சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 25 ஜனவரி, 2014

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

சுப்ரபாரதிமணியன்

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி
ஆசிரியர்:      என் . மணி

” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள் போகும் சிரமம் நீங்க மிதிவண்டிகள் வந்து விட்டன.முன்பு வகுப்பில் பத்துப் பேர் இருந்தால் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் அபூர்வம். இப்போது புத்தகம், சீருடை இலவசம். மடிக்கணிணியில் உலகத்தையே பார்க்கும் லாவகம். 2023 தனி நபர் வருமானம் 4லட்சத்து 50 ஆயிரம் ஆக்கும் திட்டங்கள். 2020ல் இந்தியா வல்லரசாகி விட்டபின் இதெல்லாம் சகஜமோ என்னமோ. வெளிநாட்டினரின் முதலீடு கல்வித்துறையில். உயர்கல்விக்குப் போகிறவர்கள் 12% என இருக்கையில் 2% வெளிநாடு போகிற மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டி நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.” குலோபல் மெத்தாடலஜி “ என்று ஏகத்துக்கும்  பிரச்சாரம்.

மறுபுறம் கல்வி உரிமைச் சட்டம்   நடைமுறைப்படுத்தப்படலிருக்கும் சிக்கல்கள் அசர வைக்கின்றன. கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கே கல்வி உரிமை என்பதில் குழப்பம் இல்லை. அதே சமயம் பள்ளிகளில் இடை நின்றவர்கள் பற்றிய புள்ளி விபரக் கணக்குகளும் அவர்களின் நிஜக்கதைகளும் பள்ளி விட்டுத் துரத்தப்பட்டவர்கள் என்பதையே காட்டுகின்றன.பள்ளிகளிலேயே   ஆரம்பிக்கும் ஜாதீய வன்முறை, படிப்பு, ஒழுக்கம் எனபதை வலியுறுத்தி நடத்தப்படும் தண்டனை வன்முறைகள் குழந்தைகளை பள்ளிகளில் இருந்துத் துரத்துகின்றன. அந்த வகையில் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளைத் தேடிச் சென்று    அவர்களுக்கு கல்வி நிராகரிக்கப்பட்ட கதைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த மணி இந்நூலில் தொகுத்திருக்கிறார். அக்குழந்தைகளின் வார்த்தைகளிலேயே பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் குடும்பப் பின்னணி வறுமை நிலை பல கதைகள் சொல்கின்றன. டிசி இல்லாத காரணத்தால் பல குழந்தைகள் துரத்தப்படுகிறார்கள். ( டி சி தேவையில்லை என்பது வேறு விசயம். ) இரவுப்பள்ளிகளுக்கு ஆர்வமாய் செல்பவர்கள் குடும்பச் சூழல் காரணமாக  அதையும் கை விட வேண்டியிருக்கிறது.போதைக்கு பலியாகிப் போன அப்பாக்கள். குழந்தைகளை விட்டு வேறு புது உறவுகளுடன் தஞ்சமாகி விடும் அம்மாகள்,பகுதி நேர வேலை செய்து விட்டு  பள்ளிக்குச் செல்கிறவர்கள். கணக்கும் ஆங்கிலமும் அவர்களுள்  ஏற்படுத்தி விடும் மனத்தடைகள் ஏராளம்.இருப்பிடம், சுகாதாரம், ஆரோக்கியம் ஏதுமின்றி வளர்க்கப்ப்டும் குழந்தைகள்.,உழைத்து விட்டு வேலைக்குப் போகிற சிறார்கள் மத்தியில் புழங்கும் சேமிப்புப் பழக்கம், ஆசியர்களின் அணுகுமுறையே பலசமயங்களில் மாணவர்களை பள்ளிகளில் இருந்து துரத்துவது, நிலைமை சரியில்லை என்று குடும்பச்சூழல் பார்த்து பள்ளிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் குழந்தைகள்.,ஒரு குழந்தை இன்னும் பிறந்து விட்டால் முந்தைய குழந்தையின் கல்வி  தடைபடுவது, பள்ளியிலும் , வீட்டிலும் விளையாட்டை மறந்து விட்ட குழந்தைகள் என்ரு பல விதமான குழந்தைகளின் வாழ்க்கையை மணி இந்நூலில் சொல்கிறார். அவர்களின் இருப்பிடங்கள். வேலைக்குச் செல்லும் இடங்கள், இரவுப் பள்ளிகள் என்று அவர்களைத் தேடிச் சென்று  அவர்களின் கதைகளைக் கேட்டு பதிவு செய்திருகிறார்.  கல்வி உரிமை  மறுக்கப்பட்டவர்களின் கதைகளாக இவை நீள்கின்றன. இடைநிற்றல், வறுமையை புறம் தள்ளி விட்டு அவர்கள் கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் பற்றி தொடர்ந்து தனது இயக்க செயல்பாடுகளின் மூலம்  பணி புரிந்து வரும் மணி அவர்கள் தனது செயல்பாட்டின்  ஓர் அங்கமாக இந்நூலை  கள ஆய்வுப்பணிகளின் பதிவாய் வெளியிட்டிருக்கிறார். மணி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் . மாற்றுக்கல்விக்கான நுல்களின்  வாசிப்பு முகாமைத் தொடர்ந்து நடத்தி வருபவர்.. பொருளாதாரத் துறைப் பேராசிரியர்.கல்வி உரிமைச் சட்ட்த்தின்  அவசியம் பற்றித் தெரிந்து கொள்ள இன்னுமொரு கள ரீதியான பதிவாய் இந்நூல் விரிந்துள்ளது. ( 48 பக்கங்கள் ரூ 25: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )



- சுப்ரபாரதிமணியன் (  9486101003  )

வெள்ளி, 24 ஜனவரி, 2014

திரை விலக்கும் முகங்கள்

கமலா இந்திரஜித் கதைகள்

சுப்ரபாரதிமணியன்

திரை விலக்கும் முகங்கள்



வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர்  பரிசு பெற்ற  ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த  அங்கீகாரத்தை  எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை )

இவரின்  30 ஆண்டுகளுக்கு மேலான ஆசிரியப் பணியும்., தஞ்சை மக்களின் வாழ்க்கையும், கிராமியச் சூழலும் இவரின் படைப்புகளுக்கான களமாக இருக்கின்றன. இதைத்தாண்டி புள்ளமங்கலம் என்ற இவர் வாழும் கிராமத்துச் சூழலும் , பெரிய கடை என்ற பல்பொருள் அங்காடியும் அது சாதாரண மக்களை கொண்டு சேர்க்கிற அம்சங்களும் மிக முக்கியமானவை..
இக்கதைகளில் தஞ்சை மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழக்கைப் பதிவுகளைப் பிரதானமாகச் சொல்லலாம். அவர்களில் பெரும்பான்மியினர் விவசாயக்கூலிகள்  சாதாரண விதியின் சதிக்குள்ளும்,  நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளுக்குள்ளும் அடங்கிப்போனவர்கள்.தேர் வடக்கயிறு பிடிக்க அருகதையற்ற வகையில் புறகணிக்கப்பட்டவர்கள். அறுவடைகால நியாயங்களில் முடங்கிப் போனவர்கள்.. வெகு சாதாரணமாக கைவிடப்பட்டவர்கள்.       ” இந்த வலி எல்லோருக்கு கிடைக்காது. பொம்மனாட்டிகளுக்கு மட்டுந்தா ” என்று பிரசவத்தையும், தாய்மைப்  பேற்றையும் மனதில் கொண்டிருப்பவர்கள். கணவன்மார்களின் சிதரவதைகளைப் பொறுத்துக் கொள்பவர்கள்.  தேனீக்களோ, இயற்கை நியாயங்களோ  அவர்களை கேள்வி கேட்கும் என்று திடமாய் நம்புகிறவர்கள். விவாகரத்து கோரினாலும் 60ம் கல்யாணக் கோலங்கள் பார்த்து திருந்தி விடுபவர்கள். உழைப்பை பிரதானமாகக் கொண்டு வாழக்கையை நடத்துபவர்கள். உறவுகள் சொந்தமாக்குகின்றன. சொந்தங்கள் உறவுகளாகின்றன இவர்களுக்கு,
மறுபுறம் கிராமத்தின் கால்நடைகளும், மிருகங்களூம் வெகு லகுவாக இந்தக் கதைகளில் பிரவேசித்து சக மனிதர்களுடன் நடமாடுகின்றன. கால்நடைகளின்  மீதான பிரியம் வாழக்கைக்கு வேறொரு அர்த்தம் கொடுக்கிறது.  உயிரற்ற பொருட்களும் தரும் புது உபயோக்ஙக்ளும், அணைப்பும் சக மனிதர்களின் பூரிப்பிற்கு இடம் தருகின்றன.இவர்களுக்கு சடங்குகள் பாரங்களாக அமைவதில்லைல் பாரத்தைக் குறைக்கிற அருமருந்துகளாக அமைகின்றன.  மனித நேயம்,  சமய சடங்குகளை ஒழித்த  அன்பின் வெளிப்பாடு   எங்கும் பரவிக்கிடக்கிறது.
பரிசுக்கதைகளின் பார்மலாவிற்கென்று கட்டமைக்கப்பட்ட பல்சமயமனிதர்களின் நோக்கும் மனிதாபிமானமும்  எப்போதைக்கும் சகமனிதர்களின் சாதாரண உணர்வுகளை   கவ்விப்பிடித்து விடுவதை இதில் உள்ள சிலகதைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஹேமாவின் அம்மா போன்ற கதைகளில் தலைப்பு முதல் பிறரின் புகழ் பெற்ற  கதைகளின் பாதிப்பையும் காண முடிகிறது, கிராமியப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள் என்று கிராமியச் சூழலில் இணைந்த   கதையாடல்கள் கதைகளை வேறு தளங்களுக்கு நகர்த்திச் செல்கின்றன. மூடு  பல்லக்கில் உலவும் பல பெண்களின் முகங்களைக் காட்டுகிறார். அல்லது கிழித்தெறிகிறார்.  ஆழ்கடலென பல்வேறு சமய மனிதர்கள்  சக பயணிகளாக மனிதாபம் கொள்ளச் செய்கிறவர்களாக் இருக்கிறார்கள். கதை சொல்வதில் சரளத்தன்மை இருக்கிறது. புழங்கும் மொழியில் தஞ்சையும், பிராமணியமும் மணக்கிறது. இன்னும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றியது. வெகுஜன இதழ்களின் பிரசுரிப்பும் முக்கிய காரணம்.
பெரியகடையும், புள்ளமங்கலமும் இன்னும் நிறைய செய்திகளையும், அனுபவங்களையும் சுரங்கங்களாகத் தர இருப்பதன் முதல் அடையாளமாக  மூடுபல்லக்கில் முகம் விலக்கிப் போகும் பல தஞ்சை மனிதர்களுடன் இக்கதைகளில் பயணிக்கிறோம்.

