சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 28 அக்டோபர், 2013

படிக்கலாம் வாங்க.

படிக்கலாம் வாங்க..

                                     சுப்ரபாரதிமணியன்

                  1.
நூல் : போயிட்டு வாங்க சார் ( நாவல் )
தமிழில்: ச.மாடசாமி
ஆங்கில மூலம் : ஜேம்ஸ் ஹில்டன் ( குட் பை மிஸ்டர்  சிப்ஸ் )

    சிப்பிங் என்ற  பள்ளி ஆங்கில ஆசிரியரின் கதை இது. லத்தின், கிரேக்க மொழிகளை பழைய பாணியிலேயே கற்பிப்பதில் விருப்பம் கொண்ட ஒரு  பள்ளி ஆசிரியர் பற்றிய நாவல் . நவீன விசயங்களை காது கொடுத்துக் கேட்கிறவரின் பள்ளி அனுபவங்களும், ஆசிரியர் மாணவர்  உறவு பற்றியும் இந்நூல் பேசுகிறது. ஒரு தலைமை ஆசிரியராக உயர்வது அவரின் கனவு.  அதற்குத் தேவையான கல்வித்தகுதியும் திறமையும் அவரிடம் இல்லை. 60 வயதில் பள்ளி ஆலோசராகிறார். 65ல் பணி ஓய்வு..பள்ளி வாழ்க்கையும் ,  ஓய்வு வாழ்க்கைக்குப் பின்னதான அவரின் அனுபவங்களும் இந்நாவலில் விரிகிறது. ஆசிரியர் மாணவரிடத்தில் அதிகாரமற்ற உறவு நீடித்திருப்பதை சிப்ஸ் பள்ளி வாழ்க்கை முடிய கடைபிடித்திருக்கிறார். மாணவர்களை தோழர்களாக வகுப்பிலும் வெளியிலும் நடத்தியிருக்கிறார்.1848ல் பிறந்த சிப்ஸ் 1913ல் மூச்சுத் திணறல் நோயால் இறந்து போகிறார்.பள்ளியை பனி மூடிக்கிடந்த போதும், பள்ளி மாணவர்கள் மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டபோதும் அசெம்பிளி ஹாலையே மருத்துவ வார்டாக மாற்றி சேவை செய்திருக்கிறார். முதல் உலகப் போர் தொடங்கிய போது புருக்பீல்டு மாணவர்களில் கணிசமானோர் ராணுவத்தில் சேர்ந்து சிலர் பலி ஆகி யிருக்கின்றனர். பழைய மாணவர்களைப் பற்றி பிறமாணவர்களிடம் பேசி உத்வேக மூட்டி மனம் கரையச் செய்திருக்கிறார்.பள்ளீக்கு வெளியே குண்டு மழை பொழிந்தபோதும் அது மாணவர்களை பெரிதும் பாதிக்கக் கூடாதென்று  பாடத்தை நடத்தி  காட்டியவர்.பள்ளி இயல்பான இடமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.போர்க்காலத்தில் ரொட்டிக்கு ரேசன். ரேசனில் கிடைத்த ரொட்டியை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டவர்.தன் உயிலில் சொத்துக்களை புரூக் பீல்டு பள்ளிக்கும், ஆதரவற்றோர் பள்ளிக்கும் எழுதி வைத்தவர். ஆட்சி அதிகாரத்தைப் பற்றி  தொடர்ந்து மாணவர்களிடம் விமர்சித்துக் கொண்டே இருந்தவர்.திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களில் மனைவி இறந்து போன பின் முடிந்து போக வாழ்க்கை முழுக்க தனிமைதான். ஆனால் தனிமையை அவர் உணராமல்  மாணவர்களுடனேயே கழித்தவர்.எனக்கா குழந்தைகள் இல்லை. எனக்கு ஆயிரக்கணக்கில் பிள்ளைகள் . ஆயிரக்கணக்கில்.. எல்லாம் ஆம்பளப் பசங்க “ என்று மரணப் படுக்கையில் பெருமிதம் கொண்டவர்.வகுப்பறையை வெல்வது, மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரியராக உணர்ந்து வாழ்ந்தது, தொடர்ந்து வாசிப்பதன் ஆகியவை மூலம்  தன்னை தன்னை ஆசிரியராய்  நிருபித்து கொள்வதுமாய் வாழ்ந்திருக்கிறார். சிப்ஸ் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான். ஆனால் நிஜ மனிதராய் ஜேம்ஸ் ஹில்டன் மூலம் பெரும் ஆளுமையாக இந்நாவலில் வெளிப்பட்டிருக்கிறார் சிப்ஸ். எளிய மொழிபெயர்ப்பு.உள் ஓவியங்கள் பள்ளிச் சூழலை வெளிக்கொணர சிறப்பாகப் பயன்பட்டிருகிறது.திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.

இன்றைய ஆசிரியர் உறவு எவ்வகையிலும் தீங்கு தரக்கூடாது என்றிருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தம் சொல்லி மாளாது. திசை மாறிச் செல்லும் மாணவர் சமூகம்.அதிநுகர்வுப்போக்குகள் அவர்களை அலைக்கழிகின்றன, அது ஆண்டான் அடிமை உறவல்ல. அன்பும் கருத்துப் பரிமாற்றமும் உள்ளடக்கிய கருத்துப் பரிமாற்றமாக இருக்க வேண்டும். சுதந்திரக்கல்வி உணர்வு என்றைக்கும் மனதில் நிலவ வேண்டும்  
ஆசிரியர் மாணவர் உறவு அசாதரணமாக இருக்கும் இன்றைய சூழலில் அதை மேம்படுத்தும் அம்சங்களை இந்நாவல் கொண்டிருக்கிறது.
   ( 64 பக்கங்கள் ரூ 35: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )




    - சுப்ரபாரதிமணியன் (  9486101003  )








வியாழன், 24 அக்டோபர், 2013

பாவடி

 

