சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 29 நவம்பர், 2015

நீர்த்துளி
சுப்ரபாரதிமணியன்   நாவல்
----------------------------------------

      நீர்த்துளி நாவல் ஆசிரியரின் 36ஆவது நூல். சொல்ல முடியாத உறவு முறையை மிக இலாவகமாகச் சொல்லி அதிலிருந்து நம் வாழ்வின் நெறிமுறைகள் மாறக்கூடாது என்பதற்காக வெகுசாமர்த்தியமான முடிவினை எடுக்கும் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் போல மிக சிக்கலான முடிச்சினைக் கூட மிக சாமர்த்தியமாக அவிழ்த்திருக்கிறார் ஆசிரியர். .
      தன்னை சந்தேகப்படும் கணவன் சுந்தர வடிவேலுவை பிரிந்து வாழும் கலா. தன் குழந்தைகளையும் பிரிய நேரிடுகிறது. தன் கணவனிடம் விவாகரத்திற்காக காத்திருக்கிறாள். திருப்பூர் சாயப்பட்டறையை மையமாக வைத்த கதை. நாயகி கலாவும், நாயகன் லிங்கனும் கம்பெனியிலேயே வேலைச் செய்கிறார்கள். சாயநீர் விவசாய நிலத்தினை பாழ்படுத்துவதால் சாயப்பட்டறை மூடப்படுகிறது. இந்த கடினமான சூழலில் வாழும் இவர்களின் முறையற்ற வாழ்க்கை. இருவரிடம் அன்பு, காதல் குறைவு. ஆனால் காமம் மட்டுமே அதிகமாக இருக்கும். வறட்சியான வாழ்க்கையை வார்த்தைகளால் படம் எடுத்திருக்கிறார். நாயகனுக்கு அறிவுரை வழங்கும் ஜேக்கப் நல்ல நண்பர். நல்ல நண்பர்களால் தான் மனம் சிதைவுறாமல் வாழ முடியும். வாடகை போர்ஷனில் ஆரம்பிக்கப்படும் வாழ்க்கை, எத்தனை கேள்விகள்எத்தனை மறைவுகள், எத்தனை அவமானங்கள் இவற்றையும் தாண்டி பணம். இவற்றிற்கு மத்தியில் இவர்களின் காமம் மட்டுமே மிகுதியாக தென்படும் நிலை இல்லாத வாழ்க்கையை ஒவ்வொரு காட்சியிலும் வடித்துள்ளார் ஆசிரியர்.
      மூன்று மதங்களின் பெருமைகளைப் பற்றியும், அவற்றை பின்பற்றும் வழிமுறைகளை தனது சிறந்த சேகரிப்பால் வெளிப்படுத்துகிறார். பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய தாக்கத்தையும் சமுதாய விழிப்புணர்வோடு தந்திருக்கிறார். பணம் வாழ்க்கையின் அங்கம் என்பதை சாயத்தொழிற்சாலைகள் மூடலுக்குப்பின் வரும் தற்கொலை சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். இதேநிலைதான் புதுவை பஞ்சாலை மூடலுக்கு பின் கடன் தொல்லையால் கொத்து கொத்தான சில குடும்பங்களில் தற்கொலை சம்பவம். மிகவும் வருந்ததக்க காலம் அது.
      பக்கம் 142-ல் உள்ள குறுஞ் செய்திகள் ரசிக்கத் தக்கன. பல இடங்களின் விலங்குகளின் மீது உள்ள இரக்க உணர்வை வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். உதாரணத்திற்கு நத்தை ஓட்டை சொல்லலாம். முதல் காட்சியில் இடம் பெரும் மன நல மருத்துவமனை காட்சி நம்மை ஆர்வம் கூட்டி படிக்கத் தூண்டுகிறது. முதலாவது காட்சி நாற்பத்து நான்காவது காட்சியுடன் தொடர்பு கொள்ளும் விதமாக ஆசிரியர் கோர்வையுடன் காட்சியை நகர்த்தியுள்ளார்.
      எதிர்காலத்தை நினைவில் கொள்ளாமல் நிகழ்காலத்தை பற்றி மட்டும் கருதி ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் மூடல் பல மக்களின் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி விட்டகதை நீர்த்துளி.

