சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 ஜூன், 2010

பண்ணத்திர: ”சாயத்திரை” கன்னட மொழிபெயர்ப்பு

சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை
========================================== ====
தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊரான-பின்னலாடை நகரம்-திருப்பூருக்கு மீண்டும் குடிவந்தபோது நகரத்தின் முகம் புதிதாய் மாறியிருந்ததைக் கண்டேன். 10,000 ஆயிரம் கோடி போய் அந்நியச் செலவாநியைத் தரும் தொழில் நகரமாயிருந்தது. என்னுடன் படித்த பலர் ஏற்றுமதியாளர்களாகி இருந்தனர். ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் நொய்யல் என்ற நதி காணாமல் போனதும், நொய்யல் சாயக்கழிவுகளின் ஓடையாகியிருந்ததும், ஐம்பதாயிரம் குழந்தைத் தொழிலாளர்களும், சுற்றுச் சூழல் கேடும் என்னை வெகுவாக பாதித்தது. இந்த பாதிப்பு சுற்றுச் சூழல் குறித்த அக்கறையாக என்னுள் விதைவிட்டது.
தொழில் வளர்சிக்குப் பின்னால் இருக்கிற மனிதர்களின் இடர்பாடுகளும், சுற்றுச்சூழல் கேடும், மனித உரிமை பிரச்சனைகளும் படைப்பினூடே சமூக இயக்கங்களிலும் பங்கு பெறச் செய்தது. என் போன்றோர் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரமும் வலுப் பெற்றது. ஆனால் தொழில் வளர்ச்சி என்பது எதன் பொருட்டு என்ற கேள்வியும் தார்மிகமாய் முன் வைக்கப்பட்டு போராட்ட வடிவமானது.
அச்சூழல் “சாயத்திரை” நாவலை எழுத வைத்தது. சாயங்களை அப்பிக் கொண்டு திரிகிற மனிதர்கள். குழந்தைத் தொழிலுக்காக தங்கள் இளம் பருவத்தையும் கல்வியையும் இழந்த குழந்தைகள். காணாமல் போன நதி. இவை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டன. விளிம்பு நிலை மனிதர்களை பிரதானப்படுத்தி முன் வைக்கப்பட்ட இலகியப் பிரதியாக அது அமைந்தது. பின் நவீனத்துவ மனிதர்களும் உள்ளீடும் நாவலுக்கு பலமூட்டின. சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது. ஆங்கிலத்தில் புதுவை பா.ராஜா அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி அவர்களால் ரங்க் ரங்கிலி சாதர் மெஹெலி என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகியுள்ளது. தற்போது ஸ்டேன்லி அவர்களால் மலையாளத்திலும், தமிழ்ச் செல்வி அவர்களால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே சமயத்தில் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் என்றாலும் கன்னடம் வாசிப்பு இல்லாத குறை இப்போது இந்தப்பிரதியைக் காணும் போது ஏக்கமாக வடிவெடுக்கிறது .
தமிழில் இந்த நாவல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த நாவல் முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும் துயரமானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன. அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில் முதலாளித்துவதின் கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில் நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக் கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேராசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல் என்ற அளவில் இதைக் கன்னடத்தில் மொழிபெயர்த்த திருமதி.தமிழ்ச் செல்விக்கும், வெளியிடும் ரவிக்குமாருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

அன்புடன்________________


சுப்ரபாரதிமணியணின் ‘சாயத்திரை’
நாவலின் கன்னட மொழிபெயர்ப்பு சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை இது
(புத்தக விலை . ரூ100 ,நவயுக பதிப்பகம், பெங்களூர் )


"நன்றி திண்ணை "

ஞாயிறு, 13 ஜூன், 2010

சாகித்ய அகாதெமி

சாகித்ய அகாதெமி
இலக்கிய நிகழ்ச்சி
AN EVENING WITH WRITERS -
TIRUPUR
சிறப்புரை
சுப்ரபாரதிமணியன்
பிரபஞ்சன்
பொன்னீலன்
சிற்பி
பாரதி கிருஷ்ணகுமார்
நாள்:
20-06-2010, ஞாயிறு மாலை 6.00மணி
இடம்:
குமாரசாமி கல்யாண மண்டபம்,
யுனிவர்சல் திரையரங்கு சாலை,
திருப்பூர்.
அனைவரும்வருக!

