சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 30 அக்டோபர், 2012

வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் 'நீர்த்துளி' நாவல் ஒரு மதிப்பீடு)

   நூல் அறிமுகம்  சி. ஆர். ரவீந்திரன்
----------------------------------------------------------------

வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான 'நீர்த்துளியை' வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.
நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.

சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம்.

வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார்.

அதை அவருடைய 'நீர்த்துளி' நாவலிலும் வெளிப்படையாகக் காண முடிகிறது. இந்த நாவல் நிகழ்காலத்தின் மாற்றத்தில் தவிர்க்க முடியாத தேவையின் விளைவாக மரபை மீறும் நியாயத்தை அடையாளப் படுத்துவதாக உள்ளது.

காலம் காலமாக வரையறைக்கு உட்படுத்தப்பட்டுக் காப்பாற்றப்பட்டு வரும் குடும்பம் என்ற அமைப்புக் குலைந்து சிதைந்து உருமாறும் தவிர்க்க முடியாத இழுத்தல் நிகழ்வை அடையாளப்படுத்தும் நோக்கம் நாவலில் அடக்கமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது ஒரு தனிப்பண்பு. 'சேர்ந்து வாழ்தல்' என்ற புதிய வாழ்க்கை மறையின் சிக்கலை மிகுந்த துல்லியமான மனத் தர்க்கங்களுடனும், அசைவுகளுடனும் கலை நேர்த்தியுடன் வெளிப்படுத்தியிருப்பது அவருடைய எழுத்தின் மாறுபட்ட ஒர தன்மையைப் புலப்படுத்துகிறது. அதற்கான தேவையும், சாத்தியப்பாடும் அவரைச் சுற்றி அமைந்திருப்பதை இனம் காணலாம்.

'உலகமயமாதல்' மற்றும் 'தாராளமயமாதல்' போன்ற நவீனப் பொருளாதாரக் கொள்கைகளின் தீவிர நடைமுறை காரணமாக வளரும் நாடுகளில் ஏற்படும் நவீன பொருளாதார வாழ்க்கைச் சூழலில் நிகழும் மாற்றங்களை மிகுந்த அக்கரையுடன் அவர் கவனிப்பது அவருக்குத் தவிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. விரைவாகத் தொழில் மயமாகி வரும் திருப்பூர் மாவட்டச் சூழல்களில் நிகழும் எதிர்மறையான நிலைமைகளை அவர் தன்னுடைய எழுத்துக்களின் வாயிலாக வடிவப்படுத்துகிறார். வாழ்க்கைச் சிதைவுகள், சுற்றுப்புறச்சூழல் சீர் கேடுகள், விளைநிலங்களின் சிதைவுகள் அமைதியைக் குலைக்கும் இரைச்சல்கள் போன்ற புதிய நெருக்கடிகளுக்கிடையில் வாழும் மக்களின் மனப் புழுக்கங்கள் தவிப்புக்கள், தகர்வுகள் அவருடைய படைப்புக்களின் தொனிப்பொருள்களாக இருப்பது இயல்பு. அதை இந்த நாவலிலும் இயல்பாகக் காணமுடிகிறது.

மணமாகாத இளைஞனும், மணமுறிவுக்கு உள்ளாகிப் புதிய சூழலில் வாழ வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படும் அவலப்பட்டுப்போன பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் உள்ள சிக்கல்களைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல் புலம் பெயர்ந்து வந்த அவர்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து வாழ முயலும் இருவரின் வாழ்க்கைச் சிக்கல்களே இந்த நாவலின் அடிப்படையான பிரச்சனை. மணமுறிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து மன அளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தும் கணவன். சாராம்கத்தில் இந்த மூன்று புள்ளிகளுக்கும் இடையில் ஒரு கோபம் அமைத்திருக்கிறார் நாவலாசிரியர். முறைப்படுத்த முடியாத அந்தக் கோலம் முழுமையடைய முடியாத வாழ்க்கையை ஒரு நாவலாக முழுமைப்படுத்தியிருக்கிறது. அவர்களைச் சுற்றி இயங்கும் வாழ்க்கையில் இணைந்தும், பிரிந்தும், முரண்பட்டும், விலகியும், போகிற மனிதர்களின் உறவுகளையும் பிணைத்து ஒரு வாழ்க்கைச் சூழலின் பின்புலத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

புதிய ஒரு சூழலைப் பின்புலமாக்கி, இடம் பெயர்ந்துவரும் மனிதர்களின் வாழ்க்கையை அதன் இயங்கு தன்மைகளுடன் தெளிவாக நாவலுக்குள் அடக்கியிருக்கிறார். புதிய தளம், புதிய உள்ளீடு, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை, புதிய பிரச்சனை போன்ற புதிய தன்மைகளை உள்ளடக்கியிருக்கிறது இந்த நாவல்.

* 'நீர்த்துளி' (நாவல்) : சுப்ரபாரதிமணியன்
வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம்.சென்னை. விலை: ரூ. 160/-
விமர்சனம்: சி.ஆர். ரவீந்திரன் 3/86 கோவைப்புதூர் ரோடு
பேரூர் செட்டிபாளையம், கோவை-641010

subrabharathi@gmail.com

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

 



இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25


Share


செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,மாபூமி போன்ற திரைப்படங்கள்,தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின் செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்தன. தமிழ் புத்தகக்கடைகள், தமிழ் அமைப்புகள் , தமிழ் அன்பர்களைத் தேடும் முயற்சியில் ஆரம்பத்தில் வெகுவாக ஈடுபட்டேன். நிஜாம் ஆட்சி காலத்தலைநகரான ஹைதராபாத், பிரிட்டிஸாரால் ராணுவ நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட செகந்த்திராபாத் நகரங்களின் முக்கிய இடங்களைச் சுRRRற்றிப்பார்த்தggggg பின்பு ஒரு வகை தனிமையே மிஞ்சியது. மோண்டா மார்க்கெட் வீதி மேனன் கடையில், செகந்திராபாத் தொடர்வண்டி நிலைய எதிர் கடைகளில் சபரிமலை உபாயங்கள் விற்கிற அளவு தமிழ் வெகுஜன இதழ்கள் விறுவிறுப்பாக விற்றன. அமுதசுரபி, கலைமகளுமே அதிக பட்ச இலக்கிய இதழ்களாக செகந்திராபாத் தமிழர்களால் கருதப்பட்டன. செகந்திராபாத் பிள்ளையார் கோவில், கீஸ் ஹைஸ்கூல் ஆகியவற்றில் தென்பட்ட பிராமணர்கள் அந்நியப்பட்டவர்களாகவே இருந்தனர். செகந்திராபாத் ரயில்வேதுறையில் ஏகப்பட்ட தமிழர்கள் இருப்பது செய்தியாகவே இருந்த்து. அவர்களுடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. கீஸ் ஹைஸ்கூலில் நடக்கும் வருடாந்திர பிரமாண்ட ராமநவமி விழாக்கள் சபா நாடகங்களையும், பிராமண கலாச்சாரத்தையும் அவர்களின் நேசத்தையும் பறைசாற்றின .கண்டோன்மெண்ட்களில் ராணுவத்துறையினரின் பிரிவுகளில் பணியாற்றும் தமிழர்களின் தமிழர் திருநாள் கொண்டாட்டங்களும், த்மிழ் மீதானப் பற்றும் அவர்கள் ராமநவமியினருக்கு எதிர்வினையாகவும் இருந்தன. தொடர்வண்டி நிலையப்பகுதிகளிலும், கிளார்க் டவர் பார்க், கண்டோன்மெண்ட் கார்டன் பூங்காக்களிலும், திவோலி அஜந்தா திரையரங்குகளில் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடல்கள் போதும் தமிழர்களைக் காண முடிந்தது.உஸ்மானியா பல்கலைக்கழக தமிழ்த்துறையினர் பழமைவாதிகளாக இருந்தனர். ஆனால் அவர்களுடனான நெருக்கம் இல்லாத சமயத்தில் ஆந்திர மாநிலத் தமிழர் பேரவை அமைப்பினர் ஆசுவாசம் தந்தனர்.அவர்களில் கிருஸ்ணசாமி மட்டுமே ஓரளவு இலக்கிய உணர்வு கொண்டவராவார்.மற்றவர்கள் திராவிடக் கழகத்தின் சார்பான தீவிர அக்கறையாளர்களாக இருந்தனர்.இலக்கிய சார்புக்குத் துணையாக யாரும் இல்லாத ஏக்கத்தில் திரிந்தபோது தென்பட்ட சில நண்பர்களோடு உள்ளூர் படைப்பாளிகளை உருவாக்க வேண்டும் என்ற அக்கறையில் கனவு இதழை ஆரம்பித்தோம். அதற்கு முன்னோடியாக பம்பாய் தமிழ்ச்சங்கத்தின் ஏடு, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க கேரளத்தமிழ் ஆகிய இதழ்கள் இருந்தன.அங்கு நான் சென்று இரண்டாண்டுகளுக்கு மேலாகியிருந்தது. ஹைதராபாத் செகந்திராபாத் இரட்டை நகர தமிழர்களின் முகமாக அது இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்த்து. முதல் இரண்டு இதழ்களில் உள்ளூர் படைப்பாளிகளின் சுமாரான கவிதைகள், சுமாரான சிறுகதைகள், துணுக்குகள், உள்ளூர் தமிழர்களின் மனக்குமறல்கள் என் வெளிப்படுத்தினோம். படைப்பு ரீதியான சமரசமோ, நவீன இலக்கிய அக்கறையின்மையோ, நானே பணம் முதலீடு செய்கிற அலுப்போ எல்லாம் சேர்ந்து கனவை தமிழ்நாட்டுப் படைப்பாளிகளுக்கான இதழாக்கி தமிழகத்திலிருந்து படைப்புகளை பெறச்செய்தது..சென்னையில் தீபம் திருமலை அச்சாக்கத்தில் உதவி புரிந்தார். உள்ளூர் படைப்பாளிகளுக்கான உள்ளூர் பக்கங்கள் என்ற பகுதி பின் இணைப்பாகத் தொடர்ந்து கொண்டிருந்த்து. கன்வு இலக்கிய வட்டத்தின் மாதக்கூட்டங்களை கண்டோன்மெண்ட் கார்டன் பூங்கா, க்ளாக் டவர் பார்க் என்று நடத்தினேன். டெக்கான் கிரானிக்கல் போன்ற பத்திர்ரிக்கைகளில் கனவு இலக்கிய வட்டச் செய்தி நடக்கும் நாளில் இன்றையச் செய்திகளில் இடம் பெற்று கவனத்தை ஈர்ர்க்கும். கி.ரா, ஜெயந்தன், அசோகமித்திரன் என்ற வகையில் ஒவ்வொரு படைப்பாளிகள் பற்றின அறிமுகமாக அவர்களின் நூல்கள் பற்றின அறிமுகமாகவும் படைப்பு வாசிப்பு நிகழ்ச்சிகளாகவும் அவை அமைந்தன. பங்கு பெறுபவர்களில் சிறந்த உரைக்கும் படைப்பிற்கும் ” கனவி”ற்கு வரும் நூல்களைப் பரிசாக தருவேன். ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கினை அடையும் நண்பர்கள் கூட்டம்.கனவின் படைப்புத்தரம் உள்ளூர் நண்பர்களுக்கு சிரம்மாக இருந்தாலும் அதை கவனத்துடனே பார்த்து வந்தார்கள். கனவு செகந்திராபாத்தின் நாலைந்து புத்தக்க் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றாலும் விற்பனையாகாமல் கிடக்கும். ஆயிரக்கணக்காணோனோர் தமிழர்கள் கூடும் மேற்ச்சொன்ன நிகழ்ச்சிகளின் போது கெஞ்சிக் கூத்தாடி ஒரு மேஜை மீது கனவு இதழ்களைப் பரப்பி வைப்பேன். கனவா, அதன் பலன் உண்டா, இலக்கியமெல்லா யார் படிப்பாங்க, என்னமோ தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கம், தமிழ் மறந்திரக்கூடாது. அத்னாலே சிரம்ப்பட்டு இங்கெல்லாம் வர்ரோம் என்ற ரீதியில் ” கனவை”ப் பார்ப்பவர்கள் கருத்தைச் சொல்வார்கள். அந்தப் பெரும் ஜனத்திரளுக்கு எதிராக ” கனவு ” தன் செயப்பாட்டை தொடர்ந்து கொண்டிருந்தது. 

