சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 7 மே, 2014

சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை -வண்ணங்களின் விபரீதம்

சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை -வண்ணங்களின் விபரீதம்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰½

வெளியீடு: எதிர்
இரண்டாம் பதிப்பு: ஆகஸ்ட் 2013
விலை ரூபாய்: 195
பக்கங்கள்: 208
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: டெம்மி


திரை என்பது கண்களை மறைப்பது; எதையும் பார்க்கவிடாமல் செய்வது. சாயம் என்ற திரை நம் அனைவரின் கண்களையும் மறைத்துவிடுகிறது. எனவே புறச்சூழலில் ஏற்படும் மாறுதல்களில் நாம் கவனம் கொள்ளாமல், கடிவாளம் கட்டிய குதிரையாக, வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதையே குறியாகக் கொண்டு வாழ்கிறோம். நமக்கும் நம் வாழ்வுக்கும் உற்சாகம் தரும் என நாம் கருதும் வண்ணங்கள் நம்மைச் சீரழித்துப் புதை குழியில் தள்ளிக்கொண்டிருப்பதை நாம் கண்ணிருந்தும் குருடராக பாராமல் இருக்கிறோம். அதிலிருந்து தப்பிக்க சற்றேனும் பொது நோக்கும், பொறுப்புணர்வும், நேசமும், உடையவர்களாக நாம் நடந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறது சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை.

தொழில் வளரும்போது ஒரு நகரத்தின் மாற்றம் என்பதைத் தவிர்க்க முடியாது. நம்மையும் மீறி நகரம் பிரம்மாண்டமாய் வளர்ந்து விடுகிறது. எனவே அது சுற்றுச்சூழல் சீர்கேடு எனும் தன் கரங்களால் நம்மை விழுங்கத் தயாராகிவிடுகிறது. புதுத் தொழில்கள் எழும்போது பழைய தொழில்கள் நசிந்துபோவதும், அர்த்தமிழந்து போவதும் ஒரு சமூகத்தில் இயல்பாய் நடக்கும் விசயங்கள்தாம். ஆனால் அவை மிக வன்மையாக, வேகமாக தனி மனிதனிடம் மட்டுமின்றி, சமூக, கலாச்சாரத்திடையேயும் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்திவிடுகின்றன என்பதை நுட்பமான அவதானிப்புகள் மூலம் புனையப்பட்ட நாவல்தான் சாயத்திரை.

திருப்பூர் நகரை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட இந்நாவலில் மனித வாழ்வுக்கு ஆதாரமான நொய்யல் ஆறு சாயங்களால் நிரம்பிவிடுகிறது. வீதிகளில் சாக்கடையெங்கும் சாயம் கலந்த நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிணற்று நீரில் சாயத்தண்ணீர்தான் வருகிறது. நகரத்தில் ஒரு பக்கம் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தும் மறுபக்கம் இருக்கும் சிறிது தண்ணீரையும் சாயங்களால் மாசுபடுத்துவது நமக்கு ஏற்புடையதாய் இருக்கும் அவலம் நாவலில் துயரத்துடன் வெளிப்படுகிறது. வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மாபெரும் அரக்கனாக உருக்கொண்டு மொத்த நகரத்தையும் விழுங்கத் துடிப்பதான சித்திரம் நாவலை வாசிக்கும்போது மனதில் எழுகிறது. எனவே இது ஒரு நகரத்தின் கதையாக மட்டுமல்லாது இதுபோல் உலகெங்கும் இருக்கும் பல நகரங்களின் கதையாகவும் நாவல் வியாபிக்கிறது. 

படிக்கச் சிரமம் தராத சரளமான நடையில் அமைந்த நாவல். நாவலின் அத்தியாயங்கள் சிறியனவே ஆதலால் நாவல் காட்சிகளுக்குக் காட்சி வேகவேகமாக தாவித்தாவி செல்கிறது. சுப்ரபாரதிமணியனுக்கு மினுங்கும், மின்னும் என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும் போலும். பக்கத்திற்கு ஒருமுறையேனும் அந்த வார்த்தை வந்துகொண்டே இருக்கிறது. நாவலின் பக்கங்களைச் சற்றே குறைத்திருந்தால் நாவல் செறிவாக இருந்திருக்கும். திருப்பூர் நகரை அறிந்தவர்களைவிட அறியாதவர்களுக்கு இந்நாவல் தரும் வாசிப்பின் அனுபவம் வேறானதாக இருக்கும்.

