சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 24 மே, 2013


கடத்தல் கலாச்சாரம் - சுப்ரபாரதிமணியன்



குழந்தைகள் கடத்தல் என்பது விநோதமான விளையாட்டுத் தனமாய் உயிர்களை பலி வாங்கும் நடவடிக்கையாக உருவெடுத்துவிட்டது.  சிலவேளைகளில் குழந்தைகள் அல்லது உறவினர் தங்கள் பெற்றோர், ஏனைய உறவுகளிடமிருந்து பணம் பறிப்பதற்காய் நண்பர்களுடன் செய்த பல கடத்தல் நாடகங்கள்  கூட கொலையாகியிருக்கிறது. அண்மையில் ஐபிஎல் பேட்டிங்கில் இழந்த பணத்தை மீட்பதற்காக சொந்த உறவுகளையே கடத்தி, பொலிஸ் பிரசினையானதில் விரக்தியில் கொலை செய்யப்பட்டிருந்தது இதற்கு பொருத்தமான உதாரணம்.

குழந்தைகளுக்குள் இவ்வகை துர்குணங்கள் வளர்ந்து குடும்பச் சூழலைச் சீர்குலைக்கின்றன.

    இதன் மறுபுறமாய் குழந்தைகள் கடத்தல் என்பது சட்டநெறிமுறைகளுக்கு எதிராக குழந்தைகளை அழைத்துச் செல்லுதலும் குழந்தைக் கடத்தல் என்றே வரையறை செய்யப்படுகிறது. இவ்வகை சமூகக் கொடுமையாக நீண்டு வருகிறது.

    பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள் மற்றம் பொது இடங்களில் மிரண்டபடி தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திசைமாற்றி கடத்தப்படுவது சாதாரணமாகி விட்டது. ஒரு சில நேரங்களில் அவ்வகைச் சிறார்களின் பரபரப்பை சுலபமாகக் கண்டிருக்கிறேன். அவர்களை அணுகி எதையாவது பேசினால் போதும், பெரிய ஆவலாகி விடுகிறது அவர்களுக்கு. சுலபமாக அடைக்கலமாகி விடுகிறார்கள். அன்பான வார்த்தைகள் போதும் அவர்களை வசியப்படுத்துவதற்கு, கொஞ்சம் வார்த்தைகளும் எளிமையான வாக்குறுதிகளும் போதும். தங்களின் திரை நாயகர்களைக் காண வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவர் சிறுமியர் கூட்டங்கள்; பெற்றோரின் அரவணைப்பு இன்றி தவித்து வெளியேறி எங்காவது அடைக்கலமாகும் சிறுவர்கள்; கட்டுப்பாடு என்ற பெயரில் இறுக்கப்படும் சூழல்களின் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்க ஒடி வருபவர்கள் எனத் தொடர்கிறது. சமீபமாய் பெற்றோரை மிரட்டிப் பணம் பெற நண்பர்களுடன் நாடகம் நடத்துவதும், பள்ளிகளில் சுமைகள் தாங்காமல் தாங்கள் கடத்தப்பட்டதாய் தகவல் தந்து பெற்றோரைப் பதற வைத்திருப்பதும் நடந்து வருகிறது. குழந்தைகள் தங்களின் எதிர்ப் புணர்வை வெளிக்காட்ட இவ்வகை நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். இதன் மறுபுறமாய் சமூகக் கொடுமையின் அங்கமாக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அடிமைப்படுத்தும் நோக்கங்கள், வறுமை, பண ஆசை, தவறான வழி காட்டல் போன்றவை குழந்தைக் கடத்தலுக்கு முக்கியமானக் காரணங்களாகின்றன. தெற்கு ஆசிய நாடுகளில் குழந்தைக் கடத்தல் வெகு சகஜமாகி விட்டது.

    தேவதாசி முறை மற்றும் பெண் குழந்தைகளை கோயிலுக்குக் காணிக்கையாக்குதல் போன்ற மதம் சார்ந்த நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 'மாத்தம்மாக்கள்' பெருகிக் கொண்டிருக்கின்றன. கன்னிப்பெண்களுடன் உடல் உறவு கொள்வதால் பாலின வியாதிகள் மறையும் என்ற மூட நம்பிக்கையும் தொடர்ந்து வருகிறது. விபச்சாரத்தால் பெருகும் பாலியல் நோய்களிலிருந்து தப்பிக்க இளம் பெண்களுடன் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர்.

