சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 24 மே, 2012

திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்

ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் பிரச்சினைகளாகி வன்முறை ரூபம் எடுக்கின்றன.கவனித்தும், அனுபவித்தும் கற்றுக் கொள்கிற சமூக புரிதல் இல்லாமல் போவதால் இது அதிகரிக்கிறது.ஆணாதிக்க மேலாணமையும், அதிகாரமும் உச்ச பட்ச நிலையை இதனால் எட்டுகின்றன.இது தரும் மன் அழுத்தமும், அதன் வடிவான மன நோயும் சாதாரணமாகிவிடுகிறது.வேறொருபுறம் இது குழந்தைகள் மீதாவ வன்முறையாயும் வளர்கிறது. குழந்தைகள் மீதான இந்த வன்முறை ஆண்டுதோறும் 4 மில்லியன் குழந்தைகளைப் பாதிக்கிறது.எழுபதுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெண்ணிய இயக்கங்கள் இதை ஓரளவு கட்டுப்படுத்தி சட்டநியதிகளை கொண்டு வந்திருக்கிறது.. குடும்பப்பெண்கள், குழந்தைகள் மீதான வண்முறையின் உச்சமாக் “ நைட் அண்ட் போக்” படம் தென்பட்டது.
நிஜக்கதையொன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படம் ‘நைட் அண்ட் போக்’ . மனைவி, இரு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தையே கொலை செய்து விடுகிற கணவனின் முரட்டு வாழ்க்கை பற்றியது. முரட்டுத்தனமான கணவர்களின் குறியீடாய் கூட அவன் திகைந்து விடுகிறான். நம்மூர் நிஜ வில்லன்களின் ஒரு பரிமணமாக அந்தக் கணவன் இருக்கிறான்.
வழக்கமான கணவன்மாராகவே இருக்கிறான். அவனின் முந்தைய திடுமணத்தால் வளர்ந்த பையன் இருக்கிற நிலையில் விவாகரத்து பெற்றவன். மீன் சமையலில் வறுத்தது தவறு. வேக வைத்திருக்க வேண்டும் என்று சண்டை போட்டு மனைவியை அடிக்கிறான். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பணத்தைக் கட்டாமல் குழந்தைகளுக்கும் சங்கடமளிக்கிறான். மனைவியின் கைகளைக்கட்டி படுக்கையில் கிடத்தி உறவு கொள்வது அவனுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அவன் வேலையில்லாதவன் என்பதால் கிடைக்கும் பென்சன் அவனுக்கு இன்னும் பிடித்தமானதாக இருக்கிறது. சமூக பாதுகாப்பு அலவன்சு அவனுக்கு வேலைக்குப் போகும் அவசியத்தை வற்புறுத்துவதில்லை. மனைவி வேலைக்கு போவது அவனுக்கு பிடிக்கவில்லை.பெண்ணாய் பலர் முன் நடமாடுவது அவனுக்கு இன்னும் பிடிக்கவில்லை. மனைவி அடி தாங்காமல் தத்தளிக்கிறாள்.
பக்கத்துப் போர்ஷன் பெண் காவல்துறை புகார் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாள். மனைவி நிலைமை மீறும் போது அதையும் செய்து விடுகிறாள். குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார்கள். மனைவி அவளின் சகோதரி வீட்டில் தங்குகிறாள். கணவன் அங்கு வந்து கலாட்டா செய்யவும் குடும்ப அலோசனை மையத்திற்கு செல்கிறாள். கணவன் அப்பாவியாக தனது சிறு தவறுகளை பெரிதாக்கிவிட்டாள். அவளைப் பொன் போல பார்த்துக் காப்பாற்றுவதாக உறுதிமொழி தருகிறாள்.வீட்டிற்குத் திரும்பிய பின் வீட்டில் மறுபடியும் கணவனின் ரகளை அடி உதை. கையில் காயங்களுடன் அவள் மீண்டும் பிரிந்து ஒரு காப்பகத்தில் சேருகிறாள். அங்கிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் காப்பகத்தில் நடக்கின்றது. அவள் சின்ன வயது நினைவுகளில் முழ்கிப் போகிறாள்.
அவளின் சின்ன வயது அனுபவங்களை அவள் நினைத்துப் பார்க்கவே ரம்மியமாக உணர்கிறாள். ஹாங்காங்கிற்கு வேலை கிடைத்து திரும்புகிறவள் ஒரு தொலைக்காட்சி பெட்டியோடு திரும்புகிறாள். அடுத்த முறை கிராமத்திற்கு வரும்போது தன் கணவனாய் வருகிறவனை அழைத்து வருகிறாள். கிராமத்தில் அவனுக்கு என்ஜினியர் என்று பெயர். அவளின் ஓட்டு வீட்டை பராமரித்து கட்டிட வேலைகளைச் செய்கிறான். ”இன்ஜினியர்” . சாப்பாடு தாமதமாகிறது, தேவையான பணம் இல்லை என்று தெரிகிற போது அவன் வீட்டு நாய் மீது எரிச்சலைக் காட்டி கொல்வது வீட்டில் அனைவர்க்கும் அதிர்ச்சி தருகிறது. மனைவியின் தங்கை மீதும் ஒரு கண் அவனுக்கு. கிராம வாழ்க்கையை மீறி நகரத்தில் வேலை அமைந்து ஆசுவாசம் கொள்கிறாள்.
காப்பகப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறார்கள்.உளவியல் பாதிப்பு கொண்டவர்களாய் நடந்து கொள்கிறார்கள். மனவியாதியின் உச்சத்தில் இருந்து கொண்டு நடமாடுபவர்களும் அங்கு இருக்கிறார்கள். அந்த சூழல் அவளுக்கும் குழந்தைகளுக்கும் அச்சம் தருவதாக இருக்கிறது. கணவன் வேறு கைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறான். கணவனை நம்பி வீட்டிற்கு வருகிறாள். தன்னை அவமானப்படுத்தியதாக சொல்லி அடிக்கிறான். உச்சமாய் இரு குழந்தைகளையும் அவளையும் கணவன் கத்தியில் குத்திக் கொல்கிறான். முதல் மனைவி மூலம் பிறந்த மகனை பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அப்பா பற்றி கேட்கிறார்கள். “ நான் அவர் மகன் அல்ல” என்கிறார்.
கிராமத்தில் அப்பெண்ணின் அப்பா எல்லா சோகத்தையும் சுமந்தவராக ஓடி விளையாடும் முயலைப் பார்த்தபடி பீடி குடித்துக் கொண்டிருக்கும் இறுதிக் காட்சியோடு படம் முடிகிறது. படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் மனைவி மீதான வன்முறை உச்சமாய் காட்டப்பட்டிருப்பது பதற்றத்திற்குள்ளாக்குகிறது. பெண்கள் மீதான வன்முறை குறித்த ஒரு பிரச்சார இயக்கம் பற்றின ஓர் இடமும் படத்தில் இடம் பெறுகிறது.
ஹாங்காங் சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி வெகு சாதாரணமாகச் சொல்லும் படம் இது. அதே சமயம் கும்பல் வன்முறை என்பது நிலைபெற்றிருக்கிற நகரமும் அது. முதலாளித்துவ பொருளாதாரம் கோலோச்சும் நகரம். இங்கிலாந்திற்கு இணையாக கல்விமுறை பயிற்சியும் சிறப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கிழக்கும் மேற்கும் சந்திக்கும் உலகமாகவும் பல விதங்களில் அமைந்திருக்கிறது. உலக வியாபார கேந்திரத்தின் ஒரு முக்யமான நகரமாகிவிட்டது. கேளிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நகரம் பெறும் வருவாய் என்பது முக்யமானதாக இருந்து கொண்டு உலக பணக்கார மக்களை அந்த நகரத்திற்கு விரட்டிக் கொண்டே இருக்கிறது.இப்பட்த்தில் இடம் பெறும் இரவுக்காட்சிகள் ஒரு நகரத்தின் கேளிக்கைப்பரிமாணத்தையும், மறுபுறம் வன்முறையின் முகத்தையும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல காட்டுகின்றன.
-------------------------------------------------------------------------------------

புதன், 16 மே, 2012




வியாழன், 10 மே, 2012

காலநதியின் சகபயணிகள்

2012-05-08
அ. முத்துலிங்கத்தின் “ உண்மை கலந்த நாட்குறிப்புகள்” நாவல் குறித்து..
= சுப்ரபாரதிமணியன்



சிறுகதைகள் என்பது நாவலின் சில பகுதிகள். தொடர்ச்சியோ, தொடர்ச்சியின்மையோ அதை நாவல் என்ற கட்டமைப்ப்பில் கொண்டு வந்து விடும்.எட்டு நாவல்கள் எழுதி விட்டேன். மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், தேனீர் இடைவேளை, ஓடும் நதி, நீர்த்துளி என்று . நாவல் எடுத்துக் கொள்ளும் கால அளவும்,அதன் பிரசுர இடைவெளியும் சங்கடப்படுத்தும். சிறுகதையென்றால் சீக்கிரம் பிரசுர வசதி இருக்கிறது. அதை விட கவிதை எழுதுவதும், பிரசுரமும் சற்றே சீக்கிரம் நிகழ்பவை. நாவலின் சில பகுதிகளாவது பிரசுரமாக வாய்ப்புகள் குறைவு.பிரசுரத்தில் பெயரைப் பார்க்கிற ஆசை நாவல் எழுதும் விசயத்தில் சீக்கிரம் நிறைவேறாது. ஆனால் அ. முத்துலிங்கம் அவர்களின் பல சிறுகதைகள் நாவலின் பகுதிகளாக சுலபமாக அமைந்து விடுவது எதேச்சையானதா, இல்லையா என்பது குழப்பம். பிரசுரவாய்ப்பிற்கும், நல்ல வசதி என்பது போல் அவருக்கு அமைந்து விடும். இந்த நாவலில் கூட அதுதான் வாய்த்திருக்கிறது. இதில் உள்ள பல பகுதிகளை சிறுகதைகள் என்ற வகைமையில் முன்பு படித்தவை.ஆனால் அவற்றுக்கு உள்ள தொடர்பு பற்றியும் யோசிக்க வைத்து விடுபவை.இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்கான முத்தாய்ப்பு அம்சங்கள் கொண்டது.கடந்த காலத்தின் கூறுகளாக அமைந்திருக்கின்றன.இதை ஒரு நாவல் வடிவம் என்றும் கொள்ளலாம்.நவீன நாவலின் வடிவத்தை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளலாம்.
நினைவலைகளிலிருந்து எதையாவது எழுதினாலும், பழைய விசயமாக இருந்தாலும் அதில் சமகால ஊடுருவலாக ஏதாவது விசயம் அமைந்து விடுவது குறிப்பிடத்தக்க விசயமாக இதில் எடுத்துக் கொள்ளலாம்.சமகாலத்தைத் துடைத்தெறிந்து விட்டு பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விடமுடியாததுதான்.
வயது அல்லது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலிருந்தும் என்றபடிதான் இந்தக்கிரமம் அமைந்திருக்கிறது. இளமை. படிப்பு, வேலை, திருமணம், வெவ்வேறு வேலைகள், முதுமை என்ற கட்டமைப்பில்தான் இந்த வெவ்வேறு பகுதிகளும் அமைந்திருக்கின்றன.இந்தப் பகுதிகளின் இணைப்பிற்கான கண்ணிகளையும் இதில் அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.கிணற்றுத்தவளையாக இருக்கும் மனிதனின் ஒரே மாதிரி அனுபவங்களையும், பல நாடுகளில் வேலை பார்த்த, சுற்றிய அனுபவங்களையும் வேறு படுத்திப்பார்க்க இதில் பல அடையாளங்கள் இருக்கின்றன.காலம் முன்னோக்கித்தான் ஓடும்.அதை பின்னோக்கி தள்ள முடியாது. நாங்கள் காலம் என்ற நதியில் பயணித்துக்
2
கொண்டிருக்கிறோம் என்கிற முத்துலிங்கம் நம்மையும் சக பயணியாக இதில் அழைத்துச் செல்கிறார்.பலரை அறிமுகப்படுத்துகிறார். பல கலாச்சார அம்சங்களை சொல்லித்தருகிறார்.
எல்லோரையும் போல சின்ன வயதின் கிராம அனுபவங்களிருந்துதான் ஆரம்பிக்கிறார். அம்மாக்களும் தொலைந்து போகமுடியும் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர்களின் உடைகள் பற்றி வியப்பு என்றைக்கும் குறையாது. நம்முடைய பொருளாதார நிலைக்கு, அவர்களின் உடைகள் ஆடம்பரமானவை. வியந்து கொள்ளச் செய்பவை என்பது தெரிகிறது. அந்த வயதில் வரும் சங்கீத ஆசை, பேச்சுப் போட்டி, பாடல் ஆர்வம், என்ர்று தொடர்கிறது.இசைப்பருவம் கொடுக்கும் மிதப்பிற்கு அளவு இல்லை.காதல் என்பது விட்டு விடுமா என்ன.. பல்கலைக் கழக நுழைவுத்தேர்வு முதல், படிப்பு சம்பந்தமான பல விசயங்கள் தென்படுகின்றன. அப்புறம் வேலை என்று வந்து விட்டபின் ஊர் ஊராக , நாடு நாடாகச் சுற்றுகிறார். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான அனுபவங்களைக் கொண்டு வருகிறது. கொழும்பில் அதிக நாள் வேலை நிமித்தமாய் இருக்க முடிவதில்லை. ஆப்பிரிக்க நியமனத்தின் போதான சாவுகள் சங்கடப்படுத்துகின்றன. அதிகமாய் ஆப்பிரிக்க அனுபவங்கள் ஆக்கிரமிக்கின்றன. பாக்கிஸ்தான் அனுபங்களும் அதிகம். பாக்கிஸ்தானில் முத்துலிங்கம் இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். இந்த அனுபவங்களிம் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள் என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் சுருங்கிப்போய் விட்டன. சியராலியோன், சூடான், அமெரிக்கா சோமாலியா, என்று கனடாவில் போய் ஒரு துண்டு நிலம் வாங்குவரை நாடு சுற்றல் அவருக்கு இருந்து கொண்டே இருக்கிறது.இந்த வகையில் நாடுகளைச் சுற்றும் போது கூர்ந்து கவனிப்பதும், அவதானிப்பதும், அக்கறையும் அவரின் அனுபவங்களைச் சுவராஸ்யமிக்க படைப்புகளாக மாற்றும் ரசவாதம் அற்புதமாகக் கைகூடி வந்து விடுகிறது அவருக்கு. நாடுகளைச் சுற்றுவதாலேயே அவை மனதில் பதிந்து விடாது. எங்கள் திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அன்னியச் செலவாணி பின்னாலாடையால் சம்பாதிக்கிறது. எங்களூர் முதலாளிகள் வெளிநாடுகளுக்கு போவதும், வருவதும் சகஜம். ஆனால் அங்கு பார்த்ததை கோர்வையாகச் சரியாகச் சொல்லவோ, ஒரு பக்கம் எழுதி விடவோ அவர்களால் முடிவதில்லை.பேசும் போது என்ன பார்த்தீர்கள் என்று கேட்டால் கேளிக்கைச் சமாச்சாரங்கள், பாலியல் விசயங்கள் சிலவற்றைச் சொல்வார்கள். அவ்வளவுதான். போய் வந்ததாக பொய் சொல்கிறாரோ என்ற சந்தேகம் கூட வந்து விடும்.