(  ரூ 150., காவ்யா பதிப்பகம், சென்னை  )

திங்கள், 6 ஜனவரி, 2014

அமிருதா வெளியீடு - முத்துக்கள் பத்து: சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்!


சுப்ரபாரதிமணியனின்  மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள்  வெகு யதார்த்தமான  அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும்  குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும்  சிறுகதைகளாயிருந்தன.  அவற்றையெல்லாம்  அவரின் அனுபவக் கதைகளாகக்  கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது  நிறைய எழுத ஆரம்பித்தார்.  செகந்திராபாத் வாழ்க்கையை   சிறுகதைகளாக  ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். . 
     
செகந்திராபாத் வாழ்க்கைகுப் பின்னால் அவர் தன் சொந்த ஊரான திருப்பூர் வந்த பின்  அவரின்  நாவல்கள் தரும் திருப்பூர்  வாழ்க்கையின் அனுபவங்களை மீறிய அவதானிப்புகளை இவரின் சிறுகதைகளின் பரப்பில் காணலாம்.  தொழில் நகரம் காட்டும்  உழைக்கும் விளிம்பு நிலை  மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். உலகமயமாக்கல்  ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும், குழந்தைகளையும்  சிதைத்து வருவதை விரிவாகச் சொல்லியிருக்கிறார்.சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், மனித உரிமை பிரச்சினைகளும் அவர்களுள் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.  வாழ்க்கையையும், இலக்கியத்தையும் ஒரு சேர  கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதிமணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்பட்டிருப்பதில்  அவருக்கு இணை யாருமில்லை.அவ்வளவு  விரிவான வகையில்  அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும்,பிரச்சினைகள் மீதும். கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும், விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை  அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது  கதை மாந்தர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் வெளிப்படுகின்றன, அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம்  சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாயும், அதிகபட்சமான சிறுகதைகளையும் வேறு யாரும் தமிழ் சூழலில் எழுதி இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் அக்கறை பற்றி நிறையவே சிறு கதைகளில் விவாதித்திருக்கிறார்.  ஒவ்வொருவரும் ” சாயத்திரை”யை மறந்து விட முடியாதபடிக்கு ஒரு படிமமாகவே அது நிலைத்து விட்டது
     
அயலகத்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி இவரின் பயண அனுபவக்கட்டுரைகளைத்தவிர இடம் பெற்றுள்ள சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.செகந்திராபாத் சூழலில் அந்நியப்பட்ட தமிழன்களைப் போலவே இவர்களும் அன்னியப்பட்டே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.

பெண் பாத்திரங்களின் உருவாக்கத்தில் அவர் கொள்ளும் அக்கறையும், தேர்ச்சியும் ஆச்சர்யப்படுத்துபவை. கஸ்ட அனுபவங்களுக்குள் இவர் தன்னைத் தோய்த்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. செகந்திராபாபாத்தோ, திருப்பூரோ அவர் வெவ்வேறு களங்களுக்குள்ளும், இடங்களுக்குள்ளும் பயணிக்கிறார். போராடும் மனிதர்களின் ஆன்மாவைத் தொட்டுக் கொண்டே போகிறார். சொல்முறை உத்தி சாதாரண உரையாடல்களாலும், இறுக்கமான வாக்கிய அமைப்புகளாலும்  நிறைந்திருக்கிறது. சமூக மனிதர்களின் உளவியலுக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன.   வெவ்வேறு மையங்களுகு செல்வதாக்த் தோன்றினாலும் அவை மனிதம், அன்பு, சமூக விமர்சனம் என்ற வகையிலேயே அடைக்கலம் கொள்கின்றன. எழுத்தாளன் அவனின் அரசியலை வெளிப்படுத்தாமல் எங்கும் ஒளிந்து கொள்ள இயலாது.  தன் அரசியல் முகத்தை சுப்ரபாரதி மணியன் என்றைக்கும் ஒளித்து வைத்துக் கொண்டதில்லை. மாற்று அரசியல் குறித்த அக்கறையைஅவை சுட்டுகின்றன. அவரின் மார்க்சியம் சார்ந்த சார்பை அவரின் கட்டுரைகளில் இனம் கண்டு கொள்ளலாம். ஆனால் படைப்பாக்கத்தில் அவை கோரும் தத்துவ சார்பை எப்போதும் உரக்கத் தொனித்ததில்லை யதார்த்தம்  மீறிய மாயத்தன்மையை அவரின் சில கதைகளில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.   அவை பெரும் பாலும் கனவு நிலைகளில் வெளிப்படுகிறது. எந்த முன் தீர்மானமும் இன்றி கதைகள் நகரும் போது சொடுக்கப்படும் சாட்டையின் வீச்சை  சுலபமாகக் கண்டு கொள்ளலாம். மனிதத்துவத்திற்கு எதிராக நடக்கும் எல்லா விதமானக் கொடூரங்களையும் , அதீத செயல்களையும் அடையாளம் கண்டு கொள்கிறார். அடையாளப் படுத்துகிறார்.விளிம்புநிலை மக்களில் பொறுக்கிகள், எளிய பெண்கள், விலைமாதர்கள், ஆதிவாசிகள், சுற்றுச்சூழல்வாதிகள் என்று பலரை அடையாளம் கண்டு கொள்ளலாம். மையங்களைக் தகர்த்தெரிந்த  விளிம்பு நிலை மனிதர்கள் இவரின் கதைகளில் தென்படுகிறார்கள். குழந்தைகளின் அபூர்வ உலகத்தை  சரியாக மனதில் பிடித்துக் கொள்ளலாம்.  சாயம் அப்பிய முகங்களோடு அலையும் மனிதர்களும், தனியார் மையத்தை சகித்துக் கொள்ள முடியாமல் திணறுபவர்களும், பெரும்நகரத்தில் கை விடப்பட்டவர்களும், நகரம் உருவாக்கும்  உதிரித்தொழிலாளர்களும் கூட இக்கதைகளில் அழுத்தமாக இடம் பெற்றிருக்கிறார்கள்.    நம்முடன் உறவாட இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களா என்ற எண்ணமும் , நம்பிக்கையும் இவரின் கதாபாத்திரங்களோடு பயணிக்கும் போது  தென்படுகிறது. வாழ்க்கை எவ்வளவு வகையான  மனிதர்களை நம்மோடு இணைத்துக் கொண்டு செல்கிறது என்பது விசித்திரமானது. ஒரு முதிய மனிதனின் அனுபவத்தோடும், இளைஞனின் துடுப்போடும்  உள்ள இக்கதைகளை  படிக்கும் எந்த வாசகனும் தமிழ்ச் சிறுகதை வாசகப் பரப்பின் விரிவை அடையாளம்  கண்டு கொள்வான்.சிறுகதைகள் மூலம் பிரமாண்டமாய் வெளிப்படும் ஆளுமை சுப்ரபாரதிமணியனுக்குள் இருப்பதை சரியாக உணர்ந்து கொள்வான்.     
( விலை ரூ 90., அமிருதா பதிப்பகம் வெளியீடு, சென்னை )
அனுப்பியவர்: subrabharathi@gmail.com

