சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 22 ஜூன், 2017

           
----------------------------------------------------------------
                              உலக சுற்றுச்சூழல் தினம் விழா
----------------------------------------------------------------
உலக சுற்றுச்சூழல் தினம் விழா ஞாயிறு   மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருமதி சரோஜா வெளியிட புலவர் சொக்கலிங்கம்,. சிவராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஜோதி “  கொங்கு நாட்டுச்  சுற்றுச்சூழல் பிரச்சினைகள் “ என்பது பற்றி விரிவுரை நிகழ்த்தினார் .
( சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “., கோவை ஷப்னா புக் ஹவுஸ் வெளியீடு, பக்கங்கள் ரூ120, விலை ரூ 100 )
விழாவில் சுப்ரபாரதிமணியன்  பேசும்போது :

         கண்முன் தெரியக்கூடிய மிகவும் அதிசயமான இயற்கையின் அற்புதங்கள் மறைந்து வருவதை மனிதன் நினைப்பது இல்லை. எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக அதிசயமாயுள்ளது.அப்படித்தான் மரங்கள் அழிவதும்.

படைப்புக்கடவுளான பிரம்மாவின் தலைமயிரிலிருந்து எல்லா தாவரங்களும் மரங்களும் உருவாயின என்று கதைகள் உள்ளன.கால நிலை மாற்றம் பற்றி பேசுகிறோம் கால நிலை மாற்றத்துக்கான காரணங்களை அறிவதில் காடுகளும் மரங்களும் முக்கிய பங்காற்றுகின்றன.தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில் 238 தாவரங்களும்குறிப்பிடப்பட்டுள்ளன



  நம் இலக்கியங்கள் அடையாளப் படுத்திய பாடல் பெற்ற சிறப்புடைய நானூற்றி சொச்சம் மரங்களில் எத்தனை மரங்களை இப்போது உள்ளன. உலகின் தற்போதைய மக்கள் தொகையான 7.2 பில்லியன் எதிர்வரும் 2050-ம் ஆண்டு 9.2 பில்லியனாக உயரும் எனக்கூறுகிறார்கள். நிலம், நீர், காற்று மற்றும் ஏனைய இயற்கை வளங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவதே  காரணமாகும். புவி வெப்பமய மாதல், ஆற்றல் பற்றாக்குறை, அதிகப்படியான உணவுத்தேவை, பாதுகாப்பு, மண்வளம், காலநிலை மாற்றம், உயிரினங்களின் அழிவு மற்றும் பருவகால மாற்றங்களினால் ஏற்படும் நோய்கள் போன்றவை தற்கால சூழலின் சவால்களாக திகழ்கிறது.

. 2016-ம் ஆண்டு உயர்ந்த அளவில் வெப்பநிலை உலகெங்கிலும் காணப்பட்டது..அனலால் அலறினோம்.80 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆற்றல் தேவைகள் நிலக்கரியின் மூலம் பெறப்படுவதால் சூழல் மாசுபாடு அடைவதோடு புவி வெப்பமயமாதலுக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் 365 விலங்கினங்களும், 1236 தாவர இனங்களும் அழியும் தருவாயில் உள்ளதாக இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் கூறியுள்ளது. மேற்கண்ட சூழல் சவால்களை எதிர்கொண்டு சூழல் மண்டலங்களைக் காப்பதற்கு பல்துறை ஆராய்ச்சி இன்றியமையாததாக விளங்குகிறது.
அதற்கான விழிப்புணர்ச்சியாய் மறைந்து வரும் சில மரங்கள் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார். சக்தி மகளிர் அறக்கட்டளை விஜயா நன்றி கூறினார் .
( சுப்ரபாரதிமணியனின் “ அழியும் மரங்கள் “., கோவை ஷப்னா புக் ஹவுஸ் வெளியீடு, பக்கங்கள் ரூ120, விலை ரூ 100 )



திங்கள், 19 ஜூன், 2017

ஓ.. செகந்திராபாத் :  சுப்ரபாரதிமணியன் நூல்
------------------------------------
தனக்கேயான முகம்
 பெருங்குன்றூர் கிழார், ஹைதராபாத்

மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.

சுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள்.தனக்கும் தன் நண்பர்களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெறிகிறது.அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார்,

ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது..சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது  கிடைத்த  அனுபவங்களைத் தந்திருக்கிறார்.
               அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது,தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ,ராமாநாயுடுஸ்டுடியோ மணியோ,நா.கதிர்வேலனோ,அவர்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார் நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும்எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது.அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது.


"ரங்கண்ணாவை எங்கே ஆளையேகாணோம் என்று கேட்டுவிட்டால்போதும் எப்போதும் ஒரெ பதிலாக இருக்கும் மோண்டா மார்க்கெட்டில் எருமையோட ஒன்னா இருப்பேன் மார்க்கெட் எருமையில் ஒன்னு கொறஞ்ச"போச்சுன்னா ரங்கண்ணா இல்லேன்னு அர்த்தம்"
இந்த ஒரு பத்தியில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிிகிறது.  மோண்டா மார்கெட் என்பது செகந்திராபாத்தின் ஒரு காய்கறி மார்கெட்.முக்கிய இடம்.


செகதராபாத் கீஸ்ஹைஸ்கூலில் புத்தக கண்காட்சி நடத்தியதிலிருந்து,கனவு இதழ் வெளிவரக்காரணமாக இருந்த எல்லோரையும் நினைவு கூறும் அவர் மூளைத்திறன் வியக்க வைக்கிறது. கனவு இன்னும் முப்பது ஆண்டுகளாயும் வெளிவந்து கொண்டிருப்பது நல்ல விசயம்.
சிலக்கூர் பாலாஜி பாஸ்போர்ட் கடவுள் என்று ஒரு நிகழ்வை எழுதி இருக்கிறார் இதேஅனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. இதை படிக்கும் போது இருவருக்கும் ஒரே நிகழ்வு எப்படி என்ற கேள்வி எழுந்தது . பல நிகழ்வுகள், பல நினைவுகள் ஒரே மாதிரித் தெரியும் போது ஆச்சர்யமாக உள்ளது.

என் டி ஆர் மூன்று் முழுக்கோழி அதிகாலையில் தின்பார் என்பது வியப்பான தகவல்
எனக்கும் சுப்ரபாரதிமணியனுக்கும் உள்ள நட்பின் இருக்கும்
பலப்பல ஆண்டுகள் கடந்தது.எத்தனையோ ஞாயிறு பகல் பொழுதுகளில்  அவர் குடும்பத்தாருடன்  கழித்தற்கு மிக்க நன்றி. இத்தொகுப்பு அந்த நினைவுகளையெல்லாம் வெகுவாகத் தூண்டி விட்டது.  ஓ..செகந்திராபாத்  நினைவுக்குறிப்புகள் என்பது சரியான  தலைப்பே ஆகும்.

            செகந்திராபாத் அசோகமித்திரனின்  சொந்த ஊர் என்பதால் அவர் செகந்திராபாத்தை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், இருநாவல்கள் ( 18வது அட்சக்கோடு உட்பட ) எழுதியிருகிறார். சுப்ரபாரதிமணீயனும் செகந்திராபாத்தை  வைத்து சுமார் அய்ம்பது சிறுகதைகள், இருநாவல்கள் ( மற்றும் சிலர் , சுடுமணல்  ) எழுதியிருகிறார்.

