சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 29 செப்டம்பர், 2014

கதை சொல்லி ” விருதுகள்”

ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது:

இன்குலாப் நேர்காணல்

சுப்ரபாரதிமணியன்

நல்ல உரையாடல்கள் எதிரில் உள்ளவரின் மனதை அறிய, அவர் அறிவை அறிய, உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்ள, கை குலுக்கிக் கொள்வதைப் போல. அப்புறம் சிந்தனைத் தெளிவிற்கு, கொஞ்சம் சேகரித்துக் கொள்ளவும் கூட..  நேர்காணல்கள் மூலம் பெறப்படும் தகவல்களும், அனுபவங்களும், அதுவும் படைப்பிலக்கியத்தின் ஒரு பகுதி என்று உணர வைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கோவை வானொலியில் கவிஞர் இன்குலாப்புடன் வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்திய ஒரு நீண்ட நேர்காணல் “ ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது “ என்ற தலைப்பில் அகரம் பதிப்பகம் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. ஸ்டாலின் இதுவரை 25 நூற்கள் எழுதியிருப்பவர். கிரேக்க நாடகங்கள் பத்திற்கும் மேற்பட்டவை இவரின் மொழிபெயர்ப்பில் முக்கியத்துவம் பெற்றவை.
இந்த நேர்காணல் படைப்பாளிக்கும், சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பு, அவனின் கலகத்தன்மை பற்றி பெரும்பாலும் பேசுகிறது.எதிர்குரலும், மாற்றத்திற்கான தன்மையும் இயங்கியலாக தொடர்வதைச் சொல்கிறது. நெருக்கடி நிலை கால கட்டம், உலகமாதல் சூழல், அது சார்ந்த படைப்பு மனம் பற்றின அக்கறைகள் ஒரு படிப்பாளி சூழலை எதிர்கொள்ள வேண்டிய அணுகு முறைகளைச் சொல்கிறது. தமிழ் தேசியம் குறித்த விவாதத்தையும் முன் வைக்கிறது.
அரசு சார்ந்த நிறுவனமான வானொலி நிலையம் சுதந்திரமாக அரசியல், புரட்சிகர விசயங்களை உரையாடலில் பகிர்ந்து கொள்ளச் செய்திருப்பது ஆரோக்கியமாகத் தென்படுகிறது. ஸ்டாலின் முன் வைக்கும் காத்திரமான கேள்விகளும், இன்குலாப்பின் சிந்தனைகளும் ஒரே அலை வரிசையில் செயப்படுவது இந்த நேர்காணலை சுவாரஸ்யமானதாக்குகிறது. உரையாடலுக்கான வெளி எவ்வளவு பரந்தது என்பதும் தெரிகிறது.உரையாடல்கள் கொண்டு செல்லும் சிந்தனைகளும், பரிமாற்றங்களும், ப்டைப்பிலக்கியத்தின் ஒரு பகுதியாக்குகிறது.
( ரூ 60, அகரம், தஞ்சை )

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

கலகலப்பு ” கைத்தலம் “ : எஸ்.சங்கரநாராயணன் சிறுகதைகள்

எழுத்தாள நண்பர் எஸ். சங்கர நாராயணன்  மகன் பிரசன்னா திருமணத்திற்கு போக முடியாத வருத்தம் மனதிலிருந்தது. அலுவலகப்பிசாசின் அவஸ்தைதான். அத்திருமண தாம்பூலப் பையில் ஒரு புத்தகம் தந்தது பற்றி பல நண்பர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி சில பத்திரிக்கைகள் எழுதின. அந்தப் புத்தகம் அவரின்  16 சிறுகதைகள் கொண்ட ” கைத்தலம் ” என்ற புத்தகம்.   சமீபத்தில் இலக்கிய வீதியின்    ” அன்னம் விருது”  வாங்க சென்னை போயிருந்த போது திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் ஞானராஜசேகரன் கையில் பரிசு பெற்ற மகிழ்ச்சியை கூட்டியது சங்கரநாரயணன் அந்தப்புத்தக பிரதியைப் பரிசளித்தது. அக்கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்த போது மூன்று மாதம் இதை படிக்காமல் போய் விட்ட குறை, திருமண வைபவத்திற்குப்  போகாத குறையை விட  உறுத்தியது. அமர்க்களமான கதைகள் . அபாரமான நகைச்சுவை. புத்தகமெங்கும் நிறைந்திருந்தது. கல்யாண வீட்டின் நல்ல விருந்து போல. . சில பிரசுரமாகாத கதைகளும் பல பிரசுரமான முன்பே படித்து ரசித்த கதைகளுமான தொகுப்பு அது.  இதில் பெண் யாதுமாகி நிற்கிறாள். தாயாய் , சினேகிதியாய், காத்லியாய், குருவாய்  என்று. இப்படி பெண்ணை பெருந்தன்மையுடன் பார்ப்பதற்கு எவ்வளவு முதிர்ச்சி வேண்டும். திருமணத்தை ஒட்டி நடைபெறும் பெண்பார்த்தல், கல்யாண ஏற்பாடுகள், மூகூர்த்த கால சடங்குகள், சச்சரவுகள், குடும்ப போட்டோக்கள் எடுத்துக் கொள்வது, குலதெய்வம் கோவிலுக்குப் போவது, சொந்தங்கள் தரும் மகிழ்ச்சி, சங்கடங்கள் எல்லாம் உள்ளடக்கிய கதைகள் இவை. பெண் பார்க்கும் படலம் முதலே பெண்ணுள் ஆக்கிரமிக்கும் உணர்வுகளை துல்லியமாக்க் காட்டுகிறார். ஊமைப் பெண்ணாக இருந்தாலும் அவள் திடமாக நின்று கணவனுக்கு காவலாளி ஆகிறாள்.  ஜாதீயத்தீ பலரை பலி கொள்கிறது. அம்மாக்களின் பெருமைகளுக்கும்,  தியாயங்களுக்கும் குறைவேயில்லை.கோபத்தை அணிகலனாய் அணிந்து கொள்ளும் ஆண்கள், பொறுமையை அணிந்து கொள்ளும் பெண்கள் என்று உறவுகளில் விதவிதமாய் இருக்கிறார்கள். உறவுகளுக்கு மத்தியில் கிண்டல்கள் மலிந்திருப்பது போல் எஸ். ச வின். உரைநடையில் நகைச்சுவை மலிந்தும் , மிளிர்ந்து கிடக்கிறது.சில உதாரணங்கள்: ஊறுகாய் குலுக்கல் போல்/,பூனை மியாவ் என கோரிக்கை வைக்கும் சாப்பிடுவது உப்புமாவாக இருந்தால் சேமியாவ்./ பீடிக்கு தாஜ் பீடி கவர்னர் பீடி என்றெல்லாம் மகாப் பெயர் வைக்கிறார்கள். எந்த கவர்னர் பீடி குடிக்கிறார் தெரியவில்லை./    
 “ திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் “  கதையில்-  படத்தில் கற்பழிப்பு காட்சிகளில் விதவிதமாய் நடந்து கொள்பவனை ஒரு கதாநாயகி திருமணம் செய்து கொள்கிற அதிசயத்தை வாய் விட்டுப் படித்து வாய் விட்டு சிரிக்க வைக்கிறார். எந்தப்பத்திரிக்கையிலும் பிரசுரமாகாத கதை இது.  நெஞ்சில் பனிக்கத்தியைச் சொருகுவது போல் மனதை உறைய வைக்கும் கதைகளும் உண்டு. “ புல்லின் நிழல்  “ அதிலொன்று. மாநகர ரயில்கள் தாமதவாவதில் அனேக காரணங்கள். அப்படி தாமதமாகவே வீடு சேரும் ஒரு பெண் மன்நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணை அரவணைக்கும் கதை அது.
சடங்குகள் விலாவாரியாய் சொல்லப்படுகின்றன. அவற்றில் இருக்கும் கசடுகளைக் காட்டுவதில் ஒரு பகுத்தறிவு பார்வை வந்து விடுகிறது. இசையைப் பற்றிய ஏகப்பட்ட பிரஸ்தாபங்கள், ரசிப்புகள். தெலுங்கு பேசும் கதாபாத்திரங்கள் இந்த கலகலப்பில் அதிகம் கலந்து கொள்கிறார்கள்.       ” அந்தரங்கத்தைப் பேணுதல் காற்றில் அலையும் சுடரை கைக்குள் பேணுதல் போல “ என்று  ஒளிந்து கொண்டிரூக்கும் தாய் என்ற கதையில் சொல்கிறார். மற்றவர்களின் அந்தரங்கத்தை ஊடுருவி எழுதப்பட்ட இக்கதைகளில் பேணப்படும் நாகரீகம் நேர்த்தியானது. 11 நாவல்கள், 25 சிறுகதைத்தொகுப்புகள் என்று எழுதிக்  கொட்டிக்குவித்திருக்கும் சங்கரநாராயணின் உரைநடையில் இருக்கும் வேகம், நகைச்சுவை கல்யாண விருந்து போல் சுவையானது. கல்யாண மண்டப கலகலப்பு கொண்டது.
     மொழிக்கு வணக்கம் சொல்லும் “ சொல்லங்காடி “ பதிப்பக வெளியீடு  ( 9677053933 ) இது. கல்யாணப்பரிசு திரைப்படத்தில் எழுத்தாளப் பாத்திரத்தை மையமிட்டு நகைச்சுவை அமர்க்களப்படுத்திய கே.ஏ. தங்கவேலுக்கு ஓர் எழுத்தாளனின் இல்லத்து கல்யாணப் பரிசாக சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது  . கடைசி அட்டையில்  இப்படி.:
 ” எழுத்தாளன் நாட்டின் முதுகெலும்புன்னேன் தட்டினாம் பாரு ”
“ உங்களையா “

