டாக்காவில் போலீஸுக்கு மரியாதை இல்லை. மாமா என்று கேலி சித்தரிப்புதான்.நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படிக் கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு வங்க தேசம் . டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா திரும்பி வரும்போது தொழிற்சங்கத் தலைவர் காளியப்பன் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டார்கள்.1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்து விட்டனர். டாக்காவை இந்தியப் பணமாக மாற்ற 50% கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள். " கல்கத்தா ஏர்போர்ட்ல போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதான் போடணும். எங்கிட்ட குடுத்தா 50 ரூபாயாச்சும், பாதி கெடைக்கும்.." வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொடுத்துவிட்டு பாதிப்பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அமெரிக்க டாலராக மாற்றிக் கொண்டு விட்ட நண்பர்களுக்குத் திருப்தி.
வங்கதேசத்தில் ஊழல் என்பது சாதாரண வாழ்க்கை முறையாகி விட்டது. 95% காவல்துறையினர் லஞ்சத்தில் ஊறித் திளைக்கிறவர்களாக இருக்கிறார்கள். நிலம், கஸ்டம்ஸ், அரசாங்க அலுவலக காரியங்கள் எல்லாவற்றிலும் ஊழல் மலிந்திருக்கிறது. பொதுத் துறையை அரசைத் தன் காரியத்திற்காய் பயன்படுத்திக் கொள்வதற்கு லஞ்சம் என்ற பெயர் அடிமட்டத்திலிருந்து பிரதமர், நீதித் திறை வரைக்கும் ஊடுருவியுள்ளது. யார் குறைவாக வாங்குகிறார் என்பதில்தான் வேறுபாடே இருக்கிறது. சமூக குடியமைப்புகளின் செயல்பாடுகளும் உரிமை கோரலும் வெகு சாதாரணமாகவே இருக்கிறது. வன்முறை நடவடிக்கைகளும், கொள்ளையும் கற்பழிப்பும் லஞ்சத்தை ஊடுருவச் செய்து விட்டன. உலகின் பதிமூன்றாவது மோசமான லஞ்சம் திளைக்கும் நாடாக இருக்கிறது.
விமான நிலையத்தில் எங்களுக்கு ஏற்பட்ட லஞ்ச விவகாரத்தை வைத்துக்கொண்டு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது விமான நிலையத்தில் சென்றாண்டு நடந்த ஒரு சாவு பற்றி அவர் சொன்னார். பிர்ராஜ் மியா என்பவர் இங்கிலாந்திலிருந்து வங்க தேசத்திற்குத் திரும்பியிருக்கிறார். வங்க தேசத்தைச் சார்ந்தவர்தான் அவர். இங்கிலாந்தில் குடியேறி ஓர் உணவு விடுதியை நடத்தி வருகிறார். மனைவியும் 5 குழந்தைகளும் அவருக்குண்டு. டாக்கா விமான நிலையத்தில் இறங்கியவரை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சிரமப்படுத்தியிருக்கிறார்கள். பிறகு டாக்காவின் அரசு மருத்துவமனையில் அவர் பிணம் இருந்ததாகச் சொல்லப்பட்டதாம். உடல்முழுக்க காயங்கள் இருந்திருக்கின்றன. அவரின் பெட்டி காணாமல் போயிருக்கிறது. பிர்ராஜ் மியாவின் மனைவி இங்கிலாந்திலிருந்து டாக்கா வந்து முறையிட்டபோது உடல்நலம் குறைவால் இறந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 3 லட்சம் வங்கதேச மக்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக பிர்ராஜ் மியாவின் சாவு இருந்திருக்கிறது. லஞ்சம் கொடுக்க மறுத்தவரின் மீதான வன்முறைதான் அவரைச் சாகடித்திருக்கிறது. லஞ்சம் பெற வன்முறை கையாளப்படுவது அங்கு சாதாரணமாகியுள்ளது.
சுப்ரபாரதிமணியன்