சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 23 மார்ச், 2010

கென்லோச்சின் தபால்காரன்


இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு இங்கிலாந்தின் கென்லோச் நன்கு அறிமுகமானது அவரது புரட்சிகரப் படங்கள் மூலம்தான். அவற்றைப் பற்றி விரிவாய்;j தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவரிடமிருந்து நகைச்சுவையுடனான ஒரு படம் என்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யமானதே. இங்கிலாந்து தொழிலாளர் கட்சியில் 1960ல் சேர்ந்தவர். 1990 வரை கட்சி செயல்பாட்டில் ஈடுபடுத்திக் கொண்டவர். பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்றவர். பாலஸ்தீன பிரச்சினை குறித்த பல்வேறு எதிர்ப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்றவர். இவரின் ‘தி லேண்ட் அன்ட் பிரிடம்’ மிக முக்கியமான படமாகும். கார் என்ற பொதுவுடைமை இயக்கத் தோழரின் மரணத்தையொட்டி அவரின் பேத்தி அவரின் உடைமைகளைப் பரிசோதிக்கிறாள். டைரிக் குறிப்புகள், ஆவணங்கள் பல செய்திகளைச் சொல்கின்றன. ஸ்பானிய உள்நாட்டுப் போரில் பாஸிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட படையில் இருந்தவர் கார். அப்போராட்டத்தை அப்படம் விளக்குகிறது. போராட்டக் குழுக்களுக்குள் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள், விவாதங்கள், பொதுவுடைமைத் தத்துவச் சிக்கல்களை அப்படம் விவாதித்தது. கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்ற ‘தி விண்ட் தட் ஷேக்ஸ் த பார்லி’ அயர்லாந்து விடுதலைப் போராட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது. இவ்விரு படங்களும் இந்திய ரசிகர்களுக்கு வெகுவாகப் பரிச்சயமான படங்கள். இவை இரண்டும் பொதுவுடைமை வட்டங்களில் அதிகம் பேசப்பட்டவை. இவருடைய ‘கேஸ்’ என்ற படம் சிறந்த 100 பிரிட்டிஷ் படங்களில் தலையாயதாக விளங்குவதாகும். இதையொட்டி நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படம் வெளிவந்த 40 ஆண்டுகள் ஆவதையொட்டி சில முக்கிய நிகழ்வுகளும் சென்றாண்டு நடைபெற்றன. பில்லி என்ற பதின்பருவ மாணவன் பள்ளியில் புறக்கணிக்கப்படுபவன். மூத்த சகோதரனால் துன்புறுத்தப்படுபவன். அம்மாவின் கவனிப்பும் போதவில்லை. அவனுக்கு நட்பு கொள்ள இருக்கும் ஒரு பறவையுடனான அவனின் அனுபவங்களைச் சொல்லும் படம் ‘கேஸ்.’ சென்றாண்டு மெல்போர்ன் திரைப்படவிழாவில் இஸ்ரேல் சில நிகழ்ச்சிகளுக்கு ‘ஸ்பான்சர்’ செய்திருந்த காரணத்தால் தனது படங்களைத் திரையிட வேண்டாம் என்று திரும்ப பெற்றுக் கொண்டவகையில் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பிற்குத் தொடர்ந்த எதிர்ப்பைத் தெரிவித்தவர். இவர் ஈரானிய இயக்குனர் அப்பாஸ் கியரஸ் டமியுடன் இணைந்து இயக்கிய ‘டிக்கெட்’ என்ற படம் புகைவண்டிப் பயணத்தில் அகதிகளின் நிலைமையை மையமாகக் கொண்டிருந்தது.
இவரிடமிருந்து இவ்வாண்டின் படம் ‘லுக்கிங் பார் எரிக்’ நகைச்சுவை கலந்த படம் என்ற விபரமே ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. இவர் 15 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய ‘ரெயினிங் ஸ்டேன்ஸ்’ என்ற படம் நகைச்சுவை அம்சங்களைக் கொண்டிருந்தது. மான்செஸ்டரைச் சார்ந்த வேலையில்லாத தகப்பனான பிரதான கதாபாத்திரம் சிறு சிறு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறது. மகளுக்கு ஒரு சடங்கு, ஆடை வாங்கப் பணமில்லாமல் சிரமப்படுகிறார். பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கம் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதைச் சித்தரிக்கும் படமாகும் அது. அதில் வரும் ஒரு வசனம், ‘நான் பாட்டாளி வர்க்கத்திற்காகப் போராடவில்லை. நானே பாட்டாளி வர்க்கம்தான்..’
