சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-

சுப்ரபாரதிமணியன்

Share
கதை சொல்லி”
விருதுகள்
மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-
‘கனவு பள்ளி மாணவ – மாணவியருக்கான ‘கதை சொல்லி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும்,மீட்டெடுக்கவுமான முயற்சியாக மாணவ – மாணவியர் இதில் பங்கு பெற்று வருகின்றனர். Iஇதன் தொடர்ச்சியாக கதை எழுதும் போட்டியையும் நடத்தி வருகிறது.
சிறுவர் கதைகள் எளிய நடையில் மூன்று முதல் ஜந்து பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். எந்த மையத்தையும், தலைப்பையும் கொண்டிருக்கலாம். சுயமான படைப்புகளாக இருக்க வேண்டும்.
மாணவ – மாணவியர் மட்டுமே பங்கு பெற வேண்டும்.
10 சிறந்த கதை களுக்கு ரூ.5000 பரிசு பகிர்ந்தளிக்கப்படும் . கதைகளை அனுப்பும்போது தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் முழு விபரங்களோடு அனுப்ப வேண்டும்.
அக்டோபர் 30.2012க்குள் கிடைக்குமாறு கதைகளை அனுப்ப வேண்டும். தேர்வு பெறாத படைப்புகளை திருப்பி அனுப்ப இயலாது.
அனுப்ப வேண்டிய முகவரி
சுப்ரபாரதிமணியன்
கனவு, 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர்-641602. செல் : 9486101003
______________________________________________________________________________ கனவு காலாண்டிதழ்
25 ஆண்டுகளாக வெளிவரும் இலக்கிய இதழ்
ஆண்டுச்சந்தா ரூ.50. கனவு இதழில் கடந்த 20 ஆண்டுகளாக வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு 700 பக்கங்கள் ரூ.350.00

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

NCBHவெளியீடு மனக்குகை ஓவியங்கள் சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

மனக்குகை ஓவியங்கள் :சுப்ரபாரதிமணியனின் கட்டுரைகள்

இரு சம்பவங்கள்
------------------------------------

1. சகுனி கோபப்பட்டதாக பாரதத்தில் சொல்லப்படவில்லை. பொதுபுத்தியில் சகுனி மோசமானவனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளான்…. இன்றைய ஆப்கானிஸ்தான் அன்றைய காந்தாரம்., காந்தாரி என்பவள் அவர்களுக்கு குலதெயவம். பிதா மகன் பீஸ்மர். பீதாம்பரங்களையும் வைர வைடூரியங்களையும் காட்டி குருடனுக்கு காந்தாரியை இல்லத்தரசியாக்கினான்..அவர்கள் குல தெயவ வழிபாட்டில் உறுதியானவர்கள், ஆகவே ஆட்டை நிறுத்தி வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார்கள். இதை அறிந்த பிதாமகன் தன்னுடைய பெரும் படையை அனுப்பி காந்தார நாட்டு இளவரசர்கள் நூறு பேரையும் கைது செய்து தலை நகரத்துக்கு அழைத்து வரச் சொன்னான் பீஸ்மர் என்கிற பிதாமகன். அவர்கள் நூறு பேருக்கு நூறு சோற்றுப் பருக்கை, நூறு சொட்டுத் தண்ணீர்,மட்டுமே என்று கட்டளை. அவர்கள் நூறு பேரும் சேர்ந்து ஒற்றுமையாக முடிவெடுத்து ஒரு பருக்கைச் சோறில், ஒரு சொட்டுத் தண்ணீரில் நாம் நூறு பேரும் வாழ முடியாது. யாரோ ஒருவனை தயார் செய்ய வேண்டும் இளையவனான சகுனியை வளர்த்து எடுத்தார்கள்.