விடுமுறையில் ஊர் வருகிற போது கோவை விஜயா பதிப்பகத்தின் புத்தகக்கண்காட்சி, வாசகர் திருவிழாக்களில் கலந்து கொண்ட போதெல்லாம் புத்தகக்கண்காட்சி கனவினை விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவரும் சரியென்று புத்தக பண்டல்களுடன் செகந்திராபாத்தில் புத்தகக் கண்காட்சியை நட்த்த வந்தார். விற்பனை வெகு சுமார். நஸ்டம். புத்தகங்கள் மத்தியில் நூறு ரூபாய் தாளை வைத்து புத்தக விற்பனையை அடுத்த ஆண்டில் செய்யப்போவதாகச் சொன்னார். அடுத்த ஆண்டு அவர் வரவில்லை. எங்களையே செய்யச் சொல்லி பதிப்பகங்களிடம் சிபாரிசு செய்தார். அடுத்த ஆண்டு முதல் நாங்களே ஏற்பாடு செய்தோம். அசோகமித்திரன், சுஜாதா, நா.பார்த்தசாரதி முதல் மாபூமி பட இயக்குனர் நரசிங்கராவி, பாடகர் கத்தார், கவிஞர் காசி ஆனந்தன் வரை பலரை கண்காட்சி பேச்சாளர்களாக அழைத்தோம். பெரும்பாலும் அப்பளம், வடாகம் தயாரிப்பு, சமையல் குறிப்புகள், ஆன்மீக நூலகள்,ஜோஸ்ய நூல்கள் விற்றன. நவீன இலக்கிய நூல்கள் வெகு குறைவே நர்மதா, வானதி முதல் அன்னம் வரை புத்தங்களை அனுப்பி ஊக்குவித்தாலும் அவர்களுக்கும் திருப்தியில்லை. ஆனாலும் புத்தங்களை மக்களிடம் கொண்டு போகிற வேலை என்பது மட்டும் தொடர்ந்தது. புத்தக்கண்காட்சியின் பாதிப்பாய் ராமநவமி, இந்து கலாச்சார விழாக்களிலும் மற்றவர்களின் சிறு புத்தகக் கடைகள் இடம் பெறுவது தொடங்கியது. மயிரால் மலையை இழுக்கிற வேலையை பெரும்பாலும் நான் தனியாளாகச் செய்து கொண்டிருந்தேன். புத்தகக் கண்காட்சி சமயங்களில் வரும் மூட்டு வீக்கமும், உடல் உபாதைகளும்,ஒவ்வாமையும் என்னைச்சிரம்ப்படுத்தும்..வெளிமாநிலத்தில் வருகின்ற இலக்கிய இதழ் என்பதால் தமிழகப் படைப்பாளிகள் அக்கறையுடன் பங்கேற்றனர். சுந்தரராமசாமி, க.நா.சுவின் கவிதைகள் கூட இடம்பெற்றன. நகுலன் பத்துக்கும் மேற்பட்ட கதைகள், பல கவிதைகள், புத்தக விமர்சனங்கள், கோபிகிருஸ்ணன், சுரேஸ்குமார இந்திரஜித்.தமிழவன், எஸ்.ராமகிருஸ்ணன்,,ஜி.முருகன்,சு.வேணுகோபால், இரா.நடராசன்,தஞ்சைப்பிரகாஷ்,பிரம்மராஜன்,பழமலை,தேவதேவன் என்று பலர் எழுதியிருக்கிறார்கள்.பிரமிளின் இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்கு மட்டும் அவருக்கு சிறு சன்மானம் தந்திருக்கிறேன்.இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த படிப்பாளிகள் பெருமளவு எழுதியிருக்கிறார்கள். எட்டு ஆண்டுகள் செகந்திராபாத்திலிருந்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மாற்றலாகி வந்தபின்பு திருப்பத்தூரில் ஓராண்டு இருந்த போது பக்கத்து வீட்டில் இருந்த ஜெயமோகன் நான்கு இதழ்களைத்தயாரித்தார். அதில் சுந்தர்ராமசாமி சிறப்பிதழ், அசோகமித்திரன் சிறப்பிதழ் குறிப்பிடத்தக்கவை.அவரின் படைப்புகள் செகந்திராபாத்தில் இருந்த போதே பல ” கனவு “ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. சிற்ந்த சிறுகதையாளர்களுக்கான ” கதா” பரிசை ஒரே ஆண்டில் இருவரும் பெற்றிருந்தோம்.அப்போது அவர் தொகுத்த தற்கால மலையாளக்கவிதைகள் ”கனவி”ன் ஒரு சிறப்பிதழாகவும் வந்திருக்கிறது. பாவண்ணன் தயாரிப்பிலான கன்னடக் கவிதை சிறப்பிதழ், நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் சிறப்பிதழ், சிறுகதைகள் சிறப்பிதழ், சிங்கப்பூர் உலகப்புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்தபின்னதான சிங்கப்பூர் சிறப்பிதழ், அய்ரோப்பிய நாடுகளுக்கு சென்று விட்டு வந்தபின்னான புலம்பெயர்ந்த எழுதாளர்களின் படைப்புகள் கொண்ட இதழ்கள், இலங்கைச் சிறப்பிதழ், சினிமா நூற்றாண்டை ஒட்டி யமுனா ராஜேந்திரன் தயாரித்த சினிமா சிறப்பிதழ்கள் போன்றவற்றை குறிப்பிடத்தக்க இதழ்களாகச் சொல்லலாம்.இலஙகிச் சிறப்பிதழ் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்த போது ஏற்பட்ட ராஜீவ்காந்தியின் படுகொலையும். தீவிர விமர்சனங்களும் அவ்விதழை அரசியல் கட்டுரைகளும் தீவிர விமர்சனங்களும் கொண்ட படைப்புகளை நீக்கிவிட்டு சாதாரண இதழாகக் கொண்டுவரவேண்டிய கட்டாயத்திற்கானது. எனது வாசகர்கள் படைப்பாளிகளாக மாறியபோது இடம் தர முடிந்தது. எந்து ஆதர்ச எழுத்தாளர்களின் படிப்புகளைப் பெற்ரு இதழ்கள் வந்தன் என்பதும் எனக்குப் பெருமைதான். ”கனவி’ன் இருபதாண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ”கனவி”ல் நான் குறைவாகத்தான் எழுதியிருக்கிறேன். .புதிய எழுத்தாளர்களின் மேடையாக இருந்திருக்கிறது. வெகு சொற்பமான எழுத்தாளர்களின் படைப்புகள் வெகுஜன இதழ்களில் வெளிவருவதால் வெகுஜன, இலக்கிய இதழ்களுக்கான இடைவெளி குறைந்து போயிருப்பதாக சொல்லப்பட்டாலும் அவ்வாறில்லை. புதிய எழுத்துக்கான மேடையாக ”கனவு” இருந்திருக்கிறது. வெகுஜன எழுத்தின் மாற்று அம்சங்களை அவை கொண்டிருக்கிறது.

