சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 29 மே, 2011

அண்டை வீடு : பயண அனுபவம்,

பலவீனமான பெண் குரல்கள்
--------------------------------









டாக்கா நகரின் நெரிசலான பகுதியொன்றில் நஜ்மா அகதர் என்ற பெண் தொழிற்சங்கத் தலைவரைத் திருப்பூரிலிருந்து சென்ற எங்கள் குழு சந்திக்கச் சென்றபோது அவர் எங்கள் குழுவில் பெண் பிரதிநிதி யாரும் இல்லாததைக் கண்டு, அதைக் காரணம் சொல்லி சந்தித்துப் பேச மறுத்தார். " இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு. இதிலிருந்து வருபவர்களில் பெண் பிரதிநிதி ஒருவர் கூட இடம் பெறாதது வருத்தமே" எங்கள் குழுவில் தொழிற்சங்கத் தலைவர்கள், தன்னார்வக் தொண்டு அமைப்புக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் என்று 12 பேர் ஆண்கள் இருந்தோம். வங்கதேசத்தின் பின்னலாடை வளர்ச்சியின் அபரிதமான தன்மையைக் கண்டு கொள்ளச் சென்றிருந்தோம்.

டாக்காவில் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கணிசமாக இருக்கிறார்கள். விதேசி தொழிற்சாலைகள் என்பவற்றில் 5% தொழிலாளர்களே உள்ளனர். பங்களாதேஷ் பேக்டரிகள் எனப்படுபவை உள்ளூர் தொழிலாளர்களை மையமாக்க் கொண்டவை. இவற்றில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் பெரும்பாலும் அமெரிக்காவிற்குச் செல்கிறது. இங்கிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கும் 57% சதவீதம் உற்பத்தி நடக்கிறது. வால்மார்ட், டெக்கோ, ஹெச் அண்ட் எம் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்து வருகிறார்கள். கொரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். 120 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 55 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் பெண் பின்னலாடைத் தொழிலாளர்கள்.



24 தொழிலாளர் கூட்டமைப்புகள் இருந்தாலும் நேரடியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறைவாகவே இருக்கிறார்கள். மொத்தத் தொழிலாளர்களில் 3.5% மட்டும் தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தொழிற்சங்க நடவடிக்கை என்று வரும்போது பொய்யான வழக்குகள், தண்டனைகள் சுலபமாக கிடைத்து விடுகின்றன. BJPJ, BMJF, JSF போன்ற தொழிற்சங்கங்கள் அதிக அளவில் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. BTUK என்ற பொதுவுடைமைக் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் இருந்தாலும் வலுவானதாக இல்லை. ஆளும் அலாமிலீக் கட்சியின் தொழிற்சங்கம் அரசுக்கு ஆதரவானத் திட்டங்களை முன் வைத்துப் பிரசாரம் செய்கிறது.









விவசாயத்தை முன்னணியாகக் கொண்ட நாடு என்பதால் தொழிற்சங்கத் தலைவர்கள் மிகவும் படித்தவர்களாக இல்லை. பொருளாதார நிலைகளில் பின்தங்கிய சமூகங்களிலிருந்து அந்த அனுபவங்களைப் பெற்றவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக வரும் வாய்ப்புகள் அரசியல் பலமுடையவர்கள் மத்தியில் தோற்றுப் போகிறது.

நேர்மையான தியாக உணர்வு மிக்க தொழிற்சங்கவாதிகள் குறைவாக இருப்பதும், பெண் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தும் முஸ்லிம் சட்டங்கள் இல்லாததால் பலவீனமாகவே உள்ளது. தற்போது பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொழிற்சங்கங்களிலும், அமைப்புகளிலும் அதிகரித்து வருகிறது என்கிறார்கள். ஆதிக்க மனப்பான்மை பெண்களை ஒதுக்கி விட்டிருக்கிறது. பெண்களுக்கான பிரத்யேக பிரச்சனைகளை முன் வைப்பது வெகு குறைவாக இருக்கிறது. 112 நாள் பிரசவ விடுமுறை தருகிறோம். மாதவிலக்கு சமயங்களில் கேர்ப்ரீ உள்ளாடை இலவசமாகத் தருகிறோம். பெண்களுக் கென்று தனியான தொழுகை செய்ய இடங்கள் உள்ளன என்று நெதர்லாந்து நாட்டிற்கு உற்பத்தி செய்து அனுப்பும் ஒரு பின்னலாடைத் தொழிற்சாலையினர் தெரிவித்தார்கள். பெண்களின் உரிமை குறித்த விழிப்புணர்வும், சமதன்மையும் குறைவாக இருப்பது பெண்களை வெறும் தொழிலாளர் நிலையிலேயே வைத்திருக்கிறது. பெண்களுக்கான சம்பளம் குறைவே என்பதால் இந்தியாவிற்குச் சென்று பணிபுரியும் 80 லட்சம் பெண்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது.