நிர்வாணி





அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் குறுகச் செய்த்து. வேர்த்து விறுவிறுத்திருந்த பனியன் சட்டையை கழற்றியிருந்தான். இடுப்பு உள்ளாடையைக் கழற்ற எத்தனித்தபோது அவன் லுங்கியின் நுனியை  வாயில் கவ்வியிருந்தான். ஆனால் அது ஏனோ நழுவி அவனை நிர்வாணமாக்கியிருந்தது.  ஜெயபால் குனிந்து லுங்கியை எடுத்த போது உடம்பில் ஏதோ பாரத்தைக் கட்டி விட்டது போல்  உடம்பு கனத்தது. உடம்பு இன்னும் ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் வந்து விட்டது. பயம் எந்த வித சகுன்ங்களும் குறியீடுகளும் இன்றி  உடம்பினுள் புகுந்து விட்ட்து போலிருந்தது
சந்திராவுக்கும் உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பதைச் சொல்லியிருந்தாள். காலை அகட்டி வெச்சு படுக்கறப்போ உலகமே பாரமா எறங்கற மாதிரி இருக்கய்யா என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவளின் புட்டங்கள் வெகுவாக விரிந்த செம்பருத்திப் பூ போல பருத்து விட்டன.
அவள் கொஞ்ச நாளாய் செம்பருத்திப்ப் பூவை தேடிப் பிடித்து வீடியகாலையில் சாப்பிடுபவளாயிருந்தாள். கொலஸ்ட்ரால்  என்று மருத்துவ பரிசோதனை ரிபோர்ட்கள் தொடர்ச்சியாய் சொல்லிக் கொண்டே இருந்தன. முத்துசாமி டாக்டர் வாய் விட்டு ஏதேதோ சொல்லி விட்ட மாதிரிதான் அதைச் சொன்னார்: செம்பருத்தி ந்ல்லா கரச்சிரும் ஹைபிரிட் வேண்டாம். என்றார்.. ஹைபிட்டைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருந்தது. அவ்வளவு சிவப்பாய் இல்லை. சிவப்பில் ஒரு பழுப்பு நிறம். மகரந்தங்கள் ஏனோ ஒடிசலாய் நிற்கும்.. அதை சுலபமாக நிராகரிக்க முடியவில்லை. நல்ல   செம்பருத்திப்பூவை இளசாய் சாப்பிடுவது கனவாய்  மாறி விட்டிருந்தது. வீதியில் அவ்வப்போது வந்து போகும் தள்ளி வண்டிக்காரனிடம் செம்பருத்தி  நாற்று ஏதாவது  தென்படுகிறதா என்று அவள் கண்கள் ஜல்லடையாய் அலைந்தன.  செம்பருத்தி தவிர எல்லாம் கிடைப்பதாக் இருந்தது.  செக்யூரிட்டி உத்யோகம் பார்க்கும்  ஜேகப்  வால்பாறையில் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.அவன் செம்பருத்தி குச்சியைக் கொண்டு வந்து தருவதற்கு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அதை வாசலில் வைத்த போது துளிர் விடவில்லை. அந்த சமயத்தின் போது மஞ்சூருக்கு வேறு போக வேண்டியிருந்த்து.  அங்கு எல்லாம் பனியில் குளித்திருந்தன. உடமபை சுலபமாக நடுங்க வைக்கும் குளிர்… வாயில் தண்ணீர் விட்டுக் கொண்டால் கடுகடு என்றிருந்தது.பல்லில் படும் போது ஒரு வித வலி கிளம்பியது.வயசனால்தான் பல்லுக்கு இந்த கூச்சமும், வலியும் வரும் என்று விஜயா சொன்னாள். அவ்வளவு வயசாகி விட்டதா என்ன.. நாற்பதற்கு மேல் கடந்து விடுவது பெரிய வயசா என்ன..மஞ்சூரில் செம்பருத்தி பூத்துக் கிடப்பதாய் சொன்னார்கள். பனியில் படுத்துக் கிடப்பதை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்று  சிரிப்பினூடே சொன்னாள்.”  நீ சொன்னா அந்த நாத்து எந்திரிக்காதா..”
“ நான் சொல்லி எவன் எந்திரிக்கப் போறான் . இது எந்திரிக்கறதுக்கு ’ வாசலில் நட்டது வீணாகாது என்று நம்பினாள்.  ஊருக்குத்திரும்பியபோது அது மண்ணோடு படுத்துக் கிடந்து சோர்வைக் காட்டியது. மண்ணு வேறெ மாத்திப் பாரேன் என்று கவுசல்யா சொல்லி விட்டாள். மறுபடியும் செம்பருத்தியைத் தேடுவது சிரம்மாகவே இருந்த்து அவளுக்கு. “ வேரோட புடுங்கி வெச்ச மாதிரி செய்யணும் . அப்பதா அதுக   நெலைக்கும்  ” சிவதாசன் வீட்டில் இருப்பதாக யாரோ சொன்னார்கள், நெடு நெடு என்று வளர்ந்து கிடந்தது சிவதாசனைப் போலவே..அதுவும் விடிய காலையில் தான்  சாப்பிட வேண்டும் இரண்டு நாள் பனி, இருட்டு என்று பார்க்காமல் போய் நறுக்கி வந்து விட்டாள். ஒரு நாள் சற்றே இருட்டில் நடந்து கொண்டிருக்கும் போது நாடார் மளிகைக் கடை பக்கம்  கேட்ட குரல்தான் அவளைத் தடுமாறச் செய்து விட்ட்து.” வெடிய காலையிலே இவ மீஞ்சியிலே முழிக்க வேண்டியிருக்கே”  அதற்கப்புறம் சிவதாசன் வீட்டுப்பக்கம் போக வில்லை. இரவில் அந்தப் பக்கம் நடமாடி செம்பருத்தியைப் பறித்து வரலாம் என்பது சவுகரியமானதாக் இல்லை. வெறும் வயிற்றில் தின்னும் போது வழுவழுப்பாக குமட்டிக் கொண்டு வந்தது.  கொஞ்ச நாளில் பழகிப் போய் விடும் போல இருந்தது. ஆனால் கைக்கு எட்டாதமாதிரி நின்று விட்டது.  இடைவெளி விட்டு சிவதாசன் வீட்டுப் பக்கம் போயிருந்த போது ஒரு முறை  ஏதோ களேபரம் மாதிரி தெரிந்த்து.  அவரின் மாமனார் அவருடன் தான் இருந்து கொண்டிருந்தா. அவருக்கும் எழுபது வயதிற்கு மேலாகி விட்ட்து.  அவரது நடத்தையில்  மாமியாருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந்த வயசிலே அந்தாளு என்ன பண்றார் இப்பிடி என்று எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.  அவருக்கு எழுபதிற்கு மேலாகி விட்டது. சின்ன வயதில் அப்படி இப்படி என்றுதான்  இருந்திருக்கிறார்.  அந்த ஞாபகத்திலேயே மாமியார் அவர் இந்த் வயதில் முடங்கிக் கிடக்கிற போதும் கூட சந்தேகத்தால் ஏதோ பேசிக் கொண்டே இருக்கிறார்.  மனநல மருத்துவர்களிடம் கூட்டிக் கொண்டு போகலாம் என்றால் “ நம்ம மரியாதை என்ன ஆகிறது” என்று சிவதாசன் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்த சமயத்தில் அந்தப் பக்கம் நடமாடுவது உகந்ததாகத் தோன்றவில்லை அவளுக்கு.        ” என்னையும் சேத்து வெச்சு பேசிட்டா என்ன பண்றது.. “  அதை ஜெயபாலிடமும் சொல்லியிருதாள்.” நீ அந்தப் பக்கம் நடமாடியதுதா காரணமோ என்னமோ… சிவதாசன் மாமியார் கண்லே பட்டுட்டேயோ என்னவோ. “ கொலஸ்ட்ரால் பற்றி அதற்கப்புறம் மனதில் கொள்ளவில்லை. தலை போகிற போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள்.
என்ன பிழைப்பு இது. எத்தனை நாளைக்கு இப்படி அல்லாடிக் கொண்டு என்பது சந்திரா  வாயில் இருந்து வரும் சுலோகம். அவனின் நிவாணத்தைக்குலைத்தது அது. அவன் கீழே நழுவிய லுங்கியை  எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான்.  சட்டையை வியர்வை  ஆறிப்போன பின்பு மாட்டிக் கொள்ளலாமா என்ற நினைப்பு வந்த்து.  ஆனால் அதை எடுத்து பக்கம் கொண்டு வந்த போது வீசிய வாசம் ஒரு விதக் குமட்டலைக் கொண்டு வந்து விடும் போலிருந்தது. இந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டால் இப்படி குமட்டலாகத்தான் இருக்கிறது அதற்காக வீட்டை விட்டு ஓடிப் போக முடியாது. பனியன் கம்பனியில் வேலை குறைந்து போய் விட்டபின்பு பனியன் கம்பனியும் துரத்து விடுகிறது. நாரசமாய் எல்லாத் தெருக்களிலும் ஓடும் ஜெனரேட்டர்களின் சப்தம்  அவனை வெகு தூரம்  துரத்தி விடும் என்பது திரும்பத் திரும்ப மனதில் வந்தது.எங்காவது போவதற்கும் பணம் வேண்டும். எதேச்சையாய்  நீண்ட அவனின் கைகள் பேண்ட் பாக்கெட்டை  தொட்டுப் பார்த்துக் கொண்டன. அதுவும் பெரிதாக காசில்லாமல் நிர்வாணமாக்த்தான் கிடப்பதாகச் சொல்லிக் கொண்டான். சனிக்கிழமையன்று தென்படும் பண நோட்டுகள்  அவனுக்கு புது ஆடை உடுத்தி விட்ட சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்திருகின்றது.
.

