சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 29 மே, 2015

ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல்
வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்
                                                                                                   சுப்ரபாரதிமணியன்

                    தமிழ்ச்சூழலில் அறிவியல் நூல்கள் பெரும்பாலும் விளக்க நூல்களாகவே அமைந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.  அறிவியல் துறைகளில் பணிபுரிவோர் தங்களின் அனுபவங்களை பதிவு செய்வது குறைவு, அவர்களுக்கும் இலக்கியம், நுண்கலைகளுக்கும் தொடர்பும் இரசனையும் வெகு குறைவாகவே இருக்கிறது  . அவர்கள் மலிந்த இரசனை கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டும் நெடும் காலமாக இருந்து வருகிறது.

அறிவியல் விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வது வெகு குறைவே. அதிலும் இலக்கிய அக்கறை கொண்டவர்களே அதை சில சமயங்களில் செய்கிறார்கள். கலாமின் விஞ்ஞான உலக அனுபவங்கள் பல வடிவங்களில் சொல்லபட்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான எளிமையான கதைகள், வாழக்கை அனுபவங்கள் என்ற வகையில் சொல்லபட்டிருக்கின்றன.. வா.செ. குழந்தைசாமியின் சமீபத்திய நூல் வரை அவரின் அனுபவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நிறைய விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதும் நெல்லை சு.முத்து அபூர்வமாக     விஞ்ஞானக் கதைகள் எழுதிகிறார். திண்ணையில் கனடா ஜெயபாரதன், உயிர்மை இதழில் சமீப காலத்தில்  ராஜ் சிவாவும் அதிகமாய் தென்படுகிறார்கள். விஞ்ஞானக்கதைகள் வேறு. விஞ்ஞானிகளின் அனுபவங்களின் பதிவுகள் வேறு. மக்களிடமிருந்து பெற்றதை மக்களுக்கு ஏதேனும் வகையில் கொண்டு செல்ல விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் பயன்படுகின்றன.  அத்துறை அனுபவங்கள் அபூர்வமாகவே இலக்கியப் பதிவுகளாகீயிருக்கின்றன. முனைவர் வா.செ. குழந்தைசாமி அண்மையில் தன் வாழ்க்கை வரலாற்றை " ஆடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி " என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். இந்நாவலும் ஆனந்த மூர்த்தி தொடங்கி செல்வன் வரை பலரின் வரலாறகவும் விரிந்திருக்கிறது

அந்த வகையில் " இயற்பியல் விஞ்ஞானியான ப.க. பொன்னுசாமி              " நெடுஞ்சாலை விளக்குகள் " என்ற நாவலின் களம் தமிழுக்குப் புதிதே. விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடமே அவரது இந்நாவல் உலகம்.. .பொதுவான மருத்துவ உலகின் வெளிச்சம் பற்றி இறுதி அத்தியாயத்தில்  ஒரு உரை இதை உறுதிப்படுத்துகிறது.   " நீண்ட  நெடுஞ்சாலையில் பயணம் போறோம். பயணம் தொடங்கறப்ப சாலையை தூரத்துக்குப் பாத்தா விட்டுவிட்டு கம்பங்கள்ல விளக்குக மங்கலா ஒளியைக் காட்டிகிட்டு நிக்கும். கொஞ்ச தூரம் போயிப் பார்த்தாலும் அப்படித்தான் தெரியும். ஒரு விளக்குக் கம்பத்துக்கு அடியில் போனதும் நல்லா வெளிச்சமாயிருக்கும். அதைக்கடந்ததும் இருட்டும் வந்திரும். எந்த விளக்குக் கம்பத்துக்கும் கீழயும் வெளிச்சமாவும், அதைக் கடந்ததும் இருட்டாவும் இருக்கும்.  மருத்துவத் தொழில்லே வெளிச்சம் காடடச் சத்தியம் செஞ்சிட்டு  வந்திருக்கோம் "  நோய்களுக்கு மருத்துவம் பார்க்கிற மருத்துவர்கள் இல்லாமல், நோய்கள் வராமல் இருக்க ஆய்வு செய்யும் விஞ்ஞான மருத்துவர்களைப் பற்றி இந்நாவல் பேசுகிறது.    " ஆளுத்தான் குட்டை. மூளை நெட்டை " என்ற வகையைச் சார்ந்தவர்கள் இவர்கள்.
    எல்லாத் துறையைச் சார்ந்தவர்களைப் போல  இவர்களின் வாழக்கையும் பொறாமையும், துர்குணங்களும், பெருமிதங்களும், உழைப்பும் கொண்டதாக இருக்கிறது.  
ரங்கநாதன் என்ற விஞ்ஞானி தான் துறையின்  மூத்தவர் என்றத் தகுதியில் எல்லா துஸ்பிரயோகங்களையும் செய்கிறார். ஆனந்த மூர்த்தி உழைப்பால் உயர்ந்து நின்று முன்னுதரமான இருந்தாலும் பிரச்சினைகளாலும், தனிமையாலும் மன நோய்க்கு ஆட்பட்டு விடுகிறார். கதை கட்டி விட்டு வேடிக்கை பார்ர்கும் அர்ச்சுனன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.  இவர்களுக்குள் பெண் விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் என்ற அளவில் சிரமப்படுகிறார்கள்.துருப்புச் சீட்டுகள் போல ஆய்வுக்கூடத்து  மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.  மைதிலி என்ற பெண் விஞ்ஞானி இந்த குழப்பங்களிலும் தன்னை ஒரு வெடிகுண்டாகவே நகர்த்திக்கொள்கிறாள்.  ரங்கநாதனிடம் இருந்து ஆய்வேட்டிற்கு கையெழுத்து  வாங்குவது முதல்  பத்மநாபன்  என்பவனின் சுயரூபம் அறிந்து திருமணம் ஒன்றை நடக்காமல் இருக்கிற துணிச்சலான வேலையையும் செய்கிறாள். காதல் காமம் நட்பு இவர்களுக்கிடையில் பழகும் ஆண்களின் உலகில் சகஜமாக தன்னை கவுரவப்படுத்திக் கொண்டு  நடமாடுபவளாக இருக்கிறாள். .

அறிவியல்  சார்ந்த மந்தமான சூழல் அவர்களிடம் நிலவி அது தரும் சோர்வு  பல திசைகளில்  அவர்களைத் தள்ளுகிறது. புதிய உலகிற்குச் செல்ல வேண்டும் , இதுவரையில் பார்க்காத உலகத்தை, அனுபவங்களைப்
பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அறிவியல் உலகை விட்டு ஓட ஆசைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். மன்னாடிக்கு  வயதான அம்மாவைப் போய் பார்த்து விட்டு ஓய்வெடுப்பதும் அமெரிக்காவிறகுப் போவதும் இப்படியாகத்தான்  அமைகிறது.  செலவன் போதைப் பொருட்களீன் உபயோகிப்பில் தன்னை இழந்து மாயத்துக் கொள்கிறான். தமிழ்ப்பற்று, இந்தி எதிர்ப்பு, தலைவணங்காமைக்  என்பவையே வேறு உலகங்களுக்குள் துரத்துகிறது. ஆய்வும் வேண்டாம் ஆய்வு முடிவும் வேண்டாம் என்று நொந்து போகிறார்கள்..
அறிவியலாளர்களும் தங்களீன் குரூர முகங்களோடே வாழ்கிறார்கள். பிறரின் ஆய்வுக் கட்டுரையைப் படித்து விட்டு தான் தங்களின் முந்தைய ஆய்வு அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர்கள் கட்டுரையைத் தயாரித்து  அவசரமாகப் பிரசுரித்ததோடு தன்னுடைய கண்டு பிடிப்பைத் தவறென்றும் சொல்லித் தங்களின் கண்டு பிடிப்பிற்கு முன்னுரிமை பெறும்  கேவலமான முயற்சிகளும் நடக்கின்றன.கூட்டு ஆராய்ச்சியில் பெயர்களை விட்டு விடுகிறார்கள்." கடல் வத்திப் போகாது. உங்க மூளையிலே இன்னும் எத்தனையோ புதுமைக உதிக்கும்." என்று ஆறுதலை மட்டும் தந்து விட்டுப் போகிறார்கள்.சாதிக்காரங்களுக்குச் செய்யும் சலுகைகளும் உண்டு                                   " என்னெல்லாம் செய்யக்கூடாதுங்கறதுதான் இங்க செய்தி.  அப்படிச் செய்யக்கூடாத ஒண்ண நடிப்புல செஞ்சு காட்டி அதை நான் செய்யவே மாட்டேன்னு உறுதி சொல்கிற " வர்களாயும் இருக்கிறார்கள்.கரையான்களை இந்த வீட்டில் ஒழிக்க முடியாது  என்று ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.ஆரோக்கியமான விவாதங்கள் என்று வருகிற போது " இது அரசியல் கூட்டங்கள் அல்ல " என்று ஒதுக்கப்படும் சூழல்களும் இருக்கின்றன.