அந்தமானில்……

அந்தமானில்……
================
சுப்ரபாரதிமணியன்
===================
அந்தமானில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நாளுக்கு முன் தினம் புறப்பட்டுவிட்டேன்.
அந்தமான் என்றால் பொது புத்திக்கு ஆதிவாசிகள்தான் ஞாபகம் வருவர். ஆதிவாசிகளைப் பார்க்கிற ஆர்வம் அங்கு செல்லும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. அவர்கள் பற்றி கிடைக்கிற தகவல்கள் புகைப்படங்கள்,ஒளிப்படங்கள் ஆகியவை அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டும்.
போர்ட்ப்ளேயரில் இருந்து பாராடன்ங் தீவிற்கு செல்லும் வழியில் ஜாரவா பழங்குடிகள் வழக்கமாக தென்படுவர். பாதுகாப்பாய் வாகனங்களில் செல்வோர் அவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏற்படும். சமீபத்தில் பாதையில் பல்வேறு இடங்களில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது. யாத்ரீகர்கள் வீசியெரியும் உணவுப்பண்டங்கள் இனிப்புப்பண்டங்களை எதிர்பார்த்து நிற்கும் அவர்களின் எண்ணிகை சற்றே அதிகரித்துதான் வருகிறது.
நவீன உணவுப்பொருட்களின் ருசி அவர்களுக்கு பிடித்துப்போயிருக்கலாம். வழக்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் பான்பராக்,புகையிலை பொட்டலங்களையும் தூக்கியெரிகிறார்கள். இது போன்ற போதை வஸ்துகளை எதிர்பார்த்து காத்திருப்பது போல் தோன்றுகிறது. ஆதிவாசிகளளின் உடையமைப்பிலும், தோற்றத்திலும் பல்வேறு மாறுதல்கள் தென்படுகின்றன. பாதி நிர்வாணம், பாதி இலைஉடை என்ற வகையிலும் தென்படுகிறார்கள். சிறுவர்கள் டீசர்ட்,ஜீன்ஸ் ஆகியவற்றுடன் தென்படுகிறார்கள். அரசின் நலத்திட்ட உதவிகளும், மருத்துவ உதவிகளும், உடை உதவிகளும் இந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. கைகளில் வைத்திருக்கும் வில்அம்பு, கத்திகள் போன்றவற்றை வாகனங்களில் பறித்து பயமுறுத்தி உணவுப் பொருட்களை வாங்க அவர்கள் பயன்படுத்துகிறார்கள். உணவுத் தேவைக்கான அவர்களின் தேடல் வீதிகளில் வாகனங்கள் வரை வந்துவிட்டன.
எக்கோ-டூரிசம் என்ற சுற்றுலாபாணி சமீபத்தில் பிரபலமடைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மலைப்பிரதேசங்கள், அறியப்படாத பகுதிகளுக்கு செல்வதும், ஆதிவாசிகளை வேடிக்கை பார்ப்பதும் இதனுள் அடங்கும்.
ஆதிவாசிகள் காட்சிப்பொருளாக மாற்றப்படுவதற்கான தந்திரங்களையும் இந்தபாணி சுற்றுலா கொண்டிருக்கிறது. விலங்குகளுக்கு அளிக்கப்படும் நவீன உணவு வகைகள்,யாத்ரீகர்களின் நவீன உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அவர்களின் உயிர்க்கு ஆபத்தாக முடிகின்றன. எக்கோ-டூரிசம் வணிகரீதியாக வெற்றிபெற்றிருந்தாலும் ஆதிவாசிகளை முக்கியமான காட்சிப்பொருளாக ஆக்கிவிட்டது.
பாரடங்கில் தென்படும் ஜாரவா ஆதிவாசிகளின் வீதியோர நிலைமை ஈழத்தில் அகதி முகாம்களில் நிற்கும் ஈழத்தமிழர்களை ஞாபாகப்படுத்தியது.
அந்தமான் தமிழர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக ஊர்வலங்களையும் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறது. பங்காளதேசின் அகதிகள் குடியேறி நிரந்தர குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். இலங்கை அகதிகள் இங்கு குடியேற்றப்படுவதில்லை. இலங்கை தமிழர்களும், ஜாரவாக்களைப் போல காட்சிப்பொருளாகிவிட்டார்கள்.

கனவு புதியது


கனவு புதிய இதழ் வந்துள்ளது

கனவு சுப்ரபாரதிமணியன் அவர்களால் 22 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டு இதழ் .திருவனந்த புரம் உலக திரைப்படவிழா பற்றியும்,முக்கிய இயக்குனர்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார், பாலியல் படம் எடுக்கும் பயந்தகொல்லி இயக்குனர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரை சுவாரஸ்யமாக உள்ளது.தமிழ் நதி,ஆண்கரை பைரவி போன்றவர்கள் புத்தக விமர்சன பக்கங்களை எழுதியுள்ளனர்இரு நகரங்களின் கதை என்ற கட்டுரை டெல்லி 6 பற்றியும்,சங்கட் சிட்டி படம் பற்றியும் எழுதப்பட்டு உள்ளன.சம கால நாவல்கள் பற்றிய உரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு கவிதைகளும் கணிசமாக இடம் பெற்று உள்ளது.பிரதி வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ,சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர்திருப்பூர் 641 602.செல் 94861 01003email subrabharathi@gmail.comசென்னையில் உள்ளவர்கள் நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171,வாங்கி கொள்ளலா

