சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 7 மே, 2016


சிறுகதை :
மனக்குறளி


                                        சுப்ரபாரதிமணியன்


                                             1.

நான் சிவரஞ்சனி.. அரசாங்க வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் என் கணவர் மணியனுக்கு என்னவகை சேவையில் ஈடூபட்டு பொழுதைக் கழிப்பது என்று குழப்பமாக இருந்தது. நான் வாழ்க வளமுடன் அமைப்பில் சேரச்சொன்னேன். கடுமையான பயிற்சி இல்லாத யோகா முறைகள். சாதாரண உணவு பழக்கவழக்கங்கள், பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. அவர் ஒருதரம் ரவிசங்கரின் "வாழும் கலை"யின் 15 தினப் பயிற்சிக்குச் சென்றுவந்தார். அதில் சொல்லித்தரப்பட்ட பயிற்சிகளை பல வருடங்களாக செய்து வருகிறார். அதில் கிடைத்த 'சுதர்சனகிரியா' அனுபவம் ரொம்பவும் புதுமையாக இருந்தது என்பார். அவர்களின் அமைப்பிலிருந்து வார, மாத சத்சங்கங்களுக்கு அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. உடல் பயிற்சிக்காக செய்கிறேன். மற்றபடி நான் நாத்திகன். இதிலெல்லாம் உடன்பாடு இல்லை என்று சொல்லிவிட்டார். திருமணமான புதிதில் நான் கோவில்களுக்கு கூப்பிடுவேன். வருபவர் கோயில் வாசலில் எங்காவது ஒதுக்குப்புறமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு தினசரி, புத்தகங்கள் படிப்பார். கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாலும் சிற்பங்கள், உள் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். சாமி கும்பிட வரமாட்டார். திருநீறு வாங்கிக் கொள்ளமாட்டார். உறவினர்கள் யாராவது வந்திருந்து கட்டாயப்படுத்தினால் கையில் வாங்கிக் கொள்வார். நெற்றியில் பூச மாட்டார்.அப்படி நாலைந்து வருடங்கள் ஓடிவிட்டன. அதன்பின் கோயில்களுக்கு கூட்டி போகவர என்றிருந்ததை நிறுத்திவிட்டார். வர மறுத்துவிட்டார். தி.க. கூட்டங்களுக்கு என்று செல்வார். வீரமணி அமைப்பு, கு.ராமகிருஷ்ணன் அமைப்பு, கொளத்தூர் மணி அமைப்பு, உள்ளூர் வழக்கறிஞர் குணசேகரன் அமைப்பு என்று அதில் உள்பிரிவுகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் செல்வார். பலர் அவர் கட்சிகளில் சேர வற்புறுத்தினாலும் சேர்ந்ததில்லை. பொதுமனிதனாக இருப்போம் என்பார். சமூகநீதி சார்ந்த மாநாடுகளுக்குச் சென்றுவருவார். எனக்கு கருப்பு சேலை கட்டிய, நெற்றியில் பொட்டு இல்லாத, கைகளில் வளையல் இல்லாத பெண்களைப் பார்ப்பதற்கு ரொம்பவும் அலர்ஜியாக இருக்கும். என்னை அந்தக் கோலத்தில் கற்பனை செய்துகொண்டு எனக்குள் நானே அலறியிருக்கிறேன்.

மகள் தேனம்மைக்கு திருமண ஏற்பாடுகளின்போது பெரும் சிக்கல் ஏற்பட்டது. வீட்டில் இருக்கும் பெரிய பெரியார் படம் எல்லாருக்கும் உறுத்தலாக இருந்தது.  படிக்காத புதியவர்கள் வந்தால் "இது அவங்க தாத்தா படம்" என்று சொல்லி சமாளிப்பேன். நெருங்கிய உறவினர்கள் இவன் கருப்புச்சட்டைக்காரன், இவனைத் திருத்தமுடியாது என்று வாசகத்தை கோரஸாகச் சொல்வார்கள். மாப்பிள்ளை பார்த்தபோது எல்லாருக்கும் ஜாதகத்துடன்தான் வந்தார்கள். கண்டிப்பாக ஜாதகம் பார்த்தே தீரவேண்டும் என்றார்கள். நான்தான் அவற்றையெல்லாம் தூக்கிக் கொண்டு அலைந்தேன். நிச்சயமானபோது தமிழ்முறைப்படிதான் திருமணம் செய்ய வேண்டும் என்றார். கோபிசெட்டிபாளையத்துக்காரர், மாப்பிள்ளை வீட்டினர், பயந்துபோனார்கள்.
"ஒரே பையன், எல்லா சடங்கோடும் மூணுநாள் பண்ணிக்கிறோம். அடுத்து என்னமோ பண்ணுங்க"

"அடுத்து எங்க... இருக்கிறது ஒரே பொண்ணுதா..."