3
எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத வித்தை தமிழுக்கு பெரிய கொடை.
இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது. இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும் பக்குவம் தெரிகிறது. அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில் நல்ல பதிவாகி விடுகிறது. வேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின் கண்களில் மின்னுகிறது. மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால் சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள் சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள் கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும் மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான நிறைய விசயங்கள். இவற்றில் நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும் வாக்குமூலத்தைப் புறம் தள்ளி விட்டு அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது. மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது. இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ, நைரோபிப் பெண்ணோ அனுதாபத்துடனும் எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்ணகளை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில் குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ, இந்த நாட்களைக் கடத்துவது என்பது
4 இல்லாமல் ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும். .கலை இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. படைப்பாளியின் ஆயுளை முன் வைத்து படைப்பின் அமரத்தன்மை பற்றியும் இந்த சமயத்தில் நிறைய யோசிக்கலாம் என்று படுகிறது.கவிதைகள் சாயலில் தாளில் அடிக்கோடிடும் பல நூறு வரிகள் இந்த நாவலில் உள்ளன. கவிதையை உணர்ந்து புரிந்து கொண்டபின் உற்சாகத்தின் துள்ளலோ, துக்கத்தின் சாயலோ அகப்படுவதிப் போல இந்த வரிகள் மனதில் நின்று விடுகின்றன. இந்த வகைச் சாயல் அனுபவங்கள் ஆழ் மனதைச் சீண்டும் இணக்கமானதாக நமக்கும் வெவ்வேறு களங்களில் நேர்ந்திருக்கிறது. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் பல நிகழ்வுகள். இருப்பிற்கும் இல்லாமைக்கும் இடையில் அவை. இந்த இடவெளியிலான உறவுகள், அன்பு, சடங்குகள், குடும்பம், சாவு என்ற வலி முடுச்சுகள் இருக்கின்றன. இந்த முடுச்சுகளின் அர்த்தத்தை இந்த நாவலின் அனுபவங்கள் விளக்குகின்றன. நிலையற்ற பிம்பங்களாய் அலைந்து திரியும் அனுபவங்கள் இதில் நிரந்தரப்பதிவாகின்றன.
{உண்மை கலந்த நாட் குறிப்புகள்/ அ.முத்துலிங்கம் நாவல்/ உயிர்மை பதிப்பகம் வெளியீடு, 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. விலை ரூ 175}
subrabharathi@gmail.com
நன்றி - உயிர்மை

வியாழன், 3 மே, 2012

மாய விருப்பம்

சிறுகதை

விடுதிகளில் தங்கும்போது கீழ்த்தளத்தில் அறை ஒதுக்கப்படாமல் இருப்பது ஹில்டாவிற்கு எப்போதும் ஆறுதலாக இருந்திருக்கிறது. முதல் தளத்திலோ, இரண்டாம் தளத்திலோ அறை அமைந்துவிடுவது ஆறுதல். ஜன்னல் திரையை விலக்கிவிட்டு வீதிகளை, தூரத்துக் கட்டிடங்களை வேடிக்கை பார்க்கலாம். மனிதர்கள் சிறுத்து நடமாடுவதைப் பார்க்கலாம். விரையும் வாகனங்கள் தீப்பெட்டிகள் போல் செல்வது சுவாரஸ்யமளிக்கும். தூரத்திலிருக்கும் கட்டிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டத் தீப்பெட்டிகளைப் போல இருக்கும். ஜன்னலின் வழியே மேல் தளங்களிலிருந்து பார்ப்பது அவளுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாகவே இருந்திருக்கிறது.

அந்த விடுதியின் இரண்டாம் தளத்து அறையின் இரு பக்கங்களிலும் ஜன்னல் இருப்பது ஆறுதல் தந்தது ஹில்டாவிற்கு. பெரும்பாலும் ஒரு திசையில் மட்டும் ஜன்னல்கள் இருக்கும். வலது பக்க ஜன்னலை மூடிய திரைச் சீலையின் அழுக்கு அதைப் பார்ப்பதைத் தவிர்க்கச் செய்தது. பூ போட்ட திரைச்சீலை. இது என்ன பூவாக இருக்கும். மல்லிகை, முல்லை, சம்பங்கி, குழல்மல்லி போன்ற பூக்களையெல்லாம்கூட இப்போது திரைச்சீலைகளில் பார்க்க முடிவதில்லை. ரோஜாகூட தென்படுவதில்லை. கலப்பினப் பூக்கள் போல ஏதாவது தென்படுகிறது. என்ன பெயர் என்று தெரியாத பூ. அந்தப் பூவைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், திரைச்சீலையின் பூக்களையும் அழுக்காக்கிவிட்டன. அதைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது என்பது போல் திரைச்சீலையை ஒதுக்கியிருந்தாள்.
இரவுகளில் மேல்தளத்திலிருந்து வேடிக்கை பார்ப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். மினுக்கும் விளக்குகள். ராட்சத உருவங்கள் சிறுத்து வெளிச்சமாய் நகர்ந்து கொண்டிருக்கும். ஒளிப்புள்ளிகள் விரைசலாய் நகர்ந்துபோவது போலிருக்கும். மின்விளக்கொளியில் கட்டிடங்கள் எலும்புக் கூடுகளாய் நின்றுகொண்டிருக்கும். இப்போதைய காலைப் பொழுதில் அதெல்லாமில்லை. வெளிச்சம் எங்குமாய் பரவிவிட்டது. அழுக்கு வெளுப்பைப் பரப்பிவிட்டது போல வெளிச்சம் பரவி நின்றது.

சின்ன ஊர்தான். வாகனங்கள் விரைசலாய் ஓடுவது தென்படவில்லை. இன்னும் நேரமாகலாம். ஊரின் பெயரில் கோட்டை என்றிருக்கிறது. ஆனால், கோட்டை என்று எதுவும் தென்படவில்லை. நேற்று இரவு உணவு கொண்டு வந்த பையனிடம் கேட்டுவிட்டாள். “ஊரு பேருதா கோட்டை. பழைய கோட்டைன்னு எதுவும் தெரியலே. இருந்த கோட்டையெல்லா முனிசிபல் ஆபீஸ், கரண்ட் ஆபீஸ், கோர்ட்டுன்னு ஆயிப்போச்சு. இந்த ஆபீசுலெல்லா பாத்தீங்கன்னா கோட்டைன்னு தெரியறமாதிரி பெரிய பெரிய காம்பவுண்ட் சுவர்க தென்படும். அவ்வளவுதா.”

சில விடுதிகளில் தங்கும்போது அறைக்கு உணவு கொண்டு வருவது இல்லாமலிருக்கும். பணம் கொடுத்து வெளியில் இருந்துதான் வாங்கி வரவேண்டியிருக்கும். அப்போதெல்லாம் கையிலிருந்து காசு செலவழியும். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் அத்தொகையைக் கேட்கமுடியாது. தனக்குக் கிடைக்கும் சொற்பப்பணம் இப்படி கழிந்துவிடுவது அவளுக்கு வருத்தமாகவே உணர வைத்திருக்கிறது.
இடது பக்க மூலையில் ஒரு கட்டிடத்தின் முன்பு கியூ ஒன்று தென்பட்டது. கொஞ்ச நேரம் முன்பு, அந்தக் கட்டிட முகப்பு எழுத்து பூச்சியாய் நெளிந்தது. என்னவாயிற்று. பார்வைக் குறைபாடா. கண்ணாடி மாட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையா. தூரத்தில் இருப்பது தெரியாமலிருப்பதற்கு கிட்டப்பார்வை என்ற பெயரா? அல்லது தூரப் பார்வை என்ற பெயரா? எந்தப் பார்வையாக இருந்தாலும் காசு செலவாகும். கண் பரிசோதனைக்கென்று ஒரு தொகை. கண்ணாடி விலை குறைவாக இருந்தாலும் ஃபிரேம் விலை அதிகமாக இருக்கும். வாசந்தி போன தரம் கண்ணாடி மாற்றியபோது ஏகதேசம் அழுதுவிட்டாள். கண்ணாடி இருநூறு ரூபாய்தான். ஆனால் ஃபிரேம் இருநூறிலிருந்து ஐநூறு, அறுநூறு என்று வளர்ந்துகொண்டே போனது. பரிசோதனைகளுக்கென்று நூற்றைம்பது ரூபாய். எண்ணூறு ரூபாய்க்குக் குறைந்து கண்ணாடி போட முடியாது போலத் தென்பட்டது. “ரோட்ல சாளேசுவரக் கண்ணாடி ஐம்பது அறுபதுன்னுகூட விக்கறாங்களே” என்று வாசந்தி கேட்டுவிட்டாள். “அது போட்டா கெழவி ஆயிர்லாம். தயார்ன்னா கௌம்புங்கம்மா…” வேறு வழியில்லாமல் வாங்கினாள். கீதாவிற்கு வந்த சோதனை வேறு வகையானதாக இருந்தது. அவள் பயன்படுத்தி வந்த கண்ணாடி பயனற்றுப்போய்விட்டது போலிருந்தது. எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை. படிக்க இன்னும் கொஞ்சம் வெளிச்சம் தேவையாக இருந்தது. மின்விளக்கின் அருகில் சென்று படிக்க வேண்டியிருந்தது. டார்ச்லைட்டை எழுத்தின் மேல் அடித்தால் பிரகாசித்து படிக்க ஏதுவானது. அப்படியானால் கண்ணாடிக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. கண்ணிற்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. மாற்றவேண்டும் என்று ஐ பவுண்டேசர் கேர் சென்டருக்குச் சென்றபோது ஹில்டாவும் சென்றிருந்தாள். ஃபிரேம் அறுநூறு ரூபாய் ஆகிவிட்டது. சின்னக் கண்ணாடி. படிப்பிற்கு மட்டுமானது. மாற்றும்போது அதுவே போதுமென்று சொல்லிவிட்டாள். அறைக்கு வந்து பார்த்தால் படிக்க மட்டுமே பயன்படுவது தெரிந்தது. தொலைக்காட்சியில் ஓடும் எழுத்துக்களோ, தூரக் காட்சிகளோ மங்கலாகத் தெரிந்தன. மருத்துவரை குறை சொல்லி மீண்டும் சென்றாள் வாசந்தி. “படிக்க மட்டும் போதுமுன்னு சொல்லிட்டு எங்களைக் குறை சொன்னா எப்பிடி? தூரத்தில இருக்கறதையும் பாக்கணும். பக்கமிருந்து படிக்கவும் செய்யணும்ன்னா கீழே ஒரு மாதிரி கண்ணாடியும், மேல ஒரு மாதிரியும்ன்னு இருக்கற மாதிரி போடணும்…” தூரத்திலிருப்பவற்றையெல்லாம் பூச்சி பூச்சியாய் பார்த்துக்கொண்டிருப்பது இம்சையாகப் பட்டது அவளுக்கு. சரி என்று ஒப்புக்கொண்டாள். அதே ஃபிரேமை மாட்டிக்கொள்ளலாம் என்பதுதான் ஆறுதலாக இருந்தது அவளுக்கு. அந்த மாதத்தில் வீட்டிற்குப் பணம் அனுப்ப முடியாமற் போனது பற்றி வாசந்தி மாதம் முழுக்கப் புலம்பிக் கொண்டிருந்தா. ஹில்டாவிற்கும் ஐந்நூறு, அறுநூறு என்று திடீர் செலவு வந்துவிடுகிறபோது பயந்துவிடுவாள். வீட்டிற்குப் பணம் அனுப்பமுடியாமற் போய்விடுவதுண்டு.
இன்றைய நிகழ்ச்சி போல ஏதாவது கிடைத்தால் ஆறுதலாக இருக்கும். உள்ளூரில் பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒன்றிருந்தது. அது ஏகதேசம் பாட்டு மன்றம்தான். ஹில்டா பாடுபவளாக இருந்ததால் இடை இடையே திரைப்படப் பாடல்களைப் பாடி நேரத்தை ஓட்டிவிடுவாள். அன்றைய நிகழ்ச்சியில் இரு அணியினரும் உள்ளூர்க்காரர்கள் அவளைத் தவிர. நடுவர் நவரசத்திலகம் அப்பையா அவளை சிபாரிசு செய்திருந்தார். அவர் சிபாரிசு செய்யும் நான்காவது நிகழ்ச்சி இது. போன நிகழ்ச்சி ஒன்றரை மாதங்களுக்கு மேலாகிவிட்டது. மாதத்திற்கு இரண்டு நிகழ்ச்சி என்றால் ஆயிரம் மிஞ்சும். ஆறுதலாக இருக்கும் கடனை கொஞ்ச கொஞ்சமாய் அடைக்க உதவியாக இருக்கும். அப்பையாவிடம் கேட்கும்போது ஏகதேசம் குரல் கம்மிவிடும் அவளுக்கு. வேறு வழியில்லை கேட்டுவிடத்தான் வேண்டும். சென்ற நிகழ்ச்சி முக்கிய தொலைக்காட்சி வரிசை சந்திரன் ஒளிபரப்பியது அவளைச் சந்தோஷப்படுத்தியிருந்தது.