- சி. இராஜேஸ்வரி

(   விலை: ரூ. 160, பக்கங்கள்:208;   வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600 018. தொலைபேசி: 91-44-24993448  )
சுப்ரபாரதிமணியனின் " திரைவெளி

                 திரைப்பட நூல்


 "ஒளிப்பதிவாளர் செழியன்
----------------------------------------
-----------------------------------------------
சிறந்த சினிமா அறிமுகம் : திரைவெளி
------------------------------------------------
-உலகத் திரைப்படங்கள் மற்றும் பிறமொழி இந்தியத் திரைப்படங்கள் குறித்த செய்திகளை விளக்கமாகக் கூறும் திரைப்பட நூல்.
-----------------------------------------------------------------------------------------------
நல்ல படங்களைத் தேர்வு செய்வதற்கும் அதன் கதைத்தளம், நுட்பம், அரசியல் சார்ந்த பின்புலங்களை அறிந்து கொள்வதற்கும் பரவலான அறிமுகம் தேவைப்படுகிறது. அந்த அக்கறையுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட ஒர் பார்வையாளரின் குறிப்புகளென " திரைவெளி "வந்திருக்கிறது.
செம்பேன் உஸ்மான் என்கிற ஆப்ரிக்க இயக்குநரில் இருந்து ஆலிவர்ஸ்டோன் என்கிற அமெரிக்க இயக்குனர் வரை அரிதான படங்களைப் பேசும் இந்த நூல் "ஸ்ரீ கனகலெட்சுமி ரெக்கார்ட் டான்ஸ் குரூப்" என்னும் சுவாரஸ்யமான தெலுங்கு நகைச்சுவைப் படம் குறித்த தகவலையும் தருகிறது. சோமரத்னே திசனாயக்கே எனும் இலங்கை இயக்குனரின் தேசியவாத பற்றிச் சொல்கையில், 'இலங்கையின் உயர் அதிகாரம் இன வர்க்க மேலாதிக்கமும் தமிழர்களை நிலையற்றவர்களாய் வைத்திருக்கும் துயரமும் இந்தப் படத்தில் சரியாகவே வெளிப்படுகிறது' (.62) என்று சொல்லும் இந்நூல், ஈழத் தமிழர்கள் பிரான்ஸல் எடுக்கும் மூன்றாந்தரமான வீடியோ படங்கள் குறித்த செய்திகளையும்('எண்பதுகளில் வெளி வந்தவற்றில் தனிப்புறா, நீதியுன் சோதனை குறிப்பிடத்தக்க படங்கள்..65) மாற்றாக ஒரு நல்ல குறும்படமான குடா என்கிற ஆதிவாசிகள் பற்றிய கேரளப்படத்தைப் பற்றியும் இஸ்லாமியப் பெண்கள் மீது மதரீதியான அடக்குமுறையைச் சொல்லும் சப்மிஷன் என்ற வெளிநாட்டு குறும்படம் பற்றிய செய்தியையும் பதிவு செய்கிறது.(.116).
உலகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசும் அதே ஆர்வத்துடன் இந்தியாவின் பிற மொழிப்படங்கள் குறித்த செய்திகளையும் இந்த நூல் பதிவு செய்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, இந்தி, வங்காளம், மராத்தி முதலிய மொழிகளில் நிகழ்ந்திருக்கும் திரைப்பட முயற்சிகளும் பதிவாகியிருக்கின்றன. 'ஆசுவாசம் தரும் மராத்திய திரைப்பட உலகம்", தெலுங்கு திரைப்பட உலகம் 88' போன்ற எளிய தலைப்புகளால் திரைப்படங்கள் குறித்த தகவல்களையும் அதன் தரம் சார்ந்த விவரங்களை நூலாசிரியர் சுப்ரபாரதிமணியனின் அபிப்ராயங்களுடனும் இந்த நூல் பதிவு செய்கிறது. ஆதிவாசிகளின் இயல்பான பாடல்களும் அவர்களின் மரபு ரீதியான இசையும் படத்திற்கு உயிர்ப்பூட்டுபவை. ஆனால் வெளிப்பாட்டு முறையில் கதாபாத்திரங்களின் வகையும் சற்று மிகையாக சில இடங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.( .22).
படங்கள் பற்றிய செய்திகளை நேரடியாகச் சொல்லாமல் தனது சந்திப்பு மற்றும் பயணஅனுபவம் சார்ந்த கட்டுரைகளாகவும் தனது வாசிப்பு சார்ந்த பதிவுகளாகவும்மாற்றுவது இந்தக் கட்டுரைகளின் பலம். பல இடங்களில் கட்டுரைகள் நேரடியான தகவல்களாகவும் அமைந்து விடுகின்றன. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட போதும் தவறாக பக்க எண்கள் குறிக்கப்பட்ட பொருளடக்கம் புத்தகத் தயாரிப்பிலிருக்கும் குறை. நேரடியான கட்டுரைகள்றவிர அயல்நாட்டு இயக்குனர்களின் சிறு பேட்டிகளும் இங்மர் பெர்க்மனின் ஒரு கடிதத்தின் மொழியாக்கமும் இந்த நூலில் உள்ளன.
பலருக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும், வெகுசிலரே தாங்கள் பார்த்த படங்கள் பற்றி எழுதுகிறார்கள். வெறுமனே பார்த்த படங்களின் பெயர்களை அடுக்கி பெருமை பேசுவதையும் இங்குள்ள படங்களை விமர்சிப்பதையும் விடுத்து, நல்ல திரைப்படம் மீது அக்கறை உள்ளவைகள் அது குறித்து எழுத முன்வர வேண்டும். அந்த வகையில் திரைவெளி வழங்கும் அறிமுகம் முக்கியமானது.

