிறாள் . கனவு கலையும் போது
" யாருக்காக அழுதாய் " என் கேட்கப்படுகிறது. சுவாரஸ்யமான கதை. இந்திரன் இதை தமிழில் பிரசுரிக்கலாம்.



சிற்பி பால‌சுப்ர‌ம‌ணிய‌ன் அவ‌ர்க‌ளின் " பெல்ஜிய‌ம் க‌ண்ணாடி" உடைந்து போகிற‌ போது எழுப்பும் நினைவ‌லைக‌ள் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்துப‌வை. ச‌ல்மாவின் க‌விதை வ‌ழ‌க்க‌ம் போல் உட‌ல‌ர‌சிய‌ல் பேசிய‌ திரும்ப‌த் திரும்ப‌ வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌விதை.ப‌ரிசு பெற்ற‌ கொங்க‌னி நூல் திருக்குற‌ளை மொழிபெய‌ர்த்த‌ற்காக‌. த‌மிழ் நவீன‌ இல‌க்கிய‌ம் அவ‌ர்க‌ளை எட்டாத‌த‌ற்குக் கார‌ண‌ம் முறையான‌ ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புக‌ள் பெருமளவில் இல்லாத‌தே.சுவ‌ர்ண‌ஜிட் சாவியின் ப‌ஞ்சாபி கவிதை ஓவியத்தன்மை கொண்டிருந்த்து. கன்னடத்து கம்பாரின் நாட்டுப்புறப்பாடல் நவீனத்துவத்துடனும் இசையுடனும் சிறந்து விளங்கியது." மர நிழல் குளத்தில் விழுகிறது.மர வேர் நிழ்லின் வேரில் தொடங்கி..."
சனியாவின் மராத்திக் கவிதை சாதாரண விசயங்களுக்கெல்லாம் சண்டை போடும் தம்பதிகள் பற்றியது.வெகு சுவாரஸ்யாமானது.‌ வெவ்வேறு ப‌ரிமாண‌ங்களையும், அனுபவங்களையும் கொண்டதாக கதை, கவிதை வாசிப்புகள் இருந்தன.

செனனையில் ந‌டைபெற்ற‌ இரு சா. அ. நிக‌ழ்ச்சிக‌ள்:

1. " என‌னை செதுக்கிய‌ நூல்‌க‌ள் " உரை: ராஜேந்திர‌ன் ( துணைவேந்த‌ர், த‌ஞ்சைப் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ம் )

2.ப‌ன்மொழிப்புல‌வ‌ர் கா. அப்பாதுரையார் நூற்றாண்டு விழா

க‌ட்டுரையாள‌ர்க‌ள் : இராம‌ குருநாத‌ன், சிற்பி, அலெக்சாண்ட‌ர் ஜேசுதாச‌ன், இந்திர‌ன், அறிவுந‌ம்பி, செய‌தேவ‌ன் , மா ரா அர‌சு, இரா மோக‌ன், அந்ததோணி டேவிட்நாதன், மு முத்துவேல்
.================================

சாகித்திய அகாதமி

சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில்
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
=========================================================
ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவ்வாண்டு இந்திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிற்பி குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கதை மரபைப்பற்றிப் பேசியிருக்கிறார்.இந்தியாவில் இருந்து கலந்து கொண்டவர்களில் சிலர்: சச்சிதானந்தன் ( மலையாளம் ), அசோக்வாஜ்பாய் ( இந்தி ) , அபர்ணா ( மராத்தி) , பாமா ( தமிழ் ). சிற்பி ரஸ்யா செல்வது இது இரண்டாம் முறை.அவரின் அனுபவங்களை பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் " இரு நகரங்களின் கதை " என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார்.