2. சமீபத்தில் சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விழாவில்
“ துச்சாதனன் வதம் “ பார்த்தேன். ஒருமுறை கதகளி பாருங்கள் அதன் தாத்பரியம் புரியும் தோள் கண்டார் தோளே கண்டார் என்பது இதிகாசம். சுயவரம் நடக்கிறது இதில் இராவணன் பங்கு பெறுகிறான். சுயவரம் தொடங்குகிற வேளையில் இலங்கை தலைநகரில் தீப்பற்றி எரிவதாக ஒரு பிராமணன் கதறுகிறான்,இராமன் வில்லை ஒடிக்கிறான். சீதையை மணக்கிறான். கானகம் செல்கிறார்கள். இராவணன் சீதையைச் சிறை எடுக்கிறான். சீதை வரம் வாங்கியவள்.தனக்குப் பிடிக்காத எவனும் தன்னைத் தொட்டால்… இராமனுக்கு சந்தேகம் தீயில் இறங்கு என்று… இந்த இரண்டு சம்பவங்களையும் எழுத்தாளர்கள், உள்ளுறை, படைப்பு என்பதை
வைத்துப் பார்த்தால் இச்சம்பவங்களின் அடிப்படை புரியும்.
இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல. முன்னுரையே புத்தகத்தை விட அதிகமாக இருந்தால் “ கவிதைக்குப் பொய் அழகு ” சில பேரரசுகள் சொல்வர்.. எனவே உள்ளிருப்பதைப்பற்றி அதிகம் எழுதுவது கூடாதுதான்.எழுத்தாளர்கள் பற்றிய அபிப்பிராயங்களை, புத்தக அறிமுகங்களை சுப்ரபாரதிமணியன் மனக்குகை ஓவியங்கள் என்று இதில் தொகுத்துள்ளார். அவருடைய அஸ்திவாரமே விளிம்பு நிலை மக்கள், சுமங்கலித்திட்டம், குழந்தைத் தொழிலாளர் உழைப்பு, நதி மாசுபடல் போன்றவை. அதன் மீதான எழுத்தில் அக்கறை கொண்டவர்.. நிறையப்பத்திரிக்கைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களை தங்கள் வசம் ஈர்த்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் நிறைவான எழுத்தாளர்களைப் பற்றி மனக்குகை ஓவியங்கள் என்ற தலைப்பில் கட்டுரைகள் விரிகின்றன.தியானத்தில் உட்கார்ந்தால் முதலில் வருவது வண்ணங்களே. அது போல் எழுத்தாளன் தனக்கென்று வண்ணங்களை வைத்து ஓவியமா, காவியமா என்பதைப் பற்றிய புத்தகம்.
இதில் தலித் இலக்கிய முன்னோடி சிவராம் கரந்த் முதல் சிவகாமி வரை தலித் படைப்புகளில் மேலோங்கிய தன் வரலாறு பற்றிச் சொல்லப்படுகிறது. பழகிய நினைவுகளின் அடிப்படையில் நகுலன், சுந்தரராமசாமி, சுஜாதா பற்றி உள்ளன. கவிதை சுதந்திரமும் சுய அடையாளமும் என்று இளம் கவிஞர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். மூத்த கவிஞர்களின் படிமங்கள் என்று சிற்பியும், வைரமுத்துவும் தென்படுகிறார்கள்..தங்கர்பச்சான் முதற்கொண்டு பலரின் திரைப்பட காமிரா மொழி பேசப்படுகிறது. பசுமை மனிதர்களும் புத்தக மனிதர்களும் காட்டப்படுகிறார்கள். குழந்தை இலக்கியம் கோடிடப்படுகிறது. பாரதியும், புதுமைப்பித்தனும், தகழியும் யதார்த்தப்படிமங்களாக்கப்பட்டிருக்கிறார்கள். திருப்பூர் நாவலாசிரியர் குழந்தைவேலுவின் படைப்புகள் பற்றி எழுதியுள்ளார்.
இன்று பரபரப்பான உலகில் சில எழுத்தாளர்கள் மட்டுமே சாகாவரம் பெற்றவற்றை எழுத முடிகிறது. அது போல எழுத்தாளர்கள் பற்றின அபிப்பிராயங்கள்.. இதில். எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளனுக்கே புரியும். இதுவே கற்றாரே கற்றாரைக் காமுறுவர் என்று சொலவடை..
கலைஞர்களையும் குறிப்பிட்டுள்ளார்.அரசியல்கட்சிகள் இலக்கியவாதிகளை மதிப்பதில்லை.கட்சிகளே உள்ளூர் இலக்கியவாதிகளை மதிக்காது உயிருடன் இருந்த காலத்தில் பாரதியை மதிக்காத உலகம். அவரை வைத்து சில அர்சியல் கட்சிகள் பிழைப்பு நட்த்துகிறார்கள்.
இலக்கியம் என்பது அரசியல், ஆன்மீகம்,, மதம் போன்றவற்றைத் தாண்டியது என்பது பொது புத்தியில் புரிய வேண்டும். இலக்கியம், இலக்கணம், இலட்சணம் என்பது வேறு வேறு. இலட்சணம் என்பதை இலட்சியம் குறிக்கோள் என்று எடுத்து கொள்ள வேண்டும். இலக்கணப்பிழை, இலக்கியப்பிழை இருக்கலாம். ஆனால் இலட்சியப் பிழை இருக்கின்ற எழுத்து அல்லது கலை கால் வெள்ளத்தில் நிற்காது என்பது வரலாறு. காலவெள்ளதில் நிலைக்கிறவர்களை இதில் மனக்குகை ஓவியங்களாக்கியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.
( மனக்குகை ஓவியங்கள்: சுப்ரபாரதிமணீயன், என்சிபிஎச்,, சென்னை ரூ50)