அறிவியல் உலகம் சார்ந்த பலரின் வரலாறாக மட்டுமில்லாமல்  அறிவியல் கல்வி வரலாறாகவும் இந்நாவல் நீண்டிருக்கிறது. அறிவுலக அரசியலின் அம்சங்களும் காதல் உனர்வுகளும் இயைந்து கிடக்கின்றன.
.கரையான்களை இந்த வீட்டில் ஒழிக்க முடியாது  என்று ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.ஆரோக்கியமான விவாதங்கள் என்று வருகிற போது " இது அரசியல் கூட்டங்கள் அல்ல " என்று ஒதுக்கப்படும் சூழல்களும் இருக்கின்றன.

இந்நாவலின் முதல் அத்தியாயத்தில் ஒரு ஆங்கில நாவல் பற்றிய அபிப்பிராயத்தில் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது :   " நாவல் நாவலா இருக்கு " அப்படித்தான் எந்த மிகை உணர்வும் இன்றி இயல்பான கிராமத்து ஆற்று ஒழுக்கோடு இந்நாவல் செல்கிறது. அறிவியல் உலகம் சார்ந்த  வக்கிரங்கள், குரூரங்களை காட்டும் நிகழ்வுகளும் கூட  மிகை உணர்ச்சியோ, அதீத வகையிலோ சொல்லப்படாமல் இருப்பதில் ஆசிரியரின் எழுத்து நோக்கம் தென்படுகிறது.

அறிவியல் உலகம் சார்ந்தவர்கள்   ஆய்வுக்கூடத்தின் உலகிற்குள்ளேயே முடங்கிப் போகிறார்கள். அவர்களை ஆட்டுவிக்கும் தனிமனித உணர்வுகளின் கூட்டிசைவாய் சம்பவங்கள் அமைந்து விடுகின்றன. வெளி உலகமோ, அரசியல் தாக்கமோ, கலாச்சார நடவடிக்கைகளோ அவர்களை பாதிக்காமல் இருப்பதாலேயே அவர்கள் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலப் பின்னணியும்,        திராவிட அரசியல் சார்ந்த அம்சங்களும் இந்நாவலில் இழையோடி இருப்பது அறிவியலாளர்களுக்குள் இருக்கும் தமிழ் அரசியல், மொழி சார்ந்த அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறது.  
சென்னை, மதுரைப்பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகப் பணிபுரிந்த  அறிவியல் அறிஞராக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும்              ப.க. பொன்னுசாமி அவர்கள் அந்த அறிவியல் உலக அனுபவங்களை  நாவலின் மூலம் பதிவாக்கியிருக்கிறார்.  இவரின் முந்தின நாவலான " படுகளம் " கொங்கு மனிதர்களின் வாழ்வைச் சொன்னது. இது அறிவியல் மனிதர்களின்  போக்கைச் சொல்வது. அறிவியல் அம்சங்கள் மாறக்கூடியவை ஆனால் இலக்கியம் காட்டும் அறம் என்றைக்குமானதாக வெளிச்சம் காட்டும் எனபதை உள்ளுணர்வாக்கியிருக்கிறார். அறிவியல்  சார்ந்த உலகத்தை முகக்கண்ணாடியாய் வெளிப்படுத்தும் முக்கியப் பதிவாய் இந்நாவல் அமைந்திருக்கிறது

   ( நெடுஞ்சாலை விளக்குகள் - ப. க. பொன்னுசாமியின் நாவல் , 350 பக்கங்கள், ரூ 280 என் சி பி எச் வெளியீடு , சென்னை )

