சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 25 அக்டோபர், 2015

முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்  : சுப்ரபாரதிமணியன்
---------------------------------------------------------------------------------------------------



 ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பல பின்னடைவுகளைத் தந்து விட்டது.  யுத்தங்களின் பாதையில் நெடும்பயணம் சென்று விட்டனர் ஈழ மக்கள்.  அறுபதாண்டு குரல்கள்  ஓய்ந்து விட்டன.  இன அழிப்பு முயற்சிகளும்  இருந்து கொண்டே இருக்கின்றன. கனவுகளும் இருந்து கொண்டே இருக்கின்றன.  அகதிகள் நிலையை மீட்டெடுக்காமல்   கொல்லப்படாமல் திரிவதே சுதந்திரம் என்றாகி விட்ட்து. அந்த நாட்டு எழுத்தாளர்கள் தொடர்ந்து வாழ்தலுக்கான நீதியையும் அநீதியையும் பதிவு செய்து கொண்டே வருகிறார்கள்.பேரழிவுகள் தந்த உள்ளார்ந்த துயரங்களைத் துடைத்தெறிய முடியாமல்  இன்னும் எழுத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.  போராட்டமும் வாழும் கனவும் தொடர்கிறது. போருக்குப் பின்னான நிகழ்வுகளும் மக்களைக் குரல் அற்றவர்களாக்கி விட்டது.  ஈனசுரங்களாய் பலவும் எழுகின்றன. வாழ்கிற பெரும் கனவிற்காக இன்னும் துயரங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் அகளங்கன் இந்தத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
    சமீபத்தில் அறுபது வயதைக்கடந்திருக்கிறார் அகளங்கன். அவரின் எழுத்துப் பணியில் கவிதைகள், கட்டுரைகள், நாடகம் என்றிருந்தாலும் சிறுகதைத் தொகுப்பு என்ற வகையில் இதுதான் முதலாவதாகும். 42 வது வயதில் அவரின் இந்நூல் 21 சிறுகதைகளை உள்ளடக்கியதாகும். இனத்தன்மையின் தனித்துவமும், வன்னிப்பகுதிமக்களின் இன்றைய வாழ்வியலும் என்ற வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன..வவுனியாவின் பம்பைமடு என்ற விவசாய கிராமத்தின் மண்ணின் வனப்பையும்  பண்பாட்டு விழுமியங்களையும் அசைபோடும் மனிதர்களைக் காட்டுகிறார். மரபு வகையில் அமையப்பெற்ற   நடத்தை முறைகளின் விசித்திரங்களையும் வாழ்வியலையும் போர்க்காலச் சூழலையும் அதன் பின்னதான வாழ்க்கையையும் விரிவான அளவில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆசிரியராக பணிபுரிந்தவர் என்ற அளவில்  நகர்புற ஆசிரியப்பணியின் சூழல் சரியாக  துருவ நட்சத்திரம் போன்ற கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.  ஆசிரியரால் உருவாக்கப்படும் சிறுவர்கள் ஆசிரியர்களை நினைவு கூர்தல் சகஜமே. அந்த நினைவுகூறலின் உட்சபட்சமாய்  ஏழேழு பிறப்பும் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்ற அவா எழுவது உன்னதமான ஆசிரியப்பணியின் லட்சியமாக இருக்கிறது. அதேபோல் எழுத்தாளன் ஆவது என்கிறதும் கூட. ஆனால் இன்றைய நிலை வேறு மாதிரியாக இருக்கலாம். ஆனால் அந்த உயர்ந்த லட்சிய  நிலையை மனதுள்  மீட்டெடுப்பதாய் அமைந்துள்ள சிறுகதைகள்  பள்ளிப்பருவத்தையும் ஆசிரியப் பணி குறித்த அக்கறையையும்   வெளிப்படுத்துகின்றன.
பள்ளி போர்க்காலச் சூழலில் படும் அவஸ்தையை பல கதைகளில் எடுத்துரைக்கிறார்  இதைச் சொல்வதற்கு  அவரின் ஆசிரியப்பணியின் நேர்மை முன்னிற்கிறது.  கவிதை எழுதுபவன் இராணுவத்தாரின் சோதனையில் அது அவர்களின் கையில் சிக்கி விட்டால் அது தரும் விளைவுகளையும் மனப்பதட்டத்தையும் உணர்ச்சிமயமாக்கியிருக்கிறார். கவிதை எழுதுவதே மனபாரத்தை, சுமையை இறக்கி வைப்பதற்குத்தான். ஆனால் அதுவே பாரமாகி ஒரு இளைஞனை மனஅழுத்த்தில் மூழ்கடிப்பதைச் சொல்கிறார்.போர்க்காலச்சூழல்  மனிதர்களையும் விவசாயக்குடிகளையும்  இளைஞர்களையும் அலைக்கழிப்பதை பல கதைகளில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.குண்டு வெடிப்பு மனித மனங்களை சுக்கு நூறாக்குகிறது.  பள்ளியிலேயே குண்டு வெடித்து மாணவர்களைச் சிதறச் செய்கிறது. யுத்தம்  ஏதோ மூலையில் நடந்தாலும் அதன் பதற்றம் வீட்டிலும் பள்ளியிலும் உணரப்படாமல் இல்லை.இராணுவ நடவடிக்கைகளால் ஊனமாவனவர்களின் அவலத்திற்கு கணக்கில்லை. .ஊனமாகிறார்கள். பென்சன் வாங்கப் போனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ( வெயில் மட்டுமா சுகம் )  . எந்த வகையிலும் புறக்கணிக்கப்பட்ட  துன்ப நிலையில் குடும்பம் என்ற வண்டி நகர சிரமப்படுவதை கதைகள் சொல்கிறன.காதலித்தவள் இராணுவதினரால் பாலியல் வல்லுறவுக்குப்பட்ட நிலையில்  அவளை குடும்பமே நிராகரிக்கிற அவல  நிலையும் ஏற்படுகிறது ( மீண்டும் ஒரு குருஷேத்திரம் ) சொல்வதற்கு நேரடித்தளங்கள் தேவையில்லாத போது குறிப்பாய் உணர்த்துவது படைப்பமைதிக்கு சிறப்பாக இருக்கும் என்பதை     வத்துக்குளம் “ போன்ற கதைகள் எடுத்துரைக்கின்றன.  கொண்டல் பிசின் போன்ற கதைகளையும் இது போன்ற குறியீட்டு வகையில் சேர்த்துப் பார்க்கலாம். சாப்பாட்டிற்கு மீன் பிடிக்க வந்தவர்கள் பெரும் வியாபாரிகளாகி மீன் வளத்தைச் சூறையாடுவதை இக்கதையில் சொல்கிறார். ஆனால் குறியீட்டுத்தன்மையில் பல தளங்களை இக்கதை குறிப்பிட்டுச் செல்கிறது.கிராமிய அனுபவங்கள் வெகு சரளமாக இக்கதைகளில் ஊடாடி நிற்கின்றன. உணவு  பழக்க வழக்கங்கள், மக்களின் அன்பான உபசரிக்கும் முறை, கிராமிய தொன்மை முதற் கொண்ட  உணர்வுகள் போன்றவை  விரிவாகவே எடுத்துச் சொல்கிறார்.