"அதுக்காக எங்களை பலி கொடுக்காதீங்க. யாரையாச்சும் தத்து எடுத்து நீங்க நினைக்கிறமாதிரி சீர்திருத்தக் கல்யாணம் பண்ணி வையுங்க. எங்களுக்கு இந்தக் கருமமெல்லாம் வேண்டா..."

திருமணச் சடங்களைப் பெரும்பாலும் தவிர்த்தார். பெண்ணின் மணமேடையில் சிக்கலுக்குள்ளானவர் போல ஒளிந்துகொண்டேயிருந்தார். அவரின் பல தோழர்கள் கருப்புச்சட்டைகளுடன் வந்திருந்தார்கள் என்பதே மாப்பிள்ளை வீட்டாருக்கு உறுத்திக் கொண்டேயிருந்தது. திருமணத்திற்கு அய்யாசாமி என்ற பெரியவர் வந்திருந்தார். கறுப்புச்சட்டை, வெள்ளை வேட்டி. 75 வயதுக்காரர். முகத்திலும் வெள்ளைத்தாடி. கையில் நடக்க குச்சி. பெரியாரை நேரில் பார்த்தது மாதிரி இருந்தது என்று பலர் சொன்னார்கள். எல்லாரும் அவரை வேடிக்கை பார்த்தார்கள். எந்தச் சிக்கல்களும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்ததில் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. திருமணத்திற்குப் பின் எந்த சடங்குகளுக்கோ, கோயில் குளங்களுக்கு பொண்ணு, மாப்பிள்ளையுடனோ வர மறுத்துவிட்டார். எனக்கு அழுகை அழுகையாக இருக்கும். இவர் இன்னும் கொஞ்சநாளைக்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டால்தான் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று. அவர் "போதும்.. பெரியார் ரொம்பவும் கோவிச்சுக்குவார்" என்பார். பேத்தியின் மொட்டை, காதுகுத்துக்குக் கூட சம்பிரதாயமாகத்தான் கலந்து கொண்டார். கோபிச்செட்டிபாளையத்துக்காரர்கள் பிறகு வெகு சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

மார்க்சிஸ்ட்கள் சம்பந்தமான அரசியல் கூட்டங்களுக்கும் போவார். வலது, இடது, எம்.எல். என்று பாகுபாடு இருக்காது. சிலர் அவரை கிண்டல் செய்வார்கள். "உங்க பொணத்து மேலே சாத்தறதது கறுப்பு சால்வையா, செவப்பு சால்வாயா"

"எதுக்கு"

"தி.க.வுடையதா.. இல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களுதா"

"தெரிஞ்சுக்க நிறைய இருக்கு.. கத்துக்க நிறைய இருக்கு, அதில கொஞ்சம் கடைப்பிடிக்கனுமுன்னு..."

ஓய்வு பெற்றவர்கள், பென்சனர்தாரர் சங்கத்திற்கு வாரம் இரண்டு மூன்று நாட்கள் சென்று வர ஆரம்பித்தார். அவர்களுக்கான மனுக்கள் எழுதுவது, கூட்டங்களுக்குப் போவது என்றிருந்தவர் தன்னார்வக்குழுக்களின் சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டங்களுக்கு அதிகமாகச் செல்வதைக் கடைப்பிடித்தார். வனதினம், தாய்மொழி காப்பு தினம் என்று நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று வருவார். சுற்றுச்சூழல்பிரச்சனைகள் பற்றி பத்திரிக்கைகளுக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். பிறகு சின்ன கட்டுரைகளும் எழுதினார். வெளியூர் கூட்டங்களுக்கு சென்றுவருவார். இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் திரும்புவதற்கு. அதுபோன்ற நிலையில் தனிமையில்தான் பொழுதைக் கழிப்பேன். விரதம் நோன்பு, மாரியம்மன் பண்டிகைகள் போது தீச்சட்டி, குண்டடம் என்று சிவப்பு, மஞ்சள் சேலைகள் கட்டி போக ஆரம்பித்தேன் பொழுது போவதற்காக. அந்த நிலைமைகளில் என்னைப் பார்க்கிற அவருக்கு மூஞ்சி சிறுத்துக் போகும். வெகுவாக சங்கடப்பட்டார். அதனால் அதையும் நான் தவிர்க்க ஆரம்பித்தேன்.