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014">கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

       கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் 


சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு 


பேரவையின் 35 ம் ஆண்டு விழா .  பரிசு பெறும் 


எழுத்தாளர்களை சாரட் வண்டியில் வைத்து ஊர் முழுக்க


 ஊர்வலமாய் அழைத்துப் போகிறார்கள். இவ்வாண்டு 


நடைபெற்ற மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்ட

 

ஊர்வலம் மது எதிர்ப்பு, போதை எதிர்ப்பு  கருத்துக்களை


மையமாக்க் கொண்டிருந்தது. இவ்வாண்டு பரிசு 


பெற்றவர்கள்:


சுப்ரபாரதிமணியன் ( குப்பை உலகம் ) கட்டுரைத்தொகுப்பு,    
 இளசை சுந்தரம் ( தியாக சீலர் கக்கன்) , அய்க்கன்  ( நக்கீரர் )                                  ( கட்டுரைத்தொகுப்புகள் ) ,
தி.நா.நாராயணன்           ( தோற்றப்பிழை),  ரமேஷ் ( முத்தா )
,சிறுகதைத் தொகுப்புகள் , 
  
பூர்ணா ( முளைகட்டிய சொற்கள் ), கவிபாலா ( நீர்ப்பசி ) , திலகபாமா கவிதைகள் 

,பாரதன் தலைமையிலான  குழு சிறப்பாகவும் ஆர்வத்துடனும் 35 ஆண்டுகளாக பாரதி இலக்கியப் பேரவையின் செயல்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்">நூல் அறிமுகம்: ஒரு சாமானியனின் சாதனை : இளங்கோவன் நூல்