போர்க்கால சூழல் இடப்பெயர்வுகளை கொண்டு வந்திருக்கின்றன. ஒரு புறம் சம்பாதிக்க போய் விட்டத் தலைமுறையினர். இன்னொரு புறம் உயிர் பிழைக்க இருப்பதை விற்று காசு பார்த்து அதைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மத்தியில் செல்ல முடியாத முதியவர்கள் தங்களின் மண் மீதான பாசத்தையும் உயிர்ப்பையும் கண்ணீரோடு வெளிப்படுத்தும் அனுபவங்கள் நிறைய உள்ளன.தங்களை விட மோசமான வகையில் உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து ஆறுதல் அடைவதும் நிகழ்கிறது ( இந்தப் பிள்ளைக்கு ), போர்ச்சூழலில் செல் வெடிப்பும் அதற்குப் பயந்து மக்கள் சிதறுவது, ஒளிந்து கொள்ளும் அனுபவங்களும் பல கதைகளில் பதிவாகியுள்ளன. போர் நின்று போனால் தனது வருமானம் நின்று போகுமே என்று நினைத்து  சங்கடப்படும் ஒரு சிறுவனின் மன்நிலை விசித்திரமாகத் தென்பட்டாலும் அவனின் இயல்பான எண்ணமாக இருப்பதை                யாழ்தேவி  “கதை சொல்கிறது. குழந்தைத் தொழிலாளியாக அவன் பெறும் கூலி அவன் குடும்பத்திற்கு உதவுகிறது.. கொழும்பு தாண்டிக்குளம் வரை சென்று திரும்பும் புகை வண்டியால் அங்கிருந்து அரை கிமீ தூரத்திற்கு  பயணிகளின் மூட்டைகளைக் கொண்டு செல்லும் குழந்தைத் தொழிலாளி அவன். கிராமப்புறங்களில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். ஒரு விவசாயி சிறு வியாபாரி ஆகும் போது அவன் நடந்து கொள்ளும் “ முதாலாளித்துவ குணம் “ பற்றியும் பேசுகிறார். ஒரு நண்பனே அப்படி மாறும் போது நடக்கும் கூத்து உட்சபட்சமாகப் போய் விடுகிறது.  ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது வேறு. ஒருவரை ஒருவர் புகழ்ந்து காரியங்கள் சாதித்துக் கொள்ளும் மன்ப்பாங்கு பற்றிய மன அலசல்கள் இதில் உள்ளன.சாமியாரை நம்பும் மக்கள், அவர்களின் மன நிலையை சமூக நிலையைக் கொண்டு விமர்சனமாக்குகிறார்.  வேலைக்குப் போகிறவர்கள் சுபமாக திரும்புவார்களா என்றப்  பதைபதைப்பு, பள்ளிக்கு செல்கிற குழந்தைகள் உயிருடன் திரும்புவார்களா என்ற வேதனை, பென்சன் வாங்கச் செல்கிறவர்கள்  இராணுவத்தின் கெடுபிடிக்கு பயந்து உயிரைவிடாமல் வீடு திரும்புவார்களா என்ற பயம் போன்றவை கூட உளவியல் முறையில் அனுதாபங்களுடனும் பதை பதைப்புடனும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இலங்கையின் சம்கால சூழலில் வாழ நேர்கிறவனின் நேர்மையான அனுபவங்களை சிறுகதைகளாக்கியிருக்கிறார்  அகளங்கன். “ நாளைக்கும் பூமலரும் “ என்பது அங்கே காதில் விழும் ஒரு பிரபலமான திரைப்பாடல் . அந்தத் தலைப்பில் இருக்கும் சிறுகதையின் மனப்பதட்ட்த்தைத் தாண்டி அது போன்ற நம்பிக்கைகளையும் இக்கதைகள் தருவதை மறுப்பதற்கில்லை. மிருகங்களும் தாவரங்களூம், பறவைகளும் வெறும் குறிப்பீட்டளவில் மட்டுமில்லாமல் அதன் வெவ்வேறு வகைப் பெயர்களுடனும் இயல்புடனும் இவரின் கதைகளில் தென்படுகின்றன. ஆண்களின் உளவியல், மற்றும் கிராமிய பெண்களின் உளவியலை கூர்ந்து நோக்கும் உரையாடல்களால் நிரம்பியிருக்கிறது. வழக்கமானக் கட்டமைபை தகர்க்கும் பெண்களும் இதில் தென்படுகிறார்கள். புலம்பலுக்குள் மாட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.அறிவூட்டும் சமூகக் கடமையை பேச்சுக்கள் மூலமும் வெளிப்படுத்தி வருபவர் . அந்த நோக்கில் சில பேச்சுக்களும் உள்ளன.
 குமார் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு பல கதைகளின் உருவாக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.  அகதிமுகாம் நிலைகளும் போர்சூழலும் தீவிரமாக நம் கண்களில் நடமாட வைத்து விட்டார். அதேபோல் வவுனியா பிரதேச நில   அமைப்பும்,வைத்யசாலைகளும், விவசாய நிலங்களும்  மண்ணின் மணத்தோடு பதிவாகியுள்ளன.இவரின் ஆசிரியர் கதாபாத்திரம் ஆசிரியர் பணியின் மேன்மையை உணர்ந்து ஏழேழுப் பிறவிக்கும் ஆசிரியராகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல் ஏழேழுப் பிறவிக்கும் எழுத்தாளராகப் பிறக்கும் அனுபவங்களைத் தீவிரமாகக் கொண்டிருக்கிறார் அகளங்கன்.
( முற்றத்துக்கரடி – அகளங்கன் சிறுகதைகள்-  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியீடு, கதிர்காமர் வீதி,  அமிர்தகழி, மட்டக்களப்பு   )