இருவரும் ஒரே அலை வரிசைக்காரர்கள். அசோகமித்திரன்  மரணமடைந்து விட்ட தற்போதையச் சூழலில் இந்நூலில் சுப்ரபாரதிமணியனின் செகந்திராபாத் அனுபவங்கள் இலக்கிய மதிப்பீட்டில் உயர்ந்து நிற்கிறது.
(ஓ..செகந்திராபாத்  நினைவுக்குறிப்புகள் ரூ 100 : என்சிபிஎச், சென்னை )

 

சுப்ரபாரதிமணியனின் ஓ செகந்திராபாத் என்சிபிஎச் வெளியீடு, சென்னை ரூ 100

               




சுப்ரபாரதிமணியனின் ஓ.. செகந்திராபாத்..
செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள் : தாண்டவக்கோன்

ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின்
தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும்
அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை - நேர்ந்த அனுபவங்களை ஒரு
நாட்குறிப்பைப் போல வெள்ளை அறிக்கையாகத் தந்திருக்கிறார். இத்தொகுப்பை
வாசித்து முடிக்கும் யாருக்கும் வாழ்வின் மீது அதுவரை இல்லாத ஒரு புதுப்
பாசம் வந்தே தீரும்.

அநேகமாக நாம் அனைவருமே நம் வாழ்விற்கு ஏதேனும் ஒரு குறிக்கோளை
நோக்கமாக்கிக் கொண்டு அதைச் சார்ந்து சிந்திப்பதும் அதன் வெற்றிக்காக சதா
ஒடுவதுமாக இருக்கிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களில் நம்
ஓட்டத்திற்குச் சாதகமானவற்றைத் தவிர வேறெதையும் நம்மால் நின்று கவனிக்க
முடிவதில்லை. ஒன்று நேரமில்லை அல்லது ஈடுபாடில்லை.  ஒரு ரயில் பயணி
தொலைதூரக் காட்சிகளைப் பார்ப்பதைப் போல அநேக சம்பவங்களை நாம் கடந்து
கொண்டே கவனிக்கிறோம். நமக்கு அவற்றின் மீது பெரிய அக்கறையெதுவும்
வந்துவிடுவதில்லை. (நீங்கள் அவ்வாறு இதுவரை எத்தனை விசயங்களைத் தவர
விட்டிருப்பீர்களென்று உங்களால் ஒரு காகிதத்தில் குறிக்க முடியுமா..?
நினைத்தாலே மலைப்புத்தான் வரும்)

ஆனால் ஓ செகந்திராபாத்தை வாசிக்கும் யாருக்கும் தாம் இதுவரை வாழ்வின்
எத்தனை பகுதிகளைத் தவறவிட்டிருக்கிறோம் என்பது தோராயமாக ஆனால் சட்டெனத்
தெரிந்துவிடும். பிரதான சாலையில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் நம்
வாழ்க்கைப் பேருந்தை ஒருநாள் கிடைத்த மூலைமுடுக்குகளுக்குள் மட்டுமே
மாற்றி மாற்றி ஓட்டிக் கொண்டு ஒரு பயணம் போவோமானால் அதற்குப் பெயர்தான் ஓ
செகந்திராபாத்.

மகாபாரதக் கதையில் இலக்கைத் தவிர வேறெதுவும் தெரியவிவ்லை என்று
கைத்தட்டல் வாங்கிய அர்ச்சுனன் கூட அம்பெய்யும் காரியத்தின் போது மட்டுமே
வேறெதையும் கவனிக்காதிருந்தான். ஆனால் இன்றைய நவயுக அர்ச்சுனன்கள்
அனைவருமே தம் வாழ்வு தம் போக்குத் தவிர வேறெதையும் எப்போதுமே கவனிக்க
மறுக்கிறார்கள். தம் பாதையில் தென்படும் தமக்கு வணிக லாபமற்ற எதையுமே
குறுக்கீடுகளாய் எண்ணி உதைத்துக் கடக்கிறார்கள் அல்லது தாண்டிக்
குதிக்கிறார்கள். கூட்டமாக வசித்ததாலும் அத்தனைபேரும் வெறும் சில்லு
மனிதர்களே உலாவருகிறார்கள்.

ஊழியராக வேலைபார்க்கும் ஒருவர் மேலாளராகும் கனவோடு அலைகிறார். மேலாளராக
இருப்பவர் மண்ணடல மேலாளர் லட்சியத்தில் பறந்து கொண்டிருக்கிறார்.
அடிப்படை வசதிகள் அனைத்தமிருப்பவர்கள் கூட வாழ்வை சுவைபட வாழவில்லை.
கோவிலுக்கு அழைக்கும் மனைவி இடையூறாகத் தெரிகிறார். மருத்துவமனைக்கு
அழைக்கும் பெற்றோர் சுமையாகத் தெரிகிறார்கள். விளையாட அழைக்கும்
குழந்தைகள் எரிச்சல் தருகிறார்கள். ஒரு முறை இந்த ஓ செகந்திராபாத்தைக்
கையிலெடுங்கள் உங்களின் அன்றாட வேலைகளில் ஒரு புதுச் சுவை தெரியவரும்.
சீட்டுக் கட்டைக் கலைத்தப் போட்டு மறுபடி வேறு வரிசையில் அடுக்கியது போல
உங்கள் நினைவடுக்குகளில் ஒரு புது அடுக்கு தோன்றும். உலகத்தில் நாமொரு
சிறு புள்ளி என்பதற்கு மாற்றாக நமக்கு இவ்வளவு பெரிய உலகமிருக்கிறது
என்று பார்வைக் கோணம் மாறிவிடும்.

ஒரு புத்தக மதிப்புரைக்கு ஏன் இத்தனை வெளி விசயங்களைப் பேச
வேண்டியிருக்கிறது என்றால் மனதை அந்த அளவு விஸ்தரித்தக் கொண்டு ஓ
செகந்திராபாத்தைக் கையிலெடுத்தால் மட்டுமே அதன் பலன்களை
அனுபவிக்கமுடியும் என்பதால்தான். சும்மா இளநீரில் ஸ்ட்ரா போட்டு உறிகிற
மாதிரி இதைச் சுவைத்தெறிய முடியாது. நல்ல ஆசுவாசமாக இருக்கும் நாளாகப்
பார்த்து பெரிய வட்டில் அல்லது நன்கு பரந்த தலைவாழை இலையாகப் போட்டு முழு
விருந்தாக உண்டுகளித்தால் மட்டுமே முழுப்பலன் கிட்டும்.

பாபர்மசூதி இடிக்கப்பட்ட நேரம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த ஒரு நகரில்
ஒற்றையாய் நீங்கள் உலாத்தியதுண்டா..? அங்கே அன்றாடப் பிழைப்பிற்கான
அத்தியாவசியப் பொருட்கள் வாங்குதற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரப்
பொழுதில் கூட  தம் உறவுகளின் இருப்புக்களை அறிந்து கொள்ளத் தொலைபேசி
நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மனிதர்களின் உள்ளக்
கிடைக்கைகள் தெரியுமா உங்களுக்கு..? அது போன்றதொரு நெருக்கடியான
நேரத்தில் ஒர சாமானியன் அங்கே உலாவுதலுக்கும் ஒர படைப்பாளி
உலாவுதலுக்கும் பெரிய வேறுபாடுகளிருக்கிறது.

சாமானியனுக்குத் தன்னைக் காத்துக் கொள்வதும் தப்பியோடுவதுமே அந்நேரத்து
தர்மமாக இருந்திருக்கும். படைப்பாளி மட்டுமே தப்பியோடும் போதும்
திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுகிறான். கண்ட காட்சிகளை பெற்ற
அனுபவங்களை படைப்புகள் வழியாக சமூகத்திற்கு ஒரு கற்பிதக் கலையாகத்
தருகிறான். அதிலும் சுப்ரபாரதி தனக்கென வெளிப்படையான அரசியல்
நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பதால் அவரின் விவரிப்புகளுக்குள் கூர்மையான
அரசியல் விமர்சனங்களும் கலந்தே வந்திருக்கின்றன.