சுப்ரபாரதிமணியன்

Share


பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது.
பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு மைதானம் பின்பக்கத்தில் கொஞ்சம் காலி இடம் இருந்தது. இரண்டாம் முளைக் கடப்பாரையை அந்த மைதானத்தில்தான் அடிக்க வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் இடம் பத்தும், அய்ம்பது கெஜம் என்றால் சற்று சிரமம்தான். பள்ளிக்கூடம் ஆரம்பப் பள்ளிதான். அதிகம் குழந்தைகள் படிப்பதில்லை. தெரிந்த ஒரு வாத்தியாரும் இருந்தார். அவரிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று ரங்கசாமி நினைத்தார்.
நரகலாகஇருந்தது. பெரிய இரும்புத் தகரத்தை வைத்துக் கொண்டு நரகலை தள்ளி தள்ளி விட்டார். “ என்ன மனுஷங்களதா இல்லே பன்னிதான்னு தெரியலே..” அருணாச்சலம் சிரித்துக் கொண்டே சொன்னான். இது சிரிக்கிற விஷயமா இல்லையா என்பதை விட இவ்வளவு தூரம் வந்து இந்த இடத்தை சுத்தம் பண்ண வேண்டியதாகிவிட்டதே என்RRறிருந்தது. நெருஞ்சியை வெட்டித் தள்ளினார். மக்கின காகிதங்களும், செங்கற்களும், சிறுசிறு கற்களையும் ஒதுக்கிப் போட்டார்கள். புற்கள் இருந்தன. அது மெல்ல மெல்ல பாவடியில் ஆட்கள் நடமாட ஆரம்பித்தால் போய்விடும். வீட்டிலிருந்து ஒன்றரை பர்லாங் நடந்து வர வேண்டும்.உடம்பிலிருந்து வியர்வை ஓடிக் கலைத்த்து.
பாவு குச்சிகள், பாத்திரங்கள், பில்லுவேர்கள், கஞ்சிப் பைகள் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு நடையும் கொண்டு போக வர ஆளை அசத்திவிடும் அலுப்பாகிவிடும்.
பாவு நீட்டி கஞ்சி போட்டு சரிசெய்து பூர்த்தியாவதற்குள் ரெண்டு நாள் நெய்த அலுப்பு வந்து விடுவது சகஜம். இனி இவ்வளவு தூரம் நடந்து வந்து பாவு நீட்டிக் கொண்டு போவது கஷ்டம் என்பது தெரிந்தது. பாவு நீட்டிவிட்டால் இரண்டு தரமாச்சும் காபி சாப்பிடும் பழக்கம். வீடு பக்கம் என்றால் ‘சூடு பண்ணிக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் இவ்வளவு தூரம் காபியைக் கொண்டு வந்தாலே ஆறிவிடும். சகித்துக் கொண்டு முதல்தரம் குடித்து கொண்டாலும் இரண்டாம் தரம் முடியாது. வெயில் காலம் என்றால் சோற்று வடிநீர் டம்ளர் டம்ளராய் பாவடியில் இருக்கையில் எல்லோரும் குடிப்பர்.புளி தண்ணீர் ரங்கசாமிக்கு மிகவும் பிடிக்கும்.
“ அருணாசலம் எப்பிடி இருக்கு..”
“ பரவாயில்லே மாமா..”
“ நாளைக்கு மல்லிகா பாவு இருக்கு. இங்கதா வந்தர்லாமுன்னு… கவுண்டர் லாரி எடுத்துட்டாலும், யாராச்சும் ரகளை பண்ணினா எதுக்கு.. நேரிடையா இங்க புது பாவடிக்கு வந்திர வேண்டியதுதா. உனக்கு பில்லுவேர் வேணுமா.. எங்களது ஒண்ணு செரியில்லாமெப் போச்சு. பிரிச்சு ஆலி வெச்சுக் கட்டணும்..”
காலையில் நடந்தது மனசிற்குள் வந்த்து..வேலிக்கிளுவை படலுக்கு வெளியே பாவுக் குச்சிகளுடன் தர்மன் நிற்பது தெரிந்தது. பனி மெல்ல விலகின மாதிரி அவன் தென்பட்டான்.
”என்ன பாவா. இன்னிக்கு உங்க பாவு இருக்குதுன்னு சொன்ன ஞாபகம். உங்க பாவு கட்டற எடத்திலெ கவுண்டர் லாரி எமனா நிக்குது..”
திக்கென்று ரங்கசாமிக்கு. பரபரவென்று தறிக் குழியிலிருந்து எழுந்தார்.
முழுத் தெருவையும் அடைத்துக் கொண்டு லாரி நின்றிருந்தது. அதன் முழு பலத்தையும் தன்னுடன் வாங்கிக் கொண்டு திமிராய் நிற்பதாய் தோன்றியது பயமளித்தது.அதன் கண்ணாடியில் ஏதோ காளி உருவம் வரையப்பட்டிருப்பது தெரிந்தது
தர்மன் பக்கத்தில் நின்றிருந்தான். நாகமணி பரபரவென்று வந்து நின்றாள்.அவள் சேலையை எடுத்து செருகியிருந்த கதியில் சேலை இன்னும் கசகசவென்றிருந்தது.
“ என்ன பாவா. என்ன பண்ணப் போறீங்க..”
“ தர்மா. உனக்கு பாவு நீட்டறதா சொன்னார். இப்ப என்ன பண்றது..”
“ கவுண்டரே எதுக்கும் எழுப்பி மேக்காலெ கொண்டு போய் நிறுத்தச் சொல்றது..”
சற்று பயமாகத்தான் இருந்தது ரங்கசாமிக்கு. மயில்சாமிக் கவுண்டர் கேட்பாரா? கேட்கிற மனிதனா? எதற்கெடுத்தாலும் வீம்புக்கு வருகிறவர்.பேச்சே வீறாப்புடன்தான் இருக்கும்.
“அந்த ஆள் எத்தனெ மணிக்கு வூட்டுக்கு வந்தாரோ.. எப்பவிருந்து தூங்கறாறோ.. போய் லாரியை மேக்க கொண்டு போய் நிறுத்தச் சொன்னா என்ன சொல்லப் போறாரோ..”
“எதுக்கும் கேட்டுப் பாருங்க.. எடம் இல்லாமெ பாவெ எப்பிடி நீட்டி, கஞ்சி போட்டு, உலத்தி எடுப்பீங்க..”
தர்மன் “பில்வேர்களை” சுமந்து கொண்டு அடுத்தத் தெருவின் பாவு நீட்டும் இடத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். சரசரவென்று அதை நீவி சப்தம் உண்டாக்கினான்.இசைக்கருவியின் மீட்டல் போலிருந்தது.
“ என்னங்க. நான் போயி கவுண்டச்சி கிட்ட சொல்லட்டுமா..”
“ அந்த ஆளெ விட அந்தம்மா இன்னமும் முசுடு..”
ஏதாவது தேவலர் வந்து உதவி புரிந்தால் நன்றாக இருக்கும் என் நினைத்தார். கடந்து சென்ற காற்றின் ஈரம் உடம்பை உலுக்குவதாக இருந்தது. தோலைத் தைத்து உடம்பில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த குளிர் குறையும். தோல் ஆடை எப்படி வந்தது யாரோ சொன்னது மனதில் வந்தது. பல்லில் கடித்து தூக்கிப்போகும் குட்டியின் பிடறித்தோல் கிழிந்து போகாமல் இருப்பதைக் கண்ட மனிதன் அதிசயமாகப் பார்த்தான். அப்படியானால் சிறுத்தையின் தோல் இன்னும் வலுவாய் இருக்கும் என்று வேட்டையாடி தோலை உரித்து தோல் ஆடை செய்ய ஆரம்பித்திருக்கிறான். சாதாரண மனிதர்களுக்கு திருமாலின் நாபிக் கமலத்தில் பிறந்த மானி, அபிமானி என்ற இரு பெண்கள் பூவுலகில் பருத்திச் செடிகளாகி நூல்களாய் வெளிவந்திருக்கின்றனர்.