சொந்த ஊரான திருப்பூர் வந்த பின் கனவு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.செகந்திராபாத்தில் வசித்து வந்த போது வெளி மாநிலத்திலிருந்து வரும் இதழ் என்ற சலுகை நோக்கில் பெருமளவில் படைப்புகளை அனுப்பிய எழுத்தாள நண்பர்களின் பெருந்தன்மையை எண்ணி வியக்கிறேன். சொந்த மாநிலத்திற்கு வந்த பின்பு அதை உஅணர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து இளம் படைப்பாளிகளின் களமாக “ கனவு” இருக்க வேண்டும் என்ற எனது எண்ணம் பொருளாதாரக்குறைபாடுகளின் காரணமாக பல சமயங்களில் கனவாகப் போய்விடுகிற துரதிஸ்டமாய் அமைந்து விட்டதும் வருத்தமானதே. திருப்பூரில் ” கனவி”ன் இலக்கிய கூட்டங்களுக்கு செகந்திராபாத் கூட்டங்கள் போலவே குறைவானவர்களே வருகிறார்கள். உள்ளூர் சந்தா வெகு குறைவே.கடந்த 12 ஆண்டுகளாக மருத்துவர் முத்துசாமியுடன் இணைந்து தாய் வழிக்கல்வியை மையமாகக் கொண்ட தாய் தமிழ்ப்பள்ளியுடன் இயைந்து செயலாற்றி வருகிறேன்.மாற்றுக் கல்விக்கான குறியீடாக தாய்தமிழ்பள்ளி விளங்கி வருகிறது. தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்படும் கதைசொல்லி நிகழ்ச்சிகளும்,ஆண்டுக்கொரு முறையான கதை சொல்லி திருவிழாவும், தமிழ்நாடு முழுக்க இருந்து கதை சொல்லி போட்டிக்காக வரும் சிறுவர் கதைகளும், என்னை சிறுவர் கதைகள் எழுதத் தூண்டியிருக்கிறது. புதுயுக கனவு திரைப்பட திரையிடல் முயற்சிகள் மாற்றுத் திரைப்படங்களை ரசிக்க ஏதுவாகிறது.மத்திய அரிமா சங்கத்துடன் இனைந்த ஆண்டு குறும்பட விருதுகள் குறும்பட படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. திருப்பூர் வந்த பின் சுற்றுசூழல் நடவடிக்கைகளில் அக்கறை கொண்டு வருவதால் அது சார்ந்த படைப்புகள், செயப்பாடுகள் நுகர்வுக் கலாச்சாரத்தின் எதிரான நியாய வணிக, கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்துவதாக அமைந்து வருகின்றன..எனது தொடர்ந்த படைப்புகளில் இடம் பெறும் உதிரிமக்களும், விளிம்பு நிலைப்பிரதிநிதிகளும் வெகு ஜனக்கலாச்சார இயல்பைக்கேள்விக்குறிக்குளாக்குபவர்களாகவே உள்ளனர். ஒருவகையில் என் தொடர்ந்த செயல்பாடுகள் மாற்று கலாச்சார அம்சங்களை உள்ளடக்கியதாக இயைந்து இருப்பதை யோசித்துப் பார்க்கையில் தெரிகிறது. இது திட்டமிடப்பட்டதாக இல்லாவிட்டாலும் உள்ளுணர்வின் செயல்பாடகவே அமைந்திருக்கிறது.இது இன்றைய நுகர்வுகலாச்சார எதிர்ப்புணர்வின் மாற்றுக்கலாச்சாரக் குறியீடாகவே என்ககுப் படுகிறது.
( சேலம் எழுத்துக்களம் நடத்திய பெருமாள்முருகன் தலைமையிலான ” கனவு” இருபத்தைந்தாண்டை ஒட்டிய பாராட்டு விழா, சிற்றிதழ் விருது விழா ஏற்புரையின் ஒரு பகுதி . அன்றைய தின பிற உரையாளர்கள் சூர்யநிலா, அ.கார்த்திகேயன், வின்சென்ட், பொ.செந்திலரசு, ஆனந்த்,அம்சபிரியா ஆகியோர்)

வெள்ளி, 26 அக்டோபர், 2012

திரைப்படம்: ஹாலிவுட்டின்

திரைப்படம்: ஹாலிவுட்டின்

சுப்ரபாரதிமணியன்

Share
கடந்த ஆண்டுகளில் வெளியான அமெரிக்கப்படங்களில் குறிப்பிட்த்தக்கதாய் சம்வேர், பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான். அவன் போகுமிடங்களுக்கு கூட்டிச் செல்கிறாள். நட்சத்திரத்தின் மகள் என்ற அந்தஸ்து அவளுக்கு மிதப்பைத் தருகிறது. அப்பா என்ற நிலையில் அவளை நன்கு கவனித்துக் கொள்கிறான். விளையாட்டும், பொழுது போக்குமாய் கழிகிறது. ஜானியின் பெண் சிநேகிதிகளும், அவர்களுடனான விளையாட்டும் தொடர்கிறது. அவையெல்லாம் மகளின் பார்வையிலிருந்து தப்புவதும் இல்லை. திரைப்படவிழாக்கள், கைரேகை, கால்ரேகை பதிப்பு நிகழ்ச்சி நடிகைகளுடானான ஸ்டில் எடுக்கும் நிகழ்வுகள், பெரும் தயாரிப்பாளர்களைச் சந்திப்பது என்று பொழுதைக் கழிக்கிறாள். மகள் இல்லாத தனிமையைச் சட்டென உணர்ந்தும் பார்க்கிறான். அவனை உலுக்கி விடுகிறது. சொகுசோ, பணமோ ஆடம்பரமோ குறைவில்லாத நிலையில் மனைவியில்லாத தனிமை அவனை உறுத்தவே செய்கிறது. மகளை விடுமுறையைவிட்டு பிரிகிறபோது அந்த உறுத்தல் அவனை அழுகைக்குள்ளாக்குகிறது. இறுதிக் காட்சியில் விலை உயர்ந்த காரில் சென்று கொண்டிருப்பவன் காரை நிறுத்திவிட்டு நடந்து போகத் துவங்குகிறான். கதாநாயகனின் பெண்களுடனான நெருக்கமான காட்சிகளும், விடுதி அறையின் கட்டில் கம்பிகளில் பெண்களின் நிர்வாண நடனமும். லாஸ் ஏஞ்சல் முதல் இத்தாலி வரையிலான கதாநாயகனின் பயணங்களும் சுவாரஸ்யமானவை.
தன்னை நடிகன் என்று கண்டுகொள்வதால் ஏற்படும் வெறுப்பை இப்படத்தின் பல காட்சிகளில் காண முடியும் . பணம், புகழ் , வெற்றி என்று மிதப்பவன் அவன். பெராரி கார் மிக வேகமாக செல்வதில் பெயர் பெற்றது.அதில் ஏறி பிற கார்களை விரட்டுவதில் அவனுக்கிருக்கிற பிரியம் அலாதியானதுதான். மதுவும் தேடிவரும் பெண்களும் அவனை எப்போதும் மிதக்கச் செய்து கொண்டே இருக்கிறார்கள். பிரிந்து போய் விடுகிற மனைவி. திடீரென்று ஒருநாள் தன்னிடம் வந்து சேர்கிற மகள். மகள் தன்னுடன் இருக்கிறபோதே அவன் தன்னை தந்தை என்று அடையாளம் கண்டு கொள்கிறான். அவளுக்கு நீச்சல் பயிற்சி, பாலே நடனப்பயிற்சி , ஓவியக் கண்காட்சிகள், விருந்துகள் என்று அவளைத் திருப்திபடுத்துகிறான். மகளும், பிரிந்து விட்ட மனைவியும் இல்லாதபோது தன்னை அந்நியனாகவே இனம் கண்டு கொள்கிறான். வேகத்திற்குப் பெயர் பெற்ற பெராரி காரை பாலைவனத்து சாலையின் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு எவ்வித இலக்குமின்றி நடக்கிறபோது அவன் ஒரு சாதாரண மனிதனாக இனம் கண்டுகொள்கிறான்.


இதன் இயக்குனர் ஷோபியா கப்போலாவின் முந்தின படமும் தி லாஸ்ட் டிரான்ஸ்லேசன் குறிப்பிடத்தக்கது. சம்வேர் படத்திற்கு ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் அமெரிக்க பெண் இயக்குனர் என்ற அளவில் பெருமை பெற்றவர். வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்தப்பட பரிசு பெற்றதன் மூலமும் சர்ச்சைக்குள்ளான்வரானார். வெனிஸ் திரைப்படவிழா தேர்வுக்குழு தலைவர் நெருக்கமானவர் என்பதால் சர்ச்சை பரிசு குறித்து எழுந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சம்வேர் பட இயக்கத்தில் ஈடுபட்டவர், மாடலில் உட்பட பல தொழில்களில் இருந்தவர் என்ற வகையில் அவர் மீதான் சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை. ‘காட்பாதர்’ போன்ற படங்களை இயக்கிய கொப்பலாவின் மகள் இந்த ஷோபியா.


ஆறு ஆஸ்கார் அகாதெமி விருதைப்பெற்ற அமெரிக்கப் படமான ‘பிரிசியஸ்’ சபையரின் நாவலை மையமாகக் கொண்டத் திரைப்படம். அதிக எடை கொண்ட பதினாரு வயதுப் பெண் பள்ளியிலிருந்து இரண்டாவது முறை கர்ப்பமடைந்த காரணம் காட்டி வெளியேற்றப்படுகிறாள். பள்ளியில் சக வயதினர் நிகழ்த்தும் வசை சொற்பிரயோகங்களும் அவளை பள்ளியிலிருந்து துரத்துகிறது. அவளின் முதல் கர்ப்பத்தைப் போலவே இரண்டாம் கர்ப்பத்திற்கும் காரணம் அவளின் தந்தைதான். வேலையில்லாத அம்மாவும் அவளை வார்த்தைகளால் காயப்படுத்துபவள்.வீட்டை விட்டு வெளியே துரத்துவதில் கண்ணாக இருப்பவள். மாற்றுப்பள்ளியொன்றில் சேர்கிறாள். அங்குள்ள ஆசிரியரும், தாதிப் பெண் ஒருத்தியும் அவளுக்கு ஆறுதலாக இருக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியேறுபவளுக்கு கிறிஸ்துவ தேவாலயத்தின் குழுப்பாட்டும் இசையும் ஆறுதலாக இருக்கிறது.