செகந்திராபாத்தோடு இரட்டை நகரென்று சொல்லப்படும் ஹைதராபாத்திற்குள்
செல்கிறார் படைப்பாளி. தமிழக அரசியலில் முக்கியப் புள்ளியென்று
அறியப்படும் ஒருவரின் திராட்சைத் தோட்டத்தை ஒரு பத்திரிகைச்
செய்திக்காகப் புகைப்படமெடுக்க இவர் செய்த பிரயத்தனங்கள் ஒரு திகில்
கதையின் சிறு பகுதியை ஒத்திருப்பன. புகைப்பட நோக்கத்தோடு திராட்சைத்
தோட்டக் காவலாளியிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள முயல்வதும்
இருவருக்குமான மொழிகளின் ஒவ்வாமையால் அம்முயற்சியைக் கைவிட்டு
தோட்டத்தின் சுற்றச் சுவரை எங்கேனும் திறப்புக்கள் இருக்காதா ஒர
புகைப்படமெடுக்க முடியாதா என்று  கோட்டைச் சுவர் போன்ற அத்தனை பெரிய
மதிலைச் சுற்றி அலைந்து பிறகு அதுவும் தோல்வியில் முடிவது ஒரு திரைப்படக்
காட்சி போல மனதில் பதிகிறது.

செகந்திராபாத்தின் புறநகர்ப் பகுதியொன்றில் ராணுவப்பயிற்சி
முகாமிருப்பதும் அங்கு பயிற்சியின் போது வெடித்துச் சிதறும் ஈயக் குண்டு
சிதிலங்களுக்காக ஒரு வறிய கூட்டம் மண்ணை அள்ளிப் பிழைப்பதும் ஆச்சரியம்
ஆனால் உண்மை ரகச் செய்திகள். செகந்திராபாத்தின் தமிழர் பகுதிகளில் துணி
விற்றுப் பிழைப்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு நண்பர் பிழைப்பை
விட்டுவிட்டு தானும் மண்ணள்ளிச் சேகரிப்பதும் அது அவரது தாயாராலேயே
முறியடிக்கப் படுவதும் வலிமிகுந்த நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இத் தொகுப்பு முழுக்க பல நண்பர்களைக் கொண்டாடியிருக்கிறார் படைப்பாளி.
ஒரு எழுத்தாளருக்கு நண்பராய் அமைவதுகூட அதிர்ஷ்டமானதுதான். ஏனெனில்
இத்தொகுப்பில் வரும் முஸ்தபா போல தன் நண்பர்களுக்கு வருடாவருடம் பிரியாணி
பார்சல் கொண்டு வந்து தரும் நிறைய முஸ்தபாக்களை நானறிவேன். ஆனால்
அவர்களுக்கெல்லாம் சுப்ரபாரதியின் முஸ்தபாபோல ஓ செகந்திராபாத் போன்ற
நன்றியறிவிப்பு ஆவணங்கள் எங்கே படைப்பப்படுகின்றன. வட்டித் தொல்லை
காரணமாகத் தற்கொலை நடந்து விட்ட ஒரு தமிழரின் துக்க வீட்டில் தஞ்சமடைந்து
கொண்டு தன் நண்பன் முஸ்தபாவுக்கும் வட்டித் தொல்லை இருக்கிறதே அதுதான்
முஸ்தபாவின் சோர்வுக்காண காரணம் என்றெல்லாம் எண்ணும் ஒரு படைப்பு மனம்
தாய்மைக்கு நிகரானது.

ஆரம்பத்தில் இத்தொகுப்பை வெள்ளை அறிக்கை என்று சொன்னதற்கான சாட்சியங்கள்
நிறைய உண்டு. உதாரணத்திற்கு ஆட்டோக்காரரிடம் இருபது ருபாய்க்காக முரண்டு
பிடித்தது. தகறாரில் தப்பித்து வீடடைந்து மூச்சு வாங்கும் நிகழ்வைப்
படிக்கும்போது நகைப்புக்குரியதாக முதலில் தோன்றுகிறது. பிறகு நம்
ஒவ்வொருவருக்கும் அப்படியான துரத்தலொன்றும் நகைப்புக்குரியதான
தருணமொன்றும் இருக்கவே செய்கிறது என்று உணரும்போது இது போன்ற
சம்பவங்களையும் தயங்காது பதிவு செய்வதன்றோ நிஜத் துணிச்சல் என்றே
முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

ஆனால் அதே சமயம் வெளிப்படை என்ற ஒன்றிற்காக தொகுப்பு சில வரம்புகளையும்
தாண்டி விட்டதோ என்றெண்ணவும் சில சாத்தியங்கள் இருக்கின்றன.
முஸ்தபாவிற்கான நன்றியைப் போன்ற பதிவுகளின் போது பிரச்சனையில்லை. ஏனெனில்
அதைப் படித்தால் அதற்கான பதிலாக முஸ்தபாவிடமிருந்தும் இன்னொரு நன்றியே
கிடைத்திருக்கும். ஆனால் சிலரின் பாலியல் திரைப்பட ஆர்வங்கள் இங்கே
பதியப்பட்டுள்ளன. குடும்பப அங்கத்தினர் நெருக்கடிகள் தந்ததாகவும்
செய்திகளிருக்கிறது. ஒருவேளை அவ்வாறு குறிப்பிடப்பட்ட அவர்கள்
எதிர்வினையாற்ற வாய்ப்பற்றவர்களாக இருக்கலாம். அது படைப்பாளியின்
பலமாகிவிடாது. புத்தகமெனும்  பொது வெளியில் சாமானியர்களைப் பற்றிய நேரடி
விமர்சனங்களை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

திரு. சுப்ரபாரதிமணியனின் பயணக் கட்டுரைகளும் பயணக் கட்டுரைகளும்
வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை தகவல் களஞ்சியங்களாக பொங்கிப்
பிரவகிப்பவைதான். ஆனால் பொதுவாக அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர்
இலக்கியங்களுக்கும் அவர்களின் சொந்த மண்ணிலும் வரவேற்பிருக்காது. அவர்கள்
ஊரைவிட்டு ஓடியவர்களாகக் கருதப்படுவதால். புலம்போன இடத்திலும் நல்ல
அனுபவம் கிட்டாது. அங்கே இவர்களை வந்தேறிகள் என்பர்.

அரசுகள் ஆளாளுக்கு உலகக் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்த மண்ணைக் கிராமம்
கிராமமாகக் கூறு போட்டு குத்தகைக்குத் தந்து கொண்டிருக்கும் ஆபத்தான
வரலாற்றுக் காலத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஊமைச் சந்ததிகள் நாம்..
நிலைமை சீராகாதெனில் விரைவில் மக்கள் என்றொரு பதமே அழிந்து
கார்ப்பரேட்டுகளும் அடிமைகளும் மட்டுமே எஞ்சியிருக்கப்போகும் நிலைமை
வரும். நடப்பதையெல்லாம் பார்த்தால் யார் எந்தக் கணத்தில் புலம் பெயர்ந்து
கிளம்பப் போகிறோம் என்றோ அல்லது எங்கேனும் வந்தேறிகளாய் விரட்டப்படப்
போகிறோமென்றோ தெரியாது. ஆனால் அப்போதெல்லாம் ஓ செகந்திராபாத் போன்ற
இலக்கியங்கள்தான் நிச்சயம் கையேடுகளாக இருக்கக் கூடுவன. அன்று சுப்ரபாரதி
போன்றோர் உளவியல் யுவான்சுவாங்குகளாகக் கொண்டாடப்படுவர்.
( என்சிபிஎச் வெளியீடு , சென்னை rs 100 )





------------------------------------
shortstory

சில நிறுத்தங்கள்: சுப்ரபாரதிமணியன்




            பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .

முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச்  சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.

எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.
 " பார்க்கற பார்வை...சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக..."

" நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா..."

" இங்க இருக்கறவங்களெ விட அழகுதா..."

" செரி... செரி... பேரழகியா நெனச்சக்காதே"

 ஏதாவது பிரச்னை என்றால் மஞ்சுளாவிடம்தான் சொல்வாள். அவளும் " நீ என்ன பெரிய அழகியா என்றுதான் கேட்டிருக்கிறாள். " உன்னெ விட நான் அழகிதாண்டி " என்பாள். ஏதோ வொருவகையில் அவள் தூரத்துச் சொந்தம். அப்பா அம்மாவை மஞ்சுளா கூட வைத்துக்கொண்டு திண்டாடுபவள். அவள் அண்ணன் திருமணம் செய்து கொண்டு தனியே போய் விட்டான். அவள் அம்மா செம்மறி ஆடுகள் நாலைந்தை வைத்துக் கொண்டு புல், செடி கண்ட இடங்களில் மேய்த்துக் கொண்டிருப்பாள்.
       மஞ்சுளா பெரிய மனுஷி ஆன பின்பு ஆடு மேய்க்கப் போவதில்லை. கொஞ்ச நாள் மில்லிற்கு போனாள். பஞ்சு மூக்கில் நுழைந்து இருமலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்ததால் மில்லிற்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். இன்றைக்கு நூறு நாள் வேலைக்கு மங்கள கிருஷ்ணன் கூப்பிட்டால் போலாம். இல்லையென்றால் மஞ்சுளா வீட்டிற்கு போகலாம் என்று நினைத்திருந்தாள் அருணாதேவி.  ஒரு நல்ல பருப்பாவது சாம்பாராவது சுவைக்காக கிடைக்கும். புது இடம் புது ருசி என்பாள்.

பழையனூரின் இரண்டாம் பேருந்து நிறுத்தம் புதிய பழையனூர் நிறுத்தம். பெரிய வேப்பமரம் ஒன்று அதன் ஆகிருதியுடன் நின்றிருக்கும். ஒவ்வொரு காலத்திற்கும் தகுந்த மாதிரி வேப்பிலை கொழுந்து, வேப்பம்பழம், இலைகள் உதிர்ந்து அந்த மரத்தடி ரம்மியமாகவே இருக்கும். இளஞ்சேரல் பழையனூர் வடக்குப் பகுதி மூலையில் ஒரு தோட்டம் வாங்கி சுள்ளிக் கரடாக இருந்த இடத்தில இயற்கை வேளாண்மைக்காக ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தான். கணிணிப் பொறியாளராக இருந்து பெங்களூர் , அமேரிக்கா என்று பத்தாண்டுகள் அலைந்துவிட்டு கோவைக்குத் திரும்பியவன் அங்கு வந்து இடத்தை வாங்கினான். நிலத்தை ஒழுங்குபடுத்தி வேலி போட்டான். மண் புழு உற்பத்தி என்று ஆரம்பித்திருந்தான். காய்கறி போட ஆயத்தம் செய்து கொண்டிருந்தான். அந்த இடத்தில யாரவது தங்கியிருந்து பார்த்தால் நல்லது என்று ஷெட் போட்டிருந்தான். ஒரு குடும்பமாக இருந்தால் நல்லது என்று நினைத்திருந்தான். சுப்பையாவைப் பற்றி யாரோ சொல்ல இளஞ்சேரல் தொடர்பு கொண்டிருந்தான். சுப்பையாவிற்காக இளஞ்சேரல் காத்திருந்தான். அவனின் கண்களில் இருந்த கறுப்புக் கண்ணாடி வெய்யிலின் தாக்கத்தை குறைத்திருந்தது. எல்லாவற்றையும் லேசான கறுப்பில்தான் காட்டிக் கொண்டிருந்தது

" எனக்கே இது மாதிரி நினைப்பு இருந்துச்சு. ஒரு தாய் தமிழ்ப் பள்ளி ... ஒரு இயற்கை வேளாண்மைத் தோட்டம்ன்னு கொஞ்சம் கனவு இருக்குது. "

" தாய்த் தமிழ்ப் பள்ளி பெய்லியரா "

" அரசாங்க ஆதரவு இல்லெ. நோஞ்சான் கொழந்தை மாதிரி இருக்குது. "

" நாம ஒன்னு இங்க முயற்சி பண்ணலாமா..."

" மெட்ரிகுலேஷன் பள்ளிக நாலஞ்சு ஊரச் சுத்தி இருந்து பயமுறுத்துது. மொதல்ல இயற்கை வேளாண்மைத் தோட்டம் பாருங்க. எனக்கே இதிலே தங்கிப்பார்த்துக்க ஆசைதா. வீட்லே யாருக்கும் அக்கறை இல்லே. பரம்பரையான வூடு. வெளியே போக வேண்டாமுன்னு பாக்கறேன்" என்று சொல்லியிருந்தான். சுப்பையாவுக்காக இளஞ்சேரல் காத்திருந்தான். கை குறி பார்க்கும் பெண்ணொருத்தி பத்தடி தூரத்தில் கனத்த பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தப்பாறையை உடைக்காமல்  அப்படியே விட்டு வைத்திருப்பதை ஆச்சர்யத்துடன் பலர் பார்த்துச் செல்வார்கள்.

பழையனூரில் மூன்றாவது சந்திப்பு முனியப்பன் கோவிலின் முகப்பில் இருந்தது. அங்கு கிளி ஜோசியர் ஒருவர் உட்கார்ந்திருப்பது பழமையான விஷயம். மலை வெய்யில் என்று தாக்குபிடிப்பிக்காமல் இருக்கும் போது கொஞ்சம் இடம் மாறி உட்காருவார். மற்றப்படி முனியப்பன் கோவில் மேடைக்கு கீழ் இருந்த இடம் அவருக்கு நிரந்தரமானது. என்பதுபோல் உட்கார்ந்திருப்பார். மேடைச் சுவரோடு கட்டிவைத்தது போல் அவரின் கிளிக்கூண்டு நெருங்கியிருக்கும்.

" தாலிக்குத் தங்கம், 3 வருடம் வேலை செய்தால் 30,000 ரூபாய் கல்யாண செலவுக்கு. தங்குமிடம், சாப்பாடு இலவசம்." என்ற ஒரு பிரசுரத்தை ஒருவன் கொடுத்துக்கொண்டிருந்தான். 
ஜோசியக்காரர்    " தள்ளி நில்லுப்பா...நம்ம கிளிக் கூண்டை மறைக்கறே " என்று சத்தமிட்டார்.
 " இது எங்கப்பா..எந்த ஊர்லே ."

" வேட செந்தூரிலே "

" அங்கதா மில்லுக குவிஞ்சு கெடக்குதே. இந்த ஊர்ல இருபது வருஷத்துக்கு முந்தி ஒரு மில்லு இருந்து அப்போ மாங்கல்யத் திட்டம்ன்னு பேர் இல்லாமெ கேரளப் பொண்ணுகளே வெச்சு வேலை வாங்குனாங்க. பணம் தர்லே ஏமாத்திட்டாங்க.ஒரு பொண்ணெ கர்ப்பம் பண்ணிட்டாங்கன்னு ஏக காம்ப்ளயிண்ட். ஒரு கேஸ் கூட கோர்ட்ல இருக்கு. சொன்ன பணம் வரலேன்னு.."