சனி, 5 ஜூன், 2010

அங்காடித் தெருவும் "தேநீர் இடை வேளை" நாவலும்

அங்காடித் தெரு பற்றி பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில்தான் இதைப் பார்த்தேன்.
சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை என்றொரு நாவல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த்து. புரோக்கர்களால் தெற்கு மாவட்டங்களிலிருந்து டீன் ஏஜ் பெண்கள் அழைத்து வரப்படுவது, பின்னலாடை பஞ்சாலைகளில் அவர்கள் சுமங்கலித் திட்ட்த்தின் கீழ் கொத்தடிமைகளாக கொட்டடிகளில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுபது, பாலியல் ரீதியான சுரண்டல், ஓன்னுக்குப் போவதற்குக் கூட அபராதம் கட்ட வேண்டிய சூழல், வட்டிக்கு பணம் கொடுத்தவர்களால் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது, பெண்களின் தற்கொலை, காதல் முறிவுகளால் பெண்களின் அவஸ்த்தை இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாவல் கடிதங்கள், டைரி குறிப்புகள் என்ற வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல் பிரேமா நந்தகுமார் அவர்களால்
“UNWRITTEN LETTERS” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகள் இடைவெளியில் சுமங்கலித்திட்டம் போன்றவற்றின் தாக்கங்கள் வெகுஜன ஊடகங்களிலும் பதிவுகளை செய்துள்ளன. சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை நாவலை திரைப்படத் துரை சார்ந்த நண்பர் ஒருவரும் திரைக்கதை முயற்சியில் ஈடுபட்டு திரைக்கதையை மூன்றாண்டுகளுக்கு முன் முடித்திருந்தார். சுப்ரபாரதிமணியணின் தேநீர் இடைவேளை நாவலை காவ்யா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.