பின்னலாடை மற்றும், தேயிலைத் தொழிற்சாலைகளில் இளம் பெண்களை வேலைக்கு நியமிப்பது சாதாரணமாக உள்ளது. திருப்பூரின் சுமங்கலி திட்டம் போன்றவை இங்கு உள்ளதா என்று சந்தேகம் கொள்ளும் அளவில் இளம்பெண்களே பின்னலாடை தொழிற் சாலைகளில் காணப்பட்டனர். திருப்பூரில் அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளம் 180ரூ, முன் அட்வான்சுத் தொகை, பல தொழிற்சாலைகளில் தங்குமிடங்கள், பக்கமிருக்கும் கிராமங்களிலிருந்து தொழிலாளர்களைக் கூட்டி வர பேருந்து வசதி ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளும்போது வங்கதேசப் பெண்கள் நிலை பரிதாபகரமானது. இளம் பெண் களுக்கான தங்குமிடங்கள் பிரச்சினையாகின்றன. சரியான குடியிருப்புகள் இளம் பெண்களுக்குக் கிடைப்பதில்லை.

பஜ்ரானாசிபா என்ற இளம் பெண், 28 வயது. டாக்கா பின்னலாடைத் தொழிலுக்கு வந்தவள் தங்க இடம் தேடி 30 வீடுகளுக்குச் சென்றபின் அய்ந்து பேர் தங்கும் ஓர் அறையில் கடைசியில் இடம் பிடித்திருக்கிறார். பெரும்பாலும் வீடு வாடகைக்குக் கொடுப்பவர்கள் இளம் பெண்களுக்கு வீடு தருவதில்லையாம். அதிக வாடகை. தங்கும் விடுதிகளின் தரம் மோசமாகவே இருக்கிறது.








" தனியே நான் தங்கியிருந்தபோது சிறுவர்கள் கற்களால் எங்களைத் தாக்கியிருக் கிறார்கள். வீதியில் நடக்கையில் கேலியும் கிண்டலும் சாதாரணம். வேலை முடிந்து நடு இரவில் இருட்டு அறையில் போய் முடங்கும் வரை எங்கள் உயிரும் உடம்பும் எங்களுடையதாக இருக்காது. இன்றைய பிரதமர் பெண்ணாக இருக்கலாம். மாறிமாறி பெண் பிரதமர்கள்தான் வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்திலுள்ள பெண்கள்தான் தலை நிமிர்ந்து நடக்க முடியும் இங்கு. எங்கும். " என்றார்.பெண் சக்தியின் வடிவமானவள்தான். ஆனால் தொழிற்சாலை அமைப்புகளால் சக்கையாக்கப்பட்டவளும் கூட என்பதை வங்கதேசப் பெண்களும் உணர்த்தினார்கள்.

வியாழன், 19 மே, 2011

அண்டைவீடு: பயணஅனுபவம்: லஜ்ஜா

" லஜ்ஜா" நாவல் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்துக்கள் வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டதைப்பற்றி விவரித்தது. வங்கதேசத்தில் அரசால் லஜ்ஜா தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தஸ்லிமா கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அரசியல் அடைக்கலம் பெற்றார். 1995ல் நான் ஜெர்மன் பெர்லின் நகரில் தங்கியிருந்தபோது தஸ்லிமா அங்கு இருப்பதாகவும் சந்திக்கலாம் என்றும் சுசீந்திரன் சொல்லியிருந்தார். பின்னர் இயலவில்லை என்பது பற்றி என் முந்திய பயண நூலான "மண் புதிது"வில் குறிப்பிட்டிருந்தேன். 1998ல் அவரின் தாய் சுகவீனம் குறித்து அக்கறை கொண்டு வங்கதேசம் திரும்பினார் தஸ்லிமா. 2003ல் கல்கத்தாவிற்கு வந்தபோது அவரின் சுயசரிதை நூலை வங்கதேசம் தடை செய்திருந்தது. இந்தியாவில் அவர் வசிக்க விரும்பியதன் அடையாளமாய் அவரின் சில கவிதைகளை எடுத்துக் கொள்ளலாம். ஸல்மான் ருஷ்டி போல் அடிப்படைவாதிகளிடம் மன்னிப்புக் கேட்டு தொடர்ந்து மேற்கில் வாழ விரும்பாமல் பலமுறை பல நாடுகளில் நாடோடியாகத் திரிகிறார். அமெரிக்காவிலும் வாழ்ந்தார். வங்கதேசமும் வங்கமொழியும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதால் கல்கத்தாவிலோ,டாக்காவிலோ வாழவிருப்பம் கொண்டதைப் பல முறை தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் அடைக்கலமாகிற ஆசையை சில கவிதைகள் தெரிவிக்கின்றன. டாக்கா நகரம் பற்றிய சித்தரிப்புகளாக அவர் எழுதிய சில கவிதைகளை யமுனா ராஜேந்திரனின் மொழிபெயர்ப்பில் கீழே தந்திருக்கிறேன்.