இவரின் நாற்பது வருடத் திரைப்பட இயக்கத்தில் இங்கிலாந்தின் பாட்டாளி வர்க்கப் பிரச்சினைகளும், சமூகப் பிரச்சினைகளும் இடம் பெற்றிருக்கின்றன. ‘லுக்கிங் பார் எரிக்’ படத்திலும் தபால்காரர் ஒருவரை முன்வைத்து நகைச்சுவைத் தன்மையுடன் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பற்றிய விமர்சனமாகவே படத்தை கென்லோச் அமைத்திருக்கிறார். எரிக்கின் குடும்ப வாழ்க்கை சோர்வு தருவதாக இருக்கிறது. இரண்டாவது திருமணமும் தோல்வியடைந்து விட்டது. முதல் மனைவி மூலமாகப் பதின்பருவ பையன்கள் அவரின் கட்டுப்பாட்டில் இல்லாதபடி இருக்கிறார்கள். ஒரு பையன் உள்ளூர் தாதா கும்பலுடனான பழக்கத்தில் ஒரு துப்பாக்கியை வீட்டில் மறைத்து வைக்கிறார். அதைத் தேடி காவல்துறையும் வருகிறது. முதல் மனைவியின் குழந்தையுடன் வெளியில் செல்லும்போது பிரிந்துவிட்ட இரண்டாம் மனைவியைச் சந்திக்கிறான். அவளுள் இருக்கும் அன்பு அவனை நெகிழ வைக்கிறது. வீட்டைக் கலைத்துப் போட்டு சிரமப்படுத்தும் ஒரு சிறு கும்பலைச் சிலருடன் சேர்த்து பழிவாங்கும் ‘சிறுபிள்ளைத்தனமான’ நிகழ்வொன்று படத்தின் இறுதியில் இடம் பெற்றிருக்கிறது. இதற்கிடையில் ஆன்மீக நாட்டம் நிம்மதியைத் தருமா என்ற அலைச்சல் இருக்கிறது. சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது தற்கொலை முயற்சிகளிலிருந்து தப்ப வைக்கிற உபாயமாக இருக்கிறது. ஆனாலும் குடும்ப வாழ்க்கையில் இல்லாத நிம்மதியை முதல் மனைவியின் குழந்தை, இரண்டாம் மனைவி என்று தேடிப்போய் கண்டு ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரின் படுக்கையறையில் இருக்கும் எரிக் காண்டோனா என்ற கால்பந்தாட்ட வீரரின் சுவரொட்டிப் படத்துடன் மானசீகமாக உரையாடிக் கொண்டிருப்பது அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. கால்பந்தாட்ட வீரர் படத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து எரிக்குடன் தேனீர், மது அருந்துகிறார். ஆறுதல் சொல்கிறார். அவர் வீட்டைக் கலைத்துப் போட்டுச் சிரமமாக்கியவர்களைத் துவம்சம் செய்கிறார். சோர்வடையும் போதெல்லாம் அவரின் கூட இருக்கிறார். எரிக் காண்டோனாவை முன்வைத்துக் கால்பந்தாட்ட வரலாறும், சில பந்தயப் போட்டிகளின் காட்சிகளும் இடம் பெறுகின்றன. அவை படத்தினை இன்னொரு நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஒரு கால்பந்தாட்ட வீரர், பிரபலமானவர் என்ற வகையில் அவரின் ‘மாய’ இருப்பு அவருக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது. அவர் எரிக்குடன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளினால் அவர் பெறும் ஆதர்சமும், ஆதரவும் அவரைப் பிரச்சினைகளிலிருந்து அவரை நகர்த்திச் செல்கறிது. இதை கென்லோச் நகைச்சுவையுடன் சொல்கிறார். ஒரு சாதாரண தபால்காரனின் அவஸ்தையூடே இந்த நகைச்சுவை வெளிப்படுகிறது. கால்பந்தாட்ட வீரர் எரிக் காண்டோனா ஓரிடத்தில் சொல்கிறார், ‘கால்பந்தாட்டப் போட்டியில் கோல் போடுவது பிரதானமல்ல. பந்தை சுமுகமாக நகர்த்திக் கொண்டு போவதுதான்’ தபால்காரர் எரிக்கிற்குக் கூட இதுதான் வாழ்க்கையின் சுமுகமானதன்மைக்கு மிக முக்கியம் என்று தோன்றுகிறது எனலாம்.

