அண்டைவீடு : பயண அனுபவம்
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாள் கூட்டம் அன்று என்பதை டாக்கா செய்தித்தாள்களின் இன்றைய செய்திகள் நிகழ்ச்சியில் படித்தேன். கட்சித் தலைவர் என்ற முறையிலோ, பிரதமர் என்ற முறையிலோ அவருக்கு வாழ்த்து சொல்லி எவ்வித விளம்பரங்களைச் செய்தித்தாட்களிலோ, ப்ளக்ஸ் பேனர் விளம்பரங்களாகவோ டாக்காவில் தென்படாதது ஆச்சர்யம் தந்தது. விசாரித்தபோது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதான ஊர்வலங்கள், கூட்டங்கள் ஆகியவை முன்னர் ஏதோவொருவகையில் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த தின நாட்களிலும் இதேபோல் கடைபிடிக்கப்படுவதால் எல்லாம் அடக்கி வாசிக்கப்படுவதாகச் சொன்னார்கள். ராணுவ முறையிலான கட்டுப்பாடுகள் இதற்கு உதவுகின்றன. தேர்தல் காலத்திலும் இந்த வகையான கட்டுப்பாடுகள் தேர்தல் வன்முறையைத் தவிர்க்க உதவுகின்றன என்கிறார்கள்.
தேர்தல் சமயத்தில் கூட ஷேக் ஹசீனா கட்சியின் தேர்தல் பிரச்சார சின்னமான விளக்கோ, எதிர்க்கட்சியினரின் படகோ சிறுசிறு கட்அவுட்டுகளாகப் பொறிக்கப்படும் அவ்வளவுதான் என்கிறார்கள்.
இவ்வாண்டு தமிழகத்துத் தேர்தல்களில் தேர்தல் கமிசன் எடுத்த கெடுபிடிகள் காரணமாக தெருக்களில் கட்சிக்கொடிகளும், தட்டிகளும், அலங்கார வளைவுகளும் இல்லாத்து போலவே டாக்கா நகரத் தெருக்கள் சுத்தமாக இருந்தன.
ஷேக் ஹசீனா சமரசவாதியாகவும் இந்தியாவுக்கு ஓரளவு விசுவாசியாகவும், அமெரிக்காவுக்கு இரட்டை மடங்கு முழு விசுவாசியாகவும் விளங்குகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்னால் ராணுவப்படையினர் நடத்திய கலகத்திற்குப் பின் அவரின் கெடுபிடி குறைந்திருக்கிறது. ஷேக் ஹசசீனா ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்கள் ஆன நிலையில் சென்றாண்டு பிப்ரவரி 25ல் துணை ராணுவ படைத் தலைமையகம் உள்ள பில்கானாவில் ராணுவ ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றபோது அதைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள் தலைமை இயக்குனர் ஷகில் அகமதையும், அவரது மனைவியையும், ராணுவக் குடும்பத்தினர் 140 பேரையும் ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொன்று பிணங்களைப் பெரிய குழி வெட்டிப் புதைத்தனர். இராணுவ சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகள், வெவ்வேறு அலவன்சுகள் குறைவானது என்ற எதிர்ப்பின் தொடர்ந்த அடையாளத்தின் முக்கிய நிகழ்வாக அதை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் மாபியா கூட்டாளிகள் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ ஷேக் ஹசீனாவைச் சுட்டு இராணுவ ஆட்சி நடத்த திட்டமிட்ட சதி திட்டமிட்டது. தோல்வியடைந்துவிட்டது. நிலைமை தீவிரமானால் இந்தியா இராணுவ படை விமானங்களை அனுப்பி ஹசீனாவை மீட்டு வர திட்டங்கள் இருந்திருக்கிறது.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இஸ்லாமிய தாலிபான்களின் எதிர்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. வங்கதேசத்தில் தாலிபான் தாக்குதல் நடவடிக்கைகள் அவ்வப்போது நிகழ்கின்றன. 1971ல் வங்கதேசம் பிறப்பெடுத்தபின்பு ஷேக் முஜிபிர் ரஹ்மான் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் விசுவாச ராணுவ கும்பலால் கொல்லப்பட்டார். பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி ஜியா உர் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியாவும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹ்சீனாவும். மாறி மாறி பிரதமர் பதவிகளை வகித்து வருகிறார்கள். 1971ல் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்கும் மசோதா நிறைவேற்றியும் அது நடைமுறைக்கு வரவில்லை.
முந்தின பாகிஸ்தான் அதிபர் சர்தானி போன்றவர்கள் போர்க்குற்ற விசாரணையை நிறுத்தச் சொல்லி ஷேக் ஹசீனாவுக்கு மிரட்டல் விடுத்ததால் அது கைவிடப்பட்டது.
அமெரிக்காவும் இஸ்லாமிய அமைப்புகளைத் தத்தெடுத்து வெறிச்செயல்களை பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் நிகழ்த்தி வருகிறது. பாகிஸ்தான்-ஆப்கான் எல்லையையொட்டி உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மெளலானா பஸ்லுல்லா என்பவர் தலைமையிலான அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இதை அமெரிக்காவே ஊக்குவித்து வருகிறது.
வடமேற்கு எல்லைப்புற ஸ்வாட் சமவெளி பாகிஸ்தானின் ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இச்சமவெளியை மையமாகக் கொண்டு நடந்து வரும் சுற்றுலா வருமானம் இத்தாக்குதல்களால் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த மகாணத்தில் இருந்து 5 இலட்சம் மக்கள் வங்கதேசத்திற்கும் அகதிகளாக வந்திருக்கின்றனர்.
இந்த அகதிகளால் ஷேக் ஹசீனாவுக்கு தலைவலிதான். அரசியல் விமர்சனங்கள் அவரையே ‘அரசியல் அகதி’ என்றழைக்கின்றன.