சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 31 மே, 2021

சிறுகதை குறி : சுப்ரபாரதிமணியன் குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவளிடமிருந்து ஊடாடியதை உணர்ந்தான் அவன்..காலி இருக்கையில் யாரோ பெண் உட்கார்கிறார் என்பது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. யார் என்று கூர்ந்து பார்ப்பது நாகரீகமாக இருக்காது என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி வெளிக்காட்சியைப் பார்த்தான், குமரன் நினைவு மண்டபத்தைக் கடந்து பேருந்து அண்ணாவையும் பெரியாரையும் ஒருங்கே காட்டியபடி நகர்ந்தது. அதீத பவுடர் வாசமும் இன்னொரு உடமபு வெகு அருகிலிருப்பதும் உடம்பைக்கிளர்ச்சி கொள்ளச்செய்தது அவனுக்கு. பாலம் ஏறும் போது பேருந்துத் திரும்பியதில் அவளின் உடம்பு அவனுடன் நெருங்கி வந்த போது கிளர்ச்சியாக இருந்தது. அந்த முகத்தைக் கூர்ந்து கவனித்தான் . முகச்சவரம் செய்யப்பட்டு பவுடர் இடும்போது தன் முகம் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது. இன்னும் கூர்ந்து கவனிப்பதை அவளும் பார்த்தாள். அது திருநங்கையாக இருந்தது. அவன் உடம்பின் கிளர்ச்சி சற்றே அடங்குவதாக இருந்தது. ஆனால் அந்த உடம்பின் நெருக்கமும் உடம்பு வாசனையும் அவனுக்குப் பிடித்திருந்தது. நெருக்கமாக்கிக் கொண்டான். நெருப்பரிச்சல் பகுதியில் திருநங்கைகள் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறான். பிச்சையெடுக்கிற போது அவர்களின் அதட்டல் மிகையாக இருந்திருக்கிறது, பிச்சை கிடைக்காத போது உடம்ப்பின் பாகங்களைக் காட்டியும் உடலை பகிரங்கப்படுத்தியும் செய்யும் சேஷ்டைகளோ பிரதிபலிப்புகளோ அவனை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.பிச்சை கேட்டு கொடுக்காத ஒருவனைத் தொடர் வண்டிப்பெட்டியிலிருந்து தள்ளிக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பெரிய கட்டிடங்கள் மின்விளக்குகளை பொருத்திக்கொண்டு தங்களை அழகாக்கிக் கொண்டிருந்தன. பேருந்தின் வேக இயக்கத்தில் அவள் வெகு நெருக்கமாக தன் உடம்பைப் பொருத்திக் கொள்வது தெரிந்த்து.. அவனுக்கும் இசைவாக இருப்பது போல் இருந்தான்.பயணம் ரொம்பதூரம் தொடர வேண்டும் என நினைத்தான். பேருந்தில் இருக்கையை திருநங்கையொருத்தி பகிர்ந்து கொள்வது இதுதான் முதல் தடவை., அவனின் இருக்கையருகில் நின்று கொண்டு கிளர்ச்சியூட்டியவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். வீதிகளில் நடக்கும் போதும் அவர்களைப் பின்தொடர்கிற அனுபவமும் அவனுக்கு வாய்த்திருக்கிறது. அவர்களின் வெகு விரைசலாக நடையைக்காணும் போது இரட்டை சக்கர வாகனம் வாங்க இயலாதது உறுத்தியிருக்கிறது.இன்னும் நிலைமை சீர்படவில்லை. ஜி எஸ் டி என்று வந்த பின் பனியன் தொழில் சீர்குலைந்து விட்டது இனியும் இரட்டைச்சக்கர வாகனம் வாங்குவது சாத்தியமில்லை என்பதாய் நினைத்தான். 3999, 4999 ரூபாய் ஆரம்பத்தில் கட்டி விட்டால் போதும் ஓர் இரட்டைச்சக்கர வண்டியை எடுத்து விடலாம். பிறகு மாதக்கட்டிணமும் வட்டியும்தான் அவனைப் பெரிதாய் உறுத்தியது. இரட்டைச்சக்கர வண்டியை வாங்கும் யோசனையைத் தள்ளிவைத்துக்கொண்டே வந்தான். குமார் நகர் நூலகத்தின் முன் இருந்த குழித்தடத்தால் பேருந்து தடை பட்டது போல் நின்றது வெகு நேரம். போக்குவரத்து சிக்னலின் விளக்குகள் வெவ்வேறு நிறத்தைக்காட்டிக் கொண்டிருந்தன. அவன் அந்த நூலகத்திற்கு அவ்வப்போது வந்து போவான். பத்திரிக்கை பகுதியில் எதையாவது புரட்டிக் கொண்டிருப்பான். புத்தகம் எடுக்க நாலைந்து முறை விண்ணப்பங்கள் வாங்கி விட்டான். ரேசன் கடை அட்டை, கெஜடட் அலுவலர் கையொப்பம் என்று விண்ணப்பத்தில் கேட்டபோது சாத்தியமில்லை என்று தள்ளியேப் போயிற்று. ஆதார் அட்டை போதுமா என கேட்க நினைத்தான். அதுவும் நழுவிப் போய் விட்டது. புதுப்புத்தக வாசனை போல் பக்கத்திலிருப்பவளிடமிருந்து வந்த வாசம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் அறை நண்பர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். ஏதாவது பனியன் கம்பனிக்கு மாறிக்கொண்டே இருந்தார்கள் . வேலை குறைவு., ஒரு ஆளெ செட் பண்ணிட்டேன் தொரத்தணும்.அதுக்குப் புது கம்பனி பக்கம் , அங்கெ கூலி குறைவு, ஒப்பந்தக்கூலியெல்லா சும்மா பேருக்கு என்று ஏதாவது காரணங்கள் அவர்கள் வேறு அறை பார்ப்பதற்கென்று அவர்களுக்கிருந்தன.அவர்கள் எல்லோரும் கைபேசியில் திரைப்படங்கள், ஆபாசப் படங்களை பார்க்கிறவர்களாக இருந்தார்கள்.அல்லது வாட்ஸப்பில் உலவிக்கொண்டிருந்தார்கள்;முகநூலில் ஒன்றுக்கும் மேற்பட முகவரிகளைக் கொண்டிருந்தார்கள். சிலது ஆண் ,பெண் குறிகளை அடையாளப்படுத்திய முகவரிகள். அவன் பழைய மாத நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை “ பழையபப் பஞ்சாங்கமா இருக்கியே “ என்று கிண்டலடித்தார்கள் . “ இதெல்லே இதிலெ கெடைக்காததா “. என்று கைபேசியைக் காட்டினார்கள் .எப்போதும் அவனின் அறை நண்பர்களாக இருப்பவர்களும் அதே போலத்தான். அப்படித்தான் வாய்த்திருந்தார்கள். உணவகங்களில் சாப்பிட்டு அலுத்துவிடும்போதும் உடம்பு சரியில்லாமல் போகும் போதும் சமைத்துச் சாப்பிட ஆசை வந்திருருக்கிறது அவனுக்கு. அம்மாவும் பலதரம் சமைத்துப்பழகச் சொல்லியிருக்கிறாள், அம்மா பருப்புப்பொடி, ரசப்பொடி என்று வகை வகையாய் தயாரித்துத் தர தயாராகவும் இருந்தார்கள் .