டாக்கா நகரத்தின் பல்வேறு வீதிகளையும், முக்கிய இடங்களையும், மக்களின் வாழ்நிலையையும் இக்கவிதைகளில் இனம் கண்டு கொள்ளலாம். பின்னலாடைத் தொழிலாளர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கவிதை ஒன்றும் உள்ளது.







1) சந்தேகம்





நான் இறந்தால் எனது பிணத்தை அங்கே விட்டுவிடுங்கள்

இறந்த சவங்களை எங்கே பரிசோதனைக்கு

உட்படுத்துவார்களோ அங்கே

மருத்துவக் கல்லூரியின் பிணவறையில்

எனது மானுடச் சட்டகத்தை கொடையாகத் தருகிறேன் என

நான் உறுதி சொல்கிறேன்

நான் இறந்த பின்னால்

என்னைக் கல்கத்தாவில் இருக்க விட்டு விடுங்கள்

நான் உயிருடனிருக்கும்போது இந்த நகரம்

என்னைக் கைவிடுவது என உறுதி எடுத்திருக்கிறது.

நான் இறந்த பிறகாவது

இவள் என்னை ஏற்றுக்கொள்வாளா?

2) சந்திப்பு




சிறைச்சாலைகளில் கூட

சில நெறிமுறைகளை அவர்கள் மதிப்பார்கள்

தம்மைக் காண வருபவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிப்பது என்பது

ஒரு நியதியாகச் சிறைச் சாலைகளில் இருக்கிறது

நான் ஒரு கைதி




பலவந்தமாக ஒத்துவராதவளாக ஆக்கப்பட்டிருக்கிறேன்

நண்பர்களோ உறவுகளோ இல்லாதவளாக


தினமும் நான் கோரிக்கை மனுவை அனுப்புகிறேன்

கைதிiயைப் போல எனக்குச் சலுகை தாருங்கள்

எனக் கேட்கிறேன்


இந்திய அரசாங்கம் பேசாது தவிர்க்கிறது.


3) இது எனது நகரம் இல்லை





என்னுடையது என ஒருபோதும் நான் சொல்லிக் கொண்ட

மாதிரியிலான நகரம் இல்லை இது

குள்ளநரித்தனமான அரசியல்வாதிகளுடையது இந்த நகரம்

பழிபாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகள்,

சதை வியாபாரிகள்,

கூட்டிக் கொடுப்பவர்களின், பொறுக்கிகளின், வன்புணர்வாளர்களின்

நகரமேயல்லாது இது

என் நகரமாக இருக்க முடியாது


வன்புணர்வுகளுக்கும் கொலைகளுக்கும்

ஊமை சாட்சிகளாயிருப்பவர்களுக்கானது இந்நகரம்

எனக்கானது இல்லை

அயோக்கியர்களுக்குச் சொந்தமானது இந்நகரம்

அனாதரவாளர்கள் குறித்த உணார்ச்சியற்று

பாசாங்குகள் நிறைந்தது இந்நகரம்

சேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்

பிச்சைக்காரர்கள் மடிகிறார்கள்

தப்பித்தல்வாதிகளுடையது இந்த நகரம்

குறைந்தபட்ச இன்னல் என்றாலும்

அதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது


அநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்

பேய்களின் நகரம் இது

வாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி

வீராவேசமாக இங்கு வாயடித்துக் கொண்டிருப்பார்கள்


முகத்துதிக்காரர்களின் நகரம் இது

தற்புகழ்ச்சியாளர்களின் பிரதிநிதிகளினதும்

சந்தர்ப்பவாதிகளினதும் நகரம் இது

இதனை இனி ஒருபோதும்

எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்

இனி ஒருபோதும்


பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்

மதவெறி அயோக்கியர்கள்

இங்கு கூடாரம் போட்டிருக்கிறார்கள்


விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய

ஆண்களும் பெண்களும்தான்

இங்கு தர்க்கமெனும் ஆயுதத்துடன், சுதந்திர சிந்தனைகளுடன்,

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டு

இதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

இது எனது நகரம் இல்லை.


4) விளையாட்டு : மாற்றுச் சுற்று

அன்றொரு நாள் ரமணா பூங்காவில்

ஒரு பையன் ஒரு இளம் பெண்ணை

விலைபேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்

நானும் அய்ந்து அல்லது பத்து டாக்காவுக்கு

ஒரு வாலிபனை வாங்க விரும்பினேன்

நன்றாக சவரம் செய்து

மொழு மொழுவென்று இருக்கும் பையன்

நல்ல அழகான சட்டை அணிந்திருப்பவன்

நடுவகிடெடுத்துப் படிய வாரியிருப்பவன்

பார்க் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன்

அல்லது பிரதான சாலையில் நின்றிருப்பவன்

உடல்வாகு கொண்டவன்.