அம்மா அவளை சமூக நல அலுவலகத்தில் சந்திக்கிறபோது அவள் அப்பா எயிட்ஸால் செத்துவிட்டதாகத் தகவல் சொல்கிறாள். மகளும் தன் குழந்தையின் எயிட்ஸ் பாதிப்பைச் சொல்கிறாள். அவள் பற்றிய விபரக் கோப்பொன்றை அலுவலகத்திலிருந்து திருடி, நெருக்கமான இருபெண்களிடம் காட்டுகிறாள். அவர்கள் தரும் ஆறுதல் அவள் வாழ்க்கையை நடத்த ஏதுவாகிறது. கறுப்பினப் பெண் ஒருத்தியின் சொல்லவியலாத கொடுமைகள் அடங்கிய வாழ்க்கையை இதன் இயக்குனர் லீ டேனியல் இப்படத்தில் வைத்திருக்கிறார். நாவலின் மையத்தை சரியாக வெளிக் கொணர்ந்த்தன் மூலம் கறுப்பின சமூகம் பற்றின பார்வை சரியாக் முன் வைக்கப்பட்டிருக்கிறது இதில். 35 லட்சம் மில்லியன் டாலர் சம்பளம் பெறும் ஒரு ஹாலிவுட் நடிகையின் வாழ்க்கை ஒரு புறம். இன்னொருபுறம் அதே அமெரிக்க சமூகத்தில் வாழும் ஒரு கறுப்பினப் பெண் தன்னை சாதாரணமானவளாகக் காட்டிக் கொள்ளவே துயரங்களை மறைத்து நடிக்கும் நடிகையாக வேண்டியிருக்கிறது.
இந்திய வம்சவளி இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் ‘ஏர் பைண்டர்’ தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு வெற்றியைத் தழுவியது. டாய்ஸ் ஸ்டோரி படத்தின் மூன்றாம் பாகமும் இவ்வாணடு பெரும் வெற்றி பெற்று அனிமேசன் படங்களுக்கான வெற்றியைச் செய்தியாய் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் படங்களும், ‘ தி கராத்தே கிட்’ மறு உருவாக்கமும் உயர்ந்த தேர்ந்த தொழில்நுட்ப படங்களின் (ஸ்கை லைன்) தோல்வியைத் தாண்டி குழந்தைகளை மையமாக்க் கொண்டவற்றின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்சப்ஷன் போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கை தந்திருக்கிறது. சிஜஏ பிரதிநிதிகளை கதாநாயகர்களாக்க் கொண்டு ரஷ்யா, வியட்நாம், க்யூபா, போன்ற நாடுகளில் சாகசச் செயல்கள் செய்ய தேவையில்லாது போய்விட்டது. உலகின் கடைசி ராட்சத மிருகங்கள் போன்றவற்றைக் காட்டி மிரட்டிவிட்டு ஹாலிவுட் அலுத்துப் போயிருக்கிறது. இனி ஜீலியன் அசாஞ்ச்சின் விக்கிலீக்ஸ் வெளித்தள்ளியிருக்கும் தகவல்கள் கதைச்சுரங்கமாகும் அவர்களுக்கு.

சனி, 13 அக்டோபர், 2012

திரைப்படம் : ஹாங்காங்கின் இரவுகள்

ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன.

முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் பிரச்சினைகளாகி வன்முறை ரூபம் எடுக்கின்றன. கவனித்தும், அனுபவித்தும் கற்றுக் கொள்கிற சமூக புரிதல் இல்லாமல் போவதால் இது அதிகரிக்கிறது.ஆணாதிக்க மேலாணமையும், அதிகாரமும் உச்ச பட்ச நிலையை இதனால் எட்டுகின்றன.இது தரும் மன் அழுத்தமும், அதன் வடிவான மன நோயும் சாதாரணமாகி விடுகிறது . வேறொருபுறம் இது குழந்தைகள் மீதாவ வன்முறையாயும் வளர்கிறது. குழந்தைகள் மீதான இந்த வன்முறை ஆண்டுதோறும் 4 மில்லியன் குழந்தைகளைப் பாதிக்கிறது. எழுபதுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெண்ணிய இயக்கங்கள் இதை ஓரளவு கட்டுப்படுத்தி சட்டநியதிகளை கொண்டு வந்திருக்கிறது.. குடும்பப்பெண்கள், குழந்தைகள் மீதான வண் முறையின்  உச்சமாக் “ நைட் அண்ட் போக்” படம் தென்பட்டது.

நிஜக்கதையொன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படம் ‘நைட் அண்ட் போக்’ . மனைவி, இரு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தையே கொலை செய்து விடுகிற கணவனின் முரட்டு வாழ்க்கை பற்றியது. முரட்டுத்தனமான கணவர்களின் குறியீடாய் கூட அவன் திகைந்து விடுகிறான். நம்மூர் நிஜ வில்லன்களின்  ஒரு பரிமணமாக அந்தக் கணவன் இருக்கிறான்.
வழக்கமான கணவன்மாராகவே இருக்கிறான். அவனின் முந்தைய திடுமணத்தால் வளர்ந்த பையன் இருக்கிற நிலையில் விவாகரத்து பெற்றவன். மீன் சமையலில் வறுத்தது தவறு. வேக வைத்திருக்க வேண்டும் என்று சண்டை போட்டு மனைவியை அடிக்கிறான். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பணத்தைக் கட்டாமல் குழந்தைகளுக்கும் சங்கடமளிக்கிறான். மனைவியின் கைகளைக்கட்டி படுக்கையில் கிடத்தி உறவு கொள்வது அவனுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அவன் வேலையில்லாதவன் என்பதால் கிடைக்கும் பென்சன் அவனுக்கு இன்னும் பிடித்தமானதாக இருக்கிறது. சமூக பாதுகாப்பு அலவன்சு அவனுக்கு வேலைக்குப் போகும் அவசியத்தை வற்புறுத்துவதில்லை. மனைவி வேலைக்கு போவது அவனுக்கு பிடிக்கவில்லை.பெண்ணாய் பலர் முன் நடமாடுவது அவனுக்கு இன்னும் பிடிக்கவில்லை. மனைவி அடி தாங்காமல் தத்தளிக்கிறாள்.
பக்கத்துப் போர்ஷன் பெண் காவல்துறை புகார் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாள். மனைவி நிலைமை மீறும் போது அதையும் செய்து விடுகிறாள். குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார்கள். மனைவி அவளின் சகோதரி வீட்டில் தங்குகிறாள். கணவன் அங்கு வந்து கலாட்டா செய்யவும் குடும்ப அலோசனை மையத்திற்கு செல்கிறாள். கணவன் அப்பாவியாக தனது சிறு தவறுகளை பெரிதாக்கிவிட்டாள். அவளைப் பொன் போல பார்த்துக் காப்பாற்றுவதாக உறுதிமொழி தருகிறாள்.வீட்டிற்குத் திரும்பிய பின் வீட்டில் மறுபடியும் கணவனின் ரகளை அடி உதை. கையில் காயங்களுடன் அவள் மீண்டும் பிரிந்து ஒரு காப்பகத்தில் சேருகிறாள். அங்கிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் காப்பகத்தில் நடக்கின்றது. அவள் சின்ன வயது நினைவுகளில் முழ்கிப் போகிறாள்.

அவளின் சின்ன வயது அனுபவங்களை அவள் நினைத்துப் பார்க்கவே ரம்மியமாக உணர்கிறாள். ஹாங்காங்கிற்கு வேலை கிடைத்து திரும்புகிறவள் ஒரு தொலைக்காட்சி பெட்டியோடு திரும்புகிறாள். அடுத்த முறை கிராமத்திற்கு வரும்போது தன் கணவனாய் வருகிறவனை அழைத்து வருகிறாள். கிராமத்தில் அவனுக்கு என்ஜினியர் என்று பெயர். அவளின் ஓட்டு வீட்டை பராமரித்து கட்டிட வேலைகளைச் செய்கிறான். ”இன்ஜினியர்” . சாப்பாடு தாமதமாகிறது, தேவையான பணம் இல்லை என்று தெரிகிற போது அவன் வீட்டு நாய் மீது எரிச்சலைக் காட்டி கொல்வது வீட்டில் அனைவர்க்கும் அதிர்ச்சி தருகிறது. மனைவியின் தங்கை மீதும் ஒரு கண் அவனுக்கு. கிராம வாழ்க்கையை மீறி நகரத்தில் வேலை அமைந்து ஆசுவாசம் கொள்கிறாள்.
காப்பகப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறார்கள். உளவியல் பாதிப்பு கொண்டவர்களாய் நடந்து கொள்கிறார்கள். மனவியாதியின் உச்சத்தில் இருந்து கொண்டு நடமாடுபவர்களும் அங்கு இருக்கிறார்கள். அந்த சூழல் அவளுக்கும் குழந்தைகளுக்கும் அச்சம் தருவதாக இருக்கிறது. கணவன் வேறு கைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறான். கணவனை நம்பி வீட்டிற்கு வருகிறாள். தன்னை அவமானப்படுத்தியதாக சொல்லி அடிக்கிறான். உச்சமாய் இரு குழந்தைகளையும் அவளையும் கணவன் கத்தியில் குத்திக் கொல்கிறான். முதல் மனைவி மூலம் பிறந்த மகனை பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அப்பா பற்றி கேட்கிறார்கள். “ நான் அவர் மகன் அல்ல” என்கிறார்.

கிராமத்தில் அப்பெண்ணின் அப்பா எல்லா சோகத்தையும் சுமந்தவராக ஓடி விளையாடும் முயலைப் பார்த்தபடி பீடி குடித்துக் கொண்டிருக்கும் இறுதிக் காட்சியோடு படம் முடிகிறது. படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் மனைவி மீதான வன்முறை உச்சமாய் காட்டப்பட்டிருப்பது பதற்றத்திற்குள்ளாக்குகிறது. பெண்கள் மீதான வன்முறை குறித்த ஒரு பிரச்சார இயக்கம் பற்றின ஓர் இடமும் படத்தில் இடம் பெறுகிறது.

