அண்டைவீடு : பயண அனுபவம்
டாக்கா விமான நிலையத்தில் இறங்கியதும் நண்பர்கள் வெளிநாட்டுத் தொலைபேசி வசதிக்காகப் பரபரத்ததைக் கண்டேன். ‘பங்களாலிங்க்’ என்ற தனியார் மொபைல் நிறுவன விளம்பரம் முகப்பில் எல்லோரையும் வரவேற்றது. அதன் இளம் பெண் ஒருத்தி தன் வலது கையினால் இதயத்தை தொடும் காட்சி கவர்ச்சிகரமான படமாகியிருந்தது. அதனருகில் நின்று நானும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். கல்கத்தா வரை தொலைத் தொடர்பு இருந்ததும் சட்டென மாயமாகி விட்டதையும் கண்டு தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறையில் பரபரத்துக் கொண்டனர்.அதிமுக தலைவர் ஆனந்தன் முன்பே சர்வதேச இணைப்புப் பெற்றிருந்தாலும் இன்னும் ஒரு இணைப்பைப் பெற்றுக் கொண்டார். டாக்கா விமான நிலையத்தில் இறங்கியதும் இந்திய சேவை துண்டிப்பு.பாஸ்போர்ட், 2 புகைப்படங்களுடன்’ பங்களாலிங்’ சேவையில் உட்படுத்திக் கொண்டனர். ஒரு மணிநேர விமானப் பயணம் அவர்களின் உலகத்தையே துண்டித்துவிட்டது என்ற பயபீதியில் இருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் ஆறுதல் அடைந்தனர்.
‘சேவ்’ அலோசியஸ் சர்வதேச அழைப்பு வசதி எப்போதும் கொண்டவர். காலை மாலை, இரவு, உணவு இடைவேளை என்று அவர் வீட்டிலிருந்து அழைப்புகள். மனைவி, மகன், மகளிடமிருந்து வந்து கொண்டேஇருக்கும்."அட்டன்டென்ஸ்" கொடுத்துக் கொண்டே இருப்பார்.
அவர்களின் அழைப்பு அவரைக் கட்டுப்படுத்துவது போல இருக்கும். ‘சர்வதேச அழைப்பு வசதி பெறவில்லையா’ என்று அவர் என்னிடம் கேட்டார். மகள் கல்லூரி விடுதியில் இருப்பவர். அங்கு கல்லூரியில் கைபேசி தடைசெய்யப்பட்ட ஒன்று. அவரே கல்லூரி விடுதி பொதுதொலைபேசியில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டால்தான் உண்டு. கல்லூரி விடுதிக்கு நான் அழைக்க முடியாது. எனவே புதுவசதி தேவையில்லை என்றேன். கைபேசி இல்லாமல் வரும் நாட்கள் பழகிப்போவது ஆறுதலாகவே இருந்தது.
150 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வங்காள்தேசத்தில் 58 மில்லியன் மக்கள் கைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள். "டிஜிட்டல் பங்களாதேஷ் 2021" என்ற திட்டம் வங்கதேசத்தில் அனைவரும் கைபேசி வசதி செய்ய வழிவகுக்கிறார்களாம்.( அப்போது 2021ல் இந்தியா வல்லரசு தானே!). 32 மில்லியன் கைபேசி சந்தாதாரர்களாக இருந்தவர்கள் இப்போது 58மில்லியன் ஆகி இருக்கிறார்கள். 34% மொத்த வசதியில் இங்கு. 2012ல் 70 மில்லியன் ஆகிறது.
வங்கதேசத்தில் கைபேசி சேவை வெகுதாமதமாகத்தான் ஆரம்பித்தது. உள்ளூர்ப்பிரச்சினைகள், உள்நாட்டு சிக்கல்கள், அரசியல் தடுமாற்றங்கள், சில விசயங்களில் பொது மக்களின் நிதானமில்லா பரபரப்பு நிலை இவையே தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள் ‘சிட்டிசெல்’ என்ற நிறுவனம் 1997ல் கைபேசி சேவையைத் துவக்கியது. ‘இரமீன் சேவை’ அதிரடியாக வந்து அதை நிலைகுலைய வைத்தது. ஆப்கான் தேசத்தில் நிலைபெற்ற ‘டெலிய சொன்னீரா’ வின் சேவை மிக முக்யமான வருகையாக இருந்தது. 1980வரை ஏகபோக நிறுவனமாக இருந்த பசிபிக் டெலிகாம் சர்வீஸ் ஆதிக்கம் வீழ்ந்துவிட்டது.
சிட்டிசெல் என்ற ஹாங்காங் நிறுவனம் நிலைபெற்றுவிட்டது. கிரமீன், டெலிகாம் மலேசியா, பங்களாதேஷ் லிமிடெட், ஏகே டெலிகாம் கைபேசி சேவை கொடுத்துக் கொண்டிருக்கும் மற்ற நிறுவனங்களாகும்.
இந்தியாவின் பாரதி, ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகியவையும் இங்கு சேவையைத் தொடர்கின்றன. 10% கைபேசி சேவை உயர்வு என்பது 1.3% பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக புள்ளி விபரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு மூலதனங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றன.
பங்களாதேஷ் டெலிகம்யூனிகேசன் சட்டம் 2010 சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேல் அதிக வரிச்சுமை செலுத்துவதாகவும், அவர்களுக்கு பாதகமாய் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலகவங்கி கூட பங்களாதேஷ் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் ‘புதிய சட்டம் முதலீட்டைக் குறைக்கும். பெரிய அளவில் சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கும்’ என்று இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பணம் சேர்க்கும் உத்தியென்றும், பெரிய அளவில் ஊழலை உருவாக்கும் என்றும் கருத்துள்ளது. ஊழல் தேசத்தில் இதை விட வேறெதுவும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள். அதேசமயம் டிஜிட்டல் பங்களாதேஷ் 2021 திட்டத்தைச் சீர் குலைக்கும் என்கிறார்கள்.
"வாட்சன், கம் கியர், ஐ வாண்ட் யூ" என்பது தான் கிரஹம்பெல் தொலைத் தொடர்வு வழியாய் அனுப்பிய முதல் செய்தி. வங்கதேசம், பாகிஸ்தான், கைபேசி சேவை "குண்டு வெடி, வன்முறை செய்" என்று உலகம் முழுவதும் தீவிரவாதத்தைப் பரப்பும் கிளைச் செயல்களில் பெரிதும் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. ‘டிஜிட்டல் பங்களாதேஷில்’ தீவிரவாதமும் தீவிரமாகும்.