நாவலில் வரும் செஸ் விளையாட்டும், செட்டியார் பாத்திரமும் ஒரு குறியீடு. செஸ் ஆட்டத்தில் காய்கள் வெட்டுப்படுவது போன்று மனிதர்கள் எல்லோரும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் வெட்டுப்படுவார்கள். அதில் ராஜா, ராணி, மந்திரி, சிப்பாய் என்று யாரும் விதிவிலக்கல்ல. இனி இந்த மண்ணில் மனிதர்கள் எவ்வாறு இருக்கப்போகிறார்கள் என்பதற்கு செட்டியார் பாத்திரம் அத்தாட்சியாக இருக்கிறது. உடலநலம் கெட்டு, உறவுகள் அவரைவிட்டுச் சென்ற பின்னால் அவர் படும் சிரமத்தைப்போலவே, ஆரோக்கியமான தண்ணீர், காற்று, உணவு ஆகியவை நம்மைவிட்டு விலகிவிடும்போது நமக்கு நேரப்போவது அவரின் கதிதான் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.

நிரந்தர வேலையின்றி அவ்வப்போது கனவுகளில் சஞ்சரிக்கும் பக்தவச்சலம், தொழில் நசிவுற்றதால் பாதிப்படையும் சாமியப்பன், வேலையின்றி வெறும் கம்பனியை காவல் காக்கும் நாகன், பக்தவச்சலத்துடன் உறவுகொண்ட ஜோதிமணி, சாயத்தினால் உடம்பு முழுதும் புண்ணாகிப்போன வேலுச்சாமி என்று பல பாத்திரங்கள் நாவலில் உலாவருகிறார்கள். வண்ணங்கள் அவர்களின் வாழ்க்கையில் எப்படி விளையாடியிருக்கிறது என்பதை நாவலின் வாசிப்பில் நாம் உணர்கிறோம். 

தன் கையில் கிடைத்திருக்கும் மிகப்பெரும் பொக்கிஷத்தைக் கூழாங்கல்லாக அறியும் நிலையிலேயே மனிதன் இருக்கிறான். இயற்கையின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ஏனோ அவன் மறந்துவிடுகிறான். எனவே அவன் செய்யும் எல்லா கெடுதல்களையும் இயற்கை சீர் செய்ய முயற்சிக்கிறது. அதனாலேயே அது சீற்றம் கொண்டு தண்ணீர், நெருப்பு ஆகியவற்றின் மூலம் மனிதன் செய்த தவறுகளை முற்றாக அழித்து, மீண்டும் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து உருவாக்க முயற்சிக்கிறது. நாவலின் கடைசியில் வரும் வெள்ளப்பெருக்கு நமக்கு உணர்த்துவது அதைத்தான். தன்னை அழிக்கும் மனிதர்களை அழிப்பதின் மூலமாகவே தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்பதை இயற்கை உணர்ந்திருக்கிறது. 

சாயங்கள் துணிக்கு வண்ணங்கள் சேர்க்கலாம். ஆனால் மனித வாழ்க்கைக்கு? அவற்றால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மனிதனின் வாழ்வில் எத்தகைய வண்ணத்தைச் சேர்க்க முடியும்? வண்ணங்களுக்காக ஒரு சமூகம் அழிந்துபடுவது பரிதாபத்திற்குரியது. வண்ணங்கள் வெறும் வண்ணங்கள் மட்டுமல்ல அவற்றின் பின்னால், மண்ணையும், காற்றையும், நீரையும் பாழாக்கும் எத்தனையோ விசயங்கள் உள்ளன என்பதை அறியும்போது, வண்ண உடைகளை விரும்பும் நம் மனத்தின் மீது குற்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாதவாறு நாவல் அமைந்திருக்கிறது. தவிர்க்க முடியாது என்றாலும் நாம் சர்வசாதாரணமாக அவற்றைப் புறங்கையால் உதறித் தள்ளிவிட்டுச் சென்றுகொண்டுதான் இருப்போம் என்பதும் நிதர்சனமான உண்மை. மனசாட்சியின் குரல் கேட்காதபடி நம் காதுகள் எப்போதோ செவிடாகிவிட்டன. எனவே இவற்றின் விளைவுகளை நம் வருங்காலச் சந்ததியினர் அனுபவிப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/05/blog-post.html#sthash.5J2DFfpw.dpuf