கூட இருப்பவர்கள் எவ்வித ஒத்துழைப்பும் இல்லாததால் அதுவும் சாத்யமில்லாமல் இருந்தது. நூலகம் அருகிலிருந்த செட்டி நாடு மெஸ்ஸிலிருந்து வந்த மெலிதான வாசம் அவனுக்குபிடித்திருந்தது. பேருந்து நகர ஆரம்பித்து போக்குவரத்துச் சிக்னலின் அடையாளத்தால் நின்ற போது திருநங்கை எழுவதைப் பார்த்துவிட்டு பாலச்சந்திரனும் எழுந்தான். பின் பக்கம் இருந்தக் கூட்டம் விலகாமல் இடித்துக் கொண்டுச் செல்ல வழி விட்டது . நூலகத்தின் இடது பக்கமிருந்த வீதியில் அவள் நடக்கத்துவங்கியது கண்ணில் பட்டது. பெரிய நகரத்தில் தான் இப்படி திருநங்கைகள் பேருந்து இருக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது ஞாபகம் வந்தது. ஊரும் பெரிய நகரமாகி விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை எட்டப் போகிற நகரம் பெரிய நகரமல்லவா. இபோது முதலாளியையும் தொழிலாளி ஆகிற மோச வித்தையைச் செய்யும் பெரிய நகரமல்லவா என்ற நினைப்பு வந்தது. திருநங்கை பார்வையில் படும்படி இல்லாமல் தன் முன்னால் இருந்தக்கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. பிச்சம்பாளையத்திற்கு பேருந்து டிக்கட் எடுத்திருந்தான். திருநங்கையப் பின்தொடர குமார் நகரிலேயே இறங்கிவிட்டான், நெரிசலில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாதவன் போல் பின்வாங்கினான்.இப்போது திருநங்கையையும் தவற விட்டு விட்டான், இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று அவன் அறை நண்பன் கோவிந்திடம் கேட்டிருக்கிறான். “ இந்த ஊர்லே எவ்வளவு வேலைக பனியன் தொழில்லே கெடக்குது. இந்தத் திருநங்கைகெல்லா அதெல்லாம் செய்யலாமில்லையா. எங்கெங்கெல்லாமிருந்து தொழிலாளிக சத்திஸ்கர், ஒடியா , பீகார் பெங்கால்லிருந்தெல்லா இங்க வந்து குவியறாங்க..இவங்களுக்கென்ன கேடு ..பிச்சையெடுக்கறாளுக” “ பிச்சையெடுக்கறானுகங்கறைதையும் சேர்த்துக்க “ “ ஆமாம. இந்தத் திருநங்கைகளும் எங்கிருந்தெல்லாமோ இங்க வந்து குவியறாங்க அவங்களுக்குப் புடிச்சது பிசையெடுக்கறதும் செக்ஸும்தான்... அதெ வுட மாட்டாங்க. சிரமப்பட்டு பிச்சையெடுத்தாலும் ஒரு தொழிலுக்குக்குன்னு போக மாட்டாங்க . அவங்க ருசி அதிலெ. அவங்களெ நானும் ருசி பாக்கணும் “ நெரிசலில் மிதிபட்டது போல் பலர் கடந்து சென்றார்கள். பருத்த சதைகளைக் கொண்ட மனிதன் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு சிக்னலைக்கடக்க முற்பட்டதில் அவன் சற்றே பின் தங்கி விட்டான். வியர்வை நாற்றம் இன்னும் கொஞ்சம் தள்ளிபோகச் செய்தது. காலுக்குப் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையிலிருந்து அந்த வாசம் வந்திருக்கலாமா என்ற சந்தேகம் வந்தது.. தலையைத் ரேவதி மருத்துவமனை வீதியில் திருப்பிய போது முழு முதுகும் தெரிய போய்க்கொண்டிருந்தவள் ஒரு திருநங்கையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முந்தின திருநங்கையைப்போலவே பரந்த முதுகு. ஆனால் ஜாக்கெட்டின் நிறம் வேறானதாக இருந்ததை நிச்சயப்படுத்திக் கொண்டான் . வேறொரு திருநங்கைதான் .. இவ்வள்வு பெண்கள் நடமாடும் போது ஒரு திருநங்கை அவனின் கண்களில் பட்டு விட்டது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவனின் நடை விரசலானது. அந்தத் திருநங்கைக்கு இணையாக நடக்க ஆரம்பித்ததும் முகப்பூச்சின் வாசத்தை உள்ளிழுத்துக்கொண்டான். அவளின் முகத்தில் இரண்டு, மூன்றடுக்காய் பவுடர் அடர்த்தியாக இருந்த்து . அவளிடமிருந்த ஏதோவகையான செண்ட் வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. அவள் குறுக்குச் சந்தொன்றில் சற்று தூரம் நடந்தவள் திரும்பி நின்றாள். “ என்ன வர்றியா “ ஒரு வகைப்படபடப்பு உடம்பை ஆக்கிரமித்துக் கொள்ள அவனும் உம் என்றான். கோவிந்த் சொன்ன ருசி பார்க்கிற ஆசை அவனுள் வந்து விட்டது. ‘’ செரி.. பின்னால வா “ அவனும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டான். “ பசிக்குது ... சாப்புட்டர்லாமா “ “’ ஓ..” திருநங்கையுடன் உணவு விடுதியில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா . யாராவது கேள்வி கேட்பார்களா. தெரிந்தவர்கள் கண்களில் பட்டால் பதில் சொல்ல திணறவேண்டியிருக்கும் .மலேசியா கொத்துப் புரோட்டா குமார் நகரில் கிடைக்கும் ஒரு கடை ஞாபகம் வந்த்து. அவனுக்கு முட்டைப் பரோட்டா எப்போதும் பிடிக்கும். நாக்கில் எச்சில் ஊறியது ..முட்டைப்பரோட்டாவா, இல்லை திருநங்கையின் நெருக்கமா . ஊறும் எச்சிலுக்குக் காரணம் என்பது ஞாபகம் வந்தது. ” வேண்டா. வேலையை முடிச்சிட்டு அப்புறம் சாப்புட்டுக்கறன். அதுவரைக்கும் பசியெ ஒதுக்கிர வேண்டியதுதா “ திருநங்கையுடன் நடமாடுவதை எந்த மனிதரும் பார்த்துவிடக்கூடாது. தனக்குத் தெரிந்தவர்களாய் இருந்து விடக்கூடாது. அவனின் இஷ்டதெய்வமான வடவள்ளி பெருமாளை நினைத்துக் கொண்டான்.அப்படி தெரிந்தவர்கள் இருந்தாலும் என்னவாகிவிடப்போகிறது. உள்ளூர்காரர்கள் என்றால் சுஜுபிதான் . உறவினர்கள் யாரும் தென்பட்டு விடக்கூடாது. இவ்வளவு தூரத்தில் உறவினர்கள் யார் வரப்போகிறார்கள். கண்ணீல் பட்டாலும் என்ன பொய் சாதாரணமானதுதான். விரைசலானது அவனின் நடையும் திருநங்கையின் நடையுடன் சேர்த்து. வாகனங்களின் இரைச்சல் நிறைந்திருந்தது.. அந்தக்கட்டிடத்தின் உள்பகுதி இருட்டைக்காண்பித்துக் கொண்டிருந்தது.