-சாமக்கோடாங்கி ரவி

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

வெந்து முளைத்த விதைகள்:நாவல் குமாரகேசனின் ‘ கோட்டை மொம்மக்கா”சிறுகதைத்தொகுதி

கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்த்து..குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும்,கொங்கு வட்டாரப் பிரயோகம் தவிர இவரின் படைப்புகளில் குழந்தைகள் உலகமும், பிராணிகளின் உலகமும், தொன்மங்களின் மறு வாசிப்பும் கவனிக்கத்தக்கது..

குமரகேசனின் குழந்தைகள் பிராணிகளை மிகவும் நேசிக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் பெயர் இட்டு அழைக்கிறார்கள். சகமனிதனாய் நட்த்துகிறார்கள். அதனால்தான் அவர்களை காயடித்து, பின் சாமிக்கு பலியிடும் போது வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்று விடுகிறார்கள். தன் பக்கத்து நியாயமும், எதிர்ப்பும் எப்படியோ காட்டி ஓய்ந்து விடும் போது சுக்கு நூறாக உடைந்து போகிறார்கள். எறும்புகளைக்கூட அழுத்தமாய் தள்ளி விடும் இயல்பில்லாமல் மெதுவாக ஊதித் தள்ளி விடுகிறார்கள்.மதிய உணவிற்காக விறகைச் சேமிக்க விறகு வெட்டப்போய் பாம்பு தீண்டி துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.பள்ளிக்கல்வி மறுக்கப்பட்ட சாதாரண குழந்தைகளை ஈரத்துடன் காட்டுகிறார். பிராணிகளுக்கும் ஆன்மா இருப்பது போல அவைகள் மகிழ்ச்சி கொள்வதாய் எழுதப்பட்டுக்கும் வரிகள் அற்புதமானவை.கொளிஞ்சி விற்று வருகிற காசில் மசாலா வடை வாங்கித்தின்கிற ஆசை போல இவர்களின் ஆசைகள் மலிந்து கிடக்கின்றன.
அன்பும், மனித நேயமும் கிராம மக்களிடம் வெகு சிறப்பாக வெளிப்படும் போது இருக்கும் மனப்பகிர்தல் விரிவாகச் சொல்லப்படுகிறது., அவர்களில் சிலர் ஏமாற்றுவர்களாக இருப்பது காட்டப்படுகிறது. ஏமாற்றுகிற கர்ப்பிணிப் பெண், சாமக்கோடாங்கியின் பின்னணியும் தெரிவதில்லை ஆனால் சங்கடப்படுத்துகிறது.மண்ணின் மனிதர்களான ஆதிவாசிகள் ஒவ்வொரு இடமாய் அலைக்கழிக்கப்படுகிற விசயமும் கூட. கடவுள்கள் கூட அவர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களே வெறுமனே கோபம் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள் . ஒரு பக்கம் சாயப்பட்டறைகள், இன்னொரு பக்கம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள். இவற்றுக்கிடையே இருந்து காலம் தள்ள முடியாத கடவுள்கள் தொலை தூரம் ஓடிப்போகிறார்கள். சாலை விஸ்தாரத்தில் பிடறி தள்ளி ஓடிப்போகிறார்கள். நாத்திகத்திற்கு வலுசேர்க்கும் படிமங்கள்.