  அரவணைப்பு : சுப்ரபாரதிமணியன்


 அந்த இரட்டைச்சக்கர வாகனம் அவளை இறக்கி விட்டுப் போனது. அவள் 1 வெகு பரபரப்புடன், கழுத்தில் படிந்திருந்த வேர்வையைத் துடைத்து விட்டு வீட்டுகுள் நுழைந்தாள். அவள் 2 கோபப்பார்வையுடன் பார்த்தாள். அவள் 1 உடம்பை ஒடுங்கிக் கொண்டு நின்றாள். அவள் கால்கள் உட்கார எத்தனித்து இயல்பாக்கிக் கொண்டது. உடம்பின் வலியை அவள் முகம் தேக்கிக் கொண்டிருந்தது.
“ அவன் யாரு ..உன்னை டிராப் பண்ணினவன் “
“ ஆபீஸ்லே கூட வேலை செய்யறவர்
“ என்ன பெரிய மரியாதை வேண்டிக்கெடக்கு “
“ எவ்வளவு வருசமாத் தெரியும்
மூணு வருசமாத்தா . அந்த ஆபீஸ் போனப்பறம் “
“அவன் கூட உறவு வெச்சிருக்கியா.. படுத்திருக்கியா “
“ இல்லெ.”  
உணமையைச் சொல்லு. “
“ இல்லெ “
“ ரெண்டு பேர்த்துக்கும் எடையிலான நெருக்கத்தைப் பாக்கறப்போ நல்ல பழக்கம் இருக்குமுன்னு தோணுது “
“ அப்பிடியெல்லா இல்லே. “
“பொய் சொல்றே. பொய் சொல்றவங்களெக் கண்டா எனக்குப் புடிக்காது. நீ வெளியே போ “
“ வெளியே போன்னா எங்க போவேன் இந்த ராத்திரியிலே.
“எங்காச்சும் போ. கோமிலே உன் பிரண்ட்ஸ் இல்லையா. ஹாஸ்டல்லே உங்க பிரண்ட்ஸ் இல்லையா. இல்லை இப்போ நீ எவன் கூட வந்தியோ அவன் இருக்கற எட்த்துக்குப் போ “
“ அதெப்படி போக முடியும் “
“ அவன் கூட உறவு வெச்சிருக்கியா ... படுத்திருக்கியே. போக வேண்டியதுதானே. எத்தனை தரம் படுத்திருக்கே. உண்மையைச் சொல்லு. பொய் சொன்னா புடிக்காது எனக்கு  “
“ நாலு தரம். உங்க கூட வந்தப்புறம் அது மாதிரி இல்லெ..
“என்னாச்சு..
“புடிக்காமெப் போச்சு. “
“ அப்போ.. நான் உனக்கு புடிக்காமெப் போயிட்டா, கசந்து போயிட்டா  வேறொருத்தன் கிட்டையோ, வேறொருத்திகிட்டையோ    போயிருவே ..இல்லையா.. அப்பிடித்தானெ.
“ அப்பிடியெல்லா இல்லெ. உஙக கிட்ட வந்தப்புறம் வேற எந்தப் பழக்கமும் இல்லெ.
“ உட்காராதே..எந்திரி. பொய் பேசற நீ எங்கூட இருக்க்க் கூடாது.
“ ரொம்ப கால் வலிக்குது. அதுதா உட்கார்ரன். இனி யார்கிட்டையும் தொடர்பு இருக்காது.
“ இல்லே நீ போயிரு.. நீ பொய் சொல்றே “
“ இல்லே. பொய் ஒன்னும் இல்லே. நம்புஙக. “
அவள்1 நெருங்கி வந்து கட்டிக்ப்பிடித்துத்  தோளில் சாய்ந்தாள். அவள்2 அவளை சற்றே தள்ளி விட்டாள். அவள் 1 சற்றே முன் நகர்ந்து போனவள் மீண்டும் அவள்  தோளைப்பிடித்தாள். பின்புறத்தை கட்டிக் கொண்டாள். அவள் 2 சுவரைப் பார்த்தபடி  நின்றாள். அணைப்பு இதம் தருவது போல் நின்றார்கள்.வாசலுக்கு வெளியே புடுபுடுத்து ஓடிய வாகனங்களின் அபரிமிதமான சப்தம்   அவர்களைப் பிரிக்க முடியவில்லை.
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,

திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com



சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும்“                                                                         ( பயண கட்டுரைகள் நூல் 

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் சார்பில் 24/10/15 மாலை 7 மணிக்கு   அய்பெரும் விழா மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர்,திருப்பூரில் நடைபெற்றது. .
 ரங்கசாமி (தலைவர் , மத்திய அரிமா சங்கம் ) தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் செயல் அறிக்கை தந்தார். ஆசிரியர்கள் தின விழாவை ஒட்டி சண்முகசுந்தரம்( சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் ), பேராசிரியர்  மோகன்குமார்  ஆகியோர்  கவுரவிக்கப்பட்டார்கள்.அவர்கள் ஏற்புரை வழங்கினர்.

சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும் ” ( பயணக்கட்டுரைகள் ) நூலை மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர்  திருநாவுக்கரசு IPS    வெளியிட்டுப் பேசினார். “ எட்டுத்திக்கும் ” ( பயணக்கட்டுரைகள்-ரூ110 என்சிபிஎச் , சென்னை வெளியீடு  ).
 முன்னதாக ஆர்.திருநாவுக்கரசு IPS    அவர்களின் (( “ உன்னுள் யுத்தம்  செய் “  ரூ160 தமிழ் வாசல் பதிப்பகம், மதுரை ) நூலை சுப்ரபாரதிமணியன் அறிமுகப்படுத்திப் பேசினார்.

 திருநாவுக்கரசு IPS  பேசியதிலிருந்து :  பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இலட்சியக்கனவோடு இருக்கும் மாணவர்களின் கனவுகள் பிற்காலத்தில் சிதைவதற்கு அடிப்படைக்காரணம் கல்லூரியிலும் , பள்ளிகளிலும் படித்தப் புத்தகங்களைக் காட்டிலும் ஒரு பணிக்கென வரும்போது அங்கே ஒரு மாணவனிடம்  எதிர்பார்க்கப்படுவது தனி மனித மேம்பாட்டுத்திறன். எண்ணங்கள் ஒருமிக்கப்படும்போது  வாழ்க்கை வளம் பெறும். மிகச்சிறந்த லட்சியங்களைக் கொண்ட  எத்தனையோ மாணவர்களின் கனவுகள் பிற்காலத்தில் நீர்க்குமிழியாய் உடைவதைப் பார்க்கின்ற போது கல்வி என்பது புத்தகம் தாண்டிய நடை முறை அறிவு என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். “
                                                                                                                                         முன்னதாக மெஜஸ்டிக் கந்தசாமி , தர்மர்ரஜ் உட்பட பலர் பேசினர் .  

நிகழ்ச்சி ஏற்பாடு: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்  
செய்தி: ராஜராஜன், மேலாளர் திருப்பூர் மத்திய அரிமா சங்கம். (படத்தில் சண்முகசுந்தரம், மெஜஸ்டி கந்தசாமி, திருநாவுக்கரசு , சுப்ரபாரதிமணியன், ரங்கசாமி  )


30 வது தேசிய புத்தகத் திருவிழா
மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும்
    தேசிய புத்தகத் திருவிழா
15/11/15 ஞாயிறு மாலை 6 மணி :    இலக்கிய நிகழ்ச்சி
இடம்: நமது ஆரியபவன் ஹோட்டல் எதிரில்                         ( பழைய பேருந்து நிலையம் அருகில் ) காமராஜ் சாலை, திருப்பூர்
* சுப்ரபாரதிமணியனின் இரு நாவல்கள் அறிமுகம்                      “ சமையலறைக்கலயங்கள் “ ( ரூ 110 ), “ பிணங்களின் முகங்கள் “  ( ரூ160 ) : இரண்டும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
* நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட                    புதிய நூல்கள் அறிமுகம்
* வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் பரிசு பெற்ற             “ விசாரணைதிரைப்படத்தின் மூல நூல் ஆசிரியர்                  கோவை சந்திரகுமார் அவர்களுக்குப் பாராட்டு
தலைமை : ஆர். ரங்கராஜன் ( மேலாளர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கோவை )                                                       முன்னிலை : அ.கணேசன் , ( மண்டல மேலாளர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கோவை   )
சிறப்புரை:
இரா.காமராசு (பொதுச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
எம்.இரவி ( மாவட்ட செயலாளர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )
ப.பா.இரமணி ( மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
வாழ்த்துரை:
ஆர். ஈஸ்வரன்( தநா.முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞர்கள் சங்கம் )
மலர்கள் ராஜீ ( தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
நாவல்கள் அறிமுகம் : கா. ஜோதி
ஏற்புரை :  சந்திரகுமார், சுப்ரபாரதிமணியன்
மற்றும் : கவிராத்திரி; கவிஞர்களின்  கவிதை வாசிப்பு .. வருக
8/11/15 ஞாயிறு மாலை புத்தக அரங்கில் :
கவிராத்திரி; கவிஞர்களின் சங்கமம். கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறும் .
புத்தகக் கண்காட்சி 30/11/15 வரை நடைபெறும்  சிறப்புக் கழிவு 10%




புதன், 21 அக்டோபர், 2015

         கவி ராத்திரி நிகழ்ச்சி
  30வது தேசிய புத்தகத் திருவிழா

கவி ராத்திரி நிகழ்ச்சி  என்பிடி என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி அரங்கில் ( பழைய பேருந்து நிலைய சாலை ) ஞாயிறு மாலை நடைபெற்றது.  
      கவிஞர் ஜோதி தலைமை தங்கினார். என்சிபிஎச் நிர்வாகி குணசேகரன், செல்லம் ரகு, ஜீவானந்தம், துருவன் பாலா,  முகில் திரையகம் ராசு ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கனல்மதி, பூண்டி முருகானந்தன், செந்தமிழ்வாணன், ஸ்டிபன் முடியரசு, ஜோதி, சுப்ரபாரதிமணியன்,  ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். 

செந்தமிழ் வாணன்  வெளிவர இருக்கும் அவரின் புதிய நாவல் “ பித்தப்பிறை “ நாவல் பற்றிய அனுபவங்களை எடுத்துக்கூறி  அறிமுகப்படுத்தினார்.

 சுப்ரபாரதிமணியன் தன் “ மந்திரச்சிமிழ் “ நூலை சுய அறிமுகப்படுத்தி அதிலிருந்து கவிதைகள் வாசித்தார். சாகித்ய அகாதமி பரிசை எழுத்தாளர்கள் திருப்பி அனுப்பி வருவது பற்றிய விவாதத்தை சிவகாமி துவக்கி வைத்தார்.

