சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 12 மே, 2008

மீனாட்சி புரியுடன் சந்திப்பு



பெண் எழுத்துக்கள் ஆண்களைச் சாடுவதற்கு நியாயங்கள் குறைவுதான் : மொழிபெயர்ப்பாளர் மீனாட்சி புரியுடன் சந்திப்பு
சுப்ரபாரதிமணியன்
தொடர்ந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் 75 வயதை எட்டி விட்டார் திருமதி மீனாட்சிபுரி. உடம்பின் தள்ளாமையும் நினைவின் தப்பித்தலும் சாதாரணமாகி விட்டது. ஆனாலும் தனது அனுபவங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறையும் கவனமும் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலூக்கா திருக்குறங்குடி சொந்த ஊர்.
சென்னையில் தேசிய பெண்கள் பள்ளியில் ஒன்றாவது பாரம் படித்திருக்கிறார். அதன் பின் தில்லி வாழ்க்கைதான். முத்தைய்யாபாகவதர் நெருங்கிய உறவினர் என்பதால் இசை குறித்த ஆர்வமும் தமிழ் சூழலின் தொடர்ந்த பரிச்சயமும் கொண்டிருந்திருக்கிறார்.
தில்லியின் 'THOUGHT ' பத்திரிக்கையில் முதல் ஆங்கில சிறுகதை வெளிவந்திருக்கிறது. தந்தையின் பத்திரிக்கை துறை அக்கறை மீனாட்சியை பாதித்து எழுத்தாளராக்கியிருக்கிறது.
'PAY ON THE FIRST ' என்ற முதல் நாவல் ஆங்கிலத்தில் அரசாங்க ஊழியர் ஒருவரை மையமாகக் கொண்டது. ' 'THOUGHT பத்திரிக்கையின் வார மலரினைத் தயாரிக்கும் பொறுப்பில் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறார். புதுமைப்பித்தன் கதையை முதலில் முதலில் மொழிபெயர்த்திருக்கிறார். 1967-73 ஆண்டுகளில் 150 மொழிபெயர்ப்புப் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. அதன் பின் ஜெர்மனியில் Voice of Germany வானொலியில் பணி. ஆங்கில மற்றும் ஹிந்திசெய்திகள் வாசிப்பதும், மொழிபெயர்ப்பு செய்வதும் பணியாகிறது.
' நான் செய்தி வாசிப்பது கதை வாசிப்பது போல இருப்பதாக வானொலி நேயர்கள் கருத்து தெரிவிப்பார்கள். ஆனால் அலுவலகத்தில் என் மேலதிகாரிகளுக்கு செய்தியை கதை போல சொல்வது பிடிக்காது. ஆலுவலகத்தில் கெட்ட பெயர்தான். '
20 ஆண்டுகள் ஜெர்மனியில் வாசம். முதல் மகள் வழிப் பேரனை கவனிக்கும் பொருட்டு தில்லி வந்திருக்கிறார். பின்னர் தொடர்ந்த மொழிபெயர்ப்புப் பணி. இவரின் படைப்புகள் நூலாக வெளி வந்தவை:
1. BAITHAK KI BILLI (SITTING ROOM CAT)
2. JAANE PEHCHANAE AJNABI ( KNOWN, UNKNOWN STRANGER)
3. DES KIKALW ( REFUGEES)
4. SAAT PHERE ADHURE ( SEVEN HALF ROUNDS THE FIRE )
5. TASHTARI MEIN TOOFAN ( STORM INA SAUCCER )
6. சுந்தரராமசாமியின் IMLI PURAN ( PULIA MAARATIN KADAI)
7. சுப்ரபாரதிமணியனின் RENG RENGEELI CHAADAR MAILI (CHAYATHIRAI)
8. COLOURFUL SWEETS TURNED DIRTY
9. பொன்னீலனின் ' KARISAL '
10. பூமணியின் ' VEKKAI '
11. அசோகமித்திரனின் PITHKEE MITRE ( ' APPAAVIN SINEKITHAR ')
12. GERMEN: THENALI RAMAN KATAIKAL
13. BRECT PLAYS IN HINDI
எழுபது ஆண்டுகளாய் இல்லாத குளிர் தில்லியை வாட்டிக்கொண்டிருந்த ஒரு நாள் காலையில் கதா திருவிழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த போது தோப்பில் முகமது மீரான் உடன் அவர் இல்லத்தில் சந்தித்தது:
கேள்வி: சிறு வயதிலேயே தில்லி வந்து விட்டிர்கள். தமிழ் பரிச்சயம் எப்படி தொடர்ந்தது ?
