சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 3 அக்டோபர், 2016


 uyirmei shortstory

சிறுகதை
நினைவிலாடும் சுடர்

                                                             சுப்ரபாரதிமணியன்

அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது கொஞ்சம் எம்பி விட்டால் போதும் விறுவிறுவென்று நகர்ந்து போய் விட்டது. தரையில் எவ்வித சிரமமும்  இல்லை. சட்டென உருண்டு போய் தேவையான இட்த்தில் நின்று விடுகிறது. மாடிப்படிகளில் உருண்டு போய் நின்று கொள்கிறது. இன்னும் கொஞ்சம் குதித்துப் போவதற்கு   ஆயத்தம் செய்து விட்டால் போதும் எல்லாம் சுலபமாகிவிடும்.நகர்தல் இயல்பாகி விடும். இயல்பு என்பதை விட சுலபமாகிவிடும்.
அப்போதைய கனவில்   இரண்டு கைகளும் முழங்கைகளுக்கு மேல் துண்டிக்கப்பட்டு மொழுமொழுவென்றிருந்தன. கால்களும் அப்படித்தான்.  முழங்கால்களுக்கு மேல் வெட்டப்பட்டு மொழுமொழுவென்றிருந்தன. தஞ்சாவூர் பொம்மை போல் நின்று கொள்ள முடிந்திருக்கிறது. யாராவது மேசைப் பொருளாக்கி விடுவார்களா..தலை மட்டும் மேசையில் அடிபட்டு ரத்தம் சொரியாமல் இருந்தால் சரி. எல்லாம் சரியாகத்தான் இருக்கும்.
அவளின் கழுத்துப்பகுதி கசகசவென்றாகி விட்டது. ரவிக்கை அக்குளுக்குள் நீரைப்பீச்சி விட்டது போலாகிவிட்டது. வியர்வை எங்குமாய் பெருக்கெடுத்துப் போய் உடம்பை நனைத்து விட்டது.  வியர்வை நசநசப்புடன் இப்படியே படுத்துக் கொண்டிருக்க முடியாது என்பது போல் இருந்தது.  மங்கலான வெளிச்சம் சுவரிலிருந்த கடிகாரத்தில் இரண்டு மணி ஆகியிருப்பதைக் காட்டியது. வயிறு சற்றே வலியை வெளித்தள்ளி அறைக்கு வெளியே போக எத்தனித்தது.  இந்த நேரத்தில் விளக்கைப் போட்டு விட்டு வெளியே நகர்ந்து கழிப்பறைக்குப் போக முடியாது. மற்ற வீடுகளிலெல்லாம் ஒரு வகை முணுமுணுப்பு  கிளம்பி விடும். தாக்குப் பிடிக்கும் வரைக்கும் வியர்வையில் நனைந்தபடி கிடக்கலாம் என நினைத்தாள்.
உடம்பு அசைந்து ஒரு வித   வலியைக் கொண்டுவந்தது. முழங்கைக்குக் கீழ் வெட்டப்பட்டு மொழுமொழுவென்று தோளிலிருந்து இறங்கியது  ஒரு கை. இன்னொரு கையையும் பார்த்துக் கொண்டாள். அது ரொம்பநீளத்திற்கு விரிந்து கிடப்பது போலிருந்தது.
வியர்வை விரிந்து கிடந்த கையின்  சுண்டு விரலையும் தொட்டுவிட்டது.  சுவரில் சாய்ந்து கொண்டாள். இப்போதைய ஆசுவாசம் சாய்ந்து உட்கார சுவர்தான் என்பது தெரிந்தது. சுவரைப்போல இன்னும் கொஞ்சம் மனிதர்கள் ஆசுவாசம்  கொள்ளச் செய்ய  இருப்பது அவளுக்கு ஞாபகம் வந்தது.ஆசுவாசப்படுத்துவது போல் கனவு வந்து ரொம்ப நாளாகி விட்டது  ஞாபகம் வந்தது.
கால்கள் கனத்து  அவளை பிணம் போல் கிடக்கச் செய்தது.

பாதித் தூக்கத்தில் இருப்பவளை எழுப்பிவிட்டால் முழிப்பது போல் அவள் கண்களைத் திருதிருவென்று உருட்டிக் கொண்டாள். முத்துலட்சுமிக்கு அறைகுறையாய் உருவம் தெரிந்தது.