சட்டைக் காலரைப் பிடித்து அவனை

இழுத்து நான்

ரிக்‌ஷாவில் வீச வேண்டும்-

கழுத்திலும் வயிற்றிலும் கிச்சுக்கிச்சு மூட்டி

அவன் துள்ளுவதைப் பார்க்க வேண்டும்

அவனை வீட்டுக்குக் கூட்டிவந்து

குதிகால் உயர்ந்த செருப்பைக் கழட்டி

நன்றாக விளாச வேண்டும்.

அப்புறம் அவனை வெளியே துரத்தியடித்துச்

சொல்ல வேண்டும்:

ஒழிந்து போ தேவடியா மகனே.

நெற்றியில் பேண்ட் எய்டை ஒட்டிக் கொண்டு

அந்தப் பையன்கள் அதிகாலையில்

தெருவோரத்தில் நின்று

தங்களது சிரங்கைச் சொரிந்துகொண்டிருக்க

அவன்களது

புரையேறிய காயங்களிலிருந்து வழியும் மஞ்சள் சீழை

நாய்கள் நக்கிக்கொண்டிருக்க

அவர்களைப் பார்க்கும் பெண்கள் தங்கள்

கைவளையல்கள் நொறுங்கும் சப்தம்

கலகலவெனக் கேட்கும்படி சிரிக்கட்டும்

நிஜமாகவே நான் எனக்கு

ஒரு வாலிபனை வாங்க விரும்புகிறேன்



ஒரு புத்தம் புதிய மெருகு குலையாத

நெஞ்சில் முடி கொண்ட பையன்

ஒரு பையனை நான் வாங்கி

அவன் உடம்பு முழுக்க உதைப்பேன் அவனது சுருங்கிக் கிடக்கும்

விரையில் உதைத்துக் கொல்வேன்:

ஒழிந்து போ தேவடியா மகனே.


5) அவமானம் 7 டிசம்பர் 1992





சதிபதா தாஸ் அன்று காலை

அவனது வீட்டுக்கு தேநீருக்கு வருவதாகத் திட்டம்

மனம் நிறைந்தபடி

அரட்டை அடித்துக் கொண்டிருப்பதும்

செஸ் விளையாடுவது யோசனை

சதிபதா தாஸ் தினமும் வருவது வழக்கம்




இன்று அவன் வரவில்லை



குல்லாக்கள் அணிந்த ஒரு கூட்டம்

சதிபதா தாஸின் வீட்டுக்குள் புகுந்து

பலவந்தமாக அவனைத்

தாக்கியது என்று செய்தி வந்தது


போனவர்கள் மண்ணெண்ணெயை

அறையின் எல்லா இடங்களிலும் தெளித்தார்கள்

மேசைகள், நாற்காலிகள், படுக்கைகள், அலமாரிகள்,

சட்டி பானைகள்

தட்டுமுட்டுச் சாமான்கள்

துணிமணிகள் புத்தகங்கள்

என எல்லாவற்றின் மீதும் தெளித்தார்கள்


அப்புறம் எல்லாத் தீக்குச்சிகளையும்

ஒருசேரக் கொளுத்தி

மண்ணெண்ணெய் தெளித்த எல்லா இடங்களிலும்

சுண்டி விட்டார்கள்.

தீப் பற்றியெறிந்தபோது சதிபதா தாஸ்

வீட்டு முன்றலில் வெறித்தபடி நின்று

தாதி பஸார் மீது களங்கமற்ற தாதிபஸாரையும்

அதன் மேல்

வேற்றுமையற்ற வானத்தில் படியும்

கரும்புகையையும் பார்த்தபடி நின்றான்.



மாலையில் நான்

சதிபதா தாஸின் வீட்டுக்குப் போனேன்.


சதிபதா தாஸ் தனது மூதாதையரின்

சாம்பலின் மீதும்

சரிந்த கட்டைகளின் மீதும்

தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன் இரத்தம்

அவனது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது

மார்பிலும் முதுகிலும்

கறுத்த தழும்புகள் தெரிந்தன


அவமானத்தில் எனக்குக் கூசியதால்

என்னால்

அவனைத் தொட முடியவில்லை.


1.1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்டது. இத்துடன் வெறியாட்டம் ஆடினார்கள். ஏழாம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதை இது.


2.தாதிபஸார் டாக்காவில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக் குடியிருப்புகளும் நாசமாயின.