செவ்வாய், 16 மார்ச், 2010

அகியின் எதிர்ப்புக்குரல்



பின்லாந்து நாட்டைச் சார்ந்த இயக்குனர் அகி கௌரிஸ்மதியின் பெயர் சர்வதேசத் திரைப்பட அரங்கில் விருதுகளை அவர் நிராகரிக்கும் போதெல்லாம் பெரிதும் அடிபடும். தீர்க்கமாயிருந்து அவற்றை நிராகரிப்பார். சர்வதேச அமைப்பான அம்னஸ்டி இண்டர்நேஷனல் வழங்கிய மனித உரிமைகள் குறித்த விருதொன்றை ஏற்றுக் கொண்டவர். இவ்வாண்டில் அவரின் ‘லைட்ஸ் இன் டஸ்க்’ படத்திற்காக வழங்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான அகாதமி விருதை நிராகரித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கைகளை எதிர்த்து அப்பரிசு வாங்க மறுத்ததாக அகி தெரிவித்தார். ‘அமெரிக்கா ஒரு பாம்பு. செத்துப்போன பாம்புதான். ஆனால் குரூரமானது. உலகத்தையே பணத்தால் சுருட்டிப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிற குரூர மிருகம்’ என்கிறார் அகி. ‘தோற்றுப் போகிறவர்களைப் பற்றி படம் எடுக்கிறவன் நான். நானும் தோற்றுப்போன மனிதன்தான்’. தோற்றுப் போகிற மனிதர்களைப் பற்றி மூன்று தொடர் படங்கள் (ட்ரையாலஜி) எடுத்திருக்கிறார். அதன் இறுதிப் படம்தான் ‘லைட்ஸ் இன் த டஸ்க்’.