செய்தி : சுந்தரக்கண்ணன்

வெள்ளி, 4 ஜூன், 2010

பெண்களின் உரத்த குரல்

திரைப்பட ஆக்கங்களில் சமூக அக்கறையும், குறைந்த செலவிலான படங்களும் 1960களில் மலையாளிகளின் யதார்த்த உலகத்தை சரியாக முன்வைத்திருக்கின்றன. திரைப்படத்திலிருந்து அவன் வெகுவாக அந்நியப்படாதவனாக சமூக வாழ்க்கையிலும், திரைப்படத்திலும் அவன் இருந்திருக்கிறான். இலக்கியப் படைப்புகளைத் திரைவடிவங்களாககும் முயற்சிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. எண்பதுகளில் உலகப் பொருளாதார நெருக்கடிகளும் இந்தியத் திரைப்பட முயற்சிகளில் மலையாளிகளின் தீவிரத்தைக் குறைத்து விடவில்லை. ஆனால் உலகமயத்தின் விளைவுகளால் திறந்த சந்தையில் மலையாள வெகுஜன திரைப்பட முயற்சிகள் அவர்களின் அடையாளங்கள் இல்லாத சாதாரண மனிதனாக்கிவிட்டது. அதிலும் பெண்கள் குறித்த அக்கறை வெகு மலினமாகிவிட்டது.
சமீப ஆண்டுகளில் சித்திக் லாலின் பெரும்பான்மையான படங்களில் நான்கு ஆண்கள், ஓரிரு பெண்கள் பிரதானமாய் தென்படுவார்கள். ஆனால் பெண்கள் கேவலமான கவர்ச்சிப் பொருளாகவே இருப்பார்கள். ரஞ்சித்தின் இயக்கத்திலான படங்கள் வெகுஜன தளத்தில் தயாரிக்கப்பட்டவையென்றாலும் பெண்களைக் கேவலமாக சித்தரிப்பதைத் தவிர்த்து வந்திருக்கின்றன. ஷாஜி கைலாஸின் படங்கள் உயர்ந்த ஜாதி, நிலப்பிரபுத்துவ குடும்ப ஆண்களின் பெருமையை நிலைநாட்டுபவை. பெண்கள் ஆண்களின் பெருமையைக் காப்பாற்றுவதற்காகப் பிறப்பெடுத்தவர்கள் என்ற ரீதியில் காட்டப்படுவர். ரெஞ்சி பணிக்கரின் படங்கள் வன்முறைக் காட்சிகளால் நிறைந்து பெண்கள் மீதான வன்முறை சுலபமாக்கப்பட்டிருக்கும். வாணி விசுவநாத்தின் உயர்பதவி பெண் பாத்திரங்கள் இன்று வலிவிழந்து விட்டன.
பெண்கள் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக டி.வி. சந்திரன் தென்படுகிறார். அவரின் இவ்வாண்டின் படமான ‘பூமி மலையாளம்’ கேரள சமூகத்தின் ஏழு இளம் பெண்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்கிறது. ஜானகி காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலியான கணவனைப் பற்றின பிரமைகளில் சிக்கித் தவிக்கிறாள். ஜானகியின் மகள் மீனாட்சி மனம் அரசியல் போராட்டமொன்றில் கொலை செய்யப்பட்ட மகனின் நினைவுகளால் நிரம்பி அலைக்கழிகிறது. மீனாட்சி மகள் நிர்மலா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறவள். அங்கு நிகழும் பாலியல் அத்துமீறல் அவளை நிலைகுலையச் செய்கிறது. நிர்மலாவின் அனுபவங்களைத் தொலைக்காட்சிக்காகப் படம் பிடிக்க வரும் பௌசியா என்ற முஸ்லிம் பெண்ணின் கணவனுக்கு அவளின் தொழில் பிடிப்பதில்லை. விலக தீர்மானிக்கிறான். பௌசியாவின் பெண் சுதந்திரம் குறித்த எண்ணங்கள் தினசரி வாழ்க்கையில் வெகு சாதாரணமாக சிதைகின்றன. மீனாட்சியின் அப்பா தீவிரமான பொதுவுடைமைக் கட்சிக்காரராக இருக்கிறார். நிலப்பிரபுக்களை எதிர்க்கிறார். கடத்தப்படும் நெல்மூட்டைகளை மீட்க மனைவியின் கழுத்து நகைகளைத் தியாகம் செய்கிறார். மக்களுக்கு அந்த நெல்லை விநியோகம் செய்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவைப் பார்த்து அலறுகிறவளாக இருக்கிறாள். இன்னொரு நிலப்பிரபு அப்பாவிற்கு முந்திரி தொழிற்சாலை இருக்கிறது. அவளின் மகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், பெண்களின் போராட்டங்களையும் புத்தக வாசிப்பின் மூலம் அறிந்து கொள்கிறாள். வாசிப்பும், அனுபவமும் ஒரு நிலப்பிரபு தந்தையின் அடையாளத்தை அவளுக்குக் காட்டுகிறது. காதல் கனவுகளில் மூழ்கியிருக்கும் இன்னும் ஒரு பெண்ணின் கனவு ராணுவத்தில் இருக்கும் காதலனின் மரணத்தால் சிதைகிறது. விளையாட்டில் அக்கறை கொண்ட இளம் பெண்ணின் வாழ்க்கை விவசாயி அண்ணனின் தற்கொலையால் சிதைகிறது. வாங்கிய கடனைக் கட்டமுடியாததால் அண்ணன் தற்கொலை செய்து கொள்கிறார். தங்கை விளையாட்டு ஆர்வத்தை விட்டு திருமணம் செய்துகொண்டு சாதாரணமானவளாகிறாள்.