    வறுமையில் வாடுபவர்களை தொழில் வசதி காட்டி சட்டத்திற்குப் புறம்பாக கூட்டிச் செல்லப்பட்டு வெளி மாநிலங்களில் குறைந்த சம்பளத்திற்குக் கொத்தடிமைகளாக வைக்கப்படுகிறார்கள். படிப்பறிவில்லாதப் பெற்றோர்கள் இதற்கு உடன்பட்டு விடுகிறார்கள். விளிம்பு நிலை மக்களின் வெளி உலகு பற்றின அறிவின்மையும், வெகுளித்தனமும் இதற்கு உடந்தையாகி விடுகின்றன. உலகமயமாக்கல் இடம் பெயர்வைச் சாதாரணமாகிவிட்ட நிலையில் உள்ளூரிலேயே அகதிகள் உருவாக்கப்படுகிறார்கள். இயற்கைச் சார்ந்த நாசங்களும், தண்ணீர் பிரச்சனைகளும், வேலையின்மையும் அகதிகளாய் மக்களை இடம் பெயரச் செய்யும்போது குழந்தைகள் மலினமாகி விடுகிறார்கள். இவ்வகைத் தொழிலுக்கு உடன்படுவதும், அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் ஒருங்கிணைக்கப்பட்ட கும்பல்களால் நடைபெறுகிறது. இவற்றுக்கு பல இடங்களில் சில காவல்துறையினரும் உடந்தையாக இருக்கின்றனர். தார்மீக நெறிகளுக்கு எதிராகவும், குழந்தைகளை நேசிக்கும் மன இயல்பு அற்றவர்களும் இதை ஒரு தொழிலாகக் கைக்கொள்ளுவதில் அவர்களின் மனம் இறுகி வரும் சமூக நிர்பந்தத்தை காண முடிகிறது.

    வெளிமாநிலங்களுக்கு பல்வேறு வகைத் தொழில்களுக்கும் கொத்தடிமைகளுக்குமென்று குழந்தைகள் சாதாரணமாய் கடத்தப்படுகின்றனர். சென்னை போன்ற பெரும் நகரங்களில் புகைவண்டி நிலையங்களில் குழந்தைகள் கும்பலாய் கைது செய்யப்பட்டு மீட்கப்படுவது செய்தித்தாளின் சாதாரண நிகழ்ச்சிகளாகி விட்டன. தெருவோரச் சிறுவர்கள் தங்களின் பாதுகாப்பின்மையை உணர்ந்து அலைபாய்தலில் வெவ்வேறு வகை முதலாளிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

    சமீபத்தில் நண்பர் ஒருவரின் கல்லூரி படிக்கும் மகள் இவ்விதமான கடத்தலில் இருந்து தப்பித்தாள். அந்த நண்பர் நடந்ததை எண்ணி நிலை குலைந்து விட்டார். அப்பெண் கல்லூரியில் கம்யூட்டர் சயன்ஸ் படிப்பவள் என்ற முறையில் இமெயில் பெற்றிருக்கிறாள். நண்பர் தன் வசதியை மீறி அவளின் படிப்பிற்கென்று கணினி வாங்கித் தந்திருக்கிறார். ஒரு நகரத்தின் செல்வந்தர் மகன் ஒருவன் அப்பெண்ணின் இமெயில் முகவரியை அறிந்து கொண்டு தகவல்களை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறான். முதலில் அவற்றை அலட்சியப்படுத்தியப் பெண் சுவாரஸ்யம் பொருட்டு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். இருவரும் குடும்பம் பற்றியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இமெயில் மூலமே கல்யாண விஷயங்களை பேசி இருக்கிறார்கள். எதேச்சையாக நண்பருக்கே இமெயில் ஒன்றின் 'பிரிண்ட் அவுட்' கிடைக்கவே பதறிப்போய் நண்பர் ஒருவரிடம் கொண்டு சென்று காட்டியிருக்கிறார். சந்திக்காமல் இமெயில் தகவல்கள் மூலம் பெற்றோரை முழுவதும் நிராகரித்து கல்யாணம் வரைக்கும் போய்விட்டிருக்கிறது. முழுத் தகவலையும் பெண்ணிடம் இருந்து பெற்றுக் கொண்ட நண்பர் நிலைகுலைந்து போனார். அந்தப் பெண் கல்லூரியில் படிப்பவளாக இருந்தாலும் வெளி உலகை அறியாதவள். இமெயில் மூலம் நண்பரைப் பெற்றதில் என்ன தவறு. கல்யாணம் வரைக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டது என்ன தவறு என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டாள். குழந்தைகள், பெண்களைக் கடத்துவது சம்பந்தமாக கட்டுரையொன்று எதேச்சையாய் நண்பருக்கு நான் கொடுக்கவும் அதைப் படித்தவர் இன்னும் நிலைகுலைந்து போனார். அக்கட்டுரையை நண்பர் தன் பெண்ணிடம் தந்திருக்கிறார். அவள் அவளின் இமெயில் நண்பர் அப்படியானவர் அல்ல என்று தீர்க்கமாய் பேச ஆரம்பித்துவிட்டாள். அவளே கல்லூரித் தோழி ஒருத்தி மூலம் இமெயில் நண்பரின் நகர விலாசத்தைக் கண்டுபிடித்து விபரங்கள் சேகரித்திருக்கிறாள். தோழி தந்த விபரங்கள் அதிர்ச்சி தந்திருக்கின்றன. இமெயில் நண்பர் போலீசால் தேடப்படுபவர் என்பது இறுதியில் தெரிந்திருக்கிறது. அவனை நம்பி அவளின் கடைசி இமெயில் தகவலின்படி அவள் கிளம்பிப் போயிருந்தால் என்ன விபரீதம் நடந்திருக்கும் என்பதை அந்தப் பெண் உணர்ந்து ஆரம்பித்திருக்கிறாள்.