சாயப்பட்டறைகள் பற்றிய பொதுவிசாரணை, குறை கேட்பு நாள், மாவட்ட ஆட்சியர் கூட்டங்களுக்கு போய்வர ஆரம்பித்தார். சாயப்பட்டறை சம்பந்தமாக வழக்குகள், திருப்பூர் நீதிமன்றங்களிலோ, கோவை நீதிமன்றங்களிலோ வரும்போது போவார். அவரும் சில நண்பர்களுமாக சேர்ந்து சில வழக்குகள் போட்டிருந்தார்கள் என்பது தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன்.

சிட்டுக்குருவிகள் மறைவு, தமிழரசனின் சுற்றுச்சூழல் ஓவியக் கண்காட்சி, கூடங்குளம் பற்றிய புகைப்படக் கண்காட்சி என்று நானும் போய்வந்திருக்கிறேன் அவருடன்.

ஒருதரம் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் உறவினர் ஒருவரின் திருமணம். அந்த மண்டபத்திற்கு வாடகையே மூன்று லட்சம் ரூபாய். ஆடம்பரமான திருமணங்களே அங்கு நடக்கும். முதலில் என்னை மட்டும் போகச் சொன்னார். காலை முகூர்த்தத்திற்கு நான் கிளம்பும்போது அவரும் வருகிறேன் என்று சேர்ந்து கொண்டார். மண்டபச் சூழலோடு அவரால் பொருத்திக் கொள்ளமுடியவில்லை. தத்தளித்துக் கொண்டேயிருந்தார். டிபன் சாப்பிட்டுவிட்டு சீக்கிரம் வெளியே வந்து விட்டோம். திரும்பும்போது பெரியாஸ்பத்திரிக்குள் அவரின் வெஸ்பா நுழைந்தது. ஒருத்தரை பார்த்துட்டு போலாம் என்றார்.

நாங்கள் பார்த்தது ஒரு பத்துவயதுப் பெண்ணை. அவள் உடம்பு முழுக்கப் புண்கள். என்ன மருந்து போட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுவது பிறகு பெரிதாகிவிடும். பல தனியார் மருத்துவமனைகளிலும் பார்த்திருக்கிறார்கள். கலெக்டரிடம் குழந்தைக்கான செலவை ஏற்றுக் கொள்ள சொல்லி மனு கொடுக்க அவர் ஏற்பாட்டில் அரசு மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறார்கள். அந்தப் பெண் ஒரத்துப் பாளையம் அணைப்பகுதி கிராமம் சார்ந்தவள். சாயப்பட்டறை கழிவுகள் தேங்கும் அணைதான் ஒரத்துப்பாளையம். அய்ந்து வயதிற்கு மேல் இப்படி கொப்பளங்கள் வர ஆரம்பித்து இருக்கிறது. அய்ந்து வருடங்களாய் தீரவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் விவசாயிகள். சோளத்தட்டு கூட ஒரு அடிக்குமேல் சாயத்தண்ணீர் ஊடுருவலால் வளரவில்லை. மாட்டுக்குக் கூட அவை பயன்படவில்லை. தென்னைகள் காய்ப்பு வெகு குறைவு. காய்த்தாலும் இளநீர் நல்ல கலரில் இல்லாமல் ஏதாவது கலரில் இருந்தது. அந்தப் பெண்ணின் அப்பா பனியன் கம்பெனிக்குத்தான் தினமும் திருப்பூர் வந்து போகிறார். சொற்ப வருமானம். அதில் பெரும்பகுதி குழந்தையின் கொப்பள வைத்தியத்திற்கே கழிந்து போயிருக்கிறது.

"இந்தப் பெண்ணைத் தத்தெடுத்துக் கொள்ளலாமா" என்றார். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். முடியுமா என்ற கேள்வி உலுக்கியது.

