சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பணக்கார ஊரிலிருந்து ஒரு ஏழைக்கட்சி

திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் நகரம் என்பதால் ஆசியாவின் மிகப் பெரிய வியாபாரகேந்திரமாகும். மக்களின் நேரம் கெட்ட நேர உழைப்பு முக்கிய காரணம்.எல்லாத் தரப்பினரும் இங்கு முதலீடு செய்கிறார்கள். அத்வானி முதல் கொண்டு கபில்தேவ் வரைக்கும் பெரும் பிரமுகர்களுக்கு தொழில் பினாமிகள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் ஊர். இதனால் வியாபார விடயங்களை மீறி அரசியல் வாதிகளின் பார்வைக்கு இலக்காகி இருக்கும் ஊர்.( ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை துணை முதலமைச்சர் இங்கு வருகிறார் என்பது முக்கிய கணக்கு. ஒவ்வொரு முறையும் அவர் இங்கு வரும் போது வரவேற்பு, பொதுக்கூட்டத்திற்கு 3 கோடி ரூபாய் செலவாகிறது . ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் வாங்கிக் குவித்த சொத்து காரணமாக இங்கு ரியல் எஸ்டேட் வியாபாரம் எகிறிப்போயிருக்கிறது. ) உள்ளூர் மார்க்ஸ்ட்கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அரை கோடி ரூபாயை தமிழக தொழிலாளர் நல அமைச்சருக்கு சர்வதேச தொழிலாளர் நியதிப்படியான 8 மணி வேலை நேரம் இங்கு செல்லுபடியாகாது என்று சட்டத் திருத்தலுக்காக ஏற்றுமதியாளர்களிடம் பெற்ற பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார் என்பதான முதல் காரணமாகக்கொண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் தி மு கவில் இணைகிறார். ) தொழில் நகரம் என்பதை மீறி இது அரசியல் நகரம் ஆகி விட்டது.

இங்கு சமீபத்தில் பிரபலமான பேச்சாளர் தமிழருவி மணியன் தனது ஆதரவாளர்களின் பலத்தைக் காட்ட ஒரு கட்சி ( இயக்கம்) ஆரம்பித்த வைபவம் நடைபெற்றது. காந்திய சமுதாய இயக்கம்.தமிழருவி மணியனுக்கு இங்கு எப்போதுமே பெரும் கூட்டம் கூடும். கவர்ச்சிகரமான பேச்சு, வாசிப்புப் பழக்கம் இல்லாமல் கூட்டத்தில் பேசுவதைக் கேட்கப்பழகி சொக்கிப்போய் கிடக்கும் பெரும் கூட்டம் திருப்பூரில் உண்டு. கட்சி ஆரம்ப விழாவுக்கு இருமடங்குக் கூட்டம் கூடியிருந்தது. அவரின் பேச்சு காந்தீயம் இன்றைய சூழலுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை விட கருணாநிதி மீதான எக்கச்ச்க்க கோபத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. ( அவர் குடியிருக்கும் அரசு வீட்டை காலி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி சந்துரு தந்திருக்கும் தீர்ப்பு பிரசித்தியானது. தமிழ் வாழ்க என்று கதறிக் கொண்டிருப்பதை விட தமிழ் அறிஞர்களுக்கு கவுரவம் தருவது நல்லது. முக்கியம் என்றார் சந்துரு.) காந்திய பொருளாதார விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்க அறிக்கை தந்திருருந்தார் தமிழருவி. உறுப்பினர் சந்தா ரூ 20 மட்டும். போராட்டங்களுக்கு அழைக்கமாட்டேன் என்று உறுதி மொழி தந்திருக்கிறார். நெல்லைக்கண்ணன் போன்றோர் தமிழருவி மணியனை விட கூட்டங்களுக்கு அதிகத் தொகை வாங்குகிறவர்கள். அவருக்கு அதிக கூட்டம் கூடும் ஊர் திருப்பூர். அவருக்கு ஆதரவு தரும் பணக்காரர்கள், புரவலர்கள் இங்கு அதிகம். அவர் அவரின் ஆதரவாளர்களின் கூட்டத்தை இங்கு கூட்டக்கூடும். ( நகைச்சுவை மன்ற மாதக்கூட்டங்களுக்கு வரும் எக்கச்சக்க கூட்டத்தை வைத்துக் கொண்டு உள்ளூர் துணுக்கு எழுத்தாளர் ஒருவர் இது நல்ல சமயம் நகைச்சுவை கட்சி தொடங்க என்றார்.) சட்டமன்றத் தேர்தல் னெருங்கி வரும் நேரத்தில் இது போன்ற பலத்தைக் காட்டும் கூட்டங்கள் , புதிய கட்சிகளின் ஆரம்ப விழாக்கள் அதிகரிக்கும்.இந்திய ஜனநாயகம் கட்சிகளை ஆரம்பிப்பதை வெகுவாக ஆதரிக்கும் தாரளவாதம், பெருந்தன்மை கொண்டதாகும்.
ஆமாம், நகைச்சுவை கட்சித்தலைமைக்கு கீழ்க்கண்ட பேச்சாளர்களில் யாரை நீங்கள்சிபாரிசு செய்கிறீர்கள். 1.கு ஞானசம்பந்தம் 2. சாலமன் பாப்பையா.
3. லியோனி 4. ராசா
சிறந்த சிபாரிசுக்கு ஒரு டஜன் திருப்பூர் லோக்கல் பனியனும், ஈரோடு அயிட்ட ஜட்டி அரை டஜனும் பரிசு காத்திருக்கிறது.