    திருமண வயதுப் பெண்கள் வசீகரமான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றப்படுகிறார்கள். ஏழ்மையானப் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒரு திருமண வாய்ப்பு அமைந்தால் போதும் என்று ஒத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாடுகளுக்குள்ளோ, வெளிநாடுகளுக்குள்ளோ திருமணமான பின்பு கடத்தப்படுவதும், விபச்சாரத்திற்காக அலைக்கழிக்கப்படுவதும் பின்னர் நிகழ்கின்றன. எவ்விதப் புகார்களும் இல்லாமல் காவல்துறைக்கென்றத் தகவல்கள் கூட இல்லாமல் பல பெற்றோர்கள் முடங்கிவிடுகிறார்கள். உலகமயமாக்கலில் பெண்களும், குழந்தைகளும் சந்தைப் பொருளாகிவிட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் கடத்துவது என்பது நிறைய பணம் தரும் கவர்ச்சிகரமானத் தொழிலாகியும் விட்டது.

    இவை தவிர பிச்சையெடுத்தல், உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றி விற்பனை செய்தல், போதைப் பொருட்களைக் கடத்துதல், வீட்டு வேலைகளுக்காகக் கடத்துதல், தத்தெடுத்தல் என்ற பெயரில் குழந்தைகளைக் கூட்டிச் சென்றுத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

    குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் வலுவானதாக இல்லை. அவை குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கான பல்வேறு ஓட்டைகளை வைத்திருக்கின்றன. தொடர்பு சாதனங்களும், பத்திரிகைகளும் உலகத்தை நம் முன் சுலபமாகக் கொண்டு வந்த காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படுவது சாதாரணச் செய்திகளாக நமக்கு வந்து சேர்கின்றன.

    குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சனையாக இது விசுவரூபிக்கப்படுகிற போது, அவை தடுக்கப்படுவதற்கான இன்னும் வழிகள் உருவாகும். தடுப்பு மற்றும் மறுவாழ்வு முறைகள் அவர்களை சாதாரண நிலைக்குக் கொண்ட வரும். இதற்காக பல தொண்டாகவே நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், மீட்பு முயற்சிகளையும் எடுத்து வருவது சமீபமாய் அதிகரித்திருக்கிறது.

    இவ்வகைக் கடத்தல்கள் பெற்றோர் மத்தியில் குழந்தைகளைப் பேண வேண்டிய பொறுப்பையும், உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தர வேண்டியப் பாதுகாப்பைப் பற்றின எண்ணங்களை வலியுறுத்தலாம். குழந்தைகளுக்கும் வீட்டை விட்டு வெளியேறுதல் பற்றின அச்சத்தை மேலோட்டமாகக் கிளப்பலாம். ஆனால் சமூக நிலைக் காரணங்கள் இவ்வகைக் கடத்தல்களைத் தொடர்ந்து நிகழ்த்தாமல் தடுத்துவிடுமா என்ன?