தபால்காரனாக, கழிவறை துப்புரவாளனாக, திரைப்பட விமர்சகனாக என்று பல தொழில்களை மேற்கொண்ட அகி 90 நிமிடங்களுக்கு மேல் படங்கள் எடுக்கத் தேவையில்லை என்கிறார். 70 நிமிடப் படமே இறுதிப் படமானது. சுவீடன், ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிற்கு இடையில் தென்படுவது பின்லாந்து. 1980களின் இறுதியில் பொருளாதார தாராளமயம் மற்றும் திறந்தவெளி சந்தை அந்நாட்டைப் பொருளாதார ரீதியில் வெளிக்கொண்டு வந்தது. 1995 ஐரோப்பிய யூனியனில் இணைந்தது. அதிகமான முதியவர்களைக் கொண்ட நாடு. ஐம்பது சதவீதம் வாக்காளர்கள் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். வருடத்திற்குப் பதினைந்து முதல் இருபது படங்கள் மட்டுமே அங்கு தயாரிக்கப்படுகின்றன. 1990ல் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களால் பட எண்ணிக்கை சென்ற பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைந்திருந்தது.
‘லைட்ஸ் இன் த டஸ்க்’ படம் ஒரு வியாபார ஷாப்பிங் சென்டரில் காவலாளியாகப் பணிபுரியும் ஒருவனின் தோல்வியடைந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. ‘மாலின்’ விரிந்த பரப்பில் திரிந்து அலைவதும், காலியான கடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அவனுக்கு வேலையாகிறது. அவன் மூன்று ஆண்டுகள் அங்கு வேலை செய்தாலும், அவனது பெயர் அவனது மேலதிகாரிக்குத் தெரியாது. மற்ற காவலாளிகளும் அவனை நிராகரித்தே வந்திருக்கின்றனர். தெருவில் அமர்ந்திருக்கும் ஆப்ரிக்கப் பெண், தெரு நாய், துரித உணவு விற்கும் பெண் ஆகியோரே அவனின் கவனத்திற்குரியவர்கள். துரித உணவு விடுதிப் பெண் அவனுக்கு ஆறுதலாய்ப் பார்வையையும், வார்த்தைகளையும் வழங்குபவள். ஒரு மதுக்கடைமுன் கட்டப்பட்ட நாய் ஒன்று அவனை ஈர்க்கிறது. அதைச் சுட்டியவர்கள் மதுக்கடையில் இருப்பவர்கள் என்பதையறிந்து கேட்கிறான். அடிபடுகிறான். அவனுக்கு நட்பாகிற பெண்ணுடன் திரைப்படங்களுக்கும், உணவு விடுதிக்கும், ராக் இசை நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறான். ‘மாலில்’ இருக்கும் ஒரு தங்க நகைக் கடையில் நடக்கும் திருட்டிற்கு அப்பெண் உடந்தையாகிறாள். அவன் பிடிபட்டு சிறைக்குப் போகிறான். சிறையிலிருந்து திரும்பி வருபவன் அப்பெண்ணை மீண்டும் சந்திக்கிறான். அவள் ஏமாற்றி இருப்பது தெரிகிறது. அவள் இன்னொரு கூட்டத்தின் பிடியில் இருப்பவள். அந்தக் கும்பலிடம் சென்று மீண்டும் அடிபடுகிறான். துரித உணவு விற்கும் பெண் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறாள்.