அப்பையாவிற்கு தொலைபேசி செய்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். “சந்தோஷம் சார்.”

“சந்தோஷம் உனக்கு மட்டுந்தானா.” இந்த வார்த்தைகள் அவளைக் குப்புறத் தள்ளியது. ஏதாவது எதிர்பார்ப்பில் வந்த வார்த்தைகளா? அல்லது சாதாரணமாகத்தான் சொன்னாரா? நல்ல வாய்ப்பு. தொலைக்காட்சியில் ஒளிபரப்பு என்றாகிவிட்ட பின்பு, புதியவர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கலாம். அதைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் நல்லது. வாய்ப்புகள் தேடிவரும். புதிது புதிதாய் ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பு அமைகிறது. புதியவர்கள் அறிமுகமாகிறார்கள். “ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா?” என்று கேட்கிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள். “ஏகப்பட்ட கவிதைகள் இருக்கும். புத்தகமாப் போடலாம். நேரம் இல்லை. கருவறை தவம்ன்னு பேர்கூட ரெடியா இருக்கு” டிடிபி செய்து வைத்தால் யாரிடமாவது நீட்டி போடுங்கள் என்று கேட்கலாம். நூறு பக்கங்களுக்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேலாகிவிடும். அவளின் அடுத்த லட்சியம் கவிதைத் தொகுப்பு வெளிக்கொணர்வதாக இருந்தது. அப்பையாவிற்கு இருக்கும் செல்வாக்கிற்கு யாரிடமாவது சுலபமாகச் சிபாரிசு செய்துவிடுவார். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது. கவிதைத் தொகுப்பு அட்டைப்படத்திற்கு பூக்களைத்தான் போடவேண்டும் என்று தீர்மானித்திருந்தாள். திரைச்சீலையின் அழுக்குப் பூவாக இருக்கக்கூடாது. பிரகாசமான பூக்களாக இருக்கவேண்டும். கருவறை தவம் என்ற தலைப்பிற்கு பூக்கள் பொருத்தமாக இருக்குமா? அட்டையை வடிவமைப்பவரிடம் சொல்லி ஏற்றாற்போல் வடிவமைத்துக் கொள்ளலாம். பூக்கள் இருக்கட்டும். தாய், குழந்தை, வயிறு, கர்ப்பம் என்று தொனிக்கிற விதமாய் சிறுசிறு பிம்பங்களையும் பூக்களோடு அட்டையில் சேர்த்துவிடுவது அவளின் கற்பனையிலிருந்தது.

அறைக்கதவு தட்டப்பட்டது. யாராக இருக்கக்கூடும். உள்ளூர் அமைப்பாளர்களில் யாராவது? இரு அணிகளின் பேச்சாளர்களில் யாராவது? அப்பையாவாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் என்றால் கைபேசியில் தகவல் தந்திருப்பார். கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்றிருந்தது ஹில்டாவிற்கு.
நேற்றிரவு மெல்லிதாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்ததாக பிரமை அவளுக்கிருந்தது. அல்லது நிஜமாகவே யாராவது தட்டுகிறார்களா? கதவைத் திறக்கவில்லை. என்னவானாலும் கதவைத் திறப்பதில்லை என்று முடிவெடுத்தவள் போல கண்களை இறுக்கிக்கொண்டு படுக்கையில் கிடந்தாள். கதவைத் திறந்தால் விபரீதமாகிவிட்டால் என்ன செய்வது? கூக்குரலிட வேண்டியிருக்குமா? அமைப்பாளர்களென்றால் இணக்கமாகத்தான் பேச வேண்டியிருக்குமா? யாராவது எதை எதிர்பார்த்துக் கதவைத் தட்டுவார்கள்? தன் மீதான ஆக்கிரமிப்பு எந்த வகையாக இருக்கும். இதுவெல்லாம் தனது வளர்ச்சிக்கு உதவுமா? அல்லது உயர்த்திக் கொள்ளத்தான் வேண்டுமா? கதவு தட்டப்படும்போதோ, கைபேசி மணி அடிக்கும்போதோ உள்ளுக்குள் கிளம்பும் அலறலைத் தவிர்க்க முடியவில்லை அவளால்.
இப்போது கதவைத் திறக்கலாமா? அல்லது ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாமா? உள்ளூர் நிகழ்ச்சி அமைப்பாளர்களென்றால் தவறாக எடுத்துக்கொள்வர். கதவைத் திறந்தாள்.
விடுதிப்பையன் நின்றுகொண்டிருந்தான். ஐம்பது வயதைக் கடந்தவராக இருந்தான். இவரை பையன் என்று சொல்வதா? தன்னைப் போல இரு மடங்கு வயது அவருக்கு.

“அம்மா ஏதாச்சும் வேணுங்களா…?”

“ஒண்ணும் வேணாம். டிபன்தா சாப்பிட்டாச்சே…”

“காபி, டீ, கூல்டிரிங்க்ஸ் ஏதாவது வேணும்ன்னாலும் சொல்லுங்கம்மா…”“தேவைன்னா சொல்றேன். ஆமா எதிர்த்த கட்டடத்தில் நிறைய பேர் கியூவில நின்னுகிட்டிருந்தாங்க. திடீர்ன்னு போலீஸ் வந்து எல்லார்த்தையும் கலச்சாங்களே. அவங்க யாரு…” “எதுத்ததா…. மார்வாடி வூடம்மா. ரெண்டாவது சனிக்கிழமை காலையில வர்றவங்களுக்கெல்லா கால் படி அரிசின்னு தருவார். ரொம்ப காலமா அது நடந்திட்டிருக்கு. இன்னிக்கு என்னாச்சுன்னா அரிசிக்கு பதிலா சாதம் பொட்டலம் கொடுத்தாங்க. பலரும் எங்களுக்கு சாதம் பொட்டலம் வேண்டாம். பழையபடி அரிசிதா வேணும்ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் தாறுமாறா பேச ஆரம்பிச்சுட்டாங்க போல. அதுதா போலீஸ் வந்து கலஞ்சு போகச் சொன்னாங்க. வெலவாசி ஏறிப்போச்சில்ல.”
உடம்பு பரபரத்துக் கொண்டிருப்பதாகப் பட்டது ஹில்டாவுக்கு. இதென்ன வகை பரபரப்பு? யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பரபரப்பு. நிகழ்ச்சிகளுக்கென்று வெவ்வேறு ஊர் விடுதிகளில் சென்று தங்குகிறபோதெல்லாம் இந்தப் பரபரப்பை அவள் உடம்பை ஆட்டிப் படைக்கும் யாரோ அவளை ஆக்கிரமிப்பு செய்யத் தயாராக இருப்பதுபோல தோன்றும். இதுவரை எதுவும் நடக்காததற்கு கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொண்டாள். அல்லேலுயா என்று அலறிப் பார்க்கலாமா என்று தோன்றும். வாய்விட்டு அலறவேண்டும் என்ற கட்டாயத்தை கர்த்தர் உருவாக்க மாட்டார். எல்லோருக்கும் மேய்ப்பவனாகவும், ரட்சகனாகவும் இருந்துகொண்டு காப்பவன் தன்னையும் இந்தப் பரபரப்பிலிருந்து காப்பாற்றுவார் என்று எப்போதும் நம்புவாள். தன்னை ஆக்கிரமிப்பவர்களால் தனக்கு நன்மை விளையும் என்று நம்புவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. சாத்தானே திரும்பிப்போ என்று ஓட விரட்டவேண்டும் போல இருந்திருக்கிறது.
உடம்பை படுக்கையில் சாய்க்கவேண்டும் என்று பட்டது. நின்றுகொண்டே வீதிகளைப் பார்த்தாயிற்று. வெயில் முகத்தில் அறைந்து சோர்வையும் உண்டுபண்ணிவிட்டது. இனி கொஞ்சம் நேரம் ஓய்வு கொடு என்று கால்கள் கெஞ்சுவது போலிருந்தது. உட்கார்ந்த நிலையில் உடம்பை சற்றே வளைக்கத் தொடங்கினாள். உடம்பு மெல்ல நிலைகுலைந்து படுக்கையில் சாய்வதாக இருந்தது. கதவு தட்டப்படக்கூடாது. நட்சத்திர விடுதிகளின் அறைகளில் அட்டைகள் போல் “தொந்தரவு செய்யாதீர்” என்ற அட்டை இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. கதவைச் சாத்திவிட்டு நன்கு தூங்கவேண்டும் என்று பட்டது. கண்கள் சுருங்க ஆரம்பித்து அவளின் உடம்பு குறுகத் தொடங்கியது.

கைகளையும், கால்களையும் அகல விரித்து உடம்பைச் சீராக்கிக் கொள்வது போல கிடந்தாள். படுக்கை கசங்கியிருந்தது. புடவை தாறுமாறாகக் கலைந்து தொடையைக் காட்டியபடி கலைந்து கிடந்தது.
திடுமென எழுந்து கதவைப் பார்த்தாள். தூங்கும்போது தாழிட்டபின் தூங்குனேனா என்று யோசித்துப் பார்த்தாள். அறைப்பையன் சென்ற பின்பு கதவருகில் சென்ற ஞாபகம் இல்லை. கதவு தாழிடப்படாமலேயே தூங்கியிருக்கிறேனா என்று யோசிக்க ஆரம்பித்தாள். என்னவாகியிருக்கும். குளியலறைக்குச் சென்று தொடையிடுக்கில் தண்ணீர் ஊற்றிக் கழுவினாள்.
நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் விடுதிகளில் தங்கும்போதுகூட யாரையாவது அழைத்துவரலாம் என நினைப்பாள். அறைத் தோழிகள் என்றால் அவர்களுக்கான செலவையும் ஏற்க வேண்டியிருக்கும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கவனிப்பது ஒரு வேலையாகிவிடும். அதனால் தவிர்த்தே வந்திருக்கிறாள். அவள் தனியே விடுதியில் தங்குவது பற்றி வீட்டிற்குத் தெரிந்தால் களேபரமாகிவிடும். நிகழ்ச்சிக் குழுவினருடனே தங்குவதாகச் சொல்லியிருக்கிறாள். ஒவ்வொரு விடுதியிலும் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டிருக்கிறது. தன்மீது ஆக்கிரமிப்புச் செய்யப்போவது யாராக இருக்கும் என்ற கற்பனை எழுந்து உடம்பைக் குலுங்கச் செய்திருக்கிறது. இந்தப் பரபரப்பே வேண்டாம், நிகழ்ச்சிகளே வேண்டாம் என்ற தீர்மானத்திற்கும் அவள் பலதரம் வந்திருக்கிறாள். ஆனால், போன தடவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது அவளுக்கு வந்த தொலைபேசிகளும், எதிர்ப்பட்டவர்களின் உபசரிப்பும் அவளை மிதக்கச் செய்திருக்கிறது.
அறையின் சுவர்களில் ஏதாவது கர்த்தர் படம் இருக்கிறதா என்று அவளின் கண்கள் அலைந்தன. எதுவுமில்லை. புலியொன்று பச்சைப் புல்வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இங்கிருந்து கிளம்புகிற வரைக்குமாவது இந்தப் படம் கண்ணில் படக்கூடாது. அதை அகற்ற அனுமதி எதுவும் கிடைக்காது. அதன் பார்வையிலிருந்து தப்பித்துவிட முடியாது. படமில்லாத எதிர் சுவற்றைப் பார்க்க ஆரம்பித்தாள்.