    குழந்தைத் தொழில் உழைப்பு தடை செய்யப்படுதலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அமுலாக்களும், மறுவாழ்வும், அடிப்படைக் கல்வியின் அவசியமும் கடத்தல் கலாச்சாரத்தை வலு இழக்கச் செய்யும்.

- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன்

புதன், 8 மே, 2013


துண்டாடப்படலும், தனிமை உலகங்களும்

இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்

  கமலும், இரா முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபித்திருக்கிறார்கள்.கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா.மு எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்த முறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன் வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் ( 1889 - 1939 ) 50க்கும்மேற்பட்ட  பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார்.ஆனால் அவை பெருங்கதையாடலை தகர்க்கும் சிறுகதையாடல்களாக புது வடிவம் காட்டி அமைந்திருக்கின்றன.
வாழ்க்கையைச் சுழிப்பிற்குள்ளாக்குகிற அம்சங்களாய் உடல் சார்ந்த காமப்பசியும் அதில் மெருகேறிய சிருங்கார வாழ்வும், வயிற்றுப்பசியின் மேலீட்டலிலான விதவிதமான சமையல் குறிப்புகளும் சாதாரண வாழ்க்கையில் மேலிடுகிற விசயங்களை  தொட்டுக்காட்டுகின்றன.ஒவ்வொருவரின் மனசும்  வகை வகையாய்  குறக்களி காட்டுகிறது
ஸ்வாமி ஷமிக்கணும்.ஒரு பிடி அன்னம். அது இல்லையா. பிட்டு, இட்டலி, உப்பிட்டு விடிகாலையில்  உண்டாக்கிய ஏதாவது இருந்தாலும் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.வெட்கத்தை விட்டு யாசிக்கிறேன். உங்க்கிட்டையும் அண்ணாகிட்டையும் கேட்க எதுக்கு வெடக்ப்படணும்.தயவு செய்ய்யுங்கோ. கூட மாட இங்கே பணி எடுக்கிறேன்.  பசி தாளலே. போஜனம் மாத்திரம் போதும்  என்ற குரலை எங்கும் காணமுடிகிறது.,    ஸ்த்ரி சக்வாசமே இல்லாத பூமி ஏதாவது இருந்தால் முதல் காரியமாக அங்கே ஜாகை மாற்றிக் கொள். முடியாத பட்சத்தில் காலாகாலத்தில் உன் மனசுக்குப் பிடித்த கன்யகை யாரையாவது கல்யாணம் பண்ணி உடம்பில் உயிர் இருக்கிற காலம் வரை அவளுக்கு விசுவாசமாக இருந்து உய்யும் வழியை மேற்கொள்வது உசிதம் “  இப்படி அரற்ற வைக்கிறது. இப்படியும்  இப்படி மனுஷத்துவம் கிஞ்சித்தும் இல்லாமல் நான் போன மாயம் என்ன என்று அதிர்ந்து போய் எல்லாத்திலிருந்தும் விலகி நின்று நான் பார்க்கிறேன்” 
இப்படி  துவைத, அத்வைதப்பார்வைகள்.
50க்கும்  மேற்பட்டப்பாத்திரங்க்ளை மையம் தவிர்த்தவர்களாக காட்டும் செயலும், மாந்திரீக யதார்த அம்சங்களும் இதை பின்நவீனத்துவம்சங்களைக் கொண்டதாக்குகிறது. ஆனால் மகாலிங்கய்யன் என்கிறவன் ஏதோ ஒருவகையில் எழுத்தாளன் என்பதால் விஸ்வரூபித்து  முன் நிற்கிறான்.   கருப்புப் பட்டணம் பொடிக்கடையில் உத்யோக  நேரம் போக தங்க சாலை பள்ளிக்கூட தமிழ் வித்வானும்  இளம் பிராய சினேகிதனுமான செங்கல்வராய முதலியோடு நூறு இருநூறு வருஷம் முற்பட்ட தமிழ் கிரந்தங்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை பரிசோதனை செய்து அவற்றைப் புஸ்தகமாக்க அச்சு யந்திரத்தில் ஏற்றுகிற காரியத்திலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தவன்.   திருக்கழுக்குன்றத்தில் ஒரு பெண்ணின் மீது மையலுற்று அவள் சாவு அவனை சிறைகு அனுப்பி பாண்டிச்சேரிக்கு துரத்தி கப்பல ஏற வைத்து கரும்பு தேசத்தில் ஹெட்மஸ்தூராக வேலை பார்க்க வைக்கிறது.  லண்டன் வழியாக ஊர் வந்து சேர ஆசைப்படுபவன் அங்கேயும் பழிகாரணமாக சிறைக்குப் போகிறான். சென்னை திரும்ம்பி வந்து தன் மூலத்தை தேடி அலைகிற  போது அவனுக்கும் 70 ஆகி விடுகிறது.

