Wednesday, March 16, 2011

அண்டைவீடு: பயண அனுபவம்: இனிப்பும், கசப்பும்

டாக்காவின் உணவில் டாக்கா கப்பாப்பும், பக்கர்கானியும், பிரியாணியும் முக்கியமானவை. பக்கர்கானி காலை உணவு. ரசகுல்லா, குலோப்ஜாமூன் உட்பட ஏகப்பட்ட இனிப்பு வகைகள். "மச்சே பாடே பெங்காலி" என்கிறார்கள்: வங்காளதேசத்தவனை அரிசியும், மட்டனும், மீனும் வளார்த்திருக்கின்றன. பாலுக்குத் தட்டுப்பாடு. 1லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கிறது. எல்லாவற்றிலும் இனிப்பு கேட்கிறார்கள். "நக்சி பித்தாஸ்"என்று அரிசியில் செய்த இனிப்பு கலந்த புட்டொன்றை ஒரு வயதானவள் தெருவில் விற்றுக் கொண்டிருந்ததை வாங்கி சாப்பிட்டோம். "இது கல்யாணத்தின்போது மணமகளுக்கு விசேஷமாக செய்து தருவது. இதை சாப்பிடுவது பாக்கியம்." வயதானவள் இதைச் சொல்லும்போது புதுமணப்பெண் போல முகம் சிவந்து விட்டது.



புஷ்டியான இளம் முஸ்லிம் பெண்களின் மத்தியில் நன்கு திடமாகவே அவள் இருந்தாள். "நல்லா சாப்புடுவாங்க எங்க ஆளுக. பஞ்சோ பஞ்சோனச் தேஷ். அஞ்சு விதமான உணவை சாப்பிடுகறவர்கள் தேசம்."

" செரி... ஏழைக்கு.."

" பான்டா இருக்கவே இருக்கு.."

" பாட்டிலா!"

" இல்லை. தண்ணீர் ஊற்றி வைத்த இரவு சாப்பாடு."

" பழைய சோறா..."

"உப்பும், மிளகாயும் சேர்த்தால் அமிர்தம். அரிசியில் செய்யும்முன், கூரம், சீரா இதையெல்லாம் கூட அமிர்தம்தா..."

ஓர் உணவு விடுதியில் வாத்துக் கறி சாப்பிட்டோம். நாட்டுக்கோழி போல எலும்புகள் கனமாக இருந்தன. "ஜல புஷ்பம்" என்று வங்காளிகள் மீனைக் கொண்டாடி சாப்பிடுபவர்கள், மீன் சாப்பிடுவதற்கு என்று திருவிழாக்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

தினமும் இரவு விருந்துக்கு ஒவ்வொரு உணவு விடுதியைத் தேடிச் செல்வது என்ற தீர்மானத்தில் கூட்ட அமைப்பாளர்கள் இருந்தார்கள். இந்திய விடுதிகளைத் தேடிச் சென்றோம். இயற்கை உணவு விடுதிக்குச் செல்லலாம் என்ற என் விருப்பம் நிறைவேறவில்லை.

இயற்கை உணவு சார்ந்த மிதவை விவசாயம் என்பது வங்க தேசத்தில் சமீபத்தில் பிரபல்யமாகியுள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் பெரும் மழை, புயல் வெள்ளம் காரணமாக அவற்றின் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக மிதவை விவசாயம் பயன்படுகிறது. மிதவை விவசாயத்திற்காக தண்ணீரில் மிதக்கும் மிதவைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. மூங்கில்களைக் கொண்டு மிதவைப் படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. வைக்கோல், ஆகாயத்தாமரை ஆகியவற்றின் கழிவுகள் பரப்பப்படுகின்றன. அதன் மேல் விதைகளைத் தூவவும், நாற்றங்கால் நடவு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தக்காளி, வெண்டை, கத்தரி, புடலை வகைக் காய்கறிகள், முள்ளங்கி, பூசணிக்காய், கொத்துமல்லி போன்றவையும் எளிதாக இதில் சாகுபடி செய்யலாம் என்கிறார்கள். இதைத்தவிர நிலத்துள் விளையும் உருளைக்கிழங்கு, இஞ்சி, , மஞ்சளும் பயிரிடப்படுகிறது. ஆகாயத்தாமரை கொண்டு செய்யப்படும் மிதவைப் படுக்கைகள் கடல் தண்ணீர் வெள்ளத்துடன் கலக்கும்போது சமநிலை குலைந்து விடுகிறது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் வங்க தேசம் பெரும் அளவு வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டபோது மிதவை விவசாயப் படுக்கைகள் மேல் கூடாரம் அமைத்து விவசாயிகள் தங்கி இருந்திருக்கின்றனர்.



நல்ல நெல் ரகங்களின் வைக்கோல் மூலமாக அமைக்கப்படும் மிதவைப் படுக்கைகள் நல்ல ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றன என்கிறார்கள்.. மிதவை விவசாயத்தை இந்திய விவசாயிகள் கடைபிடிக்க தற்போது வலியுறுத்தப்படுகிறது.

டாக்கா செல்லும்போது கல்கத்தா விமான நிலையத்திற்கு எதிர் வீதியில் ஏதாவது உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடலாம் என்று டாக்ஸியில் கிளம்பினோம்.

பியூர்புட் என்ற நட்சத்திர விடுதி தென்பட்டது. ஹால்டிராமில் மதிய உணவைச் சாப்பிடும்போது சேவ் அலோசியஸ் ஹால்டிராம் நிறுவனம் பற்றி விரிவாய் சொன்னார்.

இனிப்புப் பதார்த்தங்களுக்கு மேற்கு வங்காளத்திலும் கல்கத்தாவிலும், வடநாட்டிலும் பெயர் பெற்றது அந்த நிறுவனம். ஜான்பால், ரசகுல்லா, பட்டீஸக், சந்தேஷ் ராஜ்போக், நர்கீஸி போன்றவை அந்த நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகள்.

2005ல் அதன் உரிமையாளர் ராஜ்கோச்சரி பல மாடிக்கட்டிட கடைஒன்றை பெங்களூரில் நிறுவியபோது அந்தக் கட்டிட முகப்பில் இருந்த அகர்வால் என்பவர் 170 சதுர அடி இடத்தில் அவர் வைத்திருந்த தேனீர் கடையை ராஜ்கோச்சரி விலைக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அகர்வால் மறுத்துவிட்டார். 60 ஆண்டுகால தன் வெற்றிப்பாதையில் அகர்வால் 15 அடி இடத்தை விட்டுக் கொடுக்காதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 4 லட்சம் ரூபாய் தருவதாகவும் கேட்டிருக்கிறார். அகர்வால் தர மறுத்துவிட்டார். அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது. அகர்வால் என்று நினைத்து அப்போது தேனீர் கடையில் இருந்த அவரின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். ராஜ்கோச்சரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள். இந்த வழக்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஐ.என்.டியூசி தலைவர் தண்டபாணி ஜாங்கிரியையும், ரசகுல்லாவையும் பெட்டியளவு வாங்கிக் கொண்டவருக்கு ராஜ்கோச்சரியின் ஆயுள் தண்டனை விதிப்பு பற்றி தெரிந்திருக்காதோ என்னமோ.

ஹால்டிராமின் அக்கடை அமைந்திருந்த வீதியின் பெயர் வங்கத்து புரட்சிக் கவி காஜி நஸ்ருல் இஸ்லாம் அவர்களின் நினைவாக அமைந்திருந்தது.

" காஜி நஸ்ருல் இஸ்லாம் அவென்யூ".