இன்னொரு புறம் வரலாற்றை படிமமாக்குகிற முயற்சியாக கோட்டை பொம்மாக்கா போன்ற கதைகள் தென்படுகின்றன. ஆடு மேய்க்கும் பெண் நரியையும் சகா போல் நேசிக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணை நரி வயிற்றைக் கிழித்துப் போட்டு விடுகிறது. மனிதர்களின் நம்பிக்கை துரோகங்கள் போல் பிராணிகளிடதிலும் உள்ளது.பூர்வீக வீட்டில் கழுதைகளின் ஓலம் போல் சடங்குகளை கிண்டல் செய்கிறவை புது வார்ப்புகள் ..கிராமங்கள் மாறாமல் இருக்கின்றன். வாகனங்களின் அபரிமிதமாக இயக்கம் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார்..கொங்கு மொழி வாயிலாக ஒரு கதை சொல்லியும், குழந்தை மனமும் சரியாக வெளிப்பட்டிருக்கிறது.இதில் வரும் சில கதைகளின் தர்க்க்குறைபாடுகளை இதன் முழு எதார்த்தமும், சொல்லும் மொழியும் மறைத்து விடுகிறது. கிராமிய வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையோடு இணைக்கும் கணிகள் இல்லாமல் இருக்கின்றன.
உலகம் விரிந்ததாய் எல்லோருக்குமான களமாய் இருக்கிறது. ஆனால் தங்களுக்கான வெளியும் இடமும் அற்றவர்களாய் போய் விடுகிற மனிதர்களை இவர் பெரும்பாலும் காட்டுகிறார். ஆடுமாடுகளை நேசிக்கும் சிறுவன் அவனின் உலக்த்திலிருந்து துரத்தப்பட்டு கிணற்றில் விழ நேருகிறது, படிக்கப் போய் மதிய உணவு சமயலுக்காக சிறுவர்கள் விறகுவெட்டிகளாகிறார்கள். மசால் வடை வாசனை பிடிக்க கொளுஞ்சி பிடுங்கப் போய் விடுகிறார்கள். தன் குடும்ப வாழ்க்கை மேம்பட வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் இழக்கும் பெண்ணும் தாய் வீட்டுற்குத் துரத்தப்படுகிறாள்.ஆதிவாசிகள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். வேறு மாநில தமிழர்கள் துரத்தப்படவும் பல காரணங்கள் அமைந்து விடுகின்றன. ..தங்களுக்கான வெளியை இழந்து போய் நிற்பவர்களாக இருக்கிறார்கள்.
இவரின் பிரதேசம் பற்றி இவரே இப்படி சொல்கிறார்:” கொங்கு தேசத்தில் ஏகதேசமாக தென்கிழக்குப் பகுதிதான் நான் பிறந்த பூமி. விவசாயிகளில் இரண்டு ரகம் உண்டு. செழிப்பான ஆற்றுப் படுகைகளில் வ்யல்பரப்புகளுடன் வாழ்பவனும் விவசாயிதான். கள்ளிமரங்கூட பல்வற்றிக்கிடக்கு மேட்டாங்காடுகளில் காடுகரையுடன் காலந்தள்ளுபவனுன் விவசாயிதான். கண்ணுக்கெட்டும் தொலைவிற்கு குளமோ ஆறோ நீர் ஆதாரம் கொண்ட மலையோ தட்டுப்படாத பகுதிதான். ஆனி, ஆடியில் பனைமரம் கூட வாடி நிற்கும். பல பஞ்சத்திலும் சிறுகச்சிறுக உயர்ந்து வளர்ந்து