  ஆண்பெண் கலவி அம்சம் குறித்து வழமையான விசயங்களில் சிந்திப்பவரல்ல இரா.மு. முன் காலத்திய நடைமுறை அம்சங்களை கைக்கொள்ளாமல் இயல்பான விசயமாகச் சித்தரிப்பவர்.  பிறருக்கு அது பிறழ்வாகக் கூடப் படலாம். ஆனால் அந்தப் பிறழ்வை சரியாகச் சித்தரிப்பதில் அக்கறை கொண்டிருப்பவர். அந்த அக்கறைதான் இந்த நாவலில் பிறழ்வுகள் பக்கம் எதேச்சையாய் நிற்கிற  மனிதர்களின் புலம்பலை சரியாகச் சொல்லியிருக்கிறது.சமையல் சார்ந்த விபரமான குறிப்புகள் விரவிக்கிடக்கின்றன. மையல் சார்ந்த சுவாரஸ்யமான வர்ணனைகளுக்கும் பஞ்சமேயில்லை.
ஆறு விரல்கள்காரனான வேத பாடசாலை உபாத்தியாயன் வேதய்யனுக்கு அவனின் ஆறு விரல் உறுத்தலாகவே அமைந்து விடுகிறது.  மகாலிங்கய்யனுக்கு  ஆறாவது விரல் படைப்பாகிறது. பொடிக்கடை வேலை செய்கிறவனாக இருந்தாலும் செங்கல்வராய முதலியோடு   கூட சேர்ந்து புத்தகப்பதிப்பில் ஈடுபடுகிறவன். பாட்டு எழுதும்போது சுக்கிலம் வெளிப்பட்டு அவனை கனவு பங்காருவிடமும், தெலுங்கு தாசி இடமும் துரத்தி இன்பம் கொள்ள வைக்கிறது.வரத ராஜிலு ரெட்டி,  சாமி பெயரிலும் பின்னர் வெவ்வேறு ஊர்களில் நடமாட  வேண்டியிருக்கிறது.அனேகம் பேருக்கு கடிதங்கள் வாழ்க்கை முழுவது எழுதிக் கொண்டிருப்பவன், மனைவிக்கு, பெற்றோர்க்கு, மகனுக்கு, கவர்னர் சமூகத்திற்கு என்று. “ ஸ்திரி சம்போகத்திலும் ஜெயிலிலும் பிச்சை எடுப்பதிலும் தெய்வம் தொடங்கி நான் தெண்டனிட  வேண்டிய, பிரியம் காட்ட விதிக்கப்பட்ட, இக்கிணியூண்டாவது எனக்கு வேண்டப்பட்டவர்களாக நான் நினைக்கிற மனுஷ்ர்கள் வரை அனேகம் பேருக்குக் கடுதாசி எழுதியும் ஒரு ஜிவீய காலம் முழுசையும் போக்கினவன் “  சிறைக்குப் போய் விட்டு வந்து ஊருக்குப் போகப் பிடிக்காமல் பாண்டிச்சேரி வழியாக கப்பலேறி கரும்பு தேசத்தில் ஹெட்மஸ்தூர் வேலை பார்த்து அதிகாரம் பண்ணி, களவாணியாகி  யுத்தத்தில் மாட்டி சென்னை போக கப்பல ஏறி லண்டன் வந்து கரை சேருகிறவன்.
 விஸ்வரூபமாய் தென்படும்  இன்னொரு கதாபாத்திரம் தெரிசா.பிராமணப் பெண்ணாய் பிறந்து வளர்ந்தவள் கிறிஸ்துவ  தேவ ஊழியத்திற்காக லண்டன் போகிறவள் பிராமன் ரோமன் க்த்தோலிக்க ஸ்திரி பிறகு புராட்டஸ்டேண்டுக்கு மாறியவள். மதறாஸ் சர்வகலா சாலையில் இங்கிலீஸ்காரன் பீட்டரைச் சந்தித்து கணவனாக்கிக் கொண்டு அவன்  பிரஞ்ச்  தேச யுத்தத்திற்கு போய் விட்டு வர, அவளின் வேலைக்காரப் பெண்ணின் கணவனால் கொல்லப்படுகிறவன்.வேதய்யன் ஆறு விரல்காரன் என்றால் திருட்டிலும் கொலையிலும் ஈடுபடும் ஜேம்ஸ் ஒற்றைக்கையன்.