======================================================>சுப்ரபாரதிமணியன்

புதன், 18 ஆகஸ்ட், 2010

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்
--------------------------------------------------------------

- சுப்ரபாரதிமணியன்

தற்போதைய வெகுஜன ஊடகங்களில் திரைப்படங்களும் இதழ்களும் இளைஞர்களையே
மையமாகக் கொண்டிருக்கின்றன. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால் திரைப்படங்கள் அவர்களை மையமாகக் கொண்ட காதல் அம்சத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் கேளிக்கை சார்ந்த விடயங்களிலும், நுகர்வு கலாச்சாரத்தன்மை கொண்டும் அமைந்திருக்கின்றன. வெகுஜன இதழ்கள் இளைஞர்களை கவர்கிற வகையில் திரைப்பட நடிக, நடிகைகளின் வாழ்க்கை செய்திகளையே மையமாக கொண்டு இயங்குகின்றன. இன்றைய இளைஞர்களின் உள்ளார்ந்த சிக்கல்களையும், பிரச்சனைகளையும் இவைகள் வெகு குறைந்த சதவீதத்திலேயே முன் வைக்கின்றன.

இலக்கிய இதழ்கள் சார்ந்து எழுதும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் அவர்களின் பிரத்யேக வாழ்கை சார்ந்த சிக்கல்கள் வெகுவாக வெளிப்படுவதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் பெரியவர்களின் உலகில் தென்படும் சிக்கல்களையும், அனுபவங்களையுமே, அவரின் வயது சார்ந்தோரின் பிரச்சினைகளையும் படைப்புலகில் கொண்டு வந்து இயங்குவது விசேஷ தன்மையாக இருக்கிறது. இதுவே அவரின் பிரத்யேக எழுத்தின் இயல்பு அன்று தொனிக்கிற விதமாய் அவரின் ''நகரத்திற்கு வெளியே'' முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் அமைந்திருக்கின்றன. பொதுத்தலைப்பு நகரத்திற்கு வெளியே என்றிருந்தாலும், நகரம் சார்ந்து இயங்குகிற இளைஞர்களையே இக்கதைகள் மையமாக கொண்டிருக்கின்றன. கணிசமான இளைஞர்கள் கவிதா உலகில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு தீவிரமாய் இயங்குவதைப் போல சிறுகதைத் தளத்தில் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குகிரவர்களில் குறிப்பிடதக்கவராயும் விஜய் மகேந்திரன் இருக்கிறார்.

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்கள் இவரின் கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். நகர கல்லூரியில் விரிவுரையலர்களாக கொத்தடிமை போல அவர்கள் இயங்குகிறார்கள். குடிகார இளைஞர்களாய் இருக்கிறார்கள். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் அலைகிறவர்களும் இருக்கிறார்கள். வேலை இல்லாமல் மன உலைச்சல்களில் அல்லல்படும் இளைஞர்கள் மத்தியில் ஆறுதல் சொல்லவும் மன பிரதிபலிப்பை இளைஞர்கள் இன்னொரு தளத்தில் காணக் கிடைக்கின்றார்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணத்தின் போது சந்தித்து தங்களின் கல்லூரி வாழ்க்கையை எண்ணி ஏங்கிக் கொள்கிறவர்களையும் இருக்கிறார்கள். ''ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வது போல'' காதலைத் துண்டித்துக் கொண்டு புது காதல் உலகத்திற்குள் நுழைந்து கொள்ளும் இளைஞர்களும் இருக்கிறார்கள். பாலியல் தேவைகள் இளம் பெண்களை கருக்கலைப்பிற்கு கொண்டு செல்கின்றன. இதன் பொருட்டு அவமானம் அடைகிறார்கள். சாகசச் செயல்களும், அத்து மீறல்களும் சில இளைஞர்களை தாதாக்களாக மாறி அவர்கள் வன்முறையின் கூரிய நகங்களுக்குள் அடைபட்டு சாவையும் சந்தித்து கொள்கிறார்கள். வீட்டிற்கு தெரியாமல் காதலில் ஈடுபட்டு பின் குடும்பச் சூழலை விட்டு ஓடிப்போகிற இளம் பெண்களும் அவலமும் மூத்தகுடி உறுப்பினர்களை முன் வைத்து அலசப்படுகிறது.

நகரம் சார்ந்து இயங்கும் இளைஞர்களின் சிக்கல்களை, வீட்டுச்சூழலிலும், அலுவலக சூழலிலும், அவதானித்து அவற்றை விஜய் மகேந்திரன் கதைகளுக்குள் கொண்டு வருகிறார். உதிரிகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உலகம் நுட்பமாய் வெளிப்படுகிறது. இந்த குரூரங்களுக்குள் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வித துவேசமும் இன்றி வெளியே நின்று அவதானித்து பதிவு செய்கிறார். அவர் இளைஞர் என்பதாலேயே துவேஷம் இக்கதைகளில் படியவில்லை.

