சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 3 ஆகஸ்ட், 2015

மறுபதிப்பு : தேனீர்  இடைவேளை நாவல் இரு விமர்சனங்கள்

1. நாமும் கொத்தடிமைகள்தான்:
 கோவை ஞானி


            நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும்.
            ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
            பிறந்த காலத்தை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது/கூடாது. நிகழ்காலத்தை எப்படியோ நகர்த்தி ஆகவேண்டும். திருமணத்திற்கு வழி இல்லை என்றால் உடல் தினவை எப்படித் தீர்த்துக்கொள்ள முடியும். சோரம் போக வேண்டும். இதில் ஆண்களுக்கு இருக்கிற சில வாய்ப்புகளும், வசதிகளும் பெண்களுக்கு இல்லை. பெண்கள துயரப்பட வேண்டும். கருக்கலைப்பு என்பது எளிதான காரியம் இல்லை. எத்தனையோ சங்கடங்களுக்கிடையே செய்தாக வேண்டும். சின்னவயதில் படித்த கல்வி இப்பொழுது கை கொடுப்பது இல்லை. பெரிய படிப்பு படித்திருந்தாலும் கூலி வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும். தன்மானத்தைக் காத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் இன்றைய கூலி, உழைப்பு என்பது கொத்தடிமைத் தொழிலுக்கு மேம்பட்டதாக இல்லை. தன் வயிற்றைக் கழுவிக் கொள்ள, தன்னைச் சார்ந்தவர்களுக்கு 2 வேளை உணவாவது இட, இன்னொருவருக்கு கொத்தடிமைத் தொழில் செய்தாக வேண்டும். குடிநீர், சுகாதாரம் முதலிய வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாத அல்லது குறைந்த அளவுக்கே இருக்கிற கொட்டடிகளில்தான் குடியிருந்தாக வேண்டும். பக்கத்தில் எங்காவது நூலகம் இருந்தால் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு கொஞ்சகாலம் அலைந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு, சிந்திப்பதற்கு, வெளியிடுவதற்கு இங்கு என்ன வாய்ப்புகள் கிடைத்துவிடும். கொஞ்சம் கவிதைகள் எழுதி, தானே வாசித்து மகிழலாம். நண்பர்கள் சிலரோடு வாசித்து மகிழலாம். மீறி மீறிப் போனால் ஒரு சிற்றிதழ் நடத்தலாம். அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். தன்னைக் கவிஞன் என்று கதாசிரியன் என்று சொல்லிக் கொள்ளலாம். தன்னைத் தானே இப்படி விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனபிறகு இதுவும் சாத்தியமில்லை.
            சுருக்கமாகச் சொல்வது என்றால் இன்றைய நெருக்கடிமிக்க வாழ்க்கைச் சூழலில் கனவுகளோடு, பெரிய லட்சியங்களோடு, தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கை சமூகத்தில் பெரும்பாலானர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியன் மட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்தக் கதையை நெடுங்காலமாக நிறையவே சொல்லி வருகிறார்கள். நெருக்கடிகள் அதிகரிப்பதற்கு ஏற்ற விகிதத்தில் மனிதருக்குள் தகர்வுகளும் அதிகரிக்கின்றன. இதைச் சொல்வதற்குத்தான் படைப்பாளிகள் புதிதாக எழுத வேண்டியிருக்கிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் பற்றி ஏராளமான விவரங்களை சுப்ரபாரதிமணியன் சொல்கிறார். கோவை போன்ற நகரங்களில் உள்ள பெரிய பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில 10, 15 கிலோமீட்டர் தள்ளி புதிய பஞ்சாலைகள் தொடர்ந்து எழுகின்றன. பஞ்சாலைகளோடு சேர்ந்து வரிசைகளாக கொட்டகைகள். சுமார் 20/30 அறைகள் கொண்ட கொட்டகைகள். ஒரு கொட்டகையில் ஒரு குடும்பம் தங்கலாம். கொட்டகை அளவு  14/10க்கு அடி பொதுவான கழிப்பறை. தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீர் வண்ணக் கலவையில் மாற தொலைவிலிருந்து நீர் கொண்டுவந்து விற்கிறார்கள். குடம் ஒரு ரூபாய். 