சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 26 டிசம்பர், 2009

கொஞ்சம் மண்ணும் ,சூரியனும்

தமிழ் திரைப்பட உலகத்தை அரசியல் வாரிசுகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.தெலுங்கு திரைப்பட உலகத்தில் திரைப்பட வாரிசுகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.நாகேஸ்வராவின் மகன் நாகார்ஜுனனுக்கு 50 வயதிற்கு மேலாகிறது இன்னும் ஏக்சன் ஹீரோவாக விளங்குகிறார். நாகார்ஜுனனின் மகன் நாக் சைத்தன்யா இன்றைய இளம் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர்.

(அமலா நாகார்ஜுனனின் மகன் இன்னும் 10 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகனாவார்)


சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் , தேர்தல்கள் திருப்தியாக இல்லை அவருக்கு.சமீபத்திய Greater Hyderabad தேர௎0��் உரிமை மறுக்கப்பட்ட வாழ்க்கையின் துயரங்களை அவர்கள் வெறுமனே கடலிடம் தான் முறையிட்டுக் கொள்கிறார்கள்.

வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஈரம் "சிறுகதை"

கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணர்ந்திருந்தான்.

செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத் திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும்: "முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"

அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்.

அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு சீக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.

அணை நிரம்பி விட்டது. வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளைத் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்ணீரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்க்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.

கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்ணீர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தடதடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அணைக்கட்டும், சுற்றியுள்ள நிலமும் சாயம் பூத்து விட்டன. குடிப்பதற்கு லாயக்கற்றுப் போய்விட்டபோது நாற்பது கி.மீ.க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்ணீர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்ணீரை ஏற்றி வரும் தண்ணீர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்ணீர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.

ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினோதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளைக் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் கொள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.

"பறக்கிற டைனோசர் இருக்கா?”

" இருந்திருக்கும். இல்லீன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா ". அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்ணீரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித் தண்ணீரின் சுவையை விட மினரல் கேன் தண்ணீரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின்போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சலடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கலவை அவனுக்குப் பிடித்திருந்தது. "நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.

தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது. இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.

வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைகளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிறபோது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஷ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம். ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.

புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும், நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது.

வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெட்ரோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.

மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும். தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கலாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் தட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்தபோது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.

* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளர் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் இருந்து வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.

சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி: "ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பித்தீர்கள்"

ரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிறபோது ராட்சத பூச்சியின் நகங்களைச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.

"படத்தில் ராட்சத மனிதர்களையெல்லாம் செத்த எலிகளைத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். "என்ன எதிர்பார்க்கிறீர்கள். எனது ராட்சதப் பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலாத்காரம் செய்ய வேண்டுமா" சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வசீகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஓர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் காட்சியளித்தது.

"நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம்." கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது. மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அது அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.

"சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே" சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்.

" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம்". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.

"தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும்." கலைந்து போவதில் சீரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொரக் கன்னத்தைத் தடவினாள். பூச்சி கிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது.

"சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே". இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியினைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். "பெர்லின் போயிருந்தபோது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிர்வாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.

வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத் திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.

- சுப்ரபாரதிமணியன் (subrabharathi@gmail.com)

புதன், 2 டிசம்பர், 2009

பிங்கி ஸ்மைல்

குறும்படங்கள் :2



பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது. இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.

உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..

பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.

இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.




subrabharathi@gmail.com