சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 4 நவம்பர், 2021

"தறி நாடா" -சுப்ரபாரதிமணியன் இலக்கிய வெளிச்சம் தரும் ஆன்மீக தரிசனத்திற்கு வாழ்க்கையில் மிக முக்ய பங்குண்டு. பொதுவாக புனை கதைகளோ, நவீன இலக்கிய படைப்புகளோ நிஜ வாழ்வின் அடிப்படையில் எழுதப்படுபவை என்றாலும் கொஞ்சம் கற்பனை கலந்த வசீகரத்தால் இன்னும் செழுமை பெறுகிறது. நெசவாளர்களின் வாழ்க்கை பற்றின இலக்கிய சித்தரிப்புகள் சங்க காலம் முதற்கொண்டு பல இடம் பெற்றுள்ளன. திரைப்படப் பாடல்களில் உடுமலை நாராயணகவியின் "சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்." பாடல் சட்டென எல்லோரின் நினைவிற்கும் வரக் கூடியதாகும். சோசலிச யதார்த்த வாதத்தை முன் நிறுத்தி எழுதப்பட்ட "பஞ்சும் பசியும்" என்ற தொ.மு.சி. ரகுநாதனின் நாவல் நெசவாளர்களின் போராட்டத்தையும் வாழ்க்கையையும் முன்னிறுத்திய தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாகும். நெசவாளர்களின் வாழ்க்கையை விரிவான அளவில் தமிழ் வாசகர்களுக்கு ஆழமில்லாமலிருந்தாலும் கொண்டு சென்றது. கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஷி. வெங்கட்ராமின் "வேள்வித் தீ" நாவலும் நெசவாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிடத்தக்க நாவலாகும். சௌராஷ்டிரிய வகுப்பைச் சார்ந்த எம்.வி. வெங்கட்ராம் சாதாரண நெசவாளர்களையும், கூலி நெசவு செய்பவர்களையும் அதில் உள்ள பலவீனமான பெண்கள் குறித்தும் அந்த நாவலில் எழுதியிருக்கிறார். நான் நெசவாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும் நெசவாளர் சமூகம் பற்றிய முழு நாவலை எழுதவில்லை என்ற குறை என்னுள் உறுத்திக் கொண்டிருந்தது சமீபத்தில் விலகியுள்ளது. இவ்வாண்டின் இறுதியில் வர இருக்கும் "தறி நாடா" என்ற நெசவாளர்களை மையமாக வைத்த நாவல் அந்த உறுத்தலை விலக்கியுள்ளது. இதுவரை எட்டு நாவல்கள், பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள் பயண நூல், திரைப்பட நூல்கள், இலக்கியக் கட்டுரைகள் என்று முப்பத்தைந்து நூல்களை வெளியிட்டிருக்கிறேன். இவற்றில் பல சிறுகதைகள் நெசவாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கக் கூடியவை. அவர்களின் வாழ்க்கையின் ஏதோ பகுதிகளை சிலவை சித்திகரிப்பவை. எனது 'மரபு' என்ற 1990ல் வெளிவந்த குறுநாவல் நெசவாளர்கள் போராட்ட காலத்தில் தங்கள் வறுமையைப் போக்க கேரளாவிற்கு அரிசி கடந்த முற்பட்ட வாழ்க்கை நிர்பந்தத்தை மையமாகக் கொண்டது. எனது சாயத்திரை, பிணங்களின் முகங்கள், தேனீர் இடைவேளை ஆகிய நாவல்கள் பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டவை என்றாலும் அவற்றின் சிறு பகுதிகளில் நெசவாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அதிலும் "ஓடும் நதி" என்ற நாவலின் ஒரு பகுதி கோவை மாவட்டத்தின் செகடந்தாளி கிராமத்து நெசவாளர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதாக அமைந்துள்ளது. "ஜீவ ஓட்டமே பிரச்னையாகி விடும்படி பலவாறாக அலைக்கழிக்கப்பட்டு எத்தனையோ விதமான கழிவுகளை கலக்கும் அபாயங்களைக் கடந்து புது வெள்ளமாகப் பெருகியோடும் பெண்ணெனும் நதியின் போக்கை" அந்த நாவலில் சித்தரித்திருந்தேன். துரித கதியில் நிகழும் வாழ்வின் சம்பவங்கள், நிதான கதியில் நடைபோடும் சலிப்பூட்டும் வாழ்க்கை, நன்னீர் சால்களாக சில நட்புகள், கழிவு நீர் பெருக்குகளாக சில உறவுகள். இந்த பயணத்தின் சித்தரிப்பில் கொங்கு கிராமத்துச் சூழல்களையும், நாகலாந்து மலைப்பிரதேசத்தின் மாசற்ற வாழ்க்கையையும், செகந்திராபாத் நகரத்தின் குப்பைகளையும், திருப்பூரின் கழிவுகளையும் நம் வாசிப்பறைக்குள் கொண்டு வருவதை பதிப்பாளரும் குறிப்பிட்டிருந்தார். இதில் திருப்பூர் வாழ்க்கையும், செகடந்தாளி கிராம வாழ்க்கையும் இயைந்த பகுதிகளில் நெசவாளர் வாழ்க்கை இடம் பெற்றிருக்கிறது. நான் தொண்ணூறின் ஆரம்பத்தில் எழுதிய நாவல்தான் "தறி நாடா". அப்போது நான் எபதிய அந்த நாவலின் கைப்பிரதி சமீபத்தில் எதேச்சையாகக் கிடைத்தது. அதை இவ்வாண்டின் இறுதியில் வெளிக் கொணரும் முயற்சியில் உள்ளேன். எழுபதுகளின் இடைப்பகுதியில் நெசவாளர்கள் தங்கள் கூலியை குறைத்ததை எதிர்த்து திருப்பூர் பகுதிகளிலும், கோவை மாவட்டத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்கள், சிறைக்குச் சென்றது, தங்கள் வாழ்க்கை திசை மாறிய ஆவலம், ஜவுளி உற்பத்தியாளர்களின் கடைகளுக்குத் தீ வைத்தது பின்னர் போராட்டம் ஓய்ந்து தொழில் சகஜ நிலைக்கு வந்ததன் பின்னணியில் நெசவாளர்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளேன். நெசவாளர்கள் பற்றிய முழு நாவலை எழுதாத உறுத்தலும் குறையும் இந்த நாவல் வெளியிட்டால் தீரும் என்ற ஆறுதல் எனக்குள் வந்திருக்கிறது. வில்லியம் பாக்னர் என்ற எழுத்தாளர் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். "ஓர் எழுத்தாளர் தான் எழுதுவதோடு ஒரு காலமும் திருப்தியடைவதில்லை. அவர் படைப்பது எப்போதுமே அவர் மனதில் நினைத்திருந்ததை எட்டுவது கிடையாது. சக எழுத்தாளர்களின் எழுத்தை ஒருவர் வென்றால் போதாது. அவரையே அவர் வெல்ல வேண்டும்" என்கிறார். எனக்குள் நானே சுய சமாதானம் கொள்ளவும் நெசவாளர் வாழ்க்கையை விரிவாகச் சொல்லவும் "தறி நாடா" நாவல் அமைந்திருக்கிறது என்பதில் காலத்தின் முன் நான் நிற்கிறேன். விளிம்பு நிலை மக்களான நெசவாளர்கள் வாழ்க்கை குறித்து என்னளவிலான பதிவு என்ற அளவில் திருப்தி கொள்கிறேன்.