8 மணி நேர வேலை என்ற கட்டுப்பாடு இப்போது இல்லை. முடிந்தால் 12/16 மணிநேரம் உழைக்க வேண்டும். பெண்களுக்கும் இரவு வேலை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வரலாம். இளம் பெண்களுக்கு திருமணத்திட்டம். 5 ஆண்டு தொடர்ந்து வேலை செய்தால் 5ம் ஆண்டின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் கிடைக்கும். அதுவரை நாள் ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் கூலி. அதற்குள் எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடியாது. யாராவது வாங்கி வைத்திருந்தால் அந்த அறைப் பெண்ணின் கற்பு பற்றி கேள்வி எழும். FM ரேடியோ வைத்துக்கொள்ளலாம். பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலை பார்த்தவர்களில் VRS பெற்றுக்கொண்டு கிடைத்த பணத்தை எப்படி எல்லாமோ செலவு செய்த பிறகு இந்தத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வரலாம். தினக்கூலி மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும். தொழிலாளர் பிரிவு, தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இந்த சிறிய நாவலில் ஆசிரியர் சொல்கிறார். இத்தகைய நம் காலத்து வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக ஆசிரியரை வெகுவாகப் பாராட்டலாம். திருப்பூர் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் சூழ்ந்த எந்த ஒரு நகரத்திலும் தொழிற்சாலைக் கழிவுகளால் எத்தனையோ வடிவங்களில் சூழல் சீர்கேடு அதிகரித்து வரகிறது. புதியவகை நோய்களால் எல்லோரும் தாக்கப்படுகிறார்கள். திருமணத் திட்டத்தில், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு உறுதி இல்லை. அப்படியே கிடைத்தாலும் திருமண வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலம் இந்தப் பெண்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு இவர்கள் உடல்நலம் சீர்கெட்டுவிடுகிறது. 30 வயதிற்குள் இவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. தாயாகும் பெருமை இவர்களுக்கு இல்லை. இப்படி ஒரு அவலம் நம் காலத்திற்குரிய அவலம். இந்து மதம் பற்றி எவ்வளவோ பேசுகிறார்கள். புதிய கோயில்கள், கடவுள்கள் உற்பத்தி ஆகிறார்கள். புதிய கட்சிகளும், தொடர்ந்து உற்பத்தியாகின்றன. இந்தியா 2020ல் வல்லரசு ஆகிவிடலாம். யார் யாரோ காணும் வல்லரசு கனவுக்காக இவர்கள் தம் வாழ்வை இழந்த நொந்து சாக வேண்டும். இத்தகைய மக்கள் இந்தியாவில் எத்தனை கோடி பேர் இருப்பார்கள். இவர்களின் தொகை 50/60 கோடிகளுக்கு குறைவாக இருக்க முடியாது. இவர்கள் மூலம் எந்த இந்தியா ஒளிரமுடியும். இப்படி ஒர சோகத்தை இந்த நாவல் நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த சோகத்திலிருந்து நம்மால் மீள முடியாது. இந்த சோகத்தோடுதான் நாமும் வாழ்ந்தாக வேண்டும். இந்த சோகத்தை மாற்ற நாம் ஏதாவது செய்ய முடியுமா? ஏதாவது செய்யத்தான் வேண்டும் படித்து சுவைப்பதோடு நாம் இருந்துவிட முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். இந்த மனிதர்களை இப்படி அழிவில் ஆழ்த்துவதில் நமக்குள்ள பங்கு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமக்கான நல்ல ஆடைகளை மட்டுமா இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
            இதன் பின் நவீனத்துவ வடிவம் தேவைதானா?