அவள் சற்று உள்ளே சென்றதும் அவள் இருட்டுக்குள் மறைந்து விட்டது தெரிந்தது. சற்றே சிதிலமடைந்தக் கதவு மூடிக்கொண்டிருந்தது . ” சீக்கிரம் வா.. “ ” தெரிஞ்ச் எடமா “ “ முந்தியே வந்த எடந்தா. பழைய பனியன் கம்பனி . நம்ம வசந்தமாளிகை இப்போ “ அவன் வசிக்கும் பகுதியின் பிரதான சாலையில் ஒரு பனியன் கம்பனி மூடப்பட்டுக்கிடந்து பிறகு டாஸ்மாக் பாராக மாறிவிட்டது ஞாபகம் வந்தது.இதுபோல் நிறைய பனியன் கம்பனிகள் ஜி எஸ் டி மாயத்தால் மூடப்பட்டு கிடந்தன. விரைத்துக் கொண்டிருந்த தன் குறி இன்னொரு குறியோடு மோதுவதாக இருந்தது. திருநங்கையின் கையா. அவளின் கீழ்ப்புற சேலை முழுவதும் உயர்ந்திருந்தது. இன்னொரு ஆண் குறிதான். அவன் ஓரடி பின்னால் நகர்ந்தான். “ ஒன்பதுதா நான். பயப்படாதே “ “ இல்லே ..இதென்ன ..” “ என்ன பண்ணி திருப்தி பண்றது ..” ““ இல்லே ..இதென்ன ..” “ அதிருக்கட்டும். வாய்லே வெச்சி அவுட் பண்ண்ட்டுமா. கை போடட்டுமா ..பயப்படாதே ” “ இல்லே ..இதென்ன ..” “ ஒன்பதுதா நான். பயப்படாதேன்னு சொன்னேனில்லியா “ “ இல்லே ..இதென்ன .. நீ ஆம்பளையா. பொம்பளெ வேஷம் போட்டிருக்கியா ..” “ ஒன்பதுதா நான். பயப்படாதே. ஆண் குறியெ அறுக்காமெ காலம் தள்ளிட்டிருக்கன் . எங்கள்லே இது மாதிரியும் சில பேர் இருக்கம் “ அவன் விலகுவதைப்பார்த்து அவனைப்பிடிக்க வலது கைய நீட்டினாள். அவன் அவசரமாக பேண்டில் கைவிட்டு முன்பே பர்சிலிருந்து எடுத்து மேலோட்டமாகச் செருகியிருந்த பணத்தை எடுத்து நீட்டினான். “ போறன்..” “ வேண்டா ..” “ பசிக்குதுன்னு சொன்னே ” “ பசிக்குதுதா . ஆனா வேண்டா.. தொழில் பண்ணாமெ பிச்சையெடுக்கறது எனக்குப் புடிக்காது “ சொந்தப்படைபென்று உறுதியளிக்கிறேன். வேறு எங்கும் பிரசுரமாகவில்லை. Subrabharathimanian.. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur : blog: www.rpsubrabharathimanian.blogspot.com : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003
• அல்லிக்கேணி.. ராம்ஜி _ சுப்ரபாரதிமணியன் நாவல் என்று நினைத்துப்படிக்க ஆரம்பித்தேன். வடமொழிச்சொற்கள், அதீத ஆங்கிலச் சொற்கள் அப்படியே என்ற உறுத்தல்களைத் தவிர்த்து விட்டு , எளிமையான நடை என்று வந்த போது முகநூல் குறிப்புகள்தான் என்றறிந்து குறைகளை மனதில் கொள்ளாமல் சுலபமாகப்படிக்க முடிந்தது..நாவலாக்கிக் கொள்ளலாம் என்றும் மனது சொன்னது .சுவாரஸ்யம் இருந்தது சம்பவங்களில் ..ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி சம்பவங்கள் வாய்த்து விடும் அதுவும் சென்னை திருவல்லிக்கேணிக்காரர்கள், பிராமணர்கள் என்றால் இவ்வகை சமையல், சாப்பாடு, கோயில் , சென்னை தொழில் அனுபவச் சமாச்சாரங்கள் என்றால் குறைவிருக்காது. அப்படி வாசிப்பில் குறை வைக்காத சுவாரஸ்யமான சம்பவங்கள், ஒவ்வொரு அத்யாயமுடிவிலும் கவித்துவமானதாய் ஒரு சிறு விசயம்.அல்லது சிறு சஸ்பென்ஸ் எல்லாம் சேர்ந்து திருப்பூர் டு உடுமலை 2 மணி நேரப் பேருந்து பயணத்திலேயே நூலை முடிக்க முடிந்தது ஆசுவாசம் ( அருந்ததி ராயின் The ministry of Utmost Happiness- தமிழ்ப்பதிப்பு பெருமகிழ்வின் பேரவை - நூலை எடுத்து 15 நாட்களாகின்றன். அதன் இறுக்கத்தால் ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படித்து விட்டு மூடிவிடுகிறேன் . அவ்வளவு சிரமம் கூட ). டெலிபோன் முந்நாள் ஊழியர் என்ற வகையில் 78ம் பக்க வீட்டிற்கு டெலிபோன் வந்த சாமாச்சாரம், ரத்னா கபே சமாச்சாரங்கள் 228 பக்கம், துக்கங்கள் ஊசிப்பட்டாசு போல் வெடிக்காது என்றப் பட்டியல்கள் 237 ம்பக்கம் என்று பல பக்கங்கள். மனக்கோலங்கள், சித்திரங்கள், மனித மன விசித்திரங்களை பல்வேறு தொழில் அனுபவங்கள்,திரைப்பட தயாரிப்பு உட்பட பல துறை அனுபவங்களின் விவரிப்பில் சுவாரஸ்யத்துடன் அமைந்திருப்பது வாசகனுக்கு ஒரு நல் பயன்தான் அதுவும் 250 பக்க நேர்த்தியான நூலை 200 ரூபாய்க்கு பெற முடிவதும் இலக்கியப் பயன்தான் . வாழ்த்துக்கள் முதல் எழுத்து நூல் வடிவத்திற்கும். ( எழுத்துப் பிரசுரம் சென்னை )
உடுமலை நாராயண கவி இலக்கிய விருது இவ்வாண்டுக்கான உடுமலை நாராயண கவி இலக்கிய விருது எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு உடுமலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். இதுவரை உடுமலை நாராயண கவி இலக்கிய விருது பெற்றோர் சுளுந்தி நாவலாசிரியர் முத்து நாகு, கீரனூர் ஜாகீர்ராஜா, கவிஞர் ஆண்டன் பென்னி, மேற்குத்தொடர்ச்சிமலை இயக்குனர் லெனின் பாரதி, பேராண்மை ஒளிப்பதிவாளர் ஈஸ்வர் போன்றோர் உடுமலை நாராயண கவி இலக்கிய விருதை மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் )வழங்கினார். உடுமலை ஆய்வு நடுவத்தைச்சார்ந்த குமாரராஜா, அருட்செல்வன், பேரா ஜெயசிங், பேரா. கிருஷ்ணன், பேரா. கற்பகவள்ளி,சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றி மேனாள் பல்கலைக்கழகத்துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி ( படுகளம், திருமூர்த்திமலை, நெடுஞ்சாலை விளக்குகள் நாவல்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட அறிவியல் தமிழ் நூல்கள் எழுதியவர் ), கிருஷ்ணன்( முதல்வர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கலூரி), வேலுமணி ( தமிழ்த்துறைத்தலைவர் உடுமலை ஆகியோர் பேசினர். எழுத்தாளர் குமாரராஜா வரவேற்பு நல்கினார் 1 'சங்க கால வரலாற்றில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது, 'தினமலர்' ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுகள்,'' என சென்னை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கல்வியாளர்கள், படைப்பாளர்கள் சார்பில், எழுத்தாளர்சுப்ரபாரதிமணியன் மற்றும் 'உடுமலை வரலாறு' நுால் வெளியிட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினருக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.