"வேண்டாம்"

"ஏன்.. நம்மளாலே என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யலாம்"

"எனக்கோ கான்சர். உங்ககிட்ட ஒருவருசமாகவே சொல்லாம மறைச்சு வச்சேன்"

அந்த தத்தெடுக்கும் சூழலை தவிர்ப்பதற்காக நான் ஒரு பொய் சொன்னேன். ஆனால் எனக்கு இதய நோய் இருப்பதை அவரும் பலமுறை மருத்துவமனைக்கு கூட வந்து தெரிந்து கொண்டார்.

"இந்தச் சாயப்பட்டறை, நொய்யல் கெட்டுப்போனது, சுற்றுச்சுசூழல் பிரச்சனைப் பார்த்து பார்த்து உங்களுக்குதான் நெஞ்சுவலி வரும்னு பயந்தேன். எனக்கு..."

"நீ அதெல்லாம் பார்த்து உள்ளூர விசனப்பட்டிருப்பே போல... அதுதா" என்றார்.

                                         2

     
நான் தேனம்மை. இன்று காசியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன். அப்பாவிற்கு தெரிந்தால் கொஞ்சம் வருத்தப்படுவார். வேதனைப்படுவார் என்று சொல்வதற்கில்லை. அதையெல்லாம் கடந்து வந்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் கடைபிடிக்கச் செய்த பகுத்தறிவு, நாத்திகவாதத்தை நான் மெல்ல மெல்ல கைகழுவியதை அறிந்துகொண்டபோதுதான் அவர் அடைந்த வேதனையை நான் கண்கூடாகக் கண்டேன்.

அப்பா சில தி.க கூட்டங்களுக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். தி.கவினர் நடத்தும் ” மந்திரமா, தந்திரமா”  நிகழ்ச்சிக்கு கூட்டிச் சென்றபோது நாம் கடைப்பிடிக்கும் பல சடங்குகளுக்குப் பின் இருக்கும் தந்திரம் பற்றித் தெரிந்து கொண்டேன். கடவுள் பக்தி குறித்த அபரிமிதமான அம்மாவின் நம்பிக்கை பற்றி அம்மாவிடமே பேசி சண்டையிட்டிருக்கிறேன். அம்மாவிடம் கோவில்களுக்குப் போவது, சடங்குகளில் பெரிதாக ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தேன். இது அப்பாவிற்கு ஆறுதலாய்தான் இருந்திருக்கிறது. கோவில்களுக்குப் போவது, அதற்காய் நேரம் ஒதுக்குவது, பூஜை செலவுகள் என்பதெல்லாம் எவ்வளவு பண, நேர விரையத்தைக் கொடுப்பது என்பதை பெருமூச்சோடே நினைத்துக் கொள்வேன். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படித்தபின்பு எம்பில் செய்ய ஆசைவந்தது. எனக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அக்கறை கொள்ள ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் வந்ததில்லை. தட்டுத்தடுமாறித்தான் கல்லூரிக்குள் நுழைந்தேன். அப்பாவை உறவினர்கள், நண்பர்கள் பொறியியல், மருத்துவப் படிப்பிற்கு என்னை அனுப்பாததை இரங்கல் செய்தியாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். தட்டுத்தடுமாறித்தான் பள்ளித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன். "உங்கப்பனுக்கு சாமி, கோயில், குளம்ன்னு அக்கறை கிடையாது. அதனாலே உன்னை எஞ்ஜீனியராக்கனும், டாக்டராக்கனும்னு அக்கறை இல்லை"

"எனக்கு அதெல்லாம் புடிக்கலே, மார்க் வாங்க முடியலையே"

"உங்கப்பா சொல்றதில்ல பட்டம் வாங்கிக்க. இப்பவே இருக்கிற நாத்திகப் பட்டத்தை தக்க வைச்சுக்கோ"

கல்லூரியில் விண்ணப்பிக்கிறபோது அப்பாவிற்கும் குழப்பமாக இருந்தது- அவரின் பல நண்பர்களிடம் விசாரித்தார். என்னிடமும், நானும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டேன். கடைசியில் "ஆங்கில இலக்கியமா, தமிழ் இலக்கியமா" என்றார்.

"ஆங்கில இலக்கியம்"

"தமிழ் இலக்கியம்ன்னு சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்"

"இப்பவே உங்க மேல நெறய வசவு, இதில தமிழ் இலக்கியம்  படிக்கப் போயிட்டேன்னா செரிதா, வசவு இன்னமும் கூடிரும். ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இங்கிலீஸ்ன்னு பெரிசா பீத்திக்கலாம்."