கையிலிருந்த பாவு நூல் பெருத்த எடையாகி கனத்துக் கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.இருவரும் என்ன செய்வதென்று புரியாதவர்கள் போல நின்றிருந்தார்கள். பனி விலகிவிட்டது. சீக்கிரம் வெயில் மெல்லக் கிளம்பும். பாவு நீட்ட சரியான நேரம். பெருமாள் கோவிலிருந்து மணிச் சப்தம் மிகவும் துல்லியமாய் கேட்டது. யாரோ பாட்டுப் பாடுவதும் கேட்டது. எவ்வளவு அற்புதமான சூழ்நிலை. ரம்மியமான நேரம். இந்த நேரத்தில் குளித்து கோயிலுக்கு போயிருந்தால் வாழ்க்கை உன்னதம் என்பது போலத்தான் தோன்றும் என நினைத்தார் ரங்கசாமி. ஆனால் இந்த லாரி இந்த நேரத்தின் ரம்மியத்தைக் கெடுத்து விட்டதே என்று நினைத்தார்.
மல்லிகா கண்களைக் கசக்கியபடி வந்தாள் “ பில்லு வேர்களை” தோளில் இருந்து இறக்கி வைத்தாள்.அவள் வாயிலிருந்து வந்த சப்தம் ஒருவகை ஆசுவாசமாய் இருந்தது.
“ எதுக்கு நீ பில்லுவார்த்தை எடுத்துட்டு வந்தே..” சற்று எரிச்சலுடன் கேட்டார் ரங்கசாமி.
“எதுக்கு அவ மேல எரிஞ்சு விழறீங்க” நாகமணி சமாதானப்படுத்தும் விதமாய் மல்லிகாவின் பக்கம் சென்றாள்.
“ நீங்க ரெண்டு பேரும் வூட்லே காணம். பாவடியிலதா இருப்பீங்கன்னு எடுத்துட்டு வந்துட்டன்.. இதென்னப்பா லாரி..”
“அதுதாம்மா..”
ரொம்பவும் சோர்வடைந்து விட்டார் ரங்கசாமி. ஓரத்தில் கிடந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து விட்டிருந்தார். வானத்தின் நீலம் மெல்ல வெளிச்சக் கீற்றுகளை பரப்பத் தலைப்பட்டது.
“ நாளைக்கு பாவு நீட்டிக்கலாமா மல்லிகா..”
“ இன்னிக்கு பாவு முடிஞ்சப்புறம் ரெண்டு மணி நேரத்திலெ னெய்யற வேலை முடிஞ்சுரும். பாவு அறுத்து ‘அச்சு’ எடுக்கணும்.. இல்லீன்னா இன்னிக்கும் வீண், நாளைக்கும் வீண்தா.” வீதியில் போகிறவர்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றனர்.
“ எதுக்கும் கேட்டுப் பாக்கறனே..”
ஏதாவது தெய்வம் காப்பாற்றினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.சவுண்டிஅம்மனும்,பெருமாளும் சட்டென நினைவை விட்டுப் போயிருந்தனர். ஊரில் இருக்கும் மாசி பெரியண்ணசாமி ஞாபகம் வந்தார்.அது மாமரம்தான். நூறு வயதிற்கு மேல் இருக்கலாம்.மரத்தின் அடியில் சிவலிங்கம் இருக்கும் மரத்திலிருந்து விழும் மாம்பிஞ்சுகள் பிரசாதமாக்க் கிடைக்கும். அந்தக் கோவில் இருக்கும் பக்கம் மாலை நான்கு மணிக்கு மேல் யாரும் நடமாட மாட்டார்கள். மரத்தில் சித்தர்கள் வசிப்பதால் அவர்கள் பயமுறுத்துவார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் பேசப்பட்டதாக இருந்த்து.அப்படி பயமுறுத்தும் ஏதாவது தெய்வம் இருந்தால் சங்கடம் தருவோர்க்கு பயம் தருவார். தொழில் சுமூகமாக நடக்கும்.
ரங்கசாமி வீட்டிற்கு வந்து கெட்டியானத் துண்டொன்றை எடுத்துக் கொண்டார். உடம்பில் போர்த்தினார். புதிதாய் துவைத்து வைத்த துண்டு. இதமாய் இருந்தது. புது துணியைப் போன்ற மணம் வந்தது.
ராட்சத மனிதனைப் போல லாரி நீண்டு நின்று கொண்டிருந்தது. முருகன் துணை என்று எழுதப்பட்டிருந்தது. கரும் பச்சை நிற வர்ணம் பூசப்பட்டது. முகப்பு கண்ணாடியில் பனி விழுந்த தடமாய் பரவலாய் இருந்தது. தெருவை சரியாய் அடைத்தது போலிருந்தது. அதன் ஓரமாய் நடந்தார். சாக்கடை மீது கால்களை வைத்து நடக்க வேண்டும். வேறு வழியில்லை. சாக்கடையின் ஓரத்தில் கால்களை ஊன்றி நகர்வது போல் லாரியின் அந்தப் புறத்தைக் கடந்தார். சாக்கடை கறுப்பாய் கால்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்தபோது நாகமணியும், மல்லிகாவும் சாக்கடையில் இருந்த சற்றே பெரிய கற்களில் ஜாக்கிரதையாய் கால் வைத்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
மயில்சாமி கவுண்டர் வீட்டுமுன் நின்றார். முழுக்க கிளுவை முள் வேலி. நடுவில் இரும்புக் கதவு. கவுண்டர் முன்பு கூலிக்காக டிரைவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்புறம் இருக்கும் நிலத்தையும், நகைகளையும் விற்று சொந்தமாய் லாரியொன்றை வாங்கிக் கொண்டார். வெளியூர் போகாத நாட்களில் தெரு அந்த லாரியால் அடைபடும் அந்தப் பகுதி நெசவாளர்களுக்கு சிரமங்களைக் கொடுக்கும் லாரி.ஒவ்வொரு தெருவுக்கும் இப்படி ஒவ்வொரு லாரி இருக்குமா…
மயில்சாமி கவுண்டர் வீட்டு இரும்பு கேட்டிற்கு முன் நின்றார்.அதன் திடத்தன்மை பயமுறுத்துவதாக இருந்தது.துருப்பிடித்தது போல மரநிறமாகியிருந்தது.
“ கவுண்டரே.. என்ன கவுண்டரே..”
எந்தப் பதிலும் இல்லை . யாராவது பெண்கள் வந்தால் செளகரியமாக இருக்கும். சொல்லலாம். கவுண்டர் மறுப்பதும் உடன்படுவது இரண்டாவது. மறுத்தால் பெண்கள் சொல்லைக் கேட்டு சும்மா இருந்துவிடலாம். கவுண்டச்சியை எதிர்பார்த்தார் ரங்கசாமி.
“ கவுண்டச்சி இருந்தா நல்லது” என்றாள் நாகமணி.
“எல்லாம் முசுவு போட்டுட்டு தூங்குதுகளோ என்னமோ ” என்று சொல்லி சிரித்தாள் மல்லிகா. கிளுவை மரங்கள் பச்சையாக மினுங்கின.பனியின் குளிப்பில் அவை திளைத்திருந்தன.
“ கவுண்டரே.. லாரிக்காரக் கவுண்டரே..”
இரும்புக் கதவின் தாழ்ப்பாளைத் தட்டி சப்தமுண்டாக்கினார். படபடவென்று அது அதிர்ந்தது. நாரசமாய் சப்தம் கிளம்பி எதிரொலித்தது.
“ யார்யா..”
கதவு திறந்தது. கவுண்டர் நின்றிருந்தார். கண்கள் சிவந்திருந்தன. கண்களில் பீழை. முகம் உப்பியிருந்தது. ரங்கசாமி தன் பூஞ்சை உடம்பிற்கு முன் ராட்சத உருவமொன்று நிற்பதை உணர்ந்தார்.
“ என்ன வேணும். நீயா..”
“ பாவு நீட்டணும். கொஞ்சம் லாரியை எடுத்து மேக்காலெ எங்காச்சும் நிறுத்துனா பாவு நீட்ட செளகரியமா இருக்குமுங்க..”
“அதெல்லாம் கஷ்டம்.. நீ வேற எடத்திலெ பாவு நீட்டிவியோ சாவு நீட்டிவியோ.. செய்..”
“வேற எடம் இல்லாமத்தானே..”
அவர் பதிலைச் சொல்லாமல் நடக்க் ஆரம்பித்தார். வீட்டுக் கதவு ஒருக்களித்து சாய்ந்திருந்தது.மெல்ல வெளிச்சம் கசிந்து கொண்டிருந்து.
“ என்னங்க.. பாத்து செய்யுங்க..”