அகங்காரம் கொண்ட சிநேகிதியாக அவனுடன் சில நாட்கள் திரிந்து அலையும் பெண் அவனை மிகவும் பாதிக்கிறான். குழந்தை மனத்தினனாக அவன் அவளிடம் தன்னை சமர்ப்பிக்கிறான். ஆனால் அவளோ பெற்றோரின் உள் மனத்தினளாக ஆணையிட்டுக் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறவளாக இருக்கிறாள். ‘சாதாரண காவலாளி நீ. எனக்காய் இவ்வளவு செலவு செய்கிறாயே?’ என்று கேட்கும்போது அவளிடம் குழந்தைத்தனம் இருக்கிறது. ஆனால் அதிகாரம் அவளுள் விசுவரூபித்து அவனைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுகிறது. துரித உணவு விற்கும் பெண் அவனுக்கு ஆறுதலாகவே இருக்கிறாள். முதிர்ந்த மனத்தோடு அவனை அணுகுகிறாள். அவளின் பார்வை ஆறுதலாக இருக்கிறது. புது சிநேகிதி பற்றி பொறாமை மீறி எச்சரிக்கையை அவள் பார்வை தருகிறது. தெருவில் பார்க்கும் ஆப்ரிக்க சிறு வயதுப் பெண் குழந்தை மனத்தோடே அவனை எப்போதும் அணுகுகிறாள். அவன் அடிபடும்போது குழந்தை மனத்தோடே பதறுகிறாள். அதிகாரத்தால் மற்றவர்கள் அவனைச் சிதைக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அதிகாரத்திற்கெதிரான எதிர்ப்புணர்வே தனது படங்கள் என்கிறார் அகி. அதிகாரம் குலைக்கும் மனித உரிமைப் பிரச்சினைகள் அவர் எழுப்பும் கேள்விகளில் முக்கியமானதாக இருக்கிறது. அதற்காகவே அவருக்கு அம்னஸ்டி இன்டர்நேஷனலின் மனித உரிமை விருது தரப்பட்டது.
தோற்றுப் போகிற ஒரு விவசாயப் பெண்ணைப் பற்றியபடம். ‘ஜஹா’. பின்லாந்து நாவல் இது. நான்காவது முறையாக இது அகியால் திரைப்பட வடிவமாக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் நடக்கும் கதையை அகி 1970களில் நடப்பதாக அவரின் திரைவடிவத்தில் அமைத்திருந்தார். ஒரு விவசாயப் பெண் கணவனுடன் குடும்பத்தையும், விவசாயத்தையும், கால் நடைகளையும் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாள். அந்தக் கிராமத்திற்கு வரும் நகரத்தைச் சார்ந்த ஒருவனின் மகிழ்வுந்து பழுதாகி விடுகிறது. அவன் தங்கும்போது விவசாயப் பெண்ணுடன் நட்பாகிறது. நகரவாழ்க்கை, நவீன வாழ்க்கை பற்றியக் கற்பனைகள் அவளை அவனுடன் நகரத்திற்கு வரச் செய்கிறது. கொஞ்சகாலம் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். அவன் விபச்சார விடுதியொன்றில் அவளைத் தள்ளிவிட்டுத் தப்பித்து விடுகிறான். பத்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படமென்றாலும் பேச்சில்லாத, மௌனப்படமாக இதை எடுத்திருக்கிறார் அகி. துணையெழுத்தில் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. ஒரு நாவலைக் காவியத்தன்மைக்குக் கொண்டு செல்வதற்கு அப்படத்தின் பாணி பயன்பட்டதாக அகி சொல்கிறார்.
வெகு நிதானமான விவரிப்பைக் கையாள்கிறவர் அகி. பிரெஞ்சு இயக்குனர்கள், பாஸ் பைண்டரின் தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டவர். பாத்திரச் சித்தரிப்பிலும், நிதானமான விவரிப்பிலும் சாமான்ய மனிதர்களின் துயரங்களை ஆழமாகக் காட்டிவிடுபவர். திரைப்படத்தை ஒரு இருண்மைத் தன்மை கொண்ட விஷயத்திற்காகப் பயன்படுத்துவதாய் சொல்கிறவர் அகி.
அவரின் அமெரிக்கா பற்றிய விமர்சனத்தை ‘லெனின்கிரேடு பாய்ஸ் கோ அமெரிக்கா’ என்ற படத்தில் கிண்டல் தொனியாக்கியிருந்தார். ராக் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் சில இளைஞர்கள் புகழ்பெற வேண்டி அமெரிக்காவிற்குச் செல்கிறார்கள். அதைக் கிண்டல் தொனியுடன் சொல்லியிருந்தார்.
‘தி மேன் வித்தவுட் பாஸ்ட்’ என்ற அவரின் தோல்வியடைந்த மனிதர்களைப் பற்றிய பட வரிசையில் முக்கியமானதாகும். பெயரற்ற அவன் ஹெல்சிங்கி நகரத்திற்குப் புகைவண்டியில் வருகிறான். பூங்காவொன்றில் படுத்துத் தூங்குகிறான். காரணமில்லாமல் ஒரு கூட்டத்தால் அடித்து சித்ரவதை செய்யப்படுகிறான். நினைவு இழந்தவன் மறுபடியும் புகைவண்டி நிலையம் வந்து அங்கேயே புகைவண்டிப் பெட்டிகளுக்குள் அடைக்கலமாகிறான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பயன் இருப்பதில்லை. சுற்றியிருக்கும் சாதாரண விளிம்பு நிலை மனிதர்களுடன் நட்பாகவும், அன்பாகவும் இருப்பதுதான் அவனின் வாழ்வாகிறது. இந்தப் படத்தில் அவனைத் தாக்கி காயப் படுத்துபவர்களுக்கு நோக்கம் எதுவுமில்லை. மனித வக்கிரத்தின் செயல்பாடு அது. ‘லைட் இன் டஸ்க்’ படத்தில் காவலாளியை அடித்துத் துன்புறுத்துபவர்களுக்கு அவனை ஏமாற்றுவது நோக்கமாக இருக்கிறது. எல்லோரும் அவர்களின் வக்கிரத்தின் வெளிப்பாடாய் வன்முறையைக் கையாள்கிறார்கள். ‘மேன் வித்அவுட் பாஸ்ட்’ படம் வெளிவந்தபோது அவருக்கு அப்படத்திற்காகப் பரிசு தரப்பட்டது.