எதுக்குதொளசி என்னை எழுப்புனே
ஷிப்ட்டுன்னு ஆள் கொறையுதுன்னு உன்னெ சூப்பர்வைசர் கூட்டிட்டு வரச் சொன்னார்.
ஒடம்பெல்லா ஒரே வலியா இருக்குது. தூங்கவிடு துளசி
இல்லடி, நீயில்லாம நான் போக முடியாது. வந்துரு. ஷிப்டுக்கு ஆள் இல்லெ. நான் தனியா போயி நின்னா சூப்பர்வைசர் வைவான். அப்புறம் இன்னொருத்தரை அனுப்பி வைப்பான்.
 “அனுப்பிவைக்கச் சொல்லு போடி
வெளையாடாதடி முத்து, மரியாதையா வந்துரு. இல்லன்னா சூப்பர்வைசரே வந்துருவான்
முத்துலட்சுமி திடுமென எழுந்து கொண்டாள். தலை மயிர் விரிந்து தாறுமாறாய்த் தலையிலிருந்து கீழிறங்கியது. மரத்தின் வெட்டப்பட்டக் கிளைகள் போல் நின்றது. அறையின் குறைந்த வெளிச்சத்திலும் துளசியின் கண்கள் தீக்கங்கு போன்று மிளிர்ந்தன. தூக்கமில்லாத கலக்கமான கண்கள் சிவந்து போயிருப்பது தெரிந்தது.
செரி வந்துதா தீரணும்ங்கறே
வேற யார் வுடுவாங்க. வாடி என்னமோ முடியற வரைக்கும் பண்ணு. எனக்கே லீவு தர மாட்டேன்னுட்டானுக. பிரியட் தள்ளிப் போறதுக்கு மாத்திரை போட்டுட்டு வேலை செய். வேலைக்கு ஆள் இல்லைங்கறான் சூப்பர்வைசர்.
ஓ........ அந்தளவுக்கு ஆயிப் போச்சா
பிரியட் தள்ளிப் போறதுக்கு மாத்திரையென்ன, கர்ப்பம் கலச்சுக்கோன்னு கூட மாத்திரை கூட குடுத்திருவாங்க. செரி எந்திரி
வர்றம் போடி
கையோட கூட்டிட்டு வான்னு உத்தரவு
விரிந்து கிடந்த புத்தகத்தை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்தாள் துளசி. புக்கெல்லாம் பாத்தா எறிஞ்சு எறிஞ்சு வௌறான் அந்த சூப்பர்வைசர் வாஞ்சிநாதன்
அவனா காசு கொடுத்து வாங்கிக் கொடுத்தான்
படிச்சு என்ன பண்ணப் போறெ.... மூனு வருசம் கழிச்சமா முப்பதாயிரம் கிடச்சுதான்னு போயிட்டே இருக்க வேண்டியதுதா...
பொழுது போக படிக்கறதுதா
பொழுது எங்க இருக்குது,. போக்கறதுக்கு
என்னமோ புது மில்லுக்கு யார் யார் போகப் போறீங்க. அங்க லைப்ரரி இருக்கு, நீச்சல் குளம் இருக்குன்னு முதலாளி பொங்கல் விழாவப்போ மைக்ல கேட்டார்
மைக்கில் கேப்பாங்க... செரி நட....
முத்துலட்சுமிக்கு பஞ்சாலையில் பிரமாண்டம் ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. அழகான நாற்பது வயதுப் பெண்களை கைகால்களை அகற்றி வைத்துக் கொண்டு உட்கார வைத்த மாதிரி விசாலமான கட்டிடம். உள்ளே நுழைந்து விட்டால் வெவ்வேறு நிறங்களே திக்கு முக்காட வைப்பது போல் வர்ண மயமான அறைகள். ஸ்பின்னிங் செக்சனில் ஒரு பர்லாங் தூரத்திற்கு ஒரே ஹால். சளசளவென்று  நீர் ஓடுவது போல் மிசின்கள் ஓடும் சப்தம். முதல் பார்வையில் எல்லாம் பிடித்திருந்தன முத்துலட்சுமிக்கு.