சாகித்ய அகாதமி பரிசை திருப்பி அனுப்பிய தெலுங்கு கவிஞர் பூபால் ரெட்டியின் “ நட்சத்திரப்பூ “ நூல் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பூர் கனவு அமைப்பு வெளியிட்ட  அந்த          “ நட்சத்திரப்பூ “ கவிதைத் தொகுப்பு கவிதை வாசித்தோருக்குப்  பரிசாகத் தரப்பட்டது.. என்பிடி என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி  நவம்பர் 30 வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. 10% கழிவு உண்டு. இலக்கியம், சுயமுன்னேற்றம் உட்பட அனைத்துப் பிரிவு நூல்களும் விற்பனைக்கு உள்ளன.  செய்தி: குணசேகரன் ( என்சிபிஎச்)


நூல்கள் வெளியீட்டு விழா

1.திருநாவுக்கரசு IPS அவர்களின் “ உன்னுள் யுத்தம்  செய் “                                     ( சுயமுன்னேற்ற நூல் )
2. சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும் “                                                                          ( பயண கட்டுரைகள் நூல் )

சிறப்புரை : திருநாவுக்கரசு  IPS
தலைமை : ரங்கசாமி (தலைவர் , மத்திய அரிமா சங்கம் )
இடம் :  மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர்,திருப்பூர் .
நாள்: 24/10/15 மாலை 7 மணி .. வருக...

நிகழ்ச்சி ஏற்பாடு: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

(( “ உன்னுள் யுத்தம்  செய் “  ரூ160 தமிழ் வாசல் பதிப்பகம், மதுரை                                   
“ எட்டுத்திக்கும் “ ரூ110, என்சிபிஎச், சென்னை ))
/o:p>

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தேநீர் இடைவேளை(நாவல்),ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்,41-பி , சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ,அம்பத்தூர், சென்னை - 600 098.பக் : 102, விலை : ரூ. 85/

ஒரு புறம் பெரிய பெரிய பஞ்சாலைகள் மூடப்படுகின்றன . மறுபுறம் நகருக்கு வெளியே சிறிய சிறிய ஆலைகள் முளைக்கின்றன . இங்கு ஆண்களும் , பெண்களும் நவீனக் கொத்தடிமைகளாய் படும் அவதியும் அவலமும் நம்மை திடுக்குற வைக்கிறது . இந்த நாவலின் கதாநாயகன் யார் ? அப்படி யாருமில்லை? வில்லன் ? அது இந்த சமூக அமைப்பே . அதுதான் இந்நாவல் .வழக்கமான கதை சொல்லும் பாணி இங்கு இல்லை . முதல் பகுதியில் 10 கடிதங்கள் . அந்தக் கடிதங்கள் மூலம் சுமங்கலித் திட்டம் என்கிற மாயவலை , வேலையின்மை எனும் நெருக்கடியால் பொறியில் சிக்கிய எலியாய் வாழ்க்கை ,வறுத்தெடுக்கும் நோய் , கடன் எனும் மூழ்கடிக்கும் புதைசகதி ,குடியிருப்பு என நாமம் சூட்டப்பட்ட கொட்டடி ; சிறைக்கொட்டடிக் கொப்பான சீரழிவு , உரிமையை கேட்கவும் முடியா விலங்கு ,வயிற்றுப்பசி மட்டுமல்ல வாட்டும் உடல் பசியும் வாழ்வின் ரணமும் வலியும் வேதனையும் என எவ்வளவோ செய்திகள் ; படிக்கும் போதே மனது வலிக்கிறது . மூலதனத்தின் மூர்க்க வெறியால் சின்னாபின்னமாக்கப்பட்ட -சிதைக்கப்பட்ட வாழ்க்கை சித்திரமே ஒவ்வொரு கடிதமும் எனில் மிகை அல்ல.மல்லிகா , ரங்கநாதன் , செந்தில் ,அந்தோணிராஜ் இன்னும் பலர் வருகின்றனர் . இவர்கள் தனித்தனியாகப் பேசுகின்றனர். ஆயினும் அதில் ஒரு தொடர்ச்சியும் இருக்கிறது .

அத்தொழில் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அவலத்தை அழுத்தமாகவே பதிவு செய்கிறது .அதே சமயம் அடுத்த இரு அத்தியாயங்களை ஆவலோடுபுரட்டினால் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது .அந்தோணிராஜ் டைரிக்குறிப்புகளைச் சொல்லும் இரண்டாம் பாகமும் , செந்திலின் டைரிக் குறிப்பாய் நீளும் மூன்றாம் பாகமும் என்ன சொல்ல வருகிறது ? அந்தோணி ராஜ் மூலம் சொல்லவரும் அரசியல் செய்தியாகட்டும் செந்தில் மூலம் படைப்பனுபவமாகட்டும் எதைச் சொல்லுகிறார் ?என்னுள் எழும் கேள்வி கோவைஞானிக்கும் எழுந்திருக்கிறது . முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார் ; “இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி இ.எம்.எஸ்.ஐப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் எந்த வடிவிலும் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படி கடைப் பிடிக்கத்தான் வேண்டுமா ? மல்லிகா முதலியவர்களின் வாழ்க்கை பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம் . அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான் . கொட்டடிகளை விட்டு வெளியில் சென்ற பிறகு நோய்நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள் . இந்தக் கதையை ஏன் தொடர்ந்து சொல்லக்கூடாது ? செந்திலுக்கோ ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை . நாம் புரிந்து கொள்கிறோம் . யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா ? இப்படி வடிவத்தைச் சிதைப்பதின் மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலாக சுதந்திரம் கிடைக்கிறதா ? இப்படியெல்லாம் வாசகனைத் திணற அடிப்பதின் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார் ?” இக்கேள்விகள் இந்நாவலோடு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல ..இவ்வளவுக்கு இடையிலும் முதல் பகுதி - அந்த பத்து கடிதங்கள் நெஞ்சைப் பிசையத்தான் செய்கின்றன . சிதைக்கப்பட்ட வாழ்வின் அவலங்களை உள்வாங்கி சமூகக் கோபத்தைப் பற்ற வைக்க இந்நூல்பயன்படுமே ! படியுங்கள்!

திருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட          :

சுப்ரபாரதிமணியன்



சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும்

தற்கொலைக்களன் என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக் களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில் தான் அதிகம் என்பதை புள்ளி விபரக்கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற்கொலை முயற்சிகளும், மாத்த்திற்கு 50 தற்கொலை சாவுகளும் பதிவாகின்றன. சென்றாண்டில் 495 தற்கொலை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதத்தில் 350 பேர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கின்றனர்..இவர்களில் 20 வயது முதல் 40 வயதிற்குற்பட்டவரே அதிகம். அதிலும் ஆண்கள் அதிகம்.

( முகூர்த்த நாட்களில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் திருமணங்கள்- தன்னிச்சையாக நாலைந்து யுவதிகளும், யுவன்களும் வந்து ஒரு திருமணத்தை நடத்துகிறார்கள். -, மற்றும் திருப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் நடைபெறும் இளம் வயதினரின் காதல் திருமணங்கள் ஆகியவற்றுக்கும் இந்த தற்கொலை விகித்த்திற்கும் வெகு சம்பந்தம் உண்டு. இதைத் தவிர சர்ச் நடவடிக்கைகள் தனி கவனம் பெறுகின்றன. மத மாற்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டிலும் திருமண பந்தங்கள் அமைந்திருக்கின்றன. )

10லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரமாகி விட்டது திருப்பூர். இதில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வந்த தொழிலாளர்களும், வந்து போகும் மக்களும் அடங்குவர். வெளியூர் என்பது வெளி மாவட்டங்கள் என்ற 5 வருடம் முன்பு இருந்த நிலை மாறி ஒரிசா, பீகார் போன்ற வேலை வாய்ப்பு மிகவும் குறைந்த மாநிலங்களும் இதில் அடக்கம். நேபாளம் சார்ந்த தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள் இங்கு சிலது உண்டு.

திருப்பூர் வேலை வாய்ப்புகளுக்கான ஒரு சொர்க்கம் என்று நம்பி இங்கு

படையெடுக்கிறார்கள். வேலைவாய்ப்பும் அதிக சம்பளமும் என்பது உண்மைதான். ஆனால் அடிப்படை ஆதாரங்களுக்கான செலவு என்பது இந்த அதிகப்படியான சம்பளத்தை விட குறைவாகத்தான் இருக்கிறது. வீட்டு வாடகையும், தண்ணீர் போன்றவைகளுக்காக செலவழிக்கப்படும் தொகையும் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் நல்ல காற்றோட்டத்துடனும், ஓரளவு தண்ணீர் வசதியுடனும் வாழ்ந்தவர்கள் இங்கு புறாக்கூடு, குருவிக்கூடு வீடுகளில் வாழும் நிலை. பொதுக்கழிப்பறை கூட அதிகம் இல்லாத தெருக்கள் குப்பையால் நிரம்பி வழிகின்றன. பாலீதின் பொருட்களின் உபயோகம் அபரிமிதமாக இருக்கிறது. சாலை விரிவாக்கங்களால் மரங்கள் பிரதான சாலைகளில் அருகி விட்டன . அதனால் 5டிகிரி வெப்பம் அதிகரித்தே மிக வெப்பமான நகரமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு

.

பல சமயங்களில் வேலை நிரந்தரமின்மையும், வேலை வாய்ப்பின்மையும் பணத்தட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.

இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியமும், அதற்கான வட்டியும் அவர்களை மீளச் செய்வதில்லை. ஊரில் இருப்பவர்கள் சொர்க்கபுரிக்குச் சென்றிருக்கும் தங்களின் குடுமப நபரின் வருமான சேமிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் போது க்டன் வாங்குவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இந்த கடனிலிருந்து மீளவது சிரம்மாகி விடுகிறது. அதிகப்படியான உழைப்பை எதிர்பார்க்கிற நகரம் இது. எட்டு மணி நேர உழைப்பு என்பது இங்கு அமுலாக்கப்படுவதில்லை. குறைந்த்து 10 மணி நேர சிப்ப்ட் என்பதே நடைமுறையில் உள்ளது. அதிக நேரத்திற்கான இரட்டிப்பு சம்பளம் என்பது 10 மணி நேரத்தைத் தாண்டும் போது தான் சாத்தியமாகிறது. அதிக நேர உழைப்பு என்பது மனித உடலை இயந்திரமாக்கி , வயதையும், நோய்களையும் கூட்டி விடுகிறது. பனியன் கம்பனியில் வேலை செய்கிறவன் 40 வயதிற்கு மேல் வேலை செய்ய உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெற்றிருப்பதில்லை. கடன் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபட தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை வாங்குவதிலும் தன் சேபிப்பை செலவிடுகிறான். ஒற்றை பெற்றோர் முறையிலான

.

தொழிலாளியாய் ஆண் இங்கு வந்து வேலை செய்து வருமானம் ஈட்டும் போது பெண் ஊரில் இருந்து கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும், வருமானமில்லாத நிலத்தயும் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது ஆண் ஊரில் இருந்து கொண்டு பெண்ணை வேலைக்கு அனுப்புவதும் பெருமளவில் நடக்கிறது. ஊரில் கணவன் சிறு விவாசாய நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டிருப்பான். குடும்பத்தை தாயுமானவனாக இருந்து காத்துக் கொண்டிருப்பான். பெண் இங்கு வந்து சம்பாதித்து மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருப்பாள். ஒற்றைப் பெற்றோர் முறையிலான இவ்வகைத் தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்யும் போது சுதந்திரமாய உணர்கிறார்கள். ஜாதி உணர்வை புறம் தள்ளி விட்டு இயல்பாய் இருக்கிறார்கள். அதிக நேரம் குறிப்பாய் இரவிலும் தொழிற்சாலையில் இருக்கும் கட்டாயத்தால் வேற்று பாலியல் தொழிலாளர்களுடனான பேச்சும், பழக்கமும் , தொடர்பும் பாலியல் தொடர்புகளாக மலர்கின்றன. .