அவன் பேண்ட் பாக்கெட்டில்  சாக்லெட்டுகள் நாலைந்து  தென்பட்டன. இது போது. யாராவது அகப்பட்டால் போதும். அப்புறம் வேறு எதையாவது வாங்கிக் கொள்ளலாம். அந்த மெட்ரிக்குலேசன் பள்ளி முகப்பு கேட் பார்வையிலிருது தப்பியிருந்தது. வேப்பமரத்தடியில் கிடந்த கல்லின் மீது உட்கார்ந்திருந்தான். அதன் சொரசொரப்பு குலைந்து போய் மொழுக்மொழுக்கென்றிருந்தது. நாலு பேருந்துகளும் போய் விட்டிருந்தன. இனி ஒற்றை ஒற்றையாய் குழந்தைகளை அம்மாக்கள் அழைத்துச் செல்வது நடக்கும்.  சில அப்பாக்களும் வருவார்கள். தாமதமாக வரும் அம்மாக்களும் இருப்பார்கள்.அப்படி ஏதாவது தாமதாமாய் வரும் அம்மாவிற்காக அவன் காத்திருந்தான். நீல நிற வானத்தின் குறுக்கே பாய்ந்த ஏதோ பறவையொன்றை விமானமாக எண்ணி பார்த்துக் கொண்டிருந்தான்.
கையை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா என்றுதான் சந்திராவும் கேட்டிருக்கிறாள். போன மாதம் ஒரு சமையல் கேஸ் சிலிண்டரை எடுத்து வந்திருந்தான்.      “ அந்த வூடு தொறந்து கெடந்தது. நான் முன் ரூமைக்கடந்து உள்ள போனதே யாரும் பாக்கலே. ரெண்டாவது ரூம்லே டிவிக்கு நெருக்கமா ஒரு வயசான அம்மா உட்காந்திட்டிருந்திச்சு. நான் நடக்கறது தெரியாமெ பொம்பளெ நடை நடந்து அடுத்த ரூமுக்கு போனன்.  சிலிண்டர் ஒண்ணு இருந்துச்சு. வலது  கையாலெ தூக்குனா கனம் தெரிஞ்சுது.  தம் கட்டி தோள்லே வச்சேன். என்னமோ மூச்சிரைப்பு வந்துட்ட மாதிரி இருந்துச்சு. சத்தம் வரக்கூடாதுன்னு மறுபடியும் பொம்பளெ நடை. வயசான அம்மா டிவியெப் பாத்துட்டே இருக்காங்க. டிவியிலெ யாரோ ஒரு பொம்பளெ கண்ணா பிண்ணான்னு அழுதிட்டு இருந்துச்சு.  வாசலுக்கு வந்தப்பறம் யாரும் தட்டுப்படலே. விறுவிறுன்னூ நடந்தேன். நீயும் அந்த நேரத்திலே அந்த சீரியல்தா பாத்திட்டிருந்தியா “. ஜெயபால் வாய் விட்டுச் சிரித்தபடிக் கேட்டான்..
மதிய நேரத்தில் இப்படி புகுவது சுலபமாகத்தான் இருந்தது அவனுக்கு. அப்படி ராயபுரத்தில் ஒரு வீட்டில் நுழைந்து வெளிவந்த போது  ஒரு மிக்சி கிடைத்தது.வீட்டில் இலவச மிக்சி  இருப்பது  ஞாபகம் வந்து சிக்கந்தர் கடை பக்கம் கொண்டு போய் விட்டான். அவன் அகப்பட்டுக் கொண்டபோது போலீஸ்காரன் வைத்த அறையில் தலை சுற்றுவது போலிருந்த்து.ஒரு வகைப் பூச்சிகள் கண்களுக்குள் மினுங்கின. போலீஸ்ஸ்டேசனுக்கு சந்திரா வந்த போது  அவன் மயங்கி நிலையில் தான் இருந்தான்
.” இதுக்கு இவ்வளவு அடியாய்யா..”
“ எவன் மேலையோ இருக்கற கோபமோ “
“ செரி .. இதை விடப் பெரிசா பண்ணவேண்டியது தானா… அந்த அளவு அடி…” அவள் சொல்வது சுலபமாகத்தான் இருக்கும்.எப்பவாவது  ஒரு முறை சொல்லுவாள். ஆனால் மனதில்  பதிகிற மாதிரி இருக்கும். இந்த தரம் அப்படித்தான் ஏதோ சொன்னது  அமனதில் பதிந்து விட்டது போல் இருந்தது. அது அந்தப் பள்ளி வாசலைப்பார்த்து அவனை உட்காரவைத்தது.” இப்பிடியே எத்தனை நாளைக்குதாய்யா பொழப்பை ஓட்டறது. பெரிசா ஏதாச்சு பாத்தாதா உட்காந்தாவது சாப்பட முடியும் போல  “
பள்ளி வாசலில் பார்வையில் நிலைத்து விட்டது. பிரமாண்டமான வளைவாய் முகப்பு நின்றிருந்தது  சட்டைப்பாக்கெட்டில் ஏதோ சொரசொரத்தது. சிறு துண்டுத்தாள். நேற்று சந்திரா கையில் வைத்திருந்த வாரப்பத்திரிக்கை இணைப்பினை  வாங்கிப் பார்த்திருந்தான். ராசி பலன் பகுதி அது. ஜோதிட ரத்னா வித்யாதரனின் ராசி பலன்கள் அவனுக்கு ஓரளவு பலிப்பதை அவன் கணித்திருக்கிறான்.இந்த வாரம் சுக்கிரன் ஏழில் நுழைவதால் அனுகூலம் இருக்கும்.  புது தெம்பு பிறக்கும். தடைபட்ட வேலைகளை  உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை  கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். சூரியன் செவ்வாய் போக்கு சரியில்லாத்தால் வீட்டில் விவாதம் அதிகமாகும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.  12,13 நாட்களில் அதிக உணர்ச்சிப்படாமல் இருப்பது நல்லது. வியாபாரம் சுலபமாக நடக்கும் உத்யோகத்தில் சூழ்ச்சிகளைத்  தாண்டி முன்னேறுவீர்கள். தாளை கசக்கி எறிந்தான்..12, 13 நாட்கள் என்றால் அந்த வாரத்து தேதியா. எல்லாம் குழப்பமாக இருந்தது.

.முகப்பில் இருந்து மறைந்து போன பெண்  நவிருசான உடையில் இருப்பதாகப்பட்டது..இந்த வயது அம்மாக்கள்  எவ்வளவு நேர்த்தியாக உடை உடுத்துகிறார்கள். கொஞ்சம் புருவ செதுக்கல், கொஞ்சம் முக பிளிச்சிங் என்று செய்து எவ்வளவு சாதாரண முகத்தையும்  பளிச்சென்று வைத்துக்கொள்கிறார்கள். சாதாரண முகங்களுக்கும் கூட  பளிச்  தன்மை வந்து விடுகிறது  என்பது பற்றி அவனுக்கு ஆச்சர்யம் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் ஆடையில் எவ்வளவு கவனமாய் இருகிறார்கள். தோள்வரைக்கும் கைகள் வெறுமையாய் அழகாய் தெரிகின்றன. அந்தப் பளிச்சிடலில்    அழகு கூடி வந்து விடுகிறது. சந்திராவிற்கு இதெல்லாம் ஒத்து வரவில்லை என்பது போல் ஒதுங்கிக் கொள்கிறாள். புசுபுசு என்று புருவ மயிர்கள் அடர்ந்து விட்டால் புருவங்களைச் செதுக்கப் போவாள்.அதுவும் திருமணம், முக்கிய உறவினர் வீட்டு விசேசம் என்று வருகிற போதுதான்.  அவ்வளவுதான். இன்று ஒரு பையன் அகப்பட்டால் போதும், பெண் பிள்ளை என்றால் சிரமம் தான். அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த  சாக்கெட்டுகள்  மணம் பரப்பிக் கொண்டிருப்பதாய் பட்டது அவனுக்கு.

வாசலிலிருது கிளம்பிய பேருந்தில் நாலைந்து பேர்கள்தான் இருந்தனர்.  ஆசிரியைகளாக இருக்கக் கூடும். பேருந்தின் இருக்கைகள் ஓரத்து ஜன்னல் கம்பிகளால் அடைபட்டிருந்தது. ஜன்னல் கம்பிகளுக்குள் தெரிந்த முகங்களின் துணுக்குகள்  சோர்வடைந்து கம்பிகளுக்குள் அடைபடத்தான் லாயக்கு என்பது போல் தெரிந்தன.

எல்லாவற்றுக்கும் அந்தப் புகை வண்டி நிலையம் சவுகரியமாகத்தான்  இருப்பதாய் தோன்றியது. சாய்ந்து கொள்ள சவுகரியமான இரும்பு நாற்காலிகள்.  பயணிகள் காத்திருக்கும் அறை வெகு சுத்தமாக இருந்தது.  ஜன்னலில் தெரிந்த வானம் எந்தப் பறவையோ, விமானமோ அற்று இருந்தது. அப்போதுதான் துடைத்தெடுத்த மாதிரி  ஒருவகை டெட்டால் வாசம் கிளம்பியிருந்தது. புகை வண்டி நிலையங்களுக்கென்றே  அமைக்கப்பட்ட பெரிய வட்ட வடிவிலான மின் விசிறிகள் குறைந்த சப்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தன. விபரீதத்தை உணராமலே வந்து உட்கார்ந்திருக்கிறோம் என்று பட்டது.  சிக்குபுக்கு ரயிலே என்று சொல்லிக் கொண்டான்.
அவனுக்கு புகை வண்டிப் பயணங்கள் பிடிக்கும்.  கொல்லம் என்ற ஊர் பெயர் ஞாபகம் வந்தது.அதுவும் கேரளாதானே. செங்கோட்டையிலிருந்து கொல்லம் போகும் புகை வண்டிப் பாதை அவனுக்குப் பிடிக்கும். கோட்டை வாசலிலிருந்து ஆரியங்காவுக்கு போகும் பாதையில்  மலைக்குகை இருக்கும். குகையினுள் செல்லும் போது கும்மிருட்டாகவும், குளிராகவும் இருக்கும்.  இருக்கைகளில்  இருப்போர் ஓ வென்று கூச்சலிடுவது எதிரொலித்து பயமுண்டாக்கியது. ஆரியங்காவுதான் சந்திராவுக்கு சொந்த ஊர். கோட்டை வாசல் மலைக்குகையில் விழும் நீருற்று அழகாக இருக்கும். குகையில் கொஞ்ச தூரத்திற்கு வெளிச்சம் தெரியும்.  அப்புறம் இருட்டுதான். மலைக்குகை வேலையில் சந்திராவின் தாத்தா ஒருவர் இருந்து இறந்திருக்கிறார்.புளியரை, தெற்குமேடு, ஆரியங்காவு ஊர்களிலிருந்து வேலைக்குப் போய் குகை வேலையில் பலர் இறந்திருகிறார்கள்.அதே பக்கத்தில் தன்மலைக்கு போயிருந்த போது  அந்த புகை வண்டிப்பாலம்  அவனை பிரமிக்க வைத்தது. பத்து பதினைந்து கண்கள் கொண்ட பாலம் . புகை வண்டி அதில் ஊர்ந்து செல்வதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.  புகை வண்டியில் உட்கார்ந்து கீழே பார்த்தால் தலை சுற்றி விடும். இப்பாதையில் ரயில் செல்லும் போது எல்லா பெட்டிகளையும்  முன்னால் இருக்கும் இன்சின் டிரைவரோ. கடைசிப் பெட்டியில் இருக்கும் கார்டோ பார்க்க முடியும். “ ஒரு நாளைக்கு  அந்த என்சின் டிரைவராகவோ, இல்லே கார்டகவோ இருக்க ஆசை சந்திரா..” என்ற் சொல்லியிருக்கிறான். “ பனியன் கம்பனி டெயிலராத்தா இருப்பே எப்பவும் “
இந்தப் புகை வண்டிப் பாதியிலும் குகைகள் இருக்கலாம். நீர்வீழ்ச்சிகள் இருக்கலாம் இதெல்லாம் இல்லாத கேரளம் இருக்குமா. இது எந்த ஊர்….
பையன் முதுகில் பையுடன் பள்ளி கேட்டிற்கு ஓரமாய் வந்தபோது தாமதிக்காதவன் போல் ஜெயபால் விறுவென்று நடந்தான். பையன் பார்வையை தரையிலிருந்து மேலெழும்பிய போது  “ அம்மாதா கூட்டிகிட்டு வர்ரச் சொல்லுச்சு “ என்றான். “ செரி “ என்றான் பையன்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பேருந்தில் இடம் கிடைத்தது ஆறுதலாக இருந்தது  ஜெயபாலுக்கு. . பையன் அவன் மடியில் உடனே படுத்துக்கொண்டான். சாக்லேட் வேணுமா என்று கேட்க நினைத்தான்.  அத்ற்குள் அந்தப்பையன் தூங்கிவிட்டான். நடத்துனர் அவன் அருகில் வந்தபோது  ஏதோ எழுச்சி கொண்டவன் போல் இரயில்வே ஸ்டேசன்  என்றான்