            தமிழ் நால்களில் காலந்தோறும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த போதிலும், 80க்கு பிறகு பின் நவீனத்துவத்தின் வருகையோடு தீவிரமான சோதனை முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. நம் கால வாழ்வுக்குள் வந்து இருக்கிற நெருக்கடிகள். தகர்வுகள் முதலியவற்றை நுட்பமாக வெளிப்படுத்தும் முறையில் பின் நவீனத்துவம் நாவல் வடிவத்திலும் தகர்வுகள் முதலியவற்றை உள்ளடக்கிய சோதனை முயற்சிகளை விரிவுபடுத்தி உள்ளது. இத்தகைய போக்கின் தேவையை நாம் மறுப்பதற்கு இல்லை. இத்தகைய போக்கு ஒன்றுதான் தமிழ் நாவலுக்கு ஒரே வடிவமாக இருக்கமுடியும் என்பதையும் நம்மால் ஏற்க முடியவில்லை. மனிதனுக்குள் ஏற்பட்டுவரும் தகர்வை சித்திரிப்பதற்காக நாவல் வடிவத்தின் உள்ளும் தகர்வுதான் தேவை என்பதை நம்மால் ஏற்க முடியவில்லை. வாழ்க்கையில் மையம் அல்லது முழுமை இல்லைஎன்ற வாய்ப்பாட்டை வைத்து எதார்த்தவாதம் என்ற வடிவை முற்றாக ஒதுக்க வேண்டும் என்பதும் உண்மை இல்லை. நெருக்கடிகளும் தகர்வுகளும் கூட வாழ்வின் எதார்த்தங்கள் ஆகிவிடுகின்றன. எதார்த்தங்களைச் சித்திரிக்க படைப்பின் வடிவத்தை குழைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் நவீனத்துவ சித்திரிப்புகள் என்பன தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் கவர்ச்சியாகப் பேசப்பட்டு வருவதில் இருந்து படைப்பாளிகள் தப்ப முடியவில்லை. சுப்ரபாரதிமணியனும் 'சாயத்திரை' நாவல் தொடங்கி இத்தகைய எழுத்து முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
            'தேநீர் இடைவேளை' நாவலும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி என்பதில் அய்யமில்லை. கோவை முதலிய பெரிய நகரங்களில் இருந்துவந்த பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில் சிறிய சிறிய பஞ்சாலைகள் தோன்றுகின்றன. உலகமயமாதல் என்ற போக்கின் விளைவாக இங்கெல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டன. கொட்டடிகளில் திருமணத்திட்டம் முதலிய பெயர்களில் தெற்கிலிருந்து வந்த பெண்கள, இளைஞர்கள் குடியேற்றப்படுகிறார்கள். குறைந்த கூலி, வசதிக் குறைவுகள் முதலியவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் தொழிற்சங்கம் ஏற்படுத்த முடியாது. 12 மணிநேரம் கட்டாய வேலை. பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட/நீங்கிய தொழிலாளிகள் இங்கு தினக்கூலிக்கு வந்து சேருகிறார்கள். இவர்களும் கொட்டடிகளில் அடைபடுகிறார்கள். கொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும்தான் கொத்தடிமைகள் என்ற உணர்வைப் பெற முடியும். முதலாளிகளுக்குச் சேவகம் செய்கிறோம். அரசு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோம். நாளுக்கு நாள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. போராடுவதால் பயன் இல்லை. ரங்கநாதன் போல நாம் இல்லை என்றாலும் ரங்கநாதனின் அவலத்திற்குள் நாமும் இல்லாமல் இல்லை. அந்தோணி ராஜ் மாதிரி நாமும் ஷேக்ஸ்பியர் என்று மார்க்சியம் என்றும் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறோம். உலகம் நம்மிடம் இருந்தும் பறிபோய்க் கொண்டிருக்கிறது. செந்தில் மாதிரி நாமும் திண்டாட்டத்தோடுதான் வாழ்கிறோம். இப்படி எல்லாம் இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக் கொண்டு இருக்கிறோம். சீரழிவுகளோடுதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த முறையை நமக்குள் ஏற்படுத்துவதன் மூலம் சுப்ரபாரதிமணியன் நமக்கு நன்மை செய்திருக்கிறார். நாம் அவரைப் பாராட்டலாம். ஒருவரையொருவர் பாராட்டுவதன் மூலம் நமக்குள் நிம்மதி ஏற்பட்டுவிடுமா? அப்படி ஒன்றும் ஏற்படாது.