பஞ்சு குடோனிலிருந்து வருபவற்றை இறக்கி வைக்கிற வேலையில் வந்தவுடன் இருந்தாள் முத்துலட்சுமி.  யானைகளா இருக்கணும். ராட்சதர்களா இருக்கணும், அதுதா செரிஎன்று மிசின் ரூமிற்கு மாறினாள். பஞ்சை அள்ளிப் போட்டு சலித்த கைகள் கோன் எடுத்துப் போட்டுக் கொண்டு தள்ளு  வண்டியை  நகர்த்தின. கோன் வைண்டிங்களை எடுத்துப்  போட்டுப் போகையில் கொஞ்சம் கணக்கு தெரிந்திருக்க வேண்டியிருந்தது. எடுத்தது எவ்வளவு, ஓடாமல் நின்றது எவ்வளவு என்ற வகையில் மனக் கணக்குதான் அது. ஸ்பின்னிங் ஓடுவதை சிறு பிள்ளை போல் பார்த்துக் கொள்வாள். அதன் வேகம் அவளுக்குப் பிடித்திருந்தது. மிசின்களைத் துடைத்துவிட்டு நிற்கிற சமயங்களில், ஸ்பின்டில் ஓடுவதைப் பார்த்துக்கொண்டேயிருப்பாள். துளசி முகத்தில் முகமூடி போட்டுக் கொள்வாள். நான்கு நாளைக் கொருதரம் அதைத் துவைத்தும் கொள்வாள். முத்துலட்சுமிக்கு அதில் அலட்சியம் இருந்தது. கையுறைகளையும் அபூர்வமாகத்தான் அவள் போட்டுக்கொள்வாள்.
எனக்கு எளப்பு சீக்கு இருக்குது, அதுதா முகமூடி போட்டுக்கறேன்
எங்களுக்கும் இல்லாட்டியும் வந்துரும்
அதுவும் தெரியும். தெரிஞ்சுதா சும்மா இருக்கறம்
விரக்தியா
ஒரு வகை குருட்டு தைரியம், என்ன பண்ணப் போகுதுன்னு
 அலட்சியமாய் இருந்ததால் கருத்தம்பட்டி மில்லில் ஒரு விபத்து நடந்தது. சுடிதார், ஸ்பின்னிங் மிசினில் பட்டு ஒரு பெண்ணை மிசினுக்குள் சுருட்டிக் கொண்டுவிட்டது.  உடம்பு அடிபட்டு சகங்கிப்போன கரும்பாய் அந்தப் பெண் விழுந்து செத்துப்போனாள். சேலை இன்னும் மோசம். கொஞ்சம் அசந்தால் எங்காவது மாட்டிக் கொள்ளும்.
காலி பஞ்சு டிரம்மை உருட்டிக் கொண்டு போவது அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும். பிளாஸ்டிக் டிரம் எழுப்பும் சப்தம் குடத்துக்குள் சிறு கல் உருள்வது போலிருக்கும்.கடகடவென  ஏதாவது சப்தத்தை   வாயினுள் உண்டாக்கிக் கொள்வது அவளுக்குப் பிடிக்கும். என்ன ரீ ரிகார்டிங்கா 
டிரம்முக்குள்ள படுத்துக்கறன். இப்பிடியே டிரம்மை உருட்டி ஹாஸ்டலுக்கு கொண்டு போயிப் படுக்க வைச்சிடுஎன்று சைலஜா ஒரு தரம் கேட்டாள்.
டிரம்க்குள்ள பொணமாப் பண்ணிக் கூடப் போட்டிருவாங்க. ஆள் தெரியாம டிரம் பொணம் எத்தனை தரம் டவுன்ல கெடந்த  கதை தெரியாதா?“
பனிரெண்டு மணிநேரம் அலுத்துப் போனதென்று அப்போதுதான் தூங்கப் போயிருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். கை, காலை மிசினுக்குள் விட்டு உடம்பை சிரமமாக்கிக் கொள்ளலாமா, அப்படியாவது ஓய்வு கெடைக்குமா, தலை சுற்றுவது போலிருந்தது. இப்படி தலை சுற்றினால் பிளட் பிரசர் என்று பெனாசிர் அக்கா சொல்வாளே. டென்சன், பரபரப்பு என்று இருந்தால்தான் பி.பி. வருமா, எனக்கெல்லாம் எப்படி வந்தது. இது வேறு வகை தலைசுற்றலாகவும் இருக்கும். உடம்பின் எந்தக் குறை தலையைச் சுற்ற வைக்கிறது. எங்காவது வைக்கும் வேட்டு உடம்பை அதிரச் செய்துவிடுமே.

உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது மனதிலிருந்தது.
எதுக்குடி தொளசி உடம்பைக் காப்பாத்திக்கணும்
எவனுக்காச்சும் குடுக்குறதுக்குத்தா
அவனுக்குப் பிரயோஜனம் ஆகுமான்னு தெரியுமா, என்ன நோயோட போகப் போறம்கறது யாருக்குத் தெரியும்
தாலிக்குத் தங்கம் வேண்டாமா, கழுத்துக்கு மஞ்சள் கயிறு வேண்டாமா
கழுத்துக்கு வேற கயிறு வராமெ இருந்தா செரி
மூன்று வருடம் கழிந்து விட்டால் போதும், மிலிட்டரி சித்தப்பா சரவணனிடம் கொண்டு போய்க் காசைக் கொடுத்துவிடலாம். அவர் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்வார். கல்யாணத்திற்கு பத்திரப்படுத்திக் கொள்வார்.
நீ உங்கப்பனெ நம்பாமெப் போனது சரிதான்னு தோணுது. அவன் கூடயோ இருக்குறதுன்னு தெல்லவாரியா இருக்கான். உனக்கு மில்லுல போயி இருக்கறது பாதுகாப்புக்கு பாதுகாப்பு. அப்புறம் சம்பளத்துக்கு சம்பளம். கல்யாணத்துக்குன்னு காசு மிச்சம் பண்ணிக்குவே.  அங்க காடு கரை வெள்ளாமைன்னு இருந்தா காசு சேக்க முடியாது. தாலிக்கு தங்கம் கூட வாங்க முடியாதுஎன்றுசரவணன் அவள் தீபாவளி விடுமுறைக்குச் சென்ற போது சொல்லியிருந்தார்.
யாராச்சும் கெடச்சா பாத்து வையுங்க மருமகனே
பாத்து வெச்சு என்ன பண்றது. மூணு வருசம் கழிச்சு முப்பதாயிரத்தோட வந்தா ரெடியா ஆரம்பிர்லாம்
            “அப்ப ஏதாச்சும் வாய்க்கிக்கலின்னா
மறுபடியும் போயி மூணு வருச காண்டிராக்ட்குள்ள போயிட வேண்டியதுதா. பட்டிக்காட்லெ உக்காந்துட்டு என்ன பண்ணப் போற
எளச்சிபாளையத்தில் அப்படித்தான் மூன்று வருடம் கழித்துவிட்டு, காதரின் வந்திருந்தாள். அவள் அப்பா மீண்டும் துரத்தி விட்டார்.
மறுபடியும் போயி வேலை செய்
எம் பணத்தை நீ பத்திரமா வெச்சிருப்பியாப்பா
வெச்சிருப்பன்
கர்த்தர் சொல்லுக்கு எதிரா குடிக்கிற நீ எப்படிப்பா சொல்ற வார்த்தைய கடைபிடிப்பே
எல்லாம் கர்த்தர் அருள்தா மகளே
எனக்கு நேரம் காலம் தெரியாமெ வேலை செஞ்சு வந்துருக்கற வயித்துவலிக்கு நிவாரணம் கெடைக்கலே. மறுபடியும்  போகச் சொல்றீங்க.
மறுபடியும் மில்லுக்குப் போன காத்ரின் வயிற்று வலி அதிகமான காரணத்தால் மிசின் ஆயில் குடித்து ஆயுளை முடித்துக் கொண்டாள். வீட்டிற்குச் செல்ல அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதுதான் அவளின் இறுதி வார்த்தையாக இருந்தது.
கொஞ்சம் ரெஸ்ட், மாதா கோயிலுக்கு போறதுக்கு நேரம், ஒரு தரம வேளாங்கண்ணிக்குப் போய் நேர்ச்சை பண்ணனும். எல்லாம் அமஞ்சிரும்என்று சொல்லிக் கொண்டிருந்தாள். எதுவுமில்லாமல் போயிற்று.