= செழியன்

(திரை வெளி:  ரூ 100 அம்ருதா பதிப்பகம், சென்னை )


சூழல் சிதைவிற்கு எதிராக சுப்ரபாரதிமணியனின் குரல்:
சக்தி அருளானந்தம்
---------------------------------------

            திருப்பூர் என்றதும் என் நினைவிற்கு முதலில் வருவது சுப்ரபாரதிமணியன். திருப்பூர் மட்டுமல்ல, ஒவ்வொரு ஊரையும் அங்கிருக்கும் படைப்பாளிகளாலேயே நினைவு கூர்கிறேன். இரண்டாவது அவருடைய விரிவான படைப்புலகம். பதினைந்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழுநாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், நாடகம், பயண அனுபவம், திரைப்படக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள் என முப்பது நூல்கள்.. பரந்து விரிந்திருக்கிறது அவருடைய படைப்புலகம். மூன்றாவது, படைப்பாளி 'தூய இலக்கியவாதி'யாக அரசியல் சார்பு, வேறு துறை ஈடுபாடு, களப்பணி போன்றவைகள் மீதான ஒவ்வாமை இல்லாமல் சுற்றுப்புறச்சூழல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை, தாய்வழிக்கல்வி போன்ற களப்பணி செயல்பாடுகள். நான்காவது அவருடைய சகாக்களான பலர் ஓய்ந்து விட்ட நிலையில் தொடர்ந்து இயங்காது ஐந்தாவது.. மூத்த எழுத்தாளர் ஒருவர்.. சிறந்த படைப்பாளியும் கூட அவருடைய நேர்காணல் ஒன்றில், இன்றைக்கு வரும் எழுத்துக்களை நான் படிப்பதேயில்லை. ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை" படிக்காமலேயே அபிப்ராயம் உதிர்க்கையில் சுப்ரபாரதிமணியன் இளைய படைப்பாளிகளின் எழுத்துக்களில் காட்டும் கவனம், அக்கறை.
            'விமோசனம்' சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு. பதினாறு சிறுகதைகள்... அவருடைய பதினைந்து தொகுதிகிள்ல 250 கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. திருப்பூர் கலை இலக்கியப் பேரவையைச் சார்ந்த திரு. வி.டி. சுப்ரமணியன் தொகுத்திருக்கிறார். காவ்யா வெளியிட்டிருக்கிறது.
      "சமூக யதார்த்தம் தன் மனித ஆளுமையுடன் சேர்ந்து கலையாக உருவெடுக்கிறது. கலை வெற்றிடத்திலிருந்து பிறக்க முடியாது என்கிற காரணத்தினாலேயே, எந்த சமூகத்திலிருந்து பிறக்கிறதோ அந்த சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக அது இருக்கிறது. எனும் இந்திரனின் கூற்றை உறுதி செய்வது போல இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்திருக்கின்றன.
            பிழைப்பு தேடிப்போகுமிடத்தில் அந்தச் சூழலுடன் பொருந்திப் போகவிடாமல் செய்கிற சிக்கல்கள் அதனால் எதிர் கொள்ள நேர்கிற வன்முறைகள் சொந்த நாட்டிலேயே அகதியாக மாறிப்போன துயரைப் பேசுகிறது 'எதிர்பதியம்' "உயிரைக் கையில் பிடிச்சிட்டு ஒடுறவனுக்கு இது ஒன்றும் பெரிய தூரமல்ல' வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெற்று முழக்கமாய் கோஷமாய் நின்று விட்டதைச் சொல்கிறது. "நா மட்டுமா அகதி முனியப்பனும் அகதி தா" என முடியும் இறுதிவரை பலவகைப்பட்ட கலாச்சாரங்களை, பண்பாடுகளை அழித்து ஒற்றைத் தன்மையை கட்டமைக்க முயல்கையில் கடவுளர்களும் அகதிகளாகி விடுவதை எதிரொலிக்கிறது.