உள்நாட்டில் போர் நடக்கிறபோது பரிசு எனக்குத் தேவையில்லை என்று நிராகரித்தார் அகி. போரும், இழப்புகளும் குரூரமானவையாக எடுத்துச் சொன்னார். நியூயார்க் திரைப்பட விழா பரிசொன்றையும் ஒரு தரம் அவர் வாங்கிக் கொள்ள மறுத்து நிராகரித்தார். அப்போது ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கியரஸ்டமிக்கு அந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘விசா’ தர அமெரிக்கா மறுத்ததை எதிர்த்து அப்பரிசை நிராகரித்தார். இவ்வாண்டு புஷ்ஷை எதிர்த்துப் பரிசை நிராகரிக்க அவர் தீர்க்கமான முடிவுகளை வெளியிட்டு தன் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தியவர் அகி.

வியாழன், 11 மார்ச், 2010

பாலியல் படமெடுக்கும் ‘பயந்தாங்கொள்ளி’ இயக்குனர்

இவ்வாண்டின் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அதிக ரசிகர்களைக் ‘கிறங்கடித்தபடம்’ அல்லது திகிலூட்டிய படமென்றால் அதை லார்ஸ் வான் ட்ரையரின் ‘ஏன்ட்டிகிரைஸ்ட்’ என்று சொல்லலாம். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது எழுந்த சர்ச்சைகள் வெவ்வேறு நாடுகளில் திரையிடப்பட்டபோதும் தொடர்ந்தன. ஏகமாய்க் கூட்டங்களை இப்படத்திற்குச் சேர்த்தது. ஒரு பெண் கணவனுக்குச் செய்யும் சித்ரவதைகளின் உச்சத்தைக் கண்ட சில ஆண்கள் மயக்கமுற்று விழுந்தனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தவர் ஒருவர் மயக்கமுற்றார். திரையரங்கில் பல சமயங்களில் அமளியும், சலசலப்பும் இருந்தன.

லார்ஸ் எப்போதும் சர்ச்சைக்குரிய இயக்குனராகத்தான் இருந்து வந்திருக்கிறார். 1995ல் ‘டாக்மே’ படங்கள் என்ற தலைப்பில் அவரும் சில இயக்குனர்களும் பாலியல் சம்பந்தமான படங்களை ஹாலிவுட் படங்களுக்கு எதிரானவையாக எடுக்க ஆரம்பித்தனர். அது ஒரு இயக்கமாகவே வளர்ந்தது. பெண் ரசிகர்களுக்காகவே ‘போர்னோ’ படங்களை 1998ல் எடுத்திருக்கிறார். படுக்கை அறைக் கதைகள், அதீத சிருங்காரக் கதைகள் என அவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை வெகு ஜனப் படங்களாகவும் அமைந்திருக்கின்றன. தன்னுடைய படங்கள் பற்றிய பெருமிதத்தில் எப்போதும் இருப்பவர். சில்மிஷக் குணம் கொண்ட அவரின் இயல்புகளை அவரின் படங்களில் காணலாம். உதவியோ, குரூரமோ, மகிழ்ச்சியோ வெகு துள்ளலாக வெளிப்படும் அவரிடம். கடவுள் முன் கூட தலைவணங்கத் தேவையில்லை. கடவுள் என்று ஒருவன் இல்லவே இல்லை. இருந்தாலும் அவனிடம் தலைவணங்கத் தேவையில்லாததால் அகங்காரத்துடன் நிற்கிறேன் என்பவர். ‘டாக்மே’ வகைப் படங்கள் வறட்டுவாதப் படங்களாய், பரிசோதனை அமசங்களைக் கொண்டு கிண்டல் தொனியில் வெளிப்பட்டவை. ஓரினப் பாலுணர்வு இயக்குனர் என்று அவரின் சில படங்களை முன் வைத்து அவர் பட்டம் சூட்டப் பெற்றிருக்கிறார். பத்து ஆண்டுகள் ‘டாக்மே’ வகைப் படங்களை ‘ஒரு போக்காக’ ஹாலிவுட் படங்களுக்கு எதிராக நிறுவியவர். அவை பெரும்பாலும் வெளிப்புறப் படப்பிடிப்புகள் இல்லாமல், கட்டிடங்களுக்குள் நிகழும் சம்பவங்களாகவே அமைந்திருக்கும். படப்பிடிப்பிற்கான ஒளி அமைப்போ, ஒலி வகையோ இல்லாமல் இயற்கையில் கிடைப்பதைப் பயன்படுத்தினார். அந்த வகையில் 18 படங்கள் வெளிவந்தன. 2005க்குப் பின்னால் அவ்வகைப் படங்களை அவரே நிராகரிக்க ஆரம்பித்தார். ‘போர்னே’ படங்கள் எடுக்கத் தனி நிறுவனமொன்றை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தவர் 1998ல் தாஸ்தாவிஸ்கியின் ‘இடியட்டை’ எடுத்து சர்வதேச அரங்கில் பேசப்பட்டார். 2008ல் ‘டான்சர் இன் த டார்க்’ படத்தின் பாடல்கள் அவரை வேறு உச்சங்களுக்குக் கொண்டு சென்றன. 2003ல் வெளிவந்த ‘டாக்வில்லே’ அமெரிக்க சமூகத்தின் குரூரங்களைத் தோலுரிப்பதாக இருந்தது. தரையில் வரையப்பட்ட ‘செட்டுகள்’ என்பது அதன் சிறப்பம்சமாக அமைந்தது.