திடுமென வந்து சேரும் அரசின் விளையாட்டு சார்ந்த உதவிகள் அவளை மீண்டும் விளையாட்டு வீராங்கனையாக்குகிறது. இந்த ஏழு பெண்களில் விளையாட்டு வீராங்கனை பெண் மட்டுமே இதிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்கிறாள். பௌசியா என்ற தொலைக்காட்சி பெண்ணிற்கு விளையாட்டு வீராங்கனையின் வெற்றி ஆறுதலாக, நம்பிக்கை தருவதாக இருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின் நாற்பத்தெட்டுகளில் கேரள சமூகத்தில் நிகழ்ந்த பெண்கள் மீதான வன்முறைகள் காரணமான சாவுகள், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னும் பின்னுமான காலகட்டங்களில் பொதுவுடைமை இயக்கம் சார்ந்த சில குடும்பங்களின் பெண்கள் நிலைமையையும், இன்றைய நவீன யுவதிகளை மையமாகக் கொண்டு பின்னோக்கிப் பார்த்திருக்கிறார் டி.வி.சந்திரன்.
மது கைதபுரத்தின் இயக்கத்திலான ‘மதியவேனல்’ படத்து நாயகி சரோஜினி தன் மகளின் வாழ்க்கையைச் சீரழிக்க முயல்கிற ஒரு யுவனை எதிர்க்கிற குறியீடாகிறாள். சரோஜினியின் கணவர் பொதுவுடைமைவாதி. கணினி, தனியார் வங்கிகள் கிராமங்களில் நுழைவதை எதிர்த்துப் போராடும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் சங்கத் தலைவன். ஆனால் இயக்கம் அவனிடமிருந்து ‘காலடியில் இருக்கும் மண்’ நழுவுவது போல நழுவுகிறது. அவனின் கேள்விகளை நிராகரித்து, சாதாரண தொழிலாளிகளின் நலனை இரண்டாம் பட்சமாக்கி அவனையும் கட்சியிலிருந்து வெளியேற்றுகிறது. தோட்டக் கூலியாக வேலை செய்து பணம் கொண்டு வருகிற ஒரு நாளில் மரணமடைகிறான். செங்கொடி போர்த்தின சடலம் வீட்டில் கிடக்கிறது. மகள் அப்பாவையும், அம்மாவையும் நிகழ்காலத்திற்கு ஒத்து வராதவர்களாகப் பார்க்கிறாள். தனியார் வங்கி கடன், வங்கி மேலாளரின் தந்திர நட்பால் அலைக்கழிக்கப்படுகிறாள். சரோஜினி கைத்தறி சேலை நெய்யும் பெண். காந்தியவாதி அம்மாவால் வளர்க்கப்பட்டவள். காதி நிறுவன ஊழல்களை எதிர்ப்பவள். மகளின் கனவுக்கு எதிராக உறுதியாக நிற்கிறாள்.
பொதுவுடைமை இயக்கம் பற்றிய விரிவான நிகழ்கால விமர்சனமாகவும், இளைய தலைமுறையின் நிராகரிப்பும், துல்லியமாக இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. திருப்பூர் பற்றிய குறிப்புகள் நாலைந்து இடங்களில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு காதி அலுவலக மேலாளராக நடித்திருக்கிறார்.
பொதுவுடைமைவாதி கணவனின் நேர்மை, காந்தியவாதியான அம்மாவின் அர்ப்பணிப்பு இவை மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுபவளாக சரோஜினியை மாற்றிவிடுகிறது. தனியார் மயத்தின் அலட்சியக் குறியீடான யுவனை புறம் தள்ளும் வலிமைமிக்க குரலாகவும் வெளிப்படுத்துகிறது. சரோஜினியின் வாழ்க்கை எதிர்ப்புணர்வின் குறியீடாகி விசுவரூபித்திருக்கிறது.
(இந்தப் படத்தில் இன்னும் நினைவு நிற்கும் சிலவை: பீடியும், தேனீருமான பொதுவுடைமை இயக்கத் தோழனின் வாழ்க்கை, அவசரநிலை காலத்தில் தலைமறைவு வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை இறந்த சோகத்தால் தறிக்குழிக்கு வராமல் சோர்ந்து போயிருக்கும் பெண்ணை ஆறுதல்படுத்தி சரோஜினி கூட்டிவரல், விதைகள் பாதுகாப்பு, நக்சலைட்டுகளின் ஊர்வலம், தனியார் வங்கிகள் கிராமத்தில் ஊடுருவி சாதாரண தேனீர் கடைக்காரனை ‘பாஸ்ட் புட்’ கடையாக்கு என்று சொல்லிக் கடன் கொடுத்து பின் வட்டி கேட்டு மிரட்டல், ஏ.கே.ஜி.யின் அமராவதி நில மீட்புப் போராட்டம், கேரளாவில் முன்பு 43,000 பீடித் தொழிலாளர்கள்- இப்போது 3000 மட்டும், பீடித் தொழில் நசிவு, கால் அடியில் இருக்கும் மண் நழுவுவது போல பொதுவுடைமைக் கட்சி தொண்டனிடம் இருந்து அந்நியப்பட்டுப் போவது, சாவின்போது ஏழைத் தொழிலாளி தரும் இறுதிச் சடங்கு வணக்கம் ‘எல்லாம் நல்காம், ஜென்மம் நல்காம், பால்யம் தருமோ’ பாடல், உதவிகள் எலிப்பொறிக்கு சமம் என்று சில).