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com



புதன், 27 மே, 2015

சிறுகதை

                      நிர்வாணி
                         
                            சுப்ரபாரதிமணியன்

  அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் குறுகச் செய்த்து. வேர்த்து விறுவிறுத்திருந்த பனியன் சட்டையை கழற்றியிருந்தான். இடுப்பு உள்ளாடையைக் கழற்ற எத்தனித்தபோது அவன் லுங்கியின் நுனியை  வாயில் கவ்வியிருந்தான். ஆனால் அது ஏனோ நழுவி அவனை நிர்வாணமாக்கியிருந்தது.  ஜெயபால் குனிந்து லுங்கியை எடுத்த போது உடம்பில் ஏதோ பாரத்தைக் கட்டி விட்டது போல்  உடம்பு கனத்தது. உடம்பு இன்னும் ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் வந்து விட்டது. பயம் எந்த வித சகுன்ங்களும் குறியீடுகளும் இன்றி  உடம்பினுள் புகுந்து விட்ட்து போலிருந்தது
     சந்திராவுக்கும் உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதைச் சொல்லியிருந்தாள். காலை அகட்டி வெச்சு படுக்கறப்போ உலகமே பாரமா எறங்கற மாதிரி இருக்கய்யா என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவளின் புட்டங்கள் வெகுவாக விரிந்த செம்பருத்திப் பூ போல பருத்து விட்டன.
 அவள் கொஞ்ச நாளாய் செம்பருத்திப்ப் பூவை தேடிப் பிடித்து வீடியகாலையில் சாப்பிடுபவளாயிருந்தாள். கொலஸ்ட்ரால்  என்று மருத்துவ பரிசோதனை ரிபோர்ட்கள் தொடர்ச்சியாய் சொல்லிக் கொண்டே இருந்தன. முத்துசாமி டாக்டர் வாய் விட்டு ஏதேதோ சொல்லி விட்ட மாதிரிதான் அதைச் சொன்னார்: செம்பருத்தி ந்ல்லா கரச்சிரும் ஹைபிரிட் வேண்டாம். என்றார்.. ஹைபிட்டைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருந்தது. அவ்வளவு சிவப்பாய் இல்லை. சிவப்பில் ஒரு பழுப்பு நிறம். மகரந்தங்கள் ஏனோ ஒடிசலாய் நிற்கும்.. அதை சுலபமாக நிராகரிக்க முடியவில்லை. நல்ல   செம்பருத்திப்பூவை இளசாய் சாப்பிடுவது கனவாய்  மாறி விட்டிருந்தது. வீதியில் அவ்வப்போது வந்து போகும் தள்ளி வண்டிக்காரனிடம் செம்பருத்தி  நாற்று ஏதாவது  தென்படுகிறதா என்று அவள் கண்கள் ஜல்லடையாய் அலைந்தன.  செம்பருத்தி தவிர எல்லாம் கிடைப்பதாக் இருந்தது.  செக்யூரிட்டி உத்யோகம் பார்க்கும்  ஜேகப்  வால்பாறையில் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.அவன் செம்பருத்தி குச்சியைக் கொண்டு வந்து தருவதற்கு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அதை வாசலில் வைத்த போது துளிர் விடவில்லை. அந்த சமயத்தின் போது மஞ்சூருக்கு வேறு போக வேண்டியிருந்த்து.  அங்கு எல்லாம் பனியில் குளித்திருந்தன. உடமபை சுலபமாக நடுங்க வைக்கும் குளிர்... வாயில் தண்ணீர் விட்டுக் கொண்டால் கடுகடு என்றிருந்தது.பல்லில் படும் போது ஒரு வித வலி கிளம்பியது.வயசனால்தான் பல்லுக்கு இந்த கூச்சமும், வலியும் வரும் என்று விஜயா சொன்னாள். அவ்வளவு வயசாகி விட்டதா என்ன.. நாற்பதற்கு மேல் கடந்து விடுவது பெரிய வயசா என்ன..மஞ்சூரில் செம்பருத்தி பூத்துக் கிடப்பதாய் சொன்னார்கள். பனியில் படுத்துக் கிடப்பதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று  சிரிப்பினூடே சொன்னாள். நீ சொன்னா அந்த நாத்து எந்திரிக்காதா..
 “ நான் சொல்லி எவன் எந்திரிக்கப் போறான் . இது எந்திரிக்கறதுக்கு வாசலில் நட்டது வீணாகாது என்று நம்பினாள்.  ஊருக்குத்திரும்பியபோது அது மண்ணோடு படுத்துக் கிடந்து சோர்வைக் காட்டியது. மண்ணு வேறெ மாத்திப் பாரேன் என்று கவுசல்யா சொல்லி விட்டாள். மறுபடியும் செம்பருத்தியைத் தேடுவது சிரம்மாகவே இருந்த்து அவளுக்கு. “ வேரோட புடுங்கி வெச்ச மாதிரி செய்யணும் . அப்பதா அதுக   நெலைக்கும்  சிவதாசன் வீட்டில் இருப்பதாக யாரோ சொன்னார்கள், நெடு நெடு என்று வளர்ந்து கிடந்தது சிவதாசனைப் போலவே..அதுவும் விடிய காலையில் தான்  சாப்பிட வேண்டும் இரண்டு நாள் பனி, இருட்டு என்று பார்க்காமல் போய் நறுக்கி வந்து விட்டாள். ஒரு நாள் சற்றே இருட்டில் நடந்து கொண்டிருக்கும் போது நாடார் மளிகைக் கடை பக்கம்  கேட்ட குரல்தான் அவளைத் தடுமாறச் செய்து விட்ட்து.வெடிய காலையிலே இவ மீஞ்சியிலே முழிக்க வேண்டியிருக்கே”  அதற்கப்புறம் சிவதாசன் வீட்டுப்பக்கம் போக வில்லை. இரவில் அந்தப் பக்கம் நடமாடி செம்பருத்தியைப் பறித்து வரலாம் என்பது சவுகரியமானதாக் இல்லை. வெறும் வயிற்றில் தின்னும் போது வழுவழுப்பாக குமட்டிக் கொண்டு வந்தது.  கொஞ்ச நாளில் பழகிப் போய் விடும் போல இருந்தது. ஆனால் கைக்கு எட்டாதமாதிரி நின்று விட்டது.  இடைவெளி விட்டு சிவதாசன் வீட்டுப் பக்கம் போயிருந்த போது ஒரு முறை  ஏதோ களேபரம் மாதிரி தெரிந்த்து.  அவரின் மாமனார் அவருடன் தான் இருந்து கொண்டிருந்தா. அவருக்கும் எழுபது வயதிற்கு மேலாகி விட்ட்து.  அவரது நடத்தையில்  மாமியாருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந்த வயசிலே அந்தாளு என்ன பண்றார் இப்பிடி என்று எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.  அவருக்கு எழுபதிற்கு மேலாகி விட்டது. சின்ன வயதில் அப்படி இப்படி என்றுதான்  இருந்திருக்கிறார்.  அந்த ஞாபகத்திலேயே மாமியார் அவர் இந்த் வயதில் முடங்கிக் கிடக்கிற போதும் கூட சந்தேகத்தால் ஏதோ பேசிக் கொண்டே இருக்கிறார்.  மனநல மருத்துவர்களிடம் கூட்டிக் கொண்டு போகலாம் என்றால் “ நம்ம மரியாதை என்ன ஆகிறதுஎன்று சிவதாசன் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்த சமயத்தில் அந்தப் பக்கம் நடமாடுவது உகந்ததாகத் தோன்றவில்லை அவளுக்கு.        என்னையும் சேத்து வெச்சு பேசிட்டா என்ன பண்றது.. “  அதை ஜெயபாலிடமும் சொல்லியிருதாள்.நீ அந்தப் பக்கம் நடமாடியதுதா காரணமோ என்னமோ... சிவதாசன் மாமியார் கண்லே பட்டுட்டேயோ என்னவோ. “ கொலஸ்ட்ரால் பற்றி அதற்கப்புறம் மனதில் கொள்ளவில்லை. தலை போகிற போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்.
என்ன பிழைப்பு இது. எத்தனை நாளைக்கு இப்படி அல்லாடிக் கொண்டு என்பது சந்திரா  வாயில் இருந்து வரும் சுலோகம். அவனின் நிவாணத்தைக்குலைத்தது அது. அவன் கீழே நழுவிய லுங்கியை  எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான்.  சட்டையை வியர்வை  ஆறிப்போன பின்பு மாட்டிக் கொள்ளலாமா என்ற நினைப்பு வந்த்து.  ஆனால் அதை எடுத்து பக்கம் கொண்டு வந்த போது வீசிய வாசம் ஒரு விதக் குமட்டலைக் கொண்டு வந்து விடும் போலிருந்தது. இந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டால் இப்படி குமட்டலாகத்தான் இருக்கிறது அதற்காக வீட்டை விட்டு ஓடிப் போக முடியாது. பனியன் கம்பனியில் வேலை குறைந்து போய் விட்டபின்பு பனியன் கம்பனியும் துரத்து விடுகிறது. நாரசமாய் எல்லாத் தெருக்களிலும் ஓடும் ஜெனரேட்டர்களின் சப்தம்  அவனை வெகு தூரம்  துரத்தி விடும் என்பது திரும்பத் திரும்ப மனதில் வந்தது.எங்காவது போவதற்கும் பணம் வேண்டும். எதேச்சையாய்  நீண்ட அவனின் கைகள் பேண்ட் பாக்கெட்டை  தொட்டுப் பார்த்துக் கொண்டன. அதுவும் பெரிதாக காசில்லாமல் நிர்வாணமாக்த்தான் கிடப்பதாகச் சொல்லிக் கொண்டான். சனிக்கிழமையன்று தென்படும் பண நோட்டுகள்  அவனுக்கு புது ஆடை உடுத்தி விட்ட சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்திருகின்றது.
       .