ஹாங்காங் சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி வெகு சாதாரணமாகச் சொல்லும் படம் இது. அதே சமயம் கும்பல் வன்முறை என்பது நிலைபெற்றிருக்கிற நகரமும் அது. முதலாளித்துவ பொருளாதாரம் கோலோச்சும் நகரம். இங்கிலாந்திற்கு இணையாக கல்விமுறை பயிற்சியும் சிறப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கிழக்கும் மேற்கும் சந்திக்கும் உலகமாகவும் பல விதங்களில் அமைந்திருக்கிறது. உலக வியாபார கேந்திரத்தின் ஒரு முக்யமான நகரமாகிவிட்டது. கேளிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நகரம் பெறும் வருவாய் என்பது முக்யமானதாக இருந்து கொண்டு உலக பணக்கார மக்களை அந்த நகரத்திற்கு விரட்டிக் கொண்டே இருக்கிறது.இப்பட்த்தில் இடம் பெறும் இரவுக்காட்சிகள் ஒரு நகரத்தின் கேளிக்கைப்பரிமாணத்தையும், மறுபுறம் வன்முறையின் முகத்தையும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல காட்டுகின்றன.
————————————————————-----------------------------------------------------
சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
————————————————————------------------------------------------------------------

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஜெயந்தனின் தார்மீகக் கோபம்


இவ்வாண்டின் ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு பெற்ற நாவல்: ”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்) - - - - - - அமரர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும் சிறந்த நாவலுக்கான இந்த பரிசை எனது “நீர்த்துளி “ நாவலுக்குப் பெறுவதில் அவரின் தீவிர வாசகன், நண்பண் என்ற வகையில் பெருமைப்படுகிறேன். எழுத்தாளன் வாழும் காலத்தில் அங்க்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர் ஜெயந்தன். அவரது காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை என்ற வருத்தம் எனக்குமுண்டு.எழுபத்தேழில் திருப்பூரில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டில் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அப்போது ஜெயகாந்தன் ஓரளவு ஓய்ந்து போயிருந்த காலம்.அந்த சாயல் பெயர் கொண்ட ஜெயந்தனை வெகுஜன இதழ்கள் முன்னிருத்தியதற்கு காரணங்கள் இருந்திருக்கக் கூடும்.அவரின் வெகு ஜன இதழில் வந்தக் கதைகள், கணையாழி படைப்புகள் மூலம் அவரின் தீவிர வாசகர்களாக குறிஞ்சி இலக்கிய வட்ட நண்பர்கள் இருந்தோம்.எனது முதல் கதை “ சுதந்திர வீதிகள்” திருப்பூரிலிருந்து வந்த விழிப்பு இதழில் அந்த மாதம் தான் வெளியாகியிருந்தது. மாநாட்டினர் தங்கியிருந்த ஒரு விடுதியில் ஜெயந்தனைத் தேடிப் போய் ஒரு அறையில் ஜெயகாந்தனைக் கண்டேன். ஜெயகாந்தனிடமே “ ஜெயந்தன் உள்ளாரா ‘’ என்று கேட்டேன். “ “ அப்படி யாரும் இங்கில்லை “ என்று அந்த சிங்கம் கர்ஜித்தித்த்து. அந்த மாநாட்டில் ஜெயந்தனின் “ இயக்க விதிகள் 3 “ என்ற நாடகத்திற்கு ஒத்திகை நட்த்தினோம். பேராசிரியர் ராமானுஜம் பயிற்சியின் போது கூட இருந்தார்.அது முதல் திருப்பூரில் நண்பர்கள் நடத்திய “ அயணஸ்கோவின் “தலைவர்’, அறந்தை நாராயணின் ” மூர்மார்கெட்”, ஞானராஜசேகரனின் “ வயிறு”, சங்கரப்பிள்ளையின் “ கழுதையும் கிழவனும் “,சி ஆர் ரவீந்திரனின் ‘’பசு’’ ,பாலகிருஸ்ணனின் நாடகங்கள், வீதி நாடகங்கள், ஜெயந்தனின் “நினைக்கப்படும் ஒரு பகுதி ” ஆகியவற்றின் நிகழ்தலின் போது ஜெயந்தனின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றோம். அந்த கால கட்ட்த்தில் வெகுஜன் இதழ்களில் அவரின் படைப்புகள் வெகுவாக வந்தன என்பது பலமாகும். அதுவே அவரின் பலவீனமாகி பின்னால் அவர் கதைகளை வெகுஜன இதழ்கள் நிராகரித்த போது சிற்றிதழ்களில் எழுதுவது ஆயாசம் தருவது போல் ஒதுங்கியிருந்தார்.அவரின் நியாயமான கோபம் அவரை ஒதுங்கச் செய்திருந்தது உண்மை. அவரின் சமூகம் குறித்த அந்தரங்கமான கோபம் நியாயமானது. வெகுவாக வாசகனை உறுத்தக்கூடியது.

மனசாட்சியை உலுக்கக்கூடியது. பிரச்சார உத்தி ஒரு வகையில் கலை வடிவமாக சரியாக பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அது பல சமயங்களில் சாதாரண வாசகர்களுக்கு அவசியமானதாகியிருக்கிறது.சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். கொண்டாடப்பட வேண்டிய அளவு நிறையவே எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டுபவர். அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய திசையை சரியாகவே சுட்டிக்காட்டியவர். அவர்களுக்கு வாசிப்பு மிக அவசியம் என்று வலியுறுத்தியவர்.அவர்களுக்கான சிறுகதை வகுப்புகளை நட்த்தியவர். சிற்றிதழின் அடையாளமாக வெகு எளிமையாக அவரின் “ கோடு “ இதழ் இருந்திருக்கிறது. என து முதல் நாவல் “ மற்றும் சிலர் “ 1988ல் வந்த போது அதை வெகுவாக சிலாகித்துப் பேசினார். ”புதிய தலைமுறை வெகுபாய்ச்சலாக தாண்டிக்குதித்து முன்னேறுகிறது. பொறாமையுடன் இந்த நாவலைப் பார்க்கிறேன். அதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறேன். அவர்களுடன் போட்டி போட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் வெகுவாக ஒதுங்கி நின்று விட்டார் என்று பல கோணங்களில் தென்பட்டிருக்கிறது.அவரின் நாடகத்திற்கான ஒரு அமைப்போ, திரைப்பட முயற்சிகளோ கைகூடவில்லை. கடைசி நான்காண்டுகள் அவருடனான எனது தொடர்பு முழுமையாக அறுந்து போயிருந்தாலும், சொந்த ஊர் மணப்பாறைக்கு வந்து அவர் இலக்கிய கூட்ட செயல்பாடுகளில் இருந்தார் என்பது ஆறுதலாக இருக்கிறது.ஆனாலும் அவை வெளியுலகிற்கு தெரியாத்தாகவும், அவர் அந்நியப்பட்டதாகவுமே இருந்திருக்கிறது. ஆனால் படைப்பிலக்கியத்தில் ஒதுங்கியது போல் இருந்து விட்டார் என்று தோன்றுகிறது.,அவரின் நாவல் முயற்சி முழுமையடையாமல் நின்று விட்டிருக்கிறது. எனது எட்டாவது நாவல் “ நீர்த்துளி”க்கு அவரின் பெயரிலான விருது பெறுவது என்பது ஆறுதலான விசயமாகவே இருக்கிறது.

  சமீபத்தில் அவரின் மொத்தச் சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் ஆகியவை முழுமையாக தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்திருக்கின்றன.அவை மூலம் அவர் நினைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் அவர் பெயரிலான படைப்பிலக்கிய விருதுகள் மூலம் நினைக்கப்படுகிறார்.இதை அவரது மகன் சீராளனும் அவரது குடும்பத்தாரும் , மண்ப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதுவே அவரின் தார்மீக கோபத்தை புதிய தலைமுறை படைப்பாளிகளுக்குக் கொண்டு செல்வதாக அமையும்.இன்றைய சூழலில் அது அவசியமானது கூட.இந்தச் சூழ்லை அவர் பெரும அபாயமாக கணித்திருக்கிறார். அந்த அபாயத்தை எதிர் கொள்ள வேண்டிய கோபம் அவர் எழுத்தில் இருந்திருக்கிறது.- - - - - சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com http://solvanam.com/