குளியலறைக்குச் சென்றவள் உடைகளைக் களைந்தெறிந்தாள். கதவின் மேல்புறத்தில் அவை சரியாக விழுந்தன. குழாயைத் திருப்பியபோது தண்ணீர் கொட்டி வாளி நிரம்பியது. குளிர்நீரை கோப்பையில் அள்ளி தலையில் ஊற்றினாள். தலையிலிருந்து குளிர் உடம்பு முழுக்க நிறைப்பதாக இருந்தது. எப்போதும் வெந்நீரில் குளிப்பவள். இடதுபுறம் வெந்நீர் குழாய் இருப்பதை எதேச்சையாகப் பார்ப்பது போல் அப்போது பார்த்தாள் ஹில்டா

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்

சிறுகதை

ருசியான கறி சாப்பிட வேண்டுமென்றால் முஸ்லீம்களை சிநேகிதர்களாய் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பான் பக்தவச்சலம். அவனுக்கென்று பெயர்சொல்லக்கூடிய அளவில் ரகீம், மெகபூப் இருந்தார்கள். பக்தவச்சலம் வீட்டில் யாரும் கறி சாப்பிடுவது இல்லையென்றாலும் அவன் கிடைக்கிற பக்கம் சாப்பிடுவான், நான் கூட ரொம்ப நாளாய் பக்தவச்சலத்தை அய்யர் என்றுதான் நினைத்திருந்தேன், சிவப்பாய் நாமம் போட்ட முகத்தோடு அவனின் விதவை அம்மாவும், அவனின் அண்ணனின் பூணூல்

உடம்பும், செத்துப் போய் படத்தில் இருந்த அப்பாவின் நாமம் போட்ட போட்டோவும் திரும்பத் திரும்ப அவனின் ஜாதியைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் ஞாபகம் வரும்.

ஒருநாள் வீட்டில் கறி சமைத்திருந்தோம். பாதி சாப்பாட்டில் முகம் வியர்த்து கறியை ருசித்துக் கொண்டிருந்தபோது பக்தவச்சலம் வந்தான். அம்மா “கொஞ்சம் சாதம் சாப்பிடுப்பா” என்றாள். “ஐயோ ..அவங்கெல்லா கறி சாப்புடமாட்டாங்கம்மா..அய்யரு அவங்க ” என்றேன். “நாங்க அய்யரில்லீங்க..:சைவ செட்டியார் ” ரொம்ப நாளாக உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்குப் பதில் கிடைத்தது. “எங்க ஊட்ல

சாப்பிடமாட்டங்க; நா அப்பப்போ வெளியே சாப்புடுவேன்”. அம்மா இன்னொரு தட்டை அவன் முன் வைத்தாள். அப்போதுதான் கறியை முதல் முதலில் மெகபூப் வீட்டில் சாப்பிட்டதைப் பற்றிச் சொன்னான் “சொல்லி வெச்சாப்புலே நாலே துண்டுதா; ஆனா ஒவ்வொன்னும் தனி ருசி”. பீங்கான் தட்டில் கறியும் மசாலாவும் துளிகூட இல்லாமல் எச்சில் பண்ணிச் சாப்பிட்டதைச் சொன்னான்.

பின் ஒரு நாள் மாதத்தில் கடைசி சனிக்கிழமையன்று மெகபூப்பிடம் சொல்லி ஸ்கூலிற்குக் கொண்டுவரும் டிபன்பாக்சில் அதே போல் நாலு துண்டு கொண்டு வந்தான். மெகபூப் வீட்டுக்கறியைச் சாப்பிட வேண்டும் என்று பக்தவச்சலத்திடம் நான் ஒரு முறை வெட்கத்துடன் சொன்னதை எப்போதோ சொன்னானாம். நாலாம் பீரிட் நடந்து கொண்டிருந்தபோது “முஸ்லீல் வீட்டுக்கறி சாப்புடலாமா இன்னிக்கு “ என்றான்

பக்தவச்சலம். எச்சில் ஊறியது. “மெகபூப் கொண்ணாந்திருக்கான்” அந்த பீரிட் பூகோளப் பாடம் மனசில் பதியவில்லை. சொல்லி வைத்தமாதிரி நாலுதுண்டு மெகபூப்பிற்கு இரண்டும் எனக்கும் பக்தவச்சகலத்திற்கும் இரண்டும். நன்றாகச் சாப்பிட்டோம். அந்த வருஷத்து ரம்ஜானுக்கு என்னைக் கூப்பிடேன் என்று நான் மெகபூபிடம் சொன்னேன். ஆனால் அவன் கூப்பிடவில்லை. பக்தவசலம் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தான். அவன் மேல் எனக்கும் பொறாமைகூட. ஆனாலும் பக்தவச்சலம்

ஒல்லியாகத்தான் இருப்பான் என்பதில் எனக்குச் சந்தோசம் உள்ளூர.

வீட்டில் கறி சமைப்பதை நினைக்கிற போதெல்லாம் சேக் மொகீதின் ஞாபகம் வருவார். அவரிடம்தான் எப்போதும் அப்பா மட்டன் வாங்குவார். மட்டன் வாங்குகிற அன்று திடீரென்று சொல்வார். அம்மா நிறைய நிறைய சின்ன வெங்காயத்தைப் பரப்பி உட்காருகிற போதே எங்களுக்குப் புரிந்துவிடும். அப்பா என்றும் சந்தோஷமாய்க் குரல் பிளக்கும். “வாடா மகனே மொகீதின் கடைக்குப் போகலாம்” என்பார். அப்பா

மீறிப் போனால் அரைக் கிலோதான் எடுப்பார். அதற்குக்கூட முழுசாய்ப் பணம் கொடுப்பாரா என்பது தெரியாது. காரணம் ஒவ்வொரு முறையும் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தபின் மொகீதின் மீதியைச் சந்தையன்னிக்குத் தர்ரேனே என்றோ, இதையும் கணக்கிலே வச்சிக்கோ என்றோ, சரி வரட்டுமா என்றோதான் சொல்வார். அவர் அந்தக் கடனை எப்போது கொடுப்பார் என்றுதெரியாது. ஆனால் மொகீதின் அப்பாவிடம் கடன் கேட்டு வந்ததை நான் பார்த்ததில்லை.

வீட்டில் நுழைந்தால் அம்மா கண்களில் கண்ணீரோடு வெங்காயத்தை உரித்துக் கொண்டிருப்பாள். உரித்த வெங்காயத்தை வானலியில் போட்டு வதக்கி ஆட்டாங்கல்லில் போடுவதற்கு முன் எனக்கும், தம்பி பழனிவேலுக்கும் கொஞ்சம் வெந்து வதங்கின வெங்காயம் ஆட்டாங்கல் ஓரத்தில் இருக்கும்: அதை மென்றபடிதான் அம்மாவின் கைகளில் மேல் எங்கள் கைகளையும் ஓட்ட வைத்து மிளகு அரைப்போம். மிளகு இளக வேணும் என்பதற்காக அம்மா அவ்வப்போது தண்ணீர் ஊற்றிக் கல்லை உருட்டுவால்.சில சமயம் மிளகு தெறித்துக் கண்ணில் விழும். பின் எங்கள் கண்களை ஊதித்துடைத்து “வர்ராதேன்னா கேட்டியா..” என்று நகர்த்துவாள். உடனே அந்த இடத்தை விட்டுப் போயிடவேண்டும் என்று தோணாது ஆட்டாங்கல்லிற்குப் பக்கத்திலேயே இருப்போம். அம்மாவுடன் பேச்சுக்குத் துணை யாராவது இருக்கலாமே என்று தோணும். அம்மாவும் அதையே விரும்புவாள். சந்தனமாய் மிளகாய் அரைக்க வேண்டும் என்பாள். “தொட்டு நெத்தியிலே வெச்சுக்கடுமா” என்றால் “அட சீ ..” என்பாள்.

கறி சமைக்க என்று புழக்கடையில் இருந்து சட்டி எடுத்து வருவாள் பின் அங்கேயே அது போய்விடும். ‘மாமிசம் அதிகமா கூடாதடா’ என்பாள். மெகபூப் வீட்லே மட்டும் வாரம் நாலுதரம் ஏம்மா என்றால், அவங்க ஜாதி அப்பிடி, சூரத்தனம் என்பாள். கறி சமைக்க என்று தனியாய்ப் பாத்திரம் உபயோகிப்பதைப் பற்றி மெகபூப்பிடமோ, இரவியிடமோ கேட்க வேண்டும் என்று ரொம்ப நாளாய் மனசில்.

அப்பா அம்மாவிடம் கறி சமைக்கலாமா என்று கேட்டால் உடனே அம்மா சம்மதித்ததாய் எனக்கு நினைவில்லை. அம்மாவிற்கு கறி ஏன் பிடிக்காமற் போயிற்று என்பதற்கு ஏதாவது காரணம் இருகலாம் என்று நினைத்ததுண்டு. இதைப் பற்றி அப்பாவிடம் ஒரு முறை கேட்டேன். ‘அவளுக்கு பெரிய பாப்பா பொண்ணுனுன்னு மனசுல நெனைப்பு’ எரிச்சலாய் சப்தமிட்டுச் சொன்னார். அப்போதுதான் அய்யர்கள் கறி சாப்பிடமாட்டார்கள் என்கிற விஷயம் ஒரு தகவலாய் எனக்குத் தெரிந்தது.

அப்பாவிற்கு ஆட்டுத் தலைக்கறி பிடிக்கும். தலை வாங்கி வரும்போது சொல்லி வைத்தமாதிரி ஆட்டுக்கால்களையும் வாங்கி வருவார். தீயில் கருகினபின்பு ஆட்டுக்கால்களை கழுவி கயிற்றில் கோர்த்து சமையற்கட்டில் அப்பா தொங்கவிட்டு விடுவார். ‘அப்ப்றமா சூப்பு போட்டுக்கலா’என்பார். பின் கறி எடுக்காத

ஞாயிறுகளில் சூப்பு கிடைக்கும். அப்பா தன்னிடம் காசில்லாத சமயங்களில்தான் சூப்பு போடச் சொல்வதாக நான் நினைப்பேன் அநேகமாக அது சரியாகத்தான் இருக்கும். தீயில் ஆட்டுத்தலையைக் கறுக்கும்போது வருகிற வாசமே தனி ’உம்’ என்று மூச்சிழுப்பேன். கத்தியால் மயிறை நன்றாகச் சுரண்டிச் சுத்தம் செய்துவிட்டு வெட்டிவர அப்பா அனுப்புவார். மொகீதின் கடையில் ஆட்டுத்தலையை சுத்தம் செய்து

வெட்டித் தரவென்று பெரிய வீட்டு நடராஜன் இருப்பான். வெகு லாவகமாகவும் சீக்கிரமாகவும் வெட்டித் தருவான். ஆட்டு மூளை சிதைந்து விடாமல் தனி இலையில் கட்டிக் கொடுப்பான்.