 அவன் பேண்ட் பாக்கெட்டில்  சாக்லெட்டுகள் நாலைந்து  தென்பட்டன. இது போது. யாராவது அகப்பட்டால் போதும். அப்புறம் வேறு எதையாவது வாங்கிக் கொள்ளலாம். அந்த மெட்ரிக்குலேசன் பள்ளி முகப்பு கேட் பார்வையிலிருது தப்பியிருந்தது. வேப்பமரத்தடியில் கிடந்த கல்லின் மீது உட்கார்ந்திருந்தான். அதன் சொரசொரப்பு குலைந்து போய் மொழுக்மொழுக்கென்றிருந்தது. நாலு பேருந்துகளும் போய் விட்டிருந்தன. இனி ஒற்றை ஒற்றையாய் குழந்தைகளை அம்மாக்கள் அழைத்துச் செல்வது நடக்கும்.  சில அப்பாக்களும் வருவார்கள். தாமதமாக வரும் அம்மாக்களும் இருப்பார்கள்.அப்படி ஏதாவது தாமதாமாய் வரும் அம்மாவிற்காக அவன் காத்திருந்தான். நீல நிற வானத்தின் குறுக்கே பாய்ந்த ஏதோ பறவையொன்றை விமானமாக எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான்.
     கையை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா என்றுதான் சந்திராவும் கேட்டிருக்கிறாள். போன மாதம் ஒரு சமையல் கேஸ் சிலிண்டரை எடுத்து வந்திருந்தான்.      “ அந்த வூடு தொறந்து கெடந்தது. நான் முன் ரூமைக்கடந்து உள்ள போனதே யாரும் பாக்கலே. ரெண்டாவது ரூம்லே டிவிக்கு நெருக்கமா ஒரு வயசான அம்மா உட்காந்திட்டிருந்திச்சு. நான் நடக்கறது தெரியாமெ பொம்பளெ நடை நடந்து அடுத்த ரூமுக்கு போனன்.  சிலிண்டர் ஒண்ணு இருந்துச்சு. வலது  கையாலெ தூக்குனா கனம் தெரிஞ்சுது.  தம் கட்டி தோள்லே வச்சேன். என்னமோ மூச்சிரைப்பு வந்துட்ட மாதிரி இருந்துச்சு. சத்தம் வரக்கூடாதுன்னு மறுபடியும் பொம்பளெ நடை. வயசான அம்மா டிவியெப் பாத்துட்டே இருக்காங்க. டிவியிலெ யாரோ ஒரு பொம்பளெ கண்ணா பிண்ணான்னு அழுதிட்டு இருந்துச்சு.  வாசலுக்கு வந்தப்பறம் யாரும் தட்டுப்படலே. விறுவிறுன்னூ நடந்தேன். நீயும் அந்த நேரத்திலே அந்த சீரியல்தா பாத்திட்டிருந்தியா “. ஜெயபால் வாய் விட்டுச் சிரித்தபடிக் கேட்டான்..
     மதிய நேரத்தில் இப்படி புகுவது சுலபமாகத்தான் இருந்தது அவனுக்கு. அப்படி ராயபுரத்தில் ஒரு வீட்டில் நுழைந்து வெளிவந்த போது  ஒரு மிக்சி கிடைத்தது.வீட்டில் இலவச மிக்சி  இருப்பது  ஞாபகம் வந்து சிக்கந்தர் கடை பக்கம் கொண்டு போய் விட்டான். அவன் அகப்பட்டுக் கொண்டபோது போலீஸ்காரன் வைத்த அறையில் தலை சுற்றுவது போலிருந்த்து.ஒரு வகைப் பூச்சிகள் கண்களுக்குள் மினுங்கின. போலீஸ்ஸ்டேசனுக்கு சந்திரா வந்த போது  அவன் மயங்கி நிலையில் தான் இருந்தான்
.இதுக்கு இவ்வளவு அடியாய்யா..” 
எவன் மேலையோ இருக்கற கோபமோ “
“ செரி .. இதை விடப் பெரிசா பண்ணவேண்டியது தானா... அந்த அளவு அடி...அவள் சொல்வது சுலபமாகத்தான் இருக்கும்.எப்பவாவது  ஒரு முறை சொல்லுவாள். ஆனால் மனதில்  பதிகிற மாதிரி இருக்கும். இந்த தரம் அப்படித்தான் ஏதோ சொன்னது  அமனதில் பதிந்து விட்டது போல் இருந்தது. அது அந்தப் பள்ளி வாசலைப்பார்த்து அவனை உட்காரவைத்தது.இப்பிடியே எத்தனை நாளைக்குதாய்யா பொழப்பை ஓட்டறது. பெரிசா ஏதாச்சு பாத்தாதா உட்காந்தாவது சாப்பட முடியும் போல  “
      பள்ளி வாசலில் பார்வையில் நிலைத்து விட்டது. பிரமாண்டமான வளைவாய் முகப்பு நின்றிருந்தது  சட்டைப்பாக்கெட்டில் ஏதோ சொரசொரத்தது. சிறு துண்டுத்தாள். நேற்று சந்திரா கையில் வைத்திருந்த வாரப்பத்திரிக்கை இணைப்பினை  வாங்கிப் பார்த்திருந்தான். ராசி பலன் பகுதி அது. ஜோதிட ரத்னா வித்யாதரனின் ராசி பலன்கள் அவனுக்கு ஓரளவு பலிப்பதை அவன் கணித்திருக்கிறான்.இந்த வாரம் சுக்கிரன் ஏழில் நுழைவதால் அனுகூலம் இருக்கும்.  புது தெம்பு பிறக்கும். தடைபட்ட வேலைகளை  உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை  கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். சூரியன் செவ்வாய் போக்கு சரியில்லாத்தால் வீட்டில் விவாதம் அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.  12,13 நாட்களில் அதிக உணர்ச்சிப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரம் சுலபமாக நடக்கும் உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத்  தாண்டி முன்னேறுவீர்கள். தாளை கசக்கி எறிந்தான்..12, 13 நாட்கள் என்றால் அந்த வாரத்து தேதியா. எல்லாம் குழப்பமாக இருந்தது.

 .முகப்பில் இருந்து மறைந்து போன பெண்  நவிருசான உடையில் இருப்பதாகப்பட்டது..இந்த வயது அம்மாக்கள்  எவ்வளவு நேர்த்தியாக உடை உடுத்துகிறார்கள். கொஞ்சம் புருவ செதுக்கல், கொஞ்சம் முக பிளிச்சிங் என்று செய்து எவ்வளவு சாதாரண முகத்தையும்  பளிச்சென்று வைத்துக்கொள்கிறார்கள். சாதாரண முகங்களுக்கும் கூட  பளிச்  தன்மை வந்து விடுகிறது  என்பது பற்றி அவனுக்கு ஆச்சர்யம் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் ஆடையில் எவ்வளவு கவனமாய் இருகிறார்கள். தோள்வரைக்கும் கைகள் வெறுமையாய் அழகாய் தெரிகின்றன. அந்தப் பளிச்சிடலில்    அழகு கூடி வந்து விடுகிறது. சந்திராவிற்கு இதெல்லாம் ஒத்து வரவில்லை என்பது போல் ஒதுங்கிக் கொள்கிறாள். புசுபுசு என்று புருவ மயிர்கள் அடர்ந்து விட்டால் புருவங்களைச் செதுக்கப் போவாள்.அதுவும் திருமணம், முக்கிய உறவினர் வீட்டு விசேசம் என்று வருகிற போதுதான்.  அவ்வளவுதான். இன்று ஒரு பையன் அகப்பட்டால் போதும், பெண் பிள்ளை என்றால் சிரமம் தான். அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த  சாக்கெட்டுகள்  மணம் பரப்பிக் கொண்டிருப்பதாய் பட்டது அவனுக்கு.

வாசலிலிருது கிளம்பிய பேருந்தில் நாலைந்து பேர்கள்தான் இருந்தனர்.  ஆசிரியைகளாக இருக்கக் கூடும். பேருந்தின் இருக்கைகள் ஓரத்து ஜன்னல் கம்பிகளால் அடைபட்டிருந்தது. ஜன்னல் கம்பிகளுக்குள் தெரிந்த முகங்களின் துணுக்குகள்  சோர்வடைந்து கம்பிகளுக்குள் அடைபடத்தான் லாயக்கு என்பது போல் தெரிந்தன.