வேட்டையாடப்படும் எழுத்தாளர்கள்

2009 கேரளத் திரைப்பட விழாவில் பார்த்த சில படங்களில் எழுத்தாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
‘லவ் லைஃப் ஆஃப் எ ஜெண்டில் வேர்டு’ என்ற குரோஷிய நாட்டுப் படத்தில் இடம்பெறும் எழுத்தாளன் சகா வெற்றிபெறாத எழுத்தாளன். எழுத்தும், தனிப்பட்ட வாழ்க்கையும் நிறைவுறாத தனிமைத்தீவுகளாய அமைந்திருக்கின்றன. மனைவியைப் பிரிந்துவாழும் சூழல். பையனை அவ்வப்போது பார்ப்பது மட்டும் ஆறுதலாக இருக்கிறது. மனைவி வேறொருவனுடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துகிறாள். முதுகு வலிக்கு மஸாஜிற்குப் போகுமிடத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. ஆறுதலாக அமைகிறது. ஆனால் அதுவும் நீண்டநாள் நீடிப்பதில்லை. மீண்டும் தனிமையான வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறான்.


மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு தொழில் சார்ந்தும் குறிப்பாய் இயங்கும் எழுத்தாளர்கள் உண்டு. சகா ஓட்டல்களின் தரம் பற்றியும் அவற்றை முன்வைத்துப் பல்வேறு விஷயங்களையும் எழுதுகிறவன். ஏன், சமையல் குறிப்புப் புத்தகம் எழுதலாமே என்று பதிப்பாளர் ஒருவர் கிண்டல் செய்கிறார். காப்ரியல் மார்க்கியூஸ் போல் தேவையில்லை என்கிறார். பதிப்பாளருக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுவது சிரமமாக இருக்கிறது. அவன் கதைகளும் எழுதுகிறான். அவற்றை விளையாட்டுப் பயிற்சியாளர் பெண் படித்து சிலாகிப்பதுதான் அவர்களின் நட்பை சற்றே நீட்டிக்கச் செய்கிறது. ஆனால் மஸாய், நீராவிக் குளியல் என்று அவன் அலைகிறபோது பெரிய மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களின் உலகம் பற்றி எழுதுகிறபோது தொல்லைக்கு உள்ளாகிறான். தாக்கப்படுகிறான். விளையாட்டுப் பயிற்சியாளர் பெண்ணின் நட்பும் அறுபடுகிறபோது சிரமத்திற்குள்ளாகிறான். அவனின் முதுகு வலி ஒருவகைக் குறியீடாய் படம் முழுக்க அமைந்திருக்கிறது. வெற்றி பெறாத குடும்ப வாழ்க்கையும், எழுத்தாளன் பணியும் அவனின் முதுகு வலியால் பாரமாய் அமைந்துவிடுகின்றன.
குரோஷியாவில் ஆண்டுதோறும் பத்துப் படங்கள் வெளிவந்தாலே அதிகம். 1940ல் யூகோஸ்லேவியா படத் தொடர்புகள் காரணமாக குரோஷியப் பட உலகம் எழுச்சி பெற்றதாக இருந்திருக்கிறது. அறுபதுகளில் நவீனத்துவமும், பல்வேறு உத்திகளும் படங்களைச் செழுமையாக்கியிருக்கின்றன. தொண்ணூறுகளில் ஏற்பட்ட போர்கள் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதித்து திரைப்பட உலகத்தையும் பாதித்திருக்கிறது. இரண்டாயிரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சுதந்திரமான வெளிப்பாட்டு முறைக்குத் திரைப்பட இயக்குனர்களைக் கொண்டு சென்றிருக்கிறது. குரோஷியத் திரைப்பட உலகத்தின் மூன்றாவது பொற்காலம் என்று குறிப்பிடும் வகையில் அவை அமைந்திருக்கின்றன. நகைச்சுவை, போர் நிகழ்வுகளும், அரசியலும் என்று பல்முகத் தன்மையைக் கொண்டதாக படங்கள் அமைந்து வருகின்றன. சகாவின் நிலைமை அங்கு வாழும் சாதாரண மனிதனின் நிலையாகவே இருக்கிறது.
மலையாள இயக்குனர் ஷ்யாம்பிரசாத்தின் ‘ரிது’ படைப்புத் தன்மை ஒரு குடும்பத்தில் தொடர்ந்து வருவதை, தகவல் புரட்சி தொழில்சார்ந்து இயங்கும் இளைஞனிலும் உள்ளீடாகி இருப்பதைக் காட்டுகிறது. ஷ்யாம் பிரசாத்திற்கு எழுத்துலகம் ஆதர்சமாகவே இருந்திருக்கிறது. அவரின் முதல் படமே லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலை மையமாகக் கொண்ட ‘அக்னி சாட்சி’யாகும். சென்றாண்டில் வெளிவந்து சர்வதேச அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற ‘ஒரே கடல்’ வங்காள எழுத்தாளர் தனில்சங்கோபாத்யாயாவின் நாவலை மையமாகக் கொண்டதாகும்.
‘ரிது’வில் குழந்தைப் பருவத்திலிருந்து நட்பாய் வளர்ந்த மூவரின் இன்றைய கதையாக இருக்கிறது. இருவர் ஆண்கள். ‘சிலிக்கன் வேலி’யிலிருந்து ஊருக்கு வரும் சரத்வர்மா, பெங்களூர் ஐ.டி. தொழிலில் இருக்கும் மற்ற அந்த இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கணினி மென்பொருள் துறை நிறுவனத்தில் சேருகிறார்கள். சிறு கிராமச் சூழலில் வளர்ந்தவர்கள் அவர்கள். வாழ்க்கை ஒரே துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் நினைவுகளைக் கிளறிப் பார்க்கக் கூடியதாகவே அமைந்திருக்கிறது.