" இதுலே எல்லாம் செரியா நடக்கும். நல்ல சாப்பாடு . தங்கற வசதி "

" உனக்கு எவ்வளவு கமிஷன் "

" இருக்கு... ஆயிரம் ஒரு ஆளுக்கு. ரெண்டாம் வருசமும் அவங்க அங்கேயே இருந்தா இன்னம் ஐநூறு கிடைக்கும். ஆமா ஜாதகம் பார்க்கறதுக்கு வர்ரவங்க இருக்கற ஊர்ல நீ வந்து கிளி ஜோஸ்யம் போட்டிருக்கே "

" பாஸ்ட் புட் மாதிரி உடனே பலன் கேட்க வர இன்னும் ஆளுக இருக்காங்க. உனக்கு கல்யாணம் ஆகலையா. ஒரு சீட் பாத்திரலாமா. சுமங்கலித் திட்டப் பொண்ணேயே பாத்திரலாமா."
உன் வேலையெ நிறுத்தற மாதிரி ஏதாச்சும் செய்யணும் ..
அவன் எதைச் சொல்கிறான். கிளி ஜோதிடம் பார்ப்பதைச் சொல்கிறானா. சுமங்கலித்திட்டத்திற்குப் பெண்களைப் பிடிக்கும் வேலையைச் சொல்கிறானா  என்று யோசிப்பதைப்போல் கிளிக்கூண்டைப் பார்த்தான் ஜோசியகாரன்.
subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003



shortstory



முழுக்கைகள் : சுப்ரபாரதிமணியன்

              காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள்  விடுமுறை என்று பெனாசிர்  சொல்லியிருந்தாள்.  புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய  இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.
                  பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன  சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.    
                  “என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.
இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே
அப்பிடி ஒன்றும் தெரியலெ
ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது

ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக  வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.
உங்களுக்குன்னு தனி க்யூ இல்லே
தெரியும்
உங்களுக்குன்னு தனி இரண்டாவது கியூ இல்லெ
தெரியும்னேன்
அது.... ஊனம் சார்ந்த கியூ
அதுவும் தெரியும்ன்னேன்
புரிஞ்சுகிட்டா சரி
செரி போ
ரேசன் கார்டுலெ இன்னொரு சீட் ஒட்ட வந்திருக்கீங்க, உங்க கையிலயும் இன்னொன்னே ஒட்டிக்கலாம்
பேச்சு எல்லை மீறுது
யோசனையாத்தா சொன்னேன்
என்ன யோசனை
யோசிக்கறதுதா
செயற்கை கை வெச்சுக்கிறது
செரிப்பட்டு வருமா தெரியலே
ஒரு கையோட வாழ்க்கை முழுக்க இருக்க முடியுமா, ஒரு கை ஓசை ஆகுமா
எல்லாம்  செரிதா, ரெண்டு கை வெச்சிட்டுப் பண்றதை ஒரு கையில் பண்ணிக்க வேண்டியதுதா
ரொம்பவும் சரியான்னு தோணலே
ஏதோ க்யூ வரிசையில நிற்கிறோம். முன்னால நிக்கிறீங்கன்னு நீங்க சொல்றத கேட்டுக்க வேண்டியிருக்கு
யாராச்சும் சொல்ல வேண்டியெதெ நான் சொல்றன்
அதுக்காக எது வேண்ணாலும்  சொல்ல்லாமா,,,”
பட்டதைச் சொன்னேன்
 “பரவாயில்லெ
அதற்குள் வரிசை நகர்ந்து ரேசன் கடைக்காரர் முன் வந்து நிறுத்திவிட்டது.பக்கத்தில் இருப்பவர் நீள மஞ்சள் அட்டையை வைத்திருந்தார்.சில வெள்ளை அட்டைகளும் தென்பட்டன. சர்க்கரைக்கென்று தனி அட்டை இருக்குமா. அட்டை என்று எதிலும் பேர் இல்லை. அப்பா பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த்து இப்போது நீக்கப்ப்பட்டிருக்கலாம்.உள் தாள்கள் எல்லாவற்றிலும் ஏகதேசம் துருத்திக் கொண்டிருந்தன.
என்ன கார்டுலெ ஆம்பள பேர் இருக்குது
ஆமாங்க
நீங்க ஆம்பளையா
வீட்டு ஓனர் கார்டு
பொம்பளைதானே நீங்க
செரி.... இதுக்கு ஆராய்ச்சி வேணுமா
நீங்க நிக்கிறதப் பாத்தா ஆராய்ச்சி பண்ணனும்னு தோனுது
என்னன்னு
திருநங்கையோன்னு
அய்யோ போதும்
செரிம்மா, எதுக்கு அனாவசியப் பேச்சு, வீட்டுக்காரரை வரச் சொல்லு
அதுதா
வீட்டு ஓனரை
வரச் சொல்றன்
வீட்டு சொந்தக்கார்ர் சென்னப்பன் மீது எரிச்சலும் கோபமும் வந்தது. முன்னால் நின்று கேள்வி கேட்டவனின் மேல் எரிச்சலும் கோபமும் வந்தது. தன்னை எங்கோ  கொண்டு போய் தள்ளிவிட்ட பெனாசிர் மீது கோபம் வந்தது. வேலையில்லாமல் சும்மா இருப்பவள் என்று எங்காவது துரத்தி விடுகிறார்கள்.
ஒண்ணு கேக்கறம்ன்னு தப்பா நெனைக்காதீங்க அக்கா
செரி சொல்லு. எங்க குடும்பத்தைப் பத்திக் கேக்காதே
என்னைப் பத்திதா அக்கா
உங்க வீட்டுக்கு வந்து தங்கினன், என்னை மில்லுக்கு அனுப்பனும்னு உங்களுக்கு எப்பிடித் தோணிச்சு
என்னோட பனியன் கம்பனிக்குக் கூட்டிட்டுப் போலாமுன்னுதா நெனச்சன். அவங்க மொதல்ல கூட்டற பொறுக்கற வேலைதா குடுப்பாங்க. செக்கிங்ன்னு வர்றதுக்கு மாசக் கணக்காயிடும். என்ன செய்யறதுன்னு பசீர்கிட்ட கேட்டன். நம்ம ஒத்த லைன்ல ஆறாவது வீட்லெ இருக்கறவர், அவர் மில் புரோக்கர்ஸ்டீபன்னு ஒருத்தர்கிட்ட வேண்ணா சொல்றன்னார்
இல்லே, நீங்களே புரோக்கர்ன்னு திடீர்ன்னு சந்தேகம் வந்துச்சு
நான் புரோக்கரா இருந்தா எதுக்கு பனியன் கம்பனியில கெடக்குறன். அந்த வருமானமே போதுமே. ஆனா சங்கடமால்லே இருக்கும் 
புரோக்கர் ஆக ஆசையா
வேண்டா, எங்க, என்ன நடக்குமோ, அது பின்னே என் தலைமேல வந்து விழுந்திரும். புரோக்கர் வேலை பண்றதெக்கல்லாம் மன தைரியம் வேணும், பொய்யும் சுலபமா சொல்லணும், அல்லா குடுத்த இந்த வகை நிம்மதி போதும். ஆயிரம் ரூபா கெடைக்குதுன்னு யாரை எங்க தள்ளறம்னு வெவஸ்தையில்லாமத் தள்ளிருவாங்க. பாவம் எங்கெங்கையோ போய்ச் சேரும்.
என்னமோ ஒரு சந்தேகம் வந்துச்சக்கா
நிவர்த்தி பண்ணிட்டையே, நல்லதுதா
ஆனாலும் பெனாசீர் மீது ஏன் கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தெரிந்த முகத்தின் மீதே காறித் துப்ப முடியும். தெரிந்தவர்கள் மீதே எரிச்சல் வருகிறதா, இந்த எரிச்சலை அவள் புரிந்து கொண்டால் என்ன நடக்கும். இனி யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் என்ற தீர்மானம் வரும்.