            இனி இந்த நாவலின் வடிவம் பற்றிப் பேசலாம். நாவலின் பக்க அளவு 75 மட்டும். 3 பகுதிகள். முதல் பகுதியில் 10 கடிதங்கள். 2 வது பகுதி அந்தோணிராஜ் டைரி குறிப்புகள்: 3வது பகுதி செந்திலின் டைரி குறிப்புகள். நம் காலத்தில் நமக்குள் ஏற்பட்டு இருக்கிற அவலத்தைச் சொல்வதற்கு இந்த நாவலின் இத்தகைய வடிவம் எப்படி பயன்படுகிறது. முதற்பகுதியில் உள்ள 10 கடிதங்களில் இடம் பெறுபவர்களின் வாழ்க்கையை நாவலின் மற்றப் பகுதிகளிலும் எதிர்பார்க்கிறோம். முதற் பகுதியில் இடம் பெற்ற ரங்கநாதன் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் தலைகாட்டுகிறார். முதற்பகுதியில் புத்தகங்கள் படிப்பதற்காக தேடி அலையும் செந்தில் 3வது பகுதியில் டைரி எழுதுகிறார். அந்தோணிராஜ். செந்தில் ஆகியோர் டைரிகளில் அவரவர்களின் சிந்தனைகள் தெளிவாகத் தரப்படுகின்றன. முதற்பகுதியில் இடம்பெற்ற நெருக்கடி மிகுந்த வாழ்வியல் 2/3ம் பகுதிகளில் அனேகமாக இல்லை. நாவல் அல்லது எந்த ஒரு படைப்புக்கும் மனித வாழ்வியல் மற்றும் இதன் நெருக்கடிகள்தான் சாரமாக அமைய முடியும். நாம் இப்படிக் கேட்கலாம். இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி .எம்.எஸ்யைப்பற்றி, மார்க்சைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் என்ற வடிவில் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படிக் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா? மல்லிகா முதலியவர்களின் வாழ்வைப்பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம். அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அனேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான். கொட்டடிகளை விட்டு வெளியில் சென்றபிறகு நோய் நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள். இந்தக் கதை ஏன் இன்னும் தொடர்ந்து சொல்லக்கூடாது? செந்திலுக்கோ, ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை. நாம் புரிந்து கொள்கிறோம். யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி வடிவத்தைச் சிதைப்பதன்மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? இப்படியெல்லாம் வாசகனைத் திணறடிப்பதன் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார்? ஒருவேளை நமக்குள்ளும் நாம் சிதைந்து கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்வதுதான் நாவலாசிரியரின் நோக்கம் என்றால் நம்மைப்போன்ற மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த படிப்பாளிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என்ற நம்மவரின் வாழ்க்கையை இந்த வாழ்க்கைக்குள் உள்ள நெருக்கடிகள், தகர்வுகள் பற்றிச் சித்திரிப்பதன் மூலம் நமக்குள்ளும் கூடுதலான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நம்மைக்காட்டிலும் வாழ்வின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் அவலங்களைச் சித்திரிப்பதன் மூலம் நம்மை எந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியும்? ஒருவேளை சுப்ரபாரதிமணியன் தனக்குள் இந்த அதிர்வுகளை இன்னும் போதுமான அளவுக்கு உணரவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

2. சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள்
ஆர்.பி. ராஜநாயஹம்


            Hell is a city much like London என்றான் ஷெல்லி.
            Paris is a dingy sort of Town என்று அல்மெர் காம்யு கூறினான்.
            சுப்ரபாரதிமணியனின் 'தேநீர் இடைவேளை' நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும்போது Hell is a Town much like Tiruppur என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணர முடியும்.
            அவருடைய கட்டுரைகள் 'உலக மயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்', 'கரையும் நதிக்கரைகள்', 'கடத்தல் கலாச்சாரம்' போன்றவற்றை வாசிக்கும்போது அவர் Tiruppur is a dingy sort of Town என்று வேதனைப்படுவதை உணர முடியும்.