பதில்: ஆனந்தவிகடன், கல்கி போன்றப்பத்திரிக்கைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்துக்கொண்டிருந்தன. கர்னாடக சங்கீதம் கற்கிற வாய்ப்பில் தமிழர்களுடனான தொடர்புகள் இருந்தன். மொழிபெயர்ப்பு அக்கறையில் புத்தகங்களை வாசித்துக்கொண்டும் இருந்தேன். புதுமைப்பித்தனை தொடர்ந்து வாசித்தேன். அவர் அன்றைக்கு நவீன எழுத்தாளராக இருந்தார். கல்கி மீது விருப்பம் எழவில்லை. இன்றைக்கும் வாசிக்கிற போது புதுமைப்பித்தன் நவீன எழுத்தாளர்தான்.
கே: ஜெர்மனியில் இருந்த போது என்னமாதிரியானப்படைப்புகளை மொழிபெயர்த்தீர்கள்.
ப: வானொலி நிகழ்ச்சிக்கானவைதான் அவை. இந்திய நாட்டுப்புறக்கதைகள் குறிப்பாய் தெனாலி ராமன் கதைகளை நிறைய மொழிபெயர்த்தேன். அவை இப்போதும் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. குந்தர் க்ராசுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவேன். அவரின் சில படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவருடன் பரிச்சயம் உள்ள அளவுக்கு அவரின் படைப்புகளை மொழிபெயர்த்ததில்லை.
பிரக்க்டின் நாடகங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறேன். ' நாக் கா பகிட்சா ' என்று. (Introduction to Hell ).
கே: உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்பாளர்கள் ...
ப: சுந்தரராமசாமி, தேவேந்திர சத்யார்த்தி, ராஜி நரசிம்மன், பாலசுப்ரமணியன், லட்சுமி கண்ணன், நிர்மல் வர்மா.. நிர்மல் வர்மா உயிரோடு இருந்த காலத்தில் அவரை கூட்டங்களில் சந்திக்கிற போதெல்லாம் அவருடன் சண்டைதான். அவரின் பொதுவுடமைக்கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. அது சுவாரஸ்யமான சண்டையாக இருந்திருக்கிறது.
கே: எழுத்து, வானொலி பணி இதில் எது தங்களுக்குப் பிடித்தது ?
ப: இரண்டும் தான். வானொலியின் நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எதிர் வினை இருக்கும். எழுத்திற்கு தாமதமாகும். எழுத்து போல் ஆசுவாசம் வேறெதுவும் இல்லை. மொழிபெயர்ப்பில் கிடைகும் திருப்தி வேறுவகையானது.
கே: பூமணியின் நாவல் போன்றவற்றை மொழிபெயர்க்கையில் இருந்த சிக்கல்கள் என்ன ?
ப: சு.ரா., பொன்னீலன், பூமணியை மொழிபெயர்ப்பது சிரமமாகத்தன் இருந்தது. நாட்டுவழக்கு வார்த்தைகளுக்கு பலரிடம் விளக்கம் பெற்றுதான் மொழிபெயர்தேன். உங்களின் சாயத்திரையை மொழிபெயர்த்தபோது அவ்வளவாக சிரமப்படவில்லை.தலித் எழுத்துக்கள் பிரச்சாரமாக இருக்கின்றன. பெண்ணியம் சார்ந்த எழுத்துக்களும் பெரும்பாலும் பிரச்சாரமாக இருக்கின்றன. பெண்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகள்தான் அதிகம். இதில் பெண் எழுத்துக்கள் அதிகமாக ஆண்களைச் சாடுவதற்கு நியாயங்கள் குறைவுதான். அதனால் பெண்ணிய எழுத்துக்களில் எனக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீவிர ஆன
பின்னால் ஜரோப்பிய நாடுகளுக்கு இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக வர ஆரம்பித்தனர். அவர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன். அதனாலேயே அவர்களின் படைப்புகளை வாசிக்கிற ஆர்வம் அதிகமிலாமல் போய் விட்டது. இப்போது புகலிட இலக்கியம் என்பது தீவிரமான விசயமாக வருவதாய் கேள்விப்படுகிறேன். புது வகை எழுத்தில் சாதீயம் ஆக்கிரமித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.நவீன எழுத்தென்பது சாதீய எழுத்து என்றும் ஆகி விட்டது.