                  இரவே முத்து லட்சுமி புளிச்சாதம் தயார் செய்திருந்தாள். காலை முழிப்பில் அவசரமாய் எழுந்து தேங்காய் சாதமும் செய்துவிட்டாள்.சாதங்களின் மணங்களில் அறை கமகமத்துக் கொண்டிருந்தௌ. பட்டினியும், போதாத சோறும் கிடைக்கிற இடத்தில்தான் இந்த அபூர்வ மணம் தெரிய வரும்.
                  “புளிச் சோறு ஊருல இருக்கறவங்களுக்கும் சேத்து செஞ்சிருக்கே போல
                  புளிச் சோறின் மணம்  கமகமவென அறை முழுக்க நிரம்பி இருந்தது.  கொஞ்சம் வேர்க்கடலையைச் சேர்த்து கலவையாக்கியிருந்தாள். அது வானத்து வெளிறிய நட்சத்திரங்கள் போல் மின்னின.
                  “ஒரு வா சாப்புடு அக்கா
                  பெனாசீர் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு முன்பு ஒரு சிறு வெங்காயம், ஒரு துண்டு நெல்லிக்காய், பனை வெல்லம் ஒரு துண்டு என்று சாப்பிடுவாள். யாரோ சொல்லி  வைத்திருக்கிறார்கள். புளிப்பு, இனிப்பு வெங்காயம் என்று ஒவ்வொரு  வேளைக்கு முன்பும் சாப்பிட்டு வழக்கமான சாப்பாட்டிற்குப் போனால் அதுவே உடம்பிற்கு எதிர்ப்புச் சக்தி தரும் என்று. அதைத் தவறாமல் கடைபிடிப்பாள்.
                  “இந்த சாக்கடை ஊர்ல கொஞ்சம் நோய் இல்லாமெ வாழறதுதா பெரிய போனஸ்
                  மில்லில் வேலை செய்கிறவர்களுக்கு மில் நிர்வாகமே வெல்லம் தரும். வாயுள் போகும் பஞ்சு கரைந்து போகப் பனைவெல்லம் நல்ல மருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறாள். முத்துலட்சுமி சுமங்கலித் திட்டத்தில் வேலை செய்த மில்லில்  அதெல்லாம் தரவில்லை. முகமூடி போன்று தந்தார்கள். மூக்கை மூடிக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டால் மூச்சுத் திணறுவது போல் இருக்கும்.