            இந்திரா பார்த்தசாரதி பார்த்த டெல்லி மேல்தட்டு மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை. ஆதவன் விவரித்த டெல்லி நடுத்தர மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை இவற்றிலிருந்து வேறுபட்டு மணியன் தான்சார்ந்த திருப்பூர் கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையில் அரசியல் தன்மை வெளிப்படையாக இல்லாதவாறு எழுதிப்போவதைக் காண முடியும். சமூகவியல் சார்ந்து சமகால அரசியல்கலாச்சார நிகழ்வுகளின் மீதான ஆய்வாக 'தேநீர் இடைவேளை' நாவல் பிரமாண்டமாக விரிகிறது. ஒரு எழுபத்தைந்து பக்கங்களில் இதன் சாத்தியம் அதிசயம்தான்.
            உலகமயமாக்கலில் திறந்தவெளிச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருள்கள். அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களும், தண்ணீரும், வீடும் கூட அரிதாகி விடுகிற அவலம். ஐயாயிரம்கோடி அந்நிய செலாவணி கிடைக்கிற திருப்பூர் நகரம் சாயக்கழிவுகள், குப்பைகள் சேர்ந்து அழுக்காகி நாறிவிட்டது. நொய்யலாறு ரசாயணக் கழிவுகளால் சாக்கடையாகிக் கரைந்துவிட்டது. வேலை தேடி இங்கே பிழைக்க இடம் பெயர்ந்தவர்கள் விவசாயத்தையும், மரபான தொழிலையும் நிராகரித்துவிட்டு வந்திருக்கிற துயரம். சாதாரண தொழிலாளிகளும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் இங்கே அனுபவிக்கிற அவதிகள். முறையான தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்புமே இல்லாத சூழ்நிலை. மில் கொட்டகைகளில் அடைபடும் பெண்களும், ஆண்களும், கல்யாணத்திற்குப் பணம் சேர்க்க, பெண்களுக்கு மாங்கல்யத் திட்டம். வேலை நேரத்தில் எந்த ஒழுங்கும் கிடையாது. இரவில்கூட இங்கே பெண்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பழைய மில்கள் மூடப்பட்டு புதிய மில்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்டு பழைய மில்லில் வேலை பார்த்தவர்களே புதிய மில்களில் தினக்கூலிகளாக வேலை செய்ய வேண்டிய துரதிர்ஷ்டம்.
      'தேநீர் இடைவேளை' நாவலின் வடிவம் மாறுபட்டது. முதல் பகுதி எழுதப்படாத கடிதங்கள். மல்லிகா, ரங்கநாதன், ஷமீம், போஸ்ட்மேன், கண்ணம்மா, வட்டிக்கு விடும் ராஜேஷ் சிங், வாசகர், செந்தில் ஆகியோரின் கடிதங்கள்-இரண்டாவது பகுதி தோற்றுப்போன தொழிற்சங்கவாதி அந்தோணி ராஜின் டைரிக் குறிப்புகள். மூன்றாவது பகுதி யதார்த்த வாழ்க்கையில் லட்சிய உலகைக் காண விழையும் செந்திலின் டைரிக் குறிப்புகள்.
            தி. ஜானகிராமனும், அசோகமித்திரனும் பெண்ணை முழுமையாகச் சித்திரித்தவர்கள். பெண் மனதின் நுட்பங்களைத் துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்தவர்கள். 'தேநீர் இடைவேளை' நாவலில் மல்லிகா, ஷமீம், கண்ணம்மா ஆகியோர் பாத்திரங்களும் அவர்களுடைய சிக்கல்களும் சிக்கனமான வரிகளில் சுப்ரபாரதிமணியன் ஒரு பெண்ணாகவே மாறித்தான் விரித்துக் காட்டியிருக்கிறார். ரங்கநாதனின் கடிதங்களில் வெளிப்படும் கிரிஜா. அருக்காணி என்ற விளிம்பு நிலைப் பெண்கள் கூட முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள். ஷமீம் மில் கொட்டகையில் தன் அறையிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக பதினைந்து அறைகள் தாண்டி கழிப்பறைக்குச் செல்ல நேரும் நிர்ப்பந்தம். அவளுடைய அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அவளுக்கு ஏற்படும் கூச்ச உணர்வு. மிக நுட்பமான இதுபோன்ற சித்திரிப்புகளில் ஆவேசமிக்க கலைஞனாக சுப்ரபாரதிமணியனின் சாதனை வெளிப்படுகிறது. கோவில்களை ஆடம்பரமாக மில்லில் அமைக்கும் நிர்வாகம் கழிப்பறைகளை சிக்கனமாக ஏன் அமைக்க வேண்டும். ரங்கநாதன் வேறு மில்லில் வேலைக்குச் சேர்கிறார். அந்த மில்லிலும் அழகான பிள்ளையார் கோவில். பொதுவான கழிப்பறை, குளியலறை.