    எல்லாவற்றுக்கும் அந்தப் புகை வண்டி நிலையம் சவுகரியமாகத்தான்  இருப்பதாய் தோன்றியது. சாய்ந்து கொள்ள சவுகரியமான இரும்பு நாற்காலிகள்.  பயணிகள் காத்திருக்கும் அறை வெகு சுத்தமாக இருந்தது.  ஜன்னலில் தெரிந்த வானம் எந்தப் பறவையோ, விமானமோ அற்று இருந்தது. அப்போதுதான் துடைத்தெடுத்த மாதிரி  ஒருவகை டெட்டால் வாசம் கிளம்பியிருந்தது. புகை வண்டி நிலையங்களுக்கென்றே  அமைக்கப்பட்ட பெரிய வட்ட வடிவிலான மின் விசிறிகள் குறைந்த சப்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தன. விபரீதத்தை உணராமலே வந்து உட்கார்ந்திருக்கிறோம் என்று பட்டது.  சிக்குபுக்கு ரயிலே என்று சொல்லிக் கொண்டான்.
     அவனுக்கு புகை வண்டிப் பயணங்கள் பிடிக்கும்.  கொல்லம் என்ற ஊர் பெயர் ஞாபகம் வந்தது.அதுவும் கேரளாதானே. செங்கோட்டையிலிருந்து கொல்லம் போகும் புகை வண்டிப் பாதை அவனுக்குப் பிடிக்கும். கோட்டை வாசலிலிருந்து ஆரியங்காவுக்கு போகும் பாதையில்  மலைக்குகை இருக்கும். குகையினுள் செல்லும் போது கும்மிருட்டாகவும், குளிராகவும் இருக்கும்.  இருக்கைகளில்  இருப்போர் ஓ வென்று கூச்சலிடுவது எதிரொலித்து பயமுண்டாக்கியது. ஆரியங்காவுதான் சந்திராவுக்கு சொந்த ஊர். கோட்டை வாசல் மலைக்குகையில் விழும் நீருற்று அழகாக இருக்கும். குகையில் கொஞ்ச தூரத்திற்கு வெளிச்சம் தெரியும்.  அப்புறம் இருட்டுதான். மலைக்குகை வேலையில் சந்திராவின் தாத்தா ஒருவர் இருந்து இறந்திருக்கிறார்.புளியரை, தெற்குமேடு, ஆரியங்காவு ஊர்களிலிருந்து வேலைக்குப் போய் குகை வேலையில் பலர் இறந்திருகிறார்கள்.அதே பக்கத்தில் தன்மலைக்கு போயிருந்த போது  அந்த புகை வண்டிப்பாலம்  அவனை பிரமிக்க வைத்தது. பத்து பதினைந்து கண்கள் கொண்ட பாலம் . புகை வண்டி அதில் ஊர்ந்து செல்வதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  புகை வண்டியில் உட்கார்ந்து கீழே பார்த்தால் தலை சுற்றி விடும். இப்பாதையில் ரயில் செல்லும் போது எல்லா பெட்டிகளையும்  முன்னால் இருக்கும் இன்சின் டிரைவரோ. கடைசிப் பெட்டியில் இருக்கும் கார்டோ பார்க்க முடியும். “ ஒரு நாளைக்கு  அந்த என்சின் டிரைவராகவோ, இல்லே கார்டகவோ இருக்க ஆசை சந்திரா..என்ற் சொல்லியிருக்கிறான். “ பனியன் கம்பனி டெயிலராத்தா இருப்பே எப்பவும் “
        இந்தப் புகை வண்டிப் பாதியிலும் குகைகள் இருக்கலாம். நீர்வீழ்ச்சிகள் இருக்கலாம் இதெல்லாம் இல்லாத கேரளம் இருக்குமா. இது எந்த ஊர்....
 பையன் முதுகில் பையுடன் பள்ளி கேட்டிற்கு ஓரமாய் வந்தபோது தாமதிக்காதவன் போல் ஜெயபால் விறுவென்று நடந்தான். பையன் பார்வையை தரையிலிருந்து மேலெழும்பிய போது  “ அம்மாதா கூட்டிகிட்டு வர்ரச் சொல்லுச்சு “ என்றான். “ செரி “ என்றான் பையன்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பேருந்தில் இடம் கிடைத்தது ஆறுதலாக இருந்தது  ஜெயபாலுக்கு. . பையன் அவன் மடியில் உடனே படுத்துக்கொண்டான். சாக்லேட் வேணுமா என்று கேட்க நினைத்தான்.  அத்ற்குள் அந்தப்பையன் தூங்கிவிட்டான். நடத்துனர் அவன் அருகில் வந்தபோது  ஏதோ எழுச்சி கொண்டவன் போல் இரயில்வே ஸ்டேசன்  என்றான்


  பலரின் பார்வை பையனின் பள்ளிச் சீருடை மேல் இருந்ததைக் கவனித்தான். .பேருந்தை விட்டு இறங்கும் போது பையனின் சாப்ப்பாடுப் பையை திட்டமிட்டு வைத்து விட்டு வந்தது தவறு என்பது போல் பட்டது. வேறு எங்காவது நழுவ விட்டிருக்கலாம்.  புத்தகப்பையை   தவற விட இடம் பார்த்துக் கொண்டிருந்தான்.  மாலை நேரம் என்பதால் புகை வண்டி நிலையத்தில் வரிசை நீண்டிருந்தது. பாலக்காட்டிற்கு டிக்கட் எடுத்தான். பையன் என்ன வகுப்பு படிக்கிறவன். புத்தகப் பையைத்திறந்து பார்த்து  புத்தகங்களைப் புரட்டினால் கண்டு கொள்ளாலாம். புத்தக அடையாளத்தை  மறைப்பது  நல்லது என்று பட்டது. இரண்டாவது மூன்றாவது இருக்குமா. வீட்டில் குழந்தையென்று ஏதாவது இருந்தால் சரியாக அடையாளம் கண்டு கொள்ளலாமோ என்னமோ.
பாலக்காட்டு புகை வண்டி நிலையத்தில்  இறங்கி  பையனிடன் பால் டம்ளரை  நீட்டியபோது  “ ஹார்லிக்ஸ்தானே வேணும்.அதுதா சாயங்காலம் குடிக்கறது என்றான். .
 “ ரெடியாகுலே அதுதா.  “  டம்பளரை வாங்கிக் கொண்ட பையன் அம்மாவும் டிரெயினுக்கு வரும் இல்லே “ என்றான்.  “ வரும்
“ அப்போ அம்மா வந்தப்புறம் குடிக்கறேன்
“ வரும்.. குடிச்சிடு  “
“ அம்மா வந்தாதா குடிப்பேன். “  எதிர் வீதி நீளமாய் சென்று மறைந்தது  ஆட்டோக்கள் பரபரத்து ஓடிக் கொண்டிருந்தன. இருட்டு நடமாடிக் கொண்டிருந்த மனிதர்களின் நடமாட்டத்தை முகமற்றதாக்கியிருந்தது.மெல்ல கிளம்பியிருந்த வெளிச்சம் புது அழகை கொண்டு வந்திருந்த்து.  புது ஆடை உடுத்திக் கொண்டு நடமாடும் சூழல் போல் இருந்தது.அந்த பாதை புதிர்கள் கொண்ட்தாக் இருக்கும் என்பதைத் தீர்க்கமாக நினைத்தான்.ராசி பலனில் உள்ள புதிர்வழிகள் அரைகுறையாய் நிற்பது போலிருந்தது. வானத்தில் தெரிய  ஆரம்பிக்கும் நட்சத்திரங்கள்  அவனின் இனி வரும் புதிர் வழியை தீர்க்க யோசனை சொல்லும் என்று நம்ப ஆர்மபித்தான்.
 ஜெயபால் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.கண்ணாடி முகமூடி முகத்தில் மாட்டப்பட்டிருந்த்து. விலாங்கு மீன் போல் அவன் விரைந்து  போய்க்கொண்டிருந்தான். மண்ணாலி, உரு என்ற வார்த்தைகள் அவனின் காதுகளில் விழுகின்றன்.  அவையெல்லம் பெண்களின் பெயரா. ஊர் பெயரா.
எதிரில் மூழ்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் கழுத்தில் சங்கு மாலை பளிச்சென்றிருந்தது. “ எனக்கு போத்தபாசி  கெடச்சது. கீரிச்சோவி, பீச்சோவி, குழிச்சங்கு எல்லாத்தையும் மாலையாக் கட்டி கழுத்திலே போட்டிருக்கேன் பாரேன்.துடுப்புப் படகு அருகில் கடந்து சென்றது. கூர்மையாக ஏதோ தெரிகிறது . பவளப்பாறையாக இருக்குமோ.  மணல் திட்டோ என்னவோ..பக்கத்தில் நீந்திக் கொண்டிருக்கிறவள் பெண்ணா. உடம்பில் வயிற்றுப் பகுதி மேடாகத்தெரிந்தது. கர்ப்பிணியாக இருப்பாளோ.  கர்ப்பிணிகள் பாசி எடுக்க வரமாட்டார்களே. சந்திராவும் கர்ப்பிணி ஆகிற கனவினை எப்போதோ விட்டு விட்டாள் என்று சொல்லியிருக்கிறாள். இது சந்திராவின் உடம்பா.  புட்டங்கள் கடல் சங்கு போல் விரிந்து உள் அறைகளைக் கொண்ட்தாக இருக்கும் அபூர்வம் அதில் தென்பட்ட்து. அந்தப் பெண்னின் வலது கையில் ஆள்காட்டி விரலைக் காணோம். மீன்கள் கடித்து விரல் இல்லாமல் போயிருக்குமா.  இன்னொரு கையில் துணிகள் சுத்தி ரப்பர் போடப்பட்டிருந்தது. அவனுக்கு மூச்சு திணருவது போலிருந்த்து. பாசி பாசி என்று கத்தியபடி நீரில் முழ்கிக் கொண்டிருந்தான். உடம்பை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