                  அது நாலு நாளில் நாற்றமடிக்கும் என்று பலர் அணிந்து கொள்வதில்லை. பெனாசீர் செய்வதைப் போன்று தானும் செய்ய நினைப்பாள். நெல்லிக்காய் கெடைக்கும். இதை நம்ம லைன் வீட்ல இருந்த ஒருத்தர் சொன்னார். அவர் நெல்லிக்காய்க்குப் பதிலா  சின்ன தேங்காய்த் துண்டு சாப்பிடுவார். ஒடம்பை ஜாக்கிரதையா வெச்சிட்டா மரியாதையா இருக்கும்.
                  மாலை நேரத்தில் லைன் வீட்டுப் பெண்கள் கோலம் போட வாசலில் இருப்பார்கள். மற்றபடி தொலைக்காட்சியைப் பார்த்தபடி வீட்டினுள்ளேயே கிடந்தார்கள். கணவர்களை வரவேற்க யாரும் வீட்டு வாசலில் வந்து உட்காருவதில்லை.
                  “இது பெரிய ஆபீஸ் வேலையா என்ன. கரெக்டானா டைமுக்கு வந்து போறதுக்கு. எப்ப வேண்ணா வருவாங்க. போவாங்க. பனியன் கம்பெனி வேலை அப்படி
                  ஐந்தாம் வீட்டு கோபண்ணன் வீட்டில் இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாது. இரவில் தாறுமாறான நேரத்தில் வருவார். வரும்போதே தள்ளாடின போதையில் இருப்பார். தள்ளாடாமல் அவர் வந்த நாளை எண்னி விடலாம் என்று அவன் மனைவியும் சொல்லியிருக்கிறாள்.
                  கதவு அடைத்தால் அவ்வளவுதான். யாரும் திறக்கமாட்டார்கள். காலையில் சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினால் இரவுதான் வருவார். பெரும்பாலும் எல்லா வீட்டு ஆண்களும் இங்கு இப்படித்தான் என்று பெனாசீர் சொல்லியிருக்கிறாள்.
                  “வெந்ததைத் தின்னு விதி வந்தா செத்தும் போறதுக்கு உதாரணம் இந்த காம்பவுண்ட் ஜனங்க. இந்த ஒத்த வீட்டு ஜனங்க
                  “தீபாவளிக்குன்னு வந்து ஒண்ணா பட்டாசு வெடிப்பாங்களா
                  “எல்லாருமே வெளியூர்க்காரங்க. தீபாவளி வந்தா மூணு நாள் முந்தியே ஊருக்குப் போற அவசரத்திலேயே இருப்பாங்க. திருவண்ணாமலை தீபம் வர்றப்போ தீபாவளியை நெனச்சிட்டுப் பட்டாசு வெடிச்சுக்குவாங்க. இப்பதா வெளியூர்க்காரங்கன்னா ஆந்திரா, கேரளம்ன்னு இல்லாமெ, நேபாள், ஒரிசா, பெங்கால்காரங்கன்னு ஆகிப்போச்சே
                  “யார் யாருக்கு வாடகைக்குத் தர்ரதுன்னு எல்லையே கெடையாது. யார் வந்து கேட்டாலும், அட்வான்ஸ் குடுக்கத் தயாராக இருந்தால் வீடு கெடச்சிடும். வர்றவங்க எப்பிடி இருந்தாலும் செரி
                  வீட்டுக்காரர் தென்னம்பாளையத்தில் இருந்தார். வாடகை முதல் வார ஞாயிறில் வசூலிக்க வருவார். இல்லாவிட்டால் இரண்டாம் வீட்டில் இருக்கும் கோவிந்த் வாங்கி வைத்துக் கொள்வார். இருக்கும் மூன்று கழிவறைகள், மூன்று குளியலறைகளைப் பயன்படுத்துவதில் சிரமங்களோ, பிரச்சினைகளோ இருந்தால் சென்னப்பனே பார்த்துக் கொள்வார். சாக்கடை அடைத்துவிட்டது, தண்ணீர் போகவில்லை இரண்டு நல்ல தண்ணீர் குழாய் தண்ணீரைப் பிரித்துக் கொள்வதில் எல்லாவற்றுக்கும் ஒரு நாயகமாக சென்னப்பன் இருப்பார். இது சம்பந்தமாய் அவர் மனைவியிடம் ஆலோசனை சொல்வார். அதை மட்டும் கன்னடத்தில் சொல்வார்.அப்போது கன்னடம் அதிகாரத்தில் வந்து நிற்கும்.
                  லைன் வீடுகளில் நடக்கும் சிரமங்கள் பற்றி அவர் நேரம் கிடைக்கையில் சொல்வார். பத்மாவதிபுரம் லைன் வீட்டொன்றில் ஒருவன் புதிதாக குடி வந்திருக்கிறான். அவன் சாயப்பட்டறையில் வேலை செய்யும் சக தொழிலாளயின்  மனைவியைக் கூட்டி வந்து குடித்தனம் நடத்தி இருக்கிறான். ஒரு நாள் பழைய கணவன் சாயப்பட்டறை அமில பாட்டிலுடன் வந்து வீசி ஊற்றியிருக்கிறான். ஆணின் உடை போடாத இடமெல்லாம் வெந்துவிட்டன. முகம் கொப்பளித்துவிட்டது. ஆடை மூடின பகுதிகள் ஒட்டிக் கொண்டுவிட்டன. முப்பது சதவீதம் தீக்காயம்  போலாகிவிட்டது. லைன் வீட்டிலேயே இது நடந்ததால் பெரும் பிரச்சினையாகி காவல்துறையினர் வந்து சிரமப்படுத்தியிருக்கிறார்கள்.
                  “இங்க எல்லாரும் குடிகாரப் பயல்களா இருக்கிறதுனாலே குடிச்சிட்டு பிளாட் ஆகிறதுக்கே நேரம் இல்லாம இருக்கு. இது சௌகரியந்தா
                  “என்னங்க சௌக்கியம், குடிச்சிட்டு கெடக்கிறதா
                  “இல்லீன்னா ஊர் வம்பை வெலைக்கு வாங்குவாங்க. யார் பின்னாலேயாச்சும் திரிஞ்சு பிரச்சினையில மாட்டிக்குவாங்க
                  அப்படிக் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட நேபாளிகள் இருவரைப் பற்றி சென்னப்பன் பெனாசிரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்சாயப்பட்டறையில் அந்த நேபாளிகளுக்கு வேலை. ரெண்டு பேரும் சின்ன வயது. குடி மயக்கத்தில் என்ன பண்றாங்கன்னு தெரியாமெ கம்பரசர் காத்து டியூப்பை எடுத்து ஒருத்தன் இன்னொருத்தன் ஆசன வாயில் வெச்சிட்டான். அவன் வயிறு உப்பி வெடிச்சு செத்துப் போயிட்டான். ஏழு வருசம் ஜெயில். நாலு பேர் வாழ்க்கை போச்சு
                  “ரெண்டு பேர்தானே
                  “ஆமா, செத்துப்  போனவன் ஒருத்தன். காத்து பைப் வைச்சவன் ஒருத்தன். அவனுகளுக்கு பொண்டாட்டின்னு ரெண்டு பேரும் இருக்காங்கில்லயா, அதுதா நாலு பேரு
                  பேருந்து நிறுத்தம் வரை கூட வருவதாய் கிளம்பினாள் முத்துலட்சுமி.எதிலும் அவசரமில்லாத பொழுதுதான் அங்கும் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
                  “சாப்பாட்டுப் பைன்னு ஒண்ணு தனியா இருக்கேக்கா
                  “வீட்லே சமையலுக்குன்னு நீ வந்தப்துபுறம் சாப்பாடு கொஞ்சம் அதிகமாய் போச்சு.  ரெண்டு வாய் அதிகமா எறங்குது. ருசியா வெவ்வேறயா சமச்சும் போடற, இன்னிக்கு மட்டன் எடுக்கிறா வேற சொன்னேன்
                  “வந்தப்புறம் எடுத்தர்லாம். காடை கெடச்சாலும் செரி
                  சண்டே மார்க்கெட் என்று புதியதாய் ஒன்று கிளம்பியிருந்தது. அங்கு சிக்கன் வாங்கப் போன முத்து லட்சுமிக்கு ஒரு புதுத் தகவல் கிடைத்தது. ஜனதா சிக்கன் என்று ஒரு வகை சண்டே மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறந்தது. ஒரியாக்காரர்கள் அதில் ஜனதா சிக்கனுக்குக் காத்திருந்தார்கள். மிச்சமாகிற எலும்பில்கொஞ்சம் சதைத் துணுக்குகள் ஒட்டிக்  கொண்டிருக்கும். கொஞ்சம் சதையும், எலும்பும் கலந்திருக்கும் அதை பிரிசரில் போட்டு வைத்திருக்கிறார்கள். வழக்கமான விலையை விடக் குறைவு. சூப்புப் போலக் குடிக்கலாம். மசாலா பொடி போட்டுக் குழம்பாக்கிக் கொள்ளலாம்.
                  ஒருவாரம் ஜனதா சிக்கன் போட்டாள்.ருசி பார்க்கலாம் என்று சொன்னாள்.
                  “அதுக்கு பெரிய டிமாண்ட் அக்கா, க்யூ நிக்கிறாங்க. பாவப்பட்ட ஜனங்களாத்தா இருக்கணும்
                  காடை கவுதாரின்னு போயி கெடைக்காத போது ஜனதா சிக்கன் ஒரு நா வாங்கிட்டு வந்த்தான் ஸ்வர்ணவேல்.
                  சாப்பாட்டுப் பையை முத்துலட்சுமி எடுத்துக் கொண்டாள். துணிப்பையை பெனாசிர் தோளில் மாட்டிக் கொண்டாள்.கனமான இறக்கைகள் முளைத்தது போலிருந்தது.
துணிப்பையைப் பாக்கிறப்போ, அக்கா நீ வர ரொம்ப நாளாகுமோன்னு  பயமா இருக்கு
அதெல்லா இல்லடி
நீ உடுத்தியிருக்கிற புதுப் புடவையைப் பாக்கறப்போ ஏதோ விசேசம்ன்னு தோணுதுக்ஊர்லே ஏதாச்சும் விசேசமாக்கா.. சொல்லக்கா
தெரியலே. வா வான்னு வாப்பா கூப்புட்டே இருக்கார். போயிட்டுதா வர்றதுன்னு கெளம்பிட்டேன்.
என்னமோ சந்தேகம் வந்துச்சு
அதெல்லா ஒண்ணுமில்ல. எதை வுடுத்தினாலும் வெளுத்துப் போன மாதிரி இருக்குது. அதனால் போன மாசம் எடுத்த புதிசெ உடுத்திட்டேன்

பெனாசிர்  முகத்தில் தெரிந்த தெளிவு  ஏதோ விசேசம் போல் எண்ணத் தோன்றியது முத்து லட்சுமிக்கு .  அப்படி அவள் ஊரிலேயே ஒதுங்கிக் கொண்டு விட்டால் தன் நிலைமை என்ன வாகும். இன்னொரு அறை தேட வேண்டும். நாலைந்து பெண்கள் இருக்கும் அறைதான் அவள் மனதில் இருந்தன. பெனாசிரிருடன் இருப்பது போல் இரண்டு பேர் இருக்கும் அறை கிடைப்பது சிரமம்தான். அதற்குள் இன்னொரு வேலை தேட வேண்டும். வேலை கேட்கப் போகிற இடங்களிலெல்லாம் இடது கையை விலக்கி காட்டவேண்டியிருக்கிறது. நடந்த விபத்து பற்றி விரிவாய் சொல்ல வேண்டியிருக்கிறது.
   மில் நிர்வாகம் தந்த பணத்தை அவளை மில் வேலையில் சேர்த்து விட்ட புரோக்கர் ஸ்டீபனிடம் தந்து விட்டதாகச் சொன்னார்கள். நீ வந்து  சேர்ரப்போ நீ குடுத்த  லெட்டர்லெ நீ அவனுக்கு பொதுவா ஆதரைஸ் பண்ணித் தந்ததும்   இருந்துச்சே , அதனாலதா தந்தம். வெளிப்படையா தர முடியாத நஷ்ட ஈட்டுத் தொகைன்னாலே அவனே வாங்கிட்டுத் தந்தர்ன்னு போனான்”   . ஸ்வரணவேலுவுடன் ஸ்டீபனின் ஊருக்கு அவனைத் தேடி போகத் திட்டமிட்டிருந்தாள். ஸ்வர்ணவேலுவைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது  பின்னர்.