முத்துலட்சுமி வெள்ளிக் கிழமைகளில் மில்லின் உள் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போக தவற மாட்டாள். ஆர்க்கெஸ்டிரா, பிரார்த்தனை என்று மேடை போட்டு அமர்க்களமாய்ப் பிள்ளையார் கோவில் சலசலக்கும். மில்லில் ஏதாவது குறை தென்படுவதைச் சொல்லும்போது சங்கராம் பாளையம் பாலு சொல்வான்
கோயில் கட்டிக் குடுத்த மகராசன் வேறெ தப்பாவெல்லா செய்வாரா.... விதி.... அவங்க விதியை நெனச்சுப் பாத்துக்கணும். வாய் இருக்குதுன்னு ஔறக் கூடாது
சங்கம் வெக்கறது. உரிமைன்னு போராடுறதெ அவ அப்பிடி சொல்றா
முத்துலட்சுமிக்கு வயிற்றில் சுரீரென்று வலி ஆரம்பித்தது. வயிறு சுருங்கிக் கொண்டு பிச்சைப் பாத்திர ஓடாகி விடும் போலிருந்தது. உடம்பைச் சுருக்கிக் கொண்டு பற்களைக் கடித்தாள். சுவரில் சாய்ந்து கொண்டு மெல்ல சரிந்தாள்.
 அவளின் கை நழுவிப் போன சின்னக் கோன் ஒன்று டமடமவென்று பெருத்த சப்தமெழுப்பி டிரம் பக்கம் சென்றது.
நீதா புஸ்தகமெல்லா படிக்கற ஆள்தானே, எனக்கு ஒரு லெட்டர் எழுதித் தாயேன்
புஸ்தகம் படிச்சா நல்லா லெட்டர் எழுதுவென்னு அர்த்தமா
சாதாரண லெட்டர்தானே
செரி.... எழுதித் தர்றன். பேப்பர் வேணுமே.
பேப்பர் கூடக் கெடைக்காதா
எங்க கெடைக்கும். யார் வெச்சிருக்கா, அட்டன்ன்ஸ் ரெஜிஸ்டர்ல வேண்ணா கிழிச்சிக்கலாம்
ஒருநாள் சம்பளம்  போயிரும்
அப்புறம் எவ பேப்பர் எல்லாம் வெச்சிருக்கா, சாப்பிடு, தூங்கு. தூக்கத்தில் எந்திரிச்சு வேலைக்குப்போ. தைரியமா நின்னு வேலை செய். இல்லீன்னா கீழே மயக்கம் போட்டு விழு. விதி வந்தா செத்துப் போ.
எல்லாரும் சொல்றதுதா. நாலு வரி ரத்த உறவுன்னு எழுதிப் போட்டா சந்தோசந்தானே
செரி எழுதிர்லாம். என்ன எழுத
எதையாச்சும் எழுதலாம்
 “பேப்பர் கெடச்சு எழுதுனாலும்  கவர் கிடைக்குமா. கவர் கெடச்சாலும் எங்க கொண்டு போயி போஸ்ட் பண்ணுவே.
போஸ்ட் மேன் வரமாட்டானா
லெட்டர்ன்னு கொண்டு போயி வெச்சா பிரிச்சு படிக்காமெ போஸ்ட்மேன் கிட்டக் குடுத்திருவாங்களா
அப்ப பார்வையில இருந்து தப்ப முடியாமெ கடுதாசி போய் சேராதா
நீ வுடுற பெருமூச்சு கூட போயி சேராது. செரி என்னத்தை எழுதச் சொல்றே
ஆளு வேணுமுன்னா தூங்க வுடாமெ எழுப்பி கூட்டிட்டு வர்றது. புரடக்சன் வேணுமின்னா மென்சஸ் பிரியட் அய்யோ யாரும் ஹாஸ்டல்லே உக்காந்துட  கூடாதுன்னு மாத்திரையை போடச் சொல்றது.