” லாரி எடுக்கறது கஷ்டம். எனக்கு ரெண்டு நாள் தூக்கம் இன்னமிருக்கு. தூங்கணும்… போங்க..”
“ பாத்து எடுத்துருஙக..”
நாகமணி மெல்லச் சொன்னாள். அவள் குரல் நெகிழ்வடைந்திருந்தது.குரலின் கமறலைச் சரி செய்து கொண்டாள்.
“ என்ன உன் சொந்த எடமா. அதிகாரம் பண்றே..”
“ அதிகாரமில்லீங்க.. தொழில் பண்ணற ரோடு..”
“ ரோடுன்னு தெரிஞ்சதுதானே… முனிசிபல் ரோட்லே எனக்கும் நிறுத்தரதுக்கு உரிமை இருக்கு போ..”
உள்ளே போய் விட்டார். மல்லிகா அப்பாவைப் பார்த்தாள்.அவள் முகம் சிவந்திருந்த்து.
“திமிர் புடிச்ச ஆள்” என்றாள் மெல்லிசான குரலில்.
“ சும்மா இரு. நீ வேற பூதத்தை கிளப்பி விட்டுராதே..”
“ என்ன செய்யலாமப்பா.”
அவரும் யோசித்தபடி நின்றிருந்தார். மயில்சாமி கவுண்டரின் மனைவி வந்தாள்.சேலை கசங்கியிருந்தது. மரத்துக்கிளைகள் போல் தலைமயிர் பிளந்திருந்தது.எண்ணெய் போடாததால் போல் வறண்டிருந்தது.
“ சொல்லிட்டார்லே.. போங்க.. க்ளீனர் பையன் கூட இல்லே.அவர் சொன்னது சொன்னதுதா. தூக்கம் கெட்ட எரிச்சல் வேற. வேவாரம் செரியில்ல போலிருக்கு.. ராத்திரியிலிந்து எரிச்சல்லே வூட்லே நடந்துக்கறார்..”
“ உங்க எரிச்சல்லாலே எங்க உயிர் போகுது..”
மல்லிகா துடுக்கென்று பேசினாள். அவளுக்கு உதடு துடித்தது.
“ எவண்டா அது… தாஸ்தியா பேசறவன்.. செட்டுக்காரங்களுக்கு அவ்வளவு திமிர் ஆயிடுச்சா”
பரபரவென்று கேட்டபடி மயில்சாமி கவுண்டர் உள்ளிலிருந்து வந்தார். ரங்கசாமி நிலைகுலைந்தார். “ நட நட” என்றபடி மல்லிகாவைத் தள்ளினார். நாகமணி பயத்தில் பத்தடி நகர்ந்து விட்டிருந்தாள். மல்லிகாவும் பயந்தவள் போல் விரைசலாக நடந்தாள். அஜாக்கிரதையாய் சாக்கடையில் கால் வைத்து நடந்தபோது சாக்கடை பரவலாய் தெறித்தது.மல்லைகாவின் கால்களில் சாக்கடை அப்பியிருந்த்து.
“ நாலு வார்த்தைன்னா போதும். பெரிய சண்டையே வந்துரும்.. போ மல்லிகா..” அவரும் விரைசலாய் நடந்தார். சாக்கடையைப் பொறுத்த வரையில் அக்கறை காட்டாதவர் போல.பூவரசஞ் செடியொன்று குட்டையாய் உரசியது.
“ செட்டுக்காரப் பசங்களுக்கு கொழுப்பைப் பாரு.. நீங்க இனி எப்ப இந்தத் தெருவிலெ பாவு நீட்டுவீங்கன்னு பாத்துருவன்…” உரக்கக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. குரல் சட்டென நின்று போயிருந்த்து.வீட்டிற்கு வந்து உட்கார்ந்ததும் மூச்சிரைத்தது ரங்கசாமிக்கு. சண்டை பெரிதாகாமல் தப்பித்து வந்தது பெரும் புண்ணியம் என்றிருந்தது. “ மல்லிகா நீ வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்கலாமில்லே..”
“ என்னப்பா.. முனிசிபாலிட்டி ரோடுதானே.. நாம பாவு நீட்டுனா என்ன..”
“ அவனுக்கும் அது முனிசிபாலிட்டி ரோடுதா.. கெஞ்சிக் கேட்டுத்தா தொழில் பண்ணனும் நீ எளசு பாரு..”
மல்லிகா ரங்கசாமியின் மூத்தமகள். நெய்து கொண்டிருப்பவள். நெய்து சம்பாத்யம் செய்து வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டும், வயது இருபதாகிவிட்டது. கல்யாணத்திற்கென்று சேமித்து வைக்க வேண்டிய சாபக்கேடு. நெய்து கொஞ்சம் சேமித்து வைத்திருந்தால் இன்னொரு நல்ல நெசவாளிக்கோ, பனியன் கம்பெனியில் வேலை செய்பவனுக்கோ வாழ்க்கைப்படலாம். இல்லையென்றால் கிராமத்திலிருந்து வரும் மாப்பிள்ளைதான் வாய்க்கும். டவுனில் பிறந்து வளர்ந்த பெண்கள் கிராமங்களுக்குப் போக பயப்படுவர். சினிமா முதற்கொண்டு எத்தனை விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.
ராதிகா இரண்டு காபி டம்ளர்களைக் கொண்டு வந்தாள். “அப்பா காபி சாப்பிடுங்க..”
“இப்ப என்ன அவசரம். பாவடிக்கு போய் கஞ்சி போட்டப்புறம் குடுத்தா பத்தாதா..”
“அப்பா இன்னிக்கு இன்னமும் பாவு நீட்டற முடிவுலதா இருக்கார் போல” என்றாள் மல்லிகா.
ராதிகா “ குடிங்கப்பா” என்றூ சொல்லியபடி உறிஞ்ச ஆரம்பித்தாள்.அவள் எதைக் குடிப்பதாக இருந்தாலும் ஒரே மூச்ச்சில்தான் உறிஞ்சித்தீர்ப்பாள்.”மாடு உறிஞ்சற மாதிரி..”
ராதிகாவிற்கு பத்து வயதாகிறது. நூல் சுற்றுவாள். அப்பாவுக்கும், அக்காவுக்கும் நெசவு வேலைகளில் உதவுவாள். மேல் வேலைகள் செய்வாள். இரண்டு வருஷமாய் அவளையும் தறியில் இறக்கி விட வேண்டும் என்று ரங்கசாமி நினைத்திருந்தார்.படித்தது போதும் என்று நிறுத்தி விட்டார்.முடியவில்லை. அவளுக்கென்று மூன்றாம் தறியைப் போட்டபின் நாகமணியால் மூன்று தறிகளுக்கும் சேர்த்து வேலை செய்வது கஷ்டம்தான்.
“ அந்த ஆளு என்ன பேச்சு பேசறான் பாத்தீங்களா. செட்டுக்காரனாம்.. உடனே ஜாதிக்கு போயிர்ரானுக.. கேவலமா பேசறாங்க.. அவங்கெல்லா பொறக்கறப்பவே லாரியோட பொறந்த மாதிரி..”
“ சும்மா இரு மல்லிகா. எரிச்சலைக் கெளப்பாதே..”
ஊர் முழுக்க பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். டவுன் என்றாலும் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. கவுண்டர்கள் இருக்கும் வீதிகளில் பாவு நீட்டுவது சுலபமல்ல. பணிந்து போக வேண்டும். இல்லாவிட்டால் வேறு இடத்திற்கு வீட்டிற்கு அருகில் என்றில்லாமல் தேடிப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
“ காலையில் அஞ்சு மணிக்கு நீட்டிரீங்க. கெளம்ப பத்து மணியாகும். அதுக்குள்ள நடமாடறது கஷ்டம்.. ஓரமா போகணும்.. எல்லாமும்..” முணுப்பார்கள். இவர்களின் தொழில் ஆயிற்றே. இதற்கு போய் இடைஞ்சல் செய்யலாமா என்று சிலர் சகித்துக் கொள்வார்கள். “ பொழைக்கட்டுமே அவங்களும் “ என்று. தங்கள் வீட்டில் ஏதாவது விசேசம், வேலை என்றால் முன்பே சொல்லிவிட்டால் யாரும் பாவு நீட்ட மாட்டார்கள். பாவு நீட்டின பின் “ இன்னிக்கு வண்டி வருது; சாமான் வருது.. கழட்டிட்டு போ” என்று ரகளைகள் பல நடந்திருக்கின்றன. பாவு கட்டின கடப்பாரையை கழட்டி விட்டு ரகளை செய்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் பயந்துதான் நெசவுத் தொழில் செய்ய வேண்டியிருக்கிறது.