சின்ன வானலியில் அரைத்த மிளகும், உப்பும் சேர்த்து மூளையைச் சமைத்து ருசிப்பதில் ஒரு தனி ருசி. பொட்டுப் பொட்டாய் நடுக் கையில் வைத்து நக்குவேன். அதைப் பங்கிடுவதில் எனக்கும் தம்பி பழனிவேலுக்கும் நிறையத் தடவை சண்டை வந்திருக்கிறது. அம்மாதான் நிவர்த்தி செய்வாள். ஆனாலும் ஒரு நாள்கூட எனக்கு கொஞ்சம் என்று அமா கை நீட்டியதில்லை. அம்மாவிற்கு மூளைக் கறி பிடிக்காது போனது அதிசயந்தான். சூடாக நாக்கில் போட்டுப் பஞ்சு மிட்டாய் மாதிரி அரைப்பது ஒரு அபூர்வமான விஷயம் பழனிவேலுவுக்கு அதெல்லாம் தெரியாது. உடனே முழுங்கிவிட்டுக் கையை நீட்டுவான். அதில் தான் எனக்கும் அவனுக்கும் நிறைய மனஸ்தாபம். அம்மா சொல்கிறாளே என்றுதான் அவனுடன் நான் அதைப் பகிர்ந்து கொள்வேன். முளை சாப்பிடுகிறபோது மடும் எனக்குத் தம்பியென்று ஒருத்தன் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். ஒரு நாள் அம்மாவிடமும் இதைச் சொல்லிவிட்டேன் ‘அடசச்ண்டாளா, இப்படியொரு ஈனப் புத்தியா உனக்கு..’என்றாள். அப்பாவுக்கும் இது தெரிந்துவிட்டது. ‘இனி எப்ப ஆட்டுத் தலைக்கறி எடுத்தாலும் ரெண்டுதலை எடுக்கப் போறேன். ஒரு தலை மூளை உனக்கு; இன்னொன்று அவனுக்கு..மொகதீன் கடைக்குத் தலக்கறி வெட்டப் போறப்போ நீயும் போயி ஒரு பங்கு தனியே வாங்கிக்கோ’ அப்படி நடந்ததாக எனகு ஞாபகமில்லை. அப்பா ஒரு ஆட்டுத் தலைதான் எப்போதும் எடுத்து வந்திருக்கிறார்.

மெகபூப் , ரகீம் வீட்டிலெல்லாம் அப்படி இல்லை. தலைக்கறியுடன் ஏதாவதொன்றும் கூட இருக்கும். ரகீம் ஈரலுக்கென்று தனிருசி என்பான். எனக்கு அப்படியொன்றும் தோன்றியதில்லை. மூளைக்கறி தனிதான். இதைத் தவிர ரத்தப் பொறியல், குடல்கறி, ஈரல் இவையெல்லாம் அபூர்வம்தான். ரத்தப் பொறியல் சாப்பிடுகிற அன்றைக்கு வெளிக்குப் போகிறபோது அதைக் கவனிப்பேன். கறுப்பாகத் தான் இருக்கும். முதல் தடவையாக அதைக் கவனித்தபோது ஆச்சர்யமாகவும் பயமாகவும் இருந்தது. அம்மாவிடம் ஏதோ யாதிதோ

என்று கேட்டேன்.

அப்பாவுடன் கறி வாங்கப் போகிற போதெல்லாம் பக்கெட்டில் இருகும் இரத்தக்கட்டியைத் தொட்டுப் பார்ப்பேன். லேசான பூச்சுமாதிரி கையில் ஒட்டிக் கொள்ளும். பக்கெட்டினுள் அழுத்த அழுத்த மேலே பிய்ந்து வருவது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு நாள் யாருமே பார்க்கவில்லையென்று ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். குமட்டுகிற மாதிரி இருந்தது.

இரத்தப் பொறியல் மாதிரியே கோழிக்கறியும் எங்கள் வீட்டில் அபூர்வம்தான். ஒடம்புக்கு ரொம்பவும் சூடு அது என்பார் அப்பா. அம்மாவுக்கு ஒரு முறை மஞ்சள் காமாலை வந்து விட்டதாம்.கல்யாணமான புதிதில் மஞ்சள் காமாலையே அதிக சூட்டில் வருவதுதானாம். சரியான பின்னும் அடிக்கடி கோழிகறி சாப்பிடுவது ஆகாது என்று வைத்தியர்கள் சொன்னதால் அப்பாவும் கோழி அடிப்பதை எப்போதாவது செய்வார்.

கோழிக்கறி போடுவது ஆட்டுக்கறி போடுகிற மாதிரி அல்ல விஷயம். ஒர் வாரம் முன்பே தெரிந்துவிடும் சந்தைக்குப் போய் வருகிறபோது, வீதியில் விற்றுக்கொண்டு போகிறபோது வாங்குகிற கோழியை அப்பா வீட்டில் கட்டிப் போடுவார். நல்ல தீனியாய்ப் போடச் சொல்வார். ‘ஒரு வாரம் இருக்கணும். நல்ல தீனிதின்னு பெலமாயிட்டா கறி ருசியா இருகும்கறதுதான் சூட்சமம்’ அரிசியில் ஊற வைத்த கேப்பையும், அபூர்வமாய்

கோதுமையும் அதற்குப் போடுவதில் பழனிவேலுவிற்குத் தனி அக்கறை.

ஒரு வாரம், பத்து நாள் அதை வளர்த்து விட்டுக் கொல்லப் போகிற போது வருத்தமாக இருக்கும். அப்பா கோழியின் நாலு கால்களையும் ஒன்றாய் சேர்த்து வலுவான வலது கையை நீட்டிக் கையின் இடைப்பகுதியின் அதன் தலைக்கும், உடம்பிற்கும் இடையிலான பகுதி அடிபடுமாறு ஓங்கி அடிப்பார். அநேகமாய் கோழி தலை சாய்ந்து விடும். கூடவே கக் என்று ஒரு சத்தம் இருக்கும். அவ்வளவுதான். உடனே கத்தியால் அறுப்பார். அறுக்கிறபோது சின்ன வானலியில் ரத்தம் பிடிப்பேன். ஆட்டு மூளை மாதிரி கோழி

ரத்தம்.

கோழியைப் பொசுக்குவதில் அப்பா சோம்பேறி. ஒவ்வொரு இறகாய்ப் பிய்த்தெடுப்பதில் சோர்ந்து போவார். ஆனால் எனகு அது அபூர்வமான விஷயமாக இருக்கும். இறகுகளின் வெவ்வேறு நிறங்களை இரசித்துக் கொண்டே பிய்த்தெடுப்பேன். இடைஇடையே கொத்தாய்ப் பிய்த்தெடுத்துப் பலமாகக் காற்று வீசுகிறபோது தூவி விடுவதில் சுகமுண்டு. வீதியில் போகிறவர்கள் முகத்தில் தெறிக்க ‘உங்க வீட்ல கோழிக் கறின்னா ஊர்பூரா சொல்லணுமா’ என்பாரகள். இறகுகள் பிய்த்தெடுக்கப்பட்ட கோழி உடல் கொஞ்சம் வெது

வெதுப்பாக இருக்கும். அந்தச் சூட்டை கொஞ்ச நேரம் எப்போதும் உணர்வேன்.

கோழியை அறுத்தபின் குடலை எறிந்து விடுவார் அப்பா முன்பெல்லாம். பின் ஒரு நாள் குடலைக் கழுவுவது பற்றிச் சொல்லித் தந்தார். பின் கோழியை அறுக்கிற போதெல்லாம் குடலைச் சுத்தம் செய்து அதைத் தனிச் சமையல் செய்வது என் இலாகாப் பொறுப்பாகிவிடும். நீளமான குடலின் உட்புறத்தை தென்னங்கீற்று குச்சியால் உள்புகுத்தி மலத்தை வெளியே எடுப்பேன். சர்ரென்று மேலிருந்து உருவுகிற போது மலம்

வடிந்து விடும். சின்னத் துண்டுகளாய் அறுத்து நாலைந்து முறை தண்ணீரில் அலசிக் கையில் ஏந்திக்கொள்கிற போது வழுக்கும். ‘பீன்ஸ்..பீன்ஸ் கறி’ என்பான் பழனிவேல். ஆட்டுக்கறி சாப்பிடுகிற போது சாப்பாட்டிற்கு ஒரு மணிநேரம் முன் மூளையை சாப்பிடுகிற மாதிரி கோழி விஷயத்தில் குடல். ஆனால் மூளைபோல் ருசிக்காது குடல்.

கறிக் குழம்பு கொதிக்கிற மணத்துக்காகக் காத்திருப்போம்; சமையல் அறையில் தலையை நீட்டி வரலாமா என்பேன். அம்மா டம்ளரில் இரண்டு கரண்டி குழம்பையும், நாலு துண்டு கறியையும் போட்டுக் கொடுப்பாள். சூடாக இருக்கும். ஆற்றி ஆற்றிக் குடிப்போம் மிளகுக் காரம் கண்ணீரை வரவழைத்து விடும். முழுசாய் வேகாத கறியை மெல்வதில் சிரமம் இருக்கும். முழுசாய் வேகவில்லையென்றால் என்ன மாட்டுக்கறி மாதிரி என்பார் அப்பா. அவர் அப்படிச் சொல்வதன் மூலம் மாட்டுக்கறி சாப்பிட கெட்டியாக இருக்கும்

என்பதை அறிந்து கொண்டேன். கொஞ்சம் ஜலதொஷமாய் இருந்து கோழிக்கறி சமைக்கிற அன்று அப்பா கறிக்குழம்பு இடையில் சாப்பிடுவார். மற்றபடி நாங்கள் தான்.

புரட்டாசி மாதங்களில் வீட்டில் கறியே எடுக்கமாட்டார்கள். அப்பா விரதம் இருப்பார். கடைசி சனி அன்று காரமடை தேருக்குப் போவதற்காக. எப்போது அக்கா வீட்டில் கறி சமைப்பார்கள் என்று காத்திருப்போம். அக்கா வீட்டிலேயே ஆட்கள் அதிகம் என்றாலும், அக்கா உடனே வந்து சொல்லிவிட்டுப் போய்விடுவாள். நானும் பழனிவேலும் அதற்காய் மோப்பம் பிடித்தவாறு இருப்போம். அப்பாவும், அம்மாவும்

தொடமாட்டார்கள். அக்கா வீட்டிலிருந்து நாங்கள் வரும்போது அம்மா குளிச்சிட்டு வந்திடுகடா என்பாள். சில சமய்ம் குளிப்போம். நிறையத் த்டவைகள் குளிச்சியாடா என்றால் ‘உம்’ என்றபடி நழுவி விடுவோம். அமாவாசை வந்து மூன்று நாள் கழித்துத்தான் கறி சமைக்க வேண்டும் என்று விதி மாதிரி ஒன்றை அம்மா எப்போதும் பின்பற்றி வந்தாள்.

கறி சமைக்கிற அன்றைக்கு நல்ல அரிசிச் சாதம் இருக்கும். வழக்கமாக இருக்கும், அரிசியைவிட நல்லதாக அப்பா வாங்கி வருவார். சுடச்சுடச் சோற்றை பிளேட்டில் போட்டுக் கறிக் குழம்பை அம்மா ஊற்றுவாள். முதல் கவளம் எப்போதும் நாக்கைச் சுட்டுவிடும். அம்மா விசிறியொன்றால் விசிறுவாள். நாலு கவளத்தைக் குழம்பில் பிசைந்து சாப்பிட்டபின் அம்மா கறி என்பேன். அம்மா கறியப் பிரித்து வைக்கிறபோது அம்மாவின் கைகளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அப்பாவிற்கு நாலு கறி அதிகம் வைப்பாள். எனக்கும், தம்பிக்கும் சரியான அளவாக இருக்கும். ‘அவன் தம்பிதானே எனக்கு ரெண்டு சேர்த்தி வைக்கிறது’ என்பேன். ‘அட, அங்கலாப்பே பாரு’ என்று சேர்த்து வைப்பாள். பழனிவேல் முகம் சுருங்கும். ஈரல் துண்டுகளை எண்ணிச் சமமாய் வைத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக்கொள்வாள். அப்பாவிற்கு எலும்புக்கறி ரொம்பவும் பிடிக்கும். நாங்கள் கடிக்க முடியவில்லை என்று எச்சில் பண்ணி வைத்துவிடுகிற எலும்பைக் கூட அப்பா எடுத்து கடக்முடக்கென்று சுத்தம் செய்துகொண்டிருப்பார். ‘எலும்பிலே இருக்கிற ஊளெ நல்லதுடா’ என்பார். நீளமான எலும்பு கிடைக்கிறபோது அதை உடைத்து ’இதபாரு..இதுதா நான் சொல்றது’ என்று காட்டி வாயைத் திறக்கச் சொல்வார். அம்மா எனக்குத் தெரியகூடாது என்று மறைத்துக் குனிந்து சாப்பிடும்போது பழனிவேலுக்கு ரெண்டு துண்டுகளைப் போட்டுவிட்டால் முறைத்துப் பார்ப்பேன். அவன் ஒன்றும் தெரியாத மாதிரி சாப்பிட்டுக்கொண்டிருப்பான். ஆளுக்கு மொத்தமாய் பத்து துண்டு வருவதே அதிகபட்சமாய் இருக்கும். மீறி கேட்கிறபோது அம்மாவின் பங்கு குறைந்துவிடும் என்பது தெரியும். சிலசமயம் அப்படிப் பெயருக்கென்று ஓரிரண்டு துண்டுகள் மட்டுமே அம்மாவிற்குக் கிடைத்த நாட்கள் நிறைய இருக்கும் என்று தோன்றும். அதற்கு மேலும் அதிகமாய்க் கறி எடுத்து வர அப்பாவால் முடியாதுதான்.