சென்னை அண்ணா பல்கலை மற்றும் மதுரை பல்கலை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி தலைமை வகித்து பேசியதாவது: சமூகத்தின் கண்ணாடியாக இலக்கியங்கள் அமைகின்றன. வரலாறு என்பது, பல ஆண்டுகளாக இருப்பதை உண்மையாக, ஆதாரங்களுடன் எழுத வேண்டும். எழுத்து, பொருள் மாறக்கூடாது. இலக்கியம் கற்பனையாக இருக்கலாம். தங்கத்தை கட்டியாக பயன்படுத்த முடியாது; ஆபரணமாக மாற்றினால் பயன்படுத்தலாம். அது போல், இலக்கியம் இருக்கலாம்.வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால், முதலில் அங்கீகாரம் கிடைக்காது. 'தினமலர்' ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கொடைக்கானலில் அமர்ந்து சிறிய நுால் படித்து, பழங்கால நாணயங்கள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேடி, தேடி ஆய்வு செய்து, உண்மையை வெளிக்கொண்டு வந்தார்.உலகம் முழுவதும் நாணயங்களை தேடினார். அமராவதி ஆற்றங்கரை நாகரிகத்தில் கிடைத்த நாணயங்களையும் ஆய்வு செய்துள்ளார். பாண்டியர், சேரர், சோழர் மற்றும் சங்க கால வரலாறு குறித்து பல ஆய்வுகள் மூலம்நிரூபித்தார்.நாணயவியல் ஆய்வில் துணிந்து, கடும் முயற்சியால் சிறப்பான வரலாற்றை வெளிக்கொண்டு வந்தார். முதலில் ஏற்றுக்கொள்ளாதவர்கள், நாணயவியலின் தந்தையாக ஏற்றுக்கொண்டனர். வரலாற்று ஆய்வாளர்கள் தனி மரியாதை கொடுத்தனர்.ஏராளமான வரலாற்றுச்சுவடுகள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும் சுப்ரபாரதிமணியன் அவர் வாழும் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களை இலக்கியமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருப்பவர். இந்த வெற்றியை அவரின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளுக்கான வெற்றி எனக்கொள்ளலாம் இவ்வாறு, பொன்னுசாமி பேசினார்.உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தலைவர் குமாரராஜா, வித்யாசாகர் கல்லுாரி முன்னாள் முதல்வர் பொன்னரசனார், முதல்வர் பிரபாகர், உடுமலை அரசுக்கல்லுாரி பேராசிரியர் வேலுமணி, பல்லடம் அரசுக்கல்லுாரி பேராசிரியர் ஜெயசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஏற்புரையாற்றினார்.
சுப்ரபாரதிமணியன் சுற்றுச்சூழல் கவிதை : இடம் இந்த இடம் பிறரின் வருகைக்கென்றிருப்பது தடை செய்யப்படலாம். தடை செய்யப்படுவதற்கு முன் வந்து விட்டுப் போங்களேன் ஒருமுறை. நதிநீரின் தூய்மையும் சாயக்கழிவுகளின் தொடக்கமும் ஒன்று சேரும் இடம் இது. இதற்கப்புறம் நதி சாயக்கழிவுகள் ஓட்டம்தான். இவ்வளவு தூய்மையாய் நீரா … இவ்வளவு சாய கலவையாய் நதியா கணிக்கத் துல்லியமாய் ஓரிடம் இது. நகரத்தில் இருந்து சற்று தொலைவில் தான் தொடங்குகிறது இவ்விடம். இவ்விடத்தில் நிலத்தடி நீரிலிருந்து கிளம்பும் சாயங்களின் வர்ணங்கள் அபரிமிதமானவை .நின்று சலிக்கும் தண்ணீர் லாரிகளின் துருப்பிடித்த தொட்டிகள் .. பிளாஸ்டிக் குடங்களின் வரிசைகளில் வானவில்லின் கலவைகள் . அழுகையாய் பலரின் மெல்லியக்குரல்கள். இதற்கு மத்தியில் புண்ணியத்தலமாய் இந்த இடம் தென்பட்டு விட்டது பலருக்கும் .. இந்த இடமும் பிறரின் வருகைக்கு என்று இருப்பது விரைவில் தடை செய்யப்பட்டு விடலாம் தடை செய்யப்படுவதற்கு முன் வந்து விட்டுப் போங்களேன் ஒருமுறை.. சுப்ரபாரதிமணியன் மந்திரச்சிமிழ் கவிதைத் தொகுப்பு , காவ்யா பதிப்பகம், சென்னை வெளியீடு 2006) .. subrabharathi@gmail.com Fb: Kanavu Subrabharathimanian Tirupur : blog: www.rpsubrabharathimanian.blogspot.com Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 சுப்ரபாரதிமணியன் அவர் வாழும் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களை இலக்கியமாக்கியிருப்பதில் வெற்றி கண்டிருப்பவர். இந்த வெற்றியை அவரின் தொடர்ந்த இலக்கிய முயற்சிகளுக்கான வெற்றி எனக்கொள்ளலாம் இந்த விருது பத்தாயிரம் ரொக்கப்பரிசும் , கேடயமும் கொண்டது
கனவு வெளியீடுகள். * மாயாறு – இரு நெடுங்கவிதைகள் ( சுப்ரபாரதிமணியன் ) ரூ 75 * புலி – மொழிபெயர்ப்புகள். ( சுப்ரபாரதிமணியன் ) ரூ75 * திருப்பூரும் கொரானாவும் – ( யுவராஜ் சம்பத் ) ரூ 100 * எனது முகவரி –மதுராந்தகன் கவிதைகள் ரூ 75 * எச்சரிக்கை செய்யும் பூமி- சிதம்பரம் ரவிச்சந்திரன் சுற்றுச்சூழல்; கட்டுரைகள் ரூ150 * பதினோழு வயதில் –சாக்கோ சிறுகதைகள் ரூ 150 * பால் டம்ளர் – 21தெலுங்கு சிறுகதைகள் ரூ150 : மொழிபெயர்ப்பு : ராஜி ரகுநாதன் * விழிகள் வீசிய வலைகள் –நாமக்கல் நாத கட்டுரைகள் ரூ100 * சேவ் -25 படிக்கற்களும் பூங்காக்களும் நட்சத்திரங்களும்- ரூ 100 * முத்தழகு கவியரசனின் பரிதவிப்பு நாவல் ரூ 125 * பிளிறல்- சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் ரூ 100 * வேலியோரத்து வெள்ளை மலர்கள் – க. ரத்னம் ரூ 75 * பாலில் சர்க்கரை பழுதாகலாமோ- ப.க. பொன்னுசாமி கட்டுரைகள் ரூ80 * நவீனத்துவமும் மார்க்சீயமும் – பி ஆர் ராமானுஜம் ரூ120 * பொய் பேசும் தேசம் – பானுமதி பாஸ்கோ கட்டுரைகள் ரூ150 * தீபனின் கவிதைத் தொகுதி ” சமூகத்தின் அரசியல் பொய்கள் – ரூ 75 * தீர்வு –கே எம் சண்முகம் சிறுகதைகள் ரூ 150 * விற்பனைக்கு: ** காரிகாவனம் தொகுப்பு : சுப்ரபாரதிமணீயன் ரூ 180 – *ஓ.