6) நேற்று ஒரு கெட்ட கனவினோடு



நேற்று பின் மாலையில்

பங்களா அகாதமியின் புல்வெளியில் நான்

ஒரு கெட்ட அவனைச் சந்தித்தேன்



அந்தக் கெட்ட கனவு

நிலக்கடலையைத் தின்று கொண்டு

தின்றுமுடித்த

கடலைத் தோலைத் தூக்கிப் போட்டு

நண்பர்களோடு குறும்பு பேசி

விளையாடிக் கொண்டிருந்தான்


அந்தக் கெட்ட கனவின் கண்களுக்குள் நான்

மயங்கியபடி பார்த்தேன்

அந்தக் கெட்ட கனவின் கண்களுக்குள் நான்

வைகறை நிறத்தைப் பார்த்தேன்


கஞ்சாப்புகை காற்றில் வட்டங்களாகச் சுருண்டு

எனது கழுத்துப் பட்டையில் கலந்தது

கனவில் கிறங்கிய எனது கண்களுக்குள்

புகை மண்டிய வானத்தினுள்

அதன் நெற்றி முகப்பில் நூறாயிரம் பொட்டுகளாக

சந்தனச் சாந்து விரிந்தது



திடீரென அந்தக் கெட்ட கனவு

எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னை இழுத்து

தனது கைகளுக்குள் இறுக்கினான்

முத்தமிடும் வேளையிலெல்லாம் எண்ணியபடி எனக்கு

முப்பத்தியொன்பது முத்தம் பொழிந்தான்


கெட்ட கனவின் மயிற்கற்றைகள்

வலிய காற்றில் அலைந்தன

அவனது சட்டைப் பொத்தான்கள் திறந்து கிடந்தன

நிலவொளியில் நனைந்து கிடந்த நான்

பின்னிரவில் வீடு வந்து சேர்ந்தேன்



அந்தக் கெட்ட கனவு

என்னுடன் ஒட்டிக்கொண்டு வழியெங்கும்

காதலைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தான்




அந்தக் கெட்ட கனவுக்கு

வெட்கமென்பது கிஞ்சிற்றும் இருக்கவில்லை

அந்த இரவு கழிந்தது

மறுநாள் பகலும் கழிந்தது

அவன் போகப் போகிறேன் என்று




ஒரு முறைகூடச் சொல்லவில்லை.

7) சட்டை தைக்கும் பெண்கள்


சட்டை தைக்கும் பெண்கள் சேர்ந்து நடக்கிறார்கள்

பங்களாதேஷ் வானத்தில் பறக்கும்

நூறு நூறு பறவைகள் போல



சட்டை தைக்கும் பெண்கள்

நள்ளிரவில் தங்கள் சேரிகளுக்குத் திரும்புகிறார்கள்

காசு பிடுங்குவதற்காகத் திரியும்

தெருப் பொறுக்கிகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்

தமது உடல்களை

அந்தப் பெண்களின் உடல்களின் மீது அழுத்தி

பொறுக்கிகள் இரவின் மிச்சத்தையும் திருடிச் செல்கிறார்கள்



உறக்கமற்ற இரவினையடுத்து

அதிகாலையில் மறுபடியும் அவர்கள் சேர்ந்து போகிறார்கள்

அவர்கள் கடந்து போகிறபோது ஆண்களுக்கு எச்சில் ஊறுகிறது

நடந்து கடந்ததும் துப்புகிறார்கள்

தம்மால் இயன்றவரை பெண்கள்

இவர்களை உதாசீனம் செய்கிறார்கள்

எவர்தரும் உணவையும் ஏற்றுக்கொள்வதில்லை

எவர்தரும் உடுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை

நடக்கிறார்கள்

நடந்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள்


குருட்டு எருதுகள் போல

மேலே மேலே நடந்து செல்கிறார்கள்

ஏதுமற்றவர்கள் உள்ளவர்களைச் சார்ந்து நிற்கிறார்கள்


வானவில்லை அணிவிக்கத் தடுக்கப்பட்டு

அலைக்கழிய விதிக்கப்பட்டு

இருளின் கைகளின் பட்டு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு

நிலவொளிரும் இரவுகளை அனுபவிப்பதற்கு மாறாக

பயந்து பயந்து


உலக வானத்தில் பறக்கும் நூறு நூறு வங்காளிகளாக

சட்டை தைக்கும் பெண்கள் நடக்கிறார்கள்

நடந்து சென்று கொண்டேயிருக்கிறார்கள்.

( இக்கவிதைகள் ‘ உயிர்மை’ பதிப்பக வெளியீட்டு நூலில் இடம் பெற்றுள்ளன)

subrabharathi@gmail.com

புதன், 18 மே, 2011

புதன், 11 மே, 2011

அண்டை வீடு: பயண அனுபவம் பாதுகாப்பு

பத்து வருடங்களுக்கு முன்னால் தள்ளு ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த நான் சிகரெட் குடித்ததற்காக கீழே இறக்கி விடப்பட்டேன். அந்த ஏழ்மையான ரிக்ஷாக்காரர் என்னை கேவலமாகத்தான் திட்டினார். இன்று அதே டாக்கா வீதிகளில் பேண்ட், சர்ட் போட்டு நடக்கிறேன். மாறுதல்தான். இது கல்வி அல்லது காலம் தந்த முன்னேற்றம்" இப்படிச் சொல்பவர் முப்பத்தைந்து வயது பெண்மணி. பெண்களுக்கான கல்வி என்பது சற்றே முன்றனேற்றமடைந்தள்ளதுதான் வங்கதேசத்தில். " மதர்சா பள்ளிகளில் படிக்கும் வீடுகளற்ற அனாதைக் குழந்தைகளில் இருக்கும் பெண் குழந்தைகள் முகமும் பயப்பட வைக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் எப்படியிருக்குமோ"