சுப்ரபாரதிமணியன்


திருப்பூரை அடுத்த  ஒரு கிராமத்தில் 5 ஏக்கர்  நிலத்தில் 10 கி.வாட் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குவைத்தில் வாழும் இளங்கோவன் பற்றி பசுமை விகடனின் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி எழுதிய  ஒரு கட்டுரை பேட்டியில்  தெரிந்து கொண்டேன். திருப்பூர் பின்னலாடை தொழில் மின்சார வெட்டால் அவதிப்பட்டிருந்த காலம் அது. சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தி பற்றிய முக்கிய கட்டுரைப்பேட்டி அது. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இளங்கோவனின் “  ஒரு சாமானியனின் சாதனை “ என்ற அவரின் வாழ்க்கை அனுபவங்கள் நூல் வெளியிட்டு விழாவில் கவிஞர்கள் அறிவுமதி, சிற்பி பாலசுப்ரமணியன், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபலங்கள் லேனா தமிழ்வாணன், இயகோகா சுப்ரமணியன், சிறுதுளி வனிதா மோகன், கேஜி மருத்துவமனை பக்தவச்சலம், முனைவர் இளங்கோவன் பார்க் அனுசா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், எழுத்தாளர் சி. ஆர். ரவீந்திரன் போன்றோர் கலந்து கொண்டது அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள  ஆவலைத் தூண்டியது,அந்த நூல் வெளியீட்டு விழாவிலேயே அப்பா இல்லாதக் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் படிப்புச் செலவிற்கு ரூ 25 இலட்சம் ரூபாயை அவர் சார்ந்த “ அரவணைப்பு “ அமைப்பு வழங்கியது ஒரு முக்கியச் செய்தியாக இருந்தது.
சோளமோ, கம்போ, சாமையோ, அவரையோ, துவரையோ விளையும் நிலத்து விவசாயின் மகன்தான் ஒரு பட்டிக்காட்டுக்காரரான இளங்கோவன்.திராவிட கட்சியின் ஈடுபாட்டால் அறிஞர் அண்ணா தான் அவருக்கு அப்பெயர் வைத்துள்ளார்.அவரின் தந்தையின் நெஞ்சில் பெரிய அளவிற்கு ஒரு வடு இருந்திருக்கிறது. அவர் நிலத்த்தை உழுதாலோ, பாத்தி பிடித்தாலோ, வரப்பு போட்டாலோ, மண் வெட்டினாலோ  அந்தத் தழும்பு புண்ணாகிச் சீழ்வடியும். அவரால் குடும்பத்திற்குத் தேவையான அளவு உதவ முடியவில்லை.அம்மாதான் எல்லாமே..எருமை வளர்த்துப் பால் கறந்தும் விற்றும்  ஆடு மேய்த்து அவைகளை வளர்த்தும் அவரைப் படிக்க வைத்திடிருக்கிறார்.எம்.ஈ. படிப்பை சிம்னி விளக்கு வெளிச்சத்திலேயே  படித்திருக்கிறார் என்பது அவரது வறுமையின் உதாரணம். பிறகு ஆசிரியர் பணி, பியர்லஸ் முகவர், வெட்கிரைண்டர் உற்பத்தி, பின்னலாடை உற்பத்தி என்று 13 தொழில் நிறுவன்ங்களை நடத்தியிருக்கிறார்.பத்து ஆண்டுகளில் பின்னாலாடைத் தொழிலின்  வீழ்ச்சி அவரை நிலை குலைய வைத்து விட்டது. இரட்டை சக்கர வாகனம் உட்பட எல்லா சொத்துக்களையும் விற்று வந்த்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கடனை அடைத்திருக்கிறார். 52 இலட்சம் கடனை அடைக்க வேண்டியச் சூழலில் குவைத்திற்கு வேலை தேடிச் செல்கிறார். ( அவரின் கடன் குறித்து சிலர்  எழுதிய கடிதத்தால் விமானத்திலிருந்து  இறக்கி விடப்பட்டு ,பின் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று  தனியே விமானம் ஏறுகிறார் ) அப்போது மகனுக்கு மூன்றரை வயது.  மகளுக்கு ஒன்பதரை வயது.  இளம் வயது மனைவி.குவைத்தில் இங்கே. குவைத்ஹ்டில் ஆட்டுக் கொட்டகையில் தங்கி மூன்று வேளை உணவை ஒரே சமயத்தில் சமையல் செய்து அலுவலக வேலை, குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி, சோதிடம் சொல்வது என்று சிரமப்பட்டு அந்த 52 இலட்சம் கடனை தீர்த்தபின்பே  3 ஆண்டுகள் கழித்து திருப்பூர் திரும்புகிறார். அதன்பின் சம்பாதிக்கிறத் தொகையில் 1/6 பகுதியை தானத்திற்கென்று ஒதுக்கியும் ” அரவணைப்பு”   என்ற அமைப்பின் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார்.   கைவசம் இருந்த கல்வியை வைத்து முன்னேறியதால் ஏழை மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை அளிப்பதன் மூலம் திருப்தி கண்டு  வருகிறார்.
இவரின் சின்ன வயசு அனுபவங்கள், வறுமைநிலை,வியாபாரத்தில் வீழ்ச்சி, குவைத் நாட்டில் பணம் சம்பாதிக்கும் சிரமங்கள் என்பவையெல்லாம் ஒரு சாதாரண மணிதன் நொறுங்கிப்போய் தனிமைப்பட்டு மன நோயாளியாகும் சூழலிலிருந்து தப்பித்து மீண்டு குடும்பத்தையும் நடத்துவதையும் , சமூக அக்கறை கொண்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதையும்  இந்நூல் எடுத்துரைக்கிறது. இது சொந்த விளம்பரம் அல்லாமல்  தான் சார்ந்த சமூகத்திற்கு தன்னலம் கருதாமல் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்துவதில் கண்டையும் மகிழ்ச்சியை பிறர் உணர வைக்கிற அம்சங்களாய் இந்நூல் அமைந்துள்ளது. தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்பது இன்பத்துள்  தலையாயது என்பதை தன் செயல்களால் நிருபித்து வருகிறார்.  ” அஹம் பிரம்மாஸ்மி தத்வமஷி ” என்று என்னவாக இருக்கிறதோ அதுவாக இருந்து மற்றவர்களுக்கு உதவும் தன்மையைக் கொண்டிருக்கிறார்.. சக்கரவர்த்தி நெப்போலியன் காந்தி போன்றோரின் வாழ்கைச்சம்பவங்களை முன்னோடியாக எடுத்துக் கொண்டு செயல்படுவதை சில சம்பவங்கள் மூலம்     ( அது அவர்களின் வாழ்விலும், இளங்கோவனின் வாழ்விலும் என்று) சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார்.
சுயமுன்னேற்றம் சார்ந்த நூல்களில் கானப்படும் தேற்றங்களும் கதைகளும் சம்பவங்களும் மனிதன் என்னவாக ஆசைப்படுகிறான் என்பதைச் சொன்னாலும் அதை மேற்கத்திய அனுபவங்களீலிருந்து நாம் எடுத்து உள்வாங்கிக் கொள்ள சிரமப்படும் போது சாதாரண கொங்கு  மனிதன் ஒருவனின் வெற்றிக்கதையும் அவனின் வாழ்க்கையின் அனுபவங்களும் இப்புத்தகத்தில்விரிந்து ,   முன்னேற ஆசைப்படுபவர்களுகு வெகு சமகால நிசர்சனமாக இளங்கோவனின்   ஆளுமை முன் நிற்பது  சுயமுன்னேற்ற நடவடிக்கைகளில் அக்கறை கொண்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே.

( ரூ 65, பக்கங்கள் 102, விஜயா பதிப்பகம் , கோவை வெளியீடு )

திங்கள், 8 செப்டம்பர், 2014

பேரிரைச்சல்

இங்குதான் இருந்தது
கடல்.
கடல் தண்ணீரில்
கரைந்த
நம் நிர்வாண பிம்பங்களை உண்ட
கடல் மீன்களுக்குப் பித்தேறின.

அலைகள் கரையைத்
தொட்டு விலகும்போது
நமது உடல்களின் உவர்ப்பில்
கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது.

அதே கடலருகில் சூரியனின்
ஆயிரம் ஆயிரம் கரங்கள்
நம் வேட்கையின் சுவர்களில்
நிறங்களைப் பூசியதைக் கண்டோம்.