செகந்திராபாத் : சுப்ரபாரதிமணீயன் ரூ 70 * சுப்ரபாரதிமணீயன் கதைகள் 1 ம்பாகம் , 2ம் பாகம் ரூ1000., ரூ 500- * கனவு தொகுப்பு காவ்யா ரூ350 , தனிஇதழ் தொகுப்பு ரூ 500 *சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள் டிஸ்கவரி ரூ350 கனவில் கிடைக்கும் சுப்ரபாரதிமணியனின் நாவல்கள் * மற்றும் சிலர் 1987 * சுடுமணல் 1990 ( மலையாளத்திலும் வெளியாகி உள்ளது ) * சாயத்திரை 1998 ( சிறந்த நாவலுக்கான தமிழ அரசு பரிசு பெற்றது, ஆங்கிலம், கன்னடம், மலையாளம், கன்னடம், இந்தி , வங்காள மொழிகளில் வெளியாகியிருக்கிறது ) * பிணங்களின் முகங்கள் 2003 ( கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் பரிசு பெற்றது.ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * சமையலறைக் கலயங்கள் 2005 -ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது ) * தேனீர் இடைவேளை 2006 ( ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளது ) * ஓடும் நதி 2007 ( என்சிபிஎச்-கலை இலக்கியப் பெருமன்ற விருது பெற்றது) * நீர்த்துளி 2011 ( ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது சிறந்த நாவலுக்கு ) * சப்பரம் ( இந்தியிலும், மலையாளத்திலும் வெளிவந்துள்ளது ) * மாலு ( இந்தியிலும், ஆங்கிலத்திலும் , மலையாளத்திலும் ) * நைரா ( உயிர்மை ) * தறிநாடா ( என்சிபிஎச்) * புத்துமண் ( உயிர்மை ) * கோமணம் ( முன்னேற்றப் பதிப்பகம், கிழக்கு ) மலையாளத்திலும் வெளிவந்துள்ளது * கடவுச்சீட்டு (முன்னேற்றப் பதிப்பகம். , பழனியப்பா ) * ரேகை ( பொன்னுலகம் ,திருப்பூர் ) ஆங்கிலத்தில் .. • Notch Rs 295 • 1098 Rs 295 • Coloured curtain Rs 300 • Sumangali Rs 200 • Migration 2.0 Rs 150
உடுமலை வரலாறு : : சுப்ரபாரதிமணியன் ” ஊரை நினைத்தாரை ஊர் இனிக்கும் “என்பார்கள் அப்படி தனது சொந்த ஊரை பற்றி மிகுந்த சிரமங்கள் உடன் வரலாற்று ஆய்வு மைய உடுமலை நண்பர்கள் இந்த நூலை சிறப்பாக தயாரித்திருக்கிறார்கள் இந்த வரலாற்று நூல் அமைய காரணமாக பல ஆளுமைகள் இருந்தாலும் இந்த சூழல் உருவாக காரணமாக இருந்த பல முக்கிய நபர்கள் பற்றிய அறிமுகங்கள் கூட சிறப்பாகவே செய்யப்பட்டிருக்கின்றன . திவான்பகதூர் ரசாக்காபாத், பெண் கல்வி தந்திட்ட கோவிந்தசாமி, சாதி சமய நல்லிணக்கத்தை போற்றி பாதுகாத்த சோழிய கவுண்டர், சமூக சேவையில் அக்கறை கொண்டு உடுமலையை வளர்த்த காமாட்சி கவுண்டர் ,பழனி கவுண்டர் குடும்பத்தினர் ,.அந்த நகருக்கு தண்ணீர் தந்து தாகம் தீர்த்த வித்யாசாகர் , பல்வேறு கலாச்சார நடவடிக்கைகள் மூலமாக உடுமலை நகரத்துக்கு ஒரு புதிய முகத்தை ஏற்படுத்திய கெங்குசாமி நாயுடு போன்றவர்கள் இதை எழுதுவதற்கான வித்தாக இருந்திருக்கிறார்கள். உடுமலை வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த மறைந்த பேரா.இந்தரஜித் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி உடுமலைப்பேட்டை நூறு ஆண்டு நகராட்சி அளவில் முழுமை பெற்றது ஒட்டி கொண்டுவரப்பட்டது என்று கூட சொல்லலாம். .உடுமலை நகரத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பல உள்ளங்கள் இந்த தொகுப்பு முழுக்க நினைவு கூறப்படுகிறார்கள். இந்த அமைப்பினர் முன்பே உடுமலைப்பேட்டை நகராட்சி நூறு ஆண்டுகள் ஆனதை ஒட்டி “ உடுமலை 100 “என்ற நூலை கொண்டு வந்திருக்கிறார்கள். பல்வேறு கலை இலக்கிய கலாச்சார நடவடிக்கைகளில் இறங்கி தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறார்கள். .பல கலை இலக்கியவாதிகளை அவர்கள் அழைத்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு நவீன இலக்கியவாதிகள் சிலரும் நாம் குறிப்பிடலாம்.. உடுமலை நகராட்சி வரிவிதிப்பு செய்து அதை அரசுக்கு செலுத்தி வளர்த்து உடுமலைப்பேட்டை என்ற சிற்றூரை நகராட்சி அங்கீகாரம் செய்த மனிதர்கள் பலர் அவர்கள் உழைப்பில் நகரம் வளமை பெற்றிருப்பது போலவே ஆன்மீக செயல்கள் சமூக சேவை மூலம் பலர் இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் அந் நகரத்தில் இருக்கும் பல சிலைகளை பார்க்கிற போதெல்லாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள மனம் ஆவலாய் தேடும். அப்படித்தான் இங்கு உள்ள பழைய சேர்மன் கனகராசன் போன்றோர் பற்றிய தகவல்கள் மிக முக்கியமாக சிலைவடிவில் மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலும் உருவாகியுள்ளன. அதேபோல் சாய்ந்த தொல்பொருள் ஆய்வுகள் சார்ந்த பல்வேறு விஷயங்களை தொகுத்துக் கொடுத்து உடுமலை நகரம் பழமையான தொல்பொருள் பொருட்களின் கிடங்காக இருப்பதை காட்டுகிறார்கள் யாரும் இந்த பணியை செய்ய முன்வராததால் நான் என் தோளில் போட்டு செய்கிறேன் என்று தந்தை பெரியார் ஒவ்வொரு பணியும் தானே எடுத்துக் கொண்டு செய்தது போல இந்த வரலாற்றை உருவாக்குவதில் அருள் செல்வன் உட்பட பல உடுமலை வரலாற்று மையம் சார்ந்த பலர் ஈடுபட்டிருந்தார்கள் சரபம் முத்துசாமிக் கவிராயர் ,உடுமலை நாராயணகவி, பெரும்புலவர் நயினார் முகமது போன்ற எழுத்துலக சிற்பிகள் வாழ்ந்த ஊரை அவரைப் பற்றி நல்ல அறிமுகம் கிடைக்கிறது ஆனால் நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருப்பது பெரிய பலவீனமாக இருக்கிறது மைக்ரோ ஹிஸ்டரி எனப்படும் நுணுக்கமான வரலாற்றை எழுதுவது ஒவ்வொரு நகரத்திலுள்ள எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கியமான பணியாக மாறி