விஞ்ஞான, கணிதப் பாடங்களை எடுத்துப் படிக்கமுடியாத எனக்கு ஆங்கில இலக்கியம் சுலபமாகவே பிடிபட்டது. ஆர்வத்துடன் படித்தேன். ஒன்றரை மணிநேரத்தில் சென்று வரும் வெளியூர் கல்லூரியை நான்தான் தேர்வு செய்தேன். முதுகலை வந்தபோது மட்டும் விடுதியில் இருப்பதாகச் சொன்னேன். அம்மாவிற்கு இதயநோய் ஆரம்பித்திருந்தது என்பதை விடுதியில் சேர்ந்தபின்தான் தெரிந்து கொண்டேன்.

அம்மாவிற்கு உதவியாக வீட்டுவேலைகள், மருத்துவ உதவிகளுக்கு வீட்டில் இருப்பது நல்லது என்று பட்டது. முதல் ஆறு மாதத்திற்கான விடுதிக்கட்டணத்தை மொத்தமாக வேறு கட்டியாகிவிட்டது. ஆறுமாதம் சகித்துக் கொண்டிருந்தேன். அக்கல்லூரி பெண்களுக்கானது என்பதால்தான் நான் ஆர்வமாக அதில் தொடர்ந்தேன். இரண்டாயிரம் மாணவிகளுக்கு மேல் விடுதியில் இருந்தனர். முதுநிலை மாணவிகளே ஒரு அறைக்கு நாலு பேர் இளநிலை மாணவிகள் என்றால் ஆறுபேர். குளிக்க நேரம் விடியற்காலை 4 மணிக்கு என்று நேரம் ஒதுக்கியிருந்தார்கள். 4 மணிக்கு குளித்துவிட்டு ஈரத்தலையுடன் தூங்குபவர்கள் பலர் இருந்தார்கள். அப்படியிருந்தாலும் 5 மணிக்கு படிப்பிற்கு எழுந்து கொள்ளத்தான் வேண்டும். அறையை விட்டு வராண்டாவில் புத்தகத்துடன் உட்கார வேண்டும். மோசமான சாப்பாடுதான் என்னை விடுதியிலிருந்து துரத்தியது. பிரட்டும், ஆறின இட்லியும் கொடுமை. எல்லா தினங்களிலும் ஒரே மாதிரி சாம்பார். இரவு உணவில் சாப்பாத்தி கிடைத்துவிட்டால் அதிர்ஷ்டம் என்பது போலிருக்கும். திடுமென பலருக்கு காய்ச்சல் வந்துவிடும். கொத்துக் கொத்தாய் வராண்டாவில் காய்ச்சல் வந்து படுத்துக்கிடப்பர். வீட்டிலிருந்து யாராவது வந்து கூட்டிப் போக வேண்டும். அதற்கென வீட்டில் இருவருக்கு அடையாள அட்டை உண்டு. அவர்கள் தவிர யாரும் வரஇயலாது. திரும்ப விடுதியில் கொண்டுவந்து சேர்க்கிறபோதும் அந்த அடையாள அட்டை உள்ளவர்கள் கூட வரவேண்டும். அம்மாவிற்கு உடம்பு சுகமில்லாமல் போனபோது அவர் வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் இல்லாமல் போய்விட்டது. அப்பாதான் வருவார். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுவிட்டுத்தான் அவர் உடல் சுகமில்லையென்றாலும், விடுதி விடுமுறையில் மூடப்படும்போதும் பண்டிகை விடுமுறையின் போதும் வந்து கூட்டிப் போக வேண்டியிருந்தது. அதற்காய் அரை, அரைநாள் என்று விடுமுறை போட்டு வருவார். விடுதியில் கொண்டு வந்துவிடுகிற காலை அரைநாளில் அவர் நிதானமாக இருப்பார். மாலை அரைநாள் என்றால் வருவதற்கு தாமதாமானால் காத்திருப்பேன். ஆனால் இப்படி ஒவ்வொரு தரமும் விடுமுறை போட்டு வருவது அப்பாவிற்கும் பிடிக்கவில்லை. மோசமாக உடம்பால் அடிக்கடி வாந்தி, பேதி என்று உடம்பு சீரழிந்தது. நல்ல சாப்பாட்டிற்காக ஏங்க வேண்டியிருந்தது. ஆறுமாதம் கழிந்ததும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். தினமும் மூன்று மணிநேரம் பேருந்து பயணம் என்றாலும் சகித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தேன். அம்மாவிற்கும் கொஞ்சம் உதவியாக இருந்தேன்.