கடற்கரையின் தீராத மணல் வெளி
நமது தீராத விருப்பங்களை
எவ்வளவு குடித்த பிறகும்
சுவடற்று இருந்தது.
கடலின் அவ்வளவு
சப்தத்தையும் மீறித்தான்
நான் உனக்கு
அந்த வாக்குறுதியைக் கொடுத்தேன்

இப்போது
ஒரு கோடைகாலத்தின்
வெப்பம் மிகுந்த
அறையாக மாறிவிட்ட
இங்குதான்
இருந்தது கடல். ( மனுஷ்யபுத்திரன் )



இந்த எடம் முந்தி கடலா இருந்திருக்குமுன்னு தோணுதுஅவன் ஜன்னலினூடே பார்வையைச் செலுத்தியபடி சொன்னான். முகத்தில் சட்டென ஏதோ ஒட்டிக் கொண்டது போல அழுந்தத் தேய்த்துக் கொண்டான். அவன் பார்வை வெகு தூரத்தில் நிலைத்திருந்தது. வெறும் தலைகளை, நிலத்தில் நகரச் செய்த மாதிரி மக்களின் நகர்வு இருந்தது. வீதி முழுக்க மக்கள். எதையோ நோக்கி சரியாக நகர்வது போல நகர்ந்து கொண்டிருந்தனர்.
இந்த எடம் எப்பிடி கடலா இருந்திருக்கும். கடலுக்கும் இந்த ஊருக்கும் ரொம்ப தூரம்என்றாள் அவள். புடவையை கட்டிலின் மேல் விரித்து ஒரு பார்வை பார்த்தாள். புடவை கட்டிலுக்கு துணியொன்றைப் போர்த்தி விட்டது போலிருந்தது. “கடல் வந்து என்னென்னத்தோ கொண்டு போறாதப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறோம். சுனாமின்னு பெரிசு பெரிசா அலையெல்லா அடிக்கறதெ டிவியிலெ பாத்திருக்கன். அந்த மாதிரி அலையெல்லாம் வந்து எல்லாத்தையும் சுருட்டிட்டுப் போகணும். இந்த லாட்ஜை கூட
செரிசெரிஆரம்பிச்சுட்டே போலிருக்கு. கடல்ன்னு ஏதோ நெனப்பு வந்தது. சொன்னேன். இந்த ஊரே கடல் உள்ள ஊரா இருந்தா எப்பிடி இருக்கும்.”
நல்லாத்தா இருக்கும். கடல் வேண்டாம். குளம் இருக்கான்னு பாருங்க. வாளாங்குளம்ன்னு ஒண்ணு இருந்திருக்கு இங்க. இப்ப அது கூட பேருக்குத்தா இருக்கும். அந்தக் குளத்து மேல மாடிக்கட்டிடங்க வந்து கெடக்கும். ஆமா இந்த ஊருக்கு ஏன் அடிக்கடி கூட்டிட்டு வர்றீங்க. வேற எடம் கெடைக்கலியா…”
சட்டுன்னு ரெண்டு மணி நேரத்தில வந்தர்லாம். கோயில் உள்ள ஊரு. லாட்ஜ்க நிறைய இருக்கும். எடம் கெடைக்கும் சிரமம் இருக்காது…”
செரி அடுத்த தரம் நிஜமாவே கடல் இருக்கிற ஊருக்குப் போலாம்…”நான் ரெடி. உனக்குதா கஷ்டம். என்னன்னு சொல்லிட்டு அவ்வளவு தூரம் வருவே…”ஆமாஅது பெரிய சிக்கல்தா. வேண்டா. இந்த ஊர்தா சௌகரியம் போலிருக்கு
அவளுக்கு அடுத்த வாரம்   கொடுமணல் தங்கம்மன் கோவில் போக வேண்டிய வேலை ஞாபகம் வந்தது. அதுவும் ஆற்றங்கரையில்தான் இருக்கிறது. அங்கும் வெள்ளம் வந்த போதெல்லாம் கோவில் மூழ்கித்தான் போயிருக்கிறது. ஊரில் எல்லோரும் போவார்கள் வேறு வழியில்லாமல் பொங்கல் வைப்பதற்காக வேலைக்கு துணையாளாகப் போகவேண்டியிருக்கும்.
படுக்கை மீது இருந்த புடவையின் பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இளம் பச்சை நிறத்தில் பூக்கள் இருந்தன. உள்ளங்கை அளவு ஒவ்வொரு பூவும் விரிந்திருந்தது. பச்சை நிறத்தில் பூ என்பது அதிசயமாக இருந்தது போல பார்த்துக் கொண்டிருந்தாள். பூவின் ஓரத்தில் வெள்ளை கீற்றுகள் இருந்தன. இந்தப் புடவை உடுத்தும் போதெல்லாம் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைப்பாள். ஆனால் வெள்ளை நிற ஜாக்கெட் அவளிடம் இல்லை. வாங்கலாமா என யோசிப்பாள். எண்பது அளவு கொண்டது முப்பது ரூபாய்க்கும் குறைவானதுதான். ஆனால் வாங்கினதில்லை. வெள்ளை ஜாக்கெட் ஏனோ உறுத்துவது போலிருக்கும். பழுப்பு நிறம் சுமாராக இருக்கும். வெள்ளை என்றால் உறுத்தும். “என்ன முண்டச்சி போடறாதப் போட்டுட்டேன்னுயாராவது கேட்கக் கூடும். முண்டச்சி என்பவள் புருஷன் செத்துப் போகிறவள் மட்டுமா. புருஷன் இல்லாதவளும் முண்டச்சிதான். அப்படியென்றால் அந்த வசவு சொல்லுக்கு அவள் பொருத்தமுடையவளாக இருப்பதாகவே அவள் நினைப்பாள்.
என்ன பெரிசா யோசனையில இருக்கற மாதிரி இருக்குதுவெள்ளக் கலர் ஜாக்கெட் போடறதில்ல. வாங்கலாமான்னு நெனப்பு வந்துச்சு. அப்புறம் முண்டச்சி மாதிரி என்ன வெள்ளையில உடுத்திட்டுன்னு ஞாபகம் வந்துது. எனக்கு நானே முண்டச்சின்னு சொல்லிட்டேன். முண்டச்சி…”
என்ன அபச குணமா பேசிட்டு…”
புருஷன் இல்லாதவ மட்டுமில்லியா முண்டச்சி. புருஷன் செத்துப் போனவள் செறியானா முண்டச்சி. நாங்கெல்லா பாதி முண்டச்சிகளாபாதியோ முழுசோ எப்பிடியோ முண்டச்சிகசெரி என்ன அபசகுணமான்னு கேட்டுட்டு பொம்பளைக மாதிரி பேசிட்டு…”
என்னமோ மனசிலே வந்துது சொல்லிட்டேன்.” புடவையை நாலாய் மடித்துப் போட்டாள். தலையணை ஒன்றின் மேலுறை போல் அது கிடந்தது. பக்கத்தில் இருந்த தலையணையின் ஓரம் கிழிந்திருந்தது. அதன் உள் பகுதியிலிருந்த அழுக்கு அபரிமிதமாய் வெளித்தெரிந்தது. படுக்கையை நீவி விட்டுக் கொண்டாள். இன்னொரு தலையணை படுக்கை விரிப்பின் அடியில் இருந்தது.