அதுவும் பனியன் பேக்டரிகள் டவுன் முழுக்க ஆன பின்பு இன்னும் சிக்கல்கள்தான் . அட்டைப்பெட்டி வண்டிகள், ஸ்டீம் கேலண்டரிங், ட்ரிங் வண்டிகள், வாகனங்கள் எந்த நிமிடமும் வரும். நெசவு தொழிலுக்கு இந்த வகையில் தெருவிற்குத் தெரு பனியன் கம்பனிகள் ஆகிப் போனது இடைஞ்சலாகத்தான் போய்விட்டது.
“ நாளைக்கு பாவு நீட்டிக்கலாம் அப்பா. நாளைக்காச்சும் லாரி போய் இடம் காலியாகணும். இல்லீன்னா வேற பாவடிகள்லேதா பாக்கணும்..”
ரங்கசாமிக்கு முடிவு எடுக்க முடியவில்லை. என்ன செய்வது என்று விளங்கவில்லை. வீட்டு முகட்டைப் பார்த்தார். சிதைந்த ஓட்டின் வழியே வானம் தெரிந்தது.அது பனியில் வெளிச்சத்தைக் காட்டாமல் சோம்பியிருந்த்து.
“ கஞ்சி காய்ச்சி வெச்சது வீணாயிருங்க..”
“ வீணாயிரும்தா..”
“ நம்ம பில்லுவேர் வேறெ செரியில்லெ. அருணாச்சலம் வூட்லிருந்து ஒண்ணு வாங்கிட்டு வந்து வச்சிருக்கன். நாளைக்கு அவங்களுக்கு வேணும்ன்னா கஷ்டமா போயிரும். அவசரத்துக்குப் போய் தேட முடியாது பாருங்க.”
“நீ சொல்றதெல்லா வாஸ்தவந்தா.. இன்னிக்கு பாவடி கெடைக்கனும் இல்லையா. அந்த ஆள் வேற இனி இந்தத் தெருவிலே நீ பாவு நீட்டறதை பாத்துர்ரேன்னு வேற சொன்னான். நீட்ட வுடுவானோ இல்லை ரகளை பண்ணுவானோ தெரியலே..”
“ என்ன பண்ணலாமுன்னு சொல்றீங்க..”
“ நீ கஞ்சி சட்டிகளையும் ,கொடத்தையும் எடுத்து இடுப்புலே வெச்சுக்க. நான் பாவு நூல் எடுத்து தோள்லே போட்டுக்கறன். பொண்ணுக பில்லுவேர்த்தையும் சாமான்களையும் எடுத்துக்கட்டும். டவுன்லே தெருத் தெருவா திரிவம். எங்க எடம் இருக்குதோ அங்க இருக்கறவங்ககிட்ட என்னங்க சாமி உங்களுக்கு எடஞ்சல் எதுவுமில்லையே.. நாங்க பாவு நீட்டறதில்லேன்னு கேட்டுட்டு பாவு நீட்டலாம் “ரங்கசாமிக்கு குரல் தழுதழுத்தது. நாகமணி துணுக்குற்றாள்.
” நெசவு பண்ணி ஜீவனம் பண்றதே கொடுமையாய் போச்சு. இதிலெ தொழிலை பண்ண வுடாமக் கூட எத்தனை தொந்தரவுக. நானும் நிறையக் கவுண்டர்களைப் பார்த்திருக்கன். மனுஷங்களுக்கு அடையாளமா இருப்பானுங்க. நம்ம சோலைமலைக் கவுண்டர் இல்லியா..”
“ ஆமா அவர் கிட்ட சொன்னா இந்த லாரிக்காரன்கிட்ட கேக்க மாட்டாரா ஏன் எதுக்குன்னு..”
“ கேப்பார். கேக்க தயக்கம் பண்ணாலும் பண்ணுவார். நம்மளப் பொறுத்தவரை நல்லவர்தா. ஆனா கவுண்டருக்கு கவுண்டர் விட்டுக் கொடுப்பாங்களா. ஜாதி முக்யம் பாரு..”
அருணாச்சலம் வந்து நின்றான். முகத்தில் எப்போதும் இருக்கும் அடர்த்தியான தாடி. நல்ல கறுப்பு மயிர்கள் அடங்கினத் தாடி. முப்பது வயது. எப்போதும் கலவரப்படும்படி பேசுவான். அது சில சமயம் சிலருக்கு சந்தோஷம் தரும். பலர் அதிர்ந்து பயந்து போவார்கள். அவன் செய்வதையெல்லாம் வைத்து அவனை பலர் “ கிறுக்கன் அருணாச்சலம்” என்றே அழைத்து வந்தார்கள். வாரத்தில் மூணு நாள் இரவு பகல் என்று உட்கார்ந்து நெய்வான். கடைக்குப் போய் கூலி வாங்கி வந்தபின் நெய்யமாட்டான். சினிமா, நண்பர்கள் வீடு என்று சுற்றுவான்.” வாரம் மூன்று நாட்கள் லீவு தார உத்யோகம் இதுதா” என்று சொல்லித் திரிவான்.
“இதுல உள்ள சுதந்தரம் எதில இருக்கு”
“ என்ன மாமா.. லாரிக்காரக் கவுண்டன் லாரியை எடுக்க மாட்டான்னு சொல்லிட்டானாமா..”
“ ஆமாண்டா என்ன பண்ண முடியும்..”
“ நாளைக்கு ராத்திரியும் அந்த லாரியை எடுக்காமெ அங்கிருக்கட்டும். லாரி கண்ணாடியை ஒடச்சு வுட்டறேன்.”
திகிலானது ரங்கசாமிக்கு. சடாரென எழுந்தார், கை கூப்பினார். அவரின் உடம்பு சற்றே நடுங்குவதாக இருந்த்து.
“ டேய் அப்பிடி ஏதாச்சும் பண்ணீராதேடா. அப்புறம் இந்தப் பக்கம் குடியே இருக்க முடியாது.. எங்காச்சும் ஓடித்தான் போகணும். அப்பிடி ஏதாச்சும் பண்ணீராதடா..”
அருணாச்சலம் எதுவும் பேசவில்லை. ரங்கசாமியைப் பார்த்தான். அவர் அவன் சொன்னதில் நிலைகுலைந்து போயிருக்க வேண்டும்.
“ எம். ஜி ஆர் . ஆட்சிக்கு வந்தாதா இதுக்கெல்லாம் பதில் கெடைக்கும்.செரி.. என்ன பண்ணலாம் மாமா..”
“ எம்.ஜி ஆர் ஆட்சிக்கு வர்றப்போ நீதானே நெசவுத்துறை மந்திரி . அப்போ பாத்துக்கலாம் இன்னிக்கு அவ்வளவுதா.வேற எடம் பாக்கறது நல்லதா தோணுது. அந்த ஆளு எப்பவும் பாவு நீட்ட முடியாமெ ரகளை செஞ்சா..”
“ ஊர்ல இருக்கற நாலு பேரை வச்சு பேசுவம்..”
“ ஊர்லே இருக்கற நாலு பேர் யாரு.. பெரியவங்க எல்லாரும் கவுண்டர்ங்கதா நமக்காக வருவாங்களா.. அவன் பொண்டாட்டி, அம்மாவையே போட்டு வண்ணான் துணி வெளுக்கற மாதிரி அடிக்கிற ஆளு. அவன்கிட்ட யாரு ஜெயிச்சிருக்கா..”
“ செரி..”
“ வேற இடம் எதுக்கும் தேடலாம்..”
“ முனிசிபாலிட்டிக்கு புகார் எழுதித்தர்லாம்.. உள்ளூர் கவுன்சிலர் கிட்ட சொல்லலாம்”
“ போடா பைத்தியக்காரா.. உன்னை கிறுக்கன்னு சொல்றது செரியாத்தானே இருக்கு. அதுக்கு தொழிலை வுட்டுட்டு எவன் அலைவான். உள்ளூர் கவுன்சிலரும் அவருதா. நாம எடஞ்சல் பண்றதா அந்த ஆளு எழுதிக் குடுத்தா என்ன செய்யறது. வேண்டாம் போ..”
“ அப்போ வேற இடம் பாக்கலாமுன்னு சொல்றீங்களா..”
“ ஆமா பொது எடமா ஏதாச்சும் பாத்து வெக்கலாம். எடம் கெடைக்காதப்போ புது எடம் நம்ம ஆளுகளுக்கு பிரயோஜனம் ஆகும் பாரு..”
“ எங்க இருக்கு” யோசனை வந்தது போல் மெளனித்தார்கள். அவர்களின் யோசனையைக் கலைக்காதவர்கள் மாதிரி மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ பள்ளிக் கூட்த்து பின்புறந்தா என் மனசிலெ ரொம்ப நாளா கெடக்குது..”
“ கொஞ்சமாத்தானே இருக்கு. பன்னிக மேயும். அப்புறம் நம்ம ஆளுக இருட்டினப்புறம் வெளிக்குப் போறதுக்கு அந்த எடம்ன்னு ஆயிப் போச்சு..”
“ கொஞ்சம் சுத்தம் பண்ணினா பிரயோஜனம் ஆகலாம்.”