பலரின் பார்வை பையனின் பள்ளிச் சீருடை மேல் இருந்ததைக் கவனித்தான். .பேருந்தை விட்டு இறங்கும் போது பையனின் சாப்ப்பாடுப் பையை திட்டமிட்டு வைத்து விட்டு வந்தது தவறு என்பது போல் பட்டது. வேறு எங்காவது நழுவ விட்டிருக்கலாம்.  புத்தகப்பையை   தவற விட இடம் பார்த்துக் கொண்டிருந்தான்.  மாலை நேரம் என்பதால் புகை வண்டி நிலையத்தில் வரிசை நீண்டிருந்தது. பாலக்காட்டிற்கு டிக்கட் எடுத்தான். பையன் என்ன வகுப்பு படிக்கிறவன். புத்தகப் பையைத்திறந்து பார்த்து  புத்தகங்களைப் புரட்டினால் கண்டு கொள்ளாலாம். புத்தக அடையாளத்தை  மறைப்பது  நல்லது என்று பட்டது. இரண்டாவது மூன்றாவது இருக்குமா. வீட்டில் குழந்தையென்று ஏதாவது இருந்தால் சரியாக அடையாளம் கண்டு கொள்ளலாமோ என்னமோ.
பாலக்காட்டு புகை வண்டி நிலையத்தில்  இறங்கி  பையனிடன் பால் டம்ளரை  நீட்டியபோது  “ ஹார்லிக்ஸ்தானே வேணும்.அதுதா சாயங்காலம் குடிக்கறது ” என்றான். .
“ ரெடியாகுலே அதுதா.  “  டம்பளரை வாங்கிக் கொண்ட பையன் ” அம்மாவும் டிரெயினுக்கு வரும் இல்லே “ என்றான்.  “ வரும் ’
“ அப்போ அம்மா வந்தப்புறம் குடிக்கறேன்”
“ வரும்.. குடிச்சிடு  “
“ அம்மா வந்தாதா குடிப்பேன். “  எதிர் வீதி நீளமாய் சென்று மறைந்தது  ஆட்டோக்கள் பரபரத்து ஓடிக் கொண்டிருந்தன. இருட்டு நடமாடிக் கொண்டிருந்த மனிதர்களின் நடமாட்டத்தை முகமற்றதாக்கியிருந்தது.மெல்ல கிளம்பியிருந்த வெளிச்சம் புது அழகை கொண்டு வந்திருந்த்து.  புது ஆடை உடுத்திக் கொண்டு நடமாடும் சூழல் போல் இருந்தது.அந்த பாதை புதிர்கள் கொண்ட்தாக் இருக்கும் என்பதைத் தீர்க்கமாக நினைத்தான்.ராசி பலனில் உள்ள புதிர்வழிகள் அரைகுறையாய் நிற்பது போலிருந்தது. வானத்தில் தெரிய  ஆரம்பிக்கும் நட்சத்திரங்கள்  அவனின் இனி வரும் புதிர் வழியை தீர்க்க யோசனை சொல்லும் என்று நம்ப ஆர்மபித்தான்.
ஜெயபால் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.கண்ணாடி முகமூடி முகத்தில் மாட்டப்பட்டிருந்த்து. விலாங்கு மீன் போல் அவன் விரைந்து  போய்க்கொண்டிருந்தான். மண்ணாலி, உரு என்ற வார்த்தைகள் அவனின் காதுகளில் விழுகின்றன்.  அவையெல்லம் பெண்களின் பெயரா. ஊர் பெயரா.
எதிரில் மூழ்கிக் கொண்டிருக்கும் பெண்ணின் கழுத்தில் சங்கு மாலை பளிச்சென்றிருந்தது. “ எனக்கு போத்தபாசி  கெடச்சது. கீரிச்சோவி, பீச்சோவி, குழிச்சங்கு எல்லாத்தையும் மாலையாக் கட்டி கழுத்திலே போட்டிருக்கேன் பாரேன்.” துடுப்புப் படகு அருகில் கடந்து சென்றது. கூர்மையாக ஏதோ தெரிகிறது . பவளப்பாறையாக இருக்குமோ.  மணல் திட்டோ என்னவோ..பக்கத்தில் நீந்திக் கொண்டிருக்கிறவள் பெண்ணா. உடம்பில் வயிற்றுப் பகுதி மேடாகத்தெரிந்தது. கர்ப்பிணியாக இருப்பாளோ.  கர்ப்பிணிகள் பாசி எடுக்க வரமாட்டார்களே. சந்திராவும் கர்ப்பிணி ஆகிற கனவினை எப்போதோ விட்டு விட்டாள் என்று சொல்லியிருக்கிறாள். இது சந்திராவின் உடம்பா.  புட்டங்கள் கடல் சங்கு போல் விரிந்து உள் அறைகளைக் கொண்ட்தாக இருக்கும் அபூர்வம் அதில் தென்பட்ட்து. அந்தப் பெண்னின் வலது கையில் ஆள்காட்டி விரலைக் காணோம். மீன்கள் கடித்து விரல் இல்லாமல் போயிருக்குமா.  இன்னொரு கையில் துணிகள் சுத்தி ரப்பர் போடப்பட்டிருந்தது. அவனுக்கு மூச்சு திணருவது போலிருந்த்து. பாசி பாசி என்று கத்தியபடி நீரில் முழ்கிக் கொண்டிருந்தான். உடம்பை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.