முதியவர் ஒருவர் தனது சமவயது நண்பருக்கு எழுதும் கடிதங்களை மையமாகக் கொண்டிருக்கும் ''அடைபடும் கற்று'' என்ற கதையில் டிரைவ் இன் உணவு விடுதி இருந்த இடம் ஒரு தொழிற்சாலைக்காக காலி செய்யப்பட்டுவிட்டது பற்றியதாக இருக்கிறது. அதில் இடம் பெரும் ஒரு பகுதியில் ருசியான உணவின் மேன்மை பற்றிச் சொல்லப்படும்போது ''எப்படியோ உமக்கு வேதனையிலும் நாக்கில் நீர் சொட்டுகிறது'' என்ற கேள்வி இருக்கிறது. இளைஞர்களின் இயல்பான வாழ்வை மீறி குரூரங்கள் தென்படும் பகுதிகளில் கூட விஜய் மகேந்திரன் மெல்லிய கேலி பல கேள்விகளை முன் வைக்கிறது.

ஆனால் குரூரமனத்தின் வெளிப்பாடாக இல்லாமல் அக்கறை சார்ந்த கவலையாகவும் இருக்கிறது.

இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கும் தொனியில் இருக்கும் யதார்த்தமும், எளிமையும் ஏமாற்றக்கூடியது. எளிமையான சொற்களை மீறிய தீர்க்கமான இளைஞர்களின் அனுபவங்கள் கவனத்திற்குரியவை. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாய் அமைக்கப்பட்டிருப்பது அவற்றின் உள்ளடக்கத்தை இன்னும் தீவிரமானதாக்குகிறது .


நகரத்திற்கு வெளியே
சிறுகதைகள்
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
விலை ரூ.50/-

சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

சூர்யா, கார்த்திக்., சிவகுமார், நல்லி, சிற்பி விருதுகள்

-------------------------------------------------------
சுப்ரபாரதிமணியன்


தமிழ்த் திரைப்பட உலகம் சூரியகுழுமத்துள் முடங்கிப்போய்விட்டது. முன்பு திரைப்பட விநியோகஸ்தில் ஆரம்பித்தது. பின் திரைப்பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு இன்று எந்த முன்னணி திரைப்பட நடிகரும் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கு உட்படாமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் வருமானவரி தொல்லை, ரெய்டு என்று ஆரம்பித்து தொல்லை தொடரும். எடுத்த படத்தை அவர்களிடம் போட்டுக் காட்டி விட்டு அவர்கள் சொல்லும் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவது உத்தமம். தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் இவர்கள் வசம் என்பதால் இடியாப்பசிக்கல். இவர்களின் கைங்கரியத்தால் தியேட்டர் கிடைக்காமல் 60 படங்கள் காத்துக் கிடைப்பதாய் ஆனந்தவிகடன் தகவல் தந்திருக்கிறது. திரைப்படங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தகுழுமத்தால் திரைப்படத்றையினருக்குத் தலைவலி. திரைப்படதுறை முடங்கிப் போகும் சூழல்.பத்திரிக்கைத்துறையில்எதிர் கருத்தாளர்களுக்கு இருக்கும் மிரட்டலும், தாக்குதலும் அபாயகரமானவையாக மாறிஉள்ளன. சூர்யா, கார்த்திக் எந்தப்படங்களில் நடிப்பது என்பதை அவர்களோ, தந்தை சிவகுமாரோ தீர்மானிக்க முடியாது. சிவகுமார் சொற்பொழிவுகளில், பேச்சு சிடி தயாரிப்பதில் அக்கறை கொண்டு பொழுதைப் போக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சிவகுமாரின் இது “ ராஜபாட்டை அல்ல” ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆங்கிலத்திலும் அதே தலைப்பில்.. ஆங்கில வாசகர்களை மனதில் கொண்டு தலைப்பு இடப்படவில்லை என்று தெரிகிறது.இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. தலைப்பு ஆங்கிலத்தில். உள்ளே தமிழ் அறிஞர்களின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கின்றன. அந்த தமிழ் அறிஞர்கள் பற்றி ஆங்கில வாசகன் அறிந்திருக்காத போது அவற்றால் என்ன பயன். சோ, தமிழருவி மணியன், நக்கீரன் கோபால் ஆகியோரின் கருத்துக்கள் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது அவர்களைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் இல்லை. சிவகுமார் பற்றிய அறிமுகக்குறிப்புகள் கூட இல்லை. தமிழில் இதைப் படித்தவன் எதற்கு மறுபடியும் ஆங்கிலத்தில் படிக்கப்போகிறான்.ஆங்கிலவாசகர்களை மனதில் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிப்பட வேண்டும். அல்லயன்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. திரைப்படத்துறையினர் எழுதிய புத்தகங்கள் என்றால் அவற்றைல் 200, 500 பிரதிகள் பெற்றுக்கொள்ள பணக்காரர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.ஆனால் இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்ப்பில் வரும்போது அவர்களைப் பாராட்ட நல்லி போன்று சிலர்தான் இருக்கிறார்கள். இவ்வாண்டு 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை மொழிபெயர்பாளர்களுக்கு நல்லி பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் வழ்ங்கினார்.