சிறிதேனும் பசுமை கொண்டிருந்த பனை மரங்களும் குருத்து தொங்கி காயந்து விழுந்தன. பனை மரங்கள் ஜீவமரணப் போராட்டதுடனே வழங்கிய பதனியும் நுங்கும் சேகாயும், பனம்பழமும், பனஞ்கிழங்கும் எமது மக்களின் பசியைப் போக்கியதை விட பட்டினியைப் பல நாட்கள் குறைத்தன. இது போக ஆடுமாடுகளுக்கு வேப்பிலையும், அரப்பிலையும், வேலாங்காயும் தழையும் வளர்ப்புத்தாயாக வழங்கிய மரங்கள் கூட காலத்தின் கொடூரத்தால் எம்மை விட்டுப் பிரிந்தன. பலவற்றை வயிற்றுக்காகவே இழக்க வேண்டியிருந்த்து. கையை வெட்டி வித்துப் பிழைப்பது போலிருந்தது நிலைமை. கால ஓட்டத்தில் பஞ்சத்தின் கோரப்பிடியால் சோறு போட்ட ஆடு மாடுகளையும் காசிற்கு விறக் வேண்டியது வந்தது. ஒரே தலைமுறையில் முட்டிதூக்கிப் பஞ்சம், துவரைப் பஞ்சம், கோதுமைப்பஞ்சம் எனப் பல வறட்சியில் மக்கள் அலைக்கழிந்து போனார்கள். கூலிக்காரர்களும் பண்ணையக்காரர்களும் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்து புறப்பட வேண்டிய துர்நிலை ஏற்பட்டது. இளைய தலைமுறையினர்க்கு கல்வி கற்க வேண்டிய சமயத்தில் குடும்பத்ஹ்டைக் காப்பாற்ற புலம் பெயர்ந்து அடுத்த மண்ணிற்கு புறப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறந்த பூமியென்று புலம்பிக் கொண்டிருந்தால் இடுப்புக் கோவணம் கூட மிஞ்சாது என்றதோர் நெருக்கடி. இதையெல்லம் மீறி என்ன நடந்தாலும் பிறந்த மண்ணிலேயே சாவோம் என்று வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்க்கைதான் இத்தொகுப்பில் இடம் பெற்ற அனேக கதைகள்.”
எழுதிச் செல்லும், சொல்லும் விதத்தில் நுணுக்கமானப் பார்வை. சிறுகதைகளின் முரண் வலிந்து இல்லாததாய் இயங்கிறது. ஜாதியக் குழுக்களும், முரணும், சங்கடங்களும் ஒளிவு மறைவின்றி சொல்லப்பட்டிருக்கிறது. இளம் பிராயத்தில் மனதில் ஆழப்பதிந்து போன சுவடுகள்.கொங்கு மொழி படைப்பிலக்கியத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில் அதை நுணுக்கமாகவும் ஆழமாகவும் பயன்படுத்தும் லாவகம்.நாவல் குமரேசனிடமிருந்து விரிவான நாவல் வடிவப்படைபடைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது. கொங்கு கலாச்சார அம்சங்களில் ஆழமான ஈடுபாடு.மொழியின் லாகவம், மக்களை வாசிக்கிற அக்கறை இவையெல்லாம் அந்நிய மாநிலத்தில், அந்நியப்பட்ட சூழலில் தன் வேர்களை அடையாளப்படுத்துகிற முயற்சியாக குமரகேசனின் எழுத்து வெளிப்பட்டிருக்கிறது. இது இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும்.