எம்.பில் சேருகிற என் ஆசைக்கு அப்பா தலையாட்டினார். தற்காலிக ஆசிரியர் வேலை அங்கேயே கிடைத்தது பெரிய சவுகரியமாக இருந்தது. ஆனால் அதன்பின் தினசரி வாழ்க்கை வெகு அசவுகரியமாக மாறிவிட்டது. 5000 ரூ. சம்பளம், ஹெச்.ஓ.டி, கைடுகள் தரும் வேலையை இரவில் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் வகுப்பெடுக்க வேண்டியிருந்தால், ஏதாவது கட்டுரை எழுதவேண்டியிருந்தால் அது என்னிடமே தரப்படும். நடுஇரவு வரைக்கும் உட்கார்ந்து கொண்டு  செய்யவேண்டும். அவர்களுக்காக பிரிண்ட்  அவுட், கம்ப்யூட்டர் வேலைகள் என்று மாதம் குறைந்தது ஆயிரமாவது செலவாகும்.  மருந்துக் கட்டணம் என்று இரண்டாயிரம் கழிந்துவிடும். மிச்சமாகும் இரண்டாயிரத்திற்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குமா என்பதை அம்மா கேட்டுக்கொண்டே இருந்தார். கைடு என்னை நெருங்கவே அனுமதிப்பதில்லை. வேலை கொடுக்கும்போது மட்டுமே கூப்பிட்டு பேசுவார்,. இல்லையென்றால் அவரைச் சந்திக்கப் போனால் மணிக்கணக்கில் வெராண்டாவில் நிற்க வேண்டியிருக்கும். பாடம் எடுப்பது சிரமம், சத்தம் போடுவது சிரமமாக இருந்தது. மாணவிகளைச் சமாளிப்பதும். யாருக்காவது குறைவாக மதிப்பெண் போட்டுவிட்டால் அது வேறு வகையில் வெடிக்கும். எவ்வளவுதான் சிரித்துக்  கொண்டு பாடம் எடுத்தாலும் அவர்களின் அலட்சியம் என்னை அழவைத்துவிடும். ஒரு பெண்ணை பெயில் செய்துவிட்டேன் என்று அவள் என்மீது வதந்திச் செய்தியை பரப்பினாள். "நான் திருமணமாகி விவாகரத்தானவள்" வேறு கல்லூரியில் இச்செய்தி ஆரம்பித்து எங்கள் கல்லூரிக்கு வந்தபோது அதிர்ந்துவிட்டேன். ஒரு மாதமாய் செய்தி கசிந்து, பரவி என் காதுகளுக்கே வந்தது. அதற்கான ஆயிரக்கணக்கான காதுகளுக்கு அது எட்டியிருந்தது. நான் நிலைகுலைந்து போனேன். அப்பா லேசாக எடுத்துக் கொண்டார். ரொம்பவும் சிரித்தார். நான் வெடித்து அழுதபோது கூட சிரித்துக் கொண்டேயிருந்தார். பிரின்சிபால் முன்னால்சென்று அழுதபோது அந்த மாணவி தான் கேள்விப்பட்டதைத்தான் சொன்னதாக சொன்னாள். யாரையாவது பெயில் செய்துவிட்டால் தற்கொலை செய்வோம், ரொம்பவும் குறை சொல்லாதே. தற்கொலைக்கு காரணம் என்று கடிதம் எழுதிக் கொடுப்போம் என்று சில மாணவிகள் மிரட்டல் வேறு. அம்மாவின் உடல்நலக்குறைவு. அப்பா அப்போதுதான் அவரின் தொழிற்சாலை நலிந்துபோனதால் விருப்ப ஓய்வு பெற்றார். கல்லூரிக்கு போவதென்றால் பதட்டமுண்டாகும் எனக்கு. ஹெச்.ஓடி, கைடு, மாணவிகள் என்று மூன்று பக்கங்களிலும் இடிதான். ஹேமலதா என்றபரபரப்பை கவனித்து வந்த வணிகவியல் பேராசிரியை. சீரடி சாய்பாபா படம் ஒன்றைக் கொடுத்து சில சுலோகங்களைக் கொடுத்து பிரார்த்திக்கச் சொன்னார். ஆறுதலாய் இருந்தது. அப்புறம் கையளவு ஒரு சிலை தந்தார். அதை என் படுக்கையறை மர அலமாரியில் வைத்திருந்தேன். மறைமுகமாக கும்பிட்டுக் கொண்டிருந்தேன். அம்மாவிற்கு ஆச்சரியம், ஆனால் மகிழ்ச்சி. "கடைசியில உங்கப்பனை விட்டுட்டு வந்தியே". அந்த சாயிபாபாதான் எனக்கு ஆறுதல் தருவதாய் நம்பினேன். அந்த சாயிபாபாதான் எனக்கு மாங்கல்யபாக்கியத்தை சீக்கிரம் கொண்டுவருவார் என்றும் நம்பினேன். என் பதட்டம் ஓரளவு குறைந்தது. ஏதேச்சையாக என் படுக்கையறையில் சாயிபாபா சிலையை பார்த்த அப்பா கறுத்த முகத்துடன் கையில் எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்த என்னிடம் வந்தார். அவர் தொட்டுவிட்டார் என்பதற்காய் அம்மா அலறினாள். நான் எதுவும் பேசவில்லை. எனக்கு ஏனோ அழவேண்டும் போலிருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அப்பாவின் பகுத்தறிவு சார்ந்த அறிவுரைகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் எரித்து சாம்பலிட்டு அவர் முன் நிற்பதற்காய் நான் கேட்டுக்கொண்ட மன்னிப்புக்கான கண்ணீர்துளிகள் அவை. ஒரு வாரம் கழித்து மீண்டும் மன்னிப்பை அப்பாவிடம் விளக்கமாய் சொன்னேன். கல்லூரி வேலை, அம்மாவின் உடல்நிலை என்று எல்லாம் என்னை சீர்குலைப்பதை சொன்னேன்.