‘ஏன்ட்டிகிரைஸ்ட்’ அவரின் ‘போர்னோ’ பிம்பத்தை உடைக்கவில்லை. அதிலிருந்து அவர் மீளவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் வியாபார நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படவில்லை என்கிறார். குளியலறையில் தம்பதியர் உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் நாலாவது மாடி ஜன்னலைத் திறந்து விளையாடும் சிறு வயது மகன் தவறி விழுந்து சாகிறான். அப்பெண்ணிற்கு அது உறுத்தலாக அமைகிறது. ஒருவகையான பய உணர்ச்சியும் எதிர்பார்ப்புமான நோய் அவளைப் பீடிக்கிறது. அவளின் கணவன் ஒரு மருத்துவ நிபுணன். அவளின் பயத்தைப் போக்குவதற்காய் சிகிச்சையைத் தொடங்குகிறான். குடும்ப உறுப்பினர்களுக்கு உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை தருவது தவறானது என்று சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். பயத்திலிருந்து அவள் விடுபட உடலுறவு என்பதை அவள் திரும்பத் திரும்பக் கையாள்கிறாள். அதுவே அவளை ஆசுவாசப்படுத்துகிறது. பாலியல் நடவடிக்கைக்குள்ளேயே மருத்துவக் கணவனும் அமிழ்ந்து போகிறான். அவளை ஒரு காட்டு மர பங்களாவிற்குக் கூட்டி வருகிறான். இயற்கை அவளைச் சாந்தப்படுத்தவில்லை. ‘இயற்கை சாத்தானின் தேவாலயம்’ என்கிற அவள் அது தரும் சலனங்களுக்கு எதிராய் உடலுறவே தீர்வு என்று நினைக்கிறாள். கணவனைத் துன்புறுத்துகிறாள். அவனால் உடலுறவு முடியாதபோது சித்ரவதை செய்கிறாள். அவனை அடித்துக் காயப்படுத்துபவள் காலில் துளையிட்டு கல் சக்கரத்தை மாட்டித் துன்புறுத்துகிறாள். அவன் தப்பித்து நரிக்குகையில் ஒளிந்தாலும் கண்டுபிடித்து சித்ரவதை செய்கிறாள். பிளவுண்ட அவளின் மனம் சில சமயம் அதிலிருந்து மீண்டு ஆறுதல் தருகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் சித்ரவதை. கணவன் அவளை அடித்து தீயிட்டுக் கொளுத்துகிறான். இயற்கை சூழ்ந்த பகுதியின் குரூரச் செயல்கள் அவனைத் திகைப்படையச் செய்கின்றன. ட்ரையரின் டென்மார்க் நாட்டில் இப்படத்திற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் பல நாடுகளில் திரையிடத் தயக்கம் காட்டி எதிர்ப்புணர்வைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் இப்பெண்ணுள் நிறைந்திருக்கிற பய உணர்ச்சியை லார்ஸின் உள்மன உறைவாகச் சொல்லலாம். நிஜத்தில் பய உணர்ச்சியில் மூழ்கிப் போகிறவர்தான் இயக்குனர் லார்ஸ். எல்லாவற்றையும் கண்டு பயம் கொள்கிற மனோபாவம் கொண்டவர். விமானம் ஏறிப் பயணம் செய்வது மிகுந்த பயத்தை அவருக்குத் தந்திருக்கிறது. விமானப் பயணம் என்பதாலேயே அமெரிக்கா சென்றதில்லை. பெரும்பாலும் தரை மார்க்கமாகவே பயணம் செய்பவர் விமானப் பயணங்களை உயிர்பயம் காரணமாகவே தவிர்த்து வந்திருக்கிறார்.