என்ன இன்னிக்கு டி.வி. இருக்கற ரூம் வேண்டானுட்டே.”எதுக்கு அதுக்கு அம்பது ரூபா எக்ஸ்ட்டிரா செலவுன்னுதாபெரிசா மிச்சம் புடிக்கறே…”ஏதோ வீண் செலவு வேண்டான்னு…”செரி மத்தியானம் சினிமாவுக்குப் போலாமா…”அதுவும் வேண்டா…”
செலவை ரொம்பவும் கொறச்சுக்கறே…”
ஆமா அது எதுக்குன்னுதா. வெளிய போறப்போ யார் கண்ணுலே நாம பட்டிருவம்ன்னு பயந்திட்டு இருக்கணும். தியேட்டர்ல படம் போட்டதுக்கப்புறம் சாதாரணந்தா. ஆனா வெளிச்சமா இருக்கறப்போ அதே பயந்தாஅதுக்கு பதிலா ரூம்ல கெடந்தா தூங்குண மாதிரியுமாச்சு. ரெஸ்ட் எடுத்த மாதிரியுமாச்சு…”
ரயில்வே ஸ்டேசன் ரோட்லே பணியாரம் ஒண்னு விப்பாங்க அத வாங்கிச் சாப்புட வேண்ணா போலாம்
அவளுக்கு சலங்கைப் பணியாரம் ஏனோ ஞாபகம் வந்தது. பசைப்பயிறு, ஏலமாவு, கருப்பட்டி கலந்து கல்யாண வீடுகளில் போடுவார்கள். வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு போடும் முதல் பலகாரம் சலங்கைப் பணியாரம். அதை அவள் விரும்பிச் சாப்பிடுவாள். கடலை மாவை அள்ளி அள்ளி வைத்து நெய்யூற்றிச் சாப்பிட்டிருக்கிறாள்.
அவன் நான்கைந்து முறை கழிவறைக்குச் சென்று வந்து விட்டான். படுக்கைக்கும் கழிவறைக்கும் அல்லாடுபவனாக இருந்தான். ” மூங்கில் கொட்டத்திலே கெடக்கற மாடு மாதிரி கெடக்கீறேஎன்றாள். ” கை மருந்து வேணும்” “ அதுதா எல்லா மருந்தும் குடுத்தாச்சே “ “ தீரலே..” மாட்ட்டுக்கு நோவுன்னா பிரண்டை, பெருங்காயம், விளக்கெண்ணெய் போதும். உங்க நோவுக்கு வேறெ என்னவெல்லாமோ வேண்டியிருக்க்ல்ல..”
அவள் எழுந்து நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டாள். கம்பி துருவின் கசடு அவளின் கைகளில் ஒட்டிக் கொண்டது. ஒரு வகை செவ்வகத்தனம் அந்த ஜன்னலில் இருந்தது. சிறு சிறு செவ்வக வடிவங்களை அடைத்துப் போட்டு பெரிய செவ்வக வடிவத்தில் ஜன்னலை செய்த மாதிரி இருந்தது. இருநூறு அடி தூரத்தில் கூம்பு வடிவலாக ஒலி பெருக்கி முனை இருந்த. ஏதோ மசூதியின் மாடியாக இருக்கலாம். ஓதும் சத்தம் அவ்வப்போது கேட்கும் நேரத்தை அறிந்து கொள்வதற்கு அந்த ஓதும் சத்தம் உதவலாம். இப்போது என்ன நேரமிருக்கும். வெயிலின் வெளிச்சம் நேரத்தை கணக்கிடுவதற்கு ஏதுவாக அவளுக்கு இருக்கவில்லை.
நேரம் என்ன…”
என்ன பசியாகுதா…”
இல்லேதெரிஞ்சுக்கலாமுன்னு…”
டீ வேண்ணா சொல்லட்டுமா…”
வேணாம். ரூம் பசங்களோட பார்வையே செரியில்லை. என்னமா அவங்க பார்வை இருக்குது. உடம்பைத் துளச்சுட்டு போயிருது…”
நீயெதுக்கு அப்பிடியெல்லா நெனச்சுக்கறேஅவங்க சாதாரணமாத்தா பாக்கறாங்க…”
என்னமோ எனக்கு அப்பிடி எண்ணம். ஆமாஒண்ணு தெரியுமா. நம்ம ரூம்ல மேல பெருக்கல் குறி போட்டிருந்துச்சு. என்னமோ பயமா இருந்துச்சு. துணிஞ்சு ரூம் பையன் கிட்ட கேட்டுட்டேன். எதுக்கு பெருக்கல் குறின்னு…”
என்ன சொன்னான்.”
எனக்கு பயமாத்தா இருந்துச்சு. இப்பதா என்னென்னமோ நியூஸ் வருதேன்னு. ரூமுக்குள்ள ஏதாச்சும் கேமரா வெச்சு நம்மள படம் புடிப்பாங்களான்னு…”
புளு பிலிம்…”
ஆமா அதுதா…”
அதெல்லா காசு உள்ளவன் பெரிய பணக்காரங்கன்னு தெரிஞ்சுட்டு மிரட்டறதுக்காக. நம்ம மாதிரி எரநூறு ரூபாய்க்கு வாடகைக்கு வர்ரவங்கெல்லா சாதாரணமாத்தா இருப்பாங்க. செரி ரூம் பாய் என்ன சொன்னான்…”
என்னமோ சினிமா சூட்டிங்குன்னு வந்தவங்க ரூம் அடையாளம் தெரியறதுக்காக அப்பிடி பெருக்கல் குறி போட்டு வச்சிருப்பாங்களாமா. சூட்டிங்காரங்க காலையில நேரத்தில எழுப்பறது, காபி குடுக்கறதுண்ணு அடையாளம் பெருக்கல் குறியாமா…”
அவன் பெருமூச்சு விட்ட மாதிரி படுக்கையில் மல்லாந்து கிடந்தான். ஓரம் கிழிந்திருந்த தலையணையை தலைக்கு மேல் உயர்த்திப் பார்த்தான். “தலையணைன்னு ஸ்பெஷல் உபயோகம் இங்கதா…” அவள் பேசாமல் மூடியிருந்த கதவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வகை அழுக்குத்தனம் கதவு முழுவதும் அப்பியிருந்தது.
என்ன பேச மாட்டேங்கறே…”
நீங்கதா உபயோகம்ன்னு சொல்லீட்டீங்களே. இதையெல்லா யார்தா கண்டு புடுச்சாங்களோ…”
பெரிய யோசனைதா…”
ஆமா கதவு சாவி ஓட்டையை எப்பவும் அடப்பீங்களே…”
ஆமாமாமறந்திருச்சு…”
எழுந்தவன் அவனின் சுருண்டு கிடந்த ஜட்டியை எடுத்து கதவு சாவி ஓட்டைப் பகுதியில் மாட்டினான். சுருங்கிப் போன பழம் மாதிரி அது தொங்கியது.
நீ வீடியோ அது இதுன்னு பயப்படுவியே அது மாதிரிதா. எனக்கென்னமோ இந்த சாவி துவாரம் வழியா யாரோ பார்க்கற மாதிரி பிரம்மை இருக்கும். அதுதா…”
உங்க ஜட்டி எதை எதையோ நெனப்பூட்டுது…”
எதை…”
வேண்டா. நீங்களே யூகிச்சுக்குங்க.”
ஜட்டிக்குன்னு இப்பிடியொரு உபயோகம் இருக்கு பாருங்க…”