அதன்பின் அப்பா திருமண ஏற்பாடுகளை செய்தார். அதற்கு முன் வரைக்கும் நான் எம்பில் முடித்தபின் திருமணம் என்று கறாராகச் சொல்லிக்கொண்டிருந்தவர் உடனே கல்லூரியில் இருந்து நின்று கொள் என்றார். மூன்று மாத நோட்டீஸ் தரவேண்டியிருந்தது. அந்த மூன்று மாதங்களில் நான் பட்ட வேதனை இன்னும் அதிகம். எம்பில்லை உதறியதற்காக என்மீது வசவுகள் கைடு பக்கமிருந்து. அவரின் உறவினர்கள் பல்கலைக்கழகத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்ததால் நான் எம்.பில் பட்டத்தை இனி எந்த வகையிலும் வாங்க முடியாது என்று சபதம் போட்டாள் கைடு. அப்பா தலைமுழுகு என்றார். எம்.பில்.லை தலைமுழுகிவிட்டு வந்தேன். அதற்காய் செலவழித்த இருபத்தைந்தாயிரம் என்னை உறுத்திக் கொண்டே யிருந்தது.

இப்போது காசிக்குவந்து கங்கையில் தலைமுழுகிவிட்டுதான் உட்கார்ந்திருக்கிறேன். அழுக்குப் பட்டுசேலைகள், அழுக்கு நீர், அழுக்கு வீதிகள், கங்கையில் குளிக்கிற நேரத்தில் மட்டும் அழுக்கு நீங்கிய உடம்பு. அப்பா என் திருமணத்தை தமிழ்முறைப்படி நடத்த ஆசைப்பட்டார். சடங்குகள் அதிகம் வேண்டாம் என்று வலியுறுத்தினார். உறவினர்களோ, குறிப்பாக அம்மாவோ அதைக் கேட்கவில்லை. அப்பா சேர்ந்துதான் போனார். மணமேடையில், சடங்குகளின்போது அவமானப்பட்டவர் போல் உடம்பைக் குறுக்கிக் கொண்டு நின்றார்.
        