            பாதுகாப்பு தருவதாக சொல்லப்படும் குடும்ப அமைப்பிற்கு பெண் தரும் விலையை 'நாதம்' சிறுகதையில் பார்க்கலாம். பெண்ணின் இயல்பான சின்னஞ்சிறு ஆசைகளுக்குக் கூட அதில் இடமில்லாமல் போய் விடுகிறது. மழையில் நனைவது, ஆலங்கட்டிகளைப் பொறுக்கித்தின்பமும் அவளுக்குப் பிடித்தமானதாயிருக்கலாம். ஆனால் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளும் கணவனும் எனும்போது மழையை ஜன்னல் வழியாக பார்த்து சந்தோசப்படுவதோடு நிறுத்திக் கொள்கிறாள். காய்ச்சலில் அவள் அவதிப்படுவதைவிட அதனால் தடைபடும் குடும்பப் பொறுப்புகள், கடமைகள் முன்னுரிமை பெறுகின்றன.
            இந்தக் கதையில் இன்னொரு கோணமும் கூட இருக்கிறது. குடும்ப அமைப்பில் பெண் வேலைக்குப் போவதென்பது பொருளாதார பலத்திற்காகத்தான். அது முதன்மை வருமானமல்ல, கூடுதல் வருமானம் பொருளாதார அவசியமில்லையென்றால் பெண் வேலைக்குச் செல்ல வேண்டாம். குடும்பம், குழந்தைகளை பராமரிப்பது போதும். வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டையும் செய்வது பெண்ணுக்கு கூடுதல் சுமை. வேலைக்குப் போவது பெண் விடுதலையின் ஓர் அம்சமல்ல. அது ஆணுக்குத்தான் லாபம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இருந்தாலுமே கூட குடும்பத்தில் பெண் தன் சுயத்தைக் கரைத்துக் கொள்கிறாள். வேலையென்பது அவளுக்கு சுய கௌரவத்தை, தன்னம்பிக்கையை, அடையாளத்தை மீட்டுத் தருகிறது.
            காசநோய் வந்தது போல் உருக்கின உடம்புடன் குடும்பக் கஷ்டங்களை இரவு வேளைகளில் கணவனிடம் அழுது புலம்புபவளிடம் வேலைக்குச் சென்றபின் ஏற்படும் மாற்றம்...
            "அப்படி சாந்தியை பிரகாசத்துடன் பார்த்து எத்தனை வருஷங்கள் இருக்கும் என நினைத்துப் பார்த்தான். கல்யாணத்திற்கு முன்பானக் காலத்தில்தான் இந்தப் பிரகாசத்துடன் இருந்திருப்பாள் என நினைப்பு வந்தது"
            அவளின் நாளொன்றின் பத்து மணி நேரத்தை முந்நூற்று ஐம்பது ரூபாய்க்காக உறிஞ்சும் வேலையில் கொஞ்சமே கிடைக்கும் அந்தத்துளி மகிழ்ச்சியைக் கூட ஆண் மனம் பொறுத்துக் கொள்ளாததை, அவளின் சின்ன சந்தோசமான வானொலியில் கர்நாடக சங்கீதத்தை இரவு நேரங்களில் கேட்பதும் வானொலியை நிறுத்த மறந்து தூங்கிப் போகும் சமயம் கணவன் கொள்ளும் எரிச்சல், நிறுத்த மறந்ததை சுட்டிக்காட்டி அவளுக்குள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது, வேலைக்குச் சென்ற பிறகு அவள் முகத்தில் தெரியும் பிரகாசம் அவனிடம் ஏற்படுத்தும் பொறாமையென ஆண் மனதை கதைப்போக்கில் சிறுகச் சிறுக நுட்பமாக வெளிப்படுத்துவது போலவே பெண் மனதையும் வெளிப்படுத்துகிறது.
            தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பெண் உணர்வு சார்ந்த இன்னொரு கதை 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும் தலைப்பே சிறப்பாக அமைந்து விட்டது. பெண் என்பவள் மகள் மட்டுமல்ல மனைவி மட்டுமல்ல தாய் மட்டுமல்ல தனித்த உயிர் அவளுக்கென்று தனியாக ஒரு மனம் இருக்கிறதென்பதையும் அவளுக்கென்று சுய விருப்பு வெறுப்பு இருப்பதையும் 'ஒவ்வொரு இராஜகுமாரிக்குள்ளும்' என்கிற தலைப்பே சொல்லி விடுகிறது.
            கதை தொடக்கத்திலிருந்து கடைசி சில பாராக்கள் நீங்கலாக சிறுவனின் பார்வையில் கறியெடுப்பது சமைப்பது அதன் மீதானஅவன் ஈர்ப்பு அதை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகள் என வரும் விவரிப்புகள் வெகு ரசமானவை. கறியெடுப்பது என்பதன் பின்னணியிலிருக்கும் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரச்சூழல், மதம் சார்ந்த நம்பிக்கைகள், கிராமத்து பண்பாடு, கலாச்சாரம்... கிராமத்துக் கதையென்றால் சுப்ரபாரதிமணியனின் பேனாவுக்குத் தனி உற்சாகம் வந்து விடுகிறது. அந்த உற்சாகத்திலும் கிராமத்தின் சாதிய முகத்தைக் காட்டத் தவறவில்லை "வள்ளுவன் வேத வாக்கு சொல்கிறவன் என்றாலும் கீழ் ஜாதிதானே" (வாக்கு) சாதி என்று வந்துவிட்டால் நகரமும் விதி விலக்கு கிடையாது. கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். "சாந்தி வேலை தேடி வந்தபோது அவளிடம் ஜாதியைப் பற்றி விசாரித்தார்களாம். கூட்டிப் பெருக்கத்தானே" (நாதம்)
            இங்கு திருமணம் என்பதில் மாப்பிள்ளை பெண்ணின் விருப்பம் என்பது கடைசி பட்சமாகி விடுகிறது. அதிலும் பெண்ணின் விருப்பம் கண்டு கொள்ளப்படுவதேயில்லை. ஜாதி, ஜாதகம், வேலை, அந்தஸ்து, பணம் என்று எத்தனை. இதில் வெளிப்பட வாய்ப்பே இல்லாமல் போன பெண் மனம் தன்னை திடுமென்று வெளிப்படுத்துகையில்... பாரதத்தில் கூட பாஞ்சாலி கர்ணன் மீது தனக்கு ஆசையிருந்ததைச் சொல்லுவாள். அப்படியொரு திருப்பம் இந்தக் கதையின் இறுதியில். இந்தக் கதையை உயரத்திற்கு கொண்டு போய் விடுகிறது.
            இத்தகைய திருமணங்களில் இப்போது உடைவு ஏற்பட்டிருப்பதை வாழ்வின் இறுதியில் இருக்கும் முதியவரின் கசந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. "பனியன் பேக்டரிக்குப் போகும் பையன்களைக் கேட்க வேண்டாம். லேபிள் வைக்க அயர்ன் செய்ய கட்டிங்குக்கு என்று பனியன் கம்பெனிகளில் சரிசமமாய்ப் பெண்கள் வேறு உலவுகிறார்கள். சுலபமாய், ஜாதி என்பது பற்றி இல்லாமல் தொழில் ரீதியாக உறவுகளைத் தீர்மானித்துக் கொள்கிறார்கள்" (இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்)