            ரோசாலக்சம்பர்க் மனிதகுலத்தின் தேர்வு காட்டுமிராண்டித்தனமா? கம்யூனிசமா என்று கேள்வி கேட்டதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தோணிராஜின் டைரி ஒரு சமுத்திரம் போல ஷேக்ஷ்பியரின் டெம்பஸ்ட்., .எம்.எஸ். அருந்ததிராய், தொழிற்சங்கப் பெண்கள் அம்முவும் கோவிந்தம்மாளும், தொழில் நிறுவன உலகமயமாக்கல், இந்து மத பாசிசம், கோயமுத்தூர் மில் தொழிலாளி சங்கம் கேட் மீட்டிங் கூட்டங்களின் மூலம் ஜீவா, சி.. பாலன், பாலதண்டாயுதம் ஆகியோரின் பேச்சு மார்க்சியத்திற்கு வழி திறந்துவிட்ட விஷயம். கேட் மீட்டிங்கை ஒழிக்க நிர்வாகம் கேட் முன்னால் பூங்காக்களை அமைத்தது. புரூக் பாண்ட் டீ வந்த புதிதில் தொழிலாளிகளுக்கு வாரக்கணக்கில் காலையும், மாலையும் இலவச தேநீர் வழங்கப்பட்டு, பின் சம்பளப் பணத்தில் பிடித்தல் செய்து, அதற்கு எதிரான தொழிலாளர் போராட்டம், கடிகார முட்களை நகர்த்தி அதிகப்படியான வேலை வாங்கியது. தெலுங்கானா போராட்டம், விவசாயிகளின் போராட்டம், தெபாகா போராட்டம், ஆனைகட்டி துவைப் பகுதி ஆதிவாசி போராட்டம் மாதிரி கூட கேட் பூங்காவுக்கு எதிராக போராட்ட அறிகுறி இல்லாமல் போனது பற்றிய தவிப்பு. சினிமா தியேட்டரே இல்லாத வால்பாறை, நொய்யல் நதி கழிவுகளின் சங்கமமாவது பற்றி என்றெல்லாம் எவ்வளவு விஷயங்களை அந்தோணி ராஜின் டைரி உள்ளடக்கியிருக்கிறது.
      ஏதேனும் ஒரு நிலையிலாவது தன் வாழ்க்கை தோல்வி என்று எண்ணிப் பார்த்து சோர்ந்து போகாதவன் யாரேனும் உண்டா? என்ற கேள்வி உலுக்கி விடுகிறது.
      செந்தில் இளைஞன் His whole future is before him - மெகாசீரியல் அபத்தங்கள் இவனை உறுத்தும் அதே வேளையில் சிநேகாவைப் பிடிக்கிறது. லாரித்தண்ணீர், கல்வி, டியூசன், பகுத்தறிவு பிரசாரத்தின் தேவை தமிழ்வழிக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் கல்வி பற்றி, குழந்தையின் மருந்து செலவுப்பணம் பள்ளிக் கட்டணமாகக் கட்டப்படுவது பற்றியெல்லாம் நிறையச் சிந்திப்பவன், வாசிப்பதுதான் வாழ்க்கை அனுபவம். புதியதைத் தேடும் ஆவல் வாசிப்பு என்பதாக வாசிப்பு பற்றிய பிரமைகள் செந்திலுக்கு இருக்கிறது. குடி தனிமனித விருப்பம். ஜர்னலிசம் செய்ய முடியாத சில விஷயங்களை நாவல் செய்துவிடும் என்று இவனால் கருத முடியவில்லை. மில்லில் வேலை, கொட்டகையில் வாழ்க்கை என்றாலும் இலட்சியக் கனவுகளில் மிதக்கிறான். கேபிரியல் மார்க்வெஸ் "நான் பத்திரிகையாளன். கூடவே கொஞ்சம் கதைகளும் எழுதியிருக்கிறேன்" என்று கூறியிருப்பதனால் பத்திரிகைச் செய்தி எழுதும் பாணியிலான இலக்கியப் படைப்புகள் இறுக்கமில்லாமல் நிறையப் பேரைச் சென்று சேர்க்கின்றன என்று செந்தில் டைரிக் குறிப்பு எழுதுகிறான். 40 வயது பெண் பிணவண்டியை இடுகாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போவதைப் பற்றிக்கூட டைரியில் எழுதுகிறான்.