விருப்ப ஓய்வு வாழ்க்கையில் பென்சன் சங்கம் என்று ஆரம்பித்த அவரின் பணி சுற்றுச்சுழல் பணிகள் என்று நீண்டது. சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகள், போராட்டங்கள் என்று அலைக்கழிந்தார். வீட்டு விற்று எனக்கு எனக்குக் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை வாங்கியில் போட்டு அவரின் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து அலைந்து கொண்டிருப்பதால் தனிமை தொலைந்து போவதாய் சொல்லிக் கொண்டிருந்தார். நீதிமன்றம், காவல்துறை அனுபவங்கள் என்று அவர் அலைந்து கொண்டிருந்தது எனக்கு பயத்தையே தந்தது.
      அவர் ஒரு டெய்லர் பறவை போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அது இலைகளையே தங்குவதற்குத் தேர்ந்தெடுக்கும். இலைகளின் விளிம்புகளை சேர்த்து நாரால் கட்டி விட்டது போன்று தைக்கும். அது ஒரு சிறிய பையாகி விடும்.  அதைத் தன் கூடாக்கிக் கொள்ளும்.  என் பிரார்த்தனைகள், சுலோகங்கள்  அவர் ஒரு டெய்லர் பறவையாக்கி விட்டால் ஆறுதலாக  இருக்கும் என்று வினோதமாகத் தோன்றும். 

எனக்கு கணவனாக வருகிறவர் கோயில் குளம் என்று அலைகிறவராக இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசை பொய்த்தது. அது இப்போதைக்கு காசிக்கு கங்கை மேட்டில் கொண்டுவந்து உட்கார வைத்திருக்கிறது.
   ஏகமாய் எல்லோரும் பிச்சைக்காரர்கள் போல்  தென்படுகிறது. எல்லாம் விட்டு விட்டு வந்தது போல் பாவத்தைக் கழுவ வருகிறார்கள்.  அன்னதானம் போடுகிற எந்த இடத்திலும் யாரும் கை நீட்டலாம். அன்னதானம் எதுவும் கிட்டாத போது  அப்படியே உட்கார்ந்து பிச்சை கேட்கிறார்கள்.காலையில் ஒரு பிச்சைக்காரி எல்லோரையும் ஏகதேசம் உடம்பைப் பிடித்தும், முகங்களை தடவிப்பார்த்தும்  ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தாள். உன் இளமை உன்னுடன் எப்போதும் இருக்கட்டும். உன் இளமை இவ்வளவு சீக்கிரம் கழிந்து விட்டதா  என்ன . .. என்கிற ரீதியில்தான் அவள் அவர்களிடன் சொன்னதாகச் சொன்னார்கள். அவள் தொடுவது ஏதோ   ஆசீர்வாதம் என்பது போல் எல்லோரும் சகித்துக் கொண்டது  எனக்கு ஆச்சர்யமே தந்தது.
ஹேமலதா கொடுத்த சாயிபாபா பாடல்கள் நூலை கையில் எடுத்து கொண்டு லேசாக முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன் இப்போதைக்கு. கங்கையில் லேசான தூரத்துச் சலசலப்புச் சத்தம் போல் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன். 

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
சாயி நாதம் நமாமி.

                                             3.
கணவனால் கை விடப்பட்ட பெண்களைப் பற்றி நிறையக் கேட்டுருப்பீர்கள். பெண்களால் கை விடப்பட்ட  ஆண்களைப் பற்றிய கதைகள் கூட பல உண்டு. என் அப்பா என்னாலும், என் அம்மாவாலும் கை விடப்பட்டவர் என்றுதான் பல சமயங்களில் தோன்றுகிறது.  அவரை ஏன் கை விட்டோம். அவர் நாத்திகர் என்பதுதான் முதலும் முற்றும் ஆகும்.  அவர் கொள்கை சார்ந்து பல விசயங்களை எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். பெரிதாகத் திணிக்கவில்லை. இந்த இந்திய சமூகத்தில்   ஆயிரத்தில் ஒருவர்தான் நாத்திகராக இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவு தர 999 பேர் மறுக்கிறார்கள்.என் அப்பா நாத்திகர் என்பதாலேயே நாங்கள் புறக்கணித்து விட்டோம்.ஒரு குடிகாரனை, குடும்பத்திற்கு  துரோகம் செய்பவனை, லஞ்ச ஊழல் வாதியை, அயோக்கியனை எப்படியோ ஏற்றுக் கொள்ளும் சமூகம் ஒரு நாத்திகவாதியை ஒரு குடும்ப அமைப்பிற்குள் சகித்துக் கொள்வதில் பல சிரமங்கள் இருப்பதாய் தோன்றுகிறது. நாத்திகர்களை சகித்துக் கொண்டு வாழ்கிற சாதாரணப் பெண்களை இப்படி மேலே சொன்ன ஏதாவது ஸ்லோகம் சொல்லி வாழ்த்தத்தான் தோன்றுகிறது.