      சுற்றுப்புறச் சூழல் சீர்குலைவை ஈரம் கதை பேசுகிறது. வணிக நகரமாக திருப்பூர் மாறியதில் அது இழந்தவற்றை சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். டாலர் கனவுகளில் மிதப்பவர்களை தொந்தரவு செய்யும் இது போன்ற குரல்களை கேளாச் செவியினராய் பாவனை செய்தவர்கள் இனியும் புறக்கணிக்க முடியாது என்பதற்கு சில சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பின்பு திருப்பூரில் தகர்க்கப்பட்ட சாயப்பட்டறைகள் சேலம், நாமக்கல் புறநகர்ப் பகுதிகளுக்கு இடப் பெயர்பு கொள்வதை நாளிதழ்கள் வெளிச்சமிடுகின்றன.
      சூழலியலாளர்களை மனித குல முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுபவர்களாக பார்ப்பவர்கள் விஞ்ஞானிகள் தங்களால் கைவிடப்பட்ட ஜப்பான் மக்களை காற்றில் கதிர் வீச்சு கலந்து விட்டது சுவாசிக்க வேண்டாம். தண்ணீரில் கலந்து விட்டது குடிக்க வேண்டாம் என்று சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் தான் மறதிக்காரர்களாயிற்றே. வாழ்வைவிட பிழைப்பு முக்கியமாகி விட்டதே "வெடிக்க விரும்பும் வெடி குண்டைப்போல் தகதகத்து நிற்கும் அணை நீரின் ரசாயணக் கழிவுகளில் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். ரசாயணப் பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லாக் கதறல்களும் அடக்கம்." பட்டீஸ்வரன் முரசன் மட்டுமல்ல முனிஸ்வரனும் கூட.
            பிழைப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தும் பிழையான வாழ்வில் குழந்தைகளை வளர்ப்பது, அவர்களைப் படிக்க வைப்பது என்பதெல்லாம் பிராய்லர் கோழி வளர்ப்பதுபோல அவர்கள் மூலம் திரும்பக் கிடைக்கும் வருமானத்தைக் கணக்குப் பண்ணி காய் நகர்த்துவதில் குழந்தைகள் படும் அவஸ்தையை 'மகா வாக்கியம்' எதிரொலிக்கிறது. இந்த அழுகிய மனங்களின் விளைச்சல் அழுகலாய்த்தானே இருக்கும். தமிழ் மரபில் வழிப்பறி பாலைத் திணைக்குரியதாய் இருந்தது. இன்று குழந்தைக் கடத்தல், வழிப்பறி போன்றவைகளில் ஈடுபடுபவர்கள் படித்த இளைஞர்களாயிருக்கிறார்கள்.
            கோட்பாடுகளை உடும்புப் பிடியாக பிடித்துக் கொள்ளாமல் வாழ்க்கையிலிருந்து படைப்புகளைத் தந்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். பதினாறு கதைகளில் ஒன்றான 'விமோசனம்' தொகுப்பின் எல்லாக் கதைகளுக்கும் பொருந்திப் போகிறது. தேசியம், சர்வதேசியம் பேசிக் கொண்டு சொந்த மக்களை அகதிகளாக அலைய விடுவதும், வல்லரசு கனவு காணச் சொல்லும் நாட்டில் கழிப்பறை கூட இல்லாத கொடுமையையும், சிறைக்கூடமான பள்ளிக் கூடங்களையும், மாறிவிட்ட மதிப்பீடுகள் காரணமாய் உறவுகளுக்கிடையே ஊடாடும் நெருக்கடிகளையும் சொல்லும் இந்தக் கதைகள் இவற்றிலிருந்து விமோசனம் பிறக்காதா என்கிற விழைவை, ஏக்கத்தை, கவலையை வெளிப்படுத்துகின்றன விமர்சிக்கின்றன. கவனத்தைக் கோருகின்றன.

சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
விமோசனம்: ரூ. 90/- காவ்யா, சென்னை)

விமர்சனம்:
சக்தி அருளானந்தம்
கமலா அடார்னஸ்,
சுந்தர் நகர்
மல்ல மூப்பம்பட்டி
சேலம்:636302
          நூல்நயம்