கோழிக்கறி சமையலின்போது தலை யாருக்கு என்பதில் விரோதம் வளரும். குழம்புப் பாத்திரத்திலிருந்து கோழியின் தலையோடு கரண்டியை எடுக்கும்போது யார் பிளேட்டில் போடுகிறாள் என்பதில் அவளின் அதிகாரத்தை உபயோகப்படுத்துகிற மாதிரி செயல்படுவாள். போட்டுவிட்டு அன்னிக்கு யார் அதிர்ஷ்டக்காரன் என்பாள். கோழித்தலை எனக்கு விழுந்து விட்டால் சிரமங்கள் இருக்காது. இல்லையென்றால் சாப்பிடுகிறபோது தலை விழுந்துவிட்ட பிளேட்டைப் பார்த்து வெறுவெறுத்துக் கொண்டிருப்பேன். அம்மா

வாய்பொத்திச் சிரிப்பாள். அது பழனிவேலின் பக்கமாய் இருந்துவிட்டால் அன்றைக்கு ஏதாவது ஷயத்தினை அவன் மேல சொல்லி நாலு அடி கொடுத்துவிடுவேன். பழி வாங்கின திருப்தி பின்னரே அடங்கும்.

அன்றைக்கு அப்படித்தான் நடந்துவிட்டது. கோழித்தலை பழனிவேல் பக்கம் விழுந்துவிட்டதற்காய் என்முகம் சிறுத்துப் போனது. அப்பாவும் ஏதோ சொல்லிச் சிரித்துவிட்டது முகம் சிவக்கச் செய்துவிட்டது. சூடான சாப்பாட்டில் வேர்க்கிற முகம் அன்று அதிகமாய் வேர்த்துவிட்டது. எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவும் என்னடா இது என்றார். தன் பங்கிலிருந்து நாலு துண்டை எடுத்துப் போட்டார். நான் கோபத்துடன் அவற்றை அடையாளம் பார்த்துப் பொறிக்கி அவர் பிளேட்டில் போட்டேன். அப்போது பழனிவேல் அவன் எச்சில் கையால் என் சிறு பிளேட்டில் இருந்த கறியில் ஈரல் துண்டை எடுத்துவிட்டான். பக்கத்தில் இருந்தவனின் தலைவை நச்சென்று சுவரில் மோதினேன். அய்யோ என்றான். அவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்ததை அப்பா பார்த்துச் சத்தம் போட்ட பின்புதான் உணர்த்தேன். ‘அடப் பாவி’ என்று அம்மாவும் எழுந்தாள். அப்பா எச்சில் கையால் என் முகத்தில் அறைந்தார். நான் பயந்து ஓடிப்போய் வாசல் முன்புறம் அழுதுகொண்டே நின்றேன். இரண்டு துணிகளைக் கிழித்து கட்டுப் போட்டும் ரத்தம் நிறகாதபோது அம்மா அவனைத் தோளில் சாத்தி வெளியில் வந்தாள். என்னைப் பார்த்து மீண்டும் அடப்பாவி என்றாள். அப்பாவிடமிருந்து அடிவிழும் என்று தப்பி ஓடினேன். ரொம்ப நேரம் கழித்துதான் பசிப்பதை உணர்ந்தேன். எச்சில் கையை டெளசரில் துடைத்துக் கொண்டேன். வறண்டு போயிருந்தது. சாயங்காலம் அப்பா என்னை ரொம்பநேரம் வெளி இடங்களில் தேடி என்னைக் கண்டுபிடித்தார் ‘அடிக்கலை வாடா….’ என்று அழைத்துப் போனார். அவர் முன் நடந்து போக நான் ஐம்பது அடி இடைவெளியினைக் காப்பாற்றி வீடு சேர்ந்தேன். பழனிவேல் தலைக் கட்டுடன் சோர்ந்து கிடந்தான். அம்மா ‘நாலு துண்டு கறிக்காக

இத்தென ரத்தத்தெ வீணாக்கிட்டியேடா.. இந்த அஞ்சு வயசு கொழந்தே இதுக்கு எவ்வளவு கஷ்டப்படப் போகுதோ..நீ உருப்படுவியா..’ என்று அழுதாள். அன்றைக்கு மிச்சம் இருந்த குழம்பையும் கறியையும் யார் வாங்கிப் போயிருப்பார்கள் என்று யோசித்தேன். அம்மா சுத்தமாய் ருசி பார்த்துக்கூட இருக்கமாட்டாள் என்று தோணியது.

பழனிவேல் தலைக்காயம் ஆற இரண்டு மாதம் ஆகிவிட்டது. எப்போதும் தலையில் கட்டு இருந்துகொண்டே இருந்ததால் அவனுக்கு தலைக்குக் குளிக்கவோ சரியாகத் தலையை சீவிக் கொள்ளவோ முடியாமற் போயிற்று. தலைமுடி கூட ரொம்பவும் வளர்ந்து விட்டது. அந்த இரண்டு மாதத்தில் கறி சமைப்பது பற்றி அப்பா அம்மாவிடம் எதுவும் சொல்லவில்லை. இரண்டு மூன்று வாரம் கழித்து அப்பா கேட்டார் ‘எனக்கு வேண்டா..நீங்க வேணா சாப்புடுங்கோ’ என்றாள் அம்மா. அன்றைக்கு அப்பா மொகிதீன் கடை போகவில்லை.

இதற்குப் பின்னாலும் ரெண்டு மூன்று முறை அப்பா கறி சமைப்பது பற்றிச் சொன்னபோது அம்மா பேசாமலேயே இருந்தாள். அப்பாவும் கட்டாயம் செய்யவில்லை. ஒரு நாள் பழனிவேலின் தலையைத் தடவி அவன் காயத்தை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையே நான் வெறித்துப் பார்த்தேன். ‘நாலு துண்டு கறிக்காக என்ன செஞ்சுட்டா இவன். என்னோட சதைக் கறியும் ருசியா இருக்குமுன்னா என்னையே சாப்புட்டுவான் படுபாவி’ என்றாள். அம்மா என்னை வெறுக்க இப்படியொரு காரணமாகிவிட்டதே என்று அழுகையாக இருந்தது.

ஆறேழு மாதம் போயிருக்கும் வீட்டிக் கறி சமைத்து. இடையில் அக்கா வீட்டில் தான் அவ்வப்போது. அதுவும் ஒவ்வொரு முறையும் கறி சாப்பிடும்போது தம்பியின் காயம் ஞாபகம் வந்தாலும் யாராவது அதைப் பற்றி சொன்னதாலும் எனக்கு சாப்பிடுவதில் பிடிப்பே இல்லாமற் போயிற்று.

பக்கத்து ஊரிலிருந்து ஒரு நாள் குமரேசன் மாமா வந்திருந்தார். அவர் சேவல் சண்டைப் பிரியர். அதற்காய்ச் சேவல் வளர்ப்பார். சேவல் சண்டையில் சாகிற கோழியின் கறியை ரொம்பவும் சுவைத்துச் சாப்பிடுவார். அதைக் கோச்சைக்கறி என்பார். அன்றைக்கு வெள்ளையூத்து சேவல்கட்டில் தன் கோழி ஜெயித்ததாயும், அந்தக் கோச்சைக் கறியைக் கொண்டு வந்ததாயும் சொன்னார். ‘இன்னிக்கு ராத்திரி நா இங்கதா இருக்கப்

போறேன்..சமைச்சு வை..’ அப்பா சுரத்தின்றி சும்மா இருந்தார். யாரும் எதுவும் சொல்லாதபோது சத்தம் போட்டார். அப்பா எல்லாவற்றையும் விலாவரியாய்ச் சொன்னார். ‘ என்னெக்கோ, எப்பவோ நடந்ததுக்கு இன்னுமா அதை மனசில வெச்சிட்டிருக்கணும். அவனும் ஒண்ணும் வெளவறியா தெரியாத பையன். அவன் ஏதோ செஞ்சுட்டான்னு ஆறு மாசமா இந்தப் பசங்களுக்கு கறியாக்கிப் போடாமெப் பட்டினி போட்டிருக்கியே..இது நல்லா இருக்கா..’ சொல்லிக் கொண்டே போனார். இதை ஒருவர் சொல்லவேண்டும் என்று காத்திருந்த மாதிரி வீட்டினுள் போய் அம்மா வெங்காயக்கூடையை எடுத்து வந்து வெங்காயத்தப் பரப்ப ஆரம்பித்தாள். அப்பாவும் மாமாவுடன் சந்தோஷமாய் நடையை வெளியில் எட்டிப் போட்டார்.

அம்மா கலகலப்பாய் வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் உரித்த சருகுகளை என் மேல் வீசியெறிந்து ‘வாடான்னா’ என்றாள். நானும் அவளின் தொடை அருகில் நெருக்கமாய் உட்கார்ந்தேன்.

பாதி வேலையில் குமரேசன் மாமாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவரின் சேவல்கட்டுத் திறமையைப் பற்றி ரொம்பவும் சொன்னாள். ‘நாலு ஊருக்கும் சேவக்கட்டு சின்னதம்பின்னா ஒரு மருவாதை’ என்றாள். ‘கோச்சுக்கறி தின்னுவளர்ந்த ஒடம்புடா அது ..வீர முனியப்பா மாதிரி கம்பீரமா..’ அம்மாவிற்கு மாமா மேல் சின்ன வயதில் ரொம்பவும் இஷ்டமாம் ‘நானே அவரெ கல்யாணம் பண்ணியிருந்தா இப்பிடியா ஒடக்கா மாதிரி இருப்பேன். சேவல் கட்டு கோழி மாதிரி கோச்சுக் கறியெத் தின்னுட்டு நிமிர்ந்து நிப்பேனே’

அம்மா இப்போது ஒரு புதுக்கதையைச் சொல்வதாய் எண்ணி நிமிர்ந்து அதை முழுசாய்க் கேட்கிற சுவாரஸ்யத்தில் உட்கார்ந்தேன்.

நன்றி – பண்புடன்

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

 

2. 21.10.12 அன்று நடைபெற்ற தோழர் தி.மு.ராசாமணி அவர்களின் படத்திறப்பு - மற்றும் அவர்குறித்த நினைவுகளை சொல்லும் 'இயக்கமே உறவாய்' நூல் வெளியீட்டு நிகழ்வு. திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தோழர் தங்கவேல் நூல்வெளியிடுகிறார்.....அருகில் எஸ்.ஏ.பெருமாள் ,சுப்ரபாரதிமணியன் உட்பட திருப்பூர் கலைஇலக்கிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள்