இங்குள்ள பள்ளிகளை ஆங்கில வழிக்கல்விக் கூடங்களை, வங்காள மொழி கல்விக் கூடங்கள், மதரசா கல்விக் கூடங்கள் என்று பிரிக்கலாம். இவற்றில் மதரஸாவில் இஸ்லாமிய அடிப்படை விஷயங்களை அராபிக் மொழியில் கற்றுத் தருகிறார்கள். வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் குடும்பங்கள் இல்லாமல் போன இளம் வயதினர் அங்கு உள்ளனர்.. உள்நாட்டுப் போர்களால் கைவிடப்பட்டவர்கள் என பெரும்பாலும் அனாதைகளாய் மதரஸா பள்ளிகள் நிரம்பி வழிகின்றன. அரசு சலுகை பெற்ற பள்ளிகள், அரசாங்கப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற பிரிவுகள் இருகின்றன. வழக்கமாய் ஆங்கிலத்தை முதன்மைபடுத்தும் பள்ளியில் கட்டண விகிதம் அதிகமாகவே இருக்கிறது. மேல்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக அப்பள்ளிகள் இருக்கின்றன.

இலவசக்கல்வி 10 வயது வரை இருக்கிறது. சிலருக்கு மான்ய உதவியும் இருக்கின்றன. தெற்காசியாவில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் உள்ள நாடு. ஏழை வங்காளநாட்டில் தன்னார்வக் குழுக்கள் நடத்தும் குழந்தைத் தொழிலாளர்களுக்கான பள்ளிகள், மாலைநேரப் பள்ளிகளும் கணிசமான அளவு இயங்கி வருகின்றன. 1980களுக்கு ப் பிறகு ஆங்கிலக் கல்விக்கான மவுசு அதிகரித்து வருகிறது. 1992ல் தனியார் பல்கலைக் கழகங் களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டன.

34 அரசுப் பல்கலைக்கழகங்களும், 54 தனியார் பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன. டாக்காவில் பிரதான வீதிகளில் தென்படும் தனியார், அரசு பல்கலைக்கழகங்களின் கட்டிடங்கள் முனிசிபல் காம்ப்ளக்ஸ் போன்று நெருக்கமானவே அமைந்திருக்கின்றன. தனியார் பல்கலைக் கழகங்களில் 1 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 65% ஏதாவது வேலை என்று தேடிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் தனியார் வேலைதான். பின்னலாடை, ஜவுளித்துறை தொழிலை ஏற்றுக் கொள்கிறார்கள். 12% வேலையற்றவர்களாக இருக்கிறார்கள். பங்களாதேஷ் யுனிவர்சிட்டி ஆப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி, டாக்கா யுனிவர்சிட்டி,இண்டிபெண்டட் யுனிவர்சிட்டி, BRAC தன்னார்வக் குழு பல்கலைக்கழகம் போன்றவை புகழ் பெற்றவை.

" கேடட் காலேஜ்" என்றொரு அங்கம் கல்வித் துறையில் இருக்கிறது. இதில் ராணுவப் படிப்பு கட்டாயம் மாதிரி, பிரைவேட் ஆங்கிலப் பள்ளி என்ற ஆங்கிலத்தைப் பிரதானமாகக் கொண்ட பள்ளிகள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன( தமிழ்நாட்டில் 2010ல் அரசு கொண்டு வந்துள்ள மாதிரிப் பள்ளிகள் பற்றி ஞாபகம் வருகிறது. இந்த மாதிரிப் பள்ளிகள் பிற்பட்ட மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். வெவ்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளி வடிவமைக்கப்படும், தேர்ந்த கல்வி இதன் நோக்கமாம். ஆனால் ஆங்கில வழிக் கல்விதானாம். தமிழகத்துக் கல்வியாளர்கள் பலர் இதை எதிர்த்துள்ளனர்).