 எந்தத் திட்டமும் இல்லாமல் இப்படி வந்து சேர்ந்து விட்டோமே என்ற நினைப்பு ஜெயபாலுக்கு மனதில் வந்தது. தான் ஒரு கோழை திட்டம் அபாயகரமானது என்பதை அவன் இப்போது உணர்ந்திருந்தான்.  .ஏதாவது மயக்க மருந்து சேகரித்திருக்கலாம். பையனை மயக்கத்தில் வைத்திருப்பது நல்லதாக இருந்திருக்கும். பையனின் புத்தகப் பையில் தேடினால் ஏதாவது தொலைபேசி எண், முகவரி கிடைக்கலாம். வீட்டு தொஅலைபேசி எண் இருந்தால் நல்லது. பள்ளி தொலைபேசி எண் என்றால் இந்த நேரத்திற்குப் பிறகு யார் எடுப்பார்கள். காலை வரை காத்திருக்க வேண்டும். அதுவும் பழுதாகியிருந்தால் சிரமம். தொலை பேசி கிடைத்து விட்டால்  போதும் பையனைக் கடத்தி வந்து விட்டதைப் பற்றி சொல்லி விடலாம். எவ்வளவு பணம் கேட்கலாம்  என்பதை முடிவு செய்யவில்லை. எதற்கும்  புத்தகப் பையைத் தேட வேண்டும் என்பது அவன் மனதிற்கு வந்து விட்டது.
அம்மா அம்மா என்ற அழுகுரலின் ஆரம்பம் புத்தக்ப்பையிலிருது அவனின் கவனத்தை விலக்கியது.அவன் காத்திருக்கும் அறையிலிருந்து  வெளிவந்த  போது தூரத்தில் ஒரு புகை வண்டி வந்து கொண்டிருப்பதும், உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து  புகை வண்டியை வரவேற்க  ஆயத்தமாவதும் தெரிந்தது. அம்மா என்று பையனின் அழுகை  உரத்துக் கிளம்பியது.. வந்து கொண்டிருக்கும் புகை வண்டியின் இரைச்சல் பையனின் அழுகையைக்  காணாமல் போகச் செய்திருந்தது. ஆனால் அவனால் அங்கு அழுகுரலைக் கேட்டுக் கொண்டு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.. ஒரு புதிய புதிர்வழி அவனுக்கு முன்னால் விரிந்து கிடப்பதாகத் தோன்றியது.
    அடுத்த புகை வண்டி நிலையத்தில் இறங்கி விட்டான்.பயணிகள் காத்திருக்கும் அறை அவன் கணகளில் முதலில் பட்டது போல் வந்து உட்கார்ந்து கொண்டான்..பையன் என்னவாகியிருப்பான். அவன் அழுகை கூட்டம் சேர்த்திருக்கும். புத்தகப்பையை யாராவது திறந்து பார்த்து  அடையாளம் கண்டிருப்பார்கள். காவல்துறைக்கும் தகவல் போயிருக்கும். பையனின் அம்மா குழந்தையைக் காணவில்லை என்று பள்ளியில் புகார் செய்திருப்பார். அவர்கள் வீட்டில் களேபரமாகி காவல் நிலையத்திற்கும் தகவல் போயிருக்கும். பள்ளி வாசலில் காத்திருந்ததை கவனித்து யாராவது தன்னை அடையாளம் கண்டிருப்பார்களா.புத்தகங்களின் பக்கத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது போல பையன் காணாமல்  போனது பற்றி புது புது விசயங்கள் கிளம்பிக் கொண்டிருக்கும். அந்தப் புத்தகம் வட்ட வடிவிலானதாக இருக்கலாம். கடையும், முதலும் ஒன்றாக இருக்கும். எவ்வளவுதான் சுற்றினாலும் அடுத்தடுத்த பக்கங்களாய் அவனும் சந்திராவும் இருப்பார்கள் என்ற நினைப்பு வந்த்து. நல்ல வேளை பள்ளி தான் இருக்கும் பகுதியிலானது அல்ல. வேறு  பகுதி பள்ள்யைத் தேர்ந்தெடுத்திருந்தான். செல் போனை அணைத்து வைத்திருப்பது ஞாபகம் வந்தது.சந்தேகப்பட்டு கூப்பிட்டால் உளறவேண்டியிருக்கும். இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். செல்போன்தான் இப்போதெல்ல்லாம் எவ்வளவு வகையில் உபயோகமாகிறது என்பதை யோசித்துப் பார்த்தான்.அலாரம், கைக்கடிகாரம், நாட்காடி, முகவரிபுத்தகம், பேஜர், டார்ச் விளக்கு, கேமரா, டிரான்ஸ்சிஸ்டர் வானொலிப் பெட்டி, டேப் ரிகார்டர், சிடி பிளேயர், கால்குலேட்டர்.. இந்த டென்சனிலும் இப்படி செல்போன் பற்றி யோசிக்க ஒரு நிமிடம் வாய்த்தது  குறித்து ஆறுதல் மனதில் வந்த்து.
     அடுத்து என்ன நடக்கும் . எப்படியோ எல்லாவர்றையும் கண்டுபிடித்து விடுவார்கள். தன் பயமே எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடும். அந்த காத்திருப்பு அறையின் பொறுப்பாளர் தன் பயண விபரம் பற்றிக் கேட்டால் சரியாக பதில் சொல்லமுடியாது. பயணச் சீட்டும் இல்லை.தாறுமாறாய் பதில்கள்  .சுலபமாக போலீசில் ஒப்படைத்து விடுவார்கள். நன்கு சுத்தமாக்கப்பட்ட அந்த அறை அவனுக்கு ஆசுவாசம் தருவதாக இருந்தது.ஜன்னலில் வானம் தெரிவது வேறு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
    மரக்கலர் புடவை உடுத்தியிருந்தவள் வந்து உட்கார்ந்து ஸ்டூலின் மேல் இருக்கும் நோட்டைப் புரட்ட ஆரம்பித்தாள்.அதில் அறையில் காத்திருப்போர் பற்றி குறிப்புகள் இருக்குமா. பயணச்சீட்டு கேட்டு வெளியேற்றிவிடுவாளா. பாலக்காட்டைக் கடந்து விட்டது. இது எந்த ஊராக இருக்கும். இந்தப் பகுதியென்றால் குருவாயூர்தான் ஞாபகம் வரும். குருவாயூரில் ரயில்வே ஸ்டேசன் இருக்குமா. மரக்கலர் புடவைக்காரி த்ன்னைப்பார்ப்பது போலிருந்தது.பெரிய சப்தமெதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த்து  ஆச்சர்யமாக இருந்தது.அதுவே பேரலையாக விரிந்து காதுகளை அடைப்பதாக இருந்தது. கொல்லம் எந்தப் பக்கம்... பக்கமென்றால் ஆரியங்காவு கூட போய் விடலாம். இங்கிருந்து தப்பிப்பது சுலபம். இந்தக் குற்றத்திலிருந்து தப்ப முடியுமா. நிர்வாணப்படுத்தி காவல் நிலையத்தில் உட்கார வைத்து விடுவார்கள். இனி நிர்வாணம் அடிக்கடி தரிசிக்கக்  கூடியதுதானா.  அதற்கான சாத்தியங்கள் பெருகிக் கொண்டே இருக்கும் ஒன்றை விலக்க இன்னொன்று உருவாகிக் கொண்டே இருக்கும் ஆழங்காண இயலாத்தாகத் தெரிந்து கொண்டே இருக்கும்  இவையெல்லாம் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும். எல்லாம் தன்னை மறைத்துக் கொள்கிற உபாயம்தான் என்று சொல்லிக் கொண்டான்.