. தொழிற்சாலை சூழலில் தனிமைப்பட்டு போயிருக்கிற தொழிலாளிக்கு பாலியல் தொடர்பு சகஜமும், இயல்புமாகிறது.. இது ஆரம்பத்தில் ஆறுதல் தந்தாலும் உளவியில் ரீதியான சிக்கல்களை ஆரம்பம் முதலே தந்து விடுகிறது. இந்த சிக்கல் தொடர்கதையாகி குற்ற நடவடிகைகளுக்கும், கொலைகளுக்கும் வழி வகுக்கின்றன. திருப்பூரில் குற்ற நடவடிக்கைகளும்,

கொலை விகிதங்களும் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

வெளியில் இருந்து வரும் தொழிலாளி தன்னை தொழிலாளியாக கருதுவதில்லை, அதற்க்கான உரிமைகளையும் கோருபவனாக இல்லை. மழை பெய்தால் ஊருக்குப் போய் விவசாயம் செய்யலாம் என்ற கனவில் பலர் இருக்கிறார்கள். அல்லது ஊரில் தாங்கள் பார்த்த வேலைக்கு தடங்கல் இல்லை என்றுத் தெரிகிற போது வெளியேறுப்வர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான நேர உழைப்பால் அசதி மற்றும் ஓய்வின்மை அவனை வெளியேறத்துடிக்கிறவனாக்க்குகிறது.தொழிற்சாலையில் பிரச்சினை என்று வருகிற போது தொழிந்சங்கங்களை அணுகுவதை விட தொழிற்சாலையின் நிர்வாகிகளையோ, புரோக்கர்களையோ அணுகி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது ஏதுவாக இருக்கிறது. வாரம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் வேலை இருக்கும். மீதமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மதுவும், மூன்றாம் தரப்படங்களும் அவனுக்கு ஆறுதல் தருகின்றன. தொழ்ழிற்சங்கத்தினர் அவனை அணுகுவது கூட சிரமமாக இருக்கிறது. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ந்ல்ல பூங்காக்களோ ( இருக்கு ஒரே பூங்கா மாசடைந்த நொய்யலின் ஓரம் சாயக்கழிவு துர்நார்றங்களை வீசிக்கொண்டிருப்பதாக இருக்கிறது. பெயர் பிருந்தாவன். பெயரில் என்ன இருக்கிறது. ) இல்லை. மாவட்டம் என்று ஆகிவிட்டாஅலும் மாவட்ட்திற்கான மையநூலகமோ இல்லை. மிகக் குறைந்த கொசுக்கடி நூலகங்களே உள்ளன. அதிகப்படியான மதுபானக் கடைகளும்,( 100) அதிக பெட்ரோல் பங்குகளும் உள்ள நகரம். குடிநீருக்காக கால்கடுக்க குடும்பப் பெண்கள் நிற்கவேண்டிய நிலை. மூன்று குடிநீர் திட்டங்கள் நிறைவேறி விட்டன. அதிலும் பிரைவேட் ப்ப்ளிக் பார்ட்னர் திட்டம் என்று ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவானி தண்ணீர் திட்டம் ஒரு வகையில் தோல்வியே. குடிநீருக்காக மக்கள் பணம் தருவதை கட்டயமாக்கும் திட்டம் இது.இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் திருப்பூர் மக்கள் தொகை இருபது லட்சத்தை தாண்டும் என்ற புள்ளிவிபரத்தை முன் வைத்து செயல்படும் திட்டங்கள் தேவையாக இருக்கின்றன. சாயத்தால் நொய்யல் ஆற்றையும் , மண்ணையும் மாசுபடுத்தி விட்டோம். அதை சுத்தம் செய்யலாம் வாருங்கள் என்று ஏற்றுமதியாளர்கள் பெரிய பெரிய பேனர்கள போட்டு தங்கள் குற்ற உணர்வை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில். நொய்யலை சுத்தம் செய்கிறோம் என்று நகரத்தின் மையத்தில் சிறிய பகுதியை சுத்தம் செய்திருக்கிறார்கள் வளம் என்ற ஏர்றுமதியாளர்கள் சங்கத்து உறுப்பினர்கள். 1000 அங்கீகரிக்கப்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இதற்காக எரியூட்டப்படும் மரங்களும், அவற்றின் சாம்பலும் ,துண்டு பனியன்களை வீட்டு உபயோகத்திற்காக எரியூட்டப்படும் கழிவும், சாயக்கழிவும் பெரும் அபாயங்களாக மாறி உள்ளன. தினசரி இங்கு விற்கப்படும் கொசுவர்த்தி நிவாரணி சுருளும் , திரவ புட்டியின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்கப்படுவதில்லை.சாயப்பட்டறைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு முறையில் நிவர்ர்த்தி செய்ய 30 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.200 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் வைத்துள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உப்பின் அளவு அபரிமிதமாக இருப்பதால் பெரும் சுற்று சூழல் பாதிப்பு எற்படுகிறது.சாயக்கழிவுகளை கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போது கலைஞருக்கு நன்றி தெரிவித்து பேனர்களும், தட்டிகளும் நகரம் முழுவதும் காணப்பட்டன. சாதாரண தொழிலாளி திருப்பூருக்கு சாயப்பிரச்சினையிலிருந்து விடிவு வந்து விட்டதென்று கலைஞரைப் புகழ்ந்து நெகிழ்ந்து போய் கிடந்தான். சுற்றுச் சூழல் பாதிப்பும் , சுற்று சூழல் அமைப்புகளின் எதிர்ப்பும் மீறி அது நிறைவேறப்போவதில்லை.தொழிற்சங்கவாதிகளும் , அரசியல் தலைவர்களும் ஏற்றுமதியாளர்களாகவும், பனியன் வியாபாரிகளாகவும் உள்ள சூழல் எந்த சுற்றுச் சூழல் சார்ந்த நம்பிக்கைக்கும் இடம் தருவதில்லை. தொழிற்சங்க்க கல்வியோ, அரசியல் கல்வியோ தொழிலாளிக்குத் . தர முடியாத நிலையில் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. வெளிநாட்டு ஆர்டர்கள் வருவதும் போவதுமான ஊரில் வேலை பல சமயங்களில் நிரந்தரமில்லாத்தாகி விடுகிறது. இது தரும் பாதுகாப்பின்மை அவனை பயத்திற்குள்ளாக்கி விடுகிறது. அவன் நிரந்தர தொழிலாளியாக இல்லாமல் பீஸ் ரேட் செய்கிறவனாக , காண்டிராக்ட் ஊழியனாக மாறிய நிரந்தரத்தன்மை இங்கு அவனை பாதுகாப்பில்லாதவனாக்கி விடுகிறது. குடும்பத்தினருடன் அவன் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. குடும்பத்திலும் அந்நியனாகவே இருக்கிறான்.