ஆமாஉன்னோட ஜட்டி என்ன இவ்வளவு நசிந்து கெடக்குதுநசிஞ்சு போன ஜட்டியை யூஸ் பண்றது நல்லதில்லே. இடுப்பைச் சுத்தி புண்ணு புண்ணா வரும். நசிஞ்சு பழசாகிப் போனதை தூக்கி எறிஞ்சிரு…”
அது ரொம்பவும் பழசுன்னு இல்லே. பிரவுண் கலர்ல அது அப்பிடித்தா இருக்கும்.”
அவள் படுக்கையின் ஓரத்தில் சாய்ந்து கொண்டாள். படுக்கையின் ஓரத்தில் சிறு கீற்றை கீறிவிட்டுப் போன மாதிரி கிடந்தாள். வாகனங்களின் இரைச்சலின் உச்சமாய் கிறிச்சிடல்கள் இருந்தன. அறைக்கு வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போலிருந்தது.
என்ன சட்டுன்னு மொகம் வெளிருது…”
ஒண்ணுமில்லவெளிய என்னமோ சத்தம்…”
இது பகல்தானேஎன்ன சத்தமா இருந்தா நமக்கென்ன. இதுவென்ன ராத்திரியா. நீங்க எல்லாத்துக்கும் பயப்படறீங்க. சின்னதா சாமான்க வுழுந்தா கூட பயப்படறீங்க…”
என்னமோ பயம்போன தரம் வந்தப்போ பயத்திலெ ஓடி வந்த மாதிரி இருந்துச்சு…”
போன தரம் ஒண்ணும் செரியில்லேரொம்பவும் டென்ஷனாத்தா இருந்தீங்கடென்ஷன் அந்த ஒரு நாள் முழுக்கவும் இருந்துச்சு.”
ஒரு சின்ன சண்டை…”
என்ன…”
சம்பந்தமில்லாததுதா. டவுன்ல இருந்து பத்து பதினஞ்சு பேர் வந்திருந்தாங்க. வக்கீல், எழுத்தாளர், என்ஜி ஒன்று சொன்னாங்க. நொய்யல் பகுதி முழுக்க பாத்துட்டு பாதிக்கப்பட்ட கிராமம்ன்னு நம்ம ஊருக்கு வந்தாங்க. என்னென்ன பாதிப்புன்னு கேட்டிட்டிருந்தாங்க. இது மாதிரி மாசத்துக்கு நாலு பேர் வந்து சாயத் தண்ணி வர்ரதுனாலே என்ன பாதிப்புன்னு கேட்டுட்டு எழுதிட்டு போறாங்க. அவ்வளவுதா. கோர்ட் கேஷ்ன்னு எவ்வளவு பாத்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனமில்லை. வர்ரவனுக எழுதிட்டு போட்டோ புடுச்சிட்டு போறதோட செரிவந்தவங்க என்னை என்ன என்ன பிரச்னைன்னு துளச்சு துளச்சு கேட்டாங்க. எரிச்சலா போச்சு. வயசு நாப்பதாகுது. இந்த ஊர்ல வெள்ளாமைக்கு தண்ணி இல்லெ. சாயப்பட்டறை தண்ணி அறுபது எழுபது மையிலுக்கு அந்தப்புறம் இருந்து வந்து நெலத்தை நாசம் பண்ணிடுச்சு. இந்த ஊர்ல எந்த சம்சாரியை நம்பியும் பொண்ணு குடுக்க மாட்டீங்கறானுங்க வெளியூர்காரனுக. இந்த ஊர்ல வந்து எங்க பொண்ணு எப்பிடி பொழைக்கும். சாயத் தண்ணி பூமி. நெலம் கெடந்தாலும் விவசாயத்துக்கு லாயக்கில்லே. எவனும் பொணணு தரமாட்டேன்கறான். நாப்பது வயசில கல்யாணம் ஆகாமெ நிக்கறன் பாரு. இதுதா பிரச்னை இதுதா கொடுமைன்னு கத்திட்டேன்…”
உங்க பிரச்னையை சொல்லிட்டீங்க போல
அதுல ஒருத்தன் கிண்டலா என்னப் பாத்தான்.
அடுத்த தரம் நாங்க வர்ரப்போ உங்க வயசில ஒரு பொண்ணெ கூட்டிட்டு வர்ரோம்ன்னான். எனக்கு கோபம் திட்டிட்டேன். அப்புறம் அவங்க சாரின்னு மன்னிப்பு கேட்டாங்க. நான் சமாதானமாகலே. டென்ஷன். அன்னிக்குத்தா இங்க அந்த டென்ஷனோட வந்தன்
உங்க பிரச்னையை சொல்லிட்டீங்க. அவங்க வேற எதிர் பார்த்திருப்பாங்களோ என்னமோ…”
என்ன கெரகமோ…”
படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்தவன் மாதிரி மேஜை அருகில் சென்றான். அழுக்கடைந்திருந்த பிளாஸ்டிக் ஜக் மூடியைத் திறந்தான். தண்ணீர் நெளிந்து ஆட்டம் காட்டியது.
எந்த ஊருக்குப் போனாலும் தண்ணீ குடிக்க பயமா இருக்கு…”
நம்ம ஊரு சாயத் தண்ணீ இங்க எங்க வருது. குடிங்க…” அவன் பிளாஸ்டிக் ஜக்கை உயர்த்திக் கவிழ்த்தான். நீர் பொலேரென்று வாயில் விழுந்து சிதறியது. பனியனின் மேல்புறம் நீர் வழிந்து நனைத்தது.
எங்க ஊர்ல இந்த சாயத் தண்ணி பிரச்னையில பொண்ணு வாங்க முடியாமெ கல்யாணம் ஆகாதவங்க இருபத்தாறு பேர் இருக்கறம். நாங்க ஒண்ணா சேர்ந்து ஒரு சங்கம் அமைக்கலாம்ன்னு இருக்கம்.”
செரிதாநானும் ஒரு சங்கத்தில இருக்கணும். எதில சேர்றது.”
நீங்களும் ஒரு சங்கம் ஆரம்பிங்க.” அவன் வாய்விட்டு சிரித்தான். கண்களின் ஓரத்தில் நீர் கசிவு மினுமினுத்தது. உடம்பைச் சாய்த்து படுத்தான். மின் விசிறி ஓடும் கூரையைப் பார்த்தான்.
அவளுக்கு திருமணம் செய்து கொடுத்த போது கிராம நிலத்தைக் காட்டி திருமணம் நடந்தது. “ஒரே பொண்ணு. வர்ரவனுக்குதா இந்த நெலம்.” ஆனால் சில ஆண்டுகளில் சாயத் தண்ணீர் பூத்த நிலம் விவசாயத்திற்கு பயனில்லாமல் போய்விட்டது. நிலத்தை வாங்குவார் யாருமில்லை. தரிசாகிக் கொண்டிருந்தது. நிலத்தை விற்று வியாபாரம் செய்யலாம் என்று நினைத்திருந்த அவன் எரிச்சலுற்று அவளுடன் சண்டை போட்டு நொய்யல் கிராமத்திற்கு அனுப்புவான். நிலம் வாங்க யாருமில்லை. அவளும் ஊரிலேயே தங்கிவிட்டாள். கட்டை விரலில் இருந்த பச்சையைப் பார்த்துக் கொண்டாள். சின்னதாய் பூ ஒன்று பூத்திருந்தது. நெற்றி, கன்னம், கைகள், கால்கள் என்று பாட்டி பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறாள். பூ, தேள், கிளி, மயில், மீன் என்று பல உருவங்கள் அவள் உடம்பில் மிதக்கும்.