. “ பாவடிக்கு எடம் தேடறது என்னமோ மனசுக்கு சங்கடமா இருக்கு “
“நாளைக்கு என்ற பாவும் இருக்குங்க. பில்வேர் எதுக்கும் உங்ககிட்டையே இருக்கட்டும். நான் வேற யார்கிட்டையாச்சும் இரவல் வாங்கிக்கறேன்..”
கூட்டுப் பாவுக்காரர்கள் நிறைய இருந்தார்கள். வீட்டில் ஆள் குறைவாக இருந்தால் வேறு ஒருவருடன் சேர்ந்து பாவு உலர்த்துவதும் பிற வேலைகளுக்கு ஒத்தாசை செய்வதும் என்று. பாவடி இடத்தில் மூங்கில் குதிரைகளை கொண்டு வந்து போட்டு இடத்தை முன்னதாக ‘ரிசர்வ்’ செய்து கொள்வதும் நடக்கும். முந்தின இரவு பாவு இருக்கிறார்கள் கொண்டு வந்து பாவாடையில் “ மூங்கில் குதிரையை” போட்டுவிடுவார்கள். மூங்கிலால் பெருக்கல் வடிவத்தில் அமைந்திருக்கும் பாவின் இருபக்க முனைகளும் மாட்டிக் கொள்ள ஏதுவாக இருக்கும். “ சாவக்கட்டு பாளையத்தில், மூக்கனூர்லே இருக்கற மாதிரி பொது பாவாடை எடம் ஏற்பாடு பண்ணுனா நல்லா இருக்கும். அதுமாதிரி பட்டிக்காட்ல அது முடியும்ன்னா இங்க டவுண்லே இன்னம் அவசியம் அது.
தெற்குத் தெரு சிவகாமி பில்லுவேர் இரண்டை தோளின் மேல் வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தாள். அவளின் மகள் கழுத்தில் துணிக்கஞ்சிப் பைகள் இரண்டை மாலையாகப் போட்டுக் கொண்டு தத்தக்கா, பித்தக்கா என்று கடந்து கொண்டிருந்தாள். “ நீ சம்பாதிச்சதுதா குடும்ப KOnTU தரித்திரம் முடியப் போகுதாக்கும் புள்ளெ”
“ நம்ம ஆளுக தரித்திரம் எப்ப முடியும் போ”என்றபடி சிவகாமி நடந்தாள். குழந்தைகள் கூட தறிக்குழி வீட்டில் சும்மா இருக்க மாட்டார்கள். தார்க்குச்சியைக் கொண்டு போய் குடு என்று அதற்கும் ஏதாவது வேலை கொடுத்து விடுவார்கள். குழந்தையின் கழுத்தில் இருந்த கஞ்சி துணிப்பை செத்துப் போன பாம்பு போல கிடந்தது. துணிப்பை ஜந்து அடி நீளம் இருக்கும். கை புகும் அளவு விட்டம். அதில் கஞ்சியை ஊற்றி இரண்டு பேர் இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டு பாவை நனைப்பார்கள். பிறகு பாவை எட்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டியிருக்கும். கஞ்சி நனைந்திருப்பதைப் பிளந்து கைகளால் பிரிக்க வேண்டியிருக்கும். பிறகு உருவிக் கோலால் அடிக்கும் போது இழைகள் பிரிந்து விடும். பில்வேர் தலை வாரும் சீப்பு போல் எட்டடிக்கு இருக்கும். பில்வேரை பிறகு பாவின் மீது வைத்து மெல்ல இழுத்துக் கொண்டு போக வேண்டியதாயிருக்கும். அது பாவு ஈரம் போய் ஆறும் வரைக்கும் பில்வேருக்கு வேலை இருக்கும். ஈரம் முழுக்க காய்ந்த பின் குறுக்கிக் கொண்டு வரவேண்டியிருக்கும்.
சென்றதரம் ரங்கசாமி பாவு சுற்றும்போது அணி மாறிவிட்டது. ரோலுக்கும் படுமரத்திற்கும் இடைவெளி பத்தடியாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நூல் அறுந்து போனாலும் அதைச் சுத்தம் செய்ய முடியும். சேலையின் அளவு, ரோல் பாவின் அளவிற்கு சம்மாக இல்லாமல் கொஞ்சம் வித்யாசம் வந்துவிட்டது. அச்சு வேறு வலம் இடம் என்று ஆடி இம்சை செய்துவிட்டது. பாவு சுற்றும்போது ஒரு சுற்றுக்கு இருபத்து நான்கு இந்த அளவாக இருக்க வேண்டி ஜாக்கிரதையாகச் சுற்றுவதில் ரங்கசாமி கவனமாக இருப்பவர் சென்றதரம் சற்று மாறிப் போனதால் எல்லாம் சிதைந்துவிட்டது. அந்த பாவு முழுக்க நெய்து அறுத்தெடுத்துக் கொண்டு போவதற்குள் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டார்.
எப்படியோ பள்ளியின் பின்புறம் இருந்த இடம் எல்லோருக்கும் மனதில் பட்டு சுத்தமாகி விட்ட்து,
பள்ளிக் கூட சுவற்றில் சாய்ந்தார். பெரிய பாறாங்கல்லொன்று இருந்தது. அதில் ‘தம்’ இழுத்து ஏறிக் கொண்டார். ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சுத்தம் செய்யப்பட்ட இடம் செவ்வகம்மாய் நீண்டு கிடந்தது. ஆறுதலாய் இருந்தது பாவடிக்கு ஒரு இடம் கிடைத்ததே என்றிருந்தது.
“ சவுண்டம்மா “ வாய் முணுமுணுத்துக் கொண்ட்து.
“ என்ன மாமா பாறாங்கல்லிலே ஏறி உட்கார்ந்திட்டீங்க..”
தூரத்தில் தென்பட்ட செளண்டியம்மன் கோவில் கோபுரத்தைப் பார்த்தார். சவுடியம்மன் முகம் மனதுள் வந்து விட்ட்து. அவள் கண்களிலிருந்து பிரகாசம் எழும்பிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளில் வீரவாட்கள் இருந்தன. ஆசீர்வதிக்கும் கையிலிருந்த ஒளி வெள்ளம் பிறீட்டது. அவளின் கிரீடத்தில் தங்கமும் வைரமும் மின்னின. சிங்க வாகனம் பின்னால் நின்றபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கோவிலில் பஜனை மடத்தில் படிக்கும் தேவாங்க புராணம் மனதில் மின்னலடித்தது.
பிரமன் பல புவனங்களையும், உயிர்களையும் படைத்தார். ஆதி மனுவை பிரமன் ஆடை தர படைத்தான். மனு கடமையை நிறைவேற்றிய வேலை முடிந்தது என்று பரம்பொருளிடம் அய்க்கியமானார் ஆடையின்றி பின்னர் தவித்தனர். சிவன் தேவலனைப் படைத்தார். திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய தாமரை நூலை வாங்கிச் சென்று ஆடை நெய்யச் சொன்னார். சிவன் இமயமலைக்குத் தெற்கே சகர நாட்டு தலைநகர் ஆமோதா உன் ஊராகும் என்றார். திருமால் தாமரை நூலைத் தந்து பாதுகாப்புக்காக சக்கராயுதம் ஒன்றை கொடுத்தார். வரும் வழியில் தங்கியிருந்த ஆசிரமத்தில் இருந்த அரக்கர்கள் சுய ரூபத்தை வஜ்ரமுடி தூர்மவக்கிரன் தூம்ராச்சன் சித்திரசேனன் பஞ்சசேனன் என்று ஜந்து பேராக மாறி தேவலரிடம் இருந்து நூலைப் பறிக்க முயன்றனர். சக்கராயுதத்தை அவர் ஏவ அரக்கர்கள் நிலத்தில் விழுந்த ரத்தத்திலிருந்து ஆயிரக்கணக்கில் தோன்றி போரிட்டனர். சக்கராயுதம் செயலற்றுப் போனது. தேவலர் தனக்கு உதவ தாயார் சண்டிகையை எண்ணி பிரார்த்தனை செய்தார். ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் கிரீடத்துடன் தோன்றினாள் செளடேஸ்வரி. சூலம் சக்கரம், கத்தி, கதாயுதம் என்று நான்கு கைகளில் மின்னின. அரக்கர்களின் ரத்தம் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், பச்சை என ஜந்து வர்ணமாய் இருந்தன. தேவலர் தன்னிடம் இருந்த நூலை அய்ந்தாய் பிரித்து வர்ணங்களில் நனைத்துக் கொண்டார். எஞ்சிய அரக்கர்களின் ரத்தத்தை பூமியில் விழாது சிம்ம வாகனம் குடித்து முடித்து சிலிர்த்தது. அப்போது அதன் காதுகளில் ஒட்டியிருந்த இரு துளி ரத்தம் கீழே விழுந்து அதிலிருந்து இரு அரக்கர்கள் தோன்றி வணங்கினர். அவர்களுக்கு மாணிக்கத்தார்கள் என்று பெயரிட்டு தேவலரின் பணிக்கு வைத்துக் கொண்டார். “ நான் சூடாம்பிகை. நீயும் இன்று உனக்கு நேர்ந்த ஆபத்தில் இருந்த மீண்டாய். எனவே நம் இருவருக்கும் இதுவே பிறந்த நாளாகும்”
அமாவாசை என்று வருகிற போதெல்லாம் அவருக்கு இக்கதை ஒரு நிமிடம் மனதில் ஓடும். அமாவாசை அன்றுதான் மாதத்திற்கு ஒருநாள் தறிக்குழிக்கு விடுமுறை. அம்மன் தொழிலை நிறுத்தி வழிபாடு செய்ய அமாவாசையை ஒதுக்கினாள்.
இப்போது ஏதாவது தேவலர் வந்து தங்களைக் காப்பாற்ற மாட்டாரா என்று நினைத்துக் கொண்டார். தறிக் குழியை ஞாபகம் வந்தது.. மேருமலையில் இருந்த தேவதச்சன் உருவாக்கிய தறி இது. வைரம் வைடூரியம் போன்ற நவரத்னங்களால் அவன் செய்து தந்த தறி இப்போது புழுதி பட்டுக் கிடக்கிறது..
“ மனசுலே ஒரு சந்தோஷம் . சட்டுன்னு என்னமோ பாரத்தை பாறாங்கல்லு மேல எறக்கி வெச்சுட்ட மாதிரி பிரம்மை..”
“ இருக்கும். இருக்காதா பின்னெ.பாவடி கெடக்லீன்னா சிரமம்தானே..”
உற்சாகமான குரல் பிசிறில்லாமல் வெளிப்பட்டது.
கிளம்பிப் போகையில் சுத்தம் செய்யப்பட்ட செவ்வக பாவடியை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கிளம்பினார் ரங்கசாமி.
கொஞ்ச நேரத்திற்கப்புறம் நாலைந்து பையன்கள் அந்தப்பக்கம் வந்தார்கள். எல்லோரின் கண்களிலும் ஏகப்பட்ட பிரகாசம்.
“ அட புதுப் பாவடி “
“ நெசவு பண்றவங்களுக்கு புது பாவடி. நமக்கு புது கிரிக்கட் கிரவுண்ட். நாமும் இடம் தேடிட்டிருந்தம். ” பிசிறில்லாமல் உற்சாகமான குரல்கள் வந்தன.
உற்சாகமான குரல்களில் எப்போதும் பிசிறு இருப்பதில்லை