எந்தத் திட்டமும் இல்லாமல் இப்படி வந்து சேர்ந்து விட்டோமே என்ற நினைப்பு ஜெயபாலுக்கு மனதில் வந்தது. தான் ஒரு கோழை திட்டம் அபாயகரமானது என்பதை அவன் இப்போது உணர்ந்திருந்தான்.  .ஏதாவது மயக்க மருந்து சேகரித்திருக்கலாம். பையனை மயக்கத்தில் வைத்திருப்பது நல்லதாக இருந்திருக்கும். பையனின் புத்தகப் பையில் தேடினால் ஏதாவது தொலைபேசி எண், முகவரி கிடைக்கலாம். வீட்டு தொஅலைபேசி எண் இருந்தால் நல்லது. பள்ளி தொலைபேசி எண் என்றால் இந்த நேரத்திற்குப் பிறகு யார் எடுப்பார்கள். காலை வரை காத்திருக்க வேண்டும். அதுவும் பழுதாகியிருந்தால் சிரமம். தொலை பேசி கிடைத்து விட்டால்  போதும் பையனைக் கடத்தி வந்து விட்டதைப் பற்றி சொல்லி விடலாம். எவ்வளவு பணம் கேட்கலாம்  என்பதை முடிவு செய்யவில்லை. எதற்கும்  புத்தகப் பையைத் தேட வேண்டும் என்பது அவன் மனதிற்கு வந்து விட்டது.
அம்மா அம்மா என்ற அழுகுரலின் ஆரம்பம் புத்தக்ப்பையிலிருது அவனின் கவனத்தை விலக்கியது.அவன் காத்திருக்கும் அறையிலிருந்து  வெளிவந்த  போது தூரத்தில் ஒரு புகை வண்டி வந்து கொண்டிருப்பதும், உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து  புகை வண்டியை வரவேற்க  ஆயத்தமாவதும் தெரிந்தது. அம்மா என்று பையனின் அழுகை  உரத்துக் கிளம்பியது.. வந்து கொண்டிருக்கும் புகை வண்டியின் இரைச்சல் பையனின் அழுகையைக்  காணாமல் போகச் செய்திருந்தது. ஆனால் அவனால் அங்கு அழுகுரலைக் கேட்டுக் கொண்டு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.. ஒரு புதிய புதிர்வழி அவனுக்கு முன்னால் விரிந்து கிடப்பதாகத் தோன்றியது.
அடுத்த புகை வண்டி நிலையத்தில் இறங்கி விட்டான்.பயணிகள் காத்திருக்கும் அறை அவன் கணகளில் முதலில் பட்டது போல் வந்து உட்கார்ந்து கொண்டான்..பையன் என்னவாகியிருப்பான். அவன் அழுகை கூட்டம் சேர்த்திருக்கும். புத்தகப்பையை யாராவது திறந்து பார்த்து  அடையாளம் கண்டிருப்பார்கள். காவல்துறைக்கும் தகவல் போயிருக்கும். பையனின் அம்மா குழந்தையைக் காணவில்லை என்று பள்ளியில் புகார் செய்திருப்பார். அவர்கள் வீட்டில் களேபரமாகி காவல் நிலையத்திற்கும் தகவல் போயிருக்கும். பள்ளி வாசலில் காத்திருந்ததை கவனித்து யாராவது தன்னை அடையாளம் கண்டிருப்பார்களா.புத்தகங்களின் பக்கத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது போல பையன் காணாமல்  போனது பற்றி புது புது விசயங்கள் கிளம்பிக் கொண்டிருக்கும். அந்தப் புத்தகம் வட்ட வடிவிலானதாக இருக்கலாம். கடையும், முதலும் ஒன்றாக இருக்கும். எவ்வளவுதான் சுற்றினாலும் அடுத்தடுத்த பக்கங்களாய் அவனும் சந்திராவும் இருப்பார்கள் என்ற நினைப்பு வந்த்து. நல்ல வேளை பள்ளி தான் இருக்கும் பகுதியிலானது அல்ல. வேறு  பகுதி பள்ள்யைத் தேர்ந்தெடுத்திருந்தான். செல் போனை அணைத்து வைத்திருப்பது ஞாபகம் வந்தது.சந்தேகப்பட்டு கூப்பிட்டால் உளறவேண்டியிருக்கும். இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும். செல்போன்தான் இப்போதெல்ல்லாம் எவ்வளவு வகையில் உபயோகமாகிறது என்பதை யோசித்துப் பார்த்தான்.அலாரம், கைக்கடிகாரம், நாட்காடி, முகவரிபுத்தகம், பேஜர், டார்ச் விளக்கு, கேமரா, டிரான்ஸ்சிஸ்டர் வானொலிப் பெட்டி, டேப் ரிகார்டர், சிடி பிளேயர், கால்குலேட்டர்.. இந்த டென்சனிலும் இப்படி செல்போன் பற்றி யோசிக்க ஒரு நிமிடம் வாய்த்தது  குறித்து ஆறுதல் மனதில் வந்த்து.
அடுத்து என்ன நடக்கும் . எப்படியோ எல்லாவர்றையும் கண்டுபிடித்து விடுவார்கள். தன் பயமே எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடும். அந்த காத்திருப்பு அறையின் பொறுப்பாளர் தன் பயண விபரம் பற்றிக் கேட்டால் சரியாக பதில் சொல்லமுடியாது. பயணச் சீட்டும் இல்லை.தாறுமாறாய் பதில்கள்  .சுலபமாக போலீசில் ஒப்படைத்து விடுவார்கள். நன்கு சுத்தமாக்கப்பட்ட அந்த அறை அவனுக்கு ஆசுவாசம் தருவதாக இருந்தது.ஜன்னலில் வானம் தெரிவது வேறு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
மரக்கலர் புடவை உடுத்தியிருந்தவள் வந்து உட்கார்ந்து ஸ்டூலின் மேல் இருக்கும் நோட்டைப் புரட்ட ஆரம்பித்தாள்.அதில் அறையில் காத்திருப்போர் பற்றி குறிப்புகள் இருக்குமா. பயணச்சீட்டு கேட்டு வெளியேற்றிவிடுவாளா. பாலக்காட்டைக் கடந்து விட்டது. இது எந்த ஊராக இருக்கும். இந்தப் பகுதியென்றால் குருவாயூர்தான் ஞாபகம் வரும். குருவாயூரில் ரயில்வே ஸ்டேசன் இருக்குமா. மரக்கலர் புடவைக்காரி த்ன்னைப்பார்ப்பது போலிருந்தது.பெரிய சப்தமெதுவும் இல்லாமல் அமைதியாக இருந்த்து  ஆச்சர்யமாக இருந்தது.அதுவே பேரலையாக விரிந்து காதுகளை அடைப்பதாக இருந்தது. கொல்லம் எந்தப் பக்கம்… பக்கமென்றால் ஆரியங்காவு கூட போய் விடலாம். இங்கிருந்து தப்பிப்பது சுலபம். இந்தக் குற்றத்திலிருந்து தப்ப முடியுமா. நிர்வாணப்படுத்தி காவல் நிலையத்தில் உட்கார வைத்து விடுவார்கள். இனி நிர்வாணம் அடிக்கடி தரிசிக்கக்  கூடியதுதானா.  அதற்கான சாத்தியங்கள் பெருகிக் கொண்டே இருக்கும் ஒன்றை விலக்க இன்னொன்று உருவாகிக் கொண்டே இருக்கும் ஆழங்காண இயலாத்தாகத் தெரிந்து கொண்டே இருக்கும்  இவையெல்லாம் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும். எல்லாம் தன்னை மறைத்துக் கொள்கிற உபாயம்தான் என்று சொல்லிக் கொண்டான்.

மூத்திரப்புறா என்று தமிழிலும் எழுதப்பட்டிருந்தது ஆறுதலாக இருந்தது.
உள்ளே உட்கார்ந்து கொண்டால்   மரக்கலர் சேலைக்காரியின் பார்வையில் இருந்து தப்பிக்கலாம். பேண்டைக்கழற்றாமல் உட்காருவது  அசவுகரியமாக இருக்கும்.கழற்றி கழிப்பறைக் கதவின் மீது போட்டான்.
போலீஸ் பிடித்துக் கொண்டு போகிற போது கம்பிகள் இட்ட இது போன்ற சிறிய அறையில்தான் உட்கார வைப்பார்கள். சட்டை, பேண்ட் போட்டுக்கொள்ள அனுமதிப்பார்களா. கழற்றச் சொல்லி விடுவார்கள். ஜட்டியையும் விட்டு வைக்க மாட்டார்கள்,  எல்லாம் சுருட்டப்பட்டு ஒரு மூலையில் கைக்கு எட்டாத தூரத்தில் கிடக்கும். அப்படி ஒரு முறை அவனுக்கும் அது வாய்த்த்து. எல்லா ஆடைகளையும்  கழற்றி போட்ட பின்  கைகளை தொடை இடுக்கில் வைத்துக் கொண்டு குறுகி உட்கார்ந்திருக்கிறான்.  யாரோ வருகிறார்கள் என்று எழுந்து நின்ற போது ஒரு போலீஸ்காரன் அன்றைய தினத்தந்தியை கொண்டு வந்து நீட்ட அவன் அதைச் சுற்றிக் கொண்டு நின்றான். இனியும் கூட அதுதான் நடக்கும். எல்லா உடைகளையும் கழற்றி நிர்வாணமாக்கி விடுவார்கள். உட்ம்பில் ஒரு பொட்டுத் துணி இல்லாத நிலையில் தான் லத்தியில் அடி விடும். அல்லது பிளாஸ்டிக் பைப்பில்.
விதியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். விதி தன் கதையில் இந்தக் கழிப்பறையில் கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது. இந்தக் கதியின் சாத்தியப்பாடு வேறு விதமாக எந்த வகையில் இருக்கும், இந்தக் கழிப்பறையிலிருந்து  உடையைப் போட்டுக் கொண்டு ஓடும் போது ஒரு வகையில்  மாறும். ஆடைகள் அணியாமல்     நிர்வாணமாய்                    ஓடும் போது இன்னொரு விதமாய் உருவாகும். எல்லா சாத்தியப்பாடுகளும் தவறில்தான் போய் முடியுமோ என்னமோ.  இருப்பே பெரும் தவறாகிவிடுமோ என்னமோ. பேய் போல், ஆவி போல் எந்த புகை போக்கி வழியாகவும் தப்பி விடுவதுதான் சரியான சாத்தியப் பாடோ என்னவோ.
அவன் சட்டையையும், பனியனையும் , ஜட்டியையும் கழற்றி கழிப்ப்பறைக் கதவின் மீது போட்டான். இனி இப்படித்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது. அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்தது..தன்  முழு நிர்வாண உடம்பைப் பார்த்துக் கொண்டான்.

துண்டுத்துணி

சிறுகதை 


“ துண்டுத்துணி ஒன்னு ஆகும்போல இருக்குது. நெய்யறேன் ”” “ மல்லிகா சொன்னாள். அவள் கண்களில் புதுத்துணி பல வர்ணங்களுடன் மின்னியது.பட்டாம்பூச்சியொன்று பறந்து போனது..