மதர்சா பள்ளிகளின் வீச்சு மக்கள் மத்தியில் ஊடுருவி உள்ளது. சாப்பாடு, தங்குமிடம் உட்பட் அனைத்தும் இலவசம். 12 வது கிரேடு "அலிம்"முடிந்து 3 வருட பட்டப்படிப்பு உள்ளது. தீவிரவாதிகளை உருவாக்கும் பள்ளிகளாய் மற்றவர்களால் இப்பள்ளிகள் கணிக்கப் படுகின்றன. எல்லாவற்றிலும் மதிப்பெண் பெற குருட்டு மனப்பாட முறையேஇருக்கிறது.. தேர்வும், தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இஸ்லாமியப் பள்ளிகளில் இஸ்லாமிய அரசியல் ஒரு முக்கிய பாடம்.அரசியல் பாடம் படிப்பவர்களில் பெண்கள் கணிசமாக இருக்கிறார்கள்.



"மூன்று சக்கர ரிக்ஷாவில் இரும்புக் கதவுள்தான் உட்கார்ந்து இளம் பெண்கள் போக வேண்டி இருக்கிறது. திருட்டு ப்பயம். வன்முறை கூட.. ரிக்க்ஷாக்களுக்கு இரும்புக் கதவுகளைப் போட்டிருக்கின்றனர். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கல்வி முறை இல்லைதான்" என்பது பெண்களின் அபிப்பிராயமாக இருக்கிறது

வியாழன், 5 மே, 2011

அண்டை வீடு : பயண அனுபவம்

" மல்லையா விமானப் பயணிகளைச் சரியாக கவனிக்க வேண்டுமென்றால் பீர்பாட்டிலோ, ஒயின் பாட்டிலோ கூடத்தரலாம். இப்படி விமானப் பயணத்தின்போது வெறும் சாண்ட்விச்சைத் தர வேண்டியதில்லை. ஒரு காபியோ டீயோ கூட இல்லாமல் 100 மில்லி தண்ணீர் மட்டுந்தானா, பக்கத்து இருக்கையில் இருந்த எல்.பி.எப்ஃ தொழிற்சங்கத்தைச் சார்ந்த பாலசுப்ரமணியன் அலுத்துக் கொண்டார். ‘கிங்பிஷரில்’ பயணத்தின்போது வெறும் சாண்ட்விச் உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் நடுவில் வைத்து வழங்கப்பட்டது. ஒரு வகை அலுப்புடன் பழைய தின்பண்டத்தைப் பார்ப்பது போல் பலர் பார்த்துக் கொண்டிருந்தனர்.



இப்போதெல்லாம் விமானப் பயணங்களில் வழங்கப்படும் உணவின் தரம் சாதாரணமாகிவிட்டது என்று பொதுவாகக் கருதுகிறார்கள்.( சிங்கப்பூர் - சென்னை பயணத்தில் ஒரு தரம் பல ஆண்டுகளுக்கு முன்னால் உணவின் தரம் திருப்தியாக இல்லை என்று சொன்னபோது அந்த விமானத்தில் பயணிகளாக இருந்தவர்களைச் சுட்டிக் காட்டினார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவுக்கு முஸ்தபா கடை பொருட்களுடனும், லுங்கி வேட்டியுடனும் திரும்பும் தொழிலாளர்களாகயிருந்தனர்.) விமானக் கட்டணம் குறைவாக இருப்பதன் காரணமாகவும், குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாகவும் உணவு தரப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது அல்லது உணவின் தரம் சாதாரணமாகிவிட்டது அல்லது காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொள் என்று விதி மாற்றப்பட்டது என்றார்கள். உணவு விநியோகம் செய்ய பணிப்பெண்கள் தேவை. அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தை மனதில் கொண்டு சம்பளக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி இது என்றார் அலோசியஸ். ஆள்குறைப்பு, சிக்கன நடவடிக்கை என்ற ரீதியில் உணவு தரப்படுவது குறைந்து விட்டது.








ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்களில் ‘பரிசுக் குலுக்கல்’ அமோகமாக நடக்கிறது. பயணிகளுக்குத் தரப்படும் அட்டையில் என்ணைச் சுரண்டினால் குறிப்பிட்ட எண்ணுக்கு ஏதாவது குறிப்பிட்ட தொகை செலுத்தி பரிசுப் பொருள் பெறலாம்.( இதேரீதியில் முன்பெல்லாம் கிராமங்களில் பலர் ஏமாந்து தில்லி கம்பெனிகள் பார்சலில் காகிதங்களையும், செங்கல்லையும் அனுப்புவதை பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்). சுரண்டுபவர்களுக்கு ஏகதேசம் ஏதாவது பரிசு கிடைத்து விடுகிறது. செலுத்தும் பணத்திற்கு உகந்தது என்ற அபிப்ராயம் வருமளவு பரிசுப் பொருள் கைக்கடிகாரம், காதணி என்று இருக்கிறது. சின்னதாய் ஏலம் என்ற அளவில் அட்டையையும் தருகிறார்கள். சூட்கேஸ், டிராவல் பேக், காமிரா, ரகசிய பதிவு செய்யும் பேனா என்று ஏலத்திற்கான பொருட்களையும் பட்டியலிட்டு, அழகாக அச்சிட்டுத் தருகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாக அட்டையில் எழுதிக் குறிப்பிட்டாலும் " வா, வந்து பொருளைப் பெற்றுக் கொள்" என்று விமானப் பணிப்பெண் வந்து அழகாய் சொல்லி விட்டுப் போகிறாள்.இன்னும் குறைத்துப் போட்டிருக்கலாம் என்ற அபிப்ராயமும் வந்து விடுகிறது.



