Wednesday, September 2, 2009

உடுமலைவாசியாகிவிட்டேன்...

1. உடுமலைவாசியாகிவிட்டேன்
================

15 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூரில் வசித்து வந்த நான் உடுமலைக்கு மாற்ற‌லாகி ஒரு வருடம் ஆகி விட்டது. வீடு பார்த்து குடி வந்தும் விட்டேன். திருப்பூரைப் பிரிவது சிரமமாக இருந்த‌து. இங்கு வந்த பின்பு " பதியம் " நடத்திய ஒரு கவிஞர்கள் சந்திப்புக்காக திருப்பூர் சென்றபோது அந்நிகழ்ச்சியில் 'பாரதிவாசன்' 'இடம்பெயர்வு' என்ற தலைப்பில் அவர் வீடு மாற்றியது பற்றி வாசித்த கவிதை என் அனுபவமாகவும் இருந்தது.கவிஞர்கள் கார்த்திகேயன், சுரேஸ்வரன், தமிழவன், யாழ்மதி, இளஞ்சேரல், ஆகியோரையும் சந்திக்க முடிந்துது.
( சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கவிஞர்கள் சந்திப்பில் நாஞ்சில் நாடன் கவிஞர்கள் சந்திப்பு என்பதே குடிப்பதற்காகவே என்று குற்றம் சாட்டியதைக் குறிப்பிட்டபோது சுரேஸ்வரன் ஆமாம் அதுக்குந்தான் என்றார்.)



2. சமீபத்திய இரண்டு சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகள்:


அ. அஸ்மிதா நிகழ்ச்சி

பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் வாசிப்பு
சென்னை கன்னிமேரா நூலகம்

பங்கு பெற்றோர்: பாமா, ராஜலட்சுமி, பாரதி


ஆ. மலையின மக்கள் இலக்கியம்:‌சேல‌ம்

பங்கு பெற்றோர்:சீ பக்தவச்சலபாரதி, சிற்பி, தமிழ் நாடன்,
ஆ செல்லபெருமாள், பெ.மதையன்,இந்திரன்
நசிமுதீன், கரு அழ குண‌சேகரன்
============================================================
அடுத்த‌ இரு நிக‌ழ்ச்சிக‌ள்;

1. த‌ங்க‌ம் மூர்த்தியின் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டையில் கவிஞர்கள் ச‌ந்திப்பு

‌‌
2. சுப்ர‌பார‌திம‌ணிய‌ணின் ஒருங்கிணைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு
திருப்பூரில்:
" த‌மிழ் நாட‌க‌ இய‌க்க‌ங்க‌ளும், ந‌வீன‌ போக்கும்

=============================================================

சாகித்திய அகாதமியின் : Writers in Residence
=========================================

சாகித்திய அக்காத‌மியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது.

சாகித்திய அகாதமி இவ்வாண்டு கீழ்க் கண்ட எழுத்தாளர்களுக்கு Writers in Residence என்ற திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு ரூ 25,000/ வீதம் இலக்கியப் பணிக்காக உதவி வழங்கியுள்ளது .தோப்பில் முகமது மீரான் , சா கந்தசாமி, பொன்னீலன், ஈரோடு தமிழன்பன்,, பிரபஞ்சன், ஆகியோர் அவ‌ர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் கீழான இலக்கிய நிகழ்ச்சியொன்றை தோப்பில் முகமது மீரான் திருநல்வேலியில் இந்து கல்லூரியில் நடத்தினார். நானும் கலந்து கொண்டேன். புதுமைப்பித்தன், பாரதியார், தொமுசி ரகுநாதன், திகசிவசங்கரன்,, போன்ற இலக்கிய
முன்னோடிகள் படித்த பழமையானக் கல்லூரி என்பதால் நானும் புளங்காகிதம் அடைந்தேன்.கல்லூரி வளாகத்துக்குள் தென்பட்ட புது விநாயகர் கோவில் கும்பவிசேக இரைச்சல் தொந்தரவு தந்த‌து. மாணவர்களிடம் பேசுவது கொஞ்சம் சங்கடமானது. நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வது கொடுமைதான்.நானும் என் படைப்புகளும் என்ற தலைப்பில் பேசினேன். கவிஞர் கிருசி இலக்கிய போக்குகள் என்ற தலைப்பில் பேசியவர் திருநல்வேலி , கோவில்பட்டி எழுத்தாளர்களை மட்டும் அடையாளம் காட்டி குசும்பு செய்தார்,. வழக்கமான திருநல்வேலி குசும்புதான் அது.

தோப்பில் மீரானின் சமீபத்திய மிக முக்கியமான நாவலான "அஞ்சு வண்ணம் தெரு" பற்றித்தான் பேச விரும்பி கட்டுரை தயாரித்திருந்தேன். அந்த அரங்கில் கிருசியைத் தவிர வேறு யாரும் அந்த நாவலைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்று பட்டது அக்கட்டுரையை இந்த இதழ் "தீராநதி:"யில் வாசியுங்கள். நித்தில், கருப்பையா போன்ற நவீன இலக்கிய வாசிப்பில் அக்கறை கொண்ட ஆசிரியர்களைக் காண முடிந்தது. குற்றாலத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும் கூட்டம் இல்லை. திருநல்வேலி கதிர், தாமிரபரணி கரையில் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பது பற்றி படம் எடுத்து சிரமப்பட்டவர் இப்போது அதை யாரும் கண்டு கொள்வதில்லை.சுலபமாக சுரண்டல் நடக்கிறது என்கிறார். பிளச்சிமடா ஞாபகம் வந்நது. அங்கேயே முன்பு மாதிரி கோக்காகோலா தொழிற்சாலை இயங்குகிறது.பிளாச்சிமடாவில் நடைபெற்ற ஒரு சுற்றுசூழ‌ல் போராட்ட நிகழ்ச்சிக்கு நானும் , மகுடேசுவரனும் கலந்து கொண்டு எதிர்ப்பு கவிதைகள் படித்தோம்.வநதனா சிவா, அருந்ததி ராய் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.மலையாள கவிஞர் விஜயகுமார் குனிசேரி அக்கறையுடன் கலந்து கொண்டிருந்தார்.


தாமிரபரணி இன்னும் திருப்பூரின் நொய்யலாகி விடவில்லை என்பதுதான் சற்று ஆறுதல்.



= சுப்ரபாரதிமணியன்