பிராமணர்களைப் பற்றிய சித்தரிப்பில் தேர்ந்த நுணுக்கம் தென்படுகிறது.வேதம் கற்பிப்பவன் என்றாலும் பூணூல் போடாமல் இருக்கிறான் வேதய்யன்.வேதத்தில் ஏறிய பிராமணனுக்கு என்னத்துக்குங்காணும் நூலும் மற்றதும்
மலையாளிகளின் பார்வையில் தமிழர்கள் பற்றிய கிண்டல்கள் விரவிக் கிடக்கிறது.பாண்டி பாண்டி என்று கூவுகிறது.பாண்டித்தமிழ் புரியாத  பாஷை என்றாகிறது.காலம் பற்றிய நுணுக்கமான குறிப்புகள் அங்கங்கே விரவிக்கிடக்கிறது.காலம் முன்னும் பின்னுமாக நகர்ந்து  பல கண்ணிகளை ரகசியக்குறிப்புகளுடன் வெளியிடுகிறது.
குழந்தையில்லாத பலதம்பதிகள் நாவலில் காணப்படுகிறார்கள் மகாலிங்கய்யன், நடேசன், தெரசா என்று... காலம் நாற்பதிற்கும் முற்பட்ட்து என்பதால் கற்பனைத்தே தீர வேண்டிய காலம் என்பதை இந்நாவலில் சிரமப்பட்டு  கொண்டு வந்திருப்பதற்கு பாராட்ட வேண்டும்.நாவலின் காலம் பற்றிய குறிப்புகள் நுணுக்கமாக பல இடங்களில் விரவிக்கிடக்கின்றன.

மனசு எப்படி எல்லாமோ குறக்களி காட்டி மாந்திரிக யதார்த்த்தோடு விளையாடி ஊடும் பாவுமாய் இந்நாவலில் அமைந்திருப்பது முக்கிய அம்சமாகிறது.. வடிவ நேர்த்திக்காக கையாளப்படும் அம்சங்கள் விதவிதமாய் அமைக்கப்பட்டிருக்கிறது. கடிதங்கள்,  பத்திரிக்கையாளர்களின் குறிப்புகள்( ஸ்காட்லாண்ட் பாலம் அமைப்புப் பணியில் இளவரசன் எட்வர்ட் பயணமும் அதை பத்த்ரிக்கை செதுக்கும் முறைகளும்) இன்னும் சுவாரஸ்படுத்துகின்றன. பழகியவர்களும் செத்துப்போனவர்களும் திடுமென வந்து விளையாட்டு காட்டுகிறார்கள். ஆவிகளோடு பலர் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். லண்டனில் ஆவிகள் உலாவும் இடத்திற்கும் சுற்றுலா  போகிறார்கள். இது மாயா தத்துவத்திற்கும் கடைசியில் காசிக்கும் எல்லோரையும் தள்ளிக்கொண்டு போகிறது.மகாலிங்கய்யனை கடிதங்களில்  புலம்ப வைக்கிறது.மாந்திரீக யதார்த்தவாதத்தின் சுவையை உணர இனி ஆங்கில நாவல்களையோ, மொழிபெயர்ப்புகளையோ நாட வேண்டியதில்லை. இது ஒன்றே போதும் “ என்கிறது நாவலின் பின் அட்டைக்குறிப்பு.
மகாலிங்கய்யன் தறி கெட்டு ஓடுவதில் மதராஸ் பட்டணம், புத்ச்சேரி, கரும்புப்பிரதேசம், லண்டன், கேரளா என்று திரிகிறதற்காக வலிந்து அலைக்கழிக்கப்படுவதாகவே தோன்ற வைத்து விடுகிறது. பாலியலும் உறவுகளிலும் ஓரினப்புணர்வு முதல், சேர்ந்து வாழும் நபர்கள் வரை வகைவகையாய் காட்டப்படிருக்கிறது 

     கேரள பிராமணியமும், கிறிஸ்துவமும் ஒன்றாக ஊடாடி நாவல் முழுக்க அலைகிறது.  அது சார்ந்த  மொழியும் கலாச்சார அம்சங்களும் கொண்டு நிறுவப்பட்டிருக்கிறது. அதற்காய் உபயோகப்படுத்தப்படும் மொழியில் கலப்படம் சுலபமாக உலாவி வாசிக்கும்தமிழ் உணர்வாளர்களை சங்கடப்படுத்துடுகிறது. நவீன மொழிப் பயன்பாட்டில் கலப்படம் உச்சதிற்குப் போய் விடுகிறது.