இருக்கிறது அந்தப் பணியின் அடையாளம்தான் இந்த நூல் . கரிசல்மண் விளைச்சலுக்கு ஏற்றதாகவும் வியாபாரத்திற்கு ஏற்றதாகவும் இருந்ததால் நூற்றுக்கு மேற்பட்ட பஞ்சாலைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருந்து வந்த செய்திகளை பார்க்கும்போது திருப்பூர் பின்னலாடை துறையின் வளர்ச்சிக்கு உடுமலை பெரும்பங்காற்றி இருப்பது தெரிகிறது தன் பெருமை நினைக்காமல் தான் வாழும் மண்ணின் பெருமையை காக்கும் உள்ளங்களை இந்த வரலாற்று மையம் அடையாளம் காட்டும் முக்கிய அம்சமாக இந்நூல் இருக்கிறது. அந்த வகையில் இதில் விடுபடும் உள்ள நவீன இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் மற்றும் சில சரித்திர பூர்வமான செய்திகளை சேர்த்து அடுத்த பதிப்பு கொண்டுவரும் என்று நம்பலாம் மணிமேகலைப் பிரசுரம் சென்னை இதை வெளியிட்டிருக்கிறது பிரதிகளை வரலாற்று ஆய்வு நடுவம் உடுமலைப்பேட்டை அமைப்பில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் ( Rs 500 ..வரலாற்று ஆய்வு மையம், உடுமலைபேட்டை 98420 91244 ) --சுப்ரபாரதிமணியன்
பச்சைப் பதிகம் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)- சுப்ரபாரதிமணியன் தமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதிமணியன் அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம் மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப் பிணைத்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழைமக்கள்தான் என்பதையும் அவரது படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விடத் துல்லியமாக வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது எனலாம்.c இயற்கையுடனும்மற்ற உயிரினங்களுடனும் நமக்கு இருந்த மரபுப்பூர்வமான பிணைப்பு இப்போது துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இயற்கையினின்று நாம் அந்நியப்பட்டுப் போய்விட்டோம். அறுந்து போன இந்தப் பிணைப்பு பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டால் சூழலியல் சீர்கேட்டிற்கும், வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரியத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை மக்கள் உணர்ந்து செயல்பட முடியும். ஆனால் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சீரழிவு பற்றிய கரிசனம் உருவாகவில்லை. அதற்கு ஒரு காரணம் தமிழில் இந்தப் பொருள் சார்ந்த நூல்கள் மிகவும் குறைவு. ஆகையால்தான் மக்கள் சார்ந்த இயக்கம் ஒன்றும் இங்கு பெரிதாக உருவாகவில்லை (கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு விதிவிலக்கு) இந்தப் பின்புலத்தில்தான் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகளை நாம் பார்க்க வேண்டும். .சுற்றுச்சுழல் பற்றிய ஒரு பரந்த விழிப்பிற்கு இந்தக் கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம்இல்லை.- தியடோர் பாஸ்கரன் (ரூ100 வாசகசாலை , சென்னை வெளியீடு )
சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் - “ அந்நியர்கள் “ என்ற நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 ). . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார். ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது பெரும் நகரங்களுக்கு வேலைகாரணமாக இடம் பெயர்ந்து வாழும் வடமாநிலத்தொழிலாளர்களின் வாழ்வியலின் ஒரு பகுதியாய் ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த நாவல் 2020 ஆம் ஆண்டுக்கான எழுத்து இலக்கிய அறக்கட்டளை - திருமதி சௌந்திரா கைலாசம் இலக்கியப்பரிசு பெற்ற நாவல் ( வெளியீடு : எழுத்து & கவிதா, சென்னை ரூ 250 ) செய்தி: மதுராந்தகன் ,( கனவு இலக்கிய வட்டத்திற்காக ) மதுராந்தகன் 77089 89639 முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602
கி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி சுப்ரபாரதி மணியன் கவிஞர் மீரா அவர்கள் நடத்திய அன்னம் பதிப்பகத்தின் மூலம் கி ராஜநாராயணன் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் ஆரம்பகால புத்தகங்களை கவிஞர் மீரா வெளியிட்டதால் அவரின் பதிப்பக வெளியீடுகள் என் கவனத்தில் வந்தன .எதார்த்தமான அனுபவங்கள், வட்டார மொழியில் சொல்வது, பேச்சு மொழியை எழுத்து மொழியாக மாற்றிய வித்தை இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, அந்த காலகட்டத்தில் ஜெயந்தன், கி ராஜநாராயணன் இருவரும் என் உரைநடையின் முன்னோடிகளாக அமைந்தார்கள் ,.தொடர்ந்து அவரின் படைப்புகளை வாசித்து வந்தேன் என் முதல் சிறுகதை தொகுப்பை அவருக்கு அனுப்பி வைத்தேன். “அப்பா “ என்ற சிறுகதை தொகுப்பு பற்றி அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ” உங்கள் சிறுகதைகள் பெரும்பாலும் குடும்பத்தில் உங்களின் அனுபவங்களாய் அமைந்திருக்கின்றன. சுய அனுபவங்களை கதைகளாக எழுதுவது சிறந்த வித்தை. சிறந்த படைப்பு .ஆனால் அதை மீறி மற்றவர்களின் அனுபவங்களை வசீகரித்துக் கொண்டு எழுதுவது உங்களின் படைப்பு எல்லையை விரிவாக்கும் . இந்த தொகுப்பில் சுஜாதா முன்னுரை சுவாரஸ்யமாக இருக்கிறது ஆனால் அவர் இந்த தொகுப்பில் இருக்கும் ” ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் ”என்ற சிறுகதை, சிறுகதை வடிவத்தில் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். வழக்கமான வடிவத்தை மீறி செயல்படுவதால் எழுத்து புதுப் படைப்பாகும் .