எங்களுக்கு ஒரு சங்கம் வெச்சா என்ன பேரு வைக்கலாம்
கணவன் விரட்டிய மனைவிகள் சங்கம்
செரிதா…”
எங்க சங்கத்துக்கு ஒரு பேரு சொல்லு…”
பொண்ணு கொடுக்காததால் பிரமச்சாரிகளானவன்கள் சங்கம்
பேரு ரொம்ப பெரிசா இருக்குது.”
நொய்யல் பிரம்மச்சாரிகள்
சுருக்கமா இருக்கு…”
படுக்கையில் இருபுற ஓரங்களில் அவர்கள் தனித்தனியே கிடந்தார்கள். அவள் அணிந்திருந்த நைட்டி பாதிக் கால்கள் வெளியே தெரியுமாறு விலகி சுருண்டிருந்தது. அவன் கைகளை நீட்டி அவளின் முதுகைத் தொட்டான்.
சாயங்காலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போலாமா…”
உம்…”
முந்தியெல்லா நாம இங்க வந்தப்போ ரயில்வே ஸ்டேஷன்ல போயி உக்காந்திட்டிருப்போம். இருட்டுன பொறகு அங்கிருந்து மலையைப் பாக்கறது அழகா இருக்கும். எனனமோ சீரியல் லைட் போட்ட மாதிரி மலையில லைட்டுகளெல்லா எரிஞ்சிட்டிருக்கும். அதையைப் பாத்து பேசிட்டிருப்போம்.”
இப்போ அது கூட அலுத்துப் போச்சு. ஒரு தரமாச்சும் சண்முக நதி போகணும்…”
இப்ப அது நம்ம ஊர் ஆறு மாதிரி சாக்கடையாத்தா ஓடிட்டிருக்கும். சண்முக நதி போறதுன்னா மினி பஸ்ல போகணும். இல்லே குதிரை வண்டி புடிக்கணும்…”
வேண்டாவெளிய போகவே சங்கடமாயிருக்கு பயமாவும் இருக்கு…”
அவனின் கைகள் அவனின் முதுகைத் தொட்டு பரவ ஆரம்பித்தது. அவள் சிறு கூச்சத்துடன் உடம்பை  நெளித்தாள். உடம்பை திருப்பி அவன் முகம் இருக்கும் திசையில் புரண்டாள். உருண்டு கட்டிலைவிட்டுப் போய்விட வேண்டும் போலிருந்தது.
இது கூட அலுத்துப் போச்சு. தேவையா இருந்தாக் கூட அலுத்துதா போச்சுஎன்றாள். அவன் கைகளை மெல்ல சுருக்கிக் கொண்டான். கைகளை விரித்து உடம்பை முழு படுக்கையிலும் கிடப்பது போல செய்தான். ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல பெருமூச்சு விட்டான்.
அறையைத் திறந்து வெளியில் வந்தான். காரிடாரில் ஒருவன் குச்சி முனையில் கட்டியத் துணியில் தரையைத் துடைத்துக் கொண்டிருந்தான். தரை பளபளவென்று மினுங்கியது. எதிர் அறை முகப்பில் இரண்டு பிளாஸ்க்குகள் இருந்தன. நாலைந்து அறைகள் தாண்டிய முகப்பில் பாட்டில்கள் தென்பட்டன. சோடா பாட்டில்கள், மிரைல் பாட்டில்கள்மது பாட்டில்கள் கூட இருக்கலாம். மது பாட்டில்களின் வெவ்வேறு விதமான வடிவங்களால் அவை மது பாட்டில்கள் என்று கண்டுபிடிப்பது சிரமம்தான். மெல்ல அடுத்த முனைக்குச் சென்றான். விடுதியைத் தாண்டிய இடத்தில் பிரதான வீதி தென்பட்டது. இரண்டு குதிரை வண்டிகள் ஆளில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தன. ஏறத்தாழ பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று நகர்ந்தது. ஏகதேசம் அதில் எல்லோரும் மொட்டை அடித்திருந்தார்கள். மொட்டைகளுக்கு மத்தியில் நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி கால்களை எம்பியபடி நடந்து கொண்டிருந்தாள். அவளின் உடம்பு அவளுடன் ஒத்துழைக்காமல் இருப்பது போல சிரமம் முகத்தில் தெரிந்தது. அப்பெண் விடுதியைப் பார்த்து ஏதோ சொல்லியபடி நடந்தாள். இங்கு தங்கியிருந்திருப்பாளா. இங்கு தங்கி இளைப்பாற வேண்டும் என்ற ஆசையைச் சொல்லியபடி நகர்ந்து கொண்டிருப்பாளா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. அறைக்கு போய் மல்லாந்து கிடக்கலாம். இப்போதெல்லாம் அவள் எல்லாம் வெறுத்துப் போச்சு என்று சாதாரணமாய் சொல்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் முயங்கித் தீர்த்து எழுகிற ஒவ்வொரு முறையும் குளித்து விடுகிறாள். பெரும்பாலும் தலைக்கு நீர் ஊற்றி குளிப்பாள். குளிப்பது அலுப்பே இல்லை என்பது போல குறிப்பாள். எல்லா அழுக்கையும் விரட்டிவிட முடியுமா அந்தக் குளியலால். ஆனால் விடுதித் தண்ணீரிலேயே அவள் பல முறை குறிப்பதுதான் அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். மெல்ல நகர்ந்து அறைக் கதவைத் தொட்டான். அது விதக்கென்று திறந்து கொண்டது. ஒரு நிமிடம் பயம் ஒட்டிக் கொண்டது. பூட்டிவிட்டு போயிருக்கலாம். காரிடரில் நடமாடும் அறைப் பையன்கள் யாராவது இந்த இடை நேரத்தில் கதவைத் தள்ளிப் பார்த்திருப்பார்களாஒரு வித பயம் உடம்பைக் கவ்வியது. குளித்தால் பயம் போகுமாபோனாலும் போகும். எதற்கும் குளிக்கலாம் என்று மெல்ல நகர்ந்தான்.