பலபரிசுகளை வாங்கிக் குவித்திருக்கும் சிற்பி பாலசுப்ரமணியனின் மொழிபெயர்ப்பில் மாத்ருபூமி வீரேந்திர குமாரின் பயணக்கதை

” வெள்ளிப்பனி மீதில்” குறிப்பிட்த்தக்கதாகும். தமிழில் இருந்து மலையாளத்திற்கு தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கும் சாபி செருமாவிலாயி 15 ஆண்டுகள் தேனீர் கடையில் வேலை பார்த்தவர். இப்போது கேரளத்தில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார்.. இவரின் நூலும் பரிசு பெற்றது.

( எனது சுடுமணல் நாவலை இவர் மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். )

ஆகாசம்பட்டு சேசாசலம், கீதா சுப்ரமணியன், அசோகன் முத்துசாமி, ஆர் பி சாரதி, , மா ராமலிங்கம், தருமி , சுப்ரபாலன், பாலாஜி ஆகியோர் பரிசு பெற்ற மற்றவர்கள். கொஞ்சம் ஆங்கிலப்புலமை, வெளிநாட்டில் இருந்தது ஆகிய தகுதிகளே பலருக்கு ஆங்கிலத்திலிருந்து நூல்களை மொழிபெயர்க்கும் தகுதியையும், பரிசையும் கொடுத்திருப்பதை சமீபத்தில் வந்திருக்கும் சில ஆங்கில மொழி ஆக்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சம்பந்தப்பட்ட நூல்களின் மூல களமும், கலாச்சார விசயங்களும் அக்கறை கொள்ளப்படாமல் இயந்திர ரீதியான மொழிபெயர்ப்புகளாய் அவை அமைந்திருக்கின்றன.



கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் ( 2 முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர், சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர்) கடந்த 15 ஆண்டுகளாய் கவிஞர்களுக்கு பரிசு அளித்து வருகிறார். இவ்வாண்டு சிற்பி இலக்கிய விருதில் 1 லட்சம் பரிசுத் தொகையை பகிர்ந்து கொண்டவர்கள்: கவிஞர்கள் கலாப்ரியா, இளம்பிறை, மரபின் மைந்தன் முத்தையா , சக்திஜோதி, தங்கம் மூர்த்தி, அழகிய பெரியவன் ஆகியோர், கவிஞர்களுக்கு அங்கீகாரம், பரிசுகள், பாராட்டுகள் சுலபமாகக் கிடைத்து விடுகின்றன. உரைநடையாளர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்களுக்கு அவ்வகை அங்கீகாரம் சுலபமாக கிடைப்பதில்லை. துரதிஸ்டாசாலிகள் அவர்கள்.



சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

சாகித்ய அகாதமி

சாகித்திய அகாதமி : சேலம் எழுத்தாளர்கள் சந்திப்பு

--------------------------------------------------------------------------------

22-08-10 ஞாயிறு மாலை 5 மணி ,தமிழ்ச் சங்கக்கட்டிடம், சேலம்.
தலைமை; தமிழ்நாடன்

அறிமுகவுரை: சுப்ரபாரதிமணியன்
( சாகித்ய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் )
கதை வாசிப்பு:
பெருமாள் முருகன்
க வை பழனிச்சாமி
இல வின்சென்ட்
மு அம்சா
கவிதை வாசிப்பு:
சூர்ய நிலா
சிபி செல்வன்
அ கார்த்திகேயன்
கு கணேசன்
சக்தி அருளானந்தம்
கோனூர் வைரமணி
க ஆனந்த்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: எழுத்துக் களம், சேலம்

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

பொன்னீலனின் "மறுபக்கம்"

பொன்னீலனின் ” மறுபக்கம் “ மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்


சுப்ரபாரதி மணியன்



சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும்.



’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.


இதன் மூலமான மதச்சார்பின்மை பற்றி கருத்து வலுப்பட்டு பிரதிபலிக்கிறது. மதக்கலவரங்களில் மக்கள் சிக்குண்டு வேதனைப்படுகிறார்கள். அவன் கழுத்தில் தொங்கும் ஏசுநாதர் இதெல்லாம் கண்டு அலறுவார் என்று ஒரு வாசகம் ஓரிடத்தில் வருகிறது. அவை ஏசுநாதர் மட்டுமல்ல, பல்வேறு மத தெய்வங்களின் அரற்றலாயும் இருக்கும். இதற்கெல்லாம் ஆறுதலாக அமைபவை இந்நாவலில் இடம்பெறும் மகான்களும், அவதார புருஷர்களும்தான். வைகுண்டசாமி, மீட் அய்யர், மார்த்தாண்ட வர்மா, பப்புத் தம்பி, ராமன் தம்பி, அயோத்திய தாசப் பண்டிதர், குன்றக்குடி அடிகளார், ஜீவா போன்றோரின் வாக்குகளும் செயல்பாடுகளுமே மக்களுக்கு ஆறுதல் தருகின்றன. இவர்களின் மூலம் சாதியத்திற்கும், அரசிற்கும், வைதீகத்திற்கும், எதிரான எதிர்ப்புக் குரலாக இந்த நாவலின் மையம் தன்னை கட்டமைத்துக் கொள்வது விசேஷமானது. விடுதலை பெற்ற உண்மைகள் மனிதனின் இறுக்கங்களை,அடிமைத்தனத்தை விடுதலை செய்யும் என்பது தெளிவாகிறது. “சேர்வைக்காரன் சாமிய சிவனாக்கியது எவ்வளவு பெரிய ஆன்மிகத் தொண்டு..... அப்ப கிருஷ்ணனை ஏசுவாக்கினா பாராட்டுவீங்களா.... ஏசுதானே சர்வ வல்லமையுள்ள சர்வதேசக் கடவுள். அது அன்னிய மதம்” என்று விவாதிக்கிறார்கள்.