சூப்பர்வைசர் பண்ற கூத்து. வேன் டிரைவர் வேலைக்குன்னு வண்டியில கூட்டிட்டுப் போயி வண்டி ரப்பேர்ன்னு சொல்லி பண்ற சில்மிசம்
இதெல்லா கதைக்குத் தீனி போடும்
எழுத வேண்டாமா
யாருக்கு அந்த லெட்டர் போய் சேருங்கறே
போகவே போகாதுங்கறியா
போகாது
பொங்கல், தீபாவளின்னு கூட லீவு இல்லெ. ஆர்க்கெஸ்டிரா, கேசரி, வடை பாயசம்ன்னு போட்டு இங்கயே இருக்க  வெச்சர்ராங்க. வெளிய போனாக் கூட நாலு பேருக்கு சொல்லலாம். கொடுமைன்னு
நீ கொடுமைங்கறே..... பள்ளிக் கூடப் படிப்பு முடிஞ்சதும் மில்லுக்குள்ள கொண்டு வந்து தள்ளி விடறதுக்குன்னு பெரிய கூட்டமே இருக்கு
என்ன செய்யலாம்
மூணு வருசம் முடிச்சிட்டு காசை வாங்கிட்டுப் போயி, எவனையாச்சும் கட்டிட்டு அவன்கிட்ட கெட. அவன் குடிகாரனோ, நேர்மையில்லாதவனோ, என்ன செய்யறது
  “ஒரு கடிதாசிக்குக் கூட வழியில்லையா?”
மனசுக்குள்ளேயே எழுதிக்கோ,.... எழுதி எழுதிப் போட்டுக்கோ
பிபி ஏறாமெ இருக்குமா. என்னதா எழுதி எழுதிப் போட்டாலும் மனசு வெடிச்சிராதா
வெடிச்சா மெசின் ஆயில், பாத்ரூம்லே தூக்கெத் தவிர வேற என்ன..........
செரி, ஒரு கடிதாசிக்குக் கூட வக்கில்லே
வக்கேயில்ல
தூக்கம் வந்தா தூங்கு, இல்லைன்னா மொகட்டைப் பாத்துட்டு எங்கையோ இருக்கிற ராஜ குமாரனைப் பத்தி கனவு காண்
நீ....
இருக்கவே இருக்கு. மாச நாவல், கண் அசர வரைக்கும் படிப்பேன், நீ சொல்ற எந்தக் கொடுமையைப் பத்தியும் இதிலில்லே. ஆனா மாமியார் மருமகள்ன்னு உலகமே இருக்கிறதா காட்டறதுதா இதிலைஇருக்குமரப்பாச்சியை பெனாசிர்  வீட்டிலேயே விட்டு விட்டு வந்து விட்டாள். ஆனால் ஏதாவது பொம்மை இருக்கட்டும் என்று சொன்னபோது காதரின் டெடி கரடிக்குட்டி பொம்மை ஒன்றை வாங்கி வந்துத் தந்தாள். பஞ்சால் செய்தது போல் மிருதுவாக இருந்தது அது. மூக்கருகில் கொண்டு வரும் போது கிச்சுமுச்சு மூட்டி தும்மலைக்கிளப்பியது.   எதற்கு அப்படி பெயர் வந்தது என்று யோசித்துப் பார்த்தாள், பிடிபடவில்லை. காதரினிடமே கேட்டு விட்டாள்.”  நானும் கடக்காரன் கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அமெரிக்கா ஜனாதிபதி ஒருத்தரோட செல்லப் பேராமா
அந்த செல்லப் பேரை வெச்சது யாரா இருக்கும்.
பொண்டாட்டியா, காதலிகளான்னு கேட்கறியா
ஆமா
காதலி யாரோ ஒருத்தின்னு வெச்சுக்கோயேன் .. கிளுகிளுப்பா இருக்கட்டுமே
அம்மாதான் மரப்பாச்சியை விளையாடக் கொடுத்தவள். டெடி பீர்ரெல்லாம் அவளுக்குத் தெரியாமலேயே செத்துப் போனாள். முத்துலட்சுமிக்கு கண்களில் இருந்த பழுப்பு நிறம்  அவளை உறுத்தவே செய்தது.   வேறு நிறமாக கண்கள் மாறாவிட்டால் எந்தவகைச் சிரமத்திற்கு ஆளாவாள் என்பது அவளுக்கு விபரீதமான கற்பனையாகவே இருந்திருக்கிறது. நல்ல வேளை வளர்ந்து பெரியவளாகிற போது மற்றவர்களைப் போலவே கண்கள் திரண்டு விட்டன என்பது அம்மாவிற்கு ஆறுதலாகவே அமைந்தது. அவள் சின்ன வயதில் அழுகிற போதெல்லாம் கண்ணு இப்பிடி இருக்குதுன்னு அழறியா என்று கேட்டிருக்கிறாள். இந்தக் கைதானே  எனக்குச்  சோறு போடும் என்று நீவியிருக்கிறாள்.
