சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 14 நவம்பர், 2014

அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு!

 சுப்ரபாரதிமணியன்

அ.முத்துலிங்கம் சுப்ரபாரதிமணியன்இலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில்   அ.முத்துலிங்கத்தின்   எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது  இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.  பாக்கிஸ்தானில் முத்துலிங்கம்  இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு   வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள்  என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.
இரண்டாண்டுகளுக்கு முன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட்து. எழுத்தாளர் ஒருவரின் மகள் கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்பச் சிக்கல்களில் தவித்து வந்த போது எழுத்தாள நண்பர் அவரின் மகள் பற்றி ஓயாமல் அழுது கொண்டிருந்தார். அப்பெண்ணுக்கு அது இரண்டாவது திருமணம்.இதுவும் இப்படியாகி விட்ட்தே என்ற அழுகை. தொடர்பு கொள்ள யாருமில்லை என்றார். முத்துலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அப்பெண் அணுகுவார் என்று தெரிவித்தபோது, தாராளமாய் அணுகலாம் என்று ஆறுதல் படுத்தினார் என்னிடம்.  ஆனால் அப்பெண் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்தியாவிற்கு உடனே திரும்பி விட்டார்.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. சென்றாண்டு அ.முத்துலிங்கத்தின்  “ அமெரிக்கா உளவாளி “ நூல் பரிசு பெற்ற போது அவ்ருக்கு அச்செய்தியை மின்னஞ்சலில் பதிவு செய்திருந்தேன். பரிசை பெற்றுக் கொள்ளச் சொன்னார் . பெற்றபின் பரிசுத்தொகையை அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அப்பரிசுத்தொகையைக் கொண்டு “ கனவு”    அ,.முத்துலிங்கம் படைப்புகள் பற்றிய ஒரு போட்டியை நட்த்தியது.  அதில் தேர்வு பெற்ற கட்டுரைகளுடன் சிலதைச் சேர்த்து ஒரு புத்தக வடிவமாக்க முயன்றபோது அனுமதியும் தந்தார். நண்பர்களின் சிபாரிசால் சில நல்ல கட்டுரைகள் கூடக் கிடைத்தன.அது இப்போது இந்த வடிவம் பெற்றுள்ளது.
’அமெரிக்க உளவாளி’ நூலைப் பற்றி அப்போட்டியின் போது நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மாலன் இப்படிச் சொல்கிறார்:
’நாள் காட்டியில் தேதி கிழிப்பது போன்ற உப்புச்சப்பற்ற ஒரு விஷயத்தைக் கூட (இந்த டிஜிட்டல் நாள்களில் நாள் காட்டிகள் ஏது?) இதழ்க் கடையில் புன்னகை நிரந்தரமாய் ஒதுங்கியிருக்க சுவாரஸ்யமாகச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் பாணி. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு மொழியின் மீது ஆளுமை, நுட்பமான பார்வை, வரலாற்று அறிவு, உலக அனுபவம், நகைச்சுவை உணர்வு என்ற பல ஆற்றல்கள் தேவை. முத்துலிங்கத்திடம் அவை ஏராளம். ஆங்கிலத்தில் ஓட்ஹவுஸ், மார்க்ட்வைன், ஆஸ்கார் ஒயில்ட், ஆர்ட் புக்வால்ட் என டஜன் கணக்கில் புன்னகைக்க வைக்கும் மன்னன்கள் இருக்கிறார்கள். தமிழில் முத்துலிங்கம் ஒருவர்தான்.
அவரது அமெரிக்க உளவாளி அதற்கோர் உதாரணம். என்னை நம்ப வேண்டாம், அந்தத் தலைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புன்னகைக்கச் செய்வது மட்டுமல்ல, மழை பெய்யத் துவங்கும் முன் கிளம்பும் மண் வாசனை கண்ணுக்குத் தெரியாமல் மனதை நிறைத்துவிடுவது போல, முத்துலிங்கத்தின் எந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு மூடி வைத்தாலும் மனசு கொஞ்ச நேரம் விண்ணென்று நெரி கட்டிக் கொண்டு விம்மும். கைலாசபதி பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நாள் முழுக்க அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். எப்பேர்பட்ட வாழ்க்கை! எப்பேர்பட்ட சாவு! அதை நினைவூட்டிக் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் எழுத்து!
ஒரு நல்ல புத்தகத்தைக் கெளரவிக்க திருப்பூர் தமிழ்ச் சங்கம் வாய்ப்புக் கொடுத்தது. நடுவர் நாற்காலியில் அமர நேர்ந்த எல்லா நேரங்களிலும் இப்படிப் பொருத்தமான புத்தகம் அகப்படுவதில்லை. இந்த முறை வாய்த்தது. அதற்கு நான்தான் சந்தோஷப்பட வேண்டும்.’ 
அப்போட்டியின் இன்னொரு நடுவர் ப.க.பொன்னுசாமி அவர்கள் சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராய் இருந்தவர்.தமிழில் அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருப்பவர்.நாவரசு அறக்கட்டளைச் சார்பாக நிறையப் பணிகள் செய்து வருபவர். அவர் பரிசளிப்பு கருத்தரங்கில் முத்துலிங்கம் படைப்புகள்  பற்றி நிறைய சிலாகிப்புகளை முன் வைத்தார்.
அவ்வகை சிலாகிப்புகள்தான் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. முத்துலிங்கம் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு சில நினைவூட்டலை, வியப்பை, நமுட்டுச் சிரிப்பை இத்தொகுப்பு  தரும். மனதுள்  ஆறுதல் அளிக்கும் நண்பர்களாய் அவரின் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் எழுத்தின் பேராற்றலை ஞாபகமூட்டும்.. வாழ்க்கையின் சில நல்ல தருணங்களை  இத்தொகுப்பு  உருவாக்கும்.
கனவில் வெளிவந்த பல்வேறு படைப்புகளை தொகுக்கும் முயற்சியின் போதான மகிழ்ச்சியான  மன நிலையை இத்தொகுப்பும் தந்தது. அவ்வகை தொகுப்புகளாக உலக சினிமா கட்டுரைகள்,  நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் தொகுப்பு , கனவு   முதல் 20ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். கனவில் வெளிவந்த  அசோகமித்திரனின் சிறப்பிதழின் கட்டுரைகளோடு இன்னுன் சிலவற்றைச் சேர்த்து “ அசோகமித்திரன் 77 “ என்ற தொகுப்பை இரண்டாண்டுகளுக்குமுன் கொண்டு வந்தது எனக்கு    நிறைவு தந்த்து, அது போல் நிறைவு தந்த தொகுப்பு இது.
இத்தொகுப்பின் இக்கட்டுரைகளை பயன்படுத்த அனுமதி தந்த எழுத்தாள நணபர்கள்,இக்கட்டுரைகளை தேடி சிபாரிசு செய்தவர்கள், அச்சாக்கத்தில் உதவிய தளவாய் சுந்தரம்,பதிப்பித்திருக்கும் நற்றிணைபதிப்பகம்   ஆகியோர்களுக்கும் நன்றி.   (ரூ 90, நற்றிணை பதிப்பகம், சென்னை  28482818, 9486177208 )