இந்த ஆவணங்கள் சேதுமாதவன் பலரை சந்திக்கச் சென்று சேகரிக்கிற தரவுகள் மூலம் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. வெறும் ஆவணங்களின் தொகுப்பாகவும் பெரும்பான்மை நாவலின் பகுதிகள் அமைந்துவிட்ட பலவீனமும் இதனால் வெளிப்படுகிறது. இது ஒரு வகை நாவல் தன்மையாகவும் கணிக்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த சி.ஆர். ரவீந்திரனின் ‘கண்ணில் மின்னல்’ என்ற நாவலில் திருப்பூர் பற்றிய செய்திகளும், ஆவணங்களும், பத்திரிக்கை விவரங்களும் அப்படியே தரப்பட்டிருப்பதன் மூலம் ஒரு நகரம் பற்றிய சித்தரிப்பு தரப்பட்டிருக்கிறது.அந்த வகையிலே பலவகை ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவலின் பெரும்பகுதி அமைந்துவிட்டிருக்கிறது. இதில் உலாவும் மனிதர்களின் வாழ்க்கை சார்ந்த அலுவல்கள் சொற்பமாகவே காணப்படுகின்றன. முத்து என்ற பெண் கதாபாத்திரம் மட்டும் குறிப்பிடத்தக்கதாகவே இருக்கிறது. திருமணமான உறவு சகிக்க முடியாத்தாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட எத்தனிக்கிற அவளின் முயற்சிகள் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.சாதனாதியாக இந்த நாவலில் நுழையும் சேதுமாதவன் வெளியே வர முத்து போன்ற பெண்களும், ஆவணப்பதிவுகளும் உதவுகின்றன. மற்றைய கதாபாத்திரங்கள் வெறும் தட்டையாகத்தான் பிரதிபலிக்கிறார்கள்.


ஆவணங்களின் தொகுப்பாக இந்த நாவல் முழு வடிவம் எடுக்கிற முயற்சியிலிருந்து கன்னியாகுமரியின் தொன்மக் கதைகள், வெவ்வேறு குரல்களாய் மகான்கள் தென்படுவது, நாடகப் பணியிலான ஒரு பகுதி, உரையாடலாய் தனிப் பகுதிகள், தனி உரையாடல்கள் போன்றவை அமைந்து தப்பிக்க வைக்கிறது. 800 பக்க நாவலில் மனித ஆளுமையோடும், பலவீனங்களோடும் மிகச் சொற்பமாக கதாபாத்திரங்கள் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது பலவீனமாகும். சமகால அரசியலை முன் வைக்கும் மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல் என்ற வகையில் அதன் குரல் கரவத்திற்குரியது.


( மறுபக்கம்: பொன்னீலனின் நாவல் , ரூ 350, என்சிபிஎச் வெளியீடு, சென்னை )


விமர்சனம் : சுப்ரபாரதிமணியன்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

மொழியின் துல்லிய உலகம் ---- சுப்ரபாரதி மணியன்

மொழியின் துல்லிய உலகம் - சுப்ரபாரதிமணியன்
--------------------------------------------
----------- மகுடேசுவரன்
--------------

எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் உலகின் சுற்றுப்புறத் தாக்கங்களைத் தங்கள் படைப்புகளில் எப்பொழுதுமே முன்வைத்து எழுதுவார்கள். நகரங்களில்தாம் எல்லா வகையான நடவடிக்கைகளும் அதீதங்களும் அரங்கேறிவிடுகின்றன. அதிலும், திருப்பூர் போன்ற வளரும் பெருநகரங்களில் செயல்பட்டுவரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், குறும்படக் கலைஞர்கள் - தாம் வாழும் நகர் சார்ந்து படைப்பில் இயங்கவேண்டிய அளவுக்குப் பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன. இந்நகரின் பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் படைப்பில் பிரதானமாக வந்து போவார்கள்.

இந்நகரிலிருந்து இயங்கும் கவிஞர் மகுடேசுவரனின் படைப்புகளிலும் இவ்வூர்த் தன்மைகள் மிகுந்திருப்பதும் கதை மாந்தர்கள் இவ்வூரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதும் இயல்பான ஒன்றுதான்.