(ரூ 80/ வெளியீடு: அன்னை ராஜராஜேஸ்வரிர் பதிப்பகம், சென்னை 11)
= சுப்ரபாரதிமணீயன் subrabharathi@gmail.com

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

மலேசியாவில் தமிழ் நாவல் பயிற்சிப்பட்டறை


மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை

சுப்ரபாரதிமணியன்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஜூலை இறுதியில் 28, 29l கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து கொண்டேன்.முதல் நாள் தமிழ் நாவல் வளர்ச்சியும் தோற்றமும், புதிய நாவல்களின் தீவிரமும் பற்றிப் பேசினேன்.இரண்டாம் நாள் எனது நாவல் அனுபவம் என்ற தலைப்பிலும், இளையோர் மற்றும் சிறுவர் கதைகள் பரிசளிப்பு விழாவில் தமிழ் சிறுகதைகள் பற்றியும் என்னுரை இருந்தது.
மலேசியாவிலிருந்து எழுதும் ரெ.கார்த்திகேசு அவர்கள் 4 நாவல்கள், 10 சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து தன் பங்களிப்பை செய்து வருபவர்.( அவரின் சமீபத்திய சிறுகதைத்தொகுதி “ நீர் மேல் எழுத்து”, கட்டுரைத் தொகுதி ரெ.கார்த்திகேசுவின் விமர்சன முகம்-2 .இவை இரண்டும் இம்மாதம் அங்கு நடைபெறும் மு.வ. நூற்றாண்டு விழாவில் 29ல் வெளியிடப்படுகின்றன).அவர் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப்பேசுகையில் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு பெரிய நாவல் அனுபவம் உள்ளது. முதலில் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.பேராசிரியர் சபாபதி 2000க்குப் பின் மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் 45 நாவல்கள் வெளியிட்டுள்ளதைப்பற்றிப் பேசினார். அ.ரங்கசாமி, சீ.முத்துசாமி முதல் சை.பீர்முகமது, பாலமுருகன் வரை சிறந்த நாவலாசிரியர்கள் பற்றி விரிவாய் குறிப்பிட்டார். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக நாவல் போட்டி நடத்தி வருகிறது.இவ்வாண்டு சுமார் 1, 75,000 ரூபாய் சிறந்த நாவல்களுக்கான பரிசுத்தொகையை வழங்குகிறது.இவ்வாண்டு அப்போட்டியை ஒட்டியே ஒரு பயிற்சியாக இப்பட்டறை அமைந்திருந்தது.கலந்து கொண்ட 40 எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ் நாவல்கள் பற்றிப் பேசினர். பத்துக்கும் மேற்பட்டோர் மு.வ., அகிலன், நா.பா. நாவல்களைப் பற்றி பேசினர். இன்னொரு பகுதியினர் கீழ்க்கண்ட மலேசியா எழுத்தாளர்களின் இரு நாவல்கள் பற்றி அதிகம் பேசினர்.
1. ரெ.கார்த்திகேசுவின் “ சூதாட்டம் ஆடும் காலம்”
2.எஸ்.பி.பாமாவின் “ தாயாக வேண்டும் “ நவீன நாவல்கள் பற்றிய பரிச்சயம் வெகு குறைவாக இருந்தது.முனைவர் முல்லை நாவல் எழுதும்போது மனதில் கொள்ள வேண்டியவை பற்றி விரிவாகப் பேசினார்.பட்டறையை ஒட்டி நான் தயாரித்து அளித்த ஒரு கையேட்டில் தமிழ் நாவல் சில குறிப்புகள், தமிழின் சில சிறந்த நாவல்கள் பட்டியல், கடந்த ஆண்டின் சில சிறந்த நாவல்கள், எனது நாவல்கள் பற்றிய சில விமர்சனக்கட்டுரைகள் என இடம் பெற்றிருந்தன.