எங்கள் குழுவில் மொத்தம் 15 பேர் இருந்தோம். டாக்கா உள்ளூர் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு ஆராய்ச்சி மையத்தைச் சார்ந்த பய்ஜ் உட்பட பலர் பெண் பிரதி இல்லாததைக் குறையாகச் சொன்னார்கள். எங்கள் குழுவை க் கவனித்த ஒரு தன்னார்வக் குழுத் தலைவர் சொன்னார்: " உங்கள் குழுவில் பெண்களே இல்லை. எங்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதிநிதிக் குழுக்களில் எங்கள் பிரதமர் பெண்மணி முதலிடத்தில் இருப்பார். எங்கள் குழுக்கள் இவ்வளவு சிறியதாக இருக்காது. 80-90 பேர் கொண்ட பெரிய குழுக்களாக இருக்கும். விமானத்தில் பாதியை இடம் பிடித்துக் கொள்வர். பெரிய குழு சாதாரணம். விரைவில் அது 100 என்பதை எட்டலாம்".

வங்கதேசத்திலிருந்து 40 லட்சம் பயணிகள் சென்றாண்டு வெளிநாடு சென்றிருக்கிறார்கள். இது சென்றாண்டை விட 80 சதவீதம் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் பெரிய சாதனை என்கிறார்கள். என்றாலும் உள்ளூர் வங்கிகள் விமான சேவைக்காக கடன் கொடுப்பதில் வெகுவாகத் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம், விமானக் கோளாறுகளும் விபத்துகளும், பெரிய முதலீடும். உள்ளூர் விமான சேவை அதிகரித்திருக்கிறது. இடம்பெயர்வு தொழிலாளர்கள் அதிகம் பயணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டு 10 வங்கிகள் ‘பீமன்’ என்ற விமான சேவை நிறுவனத்திற்கு 800கோடி ரூபாய் அடுத்த ஆண்டுகளில் புதிய ஜெட் விமானங்கள் வாங்கத் தந்துள்ளன. யுனைடெட் ஏர்வேஸ், ஜிஎம்ஜி போன்றவை இதுபோல் பெரும் பண உதவி பெற்றுள்ளனர். விமானங்களை இயக்குவது முழுக்க கணினி மயமாக்கப் பட்டிருக்கிறது. விமானஓட்டி கணினி மேற்பார்வையிடும் வேலை செய்கிறார். இவ்வாண்டின் மிக மோசமான மங்களூர் விபத்தில் ‘கறுப்புப் பெட்டி’ விமானஓட்டியின் நெடுநேர குறட்டைச் சப்தத்தைப் பதிவு செய்திருக்கிறது.



பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் புகைவண்டி போல ஒரு மணிநேரம் தாமதமாகக் கிளம்பியதால் டாக்காவில் நாங்கள் பிடிக்க வேண்டி இருந்த ஜெர் ஏர்வேஸ் விமானத்தைக் கோட்டை விட்டோம். இமிகிரேஷ்ன் செக்கிங் முடிந்து, போடிங் பாஸ் தந்துவிட்டாலும் நேரமாகிவிட்டது என்று காலையில் கிளம்பிக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த விமானம் மத்தியானம்தான். அதற்கு அபராதம் கட்ட வேண்டியிருந்தது. வெளியிலும் செல்ல முடியாது. செக்யூரிட்டியில் இருந்த ஒரு மலையாளி அதிகாரி முகஜாடையையும், மொழிப் பரிமாற்றத்தையும் புரிந்துகொண்டு நால்வரை வெளியேகொண்டு போய் சாப்பிட்டு விட்டு மற்றவர்களுக்கு பொட்டலங்கள் வாங்கி வர அனுமதி தந்ததால் வெளியே சென்றுவிட்டு வந்தோம். எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது என்ற சிக்கல் இருந்தது. சர்வதேச விமான நிலையம். உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கமாட்டார்கள் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் தோழமையுடன் குளிர்ந்த தரைப்பரப்பில் பொட்டலங்களை விரித்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். யாரும் கண்டு கொள்ளவில்லை. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண் அதைக் கூர்ந்து கவனித்தபடி கிண்டல் அடித்தார்: " சர்வதேச விமான நிலையம் இந்திய புகை வண்டி நிலையம் போலாகிவிட்டது. சர்வதேச விமான நிலையத்தை இந்தியர்கள் சர்வதேச புகைவண்டி நிலையம் ஆக்கிவிட்டார்கள்."

Subrabharathi@gmail.com