மகுடேசுவரனிடமிருந்து இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘பூக்கள்பற்றிய தகவல்கள்’-ஐ நான் தான் கனவு சார்பாக வெளியிட்டேன். அது மிக முக்கியமான தொகுப்பு. வெளிவந்ததும் அத்தொகுப்பு மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட்து. சுஜாதா உள்ளிட்ட மூத்த தமிழ் எழுத்தாளர்கள் பலரும் அத்தொகுப்பை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். கமல்ஹாசன், இயக்குநர் பாலசந்தர், பாலுமகேந்திரா, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வசந்த் போன்றோர் அத்தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

அதற்குப் பின்பு அண்மை, யாரோ ஒருத்தியின் நடனம், காமக் கடும்புனல், மண்ணே மலர்ந்து மணக்கிறது, இன்னும் தொலையாத தனிமை என இதுவரை அவர் ஆறு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இக்கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து பொதுவாக தமிழ்ச் சூழலின் கவிதையுலகம் பற்றியும் மகுடேசுவரன் கவிதைகளின் ஆதார மையம் பற்றியும் பேசுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.

கவிதைகளின் இயங்குதளம் மொழியாகவே இருக்கிறது. நடையும் மொழிநேர்த்தியும் கைகூடிவருமிடத்திலிருந்தே கவிதை பிறக்கிறது. தனக்குக் கைவந்த அத்திறனிலிருந்து ஒரு விஷயத்தைச் சொல்வதற்கோ, தான் உணர்ந்த வலியை மற்றவருக்கு உணர்த்துவதற்கோ கவிதைகள் கதைகளை எழுதுகிறார்கள். மகுடேசுவரன் தன் படைப்புலகைக் கவிதைகளில் ஆரம்பிக்கிறார். நானும் கவிதையில்தான் ஆரம்பித்தேன். கவிதையிலிருந்துதான் கதைகள், நாவல்கள் என்று வெவ்வேறு படைப்புகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

மகுடேசுவரன் தன்னுடைய ஆறு தொகுப்புகளில் என்ன மாதிரியாக இயங்கியிருக்கிறார் – அவருடைய கவிதைகளின் பொதுத்தன்மை என்ன – அவர் தன் கவிதைகளுக்காக எடுத்தாளும் பாடுபொருள்கள் எவையாக இருக்கின்றன - என்பன குறித்தெல்லாம் பார்க்கலாம்.

கவிதைக்கான முக்கியமான மூலதனம் மொழியும் சொந்த அனுபங்களும் தாம். அதிலும் மொழிக்கே பிரதான இடம். இப்பொழுதுங்கூட கடந்த நூற்றைம்பது வருடங்களாக உலகில் ஏராளமான மொழிகள் அழிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் அந்தமானில் ஒரு மொழி அழிந்துபோய்விட்டதாக அறிகிறோம். தமிழைச் செம்மொழி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உலகிலுள்ள அழிந்துவரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று சொல்கிறார்கள்.

எதுவாயினும் நமக்கான ஒரே தொடர்பு சாதனம் மொழிதான். மொழி வெறும் தொடர்பு சாதனம் மட்டுமேயன்று – அது ஒரு கலாச்சார ரீதியிலான கூர்மையான ஆயுதம். கலாச்சாரத் தளத்தில் படைக்கும் பணியைச் செய்பவர்கள் கையில் அதன் வலிமை இன்னும் இன்னும் அதிகம்.

கவிதைத் தொகுப்புகள் தற்சமயம் மிகுதியாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த இரண்டாயிரம் இரண்டாயிரத்து ஐந்திற்குப் பிறகு தமிழ்க் கவிதைகள் உலகத் தரத்திற்கு ஈடாக எழுதப்பட்டு வருகின்றன. இதுவரை எழுதாத பாடுபொருள்களில் எல்லாம் கவிதைகள், கதைகள், நாவல்கள் பீறிட்டுக் கிளம்பியிருக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய இலக்கியங்கள் என்றால் முதலில் இந்தி இலக்கியங்களைச் சொல்வார்கள். அதோடு அதிகபட்சம் வங்காள இலக்கியங்களைச் சொல்வார்கள். ஆனால், இன்று இந்திய இலக்கியங்களை அடையாளப்படுத்தத் தமிழைப் புறந்தள்ளி யாரும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய மாறுதல் !

ஆரம்ப காலங்களில் தமிழ்ப்பண்டிதர்கள்தாம் கவிதை எழுதினார்கள். பா வடிவிலான அவற்றில் எதுகை மோனை சீர் சந்தம் அடி தளை என யாப்பு முன்வைத்த வடிவத்தில் அவற்றை எழுதினார்கள். பிறகு இந்தக் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத புதுக்கவிதை தோன்றியது. அதன் தோற்றமே எல்லாரும் கவிதை எழுதலாம் என்ற நிலையை உருவாக்கியது. இப்பொழுது சாதாரண கையடக்கக் கேமரா இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு குறும்படத்தை எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதைப் போல, எண்பதுகளில் யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டது. அந்தக் காலகட்டங்களில் வீட்டுக்கொரு மரம் இருந்ததைப் போல வீட்டுக்கொரு கவிஞர் இருந்தார்.




எளிமை என்பதற்காக எழுதுவதெல்லாமே கவிதையாகிவிடுகிறதா என்றால் இல்லை. நாம் சாதாரணமாக உரையாடுகிறோம் – அது கவிதையாகிவிடுமா என்றால் ஆகாது. புதுக்கவிதை எளிமையின் வழியாக அடையப்படவேண்டிய இறுக்கமான கட்டுமானம். அங்கே மொழி சுண்டக் காய்ச்சப்பட்ட பால்.