“நாளைக்குதானே பாவு. நெய்யி. எப்பிடியும்  இன்னிக்கும், நாளைக்கும் சும்மா இருக்கறது தானே. நெய்யி”
ராதிகா அப்பாவின் தறிப்பக்கம் வந்து உட்கார்ந்தாள்.
“அப்பா.. அக்கா, துண்டுத்துணி நெய்சா நீங்க கேக்கக் கூடாது. அதெ வித்து நாங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு போறதுக்கு காசு வெச்சுக்குவம்..”
ரங்கசாமி கண்களை இடுக்கிக் கொண்டு தறிக்குழியை பார்த்தார்.இருண்டு கிடந்தது. அது எப்போதும் இருண்டு பயமுறுத்திக் கொண்டே இருக்கும்.
“செரி.. நானென்ன கேக்கவா வர்ரேன்..”
“அப்புறம் எனக்கு  கம்மல் எப்ப வாங்கித்தர்ரீங்க..”
தலையைத் தூக்கியபடி கண்ணாடியை கழற்றினார் ரங்கசாமி. தறிஇயக்கம் நின்றது. வெளியே பார்த்தார். ரொம்ப நாளாய் ராதிகா கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். முடியவில்லை. இம்மாதம் இம்மாதம் என்று தவணையில் சொல்லிக் கொண்டிருந்தார். காற்றின் திசை மாற்றிக் கொண்ட்து  போல அவரைக் கடந்து தறியுள் வந்து புகுந்தது. நாகமணியின் கம்மல்களில் எண்ணைய் கோர்த்துக்கொண்டதென்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ வாங்கணுன்னா வாங்கலாம்..ஆனா.”
“என்னப்பா ஆனா..”
“நெசவு ஸ்டிரைக் வரும் போலத் தோணுது. அருணாச்சலம் கூட சொன்னார். இன்னிக்கு சாயங்காலம் மேட்டுப்பாளையம் நெசவாளர் சங்கம் பக்கம் போகலாம்ன்னு இருக்கன். தர்மன் கூட வர்ரன்னு சொன்னார். போய் வெவரமா கேக்கணும். ஸ்டிரைக் ஏதாச்சும் இருந்துச்சுன்னு இருக்கற காசையும் செலவு பண்ணிட்டு என்ன பண்றதுன்னு பாக்கறேன். எதுக்கும் ராத்திரிக்கு சொல்லிர்ரனே.. ஸ்டிரைக் எதுவும் இல்லீன்னா வாங்கித் தர்ரேன்..”
ராதிகாவிற்கு முகம் இருண்டது. சுவற்றைப் பார்த்தாள். ssஅவளின் சின்னக் கனவு சுவற்று இருட்டில் எழுதப்பட்டது போல இருந்த்து.
“ஸ்டிரைக்காப்பா”
“சொன்னாங்க..”
“இப்பதா வரணுமா அது..”
“என்னோட அதிர்ஷடம் அவ்வளவுதா..” சர்ரென்று எழுந்து போனாள்.
“அப்பிடியெல்லா இல்லே”
“என்ன ரங்கசாமி எந்திரிக்கறையா.. மேக்கால போயிட்டு வர்லாம்” தர்மன் நூல் கட்டொன்றை தோளில் போட்டபடி நின்றிருந்தார்.
“இரு. வந்தர்ரென்..”
“வான்னா..என்ன”
“இரு வந்தர்ரன். புட்டா ஒண்ணு போட்டுகிட்டிருக்கன். எப்பிடி சட்டுன்னு எந்திரிச்சு வர்ரது..”
“சவுண்டம்மன் கூப்புட்டே வராத நம் சமூகம் இதிலெ நீயென்ன..”

தேவாங்கன் மும்முரமாக நெசவு நெய்து கொண்டிருந்தான். வீட்டு வாசலில் சவுண்டம்மன் சிம்ம் வாகனத்தில் வந்து நின்றாள். அவனை வா என்றாள். அவன் நெய்வதில் மும்முரமாகவே இருந்தான்.
“யார்..”
“உன் குலதெய்வம் சவுண்டம்மன்”
“என்ன அவசர வேலையா.”
“நான் கூப்படற அவசரம் புரியலையா..”
“உம்ம்..”
“மொதல்லே எழுந்து வாப்பா.”
“இந்த ஒரு கூத்து படமர நெசவே முடிச்சர்றேன். கொஞ்சம் பொறு அம்மா”
“நான் வந்துக் கூப்புட உனக்கு வேலை அவ்வளவு பெரிசா போச்சா.”
“காலம் நேரம் பாக்காமெ நெய்சாதா கஞ்சி கெடைக்குதம்மா.”
“காலம் பூரா தறிக்குழிக்குள்ளயே கெட”
சாபமிட்டுப் போனாளாம். அதனால்தான் வீட்டில் எல்லோரும் உழைக்க தறிக்குழிக்குள்ளேயே நெசவாளன் உட்கார்ந்திருக்கிறான். ஜீவனத்திற்கான போராட்டம் அவனை ஓய்வில்லாமல் தறிக்குழிக்குள் உட்கார்ந்து அவனை நெய்யச் செய்கிறது.
அமாவாசையன்று நெய்கிற தொழிலை நிறுத்தி வழிபாடு செய்வதற்கென்று அமாவாசையன்று நெசவுக்கு விடுமுறை விடப்படுகிறது. அமாவாசை பூஜைக்கென்று யாராவது சொல்லி வைத்து விடுவார்கள். வழக்கமான பூஜை சாமான்களோடு ‘தளிகை’யாக பொங்கலும், புளிச்சாதமும் பூஜை நேரத்தில் இருக்கும்.

ர்மன்  “செரி. எந்திரிச்சா வா. மேக்காலத் தோட்டத்திலெ இருப்பன்” என்றபடி நகர்ந்து விட்டான். சேவற்கட்டு கோழி ஏதாவது ஊருக்குள் வந்திருந்தால் தர்மன் கிளம்பிப் போய்விடுவான். எப்பவாவது சந்தைநாளன்று தர்மனுடன் சேர்ந்து கொண்டு ரங்கசாமியும் பேருந்து ஏறி சேவல்கட்டுக்கு எளச்சி பாளையம் போய்வருவார். போன பலமுறைகள் வெறும் கையோடுதான் திரும்பியிருந்தார்கள். ஜெயிப்பும் இல்லை. வெலைக்கு கோச்சைக் கறியும் கிடைப்பதில்லை. போலீஸ் தொந்தரவுக்கு பயந்து ஓடிவர வேண்டியிருக்கும். “இந்த கெரகமே வேண்டாம்” என்று விட்டுவிட்டார். தர்மன் வார்த்தைகளுக்கு ஆறுதல் தருவது போல் அவனுடன் சேவல்கட்டு பற்றி நாலு வார்த்தை பேசிக் கொண்டிருப்பார்.

மல்லிகா சேலையை கத்தியில்  ‘அறுத்து’ தறிச்சட்டத்தின் மேல் போட்டாள். துண்டுத்துணியை செய்ய ஆரம்பித்தாள். ஒவ்வொரு பாவுக்கும் குறிப்பிட்ட ஜந்து அல்லது ஆறு சேலைகளுக்கு மேல் நூல் இருந்தால் அது இருக்கும் வரை நெய்வர். அது துண்டுத்துணி எனப்படும். ஜந்து ரூபாய்க்கு நூல் கடைகளில் விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். அல்லது பெண்கள் ஜாக்கெட்டிற்கு அந்த துண்டுத் துணியை உபயோகித்துக் கொள்வார்கள். நெசவாளர்கள் வீட்டுப் பெண்களின் பெரும்பான்மையான ஜாக்கெட்டுகள் இந்த துண்டுத்துணிகளாலேயே இருக்கும். பல வர்ணங்களில் மினுங்கும். வழக்கத்தைவிட சற்றே கெட்டியாக அடித்து நெய்வர் கனவுகளோடு நெய்யப்பட்டது போலிருக்கும்.
“அப்பா கலர் நூல் போட்டு நெய்யட்டுமா..”
“பாவுக்கலர் போட்டு நெய்சா விக்கலாம். போடறதுக்கு ஜாக்கெட் துணிக்காக வேணுமுன்னா கலர் நூல் போட்டுச்சு. எதுக்கும் பாவு கலர் நூலே போட்டு நெய்யி..”
“அப்பா ஸ்டிரைக் வந்துட்டா என்ன பண்றதுங்கறே நெனைப்பில்லியே இருக்கார் போலிருக்கு..”
“என்ன..” அவரின் பார்வை எதிர் சுவற்றிலேயே இருந்தது. சவுண்டியம்மன் உட்பட கடவுளர்கள் தென்பட்டனர்.
“துண்டுத்துணியெ விக்கலாமுன்னு சொல்ல வந்ததெ..’
மல்லிகா இதை கிண்டல் தொனியில் சொல்கிறாளா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. மல்லிகாவிற்கு ஒரு நிமிஷம் வருத்தமாய் இருந்தது. அப்பாவிடம் அப்படி கேட்டிருக்கவேண்டாம் என்று பட்டது. ஒருவித ஓய்வை உணர்பவர் போல் முகட்டைப் பார்த்தார். அம்மா முறத்ஹ்டுடன் வாசல் பக்கம் உட்கார்ந்து சோளத்தைப் புடைக்க ஆரம்பித்தாள்.
பொன்னு ஏதோ புத்தகத்தை எடுத்து வந்து படிக்க உட்கார்ந்தான். சிவப்பு எழுத்துக்களால் அது மின்னியது.
“பொன்னு..என்ன பண்றே..”
“படிக்கறேன்.”
“என்ன புக். கட்சி புக்கா இல்லே வேலை பரீட்சிக்கான புக்கா..”
“நாவல். தோழர் ஒருத்தர் தந்தார்..”
“புட்டா போடலாமான்னு..”
“சேலை அறுத்துப் போட்டுக் கெடக்குது. அப்புறம் எதுக்கு புட்டா.”
“துண்டுத்துணி நெய்யறான். ரெண்டு எடத்திலெ புட்டா போட்டா ஒரு ரூபா அதிகம் வரும்ன்னுதா..”
“துண்டுத்துணி வித்து என்ன பண்ணப் போறே..”
“ராதிகா சினிமாவுக்கு போலாமுன்னு சொன்னா.நீயும் வர்ரியா.  அம்மாவும் வருவாங்க ”
“நான் வர்லே. நீங்க பாக்கற படத்துக்கா.”
பொண்ணு தறியில் போய் உட்கார்ந்தான். ஜரிகை இழைகளை ‘புட்டா’ டிசைன் போட கத்தரித்தான். ஜிகினா தன் கைகளில் மினுங்கியது. பார்க்கச் சந்தோஷமாய் இருந்தது. முன்வாசல் வேப்பமரம் காற்றை வாரியிறைத்த்து. செம்பூத்து ஒன்றின் குரல் பக்கத்ஹ்டில் துல்லியமாய் கேட்டது.
“நீங்க பாக்கற படத்துக்கு நான் வர்ரதுன்னா கேக்கறே.. நீ படிச்சதுன்னாலே இது பேசறெ. நீயும் தறிக்குழியிலெ உக்கார்ந்திருக்கணும்..”
“உக்கார்ந்திருந்தா அந்த வாழ்க்கையும் சந்தோஷமாத்தா இருக்கும். இப்ப படிச்சிட்டு வேலையில்லாமெ இருக்கறது. இன்னம் சில புது அனுபவங்களதா..”
“செரி.. உங்க கட்சிக்காரங்க நாடகமெல்லா டவுன் ஹால்லே, சபால்லே எப்ப போடுவீங்க..”
“அங்க போடற நாடகங்களையெல்லா சாதாரண ஜனங்க பாக்க முடியலீன்னுதானே நாங்க தெரு நாடகங்களெ போடறம்.. சின்ன சின்ன விஷயங்கள் ஜனங்களுக்குப் போகணுன்னுதான..”