கெ: பெண்களின் பிரச்சனைகளை தாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா ?
ப: அவை சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆனால் பிரச்சாரத்தொனி உள்ளது அதிகமாய். மனித நேயத்திலும் உடன் படும் நடவடிக்கைகளிலும் அக்கறை வேண்டும் அது குறைந்து வருவதுதான் பிடிப்பதிலை. அது குறித்த ஆக்கபூர்வமானவற்றில் அக்கறை உண்டு. இந்தியில் கிருஸ்ண தோத்தி போன்றவர்களின் படைப்புகள் இவற்றிலிருந்து மாறுபடுபவை.
கே: தமிழில் உங்களுக்கு சுலபமகாக இருந்த மொழிபெயர்ப்பு எவை ?
ப்: உங்களின் சாயத்திரையை மொழிபெயர்க்க சுலபமாக இருந்தது. சாயத்தொழில், நெசவு இவற்றின் பின்னணியோடு வடகத்திய வாவசகர்கள் புரிந்து கொள்வதற்காக தலைப்பை கபீரின் கவிதை வரியாய் எடுத்தேன். கபீர் ஒரு நெசவாளி என்பதால்.அசோகமித்திரனை மொழிபெயர்ப்பது சுலபமானது. அவர் அடிப்படையில் சைவம் என்றாலும் அவரின் கதைகளில் நிறைய கொலைகள் இருக்கும். அசைவ அம்சங்கள் அவை. வன்முறையும் நிறைய. மதக்கலவரம் போன்றவற்றில். கலவரங்களையும் வன்முறையையும் நானும் நேரில் பார்த்திருக்கிறேன்.
இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் போது பார்லிமெண்ட் வீதியில் ஜந்தர் மந்திர் அருகில் குடியிருந்தோம். நிறைய உயிர்கள் பலியானதை கண்ணால் பார்த்திருந்தேன். குதிரை வண்டிக்காரன் ஒருவனை வெட்டிக் கொல்வதை கண்ணால் பார்த்திருக்கிறேன். கொடுமைதான்.இப்போதையக் கொடுமைகள் அதற்கு இணையானவை. ஜாதி பெயரால் நடக்கும் வன்முறைகள். ஜாதி பெயரால் இலக்கியங்கள் அருவருப்பாய்தான் இருக்கின்றன.
கே: தமிழ் சூழல் பிடித்திருக்கிறதா ?
ப: சண்டை, காக்கா பிடிப்பது எல்லாம் இங்கும் அதிகம். வட இந்திய சூழல் எனக்குப் பிடிக்காதுதான். இடது கை சாப்பாட்டுப் பழக்கம். இடது கையிலேயே எல்லாவற்றையும் செயவது. அது போல் இடதிலிருந்து எழுதுவது, ஒரு மொழி வேறு மொழியின் ஸ்கிரிப்டை பயன்படுத்துவது. உதாரணமாக பஞ்சாபிகள் உருது ஸ்கிரிப்டை பயன்படுத்துவது போல பல விசயங்கள் . தமிழுக்கு உள்ள சிறப்புகளை நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் மாதிரி மொழி வளம் வட இந்திய மொழிகளுக்கு இல்லை.
கே: அடுத்த உங்களின் மொழிபெயர்பு முயற்சி என்ன ?
ப : அய்ந்து வயதில் இருந்து எனது அனுபவங்களை ஞாபகப்படுத்தி முறைப்படுத்தி எழுதி வருகிறேன். நாவலாகத்தான். நெடுநாள் பிடிக்கும் அதை முடிக்க.