இப்படம் நான்கு பாகங்களைக் கொண்டிருக்கிறது. ‘துக்கம்’ என்ற பிரிவில் பையனின் மரணச் சடங்குகள் நடைபெறுகின்றன. ‘வலி’ என்ற பிரிவில் நடைபாலத்தில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ‘நரி வாழும் குகையில்’ அடுத்த பாகம் அமைந்திருக்கிறது. ‘மூன்று பிச்சைக்காரர்கள்’ என்ற கடைசி பாகத்தில் மர பங்களாவின் கூரைமீது வந்து பயமூட்டுகிற காகம், நரி, வந்துபோகும் மான் ஆகியவற்றைக் குறியீடாகக் கொண்டு நடக்கும் மன சித்வதைகள் அமைந்திருக்கின்றன. ‘இயற்கை சாத்தானின் தேவாலயம்’ என்ற அவளின் எண்ணம் நிறுவப்படுகிறது. இரண்டு நடிகர்கள் மட்டுமே படம் முழுக்க இடம்பெற்றிருக்கிற கறுப்பு-வெள்ளைபடம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலியல் வன்முறை குறித்த விஷயங்களுக்காக ‘எதிர் விருது’ பெற்றிருக்கிறது. "படம் இயக்குவதைத் தவிர எல்லாமும் எனக்குப் பயம் தருபவை" என்கிறார் லார்ஸ். ‘காலணியில் நுழைந்துவிட்ட சிறு கல்போல உறுத்திக் கொண்டிருக்க வேண்டும் திரைப்படங்கள்’

நாத்திக வழிக் குடும்பம் அவருடையது. 1995ல் மரணப்படுக்கையில் இருந்த அம்மா, அவனின் அப்பா என்று அறியப்பட்டவர் அப்பா அல்ல, இசை ஞானம் மிக்கவரின் வாரிசாகத் தன் மகன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இசை ஞானமுள்ளவரிடமிருந்து குழந்தைப்பேற்றைப் பெற்றதாகச் சொல்கிறாள். லார்ஸ் அப்பாவைத் தேடிப் போய் கண்டடைகிறான். ஆனால் திரும்பத் திரும்ப மகன் தன்னைச் சந்திக்க வருவதை அப்பா விரும்பவில்லை. தொடர்ந்து தன்னைச் சந்திக்க வந்தால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன் என்று மிரட்டி அனுப்பிவிடுகிறார். அவர் தந்த மிரட்டல் பயமாகி அவரைத் தூர விலகி இருக்கச் செய்திருக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்துமஸின்போதும் 3 நிமிடங்கள் மட்டுமே படமெடுத்து அவற்றைத் தொகுத்துப் படமாக்கும் முயற்சியைத் தனது புதிய சோதனை முயற்சி என்கிறார். 1991 முதல் 2014 வரை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு பரிசோதனை முயற்சியாக அமையும் என்கிறார் ‘பயந்தாங்கொள்ளி’ லார்ஸ்.