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

நூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000

( மு.வ நூற்றாண்டு இவ்வாண்டு; தமிழகமெங்கும் மு.வ நூற்றாண்டு நிகழ்ச்சிகள்: மு.வ நூற்களின் மறு பிரசுரங்கள்: )
பிரான்ஸ் காப்காவின் எழுத்துக்களின் பாதிப்பில் உருவான சமீபத்திய படமொன்று மு.வ. அவர்களின் 67 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட
கி. பி. 2000 நாவலோடு வெகுவாக ஒத்திருப்பது ஆச்ச்ர்யம் தந்தது. பாதர்ஸம் மென் என்ற நார்வே நாட்டுப்படத்தில் வரும் கதாநாயகன் நம்முடையதைப் போல அல்லாத ஓர் உலகத்தை உருவாக்குகிறான் காதல் ஜோடியின் முத்த்த்தைப் பார்ப்பவனுக்கு அது உயிர்ப்பே இல்லாத எந்திர முத்தம் போல் தென்படுகிறது. சட்டென விரக்தி மேலிட தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறான். மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இருந்தாலும் உயிரும் உணர்வும் அற்றவர்கள் போல அர்த்தமில்லாதவர்களாக உலாவுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரிகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஹியூகோ என்ற சுத்திகரிப்புத் தொழிலாளியைச் சந்திக்கிறான். அவனின் அறையின் சுவற்று விரிசலிலிருந்து கேட்கும் இனிய இசை மறுபக்கத்திற்கு தப்பிச் செல்ல வழி காட்டும் என நினைக்கிறான். ரக்சியமாக சுவற்றை உடைக்கும் போது அது ஒரு வீடாகவும், யதார்த்த உலகிற்கு மாறுபட்டதாகவும் இருப்பதாகக்க் காண்கிறான். கை நீட்டினால் அவனுக்குத் தேவையானதெல்லாம் கிடைத்து விடுகிறது. வாழும் யதார்த்த உலகம் அல்லாத இன்னொரு உலகத்தைக் கான்கிறான். மரணமோ, கனவுகளோ அங்கில்லை ஆனால் தனிமையின் கொடுமையை உணர்கிறான்.
கி பி 2000 நாவல் தன்னிலையில் சொல்லப்பட்டிருக்கிறது. தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்கு மாலையில் திரும்பும் கதாநாயகன் மிகுந்த மனச்சோர்விற்கு உள்ளாகுகிறான். காணும் யதார்த்த உலகம் அவனைச் சுடுகிறது. வாடுகிறான். இந்த அளவில் உருகும் நிலைமையும் தீமையே என்று தோன்றுகிறது. செயற்கையான மறதியைத் தேடிக் கொள்ள முடியவில்லை அவனால். நஞ்சு உண்டு ஒரே மரப்பாக மறந்து மாய்வது மேலானது என்றாலும் கோழைத்தனமானது என்று நினைக்கிறான்.. கர்ப்பமாயிருந்தாலும் விறகு சுமக்கும் ஏழைதாயாலும் மாணவன் ஒருவன் கல்லூரியில் பணம் கட்ட முடியாததும் அவனை அன்று மிகவும் வருத்தமுறச் செய்கின்றன. பொல்லாத உலகம் அவனுக்குப் பிடிப்பதில்லை. அவனின் நண்பன் ஒருவனின் கடிதம் ஓர் அத்யாயம் முழுக்க விரிகிறது. கல்லூரி நாட்களில் அவனுக்கு தமிழ்நாட்டு லெனின் என்ற பட்டப்பெயர் இருந்தது. அவனின் இரண்டு குழந்தைகளும், மனைவியும் வறுமையால் வாடுகிறார்கள். ஓய்வு இல்லாத உழைப்பு வெறுப்பை உண்டாக்குகிறது. ஊரிலுள்ள தாய்க்கு மாதாமாதம் பணம் அனுப்ப வேண்டியிருக்கிறது. அவன் தம்பி உடல் நல்க்குறைவால் சிரமப்படுகிறான். அவனுக்கு எலும்புருக்கி நோய். தேர்தல் நேரம் என்பது அலுவலக்த்தில் தலைமைக் கணக்கருடனும் பிறருடனும் பகையைமையைத் தோற்றுவிக்கிறது. குடுமப்ச் சிரமங்கள் அவனைத் தர்கொலைக்குத் தூண்டுவதாகவும், ஆறுதல் பெற வேண்டியும் அக்கடிதத்தை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறான். ஆ.க. என்ற நண்பன் ஒவ்வொரு நொடியும் மூச்சுத்துணறுகிறேன் என்ற தன் நிலையையும் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை எனக்குத் திணறலாகவே உள்ளது என்ற நண்பர் நிலையினையும் மறந்து அடுத்தடுத்து வந்தக் கொட்டாவிகள் அவனைத் தூக்கமென்னும் இன்பக் கரைக்கு இழுத்துச் செல்கின்றன. உறக்கத்தில் புதிய கனவுலக்த்தைக் காண்கிறான். என்பது மீதி ஒன்பது அத்யாயங்களில் நாவலில் விரிகிறது.
அளவளாவி என்ற பெயரில் பெரிய பெரியக்கட்டிடங்கள் தென்படுகின்றன. பொது உடை பொது உடமையின் முதல் படியாக இருக்கிறது. நண்பர் என்ற பெயருடன் பொதுத் தொண்டர் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்துவதுகிறார். இயல்பாய் பாடலாம். ஓவியம் தீட்டலாம். நடிக்கலாம். மதமாச்சர்யம் அல்லாமல் இருக்கலாம். செல்லியின் கவிதையை விளக்கிச் சொல்லும் ஒருவர் காணப்படுகிறார். கார் என்பது சக்கரம் இல்லாமல் ஓட்டுனர் தேவையில்லாமல் எங்கும் எளிதில் போகக் கூடியதாக இருக்கிறது. ரஸ்யர்கள், சீனர்கள் போன்று வெளிநாட்டினரும் தென்படுகின்றனர். அந்த உலகில் வாழ வலியுறுத்தப்படும் மூன்று விதிகளில் முதல் விதி “ உலகத்தில் மக்கள் வேற்றுமையை மறந்து அன்பு பாராட்ட வேண்டும்” என்பதேயாகும். அங்கு அவரவர் பழக்கத்திற்கு ஏற்றவகையில் உணவு கொள்வதற்காக பலவகை உணவுப் பிரிவுகள் இருக்கின்றன். படிப்பு குறிப்பிட்ட கால நேரத்தில் அடங்குவதில்லை. உணவு விடுதியும் ஒரு தொழிற்சாலையாக அமைந்து மக்களுக்கு வேண்டிய உணவு தருகிறது. வீடுதோறும் நெசவுத்தறியும், காய்கறித்தோட்டமும் இருந்த நிலை போய் ஊருக்குப் பொதுவான நெசவாலையும் காய்கறிப்பண்ணையும் அமைந்திருக்கிறது. மூன்று நாள் விடுமுறை கோலாகலம். வீடுதோறும் சமையலறை அமைத்து பெண்களை ஓய்வில்லாமல் உழைக்கச் செய்யாமல் பொது சமையலறை அமைத்து பெண்கள் ஓய்வில்லாமல் உழைக்கச் செய்யாமல் பொது சமையலறை இருக்கிறது. அச்சுக்கூடமும், நாடக அரங்கும் கூட்டுறவு முறையில் பொதுவானதாக இருக்கிறது. உயர்ந்தக் கட்டிடங்களாய் பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவை அமைந்திருக்கின்றன. முதல் மாணவனுக்குப் பரிசு கொடுக்கும் பழக்கம் இல்லை. பள்ளி விடுமுறையில் தொழிற்சாலைக்குச் செல்லலாம். பல வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பெண்களே. வரலாறு என்பது அரசபரம்பரை, தொன்மையான காலம் என்றில்லாமல் கடந்த கால நிகழ்ச்சிகளாய் அவற்றின் சொல்லாடலாய் 1640ம் ஆண்டுக் கல்கத்தாவையும், 1940ம் ஆண்டு சென்னையையும் பற்றிச் சொல்வதாக இருக்கிறது. பிச்சை எடுக்கும் பழக்கம், ரிக்சாக்களில் மனிதர்கள் இழுபட்டது, டிராம் வண்டி நெரிசல் உட்பட பல அதில் இருந்தன. மக்களுக்கு உணவு, உடை முதலியன கொடுப்பதற்கு வியாபாரம் என்ற வழக்கம் இருந்தது சொல்லப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் காலையில் படிப்பும், மாலையில் தொழிற்சாலைக் கல்வியும் பயிற்சியும் பெறுகின்றனர். ஆனால் சாதி முறை தொழில் என்ற குறுகிய பாகுபாடு இல்லை. திருடுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள் வாழத்தெரியாதவர் என்று தனிப்பகுதியில் வாழ அனுமதிக்கப்பட்டு திருத்தப்படுகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கென்ற சிகிச்சை: பழ உணவும், சூரிய ஒளியும், ஊற்று நீரும் என்றாகிறது. பதினைந்து வயதிற்கு மேல் குறைந்தது அய்ந்து ஆண்டுகள் தொழிற்சாலையில் தொழிலாளியாக இநுருந்தால்தான் கல்லூரியில் சேர இடம் கிடைக்கும் வருடம் நாலு மாதம் உலகம் சுற்ற ஏற்பாடு செய்யப்படும். வழக்கறிஞர் என்ற ஒருவர் இல்லாத உலகம் அது. கல்லூரியில் படிக்காதவர் தேர்தலில் நிற்க்கக் கூடாது. குடவோலை தேர்தல் முறை. நூறு வய்திற்கு மேல் இருப்பவர்கள் பெரியோர் என் அழைக்கப்படுவர். தேர்தலில் அறுபது சதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு. பேரின்பம் என்று குழந்தைகள் வளரும் இடம் இருக்கிறது.. அது பெரியவர்களின் உலகமாயும் இருக்கிறது, தீராத னோய்களையும் பொல்லாத விபத்துகளையும் வாழ்கையிலிருந்து அக்ற்றிவிட்டால் காதல் சாகப் போவதில்லை. அவனுக்காக காதலியும் சாக வேண்டியதில்லை. நூறு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு பேரின்பத்தில் குழந்தைகளோடு பழகி அமைதி நிலையில் உயிர் விடுபவர்கள் என்ற உலகமும் அது. இயந்திரங்கள் உள்ள உலகம் என்பதால் உழைப்பாளர்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இந்தப் பேரினப உலகத்தை தன் கனவின் நிலையாக மு.வ யதார்த்தில் தன் கனவின் நிலையாக மு.வ. யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட “உட்டோபியன்” உலகமாகப் பார்த்திருக்கிறார் இந்நாவலில்.அல்லது சிந்தனை களத்தில்.
இதில்குடும்ப உறவுகள் பற்றியக் கற்பனைஉலகின் பாத்திரங்கள் மிகவும் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மனத்தூய்மையும் அன்பும் பிரதானமான மு.வ.வின் வழக்கமான கதாபாத்திரங்கள் இதில் குடும்ப உறவுகளின் சிடுக்குகளுக்குள் அகப்படவில்லை. குடும்ப உறவுகளின் விசித்திரத் தன்மை பற்றி எழுதுவதும் கட்டுடைப்பதும் அவரின் மனதிற்கு அதிர்ச்சி தருவதாகவே இருந்திருக்கும். சனாதன மனம் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதுதான்.
மு.வ்.வின் கற்பனை உலகில் குழந்தைகள் அபூர்வமாக்த்தான் வெளிப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் இடம் பெறும் அத்யாயத்தில்தான் இயந்கை சார்ந்த எண்ணங்களும் வெளிப்படுகின்றன. ” நிலாவை நோக்கி குழந்தை வா வா என்றழைக்கிறான். அது வரவில்லை. அதை உருத்து நோக்கி டுப்..டுப் என்றான். வெற்றி பெற்றது போல் மகிழ்ந்தான். டுப்..டுப் என்பதன் பொருள் திட்டுவதாகும். அவன் ஏதாவது இடையூறான தவறுகள் செய்யும் போது நான் தப்பு, தப்பு என்று சொல்லி வந்தேன். என் பெரிய மகன் நான் இல்லாத வேளையில் இதை “ துப்…துப்” என்று தவறாக எண்ணிக் கொண்டு அவனுடைய பள்ளிக்கூட அறிவால் துப்பாக்கியை நினைவில் வைத்துக் கொண்டு நிலாவைப் பார்த்து அதன் ஒத்துழையாமையை வெறுத்து டுப்..டுப் என்றான்” என்ற சுவாரஸ்யமான பகுதி இருக்கிறது.
விலங்குகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழ்வது போல் இந்த கற்பனை உலகம் இருக்கிறது. பூனை பற்றி மட்டும் இப்படியொரு குறிப்பு நாவலில் இடம் பெற்றிருக்கிறது. “ பழங்காலத்தில் பூனைக்கு மனிதர்களை விட மிகுதியான வல்லமை இருந்த்து. மக்களின் வேலைகளைக் கெடுத்துவிடக்கூடிய வல்லமை அதற்கு இருந்த்து. அதனால் அந்தக் காலத்து மக்கள் பூனைகுறுக்கே வந்தால் மிகவும் கவலைப்பட்டார்கள்ல். தொடங்கின வேலையை விட்டு விட்டார்கள் . இந்தக் காலத்தில் பூனைக்கு அந்த வல்லமை இல்லை. “ பகுத்தறிவு சார்ந்த உலகின் மாதிரியாக மு.வ. இதைத் தந்துள்ளார்..
அறமும் மனத்துய்மையும் கொண்ட மனிதர்களை மு.வ. அவரின் பிற நாவல்களில் படைத்திருப்ப்பார்.. கடமை உணர்வு, நாட்டுப்பற்று மொழிப்பற்று பற்றி இவரின் கதாபாத்திரங்கள் பிற நாவல்களில் பிரசங்கங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். திருவள்ளுவரின் அறனெறி இவருள் தந்த பாதிப்புதான். இவரின் உரையெழுதும் பணிக்கு முக்கியமான அடிப்படியாக்க் கூட இருந்திருக்கிறது. இதில் இவரின் கற்பனை உலக்த்தில் இவரின் முந்தின நாவல்களின் மாதிரி வடிவ கதாபாத்திரங்களும், லட்சிய மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். பொதுவுடமைத்தத்துவம் இவருள் பெரும் பாதிப்பை நாற்பதுகளிலேயே ஏற்படுத்தியிருக்கக் கூடும். உலகப் போர்களில் உலக எதேச்சதிகாரத்திற்கான ரஸ்யாவின் குரலும் பங்கும் மு.வ.வை பாதித்து சோவியத் ரஸ்யாவின் சோசலிச உலக்த்தைப் பற்றியக் கனவை இந்த நாவலில் விரித்திருக்கிறது என்று சொல்ல்லாம் . இந்த நாவல் வெளிவந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மு.வ. ரஸ்யா செல்கிறார். என்வே ரஸ்யாவைப் பார்க்காமல் அந்தப் பொதுவுடமைச் சமூகம் பற்றியக் கற்பனையில்தான் இந்த நாவலை எழுதியிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984,விலங்குப்பண்ணை,சுஜாதாவின் சொர்க்கத்தீவு, வ ராவின் கோதைத்தீவு போன்ற நாவல்கள் எதிர்காலம் பற்றிய விபரீதக்கற்பனைகளாகவும், அதிகார உலகத்தைக் கட்டுடைக்கிறதாகவும் அமைந்திருக்கின்றன், ஆனால் மு.வ்.வின் கற்பனை உலகம் அமைதியான பேரினப் வாழ்க்கையின் நப்பாசையாக இருக்கிறது. நாற்பதுகளில் கற்பனை விஞ்ஞானக் கதைகளின் பெரும் விளைச்சலில் ரஸ்யாவின் நெபோக்கோ போன்றோர் உச்சத்தில் இருந்த போது பொதுவுடமைக் கற்பனை உலக்ம் மு.வ.வின் பார்ர்வை வேறு கோணத்தில் அமைந்திருக்கிறது இதில். இரண்டாம் உலகப் போரின் விளைவுகளும், சோவியத் வெற்றியும் கூட இந்நாவல் வெளிவந்த காலத்தில்தான் நிகழ்ந்தவை. பொதுவுடமை உலகம் பற்றிய கற்பனையை விரித்து கி.பி.2000 நாவலில் மு.வ. எழுதியிருக்கும் இதன் 1947ம் ஆண்டில்தான் மு.வ்.வின் கற்பனையான அன்பும், அறனெறியும் கொண்ட உலகிற்கு எதிரான வகையில் சோதனினை முயற்சியில் அணுகுண்டு செய்யும் முடிவை சோவியத் ரஸ்யா வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதப்போர்களுகளும், தகவல் தொழில் நிட்பமும் விஸ்வரூபித்து வளர்ந்திருக்கும் இன்றைய விபரீத உலகில் மு.வ.வின் அறமும், மனத்தூய்மையும், அமைதியுமான கற்பனை உலகை யாரும் ஏக்கத்தின் வெளிப்பாடாகவேக் கொள்வர். அந்த ஏக்கம் நிறைவேறக் கூடியதாக், முடியாதத்தாக இன்றையச் சூழலில் இருப்பதை இந்த நாவல் அல்லது கற்பனை நூல் பெருமூச்சாக வெளிப்படுத்துகிறது எனலாம்.
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு

சுப்ரபாரதிமணியனின் பதினைந்தாவது சிறுகதைத் தொகுப்பு இது.
15 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் தென்படுவது பெரும்பாலும் பிடிமானமற்ற, வேர்களற்ற கதாபாத்திரங்கள். தனிமை, ஏக்கம், மனச்சிக்கல்களைக் கொண்ட மனிதர்கள். லாட்ஜ் கதைகள் என்று பெரும்பான்மையானவற்றை வகைப்படுத்தலாம். பின் அட்டைக்குறிப்பு இப்படிச் சொல்கிறது: தொழில் நகரம் காட்டும் உழைக்கும் விளிம்பு நிலை மனிதர்களிப்பற்றி பேசுகிறார். உலகமயமாக்கல் ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும் குழந்தைகளையும் சிதைத்து வருவதை சொல்லியிருக்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் மனித உரிமை பிரச்சினைகளும் அவற்றில் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்கிறார். இதை திரும்பத்திரும்ப நானும் யோசித்து ஆமோதிக்கிறேன். பெரும்பாலும் சுரண்டப்படும், ஆக்கிரமிப்பிற்கு உள்ளான,வன்முறையில் பலியான பெண்கள் இதில் வருகிறார்கள். பெண் மனம் சார்ந்து இவர் கவலை கொள்வது தெரிகிறது.
முதல் கதையில் தென்படும் வேலை தேடி வரும் பெண்ணின் முடிவெடுக்க வேண்டிய சிக்கல் அபாயகரமானது. இது போன்ற நிறையப் பெண்கள் இக்கதைகளில்… கடைசிக்கதையில் லாட்ஜில் ஆணுடன் தங்கும் பெண் தனக்காக ஒரு கவுரவமான வாடகை வீடு கிடைக்காதா என்று ஏங்குகிறாள். எல்லாக் கதைகளிலும் தென்படும் குரூர அங்கதம் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. கூட்டம் கதையில் அதிகாரி ஒருவரின் புத்தக வெளியீட்டு கூட்ட அனுபவங்கள் இலக்கியப் பிரச்சினையாகவும், பாலியல் விசயமாகவும் அங்கதத்துடன் அமைகிறது.பாலியல் சார்ந்த அனுபவங்களும் வேட்கையும் இக்கதைகளின் கதாபாத்திரங்களின் அலைகழிச்சலுக்கும், தனிமைக்கும் இட்டுச்செல்கிறது. பிடிமானமற்ற மனிதர்களின் தனிமை உலகமாக இக்கதைகளின் முகம் வெளிப்பட்டிருக்கிறது.
=தமிழ்மகன்
(ரூ 90, உயிர்மை பதிப்பகம் , சென்னை )

கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்

இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க நலனுக்கான கல்வி அமைப்பு முறையாக மட்டும் உருவமைக்கப்படடுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கல்வியால் மாற்றம் என்பது எதார்த்த நிலையில் நாம் இரண்டாம் நிலை இலட்சியமாகவே உள்ளது.
எனவே கல்வி சார்பான கடமைகளை ஆற்றுவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, அரசியல், இலக்கிய, கல்வி, பண்பாடு சார்பான அமைப்பினரும் ஒன்றிணைந்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இன்றைய உலகமய, தனியார் மய சூழலில் கல்விக் களத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி புரிதலை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் திருப்பூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள மத்திய அரிமா சங்க கட்டிடத்தில் 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சுமார் நாற்பதற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க வாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விவாதத்தில் பேரா. கோச்சடை, நடேசன், கண.குறிஞ்சி, பொதியவெற்பன், நாகராஜன், பாண்டியராஜன், ஆறுமுகம், அய்யாவு, கண்ணன், அன்பரசு, பிரபாகரன், கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை திரு மூர்த்தி அவர்கள் செய்திருந்தனர்.இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை
1) தொடக்கக் கல்வியை நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக, தரமாக, சமமாக வழங்குவது மக்களாட்சி அரசின் கடமை. இதில் எள்ளவும் தனியாரின் பங்களிப்பு தேவையில்லை. எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009, மற்றும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் 2011 வலியுறுத்தும் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழைக் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவேண்டும் என்ற விதி நீக்கப்படவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என்றும் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதியும் நீக்கப்பட வேண்டும். மாறாக தேவையான நிதியை ஒதுக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளிகள் மூலமாக மட்டுமே அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கப்படவேண்டும். மேற்கண்ட திருத்தங்களை தமிழக அரசும் மத்திய அரசும் செய்ய வேண்டும்.2) உச்ச நீதிமன்றம் தீhப்;பளித்த பிறகும் இன்னும் சில தனியார் பள்ளிகள் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களை நடைபடுத்தவில்லை. மாறாக வேறு தனியார் நிறுவனங்களின் பாடநூல்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்காக கூடுதலாகப் புத்தகக் கட்டணம் வசூலித்தும் வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் இத்தவறுகள் கல்வித் துறையின் தீவிர கண்காணிப்பின் மூலம் தடுக்கப்படவேண்டும்.3) தாய்மொழி வழியிலேயே தரமான கல்வி வழங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக ஏற்கப்படவேண்டும்.4) தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள் முறைகேடான வழியில் பொதுத்தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற வகைசெய்யப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார்பள்ளி மாணவர்கள் அதிக விழுக்காட்டினர் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகின்றனர். உயர்கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தீவிர கண்காணிப்பின் மூலம் தனியார் பள்ளிகளின் இத்தவறுகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.5) அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் விகிதாச்சார ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.6) ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் முழுநேர ஆசிரியர் பணியிடங்களாகவும், நிரந்தர ஆசிரியர் பணியிடங்களாகவும் நிரப்பவேண்டும். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதிகள் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும்.7) தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள முப்பருவ முறை வரவேற்கத்தக்க மாற்றமாகும். மேலும் வருங்காலத்தில் இம்முறைக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. மேலும் பாடத்திட்டங்கள் உருவாக்கத்தில், சமூக நீதி, மனித உரிமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகள் பின்பற்றப்படவேண்டும்.
8) மத்திய அரசு பாடத்திட்டத்தைப் (ஊடீளுஊ) பின்பற்றி புதிய தனியார் பள்ளிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. சமச்சீர் கல்வியை உண்மையாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இக்கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டமும், மத்திய அரசின் பாடத்திட்டமும் எத்தகைய வேறுபாடும் இல்லாததாக மாற்றப்படவேண்டும்.
9) தேசிய இனம் – மொழி வழி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இருக்க வேண்டும். இக்கொள்கையை நடைமுறைச் சாத்தியமாக்க கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.
10) அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தப்படவேண்டும். அரசுப் பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மாணவர்கள் மூலம் செய்ய வைப்பதை தடுக்கவும், சுகாதார சீர்கேடுகளைக் களையவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மொ.பாண்டியராஜன்மதுரை. 3

கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்

இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க நலனுக்கான கல்வி அமைப்பு முறையாக மட்டும் உருவமைக்கப்படடுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கல்வியால் மாற்றம் என்பது எதார்த்த நிலையில் நாம் இரண்டாம் நிலை இலட்சியமாகவே உள்ளது.
எனவே கல்வி சார்பான கடமைகளை ஆற்றுவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, அரசியல், இலக்கிய, கல்வி, பண்பாடு சார்பான அமைப்பினரும் ஒன்றிணைந்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இன்றைய உலகமய, தனியார் மய சூழலில் கல்விக் களத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி புரிதலை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் திருப்பூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள மத்திய அரிமா சங்க கட்டிடத்தில் 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சுமார் நாற்பதற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க வாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விவாதத்தில் பேரா. கோச்சடை, நடேசன், கண.குறிஞ்சி, பொதியவெற்பன், நாகராஜன், பாண்டியராஜன், ஆறுமுகம், அய்யாவு, கண்ணன், அன்பரசு, பிரபாகரன், கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை திரு மூர்த்தி அவர்கள் செய்திருந்தனர்.இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை
1) தொடக்கக் கல்வியை நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக, தரமாக, சமமாக வழங்குவது மக்களாட்சி அரசின் கடமை. இதில் எள்ளவும் தனியாரின் பங்களிப்பு தேவையில்லை. எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009, மற்றும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் 2011 வலியுறுத்தும் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழைக் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவேண்டும் என்ற விதி நீக்கப்படவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என்றும் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதியும் நீக்கப்பட வேண்டும். மாறாக தேவையான நிதியை ஒதுக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளிகள் மூலமாக மட்டுமே அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கப்படவேண்டும். மேற்கண்ட திருத்தங்களை தமிழக அரசும் மத்திய அரசும் செய்ய வேண்டும்.2) உச்ச நீதிமன்றம் தீhப்;பளித்த பிறகும் இன்னும் சில தனியார் பள்ளிகள் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களை நடைபடுத்தவில்லை. மாறாக வேறு தனியார் நிறுவனங்களின் பாடநூல்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்காக கூடுதலாகப் புத்தகக் கட்டணம் வசூலித்தும் வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் இத்தவறுகள் கல்வித் துறையின் தீவிர கண்காணிப்பின் மூலம் தடுக்கப்படவேண்டும்.3) தாய்மொழி வழியிலேயே தரமான கல்வி வழங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக ஏற்கப்படவேண்டும்.4) தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள் முறைகேடான வழியில் பொதுத்தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற வகைசெய்யப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார்பள்ளி மாணவர்கள் அதிக விழுக்காட்டினர் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகின்றனர். உயர்கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தீவிர கண்காணிப்பின் மூலம் தனியார் பள்ளிகளின் இத்தவறுகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.5) அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் விகிதாச்சார ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.6) ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் முழுநேர ஆசிரியர் பணியிடங்களாகவும், நிரந்தர ஆசிரியர் பணியிடங்களாகவும் நிரப்பவேண்டும். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதிகள் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும்.7) தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள முப்பருவ முறை வரவேற்கத்தக்க மாற்றமாகும். மேலும் வருங்காலத்தில் இம்முறைக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. மேலும் பாடத்திட்டங்கள் உருவாக்கத்தில், சமூக நீதி, மனித உரிமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகள் பின்பற்றப்படவேண்டும்.
8) மத்திய அரசு பாடத்திட்டத்தைப் (ஊடீளுஊ) பின்பற்றி புதிய தனியார் பள்ளிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. சமச்சீர் கல்வியை உண்மையாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இக்கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டமும், மத்திய அரசின் பாடத்திட்டமும் எத்தகைய வேறுபாடும் இல்லாததாக மாற்றப்படவேண்டும்.
9) தேசிய இனம் – மொழி வழி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இருக்க வேண்டும். இக்கொள்கையை நடைமுறைச் சாத்தியமாக்க கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.
10) அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தப்படவேண்டும். அரசுப் பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மாணவர்கள் மூலம் செய்ய வைப்பதை தடுக்கவும், சுகாதார சீர்கேடுகளைக் களையவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மொ.பாண்டியராஜன்மதுரை. 3