சமூக மனிதனாக அவன் நடமாடுவதாற்கான சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து விட்டது. கலாச்சாரத்தளத்தில் அவனின் செயல்பாடு முடக்கப்பட்டு விட்டது முந்தின தலை முறை படிப்பறிவை நிராகரித்துவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வளர்ந்ததின் பலனை திருப்பூரின் இன்றைய கேளிக்கை நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சார குடும்ப அமைப்புகளும், குற்ற நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து மீண்டு அவன் சக மனிதனாகவோ, சக் தொழிலாளியாகவோ சமூகத்தில் தன்னைப் பிணைத்துக் கொளவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. இந்த .சூழல்கள் அவனை சோர்வுள்ளவனாக, மனரீதியாக பாதிப்படைந்துள்ளவனாக அவனை மாற்றி விட்டது. இதுவே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அந்நிய செலவாணி தரும் டாலர் சிட்டி என்ற அடைமொழி மாறி தற்கொலை நகரம் என்றாகி விட்டது. வணிக நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சாரமும் கலாச்சார அந்நியமாக்கலும் இதைத்தவிர வேறு எதையும் ஒரு தொழில் நகரத்தில் வாழும் மனிதனுக்குத் தந்து விடாது. திருப்பூரின் தொழில் வளர்ச்சி தந்திருக்கும் நிரந்த போனஸ் இது.


திருப்பூர் இலக்கிய விருது 2015
  (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)  

பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை:               எல்லாளக்காவியம்-                                                                  இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் :                சொட்டுத்தண்ணீர் –
இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –                         இந்தி மொழிபெயர்ப்புகள்

அயலகப்பரிசுகள்  பெறும் படைப்பாளிகள்:

----------------------------------------
ஜெயந்தி சங்கர்
மாதங்கி
சிங்கை டாக்டர் லட்சுமி
நடேசன்
அயலகப்படைப்பாளிகளுக்கு பாராட்டுப்பத்திரம் சம்பந்தப்பட்டப் பதிப்பகங்களுக்கு அனுப்பிவைவக்கப்படும். மற்றவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்

திருப்பூர் இலக்கிய விருது 2015
(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)


7/272 குருவாயூரப்பன் நகர், 7வது தெரு , போயம்பாளையம், திருப்பூர் 641 602. Srisuganthi2014@gmail.com
கவி ராத்திரி நிகழ்ச்சி
  30வது தேசிய புத்தகத் திருவிழா

கவி ராத்திரி நிகழ்ச்சி  என்பிடி என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி அரங்கில் ( பழைய பேருந்து நிலைய சாலை ) ஞாயிறு மாலை நடைபெற்றது.  
      கவிஞர் ஜோதி தலைமை தங்கினார். என்சிபிஎச் நிர்வாகி குணசேகரன், செல்லம் ரகு, ஜீவானந்தம், துருவன் பாலா,  முகில் திரையகம் ராசு ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கனல்மதி, பூண்டி முருகானந்தன், செந்தமிழ்வாணன், ஸ்டிபன் முடியரசு, ஜோதி, சுப்ரபாரதிமணியன்,  ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். செந்தமிழ் வாணன்  வெளிவர இருக்கும் அவரின் புதிய நாவல் “ பித்தப்பிறை “ நாவல் பற்றிய அனுபவங்களை எடுத்துக்கூறி  அறிமுகப்படுத்தினார். சுப்ரபாரதிமணியன் தன் “ மந்திரச்சிமிழ் “ நூலை சுய அறிமுகப்படுத்தி அதிலிருந்து கவிதைகள் வாசித்தார். சாகித்ய அகாதமி பரிசை எழுத்தாளர்கள் திருப்பி அனுப்பி வருவது பற்றிய விவாதத்தை சிவகாமி துவக்கி வைத்தார்.சாகித்ய அகாதமி பரிசை திருப்பி அனுப்பிய தெலுங்கு கவிஞர் பூபால் ரெட்டியின் “ நட்சத்திரப்பூ “ நூல் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பூர் கனவு அமைப்பு வெளியிட்ட  அந்த          “ நட்சத்திரப்பூ “ கவிதைத் தொகுப்பு கவிதை வாசித்தோருக்குப்  பரிசாகத் தரப்பட்டது.. என்பிடி என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி  நவம்பர் 30 வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. 10% கழிவு உண்டு. இலக்கியம், சுயமுன்னேற்றம் உட்பட அனைத்துப் பிரிவு நூல்களும் விற்பனைக்கு உள்ளன.  செய்தி: குணசேகரன் ( என்சிபிஎச்)