இன்று கவிதைகள் நிறைய எழுதப்படுகின்றன. எழுதுகிற எவரேனும் மொழி குறித்த அக்கறை கொண்டிருக்கிறார்களா என்றால் வருத்தமே எஞ்சுகிறது. கவிதை வெளிப்பாட்டு முறைகளில் காட்டப்படும் மேதைமை கவிதைக்கு மிகவும் பிரயோஜனமானது.

இன்றைய வாழ்க்கை மிகவும் இறுக்கம் நிரம்பியதாகவே இருக்கிறது. அந்த வாழ்க்கையிலிருந்து எழும் கவிதைகள் மேலும் இறுக்கம் கொண்டதாக இருக்கவேண்டுமா, அல்லது சாதாரண எளிமையோடு இருந்தால் போதுமா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படியாயினும் மொழி மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் சலுகை எதுவும் இல்லை.

மக்களிடத்தே புழங்குகிற அதே மொழியை இலக்கியமாக்குவதில் முதன்மையாக வாய்மொழி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் என்று சொல்லப்படுகிறவை முன்னால் நிற்கின்றன. மக்கள் வாயிலிருந்து விழுகிற அதே சொற்களை அப்படியே பயன்படுத்தி ஏராளமானவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த மக்கள் மொழியினை அதே கவிச்சத்தோடு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இல்லாமலில்லை.

இன்னொரு தரப்பில் கனவுகள், நனவுநிலைகள், அதீத எண்ணங்கள் போன்றவற்றைச் சொல்வதற்கு மிகச் சிக்கலான மொழியையே பயன்படுத்துகிறார்கள். மொழியின் இலக்கண அழகுகளைக் கெடுக்காமல் யார் பயன்படுத்துவார்கள் என்றால் தமிழை அறிந்தவர்கள் பயன்படுத்துவார்கள். அவர்கள் பெரும்பாலும் பழைய ஆள்களாகவே இருப்பார்கள். கண்ணதாசன் வாய்மொழிச் சொற்களை - அது சினிமாப் பாடலாக இருந்தாலும் கூட - இலக்கிய வடிவமாக்கிப் பயன்படுத்துவார். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற மொழிப் பேராசிரியர்கள் மரபையும் அறிந்து புதுக்கவிதை எழுத வந்தவர்கள் ஆதலால் இருவகைப் போக்குகளையும் உணர்ந்து எழுதுவார்கள். ஞானக்கூத்தன் போன்றவர்கள் கவிதையைச் சந்த ஒழுங்குக்கு உட்படுத்தி எழுதினார்கள்.

மகுடேசுவரன் தன் கவிதையில் மொழியைச் செறிவாக ஒழுங்குபடுத்திப் பயன்படுத்துகிறார். மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்று தமிழைப் பாடமாகப் பயிலவில்லை. ஆனால், அவரிடத்தில் கவிதை குறித்து கனமான அக்கறை இருக்கிறது. அந்த அக்கறையே அவரை மொழியை வல்லமையோடு பயன்படுத்துபவராக மாற்றியிருக்கிறது. அதனால் சொற்களை மிகக் கவனத்தோடு பொருத்தமாகப் பயன்படுத்துகிறார். நகைசெய்பவர்கள் எப்படி ஒவ்வொரு வளைவையும் நெளிவையும் நிதானித்துச் செதுக்குவார்களோ அத்தகைய துல்லியத்தோடு இருக்கும் அது. இதை நகாசு வேலை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், மொழியை அதன் துல்லிய பதச்சேர்க்கைகளைக் கொண்டு அமைப்பதால் - மரபில் உள்ள புலமையைப் போதிய விகிதத்தில் கலப்பதால் - உருவாகும் கவிதை பலமுள்ளதாகவே இருக்கிறது.

என்னை எடுத்துக்கொண்டால் நான் கல்லூரியில் முதுகலைக் கணிதம் பயின்றவன். நான் மொழியை இந்தளவு நுணுக்கங்களோடு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேனா என்றால் இல்லை. நான் தமிழைப் பாடமாகவும் படிக்கவில்லை. மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்றவரோ தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தவரோ அல்ல. ஆனால், மகுடேசுவரன் கவிதையில் உள்ள மொழியிறுக்கம், வாக்கியக் கட்டுமானம், சொற்சேர்க்கைகளில் காணப்படும் துல்லியம், அவை உணர்த்தும் அர்த்தங்களின் உக்கிரம் இவற்றையெல்லாம் காணும்பொழுது - அவர் தன் மொழியறிவை இவ்வளவு தூரம் தன் சொந்த முயற்சியால் மட்டுமே கற்று அடைந்தார் என்றறியும்போது - அது இந்தக் காலகட்டங்களில் எளிதான ஒன்றாக எனக்குப் படவில்லை. அவருடைய கவிதைகளைப் படித்திருப்பவர்களுக்கு நான் கூறுவது நன்கு பிடிபடும்.