                  காலை நேரத்துக் குளுமையை அனுபவிக்கிறவர்கள் மாதிரி நடந்து கொண்டிருந்தார்கள். பேருந்து நிறுத்த நிழல் குடையில் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மரக் கட்டைகளை சேர்த்து வைத்த மாதிரி கிடந்தார்கள். உயரமான நியான் விளக்கின் கீழ் நிழல் விழுந்து கிடந்தது. அதன் உச்சி வானத்து நீலத்தைக் கரைத்திருந்த்து.
                  “திரும்பி தனியா நடந்து போவே
பரவாயில்லேக்கா
                  “காலையில இப்பிடி நடந்து எவ்வளவு நாளாச்சு முத்து. ஆசைப்பட்டு நடக்கக் கூட நேரம் வாய்க்கறதில்லே. ஆசைப்பட்டாலும் நடக்க முடியுமான்னு தோணலே. ஜாக்கிரதையா இரு. பொழுது போகலீன்னா, செல்வி அக்காகிட்ட துணி வாங்கிப் பிரிச்சிட்டுக் கெட. பொழுது போகும். அடுத்து என்னன்னு  ரெண்டு பேரும் யோசிக்கணும் போலிருக்கு
                  ஏர் பேக்கிலிருந்து பாலிதீன் பை சுற்றப்பட்டதை எடுத்துத் தந்தாள் பெனாசீர். புதுப் புடவை
இங்க வந்து தர்றியா”  ஒற்றைக் கையை நீட்டி வாங்கிக் கொண்டாள்.
 “ ஒத்தக்கயிலெ வாங்கிக்கறது அபசகுணமில்லைதானே..
இல்லே..
இருக்கற  கையிலதானே வாங்க முடியும்.. மில் வேலையில்  அவளின் கை துண்டாகியிருந்தது. தொடர்ந்து மூன்று ஷிப்ட் செய்த ஒரு நாள் காலையில் தான் அவளின் கை கோண் வையிண்டிங் இயந்திரத்தில் சிக்கி  சிதைந்தது. அதன் பின் எங்காவது அடைக்கலம் கிடைக்குமா என்று தேடி பெனாசிரின் அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.. ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. ஒற்றைக் கையை வைத்துக் கொண்டு எந்த வேலைக்குப் போவது என்று தீர்மானமாகவில்லை. பார்க்கலாம் பார்க்கலாம் என்று பெனாசிர் பல தரம் சொல்லி ஆறுதல் தந்திருக்கிறாள்.

                  “வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதா, வீட்லெ குடுத்தா சாதாரணமா இருக்கும். போறப்போ குடுக்கலாமுன்னு வெச்சிருந்தன்.
                  வலது புறத்தில் அன்னலட்சுமி பேக்கரியிலிருந்து மருதமலை மாமணியே  பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணாடிகள் பலவகைக் கேக்குகளை  வெளிச்சம் போட்டுக் காட்டின .
                  “எங்க ஊர் டெண்ட் கொட்டாய் ஞாபக்மே வருது முத்து.   இந்தப் பாட்டுச் சத்தத்தைக் கேட்கறப்போ
                  “எல்லார் ஊர் டெண்ட் கொட்டாய் ஞாபகமும் வரும், அந்தப் பாட்டைக் கேட்டா, ”
                  ” டீசாப்புடலாமா
                  “பஸ் வந்துருமே
அடுத்து வர்ற பஸ்லெ போலாம். பஸ்தா  நெறைய கெடக்குதே
டீக்கடையில டீக் குடிச்சு ரொம்ப நாளாச்சு. மாசக் கணக்கில் இருக்கும்
நல்ல சமையல்காரிக வெளியெல்லா சாப்புட மாட்டாங்க

                  பாலித்தீன் பையின் சலசலப்புடன் அவள் திரும்ப நடந்து கொண்டிருந்தாள். கோபாலன் பூக்கடை அருகில் இருவர் நிற்பது தெரிந்தது. அதில் ஒருவன் ஸ்வர்ணவேலு, அவன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை மாரியம்மன் கோவில் வாசலில் கூட அவனுடன் ஒரு தரம் நெருக்கமாகவே பார்த்திருக்கிறாள். இப்போதும் அவர்கள் நெருக்கமாகவே நின்று கொண்டிருந்தார்கள். ஸ்வர்ணவேலு முதுகைத் திருப்பி வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின் முகம் இருட்டும் வெளிச்சமுமாய்த் தெரிந்தது. நல்ல களையான முகம்தான். களையான முகங்கள் அவளுக்கு எப்போதும் பொறாமையைத் தரும்.
                  நடையை விரைசலாக்கிக் கொண்டு பரபரத்தாள் முத்துலட்சுமி. வெள்ளிரிக்காய் போன்ற அவளின்  இடது கையிலிருந்து சேலை இருந்த பாலித்தீன் பை நழுவப் பார்த்தது. மாரியம்மன்  கோவில் கதவு திறந்து இருக்க உச்ச ஸ்தாயியில் மாரியம்மனைப் பற்றிய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
குமரன் வீதி முக்கில்  களிமண் பொம்மைகள்  பரவிக்கிடந்தன. தொந்தி பெருத்த விநாயகர்கள் ஏகமாய் இருந்தார்கள். தொந்தியைக் காட்டிக்கொண்டு திருஷ்டி பொம்மைகள் தென்பட்டன.பொம்மை வாங்கி நாளாகி விட்டது ஏதாவது வாங்க வேண்டும் என்பது மனதிலிருந்தது. ஆனால் இவை தண்ணிர் பட்டால்  குழைந்து உருவம் காணாமல் போய் விடும். வீட்டு ஓட்டிலிருந்து சொட்டும் மழை நீர் கரைத்து விட்டு விடும். இதெல்லாம்  களிமண் பொம்மையா
பிளாஸ்டர் ஆப் பாரீஸ்..   அப்புற காகிதக்கூழ் 
தண்ணி பட்டா கரஞ்சு போயிருமா பதில் சொன்ன பெண்ணின் உடையில் வடநாட்டுத்தனம் இருந்தது.பாசிகளை கழுத்தில் கனமான மாலையாகியிருந்தாள்.கையிலும் பாசிகளை வளையல்கள் போல் போட்டிருந்தாள். ஒரு நிமிசம் வினோதமானப் பார்வையாய் முத்துலட்சுமி அவளை  அளந்தாள். தன் உருவத்திற்கு வினோதமான ஆடைகளைப் போட்டு விட்டமாதிரி இருந்தது.


            பேருந்து பெனாசிரை ஏற்றிப் போனபின் முத்துலட்சுமி  தெற்கு முக்கு வந்துத் திரும்பிப் பார்த்தாள்.ஸ்வர்ணவேலுதென்படவில்லை.அவனுடன் இது போல் வீதி முக்குகளில் பல தரம் அவள் நின்று பேசியிருக்கிறாள்.இன்று அவனுக்கு முழுக்கைகள்  உள்ள பெண் தேவைப்பட்டிருக்கிறாள். ஊனமான தன் கை அவளை தெருவின் ஓரத்தில் கொண்டு வந்து விட்டதாக நினைப்பு வந்தது..சேலையைத் தாழ்த்தி ஊனமானஇடது  கையை மூடிக் கொண்டாள்.
தூரத்தில் பேருந்து புள்ளியாய் மறையும் வரை வீதி நீண்டிருப்பது ஆச்சர்யம் அளிப்பது போல் பார்த்தாள்.
Subrabharathi@gmail.com, 8/2635 Pandian nagar, Tirupur 641 602.