ஆற்றில் குளிக்கிற பழக்கமெல்லாம் இல்லாமல் போய் விட்டது. யாராவது வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே ஆற்றைப் பார்க்கக் கிளம்ப வேண்டியிருக்கிறது. வெயில் அவ்வளவாய் உறுத்தவில்லை. மெல்ல ஆறு வரைக்கும் நடக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. ஒரு கி.மீட்டர் நடக்க வேண்டியிருக்கும் இப்போது ஆறு வரைக்கும் கான்கிரீட் சாலை வந்து விட்டது. தெருக்கள் கான்கிரீட்டால் மூடப்பட்டு விட்டன. கான்கிரீட்கள் முடிகிற இடங்களில் ஏகமாய் குடிசைகள் இருந்தன. கான்கிரீட் குடிசை வாயில்களுக்குக் கொண்டு செல்வது அவனுக்கு விசித்திரமாய் பட்டிருக்கிறது. ஆறு வரைக்கும் நீளும் கான்கிரீட் சாலை ஆற்றையொட்டி ஒரு சிறு பாலமாக நீளும். அந்த சிறு பாலத்தின் இன்னொரு முனை கூடுதுறையில் இருந்தது. கூடுதுறையில் ஆறகள் சங்கமிப்பதைப் பார்க்க எல்லோரும் அந்த முனையில் நிற்பது வழக்கமாக இருக்கும்.
கான்கிரீட் சாலையின் இரு பக்கங்களிலும் வாழைகள் பச்சையாய் விரிந்திருந்தன. நீர்க்கசிவு தார்ச்சாலைகளின் ஓரம் வரைக்கும் இருந்தது. அவனுக்குக் குளிக்க ஆசையாக இருந்தது. கூடுதுறையில் குளிப்பதற்கென்று இறங்கி விட முடியாது. சாயக் கழிவுகளின் வர்ணத்தில் தண்ணீர் கடந்து போகும்.
நீரின் சலசலப்பு தெளிவாய் கேட்டது. பார்வை விரிகிற வரைக்கும் ஆறு பரந்து கிடந்தது. ஒரு பக்கமிருந்து நொய்யல் சாயக் கழிவுகளுடன் பரபரத்து வரும். இன்னொரு பக்கம் காவேரி சலசலத்து தெளிந்தபடி வரும். இரண்டும் கூடுதுறையில் சங்கமித்த மின் சாயக்கலவையுடன் ஆறு சென்று கொண்டிருக்கும். கூடுதுறைக்குப் பிறகு ஆற்றின் நிறம் சாயக் கழிவின் நிறமாக மாறிக் கொண்டே இருக்கும். அவ்வப்போது கலக்கும் சாயக்கழிவின் நிறமாக ஆற்றின் நிறம் மிளிர்ந்து கொண்டிருக்கும் வர்ணஜாலம் அதன் பின் பல கி.மீட்டர் தூரங்களுக்கு இருக்கும். இதுவே கூடுதுறையைசுற்றுலா தலமாக்கி விட்டிருந்தது. வந்து பார்ப்பவர்கள் நொய்யலின் வர்ண நிறத்தையும், காவேரியின் தெளிந்த நீரையும் ஒப்பிட்டு பேசிக் கொள்வார்கள். கூடுதுறைக்கு அப்புறம் வர்ணமாகிப் போகும் புது ஆற்றைப் பற்றிச் சொல்லிக் கொள்வார்கள். ஊருக்கு வருகிறவர்களுக்குக் காட்டவென்று கூடுதுறை ஆகிப்போனது அவனுக்கு நினைக்கச் சங்கடமாகவே இருந்தது.
குளிக்க வேண்டுமென்றால் கூடுதுறைக்கு முன்னால் வடக்கு புறத்தில் இருக்கும் வண்ணான் துறைக்குத் தான் செல்ல வேண்டும். வேறு எங்கு போனாலும் ஆளைத் தள்ளிக் கொண்டு போய் ஜலசமாதியாக்கி விடும். நொய்யலில் வெள்ளம் வந்தால் ஊரே தீவாகி விடும். நீந்தத் தெரிந்தவர் மட்டுமே கரையை அடையலாம். பாலம் கட்டினபின்பு இது மாறி விட்டது. வண்ணான் துறையில் காவேரி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். வண்ணான் துறையே நெடுந்தொலைவு ஆகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருப்பவர்கள் கூட தென்படுவதில்லை. சாய ஆற்று மீனை உள்ளூர்காரர்கள் விரும்புவதில்லை என்பதுதான் காரணமாக அவன் மனதில் இருந்தது.
நொய்யல் பாய்ந்து வரும் பகுதி சாய்வு கோணத்தில் விரிந்து கிடந்தது. சாயக் கழிவைத் திறந்து விடும் நேரத்திற்கேற்ப நொய்யலின் நிறம் மாறும். இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் அதன் நிறம் தென்பட்டு விடும் என்ற எண்ணம் வந்தது. காவேரி தெளிந்து தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
நொய்யல் பகுதியில் யாரோ தண்ணீரில் இருப்பது தெரிந்தது. அதென்ன தலை முழுக்க நீண்ட முடி. கூர்ந்து பார்த்தான். நீரின் மினுங்களில் சாயத்தனம் தெரிந்தது. சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் நீர் வர்ணக் கோலமாய் நெளிந்து கொண்டிருந்தது. கூர்ந்து பார்க்கையில் மார்பை பாவாடையால் கட்டிய பெண் உருவம் என்பது தெரிந்தது.
அவன் திக்கித்து நிற்பவன் போலானான். நீரின் சலசலப்பு பெருத்த ஓசை போல் அவன் காதுகளை அடைத்தது. நெளிந்து வளைந்தக் கோடுகளால் ஆறு நிரம்பியிருந்தது.
ஐயோஎன்ன பண்றே நொய்யலுக்குள்ளே…” அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவள் தலையை உலுக்கிக் கொண்டதில் நீர்த் திவலைகள் தெறித்தன.
என்ன பண்ணுவாங்ககுளிக்கறன்.”
குளிக்கற எடமா இது
ஆறு தானேஆத்துல குளிச்சா என்ன…”
ஐயோஎந்த நேரத்தில சாயத் தண்ணியைத் தொறந்து வுடுவாங்கன்னு தெரியாது.”
சாயத் தண்ணியை தொறந்து வுட்டாலும் ஒண்ணுதா. தொறந்து வுடாட்டியும் ஒண்ணுதா. குளிக்கறதுக்கு தானே ஆறு…”
உங் குளிக்கற ஆசையை வூட்ல வச்சுக்கோ. நொய்யல்ல தேவையா…”
எல்லாம் வெறுத்துப் போச்சு…” அவன் தலையைத் தண்ணீரில் மூழ்கடித்து மறைய ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. “குளிக்காணும்ன்னா வண்ணான் துறைக்கு அந்தப்பக்கமா போ…”
எல்லாம் வெறுத்துப் போச்சு.” சாய நீரில் தலையை நனைத்து தலை முடியை புது வர்ணமாக்கிக் கொள்பவள் போல மூழ்க ஆரம்பித்தாள். பதட்டத்தில் சாயக் கழிவில் அவனை யாரோ மூழ்கடிப்பது போல இருந்தது.
SUBRABHARATHIMANIAN, 8/2635 PANDIAN NAGAR, TIRUPPUR 641 602 9486101003