சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 26 செப்டம்பர், 2022

உள் மனநிலை வெளிப்பாட்டின் எண்ணத்தொகுப்பு மு.கவியரசன் மனிதன் என்பவன், என்னதான் அறிவாலும், ஆற்றலாலும், சிந்திக்கக்கூடிய செயல்திறன் படைத்தவனாக உயர்ந்து விளங்கினாலும், இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களைப் போலத்தான் அவனும். இவற்றிற்குள் இருக்கக்கூடிய வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியம். ஓர் உயிர் பிறக்கிறதென்றால் அதற்கென்று உரிய கடமைகள் இருக்கின்றது. முதலில் ஆரோக்கியமான வாழ்வு சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தன் இனத்தை, தலைமுறையை அடுத்தக்கட்ட நகர்விற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் எல்லா உயிர்க்கும் பொதுவான, முக்கியமான கடமை. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்பின் தான் மனிதனுக்கான அறிவு, நாகரீகம், மற்ற பிற எல்லாம். ஆனால் மனிதன் தன்னுடைய எண்ணவோட்டங்களுக்கு ஏற்ற, சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிலையான மனநிலைப்பாட்டோடு இருப்பது கடினம். நடைமுறை வாழ்க்கைக்கும், இப்படித்தான் வாழவேண்டும் என்று யூகித்து எழுதிய வாழ்க்கைக்கும், நிலைத்தன்மை என்பது உறுதியானதாக இருப்பது அரிதானது. இதற்குள் எப்போதும் ஓர் அலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அவ்வலையைத்தான் சுப்ரபாரதிமணியனின் 14/40 கொண்டை ஊசி வளைவு எனும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியாக விவரிக்கிறது. கூற்று முறை என்பது கதைக்குள் பலவாறாக அமைகிறது. கதை சொல்லியோ அல்லது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தை வைத்தோ அல்லது கதைக்குள் இடம்பெறும் எல்லா பாத்திரங்களின் மனநிலைப் பதிவுகளை உதிரியாக விவரிக்கும் பாணியும், இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து இடம்பெறலாம். அவ்வகையில் மூன்றாவது பாணியை முன்வைத்து நகர்ந்தாலும், இக்கதை பெயர் சொல்லப்படாத ஒரு பெண்ணைச் சுற்றி, அவளின் வாழ்க்கையை மையமிட்டு அமைகிறது. இந்நாவலின் கதையளவு நான்கு நாட்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. நேர்கோட்டு உத்தி அமைப்பில் எழுதப்பட்டாலும், இறுதியில் காட்சிப்படுத்தப்படும் களன் நான்காவது நாள். ஆகவே கடந்தகாலம், நிகழ்காலம் என்கிற வகையில் அமைகிறது. பரளியாறு தேவரிஷி அலுவலகம் கதையில் வெளி சார்ந்த இடச்சூழலாக வருகிறது. அமைதி மண்டபம், உணவு விடுதி, தங்கும் அறை இறுதியில் மலைக்காட்சிகள் என்று கதைக்குள் காட்சிப்படுத்தப்படும் இடங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. மனித வாழ்க்கையில் ஆசைகள் தான் அவனை எந்த இடத்தில் வைக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்கிறது. அவ்வகையில் நகர வாழ்க்கையில் இருந்து பிதுங்கி வந்த மனங்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக மன அமைதியை தேடிவரும் நிலை என்பது, ஏதோவொரு வகையில் அவர்களுக்கான மன ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என நம்புகிறார்கள். அதனடிப்படையில் முதல் நிலைப் பாத்திரமாக வரும் இராஜகுமாரன், இரண்டாம் நிலைப் பாத்திரமாக வரும் பெயர் சொல்லப்படாத ஒரு பெண் பாத்திரம். இவ்விரு பாத்திரங்களின் போக்காகவே கதை நகர்த்தப்படுகிறது. அப்பயிற்சி வகுப்புக்காக கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே காணக்கிடைக்கிறார்கள். அதில் ஒருவளாக அப்பெண் வருகிறாள். தான் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாதவளாக அவள் தன்னை மற்றவர்களிடத்தில் காட்டிக்கொள்கிறாள். இராஜகுமாரன் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள முற்படுகிறான். அது இறுதி வரையிலும் கிட்டாமலே செல்கிறது. அப்பெண்ணின் பின்புல வாழ்க்கை, துயரம் மிகுந்ததாக காட்சிப்படுத்தப் படுகிறது. “அவன் காதலிப்பதாகச் சொன்னான். பிறகு பல மாதங்கள் கடந்து பின்னால் இப்படி ஒரு இடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டான். அவளுக்குத் துயரமாக இருந்தது”(ப.43). “தன் உடம்மைப் பயன்படுத்திச் சம்பாத்தித்தவர்கள் மத்தியில் அவள் அகப்பட்டு விட்டது ஒரு பெரிய கதை. அந்தத் தளத்தில் பல