ஆனால் நின்று வேலை செய்து கால் வலி  குறையவில்லை. ஏதாவது எண்ணெய் எடுத்து தடவி நீவி விட்டுக் கொள்ளுவாள். அதிகபட்சமாய் விவிடி தேங்காய் எண்ணெய் கிடைக்கும்.லிசி ஆலிவ் ஆயில் வாங்கி வைத்திருக்கிறாள்,கலாமணி இந்த வலியால் துவண்டு விழுந்து பற்களை உடைத்துக் கொண்டாள்.அவளைப் பார்த்தும் நாளாகிவிட்டது .

                கலாமணிக்கு முன் பற்கள் மூன்று பாதி உடைந்த நிலையில் இருக்கிறது. இரவு வேலையில் இருந்து திரும்பும் போது   வைண்டிங் செக்‌ஷனின்   முகப்பில் விழுந்து விட்டாள். இரவு நேரம்  எல்லோருக்கும் வீடு போகும் அவசரம். காவலாளி துரத்தியிருக்கிறார். அவருக்கும் வீடு போகும் அவசரம்.வேறு இரவுக் காவலாளி வரும் நேரம். பறகள் உடைந்திருப்பது அவளுக்கும் தெரிந்திருக்கிறது. சற்றே ரத்தக்கசிவு.தாவணியில் வாயைத்துடைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டாள்.

   வீட்டிற்கு வந்த பிறகு முகம் வீங்கி விட்டது. இரண்டு தினங்கள் காய்ச்சல் வேறு பின்னலாடைத் தொழிற்சாலைக்குப் போகவில்லை. பல் மருத்துவரிடம் போன போது உடைந்த பற்களின் பாகங்கள் வெளியே விழுந்து விட்டதா.. இல்லை விழுங்கி விட்டாயா என்று கேட்டிருக்கிறார். பயம் பிடித்துக் கொண்டு உலுக்குகிறது கலாமணியை.அப்படி உடைந்த பற்கள் வயிற்றினுள்  போயிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற பயம் அவளை உலுக்குகிறது.உடம்பை நடுங்கச் செய்கிறது. பெரிச்சா வயித்த வலின்னு ஏதாச்சும் வந்தா தெரிஞ்சிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாள்.
கலாமணி 10வது வகுப்பு பாதியில் நின்றவள். பாடங்கள் மிகவும் கஷ்டமாக இருந்திருக்கின்றன. தேர்வு பெற் முடியும் என்ற சந்தேகம் அவளை உலுக்க பள்ளிக்குப் போகாமல் காய்ச்சல், கால் வலி என்று படுத்துக் கிடந்திருக்கிறாள்.

          அப்புறம் அப்பா மோகன்ராஜிடம்  சொல்ல அவரும் செரிதான். இதுக்கு மேலே பொட்டச்சி என்ன படிச்சு ஆகப்போகுது. பனியன் கமபனிக்குப்   போ என்று துரத்தி விட்டிருக்கிறார்.அம்மா கட்டிட வேலைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் செல்வராம். மற்ற நாட்களில் உடம்பு சுகமில்லை என்றூ படுத்துக் கிடப்பாராம்.. அவரை மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு போக ஆள் கிடைக்காமல் பல நாட்கள் வீட்டில் கிடந்திருக்கிறார்.
 “ கலாமணி ஏழு மணியானா பனியன் கம்பனிக்குப் போறா. அவரும் எட்டு மணிக்கு அப்பிடியே. அவரு சாயங்காலம் வந்து கூப்புட்டுப் போலாம். ஆனா டாஸ்மாக் போறதுக்குதா செரியா இருக்கு,. மூணு நாலு நாள் சொன்னா நாலாம் நாள் போலான்னு வருவார். அஞ்சாம் நாள் என்ன வேலைக்குப் போகலியான்னு தொரத்த ஆரம்பிசிருவார் என்கிறார். அவர் கட்டிட வேலைக்குப் போகாத நாட்களில் 100 நாள் வேலைத்திட்டத்தில்  எங்காவது கிளம்பி விடுகிறார்.