    மூத்திரப்புறா என்று தமிழிலும் எழுதப்பட்டிருந்தது ஆறுதலாக இருந்தது.
உள்ளே உட்கார்ந்து கொண்டால்   மரக்கலர் சேலைக்காரியின் பார்வையில் இருந்து தப்பிக்கலாம். பேண்டைக்கழற்றாமல் உட்காருவது  அசவுகரியமாக இருக்கும்.கழற்றி கழிப்பறைக் கதவின் மீது போட்டான்.
  போலீஸ் பிடித்துக் கொண்டு போகிற போது கம்பிகள் இட்ட இது போன்ற சிறிய அறையில்தான் உட்கார வைப்பார்கள். சட்டை, பேண்ட் போட்டுக்கொள்ள அனுமதிப்பார்களா. கழற்றச் சொல்லி விடுவார்கள். ஜட்டியையும் விட்டு வைக்க மாட்டார்கள்,  எல்லாம் சுருட்டப்பட்டு ஒரு மூலையில் கைக்கு எட்டாத தூரத்தில் கிடக்கும். அப்படி ஒரு முறை அவனுக்கும் அது வாய்த்த்து. எல்லா ஆடைகளையும்  கழற்றி போட்ட பின்  கைகளை தொடை இடுக்கில் வைத்துக் கொண்டு குறுகி உட்கார்ந்திருக்கிறான்.  யாரோ வருகிறார்கள் என்று எழுந்து நின்ற போது ஒரு போலீஸ்காரன் அன்றைய தினத்தந்தியை கொண்டு வந்து நீட்ட அவன் அதைச் சுற்றிக் கொண்டு நின்றான். இனியும் கூட அதுதான் நடக்கும். எல்லா உடைகளையும் கழற்றி நிர்வாணமாக்கி விடுவார்கள். உட்ம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லாத நிலையில் தான் லத்தியில் அடி விடும். அல்லது பிளாஸ்டிக் பைப்பில்.
    விதியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். விதி தன் கதையில் இந்தக் கழிப்பறையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது. இந்தக் கதியின் சாத்தியப்பாடு வேறு விதமாக எந்த வகையில் இருக்கும், இந்தக் கழிப்பறையிலிருந்து  உடையைப் போட்டுக் கொண்டு ஓடும் போது ஒரு வகையில்  மாறும். ஆடைகள் அணியாமல்     நிர்வாணமாய்                    ஓடும் போது இன்னொரு விதமாய் உருவாகும். எல்லா சாத்தியப்பாடுகளும் தவறில்தான் போய் முடியுமோ என்னமோ.  இருப்பே பெரும் தவறாகிவிடுமோ என்னமோ. பேய் போல், ஆவி போல் எந்த புகை போக்கி வழியாகவும் தப்பி விடுவதுதான் சரியான சாத்தியப் பாடோ என்னவோ.
 அவன் சட்டையையும், பனியனையும் , ஜட்டியையும் கழற்றி கழிப்ப்பறைக் கதவின் மீது போட்டான். இனி இப்படித்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்தது..தன்  முழு நிர்வாண உடம்பைப் பார்த்துக் கொண்டான்.

சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நக்ர், திருப்பூர்  641 602



              சூடு

சுப்ரபாரதிமணியன்.,           8/2635 பாண்டியன் நகர்.,          திருப்பூர் 641 602.
              9486101003
      இயந்திரமயமான வாழ்க்கையில் இயந்திரங்கள் மனிதனை முடக்கிக் கொண்டே இருக்கின்றன. இயற்கையை மீறுகிற வெற்றி கொள்கிற எண்ணத்தில் மனிதனின் தொடர்ந்த செயல்பாடு இருந்து கொண்டேயிருக்கிறது. தொழிற்சாலைகள், போக்குவரத்து சாதனங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள், விஞ்ஞான வளர்ச்சி என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனிதன் நுகரும் தீவிரத்தில் எல்லாவற்றையும் புறந்தள்ளிக் கொண்டிருக்கிறான். இயற்கையின் சமன்பாடும் குலைந்து பூமி சூடாகிக் கொண்டிருக்கிறது. வளி மண்டலத்தில் நிகழும் மாற்றங்கள் இன்னும் சூடாக்கிக் கொண்டிருக்கிறது.
      இப்போது வளிமண்டலத்தில் வெப்ப வாயுக்கள் உயர்வதைப் போல உயர்ந்து கொண்டே போனால் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு சமநிலை வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படும். ஒரு பக்கம் வெள்ளம் மறுபக்கம் வறட்சி. விவசாயம் வெகுவாகக் குறைந்து போதல் குடிநீர் தட்டுப்பாடு, காடுகள் அழிந்து போதல் என்று பெரும் விளைவுகளை வரும் காலத்தில் சந்திக்கப் போகிறோம்.
      பூமியைச் சுற்றினப் பரப்பில் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு பிராணவாயுவை வைத்திருக்கிறது. பூமியின் சமநிலைக்கு இந்த காற்று மண்டலம் உதவுகிறது. பூமியை போர்வை போல் காற்று மண்டலம் போர்த்திக் கொண்டிருக்கிறது. காற்று மண்டலத்தின் பிராணவாயு, கரியமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களும் இருக்கின்றன. இவையே பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படுபவை. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் சூடு பூவுலகில் மண், தண்ணீர் உயிரிகள் ஆகியவற்றால் உறிஞ்சிக் கொள்வதைத் தவிர மீதமுள்ளவை பசுமைக்குடில் வாயுக்களால் வான் வெளிக்கே திருப்பி விடப்படுகிறது. பூமி பரப்பை நோக்கி வெப்ப அளவு அதிகமாகிறது. அதிகமாகும் வெப்பம் அதிகமாக குளிரையும் தருகிறது. வெப்பம் கூடும் போது நீர் ஆவியாவது பெருகுகிறது. கடலும் வெப்பமடைந்து போகிறது.
      பனிப்பாறைகள் குறைந்து நிலச்சரிவுகளும் வெள்ளமும் உண்டாகும். இமாலயப் பனிப்பாறைகள் வெப்ப அதிகரிப்பால் இன்னும் இருபத்தைந்தாண்டுகளுக்குப் பின் காணாமல் போகும்.
      பூமி சூடாவதால் வீடுகளில் குளிர் சாதனங்கள் பொருத்தப்படுவது சாதாரணமாகி விட்டது. குளோரா புளோரா கார்பன் எனப்படும் வேதியல் பொருள் குளிர் சாதனம் மற்றும் சார்புடைய சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. கரியமிலவாயுவை விட 10 ஆயிரம் மடங்கு வெப்பத்தை இரு உருவாக்கும். ஓசோன் படலத்தை கழித்து புற ஊதாக் கதிர்களை பூமியின் மீது படரச் செய்து பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணும். பூமியின் சராசரி வெப்பம் அதிகமாகக் கூடினாலும், குறைந்தாலும் பூமிக்கு சிரமம்தான். மூன்றாவது உலகப் போரால் உண்டாகும் அழிவை விட புவி வெப்ப அதிகரிப்பால் அழிவு அதிகமாக இருக்கும்.
      பிளாஸ்டிக் பொருட்களும் வெப்ப உயர்வுக்கு முக்யமான காரணமாக இருக்கிறது. எந்தப் பொருளானாலும் மண்ணில் சிதைந்து மக்கிப்போவது சாதாரணமாக நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவது இல்லை. அதை எரித்தாலும் மூலக்கூறுகள் அதிக அளவில் சிதைவதும் இல்லை. இதுவே பெரும் தீங்காகி நிற்கிறது.
      வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருட்கள் பூமியை சூடாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பல்வேறு வாயுக்கள் சுற்றுச்சூழலை பாதித்து பூமியை வெப்பமடையச் செய்கிறது.
      காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு அதிகமாவதால் கடலும் அமிலமாகி விடுகிறது. உயிரினங்கள் வெளியே விடும் கரியமிலவாயுவை கடல் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. கடலின் அமிலத்தன்மை பவளப் பாறைகளுக்கும், கடல் உயிரினங்களுக்கும் கேடுகளை விளைவிக்கும்.
      உணவு பொருட்கள், வேளாண்மை உற்பத்தி தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பாதிக்கப்படும். சாதாரண மழையினால் ஏற்படும் விவசாயத்தையே நாம் தொடர்ந்து உணவிற்கு அனுபவித்து வருகிறோம். கடல் மட்ட உணர்வு என்பதும் சிறு சிறு தீவுகளை அழித்து விடும். இதனால் மக்களின் இடம் பெயர்வும் அதிக அளவில் நிகழும். மனித இனம் இந்தச் சூட்டைத் தாங்கிக் கொள்ள முடியாது. விலங்குகளும், தாவரங்களுக்கும் இதே நிலைமைதான்.
      கடல் மட்டம் உயர்வதால் நிலத்தடி நீருக்குள் உப்பு புகுந்து விடுகிறது. கடலோரப் பகுதிகளில் வேளாண்மைக்கு தண்ணீரும், குடிநீர் உபயோகத்திற்கும் கிடைப்பதில்லை. நோய்கள் அதிகரிப்பதும் அதனால் இயற்கைச் சாவுகளுக்கு முந்தின நிலையிலான சாவுகளும் சுலபமாக நடக்கும். வெப்பம் உடல் சோர்வை அதிகமாக்குகிறது. சுவாசக் கோளாறுகள் சகஜம்.
      தொழிற்சாலை எரிபொருளுக்காக மரங்களை எரிப்பது பல காலமாக நடைபெறுகிறது. இது பூமியின் வெப்பத்தைக் கூட்டுகிறது. மரக்கட்டைகளை வாயுவாக மாற்றி எரிபொருளாகப் பயன்படுத்த பல ஆய்வுகளம் நடந்து வருகிறது. மரக்கட்டைகளை வறுத்து உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பது போல பயன்படுத்தப்படுகிறது. புங்கமரம், கிரிக்கெட் பேட் செய்ய பயன்படுத்தப்படும் வில்லோ மரம் ஆகியவற்றை எரிபொருளாக மாற்றுவது எளிது. வைக்கோலைக் கூட நேரடியாக எரி பொருளாக மாற்றுவதை விட வாயுவாக மாற்றி எரி பொருளாக்கலாம்.
      இன்னும் கிராமப்புறப் பகுதிகளிலும், விறகு கிடைக்கிற பகுதிகளிலும் சமையலுக்கு பிறகு பயன்படுத்தப்படுகிறது. விறகுப்புகை அவசியம் என்றாலும் தவிர்க்கப்பட வேண்டியதாக உள்ளது. திருப்பூர் நகரத்தில் பனியன் கழிவுகளை சமையலுக்கும், அடுப்பெரிக்கவும், தண்ணீர் காய்ச்சுவதும் பயன்படுத்துகின்றனர். இது வெளியிடும் வாயுக்கள் சூழலை வெகுவாகக் கெடுக்கிறது.
      நமது நாட்டின் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் பெரும் ஆதாரமாய் விளங்கும் தென்மேற்கு பருவமழை பருவ மாற்றல் வெகுவாக குறைந்து விட்டது. இந்தியாவின் மேற்குப் பகுதியும் அரபிக் கடலும் ஒரே வெப்ப நிலைக்கு வரும் அபாயங்கள் உள்ளன. வேளாண்மையை நம்பியிருக்கும் நாடுகள் வறுமைப் பிடிக்குள் அகப்பட்டுக் கொள்ளப்போகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடைக்காமல் போய்விடும். குழந்தைகள் தானே நம் எதிர்காலம் என்பதும், புதிய தலைமுறை வாரிசு என்பதும்!
            ஆண்டுதோறும் புலம்பல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. "சூடு தாங்க முடியலே... இந்த மாதிரி சூடு எந்த வருஷமும் இருந்ததில்லை..." நம் பூமியின் தென் துருவ அண்டார்டிக் என்பது பனிப்பாறைகள் நிறைந்திருக்கும் பகுதியில் வெப்பம் அதிகரித்து வருகிறது. பனிப்பாறைகள், உறைபனிப் போர்வைகளுக்கு கீழ் பிளவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதனால் பனிப்போர்வை உருகி கடல் மட்டம் உயர்ந்து பல தீவுகளும், கடலோர நகரங்களும் மூழ்கலாம். கங்கையின் மூலாதரமான கங்கோத்ரி வேகமாக உருகுகிறது. யமுனை நதியின் ஆதாரமான கோமுக் பனிச்சிகரம் உருகுகிறது. கோமுக் பனிச் சிகரம் பசுமுகத்தைக் கொண்டிருக்கும் அதையும் சிலர் வழிபடுவர். அந்த பசு முகம் இப்போது சிதைந்து கொண்டிருக்கிறது. சிதைந்த குழந்தையொன்றின் முகமாய் அது தெரிய ஆரம்பித்திருக்கிறது. சுற்றுச் சூழல் மாசுபாட்டால் எதிர்கால தலைமுறையினரான குழந்தைகளின் முகங்களின் நாம் சிதைத்து வருவதையே இது காட்டுகிறது.