வர்சாஜானிக்கும், பெண் தனி இம்மாட்டிக்குமான நட்பு ஒருவகையில் அவர்களை ஒரு இணையாகக் காட்சியளிக்க வைக்கிறது. தனியுடனான நட்பைப் பெரிதும் விரும்பும் சரத்வர்மா அவள் நவீன எண்ணங்களுடனான பெண் என்பதால் அவளின் வெளிப்படையான நடவடிக்கைகள் அவனைச் சங்கடப்படுத்துகின்றன. தனக்கானவளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். வர்சாஜானி குடும்பத்திலிருந்து அந்நியப்படுகிறான். இந்த வயதிலும் அவனை அடித்துத் துன்புறுத்தும் அப்பா மென்பொருளை வெளியாளுக்கு விற்கவும் துணிகிறான். பிடிபடுகிறான். மென்பொருள நிறுவனத் தொழில் அனுபவங்கள் சரத்வர்மாவிற்குக் கசப்பானதாக அமைந்து விடவே அதிலிருந்து வெளியேறி எழுதுகிறான். நண்பர்களின் பார்வையிலிருந்து மறைந்து போகிறான். சரத்வர்மாவின் அப்பா ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவன் எழுதி வைத்திருந்த டைரியை அவன் அமெரிக்காவிலிருந்து திரும்பியபின் தந்து அவனின் வெளிப்பாடு தனித்துவமானதாகும், மொழி சுயமாகவும் இருப்பதால் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிறார். மென்பொருள் நிறுவனத் தொழில் சூழல், அலைக்கழிக்கும் தனி இம்மாட்டி போன்றோர் அவனை அவனுள் பரிமாறிக் கொள்ள வைக்கத்தக்க கவிதைப் படைப்புகளை உருவாக்குகின்றன. சரத்வர்மாவின் தந்தை சாவதற்கு முன் அவனுடன் காரில் பயணம் செய்யும்போது அவனின் வேலை மீறி அவன் எழுத்தில் ஈடுபட வேண்டும் என்கிறார். மென்பொருள் துறையில் அவன் அப்பாவின் எழுத்தாளர் நிலையும், அவன் சகோதரனின் பொதுவுடமை சித்தாந்த ஈடுபாட்டால் தனிப்பட்ட வாழ்க்கைத் தோல்வியும் நகைப்பிற்குள்ளாக்கப்படுகின்றன. அவர்களின் போலி உலகத்திலிருந்து விடுபட எழுத்து ஆசுவாசமாகிறது. ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து அந்த உலகத்திற்குள்ளேயே இயங்கி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். தனி கணினி சார்ந்த ஒரு தொழிலில் குழந்தைகளுக்குப் பயிற்சியாளராக இருந்து ஆசுவாசம் பெறுகிறான். வர்சா ஜானி மென்பொருள் துறை தொழிலில் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறான். சரத்வர்மா எழுதின நாவல் ‘ரிது’ அவர்கள் இருவருக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. பழைய நினைவுகளை முற்றிலும் அழித்துவிட்டு வேறு உலகமாகப் படைப்பிலக்கியத்தை அவன் கைக்கொண்டு தொடர்கிறான். மென்பொருள் துறை சார்ந்த அனுபவங்கள், அவர்களின் உலகம், வார இறுதி விடுமுறைக் கொண்டாட்டங்கள், உயர்தர ஆடம்பர வாழ்க்கையாய் முழுக்க இளைஞர்களின் உலகமாய் இப்படம் கொண்டிருக்கிறது. அதில் வேலை செய்யும் கடைநிலை ஊழியன் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையை முன் வைத்து அத்தொழிலின் இன்னொரு பக்க முகத்தையும் ஷ்யாம் பிரசாத் காட்டுகிறார். தங்களின் நிலம் அத்தொழிற்சாலைக்காய் பிடுங்கப்பட்டு, வேலை வாய்ப்பு உறுதியளிக்கப்பட்டு சாதாரண காவலாளியாக நியமிக்கப்படும் ஒரு இளைஞன் அத்தொழிலில் நடக்கும் ஊழல்கள் காரணமாக உயிரைப் பணயம் வைக்கிற சிக்கலில் மாட்டுகிறான். நிலத்தை இழந்தும், அமைதியற்ற ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் குறியீடாகப் போகிறான். அந்தக் கடைநிலை ஊழியர் இளைஞனும். இன்றைய இளைஞர்கள் உலகம் பற்றிய இளமை ததும்பும் படம் ஷியாமினுடையது.