அதில் ஒரு பகுதி இக்கட்டுரையின் கடைசிப்பகுதியில் அமைந்துள்ளது. மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர் பெ.இராஜேந்திரன் தனது நிறைவுரையில் “ நிறைய வாசியுங்கள், குறைவாக எழுதுங்கள். 50 நாவல்கள் இப்போட்டியில் இதுவரை கலந்து கொண்டிருந்தாலும் மிகத் தரமான நாவல்கள் இல்லை என்ற வசவு ஒழிய வேண்டும்” என்றார். பங்கேற்பாளர்கள் தாங்கள் இவ்வாண்டின் போட்டிக்கு எழுத உத்தேசித்திருக்கும் நாவலின் கதை சுருக்கத்தையொட்டி நாவல் வடிவம், உத்திகள், நடை என ஆலோசனைகள் தரப்பட்டன.இரண்டு நாட்களும் எழுத்தாளர்கள் தங்கி பட்டறையில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு, உறைவிடம் என்று வசதிகள் தந்து கட்டணமில்லாமல் நடத்தப்பட்டது.(சென்றாண்டு இதேபோல் எஸ்.இராமகிருஸ்ணன் சிறுகதைப்பட்டறையை மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்காக நட்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.) குறிப்பேட்டிலிருந்து…
தமிழின் சில முக்கிய நாவல்கள்:* நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
* ஒரு மனிதன் ஒரு வீடு – ஜெயகாந்தன்
* ஒரு நாள் – க.நா.சுப்ரமணியன்
* மோகமுள் – தி. ஜானகி ராமன்
* ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தரராமசாமி
* கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
* நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
* மானசரோவர் – அசோகமித்திரன்
* வெக்கை – பூமணி
* தலைமுறைகள் – நீல பத்மநாபன்
* துறைமுகம் – தோப்பில் முகமது மீரான்
* காகித மலர்கள் – ஆதவன்
* சாயாவனம் – சா.கந்தசாமி
* புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்
* கடல் புரத்தில் – வண்ணநிலவன்
* தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
* வாக்குமூலம் – நகுலன்
* மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
* மண்ணகத்துப் பூந்துளிகள் – ராஜம்கிருஸ்ணன்
* செடல் – இமயம்
* யாமம் – எஸ்.ராமகிருஸ்ணன்
* ரப்பர் – ஜெயமோகன்
* மூன்றாம் விரல் – இரா.முருகன்
* அலெக்சாண்டரும், ஒரு கோப்பைத்தேனீரும் – எம்.ஜி.சுரேஷ்
* மணியபேரா – சி.ஆர். ரவீந்திரன்
* நல்ல நிலம் – பாவைச் சந்திரன்
* கங்கணம் – பெருமாள்முருகன்
* ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
* நீர்த்துளி – சுப்ரபாரதிமணியன்
கடந்த ஆண்டின் சில சிறந்த நாவல்கள்:* உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ. முத்துலிங்கம்
* கொற்கை – ஜே.டி. குரூஸ்
* ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
* அபிலாஷ் – கால்கள்
* நிழலின் தனிமை – தேவிபாரதி
* கண்ணகி – தமிழ்ச்செல்வி
* வல்லினமே மெல்லினமே.. – வாசந்தி
* மறுபக்கம் – பொன்னீலன்
* படுகளம் – ப.க. பொன்னுசாமி
* குவியம் – ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர்)
* விடியல் – அ. ரங்கசாமி ( மலேசியா )
* சூதாட்டம் ஆடும் காலம் – ரெ.கார்த்திகேசு (மலேசியா)
0 சுப்ரபாரதிமணியன் 0 subrabharathi@gamil.com