இதில் தென்படும் பெண் படிமங்கள் உண்மையானதாகவும்   கனவாகவும் இருக்கிறது.  இந்திய சமூகத்தின்  அந்த காலமதிப்பீடுகளை பிரதிபலிக்கக் கூடியவை என்றாலும் அய்ம்பது ஆண்டுகள் கழித்து இன்னும் அதே போல்  நிலைத்து விட்டதையும்  காணலாம். அவர்கள் என்றைக்குமான சமூக இருப்பை கண்டடைய இந்நாவலின் மூலமும் வகை செய்வதை இரா.மு. இந்நாவலில் நிறுவியிருக்கிறார். குறிப்பிடத்தக்கதான் இரா.மு.னின் முந்திய நாவல்கள் மூன்று விரல், அரசூர் வம்சம்  போன்று வெகு கவனத்தில் கொள்ளும்படியானது இந்த நாவல் ..குடும்ப அமைப்பில் இருந்து துண்டாடப்பட்ட மனிதர்களின் தனிமை உலகங்களை விசுவரூபித்துக்காட்டுகிறது.
    ஒரு பக்கத்திற்கு ரு1.50 எனக்கணக்கிட்டு வெளிவரும் தமிழ் நவீன இலக்கிய நூல்கள் வாசகர்களிடமிருந்து  விலை காரணமாக வாங்க இயலாமல் அந்நியமாகி நிறுத்தும் சூழலில் 800 பக்க நாவலை மலிவாக 400 ரூபாய்க்கு கிழக்குப் பதிப்பகம்    ( அதிலும் 10-20% கழிவு வாங்கி விட வாய்ப்பு உள்ளது ) வெளியிட்டிருப்பதை பாராட்டியாக வேண்டும்.
சுப்ரபாரதிமணியன்  , 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602   *9486101003
09486101003 / 


 அரிசிபருப்பு  சோறு:  சுப்ரபாரதிமணியன்

* நாவல்= ஆகஸ்ட் 15
 : குமரி எஸ். நீலகண்டன்
ஆகஸ்ட் 15  நாவல் : வித்தியாசமான வடிவம் . இணையதள பக்கங்கள், அவற்றின் பின்னோட்டம் என்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதில் காந்தியின் உதவியாளர் கல்யாணசுந்திரத்தின் வாழ்க்கை அனுபவங்களும் இளம் வயது சத்யாவின் சில பக்கங்களும் இந்த புது வடிவத்தில்  சொல்லப்பட்டிருக்கின்றன.கல்யாணத்தின் தீவிர அனுபவங்கள் பெரிதாய் ஆக்கிரமிக்கின்றன. சத்யாவின் அனுபவங்கள் வயது காரணமாக சற்றே மேலோட்டமானவை. இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பது கல்யாணம் மூலம் காந்திய நெறிகள் வலியுறுத்தப்படுவது, அதை இளைய தலை முறை பாடமாக எடுத்துக் கொள்வதும் ஆகும்..கல்யாணம் பற்றிய நுணுக்க்மான தகவல்கள், அரிய புகைப்படங்கள் வலு சேர்க்கின்றன். புதிய வகை  டாக்கு நாவல் இது.

ரூ 450,சாய் சூர்யா பதிப்பகம், சென்னை 05  / 9444628536

மூன்று திரைப்படங்கள்:
1. நினைவுகள் அழிவதில்லை.:  நிரஞ்சனாவின் மலையாள நாவல் படமாகியிருக்கிறது. பொதுவுடமை இயக்கத்திற்கு வருபவர்களுக்கு அறிமுகமாகும் ஆரம்ப நாவல்களில் ஒன்று. கேரளாவில் கையூரில் பொதுவுடமைத் தோழ்ர்கள் வாழவும் போராட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது.  இன்றைய இளைஞர்களின் மனப்போக்கு பற்றிய சிலபதிவுகளையும், ம்லையாளச் சூழலை தவிர்த்த போக்கும் தமிழ் ரசிகனுகு உதவுகிறது.  நாடக பாணி, டூயட் உறுத்தினாலும் ஒரு முக்கிய பதிவு. இயக்குனர்: பகவத் சிங் கண்ணன், ஒளிப்பதிவு : புது யுகம் நடராஜன். முன்னாள் பதிப்பாளர், நல்ல வாசகர்.