செவ்வாய், 15 அக்டோபர், 2013

பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா

பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா

சுப்ரபாரதிமணியன்

Share


சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு  இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.   ” விடியல் ” என்ற சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.   ” விடியல் ” என்றசின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு  இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.   ” விடியல் ” என்ற சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது. சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது. அதில் முதன்மையானவர் ஜெயகாந்தன் என்ற இளைஞர்.. முன்பே பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொகை உதவி, பாராட்டுப்பரிசளீப்புகள், ரத்ததான முகாம்., மாணவர்களுக்கான பயிற்சி முகாம்கள் என்று தொடர்ந்து நடத்தி வருபவர்கள் ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினர்.

இவ்வாண்டு ஒரு நாளில் நானும், சு.ப. வீரபாண்டியனும் கலந்து கொண்ட நிகழ்ச்சி இருந்தது.

சு.ப. வீரபாண்டியன் அவ்வூரின் அரசியல் கூட்டமொன்றுக்கு பேச்சை முடித்து கிளம்பியபோது                  ” விடியல் ” நண்பர்களுடன் மேடையில் புகைப்படம் எடுத்துக்கொள்கையில் ஜெயகாந்தன் சொன்னார்: “ இந்த 5 நண்பர்கள் தான் இத்தனையையும் செய்றோம் “ .. சு.ப.வீ. சிரித்துக் கொண்டே சொன்னார். “ மாவீரன் பிரபாகரன் சொல்வார்: 5 பேர் இருந்தால் சாதிக்கலாம். 50 பேர் இருந்தால் விவாதிக்கலாம்”.


நான் செகந்திராபாத்தில் வசித்து வந்த போது அங்கு புத்தகக் கண்காட்சி  நடத்திய அனுபவங்கள் ஞாபகம் வந்தது. ஏகதேசம் ஒற்றை ஆளாய் இருந்து சமாளிப்பேன். 20க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள். விஜயா பதிப்பக வேலாயுதம் வெகுவாக ஒத்துழைத்தார். நான் தமிழ் நாட்டிற்கு வந்த பின் அங்கு நின்று போய் விட்டது. ” கனவு”  இலக்கிய வட்டம் மூலம் நடத்தினேன்.கனவின் புத்தகக் கண்காட்சி நனவு அங்கு தொடர செகந்திராபாத் தமிழ்ச்சங்கம், இலக்கிய பேரவை, நிறை போன்ற அமைப்புகள் மனது வைக்கலாம்


குழந்தைகள அதிகம் இருந்ததால் என் பேச்சு கதை சொல்வது பற்றி அமைத்துக் கொண்டேன். கதை சொல்லல், கதையின் முதல் பதிவான கில்காமிஸ் காவியம், குழந்தைகளுக்கான கதைகள் முறைகள்  என்று சில கதைகள் சொன்னேன். அதில் சொல்லலாம் என்று நினைத்திருந்து விட்ட ஒரு கதையை இங்கு இணைத்திருக்கிறேன். இது இப்போது     ” பசுமைப் பூங்கா “  என்ற தலைப்பில் இரண்டு சிறுவர் கதைகளைக் கொண்ட நூலாக எட்டுப் பக்க்ங்களில் ரூ5 விலையில் வெளிவந்திருக்கிறது.

நான் ஆண்டுதோறும் நடத்தும்  ”  கதை சொல்லி  “ போட்டியில் சமீப ஆண்டுகளாக தொடர்ந்து பரிசுகள் பெற்று வரும் பவித்ரா என்ற புஞ்சைப்புளியம்பட்டியைச் சார்ந்த 8 வகுப்பு மாணவி சென்றாண்டு அக் கதை சொல்லி போட்டியில் பரிசு பெற்ற கதைப்பிரதி கிடைத்தது. விவசாய அழிவு, மண் புழு என்ற நண்பன், இயற்கை விவசாயம் என்று அக்கதை கோடிட்டுச் சென்றது. புத்தகக் கண்காட்சி மேடையில் பவித்ரா பயம் நீங்கி நல்ல கதை சொல்லலாக அக்கதையை விளக்கிய போது கூட்டம் ஆரவாரித்தது. இப்போது எனது  “ பசுமைப்பூங்கா “ ( முன்பே எனது சிறுவர் கதைகளை யுரேகா புத்தக பதிப்பாளர் “ பள்ளி மறுதிறப்பு “  என்ற சிறுவர் நூலை வெளியிட்டிருக்கிறார்.)