இயக்குனர் ராஜீவ்நாத் 13 படங்கள் இயக்கியிருக்கிறார். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை இவரின் ‘ஜனனி’ படம் 1999ல் பெற்றது. கேட்பாரற்று விடப்படும் ஒரு குழந்தையை எடுத்துப் பராமரிக்கும் சில கிறிஸ்துவக் கன்னியாஸ்த்ரீகள் பற்றின படம் அது. ஓ.வி.விஜயனின் ‘கடல்தீரத்து’ என்ற கதையையும் எடுத்திருக்கிறார். இவ்வாண்டில் வந்திருக்கும் அவரின் ‘பகல் நட்சத்திரங்கள்’ ஒரு எழுத்தாளனின் மரணம் குறித்தது. சித்தார்த்தன் என்ற எழுத்தாளன் அவனின் மாலைகளையும் இரவுகளையும் நண்பர்களுடன் கழிக்கப் பயன்படுத்தும் ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். காவல்துறை அதை ஒரு கொலை என்று கணிக்கிறது. ஆனால் கொலையாளியைக் காவல்துறை கண்டுபிடிக்க முடிவதில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு சித்தார்த்தனின் மர்மமான மரணம் குறித்த அவனின் நண்பர்கள் ஆராயும் பொருட்டு பழைய இடத்திற்குச் செல்கிறார்கள். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தாலும் அவ்விடம் எழுப்பும் நினைவலைகள் எழுத்தாளனைப் பற்றியதாக இருக்கிறது. மோகன்லால், சுரேஷ்கோபி போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தாலும் வணிகரீதியான வெற்றியை ராஜீவ்நாத்திற்கு இப்படம் தரவில்லை.
சோவியத் யூனியனின் சிதறலுக்குப் பிறகு தன்னுரிமை பெற்ற கஜகிஸ்தானின் படங்கள் பெரும்பாலும் பிரச்சார அம்சங்களைக் கொண்டவையாக இருந்த காலமுண்டு. ஆனால் ஹாலிவுட் பார்வை தற்சமயம் அவர்களின் படங்களை ஆக்கிரமித்திருந்தாலும் நல்ல படங்களின் வருகை ஆறுதல் தருவதாகத்தான் இருக்கிறது. சென்றாண்டில் வெளிவந்த ‘குல்சாரி’யும், இவ்வாண்டின் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான பரிசு பெற்றப் படமும் அவர்களின் முந்தைய அடையாளங்களை அழித்திருக்கின்றன. ஸ்டெப்பிப் புல்வெளியின் நாட்டுப்புறப் பாடகனும் கவிஞனுமான பிர்ஜான் இயல்பான தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபடி அவர்களின் பழங்குடி வாழ்க்கை முட்டுக்கட்டையாகிறது. பிர்ஜான் பற்றிய சரித்திர ஆவணமாக இப்படம் அமைந்திருக்கிறது. அவன் நடுவயது மனைவியை மிகவும் நேசிக்கிறவன்தான். அவனுக்குப் பரிச்சயமாகிற இளம்பெண்ணும் பாடகியுமான வேலிமின் அழகில் மனதைப் பறிகொடுக்கிறான். மனைவியும் சாவுப்படுக்கையில் தன் விருப்பத்தையே கூறுகிறாள். ஆனால் அவள் மாமனுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பதைக் கூறி ஊர்ப் பெரியவர்கள் மறுக்கிறார்கள். பிர்ஜானும் மனதை மாறறிக் கொள்ள வேண்டியதாகிறது. திருவிழாவில் பொதுமக்கள் மத்தியில் பாடிக் களிக்கும் அவனை ஊர் பெரியதனம் முன்னால் சிலர் பாடச்சொல்லிக் கேட்கிறார்கள். அவன் மறுக்கவே விரோதமாகிறது. அவனின் காதல் ஆசை நிராகரிக்கப்படும்போது தனிமையாக்கப்படுகிறான். தான் விரும்பிய வாழ்க்கையும் நிராகரிப்பும் அவனைச் சோர்வாக்குகிறது. ஆனாலும் பாடல் அவனை இயக்கிக் கொண்டே இருக்கிறது. சிறைப்பிடிக்கப்படுவது போல கட்டி இழுத்தும் செல்லப்படுபவன் தனிமையாளாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறான். நிறுவனங்களுக்கும், அதிகாரத்திற்கும் எதிராக அவன் குரல் பாடலாய் விரிந்து கொண்டேயிருக்கிறது. 19ம் நூற்றாண்டின் கலைஞனின் அவலத்தை முன்வைக்கிற இபப்டம் இப்போதைய குரோஷிய நாட்டுப் படத்தின் சகா என்ற எழுத்தாளனின் தனிமை அவலத்தோடு வெகுவாக ஒத்திருக்கிறது. இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் வர்ண உடைகளுடன் வேகமாய் குதிரைகளில் ஓடியோடி பிர்ஜான் ஒரு குரூர நாயை வேட்டையாடும் காட்சி இருக்கிறது. பிர்ஜானும் அவனின் விருப்பங்களுக்கு எதிராக அவனின் சமூகத்தில் வேட்டையாடப்பட்டவன்தான். சகாவின் விருப்பங்கள் எப்போதிலும் நிறைவேறியதில்லைதான்