            வாசிப்பு இலக்கியக் கூட்டம் என்று இருந்த ராஜேந்திரன், இப்போதெல்லாம் மாறிப்போய் இலக்கியவாதிகளின் துரோகங்களும், ஒதுங்கும்படி செய்துவிட்டதாகக் கூறுவதை இவனால் அங்கீகரிக்க முடியவில்லை. செந்தில் வருகிற சில ஆண்டுகளில் ராஜேந்திரனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஐன்ஸ்டீன் I have never read anybody என்று சொல்லவில்லையா? 'புயலிலே ஒரு தோணி' . சிங்காரத்தை நான் 1989ஆம் ஆண்டு மதுரை YMCAயில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது நம் தளத்து படைப்பாளிகள் யாரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதனாலேயே கூட 'புயலிலே ஒரு தோணி' போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ? வாசிப்பு, இலக்கியம் பற்றிய செந்திலின் பிரமை மிகையாகவே பதிவாகியிருக்கிறது. கி.ரா.வின் 'கதவு' கதையை பாராட்டி சுந்தர ராமசாமி அதில் செகாவியன் டச் இருப்பதாகச் சொன்னபோது கி.ரா. செகாவியன் என்றால் என்ன என்று அந்தக் காலத்தில் கேட்டார். முன்பொரு தடவை கி.ரா. அவர்கள் சிட்டியிடம் மற்ற படைப்பாளிகள் போல் பரந்த வாசிப்பு அனுபவம் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டபோது சிட்டி பதட்டத்துடன் வேண்டாம். ரொம்ப வாசிப்பு வேண்டாம். வாசித்தால் எழுத்தில் உங்கள் தனித்தன்மை காணாமல் போய்விடும் என்று சொன்னாராம்.
            ஃபிடல் காஸ்ட்ரோ வாசிப்பு ஈடுபாடு அதிகமுள்ளவர். கேபிரியல் கார்சியா மார்க்வெஸின் அனைத்து புத்தகங்களையும் படித்தவர். இங்கே ஜீவா, பாலதண்டாயுதம் இலக்கிய வாசிப்புள்ளவர்கள். ஆனால் சமீபமாய் தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்படி தென்படவில்லை. நாவலின் இந்தப் பதிவு பல தோழர்களைக் கோபப்படுத்துகிறது.