உலக இலக்கியத்தின் ஆதர்சமாக இருந்த ர‌ஸ்ய இலக்கியம் இன்று குறிப்பிடும்படியாக இல்லை.எழுத்துச் சுதந்திரம் இருந்தாலும் எழுச்சி மிக்க இலக்கியம் இல்லை. அதுவும் குழந்தைஇலக்கியப் படைப்புகள், புத்தகங்கள் வெகு சாதாரண‌மான தரத்தில் இருந்தன. இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற குழந்தை இலக்கிய நூல்கள் அங்கு காட்டப்பட்ட்ன.பல மடங்கு உயர்ந்த தரத்தில் இருந்தன‌. பழய செய்திகளே மீண்டும் மீண்டும் நினைவு கூறப்பட்டன.கவிதை வாசிப்புகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகளில் புதிய உத்வேகம் இல்லை. புத்தக்க கண்காட்சியில் ஏகதேசம் ஆங்கில நூல்கள் இல்லை என்னும்படி வெகு குறைவாக இருந்தன.இந்தியாவில் இருந்து வந்திருந்த நடன நிகழ்ச்சிகள் உரத்தச் சப்தத்துடன், நேர்த்தியில்லாமல் இருந்தன. ஆனால் ரஸ்ய நடனங்களின் நளினமும், நேர்த்தியும் கவர்ந்தன.

பயணத்தில் இரு நகரங்களைத் தரிசித்தோம்.


கிரம்ப்ளின்: ஊசியிலைக்காட்டுக் கோட்டை என்பது அர்த்தம்.இரு நதிகளின் சந்திப்பில் இந்த நகரம் இருக்கிறது. இங்குள்ள மியூசியங்களைக் காண ஒரு மாதமாகும்.
சிவப்புக்கற்களால் கட்டப்பட்டதால் ரெட் ஸ்கொயர் என்று பெயர் வந்திருக்கிறது.இங்கு லெனின் உடல் இன்னும் இருக்கிறது. அது 1935 ல் அடக்கம் செய்யப்பட்டது. 1953ல் ஸ்டாலின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது ஆனால் பின்னர் அது இடமாற்றம் செய்யப்பட்டுருக்கிறது.கிரம்ளின் கோட்டைக்குள் நிறைய தேவாலயங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு தேவாலயத்தில் வழிபாடு செய்ய தனித்தனியாகக் கட்டியதால் அவ்வளவு தேவாலயங்கள். 1918 தேவாலய வழிபாடுகள் நிறுத்தப்பட்டு 1991ல் மீண்டும் துவங்கியிருக்கின்றன. ஜார் மன்னனின் ஆட்சியின் ஆடம்பரம், ஜாரினா அரசியின் ஊடதாரித்தனம் ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது.ஜார் மணி 130 டன் எடை கொண்டது சிறப்பானது.பாஸ்டர்நாக்கின் கிராமத்திற்கு சென்றிருந்தோம்.நாபில் பரிசு வாங்காதே என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.வாங்கவில்லை. நாடு கடத்தப்பட்டார். நேருவின் படம் அவரின் அறையில் இருகிறது.அவரை இந்தியாவிற்கு வாருங்கள் என‌வரவேற்ற ஆவணங்கள் இருந்தன.

மாஸ்கோ நகரத்தில் விலை வாசி தாறுமாறாய் இருக்கிறது நாணயமில்லாத மனிதர்களால் நிரம்பி வழிகிறது.நுகர்வுக்கலாச்சாரம் கோலோச்சுகிறது. மெட்ரோக்களில் விலை மாதர்கள் நிரம்பத் தென்படுகிறார்கள்.முதலாளித்துவ ஆட்சியின் கூறுகளைக் காண முடிகிறது.பணத்தேவை அதிகரித்து விட்டது. கார்ப்பரேட் கம்பனிகள் நிறைய செயல்படுகின்றன்.மாஸ்கோவில் தனியார் கட்டிடங்கள் இல்லை என்றாலும், வெளிப்பகுதியில் புதிதாய் தனியார் கட்டிடங்கள் ஏராளமாய் வந்தி விட்டன என்பதே அரசு பிடியில் இருந்து தனியார் மயம் கோலொச்சுவதை காண முடிகிறது.ஸ்டாலின் காலக் கொடுமைகளைப் பற்றி ஒருவரிடம் கேட்டதற்கு " We are pigs, we need Stalin " என்றார். அது அவரின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம் என்றார்கள் நண்பர்கள் .

துருக்கியின் இஸ்தான்புல் ஒவ்வொருவரும் காண வேண்டிய மிகச் சிறந்த ஒழுங்கமைப்பும் அழகும் கொண்ட நகரம்.

இரு நகர எழுத்தாளர்களும் இந்தியாவுடனான இல‌க்கிய பரிவர்தனை மிக அவசியம் என்றனர்.



=சுப்ரபாரதிமணியன்