2. கவுரவம்:  கவுரவக் கொலைகள் பற்றிய விவாதம் தரும் படம். பல மேடைகளில் பொதுவுடமை, தி. க தோழர்கள் சொல்வதினை இப்படமும் சொல்கிறது. வணிகரீதியான முயற்சிதான். பிரகாஷ்ராஜ், ராதாமோகனின் அக்கறையை கூர்மையான வசனங்களில் காணலாம்,
3. பரதேசி: ரொம்ப தாமதமாய் பார்த்தேன். அழவைத்து விட்டார் பாலா என்னை.. கூடவே டாக்டர் டேனியல் ஆவியையும் . அவருக்கு இப்படி ஒரு கெட்ட அஞ்சலியா;

தமிழ் சென்ரியூ:
ஒரு டீ சொல்லுங்கள்;
கவினின் கோபம் ஆற்றாமை, சமூக அக்கறை வெளிப்பட்டிருக்கும் இன்னொரு தொகுதி . அதிலிருந்து சில: படைப்பாளியின் ஆதங்கமாய்..

1. கவிதைப் புத்தகம் கொடுத்துவிட்டு
விமர்சனத்திற்க்காகக் காத்திருந்தேன்
வெறும் காற்றுதான் வந்தது.
2. எழுத்தாளனைச் சுரண்டிப்பிழைக்கும்
பதிப்பாளனுக்கு
எங்கிருந்து வந்த்து சமூக அக்கறை
3
.பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாமல்,
நானும்
கவிதையெழுதிக் கொண்டுதானிருக்கிறேன்
4.
அடக்க விலை 17 ரூபாய்
விற்பனை விலை 100 ரூபாய்
பதிப்பாளர்= வியாபாரி
5.
சிரித்தபடி உலா வரும்
முகமூடிக் கொள்ளைக்கார்ர்கள்
பதிப்பக உரிமையாளர்கள்
6. மாதாமாதம் பத்துப் பக்கங்களுக்கு
ஆசிரியரின் கவிதைகளே அச்சேறுகின்றன
ரொம்பத் தீவிர இலக்கிய இதழ்
7.
குட் மார்னிங் சொல்லும் பெண்ணுக்கு
இருநூறு லைக்குகள்
கவனிப்பாரற்று என் கவிதைகள்
(வெளியீடு: பதியம் ,திருப்பூர் விலை ரூ 100    9942050065  )

ஹைகூ கவிதைகள்: 
மழையின் கையெழுத்து
புதுக்கோட்டை தங்கம் மூர்த்தி அய்ந்தாம் தொகுப்பை ஹைவுக்களாக ஆங்கில மொழிபெயர்ப்புகளுடன் கொண்டு வந்திருக்கிறார்.           கைபேசி: 94431 26025  “ மழையின் கையெழுத்து “  தமிழ் சூழல்கள், புகைப்படங்களில் ஆங்கில, வடக்கத்திய  முகங்கள் . அதிலிருந்து..

*  அழகாகப் பேசுகின்றன்
பறவைகள்-
உளறும் மனிதர்கள்
* மழையில் நனைய ஆசை
சட்டைப் பையில்
அவளின் கடிதம்
* பட்டாம்பூச்சி
பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது மகளுக்கு.

ஒரு கடிதம்;
சாயம் புரண்ட திரா “ பற்றி ( சாயத்திரை மலையாள மொழிபெயர்ப்பு )I
I   was able to lay my hands on your Tamil Novel “ Chayampurandaa Thira “ through its Malayalam translation. A very good novel depicting the life of people surrounding baniyan companies. The narration is very fine . The characters Bhakthavatsalam, Samiyappan, Nagan and Chettiar will remain indelible in the minds of readers. It is a telling point  that the novel never get dull for want of prominent women characters.  The smooth and flawless translation   of Stanley has made the reading easy and pleasant. ( SR Gopinatha menon, Retd P S to Member Company Law Board, Palakad, Kerala ):
Published by Cintha, Thiruvananthapuram

* Subrabharathimanian   (  subrabharathi@gmail.com )