            நாவலில் ரங்கநாதன் sexual poverty திகைக்க வைக்கிறது. ரங்கநாதனின் பாத்திரம் நேர்த்தியாக உருவாகியுள்ளது. ரங்கநாதனுக்கு வயது ஐம்பது என்பது சரியில்லை. அறுபது என்று இருக்க வேண்டும். ரங்கநாதன், அந்தோணிராஜ், செந்தில் மூவருமே பெண் துணையில்லாதவர்கள். ரங்கநாதன் சபலம் பற்றிப் பேசுகிறார். அந்தோணிராஜ் டைரியில் ஆசை, சபலம், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதக்கூடாது என்ற தீர்மானம் கொண்டவர். செந்திலுக்கு உடம்பில் இருக்கும் காமத்தையெல்லாம் ஒன்று திரட்டி யாரிடமாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
            சமீபத்திய கதைசொல்லி 15து இதழில் திரும்புதல்... என்ற சிறுகதையின் ஆண்பாத்திரம் எனக்கான பெண் துணை எங்கே தென்படுவாள் என்று கேட்டதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். உயிர்மை அக்டோபர் 2004 இதழில் இவருடைய 'நீலப்படமும், சுசித்ராவும்' புதிய பார்வை அக்டோபர் 1-15-2004 இதழில் பிரசுரமாகியுள்ள 'சூடு' ஆகிய கதைகளும் பாலியல் உணர்வையே வெளிப்படுத்துபவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதிய கோடாங்கியில் பிரசுரமாகியுள்ள 'மாற்றங்கள்' உலகமயமாக்கல் சம்பந்தப்பட்டது. அரசாங்க அமைப்பில் தனியார் சேவை நுழைவதை எதிர்த்த நிலைமாறி தனியார் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க அமைப்பு ஊழியர்கள் தோள் கொடுக்க நேர்ந்துள்ள அசாதரணநிலை பற்றி, மாறிவிட்ட வெவ்வேறு செருப்புகளைக் குறியீடாக்கிப் பேசுகிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் வருவது போல இந்தச் சிறுகதையிலும் தெருவோர குடியிருப்பில் ஏற்பட்ட சாவு ஒன்று பிணக்காட்சியாக வருகிறது. தேநீர் இடைவேளை நாவலில் தெருவோர குடியிருப்பு பெண்களைப் பற்றி மணியன் அழுக்கான பெண்கள் எல்லாத் துயரங்களையும் அழுக்கின் மூலம் சேர்த்து உடம்பில் அப்பிக் கொண்டார்கள் என்று கவிதையாகச் சுட்டுகிறதைப் பார்க்கலாம். சினிமா பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நுலாக வரவேண்டும். நல்ல கலைப்படங்கள் பலவற்றின் மீதான விமர்சனக் கட்டுரைகள். அவர் நடத்திவரும் கனவு பத்திரிகையில் எப்போதும் திரைப்பட ஊடகத்தின் ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.
      இங்க்மார் பெர்க்மன் Face to Face படம் பற்றி தணிக்கை குழுவினருக்கு எழுதிய கடிதத்தின் மொழிப்பெயர்ப்பு. 'முகாமுகம்'. ஒரு சரிதம் ஒரு திரைப்படம். மதவாத மற்றும் பொதுவுடமை அடிப்படை வாதங்கள். தில்லி கதா திருவிழா. மங்கம்மாக்கள், பூலன் தேவியின் குரல், மீரா நாயரின் 'மான்சூன் வெட்டிங்', மலையாளிகளின் சிம்மாசனங்கள். கவிஞனும் தடைசெய்யப்பட்ட இசைக் குறிப்புகளும், ரகு ரோமியோ, குறும்படங்களின் தணிக்கை மீதான வன்முறை போன்ற கட்டுரைகள் பல அபூர்வ உலகளாவிய திரைப்படங்களிலிருந்து 'பீ' குறும்படம் வரை விரிவாகத் தொட்டுப் பேசுபவை.
            பிராணிகள், பறவைகள், காட்டு உயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்கை வாழ்வைத் தருபவை என்பதாக கானுயிர் காப்போம் என்ற கட்டுரையின் அக்கறை. சா. கந்தசாமி என்னும் கலைஞன் மிக சிக்கனமான வார்த்தைகளில் பிரமாண்ட உலகை எழுத்தில் காட்டும் நல்ல கலைஞனுடன் ஏற்பட்ட ஒரு பயண அனுபவம். படைப்பு மனம் சஞ்சலமுறும் பின் நவீனத்துவம் என்ற தேடல் இவருடைய எழுத்துப் பயணத்தின் தவிப்பைத் தெரிவிக்கிறது.
            ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து தவிப்புடன் தலையைத் தூக்கித்தூக்கி ஒரு பச்சோந்தி பார்த்துக் கொண்டிருந்தது. அதை டால்ஸ்டாய் உற்றுப் பார்த்தார். அப்படியா? நானும் கூட கலையாகத்தான் இருக்கிறேன் என்று அதனிடம் வாய்விட்டு சத்தமாகவே கூறினாராம்.