திங்கள், 8 அக்டோபர், 2012

நிறம்


முடி வெட்டிக்கொள்ள நாற்பது நாள் இடைவெளி என்பது எனக்கு அதிகபட்சம்தான். வெளிநாட்டில் ஒருமுறை முடி வெட்டிக்கொள்கிற செலவு, இங்கே ஒரு வருடத்துக்கு முடி வெட்டிக்கொள்வதற்கு இணையானது என்பதால், சென்ற முறை எனது வெளிநாட்டுப் பயணத்தில் முடி வெட்டிக்கொள்வதைத் தவிர்த்தேன். சென்னைக்கு வந்து சேர்ந்த பின், அத்தியாவசிய வேலைகளின் பட்டியலில் தலைமுடி வெட்டிக்கொள்-வதைத் தலையாயதாக வைத்து, முப்பது ரூபாய் கொடுத்து தலைச்சுமையைக் குறைத்துக்கொண்டேன். ஆசுவாசம் பிறந்தது. இந்த முறை வெளிநாட்டுப் பயணம் பத்து நாள் இடைவெளியில் நிச்சயிக்கப்பட்டு, துரித கதி என்பதால் விசா, டிக்கெட், கருத்தரங்குக்கான கட்டுரைத் தயாரிப்பு போன்ற அத்தியாவசியப் பட்டியலில் தலைமுடியைக் குறைத்துக்கொள்வது இடம் பெறவில்லை. செலவை மனதிலிருந்து தள்ளி வைத்தேன். வெளிநாட்டில் முடி வெட்டிக் கொள்வது சுவாரஸ்யமான அனுபவம் ஆகலாம். ‘இண்டியன் சம்மரை’ ஞாபகப்படுத்தும் வெயில் நேரத்தில், முடியைக் குறைத்துக்கொள்கிற தீவிரத்துடன் அறையை விட்டு வெளியே வந்தேன். சலூனைத் தேடிக் கிளம்பினேன். வெளிநாட்டில் வெளியில் தனியாகக் கிளம்பிச் செல்வதென்பது காரணமில்லாத சற்றே பயம் தரும் விஷயமாகவே இருந்தது. வணிக வளாகங்கள் பலவற்றில் கறுப்புக் கண்ணாடிகளால் சூழப்பட்ட சலூன்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கு ஸ்டுடியோ என்று பெயரிடப்பட்டு இருப்பது விநோதமாகத்தான் இருந்தது. எங்கு செல்வது என்ற யோசிப்பில், ‘ரோசா லக்ஸம்பர்க்’ முனை ஞாபகம் வந்தது. தெருவோரக் கடைகள், இந்திய விடுதியன்றுக்கு எதிராக ‘பொக்கே’ விற்கும் முகச் சுருக்கக் கிழவி, எப்போதாவது சாயந்திரத்தில் கிடார் வாசித்துக்கொண்டு இருப்பவன் (பிச்சையெடுக்கும் பாவனையா?!) ஆகியோர் நினைவில் வந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயரைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளக்கூட அந்த முனை பயன்படும். ரோசா லக்ஸம்பர்க் சிலை எங்காவது இருக்கிறதா என்று நண்பர் கருணாகர மூர்த்தியிடம் கேட்க வேண்டும். லெனின் சிலையைச் சுருட்டி வாரி எறியும் போது, ரோசாவையும் கிள்ளிப்போட்டு வேடிக்கை பார்த்திருப்பார்களோ! பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு எதிரான நினைவுத் தூண் சதுக்கத்தில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நாஜிக்களின் கொடுமையைக் கண்டிக்கிற நினைவுத் தூணாக அது இருந்தது. சென்ற முறை வந்தபோதே அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டேன். அதனால் இம்முறை ஒரு நிமிட மௌன அஞ்சலி போதும் என்று பட்டது. அந்த வணிக வளாகத்தின் மினுமினுப்பு, பளபளப்பற்ற என் உடையை ஒரு நிமிடம் கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொள்ளச் செய்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும், என் கற்பனையிலான பெண் முகம் மலர்ந்து ஹலோ சொன்னாள். கூச்சத்துடன் இடதுவாக்கில் பார்க்க ஆரம்பித்தேன். உள் அறையில் தென்பட்ட மூன்று சுழல் நாற்காலிகளில் ஆட்கள் இருந்தனர். நாற்காலிகளுடன் மூன்று பெண்கள் பணியில் இருந்தனர். வெளியில் போடப்பட்டு இருந்த ஐந்து நாற்காலிகளில் இருவர் இருந்தனர். நான் மூன்றாவது நபராக அமர்ந்தேன். கார்டி யன், டைம் பத்திரிகைகள் விரிந்துகிடந்தன. ஓரத்தில் ஈழ முரசு இருந்தது. சட்டென அதை எடுத்தால், என்னை அடையாளப்படுத்திவிடும் என்பதால், சுதாரித்தேன். இந்தப் பகுதியில் கணிசமான அளவில் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கருணாகர மூர்த்தி சொல்லியிருக்கிறார். என்னை ஒட்டி இருந்தவன் தலையணை அளவு ஆங்கில நாவல் ஒன்றில் மூழ்கி–யிருந்-தான். இடதுபுறம் இருந்தவன் நாற்காலியில் சரிந்து, கண்களை மூடி இருந்தான். கறுப்பனாக நான் தனித்திருந்தேன். வெள்ளைத் தோல் பெண்களிடம் தலைமுடி வெட்டிக்கொள்-தைக் கிளர்ச்சியானதாக மனதில் கொண்டேன். சுழல் நாற்காலியில் இருந்த ஒருவனுக்கு ஷாம்பு குளியல் நடந்தது. டிரையரைப் போட்டு உலர்த்தினாள் அவன் அருகே இருந்த பணிப்பெண். அவனின் தலையை முகர்ந்து, கண்களை விரித்து, ஏதோவொரு ஜெர்மன் வார்த்தையை உதிர்த்தாள். வேறு நாற்காலியில் அவனை மாறி உட்காரச் சொல்லிவிட்டு, கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டாள். அவளின் தலைமுடி பொன்னிறமாக இருந்தது. வர்ணமிட்டு மாற்றியிருப்பாள். மற்ற இரண்டு பெண்களின் முடி, சரியாக எண்ணெய் தேய்த்து பராமரிக்கப்படாதது போல ஏகதேசம் வெளிறி இருந்தது. தலைக்கு அடிக்கடி வர்ணம் மாற்றிக்கொள்வார்களோ! புருஷனை மாற்றுகிறபோதெல்லாம் தலைமுடி வர்ணத்தை மாற்றும் ஒரு பெண் பற்றி கருணாகரமூர்த்தி சொல்லியிருக்கிறார். சுவாரஸ்யம் கருதி ஏதாவதொரு வர்ணத்தைத் தலையில் பூசிக்கொள்ளலாமா! ஊருக்குப் போனால் மிரண்டுவிடுவார்கள். கருணாகர மூர்த்தி தரும் விகிதாசாரத் தகவலை அவர்களிடம் சொன்னால், அரண்டுவிடுவார்கள். அடுத்த அழைப்பு எனக்கு. ஷாம்பு குளியல் நடத்தி, என் தலையையும் அந்த வெள்ளைத் தோல் பெண் முகர்ந்து பார்ப்பாளா? கறுப்புத் தோல்காரனின் வியர்வை நாற்றத்தைச் சகித்துக்கொள்வாளா? அரையடி தள்ளி நின்றபடிதான் முடிவெட்ட ஆரம்பிப்பாள் என்கிற கற்பனையே திகிலாக இருந்தது. சட்டென எழுந்து போய்விடலாமா என்றிருந்தது. மூவரில் எந்தப் பெண்ணின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு வரும்? பருத்த உதட்டுக்காரிதான் ஏகதேசம் முடித்திருந்தாள். அவளின் பருத்த உதடு ஆப்பிரிக்கர்களை ஞாபகப்படுத்தியது. இன்னும் சற்றே கறுத்திருந்தால், அவள் இந்தியப் பெண்ணைப் போலவே இருப்பாள். மற்ற இருவரும் சுண்ணாம்பில் சற்றே மஞ்சள் கலந்த வெளிறிய நிறத்தில் இருந்தார்கள். கழுத்திலிருந்து மார்பு வரையிலான இடைவெளி அபரிமிதமாக இருந்தது. மார்பின் பிளவுகள் மெல்லிய கோடாக இருந்தன. பருத்த உதட்டுக்காரியின் நாற்காலியில் போய் உட்கார்ந்தால், வகை வகையாய் கேள்விகள் கேட்கக்-கூடும். ‘இலங்கைக்காரன்தானே?’ என்பாள். ‘இல்லை. இந்தியன்’ என்று மறுக்க வேண்டியிருக்கும். கட்டண விகிதம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்த்தேன். ஒரு ஆங்கில வார்த்தைகூடத் தென்படவில்லை. கழிப்பறைகளில் வித்தியசம் தெரிய ஆண், பெண் படங்கள் இல்லாமல், ஜெர்மனியில் மட்டும் எழுதப்பட்டு இருந்த விபரீதத்தால், பெண்கள் கழிப்பறை ஒன்றில், நான் பத்து நிமிடம் கழித்துவிட்டு வந்ததைக் கருணாகரமூர்த்தி பலமுறை ஞாபகப்படுத்தி, வாய்விட்டுச் சிரித்திருந்தார். சரி, கட்டணம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்… தலைமுடி வெட்டுகிற கூலி, நிச்சயம் தலையின் விலையாக இருக்காது என்று திடப்படுத்திக் கொண்டேன். இரண்டாம் நாற்காலியில் இருந்தவனுக்குப் பாதி முடிக் குறைப்பு வேலை முடிந்திருந்தது. சட்டென அவன் தலையை உயர்த்தி, அவளை முத்தமிடும் தோரணையில் உதட்டைக் குவித்தான். முடி வெட்டுகிற பெண் கன்னத்தைச் சாய்த்து, அவன் முத்தத்தை ஏற்றுக்கொண்டாள். அவன் மீண்டும் ஒருமுறை சட்டென எம்பி, அவளை முத்தமிட முயன்றான். அவள் கத்திரிக்கோலை நிதானமாக டேஷ்போர்டில் வைத்துவிட்டு, அவனின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி, அழுத்தமாக முத்தமிட்டாள். இப்படியரு முத்தம் எனக்குக் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும், அது நிச்சயம் இந்த வகையான அழுத்தமான முத்தமாக இருக்குமா? கறுப்புத் தோல்காரன் என்பதை முகச்சுளிப்பிலேயே காட்டிவிடுவாள். சென்ற முறை வந்தபோது, டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் ஒருவன் மீது என் கைகள் பட்டுவிட்ட தற்காக, ‘கறுப்பன்கள் இன்னும் கறுப்பன்கள்தான்’ என்று ஒருவன் நிறுத்தி, நிதானித்து ஆங்கிலத்தில் சொல்லிக் காண்பித்தான். ‘வெள்ளையர்களுக்கு மட்டும் என்ற பிரத்யேகத் தொனியில் இருக்கும் உணவு விடுதிக்குள் தப்பித் தவறிக் கூட நுழைந்து விடாதே! அவமானப்பட்டுத் திரும்ப வேண்டியிருக்கும்’ என்று கருணாகரமூர்த்தி சொல்லியிருந்தார். நாலு நாட்கள் முன்பு மெட்ரோவில் கிடார் வாசித்துப் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த வெள்ளைத் தோல் பெண்ணொருத்தி, நான் நீட்டிய யூரோ நாணயத் தைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அடுத்தவனிடம் சென்றாள். மெள்ள ஒரு பரபரப்பு என்னைத்தொற்றிக்கொள்ள, சுற்றிலும் பார்த்தேன். அடுத்த நாற்காலி காலியானதும், வெள்ளைத் தோல் பெண் என்னைக் கூப்பிடுவாள். இந்தப் பரபரப்பில் அவள் முன் போய் நிற்பதென்பது, அவள் பார்வையில் சாம்பலாக்கிவிடும். மெதுவாக எழுந்து வாசல் பக்கம் பார்த்தேன். அறையின் குளுமை உடம்பைச் சட்டென ஜில்லிட வைத்துவிட்டது போலிருந்தது. கறுத்த உதட்டு வெள்ளைத் தோல் பெண், மொஸைக் தரையில் பரவியிருந்த வெட்டப்பட்ட மயிர்க் கற்றையை ஒதுக்கிக்கொண்டு இருந்தாள். இன்னொருத்தி மெல்லிய குரலில் கிசுகிசுத்தபடி, காதோரத்துக் கேசங்களை வெட்டிச் சரிசெய்துகொண்டு இருந்தாள். அவன் அடுத்த முத்தத்துக்காக உதடுகளைக் குவித்துக் காத்திருந்தான். எனக்கு முத்தம் வேண்டாம்; அலட்சியமில்லாத பார்வையாவது கிடைக்குமா? மெள்ள நகர்ந்து வாசல் கதவுப் பக்கம் வந்துவிட்டேன். ‘ஹலோ’ என்று முதுகில் குரல் கேட்டது. ‘‘ப்ளீஸ் வெயிட்! நெக்ஸ்ட் டேர்ன் யுவர்ஸ்!” கதவுக் கண்ணாடியில் என் முகம் இருட்டாகியிருந்தது. ‘கறுப்பனுக்கு முடி வெட்டிவிடுவதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையா என்று கேட்காமல் வந்து உட்கார்ந்துவிட்டேன். ஸாரி! நாய் விற்ற காசு குரைக்குமா?’ என்று, எனது ஆங்கிலத்தை அவள் புரிந்து பதில் சொல்கிற விதமாக இல்லாமல், ஒரு மாதிரி ஒப்பித்துவிட்டு, வெளியே வந்தேன். ஜெர்மனியில் என் மீது ஏதாவது வசவை உதிர்த்திருப்பாள். வாகனங்களின் மிதமான இரைச்சல் ஆறுதலாக இருந்தது. சென்னையில், மிகக் குறைந்த செலவில் தலைமுடியைக் குறைத்துக் கொள்கிற சுகானுபவம் கற்பனையில்கூட வந்தது