கலை என்பதே வடிவத்தை மீறுவதாகும். அந்த மீறல் அந்த சிறுகதைகள் இருக்கிறது. சுஜாதா அந்தக்கதையை ஏதோ அசைவம் சாப்பிடுவது, கோழிக்கறி சாப்பிடுவது போன்ற விஷயங்களின் தொகுப்பாக தான் பார்த்திருக்கிறார் .ஆனால் அதை மீறி அந்த இனக்குழு சார்ந்த உணவு பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் இவையெல்லாம் அதில் இருப்பதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார். கலை என்பதும் இலக்கிய படைப்பு என்பதும் வடிவத்தையும் மரபையும் மீறுதலே ”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 2002 இல் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”ஆண்டுதோறும் என் பிறந்தநாள் அன்று ஒரு சிற்றிதழுக்கு பரிசு தொகை வழங்கி கௌரவிப்பது வழக்கம் இந்தாண்டு தாங்கள் நடத்திவரும் கனவு இதழுக்கு கரிசல் கட்டளை விருது அளிக்கிறோம் ” என்ற தகவலை தெரிவித்து இருந்தார். நான் அந்த விழாவின் பொருட்டு பாண்டிச்சேரி சென்ற போது அவரை முதன் முறையாக சந்தித்தேன் . ” கரிசல் கட்டளை விருது ” விழாவிற்கு முதல் நாள் இரவு அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பல்வேறு விசாரிப்புகள் என் படைப்புகளைப் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள். கனவு இதழ் தொடக்கம் பற்றி பேசுங்கள் என்று சொன்னார். கேட்டுக்கொண்டார் உங்கள் வீட்டு மொழி என்ன கன்னடம் அப்படி என்றால் அது தானே தாய் மொழி இல்லை நான் பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில் தான். தமிழ் தான் படித்தேன் வீட்டில் பேசுவது தானே தாய் மொழி இல்லை . அது வீட்டு மொழி .தாய் மொழி தமிழ் என்றேன் அது பற்றி சிறு சிறு சர்ச்சைகள்.உரையாடல்கள் சரி.. தமிழ்தான் தாய் மொழி என்பது பற்றிய உங்கள் தீர்மானம் நல்லதே என்றார். அவர் அறிந்த கன்னட நண்பர்கள், அவர்களின் வீட்டுச்சூழல் மற்றும் கன்னட மொழி சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவரின் தாய்மொழியான தெலுங்கு பற்றியும் தெலுங்கு மக்கள் பற்றியும் அவருடைய படைப்புகளில் தெலுங்கு மக்களுடைய நிலையைப் பற்றி சொல்லி இருப்பதை நினைவுபடுத்தினார் .தொடர்ந்த அவரின் பேச்சில் தெலுங்கு மொழி சார்ந்த ஈடுபாடும் அந்த சாதி சார்ந்த அபிமானமும் தென்பட்டது . அடுத்த நாள் அவர்கள் வீட்டு மாடியில் ”கரிசல் கட்டளை விருது ”கனவு இதழுக்கு வழங்கப்பட்டது. பாண்டிச்சேரியின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் .அப்போது அவர் சிறுபத்திரிக்கை என்பது அவரின் படைப்புகளின் பெரிய கலங்கரை விளக்கம் ஆகும் . ஏணியாகவும் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டார். அவரின் படைப்புகள் சிற்றிதழ்களில் வந்தே கவனம் பெற்றதைச் சொன்னார்.கனவு இதழின் செயல்பாடுகள் பற்றியும் பாராட்டினார் அதன் பின்னால் பாண்டிச்சேரிக்கு செல்கிறபோது அவ்வப்போது அவரை சென்று சந்தித்தேன். அவருக்கு எழுத்தாளர்களுடன் உரையாடலும் அதற்கான சூழலும் அக்கறையும் மகிழ்ச்சி தந்திருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். மூன்று மாதங்களுக்கு முன்னாள் நண்பர் யுகபாரதியின் வீட்டு திருமணத்திற்கு பாண்டிச்சேரி சென்று நண்பர் பாரதி வசந்தன் அவர்களுடன் அவர் வீட்டை தேடி புறப்பட்டோம். அவர் மருத்துவமனையில் 15 நாட்களுக்கு மேலாக இருக்கிறார் ஆனால் இப்போது வீடு திரும்பி இருப்பார் என்ற நண்பர் ஒருவரின் தகவலோடு லாஸ்பேட் சென்றோம். பாரதி வசந்தன் அந்த பகுதிக்கு சமீபமாய் செல்லாததால் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. அதே பகுதியைச் சார்ந்த இரண்டு இளம்பெண்களிடம் எழுத்தாளர் பற்றி சொன்னோம் ,அவர்களுக்கு தெரியவில்லை என்றார்கள்.பிறகு நாங்களே வீட்டை கண்டுபிடித்து அவர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதை தெரிந்து கொண்டோம். நான் கொண்டு சென்ற புத்தகங்களை அவர் வீட்டுக்குள் போட்டுவிட்டு ஒரு கடித குறிப்பையும் இணைத்து விட்டு திரும்பினோம் .அப்போது நாங்கள் ராஜநாராயணன் என்ற எழுத்தாளர் வீடு என்று கேட்டு விசாரித்து அந்த இரு இளம்பெண்கள் தென்பட்டார்கள். தாத்தான்னு சொல்லிருந்தா எல்லாருக்குமே தெரியுமே .எங்களுக்கு எல்லாம் அவர் தாத்தாதான் என்று அந்த பெண்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள். எழுத்தாளர்களுக்கு அவர் நைனா, அண்ணாச்சி, அப்பா.. இந்த இளம் பெண்களுக்கு அவர் தாத்தாவாக இருந்திருக்கிறார் .இதுபோன்ற நேசம் , அன்புப்பிணைப்பு சார்ந்த உறவுகளை அவர் எல்லோரிடமும் வைத்திருந்தார் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன் இந்த நேசத்தை அவரை சந்திக்கும் போதெல்லாம் நானும் உணர்ந்திருக்கிறேன் அந்த உணர்வை மறுபடியும் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. நூறு ஆண்டுகள் இருந்து ஞானபீடம், நோபல் பரிசு போன்ற விருதுகளுடன் அவர் வாழ்க்கை நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப மனது சொல்லிக் கொள்கிறதுAR T - SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 09486101003 ( AGS ( கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் ஐயா கி. ராஜநாராயணன் அவர்களுக்காக BSNL தமிழருவி குழு நண்பர்கள் இணையவழி புகழஞ்சலிக் கூட்டத்தில் பேசியது )
