போர்க்குற்றவாளிகள்
--------------------------
4
இலங்கை இனப்படுகொலையை முன்னிட்டு ராஜபட்சே உட்பட பலர் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று உலக டப்ளின் நீதிமன்றம் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இதுபோல் வங்கதேச விடுதலையின்போது 1971ல் வங்கதேச மக்களின் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ரஜாக்கர்கள் உட்பட முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வன்முறையும், கொலைக்குற்றமும் குறித்த போர்க்குற்றவாளிகளாய் பிரகடனப்படுத்தப்பட்டவர்கள் மீதான விசாரணையும், தண்டனையும் குறித்து முப்பதாண்டுகளாக வங்கதேசத்தில் பேசப்பட்டு வருகின்றன. இப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இது குறித்து ஆவணம் செய்யப்படும் என்று தொடர்ந்து பேசிவருகிறார்.
போர்க்கால விதிமுறைகளை மீறுபவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறது. பிடிபட்டவர்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் துன்புறுத்துவதும், வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வருபவர்களைக் கொல்வதும் போர்க்குற்றங்களாகவே கணிக்கப்படுகிறது.
1971 வங்கதேசத்தில் ஜெனரல் யாஹ்யகானின் அதிகார வன்முறையோடு ஜமாத் அமைப்பினரும், முஸ்லிம் லீக்கும், ரஜாக்கர்களும் துணையாக இருந்தனர். 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். நாலரை லட்சம் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், குடிமை அமைப்பைச் சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கொல்லப்பட்டனர். 1971 ஜனவரி 25, 26 இருதினங்களில் மட்டும் டாக்கா நகரில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ‘ஆபரேஷன் சர்ச்லைட்’ என்று அதற்குப் பெயரிடப்பட்டது. ஒன்பது மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடுமைச் செயல்களால் பல ஆயிரக்கணக்கில் பெண்கள் பாலியல் அடிமைகளாய் ராணுவத்தினரால் ஆக்கப்பட்டனர். ராணுவ முகாம்களில் பாலியல் இயந்திரங்களாக்கப்பட்டனர் பெண்கள். இந்துப் பெண்களின் கட்டாய கர்ப்பமும் கொடுமையான விஷயமானது. Ôமுட்டுக் கல்யாணம்Õ என்ற தற்காலிகத் திருமணங்கள் நிகழ்த்தப்பட்டன. தற்காலிகத் திருமணங்களை முஸ்லிம் மரபானவர்கள் ஏற்பதில்லை.
ஜெனரர் யாஹ்யாகான் , அலிபூட்டோ, டிக்காகான், மேஜர் ஜெனரல் ரா பார்மென் அலி உட்பட பலர் போர்க்குற்றவாளிகளாக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்தது.
இந்தக் கொடுமைச் செயல்களில் ரஜாக்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். Ôவாலிண்டியர்Õ என்ற சாதாரணப் பொருள் ரஜாக்கர்களுக்கு அர்த்தப்படுத்தப்பட்டாலும், அவர்கள் அசாதாரண கொலைகாரர்களாகவே விளங்கினர்.
டாக்காவின் இரண்டாவது இடத்தில் அதிக பிரதிகள் விற்கும் Ôடெய்லி இன்குலாப்Õ என்ற பத்திரிகையைப் போர்க்குற்றவாளிகள் கைப்பற்றி தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினர். ஆனால் இப்போது ‘டெய்லி இன்குலாப்’ போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக இயங்கி வருகிறது.
போர்க்குற்றவாளியான ராணுவத்தினர் 195 பேர் பாகிஸ்தானுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டதாய் சொல்கிறார்கள். உச்சநீதிமன்றம் போர்க்குற்றவாளிகள் என வங்கதேசத்தில் யாருமில்லை என்று அறிவித்ததும் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இதையொட்டி இதில் பங்குடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவர் அலி அஸ்மா முகமது முஜிபுரும், 1971ல் ஜமாத் அமைப்பு போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேகம் கலீதா ஜியா முன்னாள் பிரதமராக இருந்த காலத்தில் போர்க்குற்றவாளிகள் தண்டனை பெறுவர் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இன்றைய பிரதமர் ஷேக் ஹசீனாவும் அதையே கூறுகிறார். சமீபத்தில் ஜமாத் இஸ்லாம் சார்ந்த 40 பேரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஜமாத் இஸ்லாமின் தலைவரான ஹான்சா குலாம் ஆசாத் கொடுமைக்கார ரஜாக்கர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர். முன்னர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது ஹன்சா குலாம் ஆசாத்திடம் சென்று ஆட்சி புரிய ஆசி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பேகம் கலிதா ஜியா கட்சியின் கூட்டணியில் முஸ்லிம் மத அமைப்புகளும் ரஜாக்கர்களும் இருப்பதால் அவர்களை அடக்க ஷேக் ஹசீனா போர்க்குற்றவாளிகள் ஆயுதத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு உண்டு.
ஷேக் முஜிபுர் ரகுமான் வங்கதேச விடுதலைக்குப்பின் 1975ல் கொல்லப்படும் வரை போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் குடும்பமே கொல்லப்பட்டது.
டாக்காவில் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளின்போது இருந்தோம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என்று பிளக்ஸ் போர்டுகளும், கட்அவுட்டுகளும், ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் இல்லாதது ஆறுதல் தந்தது. அன்று ஷேக் ஹசீனா போர்க்குற்றவாளிகள் விசாரணை ஆரம்பமாகியுள்ளது பற்றியும் தெரிவித்தார்.
அன்று செப்டம்பர் 30 – ‘தி டெய்லி ஸ்டார்’ - ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியை அப்படியே மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்.
சுப்ரபாரதிமணியன்