பெண்கள் இருந்தார்கள். அப்படித்தான் ஒரு நாள் எப்படியாவது அங்கிருந்து தப்பிப் போய்விடுவது என்ற வகையில் அவர்கள் யோசித்தார்கள். பரஸ்பரம் உதவி செய்வதும்தான், தப்பிப்பதுதான் திட்டமாக இருந்தது”(ப.42). “அங்கிருந்து நயன்தாரா தப்பித்து வந்தபோது கூட அவளின் மனதில் எந்த மாற்று திட்டமும் இருக்கவில்லை. இன்னொரு ஆணிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோம். அவனும் ஏமாற்றப் போகிறான் என்பது மட்டும்தான் தெரிந்தது. இப்படி ஆண்களிடம் மாட்டிக்கொள்வதை விட அவர்களைப் பின்தொடர வைப்பதுதான் சாகசம் என்று நினைத்தாள். அந்த சாகச விளையாட்டில் பல அபாயங்கள் காத்திருந்தன. எப்படியோ அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு அவள் தப்பிச் செல்கிறாள். அதெல்லாம் தவிர்க்கிறபோது இப்படி பரளியாறு வந்து உடற்பயிற்சி, தியானம் என்று நான்கு நாட்கள் இருந்து விட்டு சென்று விடுவாள். அதுதான் ஆறுதலாக இருக்கிறது”(ப.43). இவ்வாறான அப்பெண்ணின் வாழ்க்கைப் பின்புலம் துயரம் நிறைந்ததாக அறியப்பட்டாலும், ஏமாறுவதும் - ஏமாற்றப்படுவதும், அதனின் பின்விளைவுகள் மனம் சார்;ந்த சிக்கலில் அகப்பட்டு கொள்ளுமே தவிர வேறு வடிவங்களில் பெரிதாக அமையப் போவதில்லை. தன்னை ஒரு வட்டத்திற்கு கொண்டு வருகிறாள். ஆண் மீதான வெறுப்பு ஒருபுறமிருந்தாலும், அவற்றிலிருந்து விடுபடவே பரளியாறு தியானப் பயிற்சிக்கு வந்து செல்கிறாள். இவ்வந்து செல்லுதலில் ஒருமுகமாக இராஜகுமாரனின் நட்பும், அந்நட்பு காமம் சார்;ந்த ஒரு பார்வையாய் வெளிப்படுகிறது. இந்தப் பார்வை கதையின் கடைசி இலைவரினும் தொடர்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அப்பெண் உடன்படாதவளாகவே இராஜகுமாரனோடு பயணிக்கிறாள். தனக்கான ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். அவ்வலைதல் அவனுக்குப் பிடிபடாததாகவே இருக்கிறது. கொரானா லாக்டவுண், அடுத்து எப்போது சந்திக்க போகிறோம் என்கிற அச்சம், அதனாலயே எப்படியாவது அவளோடு தனிமையில் இருக்க வேண்டும் என்கிற ஆசை அவனைத் துரத்துகிறது. ஆனால் இறுதி வரையிலும் ஆசை என்பது கானல் நீராகவே செல்கிறது. அவளைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் கொண்டாலும், அதற்கெல்லாம் அவள் முட்டுக்கட்டை இடுகிறாள். முக்கியமாக, “நான் கிளம்புறேன். மாயமாகப் போறன். அரை நேரத்துக்கு முன்னால காணாமல் போனதா சொல்லித் தேடுனீங்க. இப்போ உண்மையாகவே காணாமல் போக போறேன். மாயமா போகப்போறன். என் பெயர் பொய். நீங்க வெச்ச பேரும் பொய்தாம். நான் உங்ககிட்ட நடந்துகிட்ட எல்லாம் பொய். நான் வேற ஒரு ஆளு.. வரட்டுமா”(ப.105). “வரட்டுமா நாம சந்திக்கிறது இனிமேல் இருக்காது. எல்லாம் மாயை”(ப.106). இவ்வாறாக காட்சிப்படுத்தப்படும் ஒரு பெண்ணின் அகவாழ்க்கை, எந்தளவிற்கு அவள் துயரத்தை உள்வாங்கியிருப்பாள் என்பதை யூகிக்க முடிகிறது. மனிதனின் ஆகப்பெரும் பிரச்சனையாக இந்த உடல் இருப்பது தெரிய வருகிறது. என்னதான் திருமணம் ஆனாலும், வயது மூப்பாகயிருந்தாலும் காமம் எனும் வளைக்குள் சிக்குவது மனித மனம் இயல்பாகவே அதில் மாட்டிக்கொள்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறாள் அப்பெண். தன்னுடைய அனுபவம் அவளுக்கு அதிகமாகவே கற்றுக்கொடுத்திருக்கிறது. எண்ணங்களும், அதனினூடாக வரும் ஆசைகளுமே மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் தங்களின் மன அழுக்குகளைக் கழுவுவதற்காக வருகிறார்கள். பல பெண்கள் தங்களின் அடையாளங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. அரசன், இனியன், காசிநாதன், நமச்சிவாயம் போன்ற பாத்திரங்கள் இடம்பெற்றாலும், அவர்களின் எண்ணவோட்ட பதிவுகளும் பக்கங்களை நிரப்புகின்றன. ஆனால் முழுமையான கதைச்சூழல் என்பது காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் வலைக்குள் சிக்கி, அதிலிருந்து தப்பித்து நிம்மதியைத் தேடிச்செல்லும் ஒரு பெண்ணின் அவலநிலையை அலை அலையாக வெளிப்படுத்துகிறது. அவ்வெளிப்படுத்துதலுக்குள் உடல் எனும் பண்டம் நிலையாக இருக்கிறது. மனித எண்ணத்தில் உடல் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனின் இந்நாவலும், இராஜகுமாரனும் அதற்கு விதிவிலக்கல்ல. (Rs 135 uyirmmei publication / (( மு.கவியரசன் திருநெல்வேலி. ) mkavi2491@gmail.com ))