சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 11 ஆகஸ்ட், 2016

தினமணியில் வந்திருக்கும் என் கட்டுரை
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
சுப்ரபாரதிமணியன்

பகீரென்கிறது.
உள்ளூர் ஜனகூட்டத்தில் அந்நிய முகங்கள் தென்படுவது அதிகரித்துக் கொண்டே போவது உள்ளூர் மண்ணின் மைந்தர்களுக்கு பகீரெனப் பயம் கொள்ளவே வைக்கிறது.
எங்கும் அந்நிய முகங்கள் எல்லாவற்றிலும் அந்நிய பதிவு என்பதைத் தவிர்க்கவே முடியவில்லை சாதாரண உள்ளூர் மக்களால்.
இடம்பெயர்ந்து வேலைக்காக வந்து பெரு நகரங்களில் குவிந்திருக்கும் அந்நியமுகங்கள் வயிற்றுப்பாட்டுக்காகவே வந்து கூலிகளாக, கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா பெரு நகரங்களிலும் 25% அதிகமானவர்களாய் இவர்கள் குவிந்திருக்கிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இந்தியாவின் எந்தப்பகுதியினரும் எந்தபகுதிக்கும் வேலை வாய்ப்புக்காக செல்வதற்கும், குடியேறுவதற்கும் உரிமை உண்டு. நீ யார் இங்கு வர என்று கேள்வியெழுப்ப முடியாது.
உலகமயமாக்கலில் உலகமே பெரும் சந்தை. சந்தை வணிகத்திற்காக யாரும் எங்கும் செல்லலாம். உலகமயமாக்கல் விவசாயம், சிறு தொழில்கள், கைத்தொழில்களை முடக்கி கிராம மக்களை பெரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர வைக்கிறது. முன்பு கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து இளம் பெண்களும் ஆண்களும் இப்படி வந்தனர். இப்போது வட மாநிலத்திலிருந்து பீகார் , ஒரிசா, நேப்பாளம், வங்காளம் என்று பல பகுதி மக்களும் இந்தியப் பெருநகரங்களில் குடியேறியிருக்கிறார்கள். போர், கால நிலை மாற்றம், அகதி நிலையெல்லாம் மக்களை இடம் பெயர வைக்கும் என்ற வரையறை உடைந்து போய் காரல் மார்க்ஸ் வகைப்படுத்தாத, கண்டுபிடிக்காத தொழிலாளர்களாய் இவர்கள். ..கார்ப்பரேட்டுகளின் கூலி பொம்மைகள்இவர்கள். இந்தி படி . வேலை கிடைக்கும்.வட நாடு போய் பிழைத்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் போய் படித்த, படிக்காத வடநாட்டினர் தமிழ்நாட்டில் குவிந்து விட்டனர். வடமாநிலங்களில் பொருளாதார சிரமங்கள், இங்கே வந்தால் வேலையும் உண்டு. ஜாதிய முத்திரையும் ஒழிந்து போகும். அங்கு உய்ர்சாதி, தாழ்த்தப்பட்டவன் என்ற அடையாளங்களுடன் உலவி வந்தவனுக்கு சுதந்திரம் இங்கு. சோற்றுக்கமைந்து விடும் வாழ்க்கை அவர்களுக்கு இங்கு வந்த பின்
. நம்மவர்கள் உடல் உழைப்புக்குத் தயாரில்லாத இடங்களில் அவர்கள் சுலபமாக அமர்கிறார்கள். கூலியும் எப்படியும் குறைத்துக் கொள்ளலாம். தொழிலாளி அந்தஸ்து யாருக்கு வேண்டும். தொழிலாளி உரிமைகள் தேவையில்லை. கோதுமை மாவு மூட்டைகள், உருளைக்கிழங்கு மூட்டைகள் அவர்களுக்குப் போதும். கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ள பத்தடி நீளம், இரண்டடி அகல இடம் போதும். அதற்குள்தான் கலவியும் காமமும்.
நிரந்தரத் தொழிலாளி அந்தஸ்து வேண்டாம், ஒப்பந்தத் தொழிலாளி அடையாளம் போதும், தினசரி கூலியாள் முத்திரை போதும். உலக முதலாளித்துவம் கொத்தடிமைகளை சுலபமாய் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அடிமைத்தனம் ஒழிந்து தொழிலாளர் நிலை வந்தது. உலகம் உருண்டை. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் கோரம்.
பெருநகர வாழக்கை அவர்களுக்கு ஏசி அறை, வால்மார்ட் சட்டை, கெண்டகி சிக்கன், கோக்கோகோலா வழங்கும் என்ற எதிர்பாப்பில் கனவு காணவும் அவகாசம் கிடைப்பதில்லை. அவர்களுக்கான விதிமுறைகளும் சட்டங்களும் காகிதங்களில் மட்டுமே உள்ளன. அடையாள, ஆதார் அட்டைகள் கூட மறுக்கப்பட்டவர்கள். எங்கும் அரசே அடிமைகளை உருவாக்க தொழில்களைப் பிரித்துப் போட்டு விட்டது. இதில் சர்வசிக்‌ஷா அபியான் ஆசிரியர்கள், நெடுஞ்சாலை ஊழியர்கள், சத்துணவு, ரேசன் கடை ஊழியர்கள் என்று சகலமானவர்களும் அடைக்கலமாகிற போது இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அதில் இடமில்லாமல் போய் விடுமா என்ன..அவர்களின் அடுத்தத் தலைமுறைக்கும் கூட. சகலவர்களும் அமைப்பு சாராத தொழிலாளர்கள் என்ற கூரைக்கு கீழே.
சர்வசிக்‌ஷா அபியான், கல்வி உரிமைச் சட்டம் 2009 போன்றவை எல்லாக் குழந்தைகளுக்குமான கல்வியை வலியுறுத்தினாலும் இடம்பெயர்ந்து வந்து வேலை செய்யும்தொழிலாளர்களின் ஏழை குழந்தைகளின் கல்விநிலை பெரும் கேள்விக்குறி இப்போது.
சுலபமாய் அவர்களுக்கு குழந்தைத் தொழிலாளர் அட்டை கிடைத்து விடும். ஆதார் அட்டைக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். உடம்பில் ஆடைகள் இருந்தால் அதுவே அடையாள அட்டையாகி விடும்.
உயிர் வாழ ஏதாவது அட்டை அவசியம். இரத்தத்தை உறிஞ்ச முதலாளித்துவ அட்டைகள் எப்போதும் தயார்தான்.
திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.
இடம்பெயர்ந்து வந்து வாழும் தொழிலாளர்கள் மண்டியிட்டு தங்களை ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பலி கொள். தலையை எடுத்துக் கொள் என்கிறார்கள். மீண்டும் மீண்டும் தலைகள் அவர்களுக்கு முளைத்துக் கொண்டே இருக்கின்றன.