காதுகள்


ஏதோ நினைவில் வலது காதை நீவிக்கொண்டு இருந்தேன். காதை நீவுவது சுறுசுறுப்பு தரும் என்று யாரோ சொன்ன ஞாபகம். காதைக் கிள்ளி சுறுசுறுப்பாக்குகிற வாத்தியார் இல்லாமல் போய்விட்டார். வலது காதிலிருந்து கையை எடுத்தபோது, அருண் வந்து நின்றான். ”காதையே தடவிக்கிட்டு இருக்கீங்களேப்பா. நீங்க ளும் ரிங் போட்டுக்கணுமா. ரிங் போட ஆசையா என்ன?” – அவனின் கேள்வி புரியாமல் பார்த்தேன். அவனின் இடது காதில், அட! ரிங் ஒன்றை மாட்டிக் கொண்டு இருக்கிறானே. ”என்ன இது புதுசா?” ”ஃபேஷன்ப்பா. நீங்க ஏதோ குழப்பத்தில் இருக்கிற மாதிரி தோணுது. நானும் குழப்பமாதான் இருந்தேன். இந்த ரிங்கை வலது காதுல போடுறதா, இடது காதுல போடறதான்னு? கடைசியில் இடது காதில் போட்டுட்டேன். உங்களுக்கும் இடதுதானே புடிக்கும். நீங்க எப்பவும் லெஃப்ட்டிஸ்ட்தானே?” ”தங்கமாடா?” ”தங்கத்திலே போடுற அளவுக்கு நீங்க பாக்கெட் பணம் குடுக்கிறீங்களா என்ன? சாதாரண கவரிங்தான். வெள்ளியாச்சும் போடணும். வலியில்லாம காதைக் குத்திக்கிட்டேன். எங்க காலேஜ்ல காதுல ரிங் போடுறவங்கன்னு ஒரு க்ளப் ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா!” நான் வலது காதில் கை வைத்து நீவிப் பார்த்துக் கொண்டேன். சின்ன வயதில் காது குத்தின அடையாளம் முழுக்க மறைந்து போய்விட்டது. அருணுக்குச் சின்ன வயதில் மொட்டை போட்டுக் காது குத்துவதில் அக்கறையாக இருந்தாள் கண்ணகி. அது மறந்து போயிருக்கும் அவனுக்கும். இப்போது ரிங் குத்திக்கொண்டு இருப்பது மட்டும் இனியும் ஞாபகத்தில் இருக்கும். காது குத்திக்கொள்ளாதவர்களைச் சுடுகாட்டுக் குழியில் இறக்கும்போது சுடலைமாடன் அனுமதிக்க மறுப்பான். காது குத்தாத உடம்புகளா? ஒரு நிமிஷம் என்று ஏதோ ஆணியையாவது எடுத்து வந்து காதில் ஓட்டைகளைப் போட்டு பிணத்தைக் குழிக்குள் வைப்பான். பாட்டி காது வளர்த்து தண்டட்டி போட்டிருந்தது ஞாபகம் வந்தது. சின்னக் குழந்தைகளோ, புதியவர்களோ, பாட்டியின் தண்டட்டியைப் பார்த்து ஆச்சர்யப்படாதவர்களே இல்லை. ”காது குத்தி காது வளக்கிறதே…” என்று சத்தம் போட்டுக்கொண்டு கிராம வீதிகளில் பாட்டி செல்லும்போது, பல நாட்கள் அவளுடன் போயிருக்கிறேன். காது குத்திக் கெடா வெட்டும் விசேஷங்களில் பாட்டிக்கு மரியாதை இருந்திருக்கிறது. பாட்டியின் சத்தம் கேட்டு வீட்டுப் பெண்கள் வாசலில் வந்து நிற்பார்கள். ‘அடுத்த வாரம் வர்றியா?’ என்பார்கள். தேவகி என்னோடு இரண்டாம் வகுப்பு படித்தவள். அவள் வீட்டுக்குக் காது குத்திவிட பாட்டியோடு சென்றது ஞாபகம் இருக்கிறது. வீட்டின் பின்புறம் எங்களை வரச் சொன்னார்கள். நான் ஒரு வகையில் திகைப்புடன் நின்றுகொண்டு இருந்தேன். ”இவங்கெல்லாம் மேல்சாதிக்காரங்க. இவங்க வூட்டுக்குள்ள வுட மாட்டாங்க. இங்க உக்காரவெச்சுதா குத்தணும்.” தேவகி உடம்பில் ஒரு வெள்ளை வேஷ்டியைப் போர்த்தியிருந்தார்கள். விடுக்கென பாட்டி காது குத்தியதும் தேவகி அலறினாள். அவளின் வாயில் யாரோ லட்டோ, ஜிலேபியோ திணித்தார்கள். கண்களில் நீர் வழிய அவள் அதைச் சாப்பிட்டபடியே வலி பொறுக்க முடியாமல் கத்திக்கொண்டு இருந்தாள். காது குத்தி முடிந்த பின் குளிக்கச் செய்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். அவளின் காதில் மாட்டின தோட்டில் நட்சத்திர டிசைன் மினுங்கிக்கொண்டு இருந்தது. அடுத்த வாரம் தேவகி வீட்டுக்குப் போகலாம் என்று பாட்டி கூட்டிக்கொண்டு போயிருந்தாள். கம்மலைக் கழட்ட தேவகிக்கு மனசில்லை. கம்மலைக் கழட்டிவிட்டு உரித்த சோளத் தட்டையைத் திரித்து, சிறு தண்டு மாதிரியாக்கி அந்த ஓட்டையில் திணித்தாள். தினமும் சோளத் தட்டையைத் தண்ணீர் விட்டு நனைத்தபடி இருக்கச் சொல்லிவிட்டு வந்தோம். இன்னொரு பத்து நாள் கழித்துப் போனோம். இம்முறை சோளத்தட்டை எடுத்துவிட்டு பனை ஓலையை மடிப்பு மடிப்பாகச் சுருட்டி காது ஓட்டைக்குள் திணித்தாள். கொஞ்சநாளில் காது ஓட்டை பெரிதாகிவிட்டது. அடுத்த வாரம் போனபோது ‘குறுக்கை’ மாட்டிவிட்டாள். காது நன்கு கீழ் இழுத்து தொங்கின பின்பு ‘குறுக்கை’ கழட்டிவிட்டு தங்கத்தில் செய்திருந்த தண்டட்டியை மாட்டிவிட்டாள். தேவகியைத் தொங்கும் காதுகளுடனும் தண்டட்டியுடனும் பார்க்க அழகாக இருக்கும். ரொம்ப வருடங்கள் கழித்து, தேவகியை சென்னையில் பார்த்தபோது ரொம்பவும் மாறிப்போயிருந்தாள். காது வளர்ந்து தண்டட்டியுடன் தொங்கிக்கொண்டு இருக்கிற, சவுரி வைத்து தலைமுடியைக் கொண்டையாக்கிய கிராமத் துப் பெண்ணாகி இருந்தாள். ”என்ன… எதுவரைக்கும் படிச்சே?” ”எங்க படிக்கிறது. இந்தத் தண்டட்டியும், காதும், கொண்டையும் வெச்சுட்டு கிராமத்தை வுட்டு படிப்புக்குன்னுதா போக முடியுமா..?” பாட்டி காது வளர்க்கக் கேட்டு கூவிக்கொண்டு போகும்போது, பின்னப்பட்ட மூங்கில் கூடைகளை வைத்திருப்பாள். கூடைகள் எப்படியும் ஓரிரண்டு விற்கும். காது வளர்ப்பதற்குக் கூலியாக கம்பு, சோளம், பழைய துணியெல்லாம் கிடைக்கிறபோது வாங்கி வருவாள். நான் முதன் முதலில் போட்ட பேன்ட் அப்படிப் பழைய துணியில் வந்ததுதான். சிவகாமி விஷயத்தில் பாட்டிக்குச் சங்கடமாகிவிட்டது. எல்லாம் சரியாகத்தான் செய்ததாகப் பாட்டி சொன்னாள். ஆனால், சிவகாமிக்குக் காது புண்ணாகிவிட்டது. சிவகாமியின் காது புண் ஆறுவதற்குப் பாட்டிதான் வைத்தியம் செய்தாள். குறுமிளகை வெள்ளைத் துணியில் கட்டி மண்ணெண்ணெய் விளக்கில் விட்டாள். அதைத் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து புண் இருக்கிற இடத்தில் பத்து போட்டாள். அதுவும் சரியாகாமல், ஈரம் பூத்து புண் மினிங்கிக்கொண்டு இருந்தது. குறுமிளகைப் பச்சையாக அரைத்துப் பத்து போட்டாள். தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக முகம்கூடக் கழுவாமல் சிவகாமி வீட்டு வாசலில் போய் நின்றுகொள்வாள். அப்படிக் கவனம் இருந்தும் காது அறுந்து போய்விட்டது. அறுந்துவிட்டதைச் சரியாகத் தெரிந்துகொண்ட நாளில் சிவகாமி அழுதாள். ஊரே கூடிவிட்டது. பாட்டியின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. கண்களில் நீர் வழிந்தது. ”சாமி…” என்றபடி கைகளைக் கூப்பி அனைவரையும் பார்த்தாள். பொது மன்னிப்பு தரும் பாவனையில் எல்லோரும் பார்த்தார்கள். பிறகு, சிவகாமியின் அறுந்துபோன காதை நன்கு சுத்தம் செய்துவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டெடுத்த ஊசி நூலால் தைத்துவிட்டாள். முட்டை போடும் வெடக்கோழியை அறுத்து அதன் ரத்தத்தைத் தைத்த இடத்தில் தொட்டுவைத்தாள். ரொம்ப நேரம் அப்படி பொட்டுப் பொட்டாக வைத்துக்கொண்டு இருந்தாள். வெடக்கோழியை என் கையில் கொடுத்துவிட்டார்கள். அம்மா கோழியைச் சமைப்பதில் கெட்டிக்காரி. ஆனால், சிவகாமி வீட்டுக் கோழியை ருசிக்க இயலவில்லை பாட்டிக்கு. அம்மா தண்டட்டி போட்டு காதின் மேல் புறங்களில் தங்கக் கம்மல்களைக் குத்தியிருப்பாள். அப்படி தண்டட்டி போடாதவர்களை ‘மூளிக்காரி’ என்பார். அம்மா அப்படிச் சொல்வதைக் கேட்டபடி இருந்த பாட்டி, ஒரு நாள் ”நானும் மூளிக்காரிதா” என்றாள். தாத்தா தொடுப்பு வைத்திருந்த பெண் தண்டட்டி போட்டு காது வளர்த்ததில்லை. மினுங்கும் தங்கக் கம்மல்களைப் போட்டிருப்பாள். காது நுனியில் கடுகளவு தங்கத் துணுக்கு மினுங்கிக்கொண்டு இருக்கும். பார்க்க அழகாக இருக்கும். சாகும் வரைக்கும் தாத்தா பாட்டியிடம் திரும்பவில்லை. ”தண்டட்டி போடாதவளுக மட்டுந்தா மூளிக்காரியா?” என்று பாட்டி முனகிக்கொண்டு இருப்பது சாகிற வரைக்கும் வெகு சாதாரணமாக இருந்தது. ”காது குத்தி காது வளக்கிறதே” என்ற பாட்டியின் குரல் தெருக்களில் ஓய்ந்தபோது, அவள் தன்னை மூளிக்காரி என்று சொல்லிக்கொண்டது ஓயாமல் தெருக்களில் மிதந்துகொண்டு இருந்தது!