இதற்கு இன்னொருபுறத்தில் வேறு நிலைகளும் இருக்கின்றன. இப்பொழுது பெண்கள் கவிதை எழுத வந்திருக்கிறார்கள். தலித்துகள் எழுத வந்திருக்கிறார்கள். அரவாணிகள், ஓரினப் புணர்ச்சியாளர்கள் என்று சமூகத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்களிடம் இத்தகைய நுட்பங்களையும் மொழிப் புலமையையும் நாம் எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் இந்தத் தலைமுறையில்தான் எழுதப் படிக்கவே அறிந்தார்கள். அவர்களுடைய எழுத்துகளில் இலக்கணம் இருக்காது. நாம் வகுத்துவைத்திருக்கும் இலக்கணங்களிலிருந்து முற்றிலும் பிழைபட்டதாகவே இருக்கும். ஏதாவதொரு வகையில் தங்கள் நிலையை, கருத்தை, படைப்பைப் பதிவு செய்ய முன்வந்திருக்கும் அவர்களிடம் நாம் அவரகளுடைய குரல்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவும் கூடாது. சில தேர்ச்சிகளைக் காலப்போக்கில் அவர்களும் அடைந்து விடுவார்கள் என்றும் இருந்துவிடலாம்.

மகுடேசுவரன் ஒரு விஷயத்தைப் பல்வேறு முனைகளிலிருந்து எழுதிப் பார்க்கிறார். சிலர் தங்கள் கவிதையை ஒரே மாதிரி வார்த்ததுபோல் எழுதிக்கொண்டிருப்பார்கள். அப்படியல்லாமல் எல்லா வகை மாதிரியும் எழுதத்தானே வேண்டும் ? ஒரு படைப்பாளி தீண்டாமல் விட்டுவைத்த வடிவம், சொல்முறை என்றிருப்பதை நாம் அவனது பலம் என்று கொள்ள முடியாது. மகுடேசுவரன் கவிதைகளில் எல்லா வகை மாதிரிகளையும் காண முடியும். ஒரு சிலவற்றை நாட்டுப் புறப் பாடல்களில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிராக தூய இலக்கண வடிவத்திலும் எழுதியிருக்கிறார். கொஞ்சம் இருண்மை கலந்து எழுதும் அதேநேரம், அதிக எளிமையுடனும் எழுதுகிறார். கதையாகும் பொருள்களைக் கவிதையாக்குகிறார். நகைச்சுவையும் அங்கதமும் எழுதுகிறார். காமக்கடும்புனலில் காமத்தைப் பாடுபொருளாக்கி நானூறு கவிதைகள் எழுதியிருக்கிறார்.

தற்போது பழைய அற இலக்கியமான திருக்குறள்களை நவீன கவிதை வடிவில் எழுதி வருகிறார். எழுத்தாளர்கள் பலரும் பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவார்கள். அவர்களுடைய எழுத்துக்கு வலிமை சேர்க்கும் பயிற்சியாக அம்முயற்சியை அமைத்துக்கொள்வார்கள். அந்த இலக்கியங்களை ஒருவர் ஆழ்ந்து அணுகுவதற்கு இதைவிடச் சிறந்த வேறுமுறைகளே இல்லை எனலாம். மு. வரதராசன், சுஜாதா போன்றவர்கள் திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்கள். அவற்றின் வழியாக அந்த எழுத்தாளர்கள் அந்நூல்களை எவ்வாறு அணுகினார்கள், அவர்களின் பார்வைகள் எப்படிப்பட்டனவாக இருந்தன என்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம்.

இறுதியாக, மகுடேசுவரன் கவிதைகளின் பிரதான அம்சங்கள் என - துல்லியமான செறிவான மொழி, கூறும் முறைகளில் பல்வேறு சாத்தியப்பாடுகளின் இயக்கம், தான் வாழும் உலகின் அத்தனை கீழ்மைகளையும் சமரசமின்றிப் படைப்பாக்கும் தன்மை - ஆகியவற்றைக் கூறுவேன்.

எழுத்தாளன் காலத்தின் கண்ணாடியாகச் செயல்படுகிறவன். அவன் படைப்புகள் அவன் நடமாடிய உலகத்தின் மறுக்கமுடியாத ஆவணங்களாக மாற்றம் கொள்ளும். இன்றைய இறுக்கமான வாழ்க்கையில் மனித உறவுகள் சிக்கலாகிக்கொண்டே செல்கின்றன. உலகமயமாக்கலின் கோரப் பிடிக்குள் நமது அன்றாடப் பொருளாதாரம் சிக்கித் தவிக்கிறது. மக்கள் சங்கமாக ஒன்றுகூடித் தங்கள் முழக்கங்களை முன்வைத்த சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனியாகி அலைகிறோம். தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டவர்களாக தொழிலாளர் வர்க்கம் ஆக்கப்பட்டிருக்கிறது. தனிமனிதன் என்றைக்கும் இல்லாத அளவு வன்முறைக்கு இலக்காகிறான். எங்கும் ஊழல்மயமாகி மாறாத மதிப்புடைய விழுமியங்கள் மதிப்பிழந்து வருகின்றன. இப்படிப்பட்ட மூச்சுத் திணறடிக்கும் சூழலில் படைப்பாளிகளாகிய நாம் பிடிவாதத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே ஆறுதல்தான்.

(கடந்த 18.07.2010 அன்று திருப்பூர் வழக்கறிஞர் சங்கமும் கனவு இலக்கிய வட்டமும் சேர்ந்து நடத்திய புத்தக விமர்சனக் கூட்ட்த்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)

seythi :http://kavimagudeswaran.blogspot.com/2010/08/blog-post.html