புட்டா டிசைன் போட ஆரம்பித்தார்கள். ரங்கசாமி எதுவும் பேசாமல்        கொஞ்ச நேரம் நெய்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்குப்பின் எதையோ யோசித்துக் கொண்டிருப்பவர் போல் எழுந்து போனார். செம்பூத்தின் குரல் பக்கத்தில் இன்னும் அலைக்கழிந்து கொண்டிருந்தது.
“அப்பாவுக்கு நீ பேசறது புடிக்கலே போல இருக்கு..”
“புடிக்காமெ இருக்கலாம். நான் படிச்சு பெரிய வேலைக்கெல்லாம் போய் பெருமை தருவன்னு நெனச்சிருப்பார். ஆனா  ரொம்பவும் கொடுமையா இருக்கு.  அப்பா யதார்த்தத்தை மெல்ல மெல்ல புரிஞ்சிட்டுதா இருக்கார்ன்னு நெனக்கிறேன்..”
”நீ படிக்கிற புத்தகங்கள், போடற வீதி நாடகம்.. இதெல்லாம் சும்மா இருக்காமெ பொழுது போக்கறதுக்குத்தானே..”
“பொழுது போகறதுக்குன்னா நான் எதையும் படிக்கலாம். படிக்காமெ சோம்பேறித்தனமா கூட இருக்கலாம். நான் இதெல்லாம் எதுக்கு படிக்கறம்கறது நல்ல கேள்விதா. பொழுதுபோக நாடகம் போடாமெ சிந்தனை பண்றதுக்கு எதுக்கு கஷ்டப்படறமுங்க. நல்ல கேள்விதா. பதில் சொல்றேன்..”
அவளைப்பார்த்து நிதானமாய் பதில் சொல்ல ஆரம்பித்தான்
“ செரி.. சேலை மடிக்கவாச்சும் செய்..”
“ஏதாச்சும் வேலை எடுக்கணும். நான் மாட்டன்னா சொன்னன்.”
சேலையை  ‘அறுத்து’ தறி மீது போட்டபின்பு உடனடியாக மடிப்பதுதான் நல்லது என்பார் ரங்கசாமி. சேலையை அறுத்துப் போட்டுவிட்டு கொஞ்ச நேரம் கழித்து மடித்தால் அதன் விறைப்புத்தன்மை போய்விடும். மடிக்காமல் கவனப்பிசகாய் இருந்துவிட்டால் சுருங்கி சற்றே கூழ் மாதிரி ஆகிவிடும். புட்டாவும், ஜமுளும் வெளிப்புறமாகத் தெரிகிற மாதிரி மடிக்க வேண்டும். அதை சேலையின் வர்ண இழைகளாலேயே கட்ட வேண்டும். ராதிகா மடித்த சேலையை எடுத்துக் கொண்டு போய் இருக்கும் மரப்பெட்டியில் வைப்பாள். அதை மிகுந்த கவனத்துடன் நிமிர்த்தி வைப்பாள். அதை மறுமுறை மடிக்க ஆரம்பித்தாலே அதன் மினுமினுப்பு குறைந்துவிடும். கொஞ்சம் விட்டால் தண்ணீரில் போட்ட்து போல் கூழாகிவிடும்.

அம்மாவின் கல்யாணப்பட்டுப்புடவை ஒன்று அப்படித்தான் ஆகிப்போயிருந்தது. ரொம்ப நாள் துவைக்கவில்லையென்று தண்ணீரில் போட்டதும்  கூழ் போலாகிவிட்ட்து.

பொன்னுவின் கையில் சாயமினுமினுப்பு தெரிந்தது. மின்மினிகளின் வெளிச்சக் கீற்றை பார்ப்பது போல் பார்த்தான். சேலை அழகாய் மடித்து நிமிர்த்தி வைக்கப்படிருந்தது. கோமாளியண்ணன் வீட்டில் கூட. சிறு ஜட்டி அயிட்டங்களுக்கு சாயம் போடுவர். பெரிய அலுமினியப் பாத்திரத்தில் தண்ணீர் காய்ச்சி சாயப்பொடி போடுவர். வெள்ளைத் துண்டுத் துணிகளை முக்கி காயப்போடுவர். மீதித் தண்ணீர் சாக்கடையில் மினுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கும். அரிக்கமேட்டு சாயம் பற்றி அவர் ஒரு தரம் சொல்லிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
மாவாசை பூஜையில் சவுண்டம்மன் அலங்காரத்தில் மினுங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கைகளில் இருந்த ஆயுதங்கள் பளபளப்பாய் இருந்தன. அவள் விக்ரகம் முன் படையில் பெரிய வாழை இலையில் விரிந்து கிடந்தது. அமாவாசையின் உச்சகால் பூஜையின் போது ‘தளிகை’ பொங்கலை விசுவநாதன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். செல்லமாக்கா மகன் வீட்டு தளிகை விசேசமானது என்று சொல்லிக் கொள்வார்கள். கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தனுப்புவார்கள். கோவிலின் சுற்றுச்சுவர் சமீபத்தில் கட்டப்பட்டதால் வீதியில் நடந்து செல்வோர் கண்களில் படமாட்டார்கள். பூஜை நேரத்தில் வீதியில் இருந்து ஏதாவது சத்தம் கேட்பதால் கவனம் குறைவது இல்லாமலிருக்கும். “இது எவ்வளவு வருசத்துக்  கனவு” என்றார் பூசாரி ராமசாமி.
“சாமி கனவும்  சீக்கிரம் நிறைவேறாதா..”
“சாமிக்கு கொடுக்கறதும் நீங்கதானே”
ராமசாமி செகடந்தாளியிலிருந்து வந்தவர். அந்த ஊரில் அவர் அப்பா தலைமுறைகளாய் பூஜை செய்து வந்தார். ஊரில் தண்ணீர் கஷ்டம். கவுண்டகளின் தோட்டத்திற்குப் போய்தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும். இது எத்தனை நாளைக்கு என்று திருப்பூருக்குக் கிளம்பி வந்து விட்டார்கள்.
“வேற ஜாதிக்காரனுக்கு அடிமையா இருக்கறது புடிக்காமெ புதுசா இங்க வந்தவங்கதா தாஸ்தி” என்பார் அவர்.
ன்று அமாவாசை. மெழுகி கோவில் பளிச்சென்றிருந்தது. அமாவாசை வருகிறதென்றாலே சில தினங்களால் அந்த நாளை என்ன செய்யலாம், எப்படி கழிக்கலாம் என்று யோசிப்பார்கள். உள்ளூர் செளண்டியம்மன் கோவிலுக்கு போவர். ஜாதி விசேசங்கள் இருந்தால் இருப்பர்.  சிலர் சென்னிமலை, சிவன்மலை, பேரூர் என்று கிளம்புவர். மற்றபடி அமாவாசை கட்டாய ஓய்வு என்பது போல சினிமாவுக்குச் செல்வது பெரும்பான்மையோரின் கட்டாய பொழுது போக்காக மாறிப் போய் விட்ட்து..
அந்த அமாவாசை எல்லோருக்கும் ஸ்டிரைக் பற்றின நினைவாகவே இருந்தது. அன்றைக்கு சாயங்காலம் நாலுமணிக்கு சவுண்டியம்மன் கோவில் நெசவாளர் சங்க கூட்டமிருந்தது.” எல்லாம் நல்லதா நடக்கும்” என்றார் பூசாரி ராமசாமி.பல சமயங்களில்  துண்டுத்துணியை சவுண்டியம்மனுக்கு அமாவசை பூசையின் போது பூசைத் தட்டில் வைத்து விடுவதுண்டு.ஏதாவது வேண்டுதல் கூடவே இருக்கும். அம்மா நாகமணி  முறத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“ துண்டுத்துணி வித்த காசிலெ சினிமா போறப்போ அம்மாவையும் கூட்டிகிட்டுப் போகணும் “  நாகமணி  மெல்லச் சிரித்தபடி தறிக்குழியைப் பார்த்தாள்.முறம் கையிலிருந்து நழுவிப்போய் இப்போது பழம் புடவையொன்று வந்து விட்டது. அதன் கிழிசலில் இனி கவன்ம் போகும்.
” நான் இல்லாமியா. சிவாஜி படமா “
“ எம் ஜி ஆர் ஆட்சிக்கு வந்தப்புறம் சினிமாவெல்லா இலவசமாயிருமா “
“ அப்பிடி ஆகுமா தெரியலே. நம்ம தரித்தரம் தீரதுக்கு ஏதாச்சும் பண்னுனா செரி  “
     நாகமணி தான் போட்டிருந்த நெசவு ஜாக்கெட்டைப் பார்த்துக் கொண்டாள். நிறம் மங்கி நசிந்து போயிருந்தது. இனி எப்பவாவது போடும்போது டர் என்று கிழிந்து விட்டால் தூக்கி எறிந்து விட வேண்டியதுதான். அவள் அம்மா ஜாக்கெட் போட்டிருந்தாள். பாட்டி போட்டதில்லை.  நெய்யும் துண்டுத்துணியை  கைச்செலவிற்காக விற்கிற காலம் வந்து விட்ட எண்ணம் நாகமணியின் முகத்தைக் கறுக்கச் செய்தது. முகம் தண்ணீரில் போட்டு கூழாகிப்போன கல்யாணப்புடவை போலாகியிருக்கும் என நினைத்தாள். சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தாள்.

சுப்ரபாரதிமணியன்