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

பத்துமலை முருகனும், பெரியாரும்


கோலாலம்பூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் பத்துமலை முருகன் 140 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.272 படிகள் ஏறிச் சென்றால் குகையில் புராதான முருகனைச் சந்திக்கலாம் என்றார் ஏ ஆர் சுப்ரமணியன். கவிஞர். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.மலேசிய தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு 55 லேயே ஒய்வு. . நான் கடவுள் மறுப்பாளன் என்பதை மறந்தீரா ” என்று கேட்டு வைத்தேன். பத்து என்றால் கல். பத்துமலை கல் மலை என்று பெயர். சுண்ணாம்பும்லைதான் அது. அடர்ந்த காடுகள் அதன் பின்னணியில். விலங்குகள், விதம்விதமான மரங்கள் அழகூட்டுகின்றன.பழங்கால கொக்காலிகா மரம் , விதவிதமான மஞ்சள் நிற மரங்கள், கொஞ்சம் வெற்றிலை மணம்.நம்மூர் ஆண்மைச் சின்னம் குரியன் பழங்கள் மலிவாக்க் குவிந்து கிடக்கின்றன.பொரிகடலையும். இடது பக்கம் மினி வள்ளுவர் கோட்டம். சின்ன திருவள்ளுவர். கொஞ்சம் கொஞ்சும் திருக்குறள்கள். கோலாலம்பூர் வழக்கறிஞர் குமாஸ்தா தம்புசாமி பிள்ளை கனவில் வந்து முருகன் கோவிலை அங்கு ஏற்படுத்த அம்பாள் சொல்ல அவர் ஆயத்தம் செய்திருக்கிறார்.. சுற்றிகும் இருந்த கெண்ட், சுங்கைதுவ, செங்கம்பட், செபோங், பத்து ரப்பர் எஸ்டேட் தொழிலாளர்களின் ஈடுபாட்டால் நிறுவப்பட்டிருக்கிறது. சில காலம் பிரிட்டிஸ் அரசு அதை மூட முயற்சிகள் எடுக்கவும், நீதிமன்ற வழக்கும் இந்துக்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது. தைப்பூசநாளில் காவடி, தேர், பூஜைகள் என்று பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளும் அமர்க்களம். சற்றே தூரத்தில் தெரிகிறது அரசு தமிழ்ப்பள்ளி. மலேசியா முழுக்க 700 தமிழ்ப்பள்ளிகள். அரசு, வெளிக்கட்டமைப்பில் சிறப்பானத் தோற்றங்கள். குறைந்து வரும் அரசு மான்யங்கள், உதவித்தொகைகள்,தமிழர்கள் சீனம், ஆங்கில மொழிகளில் தங்களின் குழந்தைகளை படிக்க அதிகம் விரும்புவது ஆகியவை தமிழ்ப்பள்ளிகளை பலவீனப்படுத்தி வருகின்றன நோம்புகாலத்தையொட்டி வீதிகளில் இனிப்புப்பலகாரக்கடைகள் எங்கு தென்படுகின்றன, விதவிதமான வர்ணங்களில் இனிப்புப் பலகாரங்கள். ஏஆரெஸ் வாங்கிக் குவிக்கிறார். அந்த இனிப்புகளுக்கு கேட்துவாட் என்று நாமம்.அதிகம் சாப்பிட வேண்டாம் என்று அன்பு கட்டளை. அடுத்து இரு நாட்களின் நாவல் பட்டறைக்கு இடையூறு ஆகி விடக்கூடாது இது என்கிறார்.மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மலேசியா நாவல் பயிற்சிப் பட்டறையில் முதல் நாள் தமிழ் நாவல் வரலாறு பற்றிய உரை, அடுத்த நாள் என் நாவல் அனுபவம் உரை, இரவில் சிறுவர் கதை பரிசளிப்பில் தமிழ் சிறுகதை பற்றிய உரை இருக்கின்றன. பத்துமலை ஏற வேண்டிய வேலை இல்லாததால் இருக்கும் நேரத்தைக் கழிக்க கூட இருக்கும் பிரகாசைப் பார்க்கிறேன்.திராவிடர்கழக கூட்டம் ஒன்றுக்கு செல்ல வேண்டியிருப்பதை ஞாபகமுட்டுகிறார். நானும் இங்கு வந்து திராவிடர் கழக நடவடிக்கையை கவனிப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. கிள்ளான் போக வேண்டும். ” எங்கள் தலைவர்கள் பக்திமான்கள் “ என்கிறார் ஏஆர் எஸ்.அவர் குறிப்பிட்ட்து மலேசியா எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன், துணைதலைவர் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு பற்றி.. பத்திரிக்கையாளர் ராஜேந்திரன் -கலைஞர், வைரமுத்து நணபர். திராவிட பாரம்பரியத்துக்காரர். ஆனால் பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி, என்று விரதம் இருந்து கோவில் செல்பவர். கார்த்திகேசு மலேயா தமிழர்களின் வாழ்வை தீவிரமாக அவரின் 5 நாவல்களும் சிறுகதைகளிலும் சித்தரித்தவர். அவரின் கடவுள் ஈடுபாட்டை எங்கும் வெளிபடுத்தாதவர். மலேசியா அர்சியல் அமைப்புச் சட்டம் “ கப்பர் சாயான் “ என்கிறது. “ கடவுள் மேல் நம்பிக்கை வை” கடவுள் மறுப்பை வெளிப்படையாகப் இங்கு பேச முடியாது. தலைமறைவு இயக்கம், தன்னார்வக்குழு போல்தான் செயல்படவேண்டும். பதிவு, புதுப்பித்தல் சம்பந்தமாக தி.கவிற்குச் சொந்தமான 2 கட்டிடங்களை அரசு எடுத்துக் கொண்டு விட்டது. கட்சியும் இளைய தலைமுறையினரிடம் பலவீனமாகவே இருக்கிறது. “ இருக்கு .. ஆனா இல்லே “ நிலைமைதான்... பெரியார் திராவிடர் கழகப் பிளவு, கோவை இராமகிருஸ்ணன், கொளத்தூர் மணி பிரிவு பற்றிச் சொல்கிறேன். பிரகாசிற்குத் தெரியவில்லை. “ எங்கள் தலைவர் வீரமணிதான்”. மலேசியாவின் பெரும்பான்மையான வாசகர்கள் மு.வ., நா.பா., அகிலன் தாண்டி வரவில்லை.தி.க அரசியலில் வீரமணி தான் தலைவர்,25 ஆண்டுக்கு முன்னால் எல்லாம். பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங் போக வேண்டும். மலேசியாவின் ரப்பர் தோட்டப் பகுதிக்குச் சென்ற பெரியாரின் சாமியார் தோற்றத்தைப் பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்” என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். வாகன நெரிசல். மெதுவாக ஊர்ந்து போகிறோம்.ஏஆர்எஸ் தொலை பேசி செய்து கிள்ளான் போய் விட்டீர்களா என்கிறார். வாகன நெரிசல் பற்றிச் சொல்கிறோம்.” பத்து மலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கவில்லை. தி.க கூட்ட்த்திற்கு போக அவர் அனுமதி தரவில்லை ” என்கிறார்.. “ பெரியாரின் ஆசீர்வாதம் இருக்கிறது “ வெகு தாமதமாகிவிட்டது. இனி போய் பிரயோஜனமில்லை. வழியில் தென்படும் புத்தர் கோவில் ஒன்றி இளைப்பாறுகிறோம். பிரமாண்டமான சிலைகள். புத்தரின் சாயல்களைத் தேடுகிறேன். விதவிதமான ஏற்றப்படுவதற்கான மெழுகுவர்த்திகள். இலவச சிடிகள் குவிந்து கிடக்கின்றன. 12 ஆண்டுகளுக்குஒரு முறை வந்து செல்லும் ராசிகளின் உருவங்கள் மனித, மிருக உருவங்களாய் நிற்கின்றன. வில் அம்புகளை குவித்து வைத்திருக்கும் குடுவைபோன்றதில் நிறைய குச்சிகள். குலுக்கி நிமிர்த்தினால் ஒன்று வெளித்தள்ளிக் கொண்டு வருகிறது.அதில் ஒரு எண் எழுதப்பட்டிருக்கிறது. 45. அந்த எண் உள்ள பளுப்பு சிவப்பு நிற சீட்டை எடுக்கிறேன். ஒரு பக்கம் சீன, கொரியா எழுத்துக்கள் இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் அது இப்படி சொல்கிறது:: நல்ல சகுனம். எல்லாம் நல்லபடியாகச் செல்கிறது. இப்போது உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த் காலத்தின் சிறந்த உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள். நல்லவர்கள் உங்களோடு சேர்கிறார்கள். நல்ல திருமண வாழ்க்கை அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். = சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com