 காடையூர் கிராமம். அப்பா, அம்மா 45 வயது இருவருக்கும். ஒரே வயசுன்னு  கல்யாணம் பண்னுனம், இப்ப்டி ஒரே வயசுங்கறது அபூர்வம்ன்னு சொன்னாங்க .அதுலதா ஒத்துமை . வேறே எதிலியும் இல்லேன்னு வாழ்க்கையிலெ தெரிஞ்சு போச்சு.
         இருக்கும் ஒற்றைப் பெண்ணை நன்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
இனி என்ன பெத்துக்க முடியாதா என்ன .. வயசா இல்லே..”                                     “அந்தக்கருமாந்தரமெல்லா இனியும் எதுக்கும். படுத்தமா தூங்க்ன்னுமான்னு இருக்கு. இதிலே என்ன நெருக்கம் வேண்டிக்கெடக்கு. வயசுக்கு  வந்த பொண்ணு பக்கத்திலெ கெடக்கயிலெ
கலைவாணிக்கு மூன்று பற்கள் உடைந்து போனது எல்லோருக்கும் கவலைதரக்கூடிய விடயமாகி விட்டது..  முகம் அவலட்சணமாகி விட்டது. வாயைத்திறந்தாலே உடைந்த பற்கள் துருத்திக் கொண்டு தெரிகின்றன. வாயை மூடிக் கொண்டே இருக்க முடியாது கலாமணியால்.
  தற்போது சில சம்யங்களில் பற்கள் வீக்கம் கண்டு அவலட்சணமாகி விடுகிறது. வீக்கம் குறைகிற வரைக்கும் உள்ளூர் மருத்துக் கடையில்               பெயின் கில்லர்  வாங்கிப் போட்டுக் கொள்கிறார்.மருத்துவரிடம் செல்வதில்லை. சீழ் பிடித்தது   போன்று வாசம் வேறு வருகிறது. சிரமமாக இருக்கிறது அவளுக்கு ..
 பற்கள்  உடைந்து போன அன்று  உடம்பு ரொம்பவும் சோர்வாக இருந்திருக்கிறது. 10 மணி நேர வேலை உடம்பைத்தளர்த்தி விட்டது. நடக்க கூட முடியவில்லை. எங்காவது உட்கார்ந்து கொஞ்சம் கண் அயர்ந்து போக மனம் ஆசைப்பட்டிருகிறது. ஆனால் காவலாளி துரத்துவார். எப்படியும் பேருந்து நிறுத்தம் வரை நடந்து போய் விடலாம் என்று நடந்தவருக்கு கால்வலியும் உடல் சோர்வும் சேர்ந்து  கீழே தள்ளி விட்டிருக்கிறது. எதன் மேல் விழுந்தார் என்பது தெரியவில்லை. முன் பற்கள் உடைந்து விட்டன.
“   நெறைய சம்பாதிக்கணும். மூணு பல்லையும் எடுத்துட்டு   வேற பல்லு வெக்கணும்.வேற பல்லு வெச்சா எல்லாம் செரியாயிரும். அவலட்சணம்ன்னு எதுவும் இல்லாமேப் போகும் . பாக்கலாம் என்றவளை பல் மாற்றின பிறகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாள்..

 ஸ்பிண்டில் செக்‌ஷன் வரைக்கும் நடந்து செல்வது சிரமமாகத்தான் இருக்கும். கலாமணி போல் மயங்கி விழுந்து பற்களை உடைத்துக் கொள்ளக் கூடாது என்ற நினைப்பு வந்தது. கொஞ்சம் கால் வலி குறைந்தால் எழுந்து நடக்க நினைத்தாள்.கொஞ்சம் ஏதாவது எண்ணெய் போட்டு நீவிகொண்டால் ஆசுவாசமாக இருக்கும்.எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு  இப்படி உட்கார்ந்த நிலையில் பாதத்திற்கு எந்த எண்ணெயும் போட்டு விட முடியாது.அதுவே    அப்போதைய  நேரத்து பெரிய சிக்கலாக விசுவரூபித்து  பிணமூட்டை போல் உடம்பை  கனக்கச் செய்தது அவளுக்கு. இந்தக் கைதானே  எனக்குச்  சோறு போடும் என்று நீவிவிடுகிற ஊரிலிருக்கிற அம்மா   இந்தக் கால்தானே  எனக்குச்  சோறு போடுது என்று சொல்லி அழக்கூடும் என்பது உடம்பின் கனத்தை இன்னும் கூட்டியது.