மு.முருகேசும், சுப்ரபாரதிமணியனும் ‘குரு அரவிந்தன் வாசகர்’ வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டியில் பங்குபற்றியமைக்காக வாசகர் வட்டத்தின் சார்பில் எமது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம். அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ், டென்மார்க், கனடா, அமெரிக்கா ஆகிய 14 நாடுகளில் இருந்து திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. முதற்சுற்றில் விதிமுறைகளை மீறிய கட்டுரைகள் தவிர்க்கப்பட்டு 142 கட்டுரைகள் தெரிவாகின. இரண்டாவது சுற்றில் கட்டுரையாளர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டு இலக்கமிடப்பட்டு, நடுவர்களால் தனித்தனியாகப் புள்ளிகள் இடப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில் முதல் 20 கட்டுரைகள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன. புள்ளிகளின் அடிப்படையில் முதல் 5 கதைகளும் தெரிவு செய்யப்பட்டன. அதன்பின் ஏனைய 15 கதைகளுக்கும் பாராட்டுப் பரிசுகள் (தலா 5,000 இலங்கை ரூபாய்கள்) கிடைத்திருக்கின்றன. பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன. இதைவிட நிர்வாகக்குழுவின் ஆலோசனையின்படி இளைய தலைமுறையினர், மாணவ, மாணவிகள் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மேலதிகமாகப் 10 பாராட்டுப்பரிசுகள் (தலா 5,000 இலங்கை ரூபாய்கள்) அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. இவர்களின் பெயர்களும் அகரவரிசையில் இருக்கின்றன. வாசகர் வட்டத்தின் சார்பாக பங்குபற்றிய, பரிசுபெற்ற அனைவருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பரிசு பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும். அடுத்த வருடம் மீண்டும் இது போன்ற ஒரு போட்டியில் சந்திப்போம். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல, காலம் பதில் சொல்லும் என்பதைப் புரிந்து கொண்டு, தயாராக இருங்கள். நன்றி. குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய திறனாய்வுப் போட்டி 2021 முடிவுகள். 1வது பரிசு: 25,000 இலங்கை ரூபாய்கள் நரேஸ் நியூட்டன். த. கழுபோவிலை, கொழும்பு, இலங்கை 2வது பரிசு: 20,000 இலங்கை ரூபாய்கள் சிவனேஸ் ரஞ்சிதா. கெக்கிராவ, இலங்கை 3வது பரிசு: 15,000 இலங்கை ரூபாய்கள் முருகேஷ். மு. வந்தவாசி, தமிழ்நாடு 4வது பரிசு: 10,000 இலங்கை ரூபாய்கள் ஸ்ரீகந்தநேஷன்.ஆ.பெ. யாழ்ப்பாணம், இலங்கை 5வது பரிசு: 7,500 இலங்கை ரூபாய்கள் சுப்ரபாரதிமணியன்.ப. திருப்பூர், தமிழ்நாடு 15 ஆறுதல் பரிசுகள் தலா 5,000 இலங்கை ரூபாய்கள். பெயர்கள் அகர வரிசையில் இருக்கின்றன. அனுராதா பாக்கியராஜா. வெள்ளவத்தை, இலங்கை. முனைவர் சகோ. ஜா. அருள் சுனிலா. பெரியகுளம், தேனி, தமிழ்நாடு. மு. இப்றாகீம் பாத்திமா றுஸ்தா. காத்தான்குடி, இலங்கை. கிறகறி பஞ்சரத்தினம் வேதநாயகம். வார்விக்ஷயர், றக்பி, ஐக்கியஇராச்சியம். மணி. க. மேற்கு மாம்பலம், சென்னை- 600 033. தமிழ்நாடு மேகநாதன். பெ. போடி நாயக்கனூர், தேனி மாவட்டம், தமிழ்நாடு. முஹம்மது ஹனிபா முஹம்மது ஷர்பான். ஓட்டமாவடி, இலங்கை. நளாயினி நந்தகுமார். மெல்பேர்ன், அவுஸ்ரேலியா. பூமணி. க. செஞ்சி தாலுகா, விழுப்புரம், தமிழ்நாடு. பூர்ணிமா. சா. நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு. பர்வின் பானு. எஸ். தேனாம்பேட்டை, சென்னை, தமிழ்நாடு. துடுப்பதி ரகுநாதன் டி. எஸ். கோயமுத்தூர்-36 தமிழ்நாடு. சக்திதாசன் கனகசபாபதி. 4390 ஏஐPPநுசுழுனுஇ டென்மார்க் சரளா முருகையன். பென்சினர் காலனி, திருச்சி-23 தமிழ்நாடு. தங்கராசா செல்வகுமார். குப்பிழான் தெற்கு, யாழ்ப்பாணம், இலங்கை. இளையதலைமுறை மாணவ, மாணவிகளுக்கான 10 பாராட்டுப் பரிசுகள் தலா 5000 இலங்கை ரூபாய்கள். பெயர்கள் அகரவரிசையில் இருக்கின்றன. அருச்சனா சித்திவினாயகம். ரொறன்ரோ கனடா. தேவரூபா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு. கிருத்திக்கா. எஸ். முனிச்சாலை, மதுரை தமிழ்நாடு மோனிஷா நாகராஜ். வடுகப்பட்டி, தமிழ்நாடு. நிறோஜினி வரதராஜன். வரணி வடக்கு, இலங்கை. றுவிங்கா ஸ்ரீ. மிசசாகா, கனடா. சக்தயா சாம்பவி முகுந்தன். ஸ்காபரோ, கனடா. ஸ்ரீசங்கர் அருநோதன். மட்டக்களப்பு, இலங்கை. திவாணி கந்தசாமி. தவசிக்குளம். வவுனியா, இலங்கை. றிசா ஜேசுதாசன் ரொறன்ரோ, கனடா. சர்வதேச ரீதியாகக் கனடாவில் இருந்து நடந்த முதலாவது திறனாய்வுப் போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றி. 14 நாடுகளில் இருந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திறனாய்வுக் கட்டுரைகள் வந்திருந்தன. இறுதிச் சுற்றில் சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன், எழுத்தாளர் கே. எஸ். சுதாகர், கவிஞர் சரேஸ் அகணி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினார்கள். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. பரிசு பெற்றவர்களுக்குக் காலக்கிரமத்தில் பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்பபடும். இந்தப் போட்டியை நடத்த அனுமதி தந்த எழுத்தாளர் குரு அரவிந்தன் அண்ணாவிற்கும், நடுவர்களுக்கும், மிகவும் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் வாசகர்வட்டத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த வருடம் இதே போன்ற ஒரு போட்டியில் மீண்டும் சந்திப்போம். தயாராக இருங்கள், நன்றி. மேலதிக விபரங்களுக்கு: சுலோச்சனா அருண் செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம். Kuru Aravinthan Fanclub ...