                    * பசுமைப் பூங்கா

    திலீபன் அப்பா வெங்கடாசலம் இரட்டைச் சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். காற்று காதுகளில் நிறைந்தது.
    “பிருந்தாவன் பூங்கா போனே. அப்புறம் எப்ப பாத்தாலும் பூங்கா ஏதாச்சும் போலமுன்னு நச்சரிப்பு” என்றார் சற்றே எரிச்சலுடன். அம்மா ராஜாமணி திலீபனை இறுக்க அணைத்துக் கொண்டாள். “நல்லதுதானே” “நல்லதுதான், நல்ல இடங்களைப் பார்க்க ஆசை வருவது நல்லதுதான்.”
    சென்ற வாரம் கோவை போகும் வேலை இருப்பதாகச் சொன்னார் வெங்கடாசலம். திலீபன் தானும் வருவதாகச் சொன்னான். “சிதம்பரம் பூங்கா பாக்கணும்ப்பா”
    “செரி… சிதம்பரம் பத்தி தெரியுமா…”
    “கப்பலோட்டியத் தமிழன். கோவை சிறையிலதா இருந்தார். அவர் ஞாபகமாகத்தான் அந்தப் பூங்கா…”
    “பரவாயில்லை. ஞாபகம் வைத்திருக்கிறாய்…”
    “தமிழ் பாடநூலில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய பாடம் உள்ளது அப்பா”
    “அதுதா ஞாபகம் இருக்கு போல.”
    அம்மா ராஜாமணி இடைமறித்தாள்,” எல்லாத்துக்கும் கிண்டல்தா உங்களுக்கு. திலீபனுக்கு பொது விஷயத்திலே அக்கறை இருக்குது…”
    வாராவாரம் ஞாயிறில் மாலை எங்காவது வெளிக் கிளம்பலாம் என்பார் வெங்கடாசலம். “எங்காச்சும் பூங்கா போலாம்ப்பா” என்பான் திலீபன்.
    “நம்மூர்ல எங்கடா பூங்காக்கள் இருக்கு…”
    “பிருந்தாவன் பூங்கா.”
    “அதுக்குத்தா போயிட்டு வந்துட்டமே.”
    “புகைவண்டி நிலையம் பக்கத்திலெ…”
    அதிலதா நெறைய கட்டிடங்க வந்திருச்சே.”
    “அலகு மலை பசுமைப் பூங்கா”
    அலகு மலை முருகனையும் திரிசிக்கலாம் என்றாள் ராஜாமணி. ‘சேவ்’ அமைப்பு அந்த பசுமைப் பூங்காவை அமைத்திருந்தது. ஏழை அனாதை குழந்தைகள் அங்கு தங்கியிருந்தனர். அங்கிருந்து பெருந்தொழுவு பள்ளிக்கு சென்று படிக்கிறார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் சிலர் இருக்கிறார்கள். சுமங்கலி திட்டத்தில் பாதிக்கப்பட்ட சில பெண்களும் இருக்கிறார்கள்.
    “திருமுருகன் பூண்டி பூங்கா…”
    கோவில் முகப்பில் இருந்தது. குழந்தைகள் விளையாட இரண்டு ஊஞ்சல்கள். சறுக்கு மேடை. ஓடி விளையாட நல்ல விரிவான இடம். ஞாயிறு என்றால் கூட்டம் இருக்கும். ஊஞ்சல் விளையாட வரிசை இருக்கும். அப்படி வரிசையில் நிற்கிற போதுதான் அந்த வரிசையான அறைகள் திலீபனின் கண்களில் பட்டன.
    “அதெல்லாம் என்னப்பா…”
    “அறைகள்… கோவிலுக்கு வர்ரங்க தங்கறதுக்கு…”
    “பலர் நோயாளிக மாதிரி இருக்காங்களே”
    “ஆமா… மன நோயாளிக. இங்க தங்கியிருக்கறது. இங்க இருக்கற கெணத்திலெ குளிக்கறது. இதனாலே அது விலகும்ன்னு நம்பிக்கை.”
    “முருகனுக்கு கூட சித்த பிரம்மெ புடுச்சிருக்காமா…”
    “பாருக்குத்தா புடிக்கலே.”
    எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள். “சூரபத்மனெ கொன்னப்புறம் இங்க வந்திருக்கார் முருகன். சிவன் இங்க காத்திட்டிருக்கச் சொல்லியிருக்கிறார். வந்தா எங்கிருக்கார்ன்னு தெரியலே. சித்தபிரமை புடுச்சிருச்சு. சிவன் தேடிக் கண்டுபிடிச்சு அலஞ்சு தீர்த்திருக்கார். அதுதா முன்னாடி இருக்கற கோயில்.”
    “செரி… நம்ம ஊர்ல நொய்யல் கரை உக்காந்து ஓய்வு எடுக்கற மாதிரி இல்லே. வேற பூங்காக்களும் இல்லே…”
    “ஆமா… அஞ்சு லட்சம் பனியன் தொழிலாளிக இருக்காங்க. ஆனா நல்ல பூங்காக்கள் இல்லே. ஓய்வுன்னா சினிமா தியேட்டருக்குத்தா போகணும்.”
    அன்றைக்கு ஏழு மணியாகிறது. பூங்கா வாசலைப் பூட்டப்போவதாக காவலாளி சப்தம் போட்டுச் சொன்னார்.
    “இன்னம் கொஞ்ச நேரம் இருக்கறேமே…”
    “நான் வூடு போக வேண்டாமா. காலையில வேலைக்கு வந்தவன். தினமும் ஏழு மணி வரைக்குந்தா… இன்னிக்கு பத்து நிமிஷம் அதிகமாயிருச்சு…” என்றார் பூங்கா காவலாளி.
    “வேற பூங்கா இல்லீங்களா.”
    “ஒரு கிலோ மீட்டர் தூரத்திலெ செம்மொழிப் பூங்கா இருக்குது. அது குடியிருப்புகளுக்குள்ள இருக்குது. ஒன்பது மணி வரைக்கும் தொறந்திருக்கும்.”
    “அப்பா அங்க போலாமா…”
    “ஒரு கி.மீ. போகணும். முக்கிய சாலை. மூணு பேரு இரட்டை சக்கர வண்டியில போறது தப்பு. போலீஸ் கண்லெ பட்டுட்டா…”
    “படமாட்டம் அப்பா… ப்ளீஸ்… ப்ளீஸ்…”
    மூவரும் இரட்டை சக்கர வண்டியில் கிளம்பினார்கள். சீக்கிரம் வந்து விட்டது போலிருந்தது.
    “பூங்கா தேடி டவுனை வுட்டு எவ்வளவு தூரம் வரவேண்டியிருக்குது.”
    பூங்கா மின் விளக்குகளால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பூங்கா முதல் பார்வையிலேயே பளிச்சென்று பட்டது. தூரிகள் நான்கு இருந்தன. வழுக்கு மேடைகள். நடைபாதை மேடைகள். வர்ண விளக்குகள்.உயரத்தில் நீர் ஊற்று ஒன்று. சுற்றுச் சுவர்களில் தமிழர்கள் திரு.வி.க, வள்ளலார், பாரதி, பாரதிதாசன் படங்கள். சமூகச் சேவைத் தலைவர்கள் அம்பேத்கார், காந்தி முதற்கொண்டு அப்துல்கலாம் வரைக்கும் இருந்தனர்.
    இரண்டு முறை பூங்காவை வலம் வந்தது போல சுற்றினர். தூரிகளில் குழந்தைகள் இருந்தனர். “அம்மா நீ தூரி வெளையாட வாய்ப்பே இல்லை.”
    “ஏண்டா திலீபன்.”
    “யாருமில்லாட்டி கூட நீங்க முயற்சி பண்ணலாம். குழந்தைகள் நிறைய காத்திட்டிருக்காங்க…”
    “அம்மாக்களும் நிறைய காத்துகிட்டிருக்காங்க”
    “அம்மாக்கள் கொழந்தைகளுக்கு காவலா காத்திட்டிருக்காங்க.”
    “செரி… செரி. நான் உங்க வெளையாட்டுக்கு வர்லே…”
    “கள்ள விளையாட்டுதானே… சந்தர்ப்பம் இல்லம்மா…”
    “மானத்தை வாங்காதே” வெங்கடாசலமும் உரக்க சிரித்துக் கொண்டார்.
    தூரி ஆடியபின் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள். அவன் தூரி விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை தொடர்வது போலிருந்தது. அவர்கள் பேசிக் கொள்ளட்டும் என்று அவன் மெல்ல நகர்ந்தான்.
    பூங்காவின் மூலையில் இருந்த ஒரு பாறை மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். பாறை சற்று உயரத்தில் இருந்தது. பாறை குளுமையாக இருந்தது. தீப்பொறி ஒன்று காற்றில் பறந்து வந்தது போல இருந்தது.
    அவன் அருகில் அந்த மின்மினிப் பூச்சி வந்து உட்கார்ந்தது.
    “இந்தப் பூங்காவுக்குப் புதுசா…”
    “ஆமா…”
    “நீ…”
    “நானும் தா…”
    “இந்தப் பூங்காவுலதா நாலு நாளா இருக்கேன்.”
    “இதுக்கு முந்தி…”
    “கல்லாறு பழத்தோட்டத்திலெ…”
    “கல்லாறு எங்க இருக்கு…”
    “குன்னூர் போற வழியிலெ.”
    “மேட்டுப்பாளையமா…”
    “மேட்டுப்பாளையத்திலெ… பிளாக் தண்டர் தெரிஞ்சு வெச்சிருப்பே. அங்கதா.”
    “அங்கயும் போகணும். எதுக்கு இங்க வந்தே…”
    “ஒரு கல்யாண விசேஷத்துக்காக வாழை மரம், தேக்கு மரம் வெட்டிட்டு வந்தாங்க இந்த வீதிக்காரங்க. அதிலெ ஒட்டிட்டு வந்துட்டேன்.”
    “இதிலே எத்தனை நாள் இருப்பே…”
    “சீக்கிரம் போயிரணும்…”
    “ஏன்…”
    “பூங்கா கூட சூடாத்தா இருக்கு. மாலையிலதா தண்ணி வுடறாங்க மத்தபடி சூடுதா. இந்த சூட்லே என்னாலே இருக்க முடியாது.”
    “எங்களுக்கும் கஷ்டந்தா… இவ்வளவு பெரிய ஊர்ல பூங்கா ரொம்பக் குறைவு.”
    “காத்து சுத்தமா இல்லே. பெட்ரோல் புகை… மரங்கள் ரொம்பக் குறைவு”
    “பனியன் தொழில் 15,000 கோடி ரூபா அந்நியச் செலவாணி வர்ர ஊர். ஆனா தொழிலாளர்கள் விடுமுறையில் ஓய்வெடுக்க நல்ல பூங்காக்கள் இல்லை. இது நகரத்தைவிட்டு பத்து கி.மீ. தாண்டி இருக்குது…”
    “மரம் நடறம்ன்னு போட்டோ புடுச்சுக்குறாங்க… மரங்களை வெட்டாமெ இருந்தா செரி…”
    “அங்கங்கே பூங்கா அமைக்கறாங்க. ஊரே பூங்காவா அழகா இருக்கணும்.”
    “ஊர்லே ஒரு பூங்கா இருக்கறதுக்கு பதிலா பூங்கா மாதிரி ஊர் இருக்கணும்.”
    “ஆமா… அதுதா சரி…”
    “வீதிதோறும் பூங்கான்னு கோஷம் போடறம். வீதியெல்லாம் பூங்கா மாதிரி வெச்சா எவ்வளவு நல்லா இருக்கும்.”
    “ஆமாமா… செரி… ஒரு ரகசியம் சொல்வேன். நீ மின்மினிப் பூச்சி. பகல்லெ கூட பளிச்சின்னு இப்பிடியே இருப்பியா…”
    “அது ரகசியம். உன் ஆசிரியர் கிட்ட கேள். பாடத்திலே என்னைப் பத்தித் தேடு…”
    திலீபன் திலீபன் என்று அழைக்கும் குரல்கள் கேட்டன.
    “எங்கம்மா அப்பா குரல்தா என்னைத் தேடறாங்க…” பாறையிலிருந்து மெதுவாக கீழே இறங்கினான். மின் விளக்குகளால் கண்கள் கூசின.
    “என்னையும் கல்லாறு பழப் பண்ணை தேடுது…”
    வெங்கடாசலமும், ராஜாமணியும் அவனை நெருங்கினர். “என்ன தனியா உக்காந்துட்டே…”
    “நீங்க ஏதோ ரெண்டு பேரும் சீரியஸா பேசிட்டிருந்தீங்க… அதுதா…”
    “வீட்டு விஷயம்தா. செரி போலாமா.”
    “அடுத்த வாரம் கல்லாறு பழப் பண்ணை பூங்கா போறம்ப்பா…”
    “புது பூங்கா கண்டுபிடிச்சிட்டியா…”
    “மின்மினி சொல்லுச்சு…”
    “அது யார் மின்மினி…”
    “பிரண்ட்ப்பா…”
    “செரி போலாம் திலீபன்”
    “அடுத்த வாரம் கல்லாறு பழப்பண்ணை பூங்கா. ரொம்பவும் உற்சாகமாக இருக்கப்பா…”

சுப்ரபாரதிமணியன்


Share